விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.45.0-wmf.6 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk முத்தொள்ளாயிரம் 0 969 1834739 1552366 2025-06-23T15:04:00Z 2409:408D:58E:75DF:0:0:1946:68A0 /* சேரன் 2-5 */ 1834739 wikitext text/x-wiki {{நிறைவுறா}} {{விபரம் | title = முத்தொள்ளாயிரம் | noauthor = | section = | previous = | next = | notes = ''[[w:முத்தொள்ளாயிரம்|முத்தொள்ளாயிரம்]] என்பது தமிழ் இலக்கியத்தில் தொகை நூல் வகையைச் சேர்ந்தது. இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. இவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. பல்லாண்டுகளுக்கு முன்னர்ப் ''புறத்திரட்டு'' ஆசிரியர் நூற்றொன்பது பாக்களை மட்டும், தம் தொகை நூலில் திரட்டி வைத்துள்ளார். அவை கடவுள் வாழ்த்தாக ஒன்றும், சேரனைப் பற்றி இருபத்திரண்டும், சோழனைப் பற்றி இருபத்தொன்பதும், பாண்டியனைப் பற்றி ஐம்பத்தாறும் சிதைந்த நிலையில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெண்பாக்களாகும். மூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை முதலான அரிய செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. அருணோதயம் பதிப்பு நூலுக்கு மதிப்புரை வழங்கியுள்ள சென்னைப் புதுக்கல்லூரிப் பேராசிரியர் நா. பாண்டுரங்கன் முத்தொள்ளாயிரப் பாடல் ஒவ்வொன்றும் தகதகக்கும் தங்கநிலா என்று பாராட்டியுள்ளார். மேலும் கடைவாயில் அடக்கிக்கொண்டு சப்பிச் சுவைக்க வேண்டிய கற்கண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார். உலா வரும் அரசன்மீது காதல் கொண்டு தலைவி கூறும் ஒருதலைக் காமச் செய்திகளை, கைக்கிளைப் பொருண்மைச் செய்திகளைக் கொண்ட பாடல்கள் இதில் பெரும்பகுதியாக இடம்பெற்றுள்ளன. ''}}{{Featured download}}<br/> {{TOCright}} '''பாடல்கள்''' ==கடவுள் வாழ்த்து== <poem>மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப் – பின்னரும் ஆதிரையான் ஆதிரையான் என்றென்(று) அயருமால் ஊர்திரைநீர் வேலி உலகு – 1</poem> மன்னிய = நிலையாக இருக்கின்ற; ஆதிரை = திருஆதிரை என்னும் நட்சத்திரம், ஆகின்ற திரை (அலை); அயரும்= கொண்டாடும்; ஆல் = அசைநிலை; ஊர் = உலாவு :என்றும் நிலைபெற்றிருக்கும் விண்மீன்கள், நிலா (மதியம்), கனலும் கதிரவன் என்று இவற்றையெல்லாம் முதன்முதலில் படைத்த முதல்வனைப் பின்னரும் ஆதிரையான் (திருவாதிரை நாளுக்கு உரிய சிவன்) என்றும், ஆதிரையான் (ஆ திரையான் ஆகி, வளரும் கடலின் அலைத்திரையில் பள்ளிகொண்டிருக்கும் திருமால்) என்றும் உலாவும் அலைகளைக்கொண்ட கடலை வேலியாக உடைய உலகில் வாழும் மக்கள் கொண்டாடுகின்றனர். நாண்மீன்<ref>https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D&searchhws=yes</ref> = நாள்மீன் அதாவது அசுவினி முதலான 27 நட்சத்திரங்கள். == சேரன் 2-5== <poem>தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத் தேயத் திரிந்த குடுமியவே – ஆய்மலர் வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக் கண்டுலாஅம் வீதிக் கதவு – :[குடுமி = கதவு சுழலும் தண்டு; ஆய் = அழகு; உலா = திரி; கண்ணி = ஆடவர் தலைக்குச் சூடும் மாலை; வயமான் = குதிரை] : அழகிய மலர்களாற் கோத்த வண்டு மொய்த்துத் திரியும் தலைமாலையைச் சூடியவனும் குதிரை பூட்டிய தேரில் திரிபவனுமாகிய சேரனைக் கண்டு அவன் உலாவும் வீதிகளின் வீட்டுக் கதவுகளைத் தாய்மார்அடைப்ப மகளிர் மீண்டுந் திறப்ப என்று மாறிமாறி நிகழவும் தேய்ந்து உருமாறிய கொண்டிகளை (கதவு சுழலும் தண்டுகள்) உடையவாயின. : அதாவது, கோதை வண்டு மொய்க்கும் பூமாலை அணிந்துகொண்டு குதிரை பூட்டிய தேரில் உலா வந்தான். அவன் அழகைக் காண விரும்பி மகளிர் கதவைத் திறந்தனர். கண்டால் அவள் மயங்கிவிடுவாள் என்று அவர்களது தாய்மார் கதவை மூடினர். இப்படி ஒருவர் மூட, ஒருவர் திறக்க இருந்ததால் கதவு மாட்டியிருந்த கொண்டி தேய்ந்ததுதான் மிச்சம். யாருடைய எண்ணமும் நிறைவேறவில்லை. <poem>வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேல் கண்டவர் மாமையை அன்றோ இழப்பது – மாமையிற் பன்னூறு கோடி பழுதோ,என் மேனியிற் பொன்னூறி யன்ன பசப்பு - 3</poem> :சேரன் கோதை தாவும் போர்க்குதிரை பூட்டிய தேரில் செல்பவன். அவன் இப்போது மெதுவாகச் செல்லும் குதிரை பூட்டிய தேரில் உலா வருகிறான், அவனைக் கண்ட மகளிர் தன் மேனியிலிருந்த மாந்தளிர் போன்ற மாமை நிறத்தை இழந்துவிட்டனர். நானோ என் மேனியில் பொன்னிறம் ஊறிக்கிடப்பது போன்ற பசப்பு நிறத்தைப் பெற்றிருக்கிறேன். இது பழுதாகுமா? ஆகாது. மாமை நிறத்தைக் காட்டிலும் பொன்னிறம் பல நூறு மடங்கு எனக்கு மேன்மையானது. காரணம் அவனுக்காக ஏங்கிக் கிடைத்த பேறு ஆயிற்றே – என்கிறாள் ஒரு தலைவி. <poem> கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில் அடைத்தாள் தனிக்கதவம் அன்னை – அடைக்குமேல் ஆயிழையாய் என்னை அவன்மேல் எடுத்துரைப்பார் வாயும் அடைக்குமோ தான் - 4</poem> :சேரமன்னன் கோதை கடல் போன்ற படைசூழ ஊர்வலம் வருகிறான். ஆயிழைத் தோழியே! அவனைக் கண்ணாரக் காணவொட்டாமல் தாய் கதவை அடைத்துத் தாளிட்டிருக்கிறாள். ஆயின், அவனோடு என்னைச் சேர்த்துப் பேசும் ஊரார் வாயை அவளால் அடைக்கமுடியுமா? <poem> வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும் நிரைபொரு வேல்,மாந்தைக் கோவே – நிரைவளையார் தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர்தாய்மார் செங்கோலன் அல்லன் என. – 5</poem> :மன்னா! வணங்காதவரை வணங்கச் செய்து அவர்தம் மண்ணைக் கொள்ளலாம். உன் வலையில் விழுந்து கிடக்கும் பெண்ணின் அழகைக் கவரலாமா? பெண்ணின் தாய்மார் உன்னைச் செங்கோலன் அல்லன் என்று கூறுகிறார்களே! மாந்தை நகர மக்களின் கோ. மலை போல் அகன்ற மார்பினை உடையவன். நிரையாக நின்று வேலால் தாக்குபவர் மாந்தை நகர மக்கள். மகளிர் வரிசையாக வளையல் அணிந்தவர். கையின் வளையல் கோலத்தை வௌவலாமா? == சேரன் 6-10== <poem> புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை நன்னாகம் நின்றலரும் நன்னாடன் – என்னாகம் கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான் என்கொல் இவரறிந்த வாறு? – 6</poem> :மாந்தை நன்னாடனாகிய சேரன் ஒருநாள் இரவுக் கனாவில் என் மார்பகத்தைத் தடவிக்கொடுத்தான். இது இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? கண்டபடி பேசுகிறார்களே! :புன்னாகம், நன்னாகம், தென்னை ஆகியன மலரும் ஊர் மாந்தை நகரம். <poem> கடும்பனித் திங்கள்தன் கைப்போர்வை யாக நெடுங்கடை நின்றதுகொல் தோழி – நெடுஞ்சினவேல் ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக் காணிய சென்றவென் நெஞ்சு. – 7</poem> :பனி பொழியும் மாதம் இது. கையைப் போர்வையாக்கிக்கொண்டு நடுங்குகிறேன். கோதை அரசன் என் நடுக்கத்தைப் போக்குவான் என்று அவனைக் காண என் நெஞ்சு சென்றது. அவன் கோட்டை வாயிலில் அது நின்றுகொண்டிருக்கிறது போலும். என்னைப் போலவே கையைப் போர்வையாக்கிக்கொண்டு நிற்கிறது போலும். :கோதை பெருஞ்சினம் கொண்ட வேல்வீரன். பச்சைக் கல் பதித்த பூணாரமும், பூ மாலையும் அணிந்திருப்பவன். <poem> ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக் காணிய சென்று கதவடைத்தேன் – நாணிப் பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு. – 8</poem> :கோதை உலா வந்தான். அவனைக் காணவேண்டும் என்று சென்றேன். நாணம் வந்துவிட்டது. உடனே நானே கதவை அடைத்துவிட்டேன். வறுமையில் வாடுபவர் பெருஞ் செல்வம் படைத்தவர் இல்லத்துக்குச் செல்வார்கள். பின் திரும்புவார்கள். மீண்டும் செல்வார்கள். இப்படித்தான் என் நெஞ்சும் கோதை அரசனை காணப் போய் வந்துகொண்டிருக்கிறது. <poem> வருக குடநாடன் வஞ்சிக்கோ மான்என்(று) அருகலர் எல்லாம் அறிய – வருகலாம் உண்டா யிருக்கஅங்(கு) ஒண்தொடியாள் மற்(று)அவனைக் கண்டாள் ஒழிந்தாள் கலாம் – 9</poem> :கலாம் என்பது கலகலப்பு. :வருக குடநாடன் :வருக வஞ்சிக் கோமான் :என்று இவள் அருகில் இல்லாதவர்கள் எல்லாம் கலகலப்பாக இருக்கின்றனர். :ஆனால் இவள் மட்டும் அவனைக் கண்ட பின்பு கலகலப்பு ஒழிந்து காணப்படுகிறாளே! ஏங்கிக் கிடக்கிறாளே! <poem> இவன்என் நலங்கவர்ந்த கள்வன் இவன்எனது நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று – அஞ்சொலாய் செல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்குச் சொல்லும் பழியோ பெரிது. – 10</poem> :இவன் என் அழகைக் கவர்ந்துகொண்ட கள்வன், :இவன் என் நிறை நெஞ்சைக் குறை நெஞ்சு ஆக்கிய கள்வன் :என்று சேரலர் கோக்கோதை செல்லுமிடமெல்லாம் அவனைப் பழி தூற்றுகிறார்களே! :“நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை” – கலித்தொகை 133 காதலை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடக்கி வைத்திருந்தேன். என் காதலைப் பிறர் அறியும்படிக் காட்டச் செய்த கள்வன் இவன் – என்கிறாள் == சேரன் 11-15== காராட் டுதிரந்தூஉ யன்னை களனிழைத்து நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ? - போராட்டு வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதைக்கென் னெஞ்சங் களங்கொண்ட நோய். 11 இது தலைவி கூற்று. மிக்க சினத்தையும் வேலையும் கொண்டு போராடிப் பகைவரை வென்று. அவர்தம் களத்தைக் கைப்பற்றிய சேரன்பால் என் நெஞ்சே இடமாய்க்கொண்டு எழுந்த வேட்கைநோய், என் அன்னை வீட்டின்பால் ஓரிடத்தில் தெய்வத்தை எழுந்தருளச் செய்து (தெய்வத்தை ஆவாஹனம் செய்தல்) வெள்ளாட்டைப் பலியிட்டு அதன் குருதியைத் தெளித்து நீராட்டி நீங்கு. ” என்று கூறினால் நீங்கிவிடுமோ? ‘நோய் நீங்குமோ’ என இயைக்க. காராடு - வெள்ளாடு; உதிரம் - குருதி, இரத்தம்; கோதை - சேரன். மல்லல்நீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினும் சொல்லவே வேண்டும் நமகுறை - நல்ல திலகங் கிடந்த திருநுதலாய்! அஃதால் உலகங் கிடந்த இயல்பு. 12 இது தலைவி தோழிக்குக் கூறியது. சிறந்த திலகம் அணிந்த அழகிய நெற்றியையுடைய தோழியே! நீர்வளம் மிக்க மாந்தை நகரத்தாரின் பெருமை மிக்க மன்னவனாகவே இருப்பினும் அச்சேர மன்னனிடம் அஞ்சாதே சென்று என் மனக்குறையை நீ அவனிடம் சொல்லத்தான் வேண்டும். அஃதல்லவா உலகில் உயர்ந்தோரிடம் அமைந்திருக்கும் நற்பண்பாகும்? “ உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு” என்பதைத் தன் தோழிக்கு நினைவூட்டி, சேரனிடம் சென்று தன் குறையைக் கூறுமாறு தலைவி வேண்டுகிறாள். மல்லல் - வளப்பம்; மாந்தை - சேரனது நகரங்களில் ஒன்று; கடுங்கோ - சேரனது பெயர்களுள் ஒன்று, “செல்வக் கடுங்கோ வாழியாதன்” என வருதல் காண்க. நமகுறை - நம்+அ+குறை; ‘அ’ - ஆறாம் வேற்றுமை பன்மை உருபு; திலகம் - நெற்றியிலிடும் பொட்டு; திரு - அழகு; நுதல் - நெற்றி; உலகம் - உயர்ந்தோர், “உலகெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே” என்பது தொல்காப்பியம். நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய ஊரிரே என்னை உயக்கொண்மின் - போரிற் புகலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக் கழலுமென் னெஞ்சங் கிடந்து. 13 இதுவும் தலைவி கூற்று. போரை விரும்பும் கள்ளுண்டு களித்த யானைப்படைகளை யுடையவனும் பூழி நாட்டின் தலைவனாய் விளங்குகின்றவனும் ஆன சேரனிடம் யான் கொண்ட வேட்கை நோயால் என் நெஞ்சம் செயலறியாது துன்புற்று வேகின்றது; நீரும் நிழலும் தம்மையடைந்தார்க்கு எல்லாம் , வெப்பத்தைப் போக்கிக் குளிர்ச்சி தருவதுபோலப் பிறர் துன்பம் நீக்கும் மிகுந்த அருளுடைய ஊர்மக்களே! என் துயர் நீக்கி என்னை உயிர்வாழச் செய்யுங்கள். (இவ்வாறு தலைவி வேண்டுகிறாள்) புகலும் - விரும்பும், “ போரெனிற் புகலும் புனைகழல் மறவர்” எனச் சங்க இலக்கியத்துள்ளும் வந்துள்ளமை காண்க. பண்டைக்காலத்தில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரும் அதன் சுற்றுப்புறங்களும் ‘செந்தமிழ்நாடு’ என்றும் தமிழ் வழங்கிய பிற நிலப்பகுதிகள் ‘கொடுந்தமிழ்நாடுகள்’ என்றும் வழங்கப்பட்டன. அவை தென்பாண்டி நாடு, குடநாடு, குட்டநாடு, கற்காநாடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, அருவாவடதலை நாடு, சீதநாடு, மலையமான் நாடு, புனல்நாடு என்பனவாம். அவற்றுள் பூழிநாடு என்பது பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடைக்கண் அமைந்து ஒரு காலத்தில் பாண்டியர் ஆட்சியிலும் ஒரு காலத்தில் சேர மன்னர் ஆட்சியிலுமாக மாறி மாறி இருந்திருத்தல் வேண்டும். அதனால் இருவருமே “பூழியர்கோ” எனப் பாடப்பட்டுள்ளனர். “பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன்” என்பதில் பாண்டியனைக் குறித்தல் காண்க. கோதை - சேரன்; அழலும் - வேகும். அள்ளற் பழனத் தரக்காம்பல்வாயவிழ வெள்ளந்தீப் பட்டதென வெரீஇ - புள்ளினந்தங் கைச்சிறகாற் பார்ப்பொடுக்குங் கவ்வை யுடைத்தரோ நச்சிலைவேற் கோக்கோதை நாடு. 14 இது சேர நாட்டின் இயற்கைவளம் கூறுவது. நுனிக்கண் நஞ்சு தடவப்பெற்ற வேலையுடைய சேரமன்னன் நாடு, சேறு நிறைந்த வயல்களில் அரக்கு நிறத்தில் மலர்ந்து கிடக்கும் ஆம்பல் மலர்களைக் கண்ட பறவைக் கூட்டங்கள், நீரில் தீப்பற்றிக் கொண்டது என்றஞ்சித் தம் கைகளைப்போல் விளங்கும் சிறகுகளால் தம்முடைய இளங்குஞ்சுகளை அணைத்துப் பாதுகாக்க முயலும் பேரொலியையுடையதாக விளங்குகிறது. அள்ளல் - சேறு; பழனம் - வயல்; அரக்கு - செந்நிறம்; வெள்ளம் - தண்ணீர்; வெரீஇ - வெருவி, அஞ்சி; சொல்லிசையளபெடை ; புள் - பறவை; கைச்சிறகு - சிறிய சிறகு எனலுமாம்; பார்ப்பு - இளங்குஞ்சு; கவ்வை - ஆரவாரமான ஒலி. அரோ- அசை; களிகள் களிகட்கு நீட்டத்தங் கையால் களிகள் விதிர்த்திட்ட வெங்கள் - துளிகலந் தோங்கெழில் யானை மிதிப்பச் சேறாகுமே பூம்பொழில் வஞ்சி யகம். 15 இது சேர நாட்டின் தலைநகர் வஞ்சியின் வளம் கூறுவது. பூஞ்சோலைகள் நிறைந்த வஞ்சிநகரத் தெருக்கள், அத்தெருக்களில் கள்ளுண்டு களிப்பவர்கள் தம்மைப் போன்ற கட்குடியர்களுக்குத் தாம் உண்ணும் கள்ளை நீட்ட, அதனை ஏற்றுக்கொள்ளும் குடியர்கள் தம் கைகளால் தொட்டுச் சிதறிய கொடுங்கள்ளின் துளிகள் நிறைந்து, அவ்வழியாகச் செல்லும் மலைபோன்ற அழகிய யானைகள் மிதித்தலால் சேறாகிக் கிடக்கின்றன. களிகள் - கட்குடியர்கள்; விதிர்த்தல் - விரல்களை உதறுவதால் நீர்த்துளிகள் நிலத்தின்கண் சிதறச் செய்தல்; வெங்கள் - கொடிய கள்; ஓங்கெழில் யானை - மலைபோல் உயர்ந்த அழகிய யானை, ஓங்கல் - மலை; “ஓங்கலிடைத் தோன்றி உயர்ந்தோர் தொழவிளங்கி” என வருதல் காண்க. ==சேரன் 16-20 == வானிற்கு வையகம் போன்றது வானத்து மீனிற் கனையார் மறமன்னர் - வானத்து மீன்சேர் மதியனையான் விண்ணுயர் கொல்லியர் கோன்சேரன் கோதையென் பான். 16 இது சேரனின் சிறப்புக் கூறுவது. இந்நிலவுலகம் வானத்தைப் போன்றது; இவ்வுலகையாளும் மன்னர்கள் வானத்தில் விளங்கும் விண்மீன்களைப் போன்றவர்கள்; விண்ணளவு உயர்ந்த கொல்லிமலையின் தலைவனான சேரமன்னன் விண்மீன்களுக்கிடையே வீறுடன் உலாவரும் வெண்ணிலாவைப் போன்றவன். வையகம் வானைப் போன்றது எனக் கூட்டுக. ‘வானிற்கு’ என்பது உருபுமயக்கம்; மீன் - விண்மீன்; கோன் - தலைவன்; சேரன்கோதை - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பல்யானை மன்னர் படுதிறை தந்துய்ம்மின் மல்லல் நெடுமதில் வாங்குவில் பூட்டுமின் வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன் வில்லெழுதி வாழ்வார் விசும்பு. 17 இது சேரனின் வீரச்சிறப்பைக் கூறுவது. சேர மன்னவனின் தூதரின் கூற்று. பல யானைகளையுடைய மன்னர்களாக இருப்பினும் உங்கள் நாட்டு வருவாயில் சேரனுக்குரிய பங்கினை உடனே கொடுத்து உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் நகரின் வளம்மிக்க உயர்ந்த மதில்களில் சேரனது சின்னமாகிய வளைந்த வில் சின்னத்தைப் பொருத்தி வையுங்கள். வாடாத மலர்மாலைகளை அணிந்து வானில் வாழும் தேவர்களும் சேரனது வில் சின்னத்தை வானில் பொறித்து வைத்தே பாதுகாப்பாக வாழ்கின்றார்கள். திறை - சிற்றரசர்கள் பேரரசர்களுக்கு ஆண்டுதோறும் செலுத்தும் வருவாய்ப் பங்கு, இதனைக் கப்பம் என்பர். மல்லல் - வளம்; வானோர் - வானுலகில் வாழும் தேவர்கள்; வானவன் - சேர மன்னன்; விசும்பு - வானம்; விசும்பில் எழுதப்படும் வில் மழைக்காலத்தில் தோன்றும் வானவில். தற்குறிப்பேற்ற அணி. அரும்பவிழ் தார்க்கோதை அரசெறிந்த ஒள்வேல் பெரும்புலவும் செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு வண்டாடு பக்கமும் உண்டு குறுநரி கொண்டாடு பக்கமும் உண்டு. 18 இதுவும் சேர மன்னனின் வீரச்சிறப்பும் வெற்றிச்சிறப்பும் கூறுவது. அன்றலர்ந்த மலர்மாலையணிந்த சேரன் பகையரசரை வென்றுகொண்ட ஒளிபொருந்திய வேலாயுதம் ஒருபக்கம் புலால் நாற்றமும் ஒருபக்கம் குங்குமம் கலந்த சந்தனத்தின் நறுமணமும் கலந்து விளங்குகின்றது. எனவே, அவ்வேலின்கண் நறுமணத்தை நாடிச் சுரும்புகளும் வண்டுகளும் மொய்க்கின்ற பக்கமும் உண்டு; புலாலை விரும்பிச் சிறு நரிகள் கொண்டாடும் பக்கமும் உண்டு. சேரனது வேலின்கண் தோய்ந்துள்ள புலாலை நீக்குவதற்கும் நேரமின்றி வெற்றி கொண்டாடப்படுகின்றது; அக்கொண்டாட்டம் நடைபெறும்போதே மீண்டும் அவ்வேல் போர்முனைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. இடைவிடாது சேரன் போருடற்றி வென்று வருகிறான் என அவனது வீரமிகுதி கூறப்பட்டுள்ளது. ஒள்வேல் - ஒளிபடைத்த வேல். வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப் பாற எறிந்த பரிசயத்தால் - தேறாது செங்கண்மாக் கோதை சினவெங் களியானை திங்கள்மேல் நீட்டுந்தன் கை. 19 இது யானைமறம் கூறுவது. சிவந்த கண்களையுடைய பெருமைமிக்க சேர மன்னனது, சினத்தையும் கொடிய கள்ளுண்டு களித்தலையும் உடைய யானை, ஆற்றல் பொருந்திய பகையரசர்களது விரிந்த, மாலை சூட்டிய, வெண்கொற்றக் குடைகளைப் பறித்து அவை அழிந்துபடுமாறு வீசி எறிந்த பழக்கத்தால் வெண்ணிறத்தையும் வட்ட வடிவத்தையும் கொண்டு வானில் வலம்வரும் முழுநிலவையும் - நிலவு வேறு, குடை வேறு என்று தெளியாது - பகையரசரின்வெண்கொற்றக்குடையென்று கருதி அதனைப் பறித்து எறியும்பொருட்டு அந்நிலவை நோக்கித் தன் கையை நீட்டுகிறது. இது தற்குறிப்பேற்ற அணி. வீறு - பெருமை, ஆற்றல், வலிமை; சால் - சான்ற - பொருந்திய; உரிச்சொல் தொடர்; தாம்ம் - மலர்மாலை; பாற - அழியுமாறு, “பழவினைகள் பாறும்வண்ணம்” (திருவாசகம்); பரிசயம் - பரிச்சயம் - பழக்கம்; களியானை - கள்ளுண்டு களித்த யானை. அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர் எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டால் பனிக்கடலுள் பாய்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான் காய்சினதேர்க் கோதை களிறு. 20 இதுவும் யானைமறம் கூறியது. பகைவரை வருத்தும் சினத்தையும் தேரையும் உடைய எம் தயலைவனாகிய சேரமன்னனது ஆண்யானை, வலிமையுடைய பகையரசர்களது கோட்டைமதிலின் இரும்புக்கதவுகளின்மீது பாய்ந்து நொறுக்கி அக்கதவினைத் தன் தந்தங்களால் தூக்கி உயர்த்திக் கொண்டு நிற்கும் காட்சி, குளிர்ந்த கடலின் நடுவே பாய்விரித்து நிற்கும் மரக்கலம் போலத் தோன்றுகிறது . அயில் - இரும்பு; எயில் - கோட்டைமதில்; கோடு - தந்தம்; பனி - குளிர்ச்சி; நாவாய் - மரக்கலம். == சேரன் 21-32 == மரகதப்பூண் மன்னவர் தோள்வளை கீழா வயிரக் கடகக்கை வாங்கித் - துயருழந்து புண்ணுற் றழைக்கும் குறுநரித்தே பூழியனைக் கண்ணுற்று வீழ்ந்தார் களம். 21 இப்பாடல் போர்க்கள இயல்பு கூறுவது. சேரனை எதிர்த்துப் போரிட்டு மாண்டுகிடக்கும் பகைவர்களது போர்க்களம், மரகத அணிகலன்களை அணிந்த மன்னர்களின் தோள்வளைகளுக்குக் கீழாக உள்ள உறுதியான கடகம் அணிந்த கைகளைக் கடித்து அதனால் புண்பட்ட வாயோடு ஊளையிடும் சிறுநரிக் கூட்டங்களையுடையதாய் விளங்குகிறது. வயிரம் - உறுதி; நவரத்தினங்களுள் ஒன்று எனலுமாம். கடகம் - முன்கையில் அணியும் அணி; தோள்வளை - தோளில் (புயத்தில்) அணியும் வளை; வாங்குதல் - கடித்தல். கரிபரந் தெங்கும் கடுமுள்ளி பம்பி நரிபரந்து நாற்றிசையுங் கூடி - எரிபரந்த பைங்கண்மால் யானைப் பகையடுதோள் கோதையைச் செங்கண் சிவப்பித்தார் நாடு. 22 இது சேரனது பகைவர் நாட்டின் அவலம் கூறியது. பசிய கண்களையுடைய பெரிய யானைப்படைகளாகிய பகையை வென்ற தோள்களையுடைய சேரனின் சிவந்த கண்களை மேலும் சிவப்பித்த பகைவரது நாடு, நான்கு திசைகளிலும் நெருப்புப் பற்றி எரிந்து, புகையடர்ந்து, பொருள்களெல்லாம் கருகி, கூரிய முட்செடிகள் அடர்ந்து, நரிகள் நெருங்கி வாழும் பாழுங்காடாக விளங்குகிறது . முள்ளி - முட்செடி; கண்சிவப்பித்தல் - சினத்தையுண்டாக்குதல், சினத்தினால் கண் சிவத்தல் இயல்பு. வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத்து ஊரறிய லாகா கிடந்தனவே - போரின் முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான் நகையிலைவேல் காய்த்தினார் நாடு. 23 இதுவும் பகைவர்நாட்டின் அவலம் கூறியவாறு. மொட்டவிழ்ந்த மலர்மாலையணிந்தவனும் முசிறிநகர மக்களின் தலைவனும் ஆன சேரனது ஒளிபடைத்த இலைவடிவ வேலால் போரின்கண் துன்புறுத்தப்பட்ட பகைவரின் நாடு, வேரோடிய அறுகம்புல் அடர்ந்து, எங்கும் சுரைக்கொடிகள் படர்ந்து, வேளைக்கீரைகள் பூத்து, ஊர்கள் இருந்த இடங்கள் இவை என்றறிய இயலாதவாறு பாழ்பட்டுக் கிடந்தன. அறுகை - அறுகம்புல்; பம்பி - புதிராக அடர்ந்து; வேளை - காட்டுக்கீரை; முசிறி - சேர நாட்டுத் துறைமுக நகரம். . சோழன் 24 - 26 திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர் இறந்துபடின் பெரிதாம் ஏதம் - உறந்தையர்கோன் தண்ணார மார்பின் தமிழ்நர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு. 24 உறையூரின் மன்னவன் சோழன்; அவன் குளிர்ந்த மாலையணிந்த மார்பின்ன்; தமிழ்மக்களின் இறைவன்; அவன் நகர்வலம் வருகிறான். அதனைத் தங்கள் பெண்மக்கள் பார்க்க நேரின், அவன்பால் வேட்கைகொண்டு துன்புறுவர் எனக் கருதிய தாய்மார்கள் தந்தம் வீடுகளின் வாயிற்கதவுகளை அடைத்து வைக்கின்றனர். “நகர்வலத்தைக் காணவியலாத நங்கையர் ஏக்கத்தால் இறந்துவிடவும் கூடும். அவ்வாறாயின், அதனால் ஏற்படும் துன்பம் மிகப் பெரிதாம். எனவே, மங்கையர் சோழனைக் கண்ணாரக் கண்டு களிக்குமாறு கதவுகளைத் திறந்துவிடுங்கள்; அவ்வாறு காண்பதால் ஏதேனும் தீமை நேருமாயின் அதைப்பற்றிப் பின்னர் சிந்திக்கலாம்”, என்று சிலர் கூறுகின்றனர். ( சோழனது நகர்வலத்தைக் காணவியலாமையால் உயிரை இழப்பதைக் காட்டிலும் அதனைக் கண்டு மையல் கொள்வதால் ஏற்படும் தீமை பெரிதன்று, என்பது கருத்து.) ஏதம் - துன்பம். குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை வதுவை பெறுகென்றாள் அன்னை - அதுபோய் விளைந்தவா இன்று! வியன்கானல் வெண்தேர்த் துளங்குநீர் மாமருட்டி யற்று. 25 இப்பாடல் கைக்கிளை. என் அன்னை, நான் மழலை பேசும் சிறுமியாக இருந்த காலத்தில் சோழமன்னனை மணந்துகொள்ளும் பேற்றினை நான் பெறவேண்டும் என்று வாழ்த்தினாள். நான் மணப்பருவத்தையடைந்துள்ள இன்று, அக்கூற்றெல்லாம் மாறிப்போய் அவனைக் கண்ணால் காண்டலும் ஆகாது என்று வாயிற்கதவுகளை அடைத்து வைக்கிறாள். கடுங்கோடையில் தண்ணீர்போல் தோற்றமளித்து அருகில் சென்று பார்க்கும்போது மறைந்துவிடுவதாய் நீர்வேட்கை கொண்ட விலங்குகளை மயங்கச் செய்கின்ற பேய்த்தேர் போலாயிற்றே என் ஆசை! இப்பாடல் உவமையணி. குதலைப் பருவம் - மழலைமொழி பேசும் அறியாப் பருவம்; கோழிக்கோமான் - உறையூரின் மன்னனாகிய சோழன், ‘கோழி’ என்பது சோழர் தலைநகரமாகிய உறையூர்க்கு வழங்கிய மற்றொரு பெயர் ; வதுவை - திருமணம்; வியன் - பெரிய; கானல் - கோடைக்காலம் , பாலைநிலம் ; வெண்தேர் - பேய்த்தேர், கானல்நீர்; மா - விலங்கு, கால்நடைகள்; மருட்டுதல் - மயங்கச் செய்தல்; அற்று - போன்றது; ஏ - அசைச்சொல். சுடரிலைவேற் சோழன்தன் பாடல மேறிப் படர்தந்தான் பைந்தொடியார் காணத் - தொடர்புடைய நீர்வலை யிற்கயல் போல்பிற ழும்மேதம் சாலேக வாயில்தொறுங் கண். 26 ஒளிபடைத்த வேலையேந்திய சோழன் தன்பாடலம் என்னும் குதிரையின் மேலேறிப் பசிய வளையலணிந்த மகளிரும் காணுமாறு நகர்வலம் வந்தான் ; தத்தம் வீடுகள்தோறும். வலை பொருத்தப்பெற்ற சாளரங்களின்பின்னிருந்து அவனைக் காணும் மகளிரின் கண்கள், நீர்வலையில் மாட்டிக்கொண்டு பிறழ்கின்ற மீன்களைப் போலத் தோன்றுகின்றன. இதுவும் உவமை. பாடலம் - சோழனது குதிரையின் பெயர்; (பாண்டியனது குதிரை ‘கனவட்டம்’ என்றும் சேரனது குதிரை ‘கோரம்’ என்றும் வழங்கப்பெற்றன.) தொடி - வளையல்; கயல் - மீன்; சாலேகம் - சாளரம் , காலதர்; ‘பிறழுமே’ என்பது ‘பிறழும்மே’ என விரிந்துவந்தது விரித்தல் விகாரம். (அறுவகைச்செய்யுள் விகாரங்களுள் ஒன்று.) ஈற்றடி இரண்டாம் சீர் “வாயிறொறும்” எனப்புணர்த்துப் படிக்க, சீரும் தளையும் சிதையா. சோழன் 27-35== அன்னையுங் கோல்கொண் டலைக்கு மயலாரு மென்னை யழியுஞ்சொல் சொல்லுவர் - நுண்ணிலைய தெங்குண்ட தேரை படுவழிப் பட்டேன்யான் திண்டேர் வளவன் திறத்து.. 27 என் தாயும் என்னைக் கோலால் அடித்துத் துன்புறுத்துகிறாள்; அக்கம்பக்கத்தில் வாழ்வோரும் என் மானம் அழியுமாறு பழித்துப் பேசுகின்றனர்; வலிய தேரையுடைய சோழனிடம் மையல் கொண்டதால் நான், தெங்குண்ட தேரைபோலப் பழிப்பட்டேன். இது தலைவி கூற்று. அலைத்தல் - துன்புறுத்தல்; “தெங்குண்டதேரை” என்பது பழமொழி; தேங்காயில் நோய் ஏற்பட தேரை காரணமன்று, எனக்கு மையல்நோய் ஏற்பட நான் காரணம் ஆகேன், ( சோழனே காரணம்) ஆனால் உலகினர் தேரையைப் பழிப்பதுபோல என்னையும் பழிக்கின்றனர் எனத் தலைவி வருந்திக் கூறுகிறாள். தெங்கு - தேங்காய் . அலங்குதார்ச் செம்பியன் ஆடெழில்தோள் நோக்கி விலங்கியான் வேண்டா வெனினும் - நலந்தொலைந்து பீர்மேற் கொளலுற்ற பேதையர்க் கென்வாய்ச்சொல் நீர்மே லெழுந்த நெருப்பு. 28 இப்பாடல் செவிலித்தாய் கூற்று. தோளில் ஆடும் மாலையணிந்து செம்பியன் நகர்வலம் வந்தான்; அவனைச் சென்று காணவேண்டாம் என்று இளமங்கையரைச் செவிலித்தாய் தடுத்தாள்; அதனை மீறிச் சென்று, செம்பியனது வெற்றியும் அழகும் பொருந்திய தோள்களை நோக்கிய மகளிர் தம் நாணும் நிறையும் முதலிய நலங்களையும் தொலைத்து மேனியில் பசலை நோயையும் பெற்றுத் துன்புற்றனர். இப்பேதைப் பெண்களுக்கு என் வாய்ச்சொற்கள் நீர்மேல் பற்றிய நெருப்புப் போலப் பயன்படாது வீணாயிற்றே என்று செவிலித்தாய் வருந்திக் கூறுகிறாள். தார் - மலர்மாலை; செம்பியன் - சோழன்; ஆடு - வெற்றி; எழில் - அழகு; விலங்கி - வேறுபட்டு; பீர் - பசலை, மையல்நோயால் மகளிர் மேனியில் தோன்றும் நிறமாற்றம்; ‘ நீர்மேல் எழுந்த நெருப்பு ‘ என்பது பழமொழி. உவமையணி. நாணொருபால் வாங்க நலனொருபா லுள்நெகிழ்ப்பக் காமருதோள் கிள்ளிக்கென் கண்கவற்ற - யாமத் திருதலைக் கொள்ளியி னுள்ளெறும்பு போல திரிதரும் பேருமென் நெஞ்சு. 29 இது தலைவி கூற்று. கண்டார்க்கு விருப்பம் உண்டாக்கும் தோளையுடைய சோழனைக் காணவேண்டும்என என்கண்கள் கவலை கொள்ள, மகளிர்க்கேயுரிய நாணம் அவனைக் காணவிடாமல் என்னைத் தடுக்க, பெண்மைநலம் என்னுள்ளத்தை நெகிழச்செய்ய, இருதலைக் கொள்ளியின் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் சிற்றெறும்புபோல இந்த இரவுப்பொழுதில் என்னெஞ்சம் அவனைக் காணச் செல்வதும் காணாமல் திரும்புவதுமாகத் துன்புறுகிறது. ‘இருதலைக் கொள்ளி எறும்பு’ என்பது பழமொழி. கிள்ளியைக் காணவேண்டும் எனும் ஆசையாகிய எறும்பு, நாணம் ஒருபக்கமும் பெண்மைநலம் ஒருபக்கமும் தீப்பிழம்பாக நின்று தடுப்பதால் அவற்றினிடையே சிக்கிக்கொண்டு தவிக்கிறது; உவமையணி . கிள்ளி - சோழன். ஊட லெனவொன்று தோன்றி அவருறூஉங் கூட லிழந்தேன் கொடியன்னாய்! - நீடெங்கின் பாளையிற் றேன்தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக் காளையைக் கண்படையுட் பெற்று. 30 இதுவும் தலைவி கூற்று. பூங்கொடிபோன்ற என் தோழியே! உயரமான தென்னையின் பாளைகளில் தேனடைகள் உருவாகும் நீர்வளமிக்க சோழநாட்டின் தலைவனை நான் கனவின்கண் காணப்பெற்றேன்; அப்போது தோன்றிய ஊடலால் அவன்தோளையணைத்து மகிழும் கூடலையிழந்து விட்டேனே! கண்படை - கனவு; காளை - சோழன், உவமையாகுபெயர்; கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல்போனதுபோலக் கனவில்கண்ட காளையை அக்கனவில்கூடக் கூட இயலாமல் உடல் பிரித்துவிட்டதே என்று தலைவி வருந்திக் கூறியுள்ளாள். புலவி புறக்கொடுப்பன் புல்லிடின் நாண்நிற்பன் கலவி களிமயங்கிக் காணேன் - நிலவியசீர் மண்ணாளுஞ் செங்கோல் வளவனை யானிதன்றோ கண்ணாரக் கண்டறியா வாறு. 31 இதுவும் தலைவி கூற்று. சோழநாட்டைச் சிறப்போடு செங்கோலாட்சி செய்யும் சோழனை, நான் இன்றுவரை ஒருபொழுதும் கண்ணாரக் கண்டதில்லை ; ஏனெனில் , அவனோடு புலவி கொள்ளும்போது அவனுக்கு என்முதுகைக் காட்டித் திரும்பி நிற்பேன்; அவன் என் புலவியை நீக்க என்னைத் தழுவும்போது நாணத்தால் கண்களை மூடிக்கொள்வேன்; அவன் என்னோடு கலந்து உறவு கொள்ளும்போதோ மகிழ்ச்சியில் மயங்கிக் கிடப்பேன். புலவி - ஊடல்; புறம் - முதுகு; புல்லுதல் - கட்டியணைத்தல்; கலவி - கூடுதல் ; களி - மகிழ்ச்சி வளவன் - சோழன். கனவினுள் காண்கொடாக் கண்ணுங் கலந்த நனவினுள் விலக்கு நாணும் - இனவங்கம் பொங்கோதம் போழும் புகார்ப் பெருமானார் செங்கோல் வடுப்படுப்பச் சென்று. 32 இதுவும் தலைவி கூற்று. பொங்கிவரும் கடல்நீரைக் கிழித்துக்கொண்டு பலவகையான கப்பல்கள் வந்துசெல்லும் துறைமுகம் புகார் நகரம்; அதன் தலைவனாய்ச் செங்கோலாட்சி செய்பவன் சோழன்; அவனைக் கனவிலும் காணவிடாமல் உறங்காதிருக்கும் என் கண்களும் அவனோடு கலந்திருக்கும் நினைவுப்பொழுதில் முழுமையாய்க் கலந்திருக்கும் வாய்ப்பைக் கெடுக்கும் என் நாணமும் சென்று அவன் செங்கோலாட்சிக்குக் கறை (களங்கம்) ஏற்படுத்துகின்றன. வங்கம் -மரக்கலம் / கப்பல் ; ஓதம் - வெள்ளம் /கடல்அலை; போழும் - பிளந்துகொண்டு செல்லும்; புகார் - காவிரிப்பூம்பட்டினம், சோழர் துறைமுகம் ; வடுகர் - குற்றம், களங்கம். == சோழன் 36-40== ===36=== <poem>கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம் தண்டப் படுவ தடமென்தோள் – கண்டாய் உலாஅ மறுகில் உறையூர் வளவற் கெலாஅ முறைகிடந்த வாறு. – 36</poem> ::கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம் தண்டப் படுவ தடமென்தோள் கண்டாய் உலாஅ மறுகில் உறையூர் வளவற்கு எலாஅம் முறை கிடந்தவாறு. ::உறையூர் அரசன் வளவன். அவனைப் பார்த்தது என் மையுண்ட கண். அவனோடு கலந்தது என் நெஞ்சம். தண்டனை பெற்றதோ என் தோள் (தோள் வாடி என் வளையல்கள் கழன்றோடுகின்றன) வளவன் முறை செய்து நீதி வழங்குவது இப்படித்தான் முறைமாறிக் கிடக்கிறது. ===37=== <poem>என்னெஞ்சு நாணு நலனும் இவையெல்லாம் மன்னன் புனனாடன் வௌவினான் – என்னே அரவகல் அல்குலாய் ஆறில் ஒன் றன்றோ புரவலர் கொள்ளும் பொருள். – 37</poem> ::என் நெஞ்சு நாணும் நலனும் இவையெல்லாம் மன்னன் புனல் நாடன் வௌவினான் \ என்னே அரவு அகல் அல்குலாய் ஆறில் ஒன்று அன்றோ புரவலர் கொள்ளும் பொருள். ::என்னுடைய எண்ணம், நாணம், நலம் ஆகிய இவை எல்லாவற்றையும் காவிரி பாயும் புனல் நாட்டை ஆளும் சோழன் பிடுங்கிக்கொண்டான். பாம்புப்படம் போல விரிந்திருக்கும் அல்குல் கொண்ட என் தோழியே! வருவாயில் ஆறில் ஒரு பங்கைத்தானே காப்பாற்றும் மன்னவன் வரியாக வாங்கிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் பிடுங்கிக்கொள்ளலாமா? ===38=== <poem>தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி யிளவளவன் மண்ணகங் காவலனே யென்பரால் - மண்ணகங் காவலனே யானக்காற் காவானோ மாலைவாய்க் கோவலர்வாய் வைத்த குழல். – 38</poem> ::தெள் நீர் நறு மலர்த் தார்ச் சென்னி இள வளவன் மண்ணகம் காவலனே என்பரால் \ மண்ணகம் காவலனே ஆனக்கால் காவானோ மாலைவாய்க் கோவலர் வாய் வைத்த குழல். ::சென்னி இளவளவன் கழுத்திலே மாலை அணிந்தவன். அது தெளிந்த நீரிலே பூக்கும் மணம் மிக்க பூவாலானது. இந்த வளவனை மண்ணுலகைக் காக்கும் காவலன் என்கின்றனர். உண்மையில் அவன் மண்ணுலகைக் காக்கும் காவலன் ஆனால், மாலைக்காலத்தில் ஆனிரைகளுடன் இல்லம் திரும்பும் கோவலர் ஊதும் குழல் என் தனிமையைத் துன்புறுத்துகிறதே அதைத் தடுத்திருக்க வேண்டாமா? ===39=== <poem>அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி முறைசெயும் என்பரால் தோழி – இறையிறந்த அங்கோல் அணிவளையே சொல்லாதோ மற்றவன் செங்கோன்மை செந்நின்ற வாறு. – 39</poem> ::அறை பறை யானை அலங்கு தார்க் கிள்ளி முறைசெயும் என்பரால் தோழி \ இறை இறந்த அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன் செங்கோன்மை செம்மை நின்றவாறு. ::கழுத்தில் மாலை அணிந்துகொண்டு கிள்ளி பறை முழக்கத்துடன் யானைமேல் வருகிறான். அவனைப் பார்த்ததும் என் தோளிலிருந்த வளையல்கள் நழுவிக் கீழே இறங்குகின்றன. தோழி! கிள்ளி நீதி தவறாமல் முறை செய்பவன் என்கின்றர். என் தோளிலிருந்து நழுவும் வளையல் அவன் எத்த அளவில் செங்கோல் செலுத்துகிறான் என்பதைச் சொல்கிறதே! ===40=== <poem>நீள்நீலத் தார்வளவன் நின்மேலான் ஆகவும் நாணிமை யின்றி நடத்தியால் – நீள்நிலம் கண்தன்மை கொண்டலரும் காவிரி நீர்நாட்டுப் பெண்தன்மை இல்லை பிடி. – 40</poem> ::நீள் நீலத் தார் வளவன் நின்மேலான் ஆகவும் நாணிமை இன்றி நடத்தியால் நீள் நிலம் கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர்நாட்டுப் பெண்தன்மை இல்லை பிடி. ::அடி! பெண்யானையே! வளவன் ஒரு ஆண். அவன் உன்மேல் இருக்கிறான். அவனைச் சுமந்துகொண்டு, வெட்கம் இல்லாமல் வருகிறாயே! காவிரி நாட்டுப் பெண்-தண்மை உனக்கு இல்லை. நீல மலரால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலையை வளவன் அணிந்துகொண்டு வருகிறான். கண்ணோட்டம் கொண்டு உலகைக் காத்து மலரும் நாடு காவிரியாறு பாயும் நாடு. ==சோழன் 41-45== ===41=== <poem>செங்கால் மடநாராய் தென்னுறந்தை சேறியேல் நின்கால்மேல் வைப்பன்என் கையிரண்டும் – நன்பால் கரைஉரிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற் குரையாயோ யானுற்ற நோய். – 41</poem> [மடம் = சேறி = செல்லுதி, செல்கிறாய், செல்வாய்; சேறியேல் = செல்வாயேல், செல்வாயானால்; வைப்பந் = வைப்பேன், வைக்கிறேன்; பால் = இடம்; உரிஞ்சு = தேய்] :: பொருள்கோள்: செங்கால் மடநாராய் தென் உறந்தை சேறியேல், நின் கால்மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால் கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரிநீர் நாடற்கு யான் உற்ற நோய் உரையாயோ? ::சிவந்த கால்களையும், கள்ளம் கபடமற்ற தன்மையையும் உடைய நாரையே! நீ பறந்து செல்லும்போது தென்பால் உள்ள உறையூருக்குச் செல்வாயேயானால், உன் கால்மேல் என் கைகள் இரண்டையும் வைக்கிறேன். நல்ல இடங்களையுடைய ஆற்றங்கரைகளையே தேய்த்து மீன்கள் துள்ளும் காவிரிநீர் கொண்ட சோழனாகிய காவிரி நாடனுக்கு, அவன்மேற்கொண்ட காதலால் நானுற்ற துயரைச் சொல்லமாட்டாயா?. ===42=== <poem>வரக்கண்டு நாணாதே வல்லையா னெஞ்சே மரக்கண்ணோ மண்ஆள்வார் கண்ணென் – றிரக்கண்டாய் வாள்உழுவை வெல்கொடியான் வண்புனல்நீர் நாடற்கென் தோள்அழுவம் தோன்றத் தொழுது. – 42</poem> ::வரக்கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே மரக்கண்ணோ மண்ஆள்வார் கண் என்று இரக்கண்டாய் வாள் உழுவை வெல்கொடியான் வண் புனல்நீர் நாடற்கு என் தோள் அழுவம் தோன்றத் தொழுது. ::வெல்லும் புலிக்கொடியான், வளமையான ஆற்றுப்புனல் பாயும் நாடன், சோழன் உலா வரக் கண்டு, பெண்மை உணர்வோடு நாணியிருக்க உன்னால் முடியுமா? முடியாதே. அதனால், நெஞ்சே! நாணாமல் அவனைக் கண்டு இர. உன் கண் என்ன மரத்தாலான கண்ணா (இரக்கம் இல்லாத கண்ணா) என்று கேட்டு இர (கண்ணோட்டத்துடன் இரக்கம் காட்டும்படிப் பிச்சை கேள்) | வாள் உழுவை = கண்ணைக் கவரும் ஒளி மிக்க புலி. ===43=== <poem>பேயோ பெருந்தண் பனிவாடாய் பெண்பிறந்தா ரேயோ உனக்கிங் கிறைக்குடிகள் – நீயோ களிபடுமால் யானைக் கடுமான்தேர்க் கிள்ளி அளியிடை அற்றம்பார்ப் பாய். – 43</poem> ::பேயோ பெருந்தண் பனிவாடாய் பெண் பிறந்தாரேயோ உனக்கு இங்கு இறைக் குடிகள் நீயோ களி படு மால் யானைக் கடுமான் தேர்க் கிள்ளி அளி இடை அற்றம் பார்ப்பாய். ::பனிக் காலத்தில் பெருங் குளிருடன் வீசும் வாடைக் காற்றே! நீ என்ன பேயோ? கிள்ளி எனக்கு அளி செய்கிறான். அவன் எப்போது அரவணைப்பிலிருந்து விலகுவான் என்று பார்த்து வீசி என்னை ஆட்டிவைக்கிறாய். சோழனை இறைவனாகக் கொண்ட குடிமக்கள் மீது வீசுகிறாய். | கிள்ளி களிப்பூட்டும் யானை மீதும் வருகிறான். குதிரை பூட்டிய தேரிலும் வருகிறான். ===44=== <poem>நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத் தாமரையும் நீலமுந் தைவந் – தியாமத்து வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய் பண்டன்று பட்டினங் காப்பு. – 44</poem> ::நாம நெடு வேல் நலங்கிள்ளி சோணாட்டுத் தாமரையும் நீலமும் தைவந்து யாமத்து வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய் பண்டு அன்று பட்டினம் காப்பு. ::நலங்கிள்ளி அச்சம் தரும் வேலை உடையவன். அவனது சோழநாட்டில் வண்டு ஒன்று நள்ளிரவில் தாமரையிலும், நீல மலரிலும் தேனை உண்டு தடவிக்கொடுத்துவிட்டு வருகிறது. குளிரும் வாடைக்காற்றே! நலங்கிள்ளி காவிரிப்பூம் பட்டினத்தைக் காப்பாற்றும் செயல் பண்டுபோல் எல்லாருக்கும் பாதுகாப்புத் தருவதாக இல்லை. எனவே நீ இங்கு வரவேண்டாம். | வாடைக்காற்று வீசாமல் இருக்கவேண்டும் என்று நயமாக வேண்டுகிறாள். ===45=== <poem>தானைகொண் டோடுவ தாயதன் செங்கோன்மை சேனை யறியக் கிளவேனோ – யானை பிடிவீசும் வண்தடக்கைப் பெய்தண்தார்க் கிள்ளி நெடுவீதி நேர்பட்ட போது. – 45</poem> ::தானை கொண்டு ஓடுவதாய தன் செங்கோன்மை சேனை அறியக் கிளவேனோ யானை பிடி வீசும் வண் தடக்கைப் பெய் தண்தார்க் கிள்ளி நெடு வீதி நேர்பட்ட போது. ::ஆண் பெண் யானைகளை வளமாகத் தரும் கொடையாளி கிள்ளி. மாலை சூடிய அந்தக் கிள்ளி உலா வரும்வோது அவனை நீண்ட வீதியில் கண்டதும் என் சேலை நழுவியது. இப்படி நழுவச் செய்துவிட்டு அவன் ஓடும் செங்கோன்மையை அவன் படைகளெல்லாம் அறியுமாறு எடுத்துச் சொல்லாமல் இருப்போனா? ==சோழன் 46-50== ===46=== <poem>காவல் உழவர் களத்தகத்துப் போர்ஏறி நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை – காவலன்தன் கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே நல்யானைக் கோக்கிள்ளி நாடு. – 46</poem> ::காவல் உழவர் களத்தகத்துப் போர் ஏறி நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன் தன் கொல் யானை மேல் இருந்து கூற்று இசைத்தால் போலுமே நல் யானைக் கோக்கிள்ளி நாடு. ::உலகைக் காப்பாற்றும் உழவர்கள் தம் நெற்களத்தில் உள்ள போரின்மீது ஏறி “நாவலோ” என்று காலை நேரத்தில் ஓசை எழுப்பினால் எப்படியோ அப்படித்தான் இருக்கிறது, நாட்டைக் காப்பாற்றும் மன்னவன் கொல்லும் போர்யானைமேல் (எருமைக் கடா) இருந்துகொண்டு கூற்றுவன் “வாருங்கள்” என்று இசைமுழக்கம் செய்வது. இதுதான் இன்றைய கிள்ளிநாட்டு ஆட்சி நிலைமை. \ தன்னிடம் நெல் இருக்கிறது என்று கூவவேண்டிய உழவன் நாவல்பழம் பறிக்க வாருங்கள் என்று கூவும் கொடுமை கிள்ளியின் நாட்டில் இருக்கிறது. \ காப்பாற்ற வேண்டிய கிள்ளி, கொல்கிறேன் வாருங்கள் என்பவன் போல் உலா வருகிறான். ===47=== <poem>மாலை விலைபகர்வார் கிள்ளி களைந்தபூச் சால மருவியதோர் தன்மைத்தால் – காலையே வில்பயில் வானகம் போலுமே வெல்வளவன் பொற்பார் உறந்தை அகம். – 47</poem> ::மாலை விலைபகர்வார் கிள்ளி களைந்த பூச் சால மருவியது ஓர் தன்மைத்தால் காலையே வில் பயில் வானகம் போலுமே வெல் வளவன் பொன் பார் உறந்தை அகம். ::கிள்ளி காலையில் பூமாலை சூடிக்கொண்டு உலா வருகிறான். காலையிலேயே வானவில் போட்டுக்கொண்டிருக்கும் வானம் போல் அவன் தோன்றுகிறான். மாலையில் அவன் கழற்றி எறிந்த பூவை விலைக்கு விற்கின்றனர். அவன் மலையை அதிகம் பேர் விரும்பினார்கள் என்பதற்காக விற்கின்றனர். மாலையில் விற்கும் வெற்று மாலையால் என்ன பயன்? – அவள் கேட்கிறாள். \ பொற்பார் உறந்தை = பொன் விளையும் மண் கொண்ட உறையூர் ===48=== <poem>மந்தரங் காம்பாய் மணிவிசும் போலையாத் திங்கள் அதற்கோர் திலதமா எங்கணும் முற்றுநீர் வைய முழுதும் நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை. 48</poem> ::மந்தரம் காம்பாய் மணி விசும்பு ஓலையாத் திங்கள் அதற்கு ஓர் திலதமா எங்கணும் முற்று நீர் வையம் முழுதும் நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை. ::கிள்ளியின் வெண்கொற்றக் குடைக்கு மந்தர-மலை காம்பு. நீலநிற வானம் குடையில் விரிந்திருக்கும் ஓலை. வானத்து நிலா அந்தக் குடையின் உள்முகட்டில் இருக்கும் நெற்றிப்பொட்டு. இப்படி இருந்துகொண்டு உலகம் முழுவதற்கும் நிழல் தந்து அந்தக் குடை காப்பாற்றுகிறது. அது சரி. என்னை மட்டும் ஏங்கவைக்கிறது. இது கொடுமை. ===49=== <poem>அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார் – எந்தை இலங்கிலைவேற் கிள்ளி இரேவதிநாள் என்னோ சிலம்பிதன் கூடிழந்த வாறு. – 49</poem> ::அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ சிலம்பி தன் கூடு இழந்தவாறு. ::கிள்ளி இரேவதி நாளில் பிறந்தான். அவனுக்குப் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம். அன்று அந்தணர்கள் பசு, பொன் ஆகியவற்றைத் தானமாகப் பெற்றனர். நாவண்மை உடைய பாவலர் மலை போல் உயர்ந்த களிறு வழங்கப்பபட்டு அதில் ஊர்ந்தனர். ஆனால் சிலந்திப் பூச்சி மட்டும் தன் கூட்டை இழந்தது. அது ஏன்? இது முறை ஆகுமா? | (பொங்கல் நாள் அன்று பழம்பொருள்களைத் துடைத்துத் தூய்மை செய்வது போல் மன்னன் பிறந்த நாளிலும் அரண்மனை ஒட்டடை துடைத்துத் தூய்மை செய்யப்பட்டது. அப்போது சிலந்திப் பூச்சி தன் கூட்டை இழந்தது) | பிறந்த நாளில் கிள்ளி உலா வந்தான். அவனைக் கண்ட சிலம்பி என்னும் பெண் மட்டும் தன் கூடாகிய உடல் நலத்தை இழந்தாள். இதுவா அவன் தரும் பிறந்தநாள் கொடை? – அவள் வினா. ===50=== <poem>நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து முன்றந்த மன்னர் முடிதாக்க – இன்றுந் திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே பெருந்தண் உறந்தையார் கோ. – 50</poem> ::நின்றீமின் மன்னீர் நெருநல் திறை கொணர்ந்து முன் தந்த மன்னர் முடி தாக்க இன்றும் திருந்து அடி புண்ணாகிச் செவ்வி இலனே பெரும் தண் உறந்தையார் கோ. ::மன்னர்களே! சற்றே நில்லுங்கள். நேற்று, திறை தந்த மன்னர்கள் வணங்கியபோது அவர்களின் முடி தாக்கி உறையூர் மன்னன் காலடி புண்ணாகிக் கிடக்கிறது. அதனால் இன்று அவன் காட்சி தரவில்லை. அவன் பெருமையும் ஈரமும் கொண்டவன். ==சோழன் 51-56== ===51=== <poem>கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர் முடியிடறித் தேய்ந்த நகமும் – பிடிமுன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே கல்லார்தோட் கிள்ளி களிறு. – 51</poem> ::கொடி மதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர் முடி இடறித் தேய்ந்த நகமும் பிடி முன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே கல் ஆர் தோள் கிள்ளி களிறு. ::கல்மலை போன்ற தோள் கொண்டவன் கிள்ளி. அவனது ஊர்தி ஆண்யானை. அது அவனது பறைவரின் கோட்டை மதில்களைப் பாய்ந்து இடித்தது. அதனால் அதன் தந்தங்களின் நுனி முறிந்து போயிற்று. போரில் விழுந்த மன்னர்களின் தலைமுடியை (கிரீடத்தை) இடறி அதன் கால்நகங்கள் தேய்ந்து போயின. இவற்றைத் தன் பெண்யானைக்குக் காட்டுவதற்கு நாணிக் கட்டுத்தறியின் புறக்கடையிலேயை அந்த ஆண்யானை தயங்கிக்கொண்டு நின்றது. ===52=== <poem>கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால் தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் – பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமேநங் கோழியர்கோக் கிள்ளி களிறு. – 52</poem> ::கச்சி ஒருகால் மிதியா ஒரு காலால் தத்து நீர்த் தண் உஞ்சை தான் மிதியாப் பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமே நம் கோழியர் கோக் கிள்ளி களிறு. ::கிள்ளி அரசன், கோழி என்னும் உறையூர் மக்களின் தலைவன். அவன் போரிட்டபோது அதன் நான்கு கால்களும் நான்கு இடங்களை மிதித்துக்கொண்டிருந்தது. உறையூர், காஞ்சிபுரம், உஞ்சை (உஜ்ஜயினி), ஈழம் (இலங்கை) ஆகியவை அந்த ஊர்கள். ===53=== <poem>பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர நாற்றிசையும் ஓடி நரிகதிப்ப – ஆற்ற அலங்கலம் பேய்மகளிர் ஆட வருமே இலங்கிலைவேற் கிள்ளி களிறு. – 53</poem> ::பாறு இனம் ஆர்ப்பப் பருந்து வழிப் படர நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற அலங்கல் அம் பேய் மகளிர் ஆட வருமே இலங்கு இலை வேல் கிள்ளி களிறு. ::இலை உருவில் ஒளிறும் வேலேந்திய கிள்ளியின் களிறு போர்க்களத்தில் பெருமித நடை போட்டுக்கொண்டு வரும். அப்போது புலால் உண்ணும் பறவைகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும். பருந்துகள் அந்த ஆண்யானையைப் பின்தொடரும். நரிகள் நாலாப்பக்கமும் ஓடித் திரியும். அணிகலன்களைப் பெருமையாக ஆட்டிக்கொண்டு பேய்மகளிர் ஆடுவர். காரணம் எங்கும் பிணம். பிணங்களுக்கு இடையே அந்தக் களிறு வரும். ===54=== <poem>முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத் தடித்த குடர்திரியா மாட்டி – எடுத்தெடுத்துப் பேஎய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன் சேஎய் பொருத களம். - 54</poem> ::முடித்தலை வெள்ளோட்டு மூளை நெய்யாகத் தடித்த குடர் திரியா மாட்டி எடுத்து எடுத்துப் பேஎய் விளக்கு அயரும் பெற்றித்தே செம்பியன் சேஎய் பொருத களம். ::செம்பியன் போரிட்ட களத்தில் பேய் விளக்கு வைத்திருந்தது. மன்னரின் தலைமண்டை விளக்கின் ஓடு. அவர்களின் மூளை நெய். அவர்களின் குடல் திரி. இப்படிப் பேய்கள் விளக்கு வைத்து (கார்த்திகை) விழாக் கொண்டாடின. ===55=== <poem>இரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற வரியிளஞ் செங்காற் குழவி – அரையிரவில் ஊமந்தா ராட்ட உறங்கிற்றே செம்பியன் தன் நாமம்பா ராட்டாதார் நாடு. – 55</poem> ::இரியல் மகளிர் இலை ஞெமலுள் ஈன்ற வரி இளம் செங்கால் குழவி அரை இரவில் ஊமம் தாராட்ட உறங்கிற்றே செம்பியன் தன் நாமம் பாராட்டாதார் நாடு. – 55 ::செம்பியனின் பெயரைப் பாராட்டாவர் நாட்டில் உறக்கம். வீட்டை விட்டு ஓடிப் பிழைத்திருக்கும் மகளிர் உதிர்ந்து கிடக்கும் இலைச் சறுகுகளில் குழந்தைகளைப் பெற்றனர். நள்ளிரவில் கோட்டான் அந்தக் குழந்தைகளுக்குத் தாலாட்டுப் பாடியது. இப்படி அவலநிலை. ===56=== <poem>அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர் எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டால் – பனிக்கடலுள் பாய்ந்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான் காய்சினவேல் கிள்ளி களிறு. 56 </poem> ::அயில் கதவம் பாய்ந்து உழக்கி ஆற்றல் சால் மன்னர் எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனிக் கடலுள் பாய்ந்து ஓய்ந்த நாவாய் போல் தோன்றுமே எங்கோமான் காய் சின வேல் கிள்ளி களிறு. ::கிள்ளியின் யானை கடலில் செல்லும் நாவாய்க் கப்பல் போலத் தோன்றுகிறது. எப்படி? நாவாய் கடலில் பாயும். களிறு வேல் தாங்கிய கோட்டைக் கதவுகளின் மீது பாய்ந்து அழிக்கிறது. நாவாய் பாய்மரம் கொண்டிருக்கும். களிறு கோட்டைக் கதவைப் பெயர்த்துத் தூக்கிக் கொம்பில் வைத்துக்கொண்டு வருகிறது. அதனால் களிறு கப்பல் போல் தோன்றுகிறது. (குறிப்பு: இதே பாடல் சேரனைப் பற்றிய பாடல்களுள் 20ஆம்எண் பாடலாகவும் அமைந்துள்ளது. அதில் ஈற்றடி “காய்சினத்தேர்க் கோதை களிறு” எனவும் இதில் “காய்சினவேற் கிள்ளி களிறு” எனவும் உள்ளன. இஃது ஆயவுக்குரியது. இப்பாடலின் அடி 3இன் முதற்சீர் “பாய்தோய்ந்த” என்றிருத்தல் சிறப்பு; இப்பாடலைப் பதிவு செய்து உரையெழுதியவர் “பாய்ந்தோய்ந்து” என்று பாடங்கொண்டுள்ளார் .)-சேரன். ==பாண்டியன் 57-60 == ===57=== <poem>காப்படங்கென் றன்னை கடிமனை யிற்செறித்து யாப்படங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன் நன்னலம் காணக் கதவம் துளைதொட்டார்க் கென்னைகொல் கைம்மா றினி. – 57</poem> ::காப்பு அடங்கு என்று அன்னை கடி மனையில் செறித்து யாப்பு அடங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன் நல் நலம் காணக் கதவம் துளை தொட்டார்க்கு என்னைகொல் கைம்மாறு இனி. ::கடுங்கோன் உலா வந்தான். அவனை நான் காணக்கூடாது என்று, “உன்னைக் காப்பாற்றிக்கொண்டு அடங்கு” என்று சொல்லி அன்னை என்னை இல்லத்தில் செறிவாக அடைத்துவைத்தாள். உள்ளேயும் ஓடியாட முடியாமல் கட்டியும் போட்டாள். ஆனால் கதவிலே முன்பே துளை ஒன்று போட்டுவைத்திருந்தார்கள். (அது வெளியே இருப்பவர் யார் என்று பார்க்க உதவும் கதவுக்கண்.) அது அவன் நல்லழகையெல்லாம் காணும் வகையில் அமைந்திருந்தது. இப்படிக் கதவுக்கண் ஓட்டை போட்டு வைத்திருக்கிறார்களே, அவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன். – அவள் கூறுகிறாள். | கடுங்கோ = சேரன் | கடுங்கோன் = பாண்டியன். ===58=== <poem>வளையவாய் நீண்டதோள் வாட்கணாய் அன்னை இளையளாய் மூத்திலள் கொல்லோ – தளையவிழ்தார் மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக் கண்கொண்டு நோக்கல்என் பாள். – 58</poem> ::வளையவாய் நீண்ட தோள் வாள் கணாய் அன்னை இளையளாய் மூத்திலள் கொல்லோ தளையவிழ் தார் மண் கொண்ட தானை மறம் கனல் வேல் மாறனைக் கண்கொண்டு நோக்கல் என்பாள். ::வளையல் அணிந்த நீண்ட தோளும், வாள் போன்ற கண்ணும் கொண்ட தோழியே! அன்னை இளையவளா? மூத்தவளா? மூத்தவளாக இருந்தும் இளையவளாக இருக்கிறாளே! சிறுபிள்ளைத் தனமாய் நடந்துகொள்கிறாளே! மாறன் உலா வருவதைக் கண்கொண்டு பார்க்கக்கூடாது என்கிறாளே. பூக்கும் மலர்மாலை அணிந்துகொண்டு, பகைவரைக் கைப்பற்றிய படையோடு, வீரம் வெளிப்படும் வேல் ஏந்திய கோலத்துடன் வருகிறானே. அவன் மாலையையாவது, படையையாவது, வேலையாவது நான் பார்க்கக்கூடாதா? ===59=== <poem>கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென வேட்டங்குச் சென்றெவன் நெஞ்சறியாள் - கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை வெறுங்கூடு காவல்கொண் டாள். – 59</poem> ::கோள் தெங்கு சூழ் கூடல் கோமானைக் கூட என வேட்டு அங்குச் சென்ற எவன் நெஞ்சு அறியாள் கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை வெறுங்கூடு காவல் கொண்டாள். ::கொழுத்த தென்னைமரம் சூழ்ந்திருக்கும் ஊர் கூடல் நகரம். அவன் இந்தக் கூடல் அரசன். அவனை விரும்பி என் நெஞ்சு சென்றுவிட்டது. இது அன்னைக்குத் தெரியவில்லை. வெறும் உடம்புக் கூட்டுக்குக் காவல் போட்டிருக்கிறாள். | குறும்பூழ் = காடை என்னும் பறவை. | காடை பிடிக்கும் வேடன் வலையை விரித்து வைப்பான். அதன் அருகில் தான் பழக்கி வைத்திருக்கும் பெண்-காடையைப் பறக்க விடுவான். அது ஆண்-காடையை அழைத்துவந்து கூட்டில் விழச்செய்யும். அன்னை அப்படிச் செய்கிறாளே! ===60=== <poem>களியானைத் தென்னன் இளங்கோவென் றெள்ளிப் பணியாரே தம்பார் இழக்க – அணியாகங் கைதொழு தேனும் இழக்கோ நறுமாவின் கொய்தளிர் அன்ன நிறம். – 60</poem> ::களி யானைத் தென்னன் இளங்கோ என்று எள்ளிப் பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் கை தொழுதேனும் இழக்கோ நறு மாவின் கொய் தளிர் அன்ன நிறம். ::களிப்புக் கொண்ட யானைமேல் வருபவன் தென்னன். அவன் இளையவன், எளிதாக வென்றுவிடலாம் என்று ஏளனமாகப் பேசிக்கொண்டு அவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் தன் நாட்டை இழந்தனர். அது சரி. நான் தென்னனைத் தொழுதேன். ஆனால் என் மாந்தளிர் போன்ற மேனி அழகை இழந்துவிட்டேனே! இது சரியா? ==பாண்டியன் 61-65== ===61=== <poem>வழுவில்எம் வீதியுள் மாறன் வருங்கால் தொழுதேனைத் தோள்நலமுங் கொண்டான் – இமிழ்திரைக் கார்க்கடற் கொற்கையார் காவலனுந் தானேயால் யார்க்கிடுகோ பூசல் இனி. – 61</poem> ::வழு இல் எம் வீதியுள் மாறன் வருங்கால் தொழுதேனைத் தோள் நலமும் கொண்டான் இமிழ் திரைக் கார்க் கடல் கொற்கையார் காவலனுந் தானேயால் யார்க்கு இடுகோ பூசல் இனி. ::மாறன் குறையில்லாத என் வீதியில் உலா வந்தான். அப்போது நான் அவனைத் தொழுதேன். அவன் என் தோள்-அழகை வாங்கிக்கொண்டான். திறையாக வாங்கிக்கொண்டான். நான் அவன் கொற்கை நகரில் வாழும் அவனது குடிமகள். எனக்குக் காவலன் அவன்தான். அவனே இந்தக் கொடுமையைச் செய்தால் நான் யாரிடம் சென்று முறையிட்டுக்கொள்வேன்? ===62=== <poem>தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும் வானேற்ற வையகம் எல்லாமால் – யானோ எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர்ந்தண்தார் மாறன் அளியானேல் அன்றென்பார் ஆர். – 62</poem> ::தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும் வான் ஏற்ற வையகம் எல்லாமால் யானோ எளியேன் ஓர் பெண் பாலேன் ஈர்ம் தண் தார் மாறன் அளியானேல் அன்று என்பார் ஆர். ::மாறன் தான், தன் ஒப்புயர்வற்ற வெண்கொற்றக் குடையால் குடிமக்களுக்கு நிழல் தருபவன். வானுலகைத் தாங்கும் வையகத்தைக் காப்பவன். அவன் அப்படி. யானோ எளியவள். அதிலும் ஒரு பெண். அளி(இரக்கம்) தந்து காப்பாற்றப்பட வேண்டியவள். இந்த உண்மையை அன்று என்று சொல்பவர் ஆர்? அப்படி இருக்க அவன் எனக்கு அளி(இரக்கம்) செய்து காப்பாறவில்லையே!. ===63=== <poem>மன்னுயிர் காதல் தனதான அவ்வுயிருள் என்னுயிரும் எண்ணப் படுமாயின் – என்னுயிர்க்கே சீரொழுகு செங்கோற் செழியற்கே தக்கதோ நீரொழுகப் பாலொழுகா வாறு. – 63</poem> ::மன் உயிர் காதல் தனது ஆன அவ் உயிருள் என் உயிரும் எண்ணப்படும் ஆயின் என் உயிர்க்கே சீர் ஒழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ நீர் ஒழுகப் பால் ஒழுகாவாறு. ::செழியன் நிலைபெற்ற உயிரினம் எல்லாவற்றின் மீதும் காதலன்பு கொண்டவன். அந்த உயிரினங்களில் என் உயிரும் ஒன்றாக எண்ணப்படுமாயின், என்மேல் செங்கோல் ஆட்சி செய்யவில்லையே! எதுவா அவன் சீர்மை? * பச்சைமண் பாண்டத்தில் பாலை ஊற்றிவைத்தால் அதில் உள்ள நீர் கசிந்து ஒழுகுகிறது. பால் கசிந்து ஒழுகவில்லை. இது என்ன விந்தை! * அவன் நீர்மை எல்லா உயிரினங்கள் மாட்டும் பாய்கிறது. அவன் பாலுணர்வு அப்படிப் பாயவில்லையே. ===64=== <poem>புகுவார்க் கிடங்கொடா போதுவார்க் கொல்கா நகுவாரை நாணி மறையா – இகுகரையின் ஏமான் பிணைபோல நின்றதே கூடலார் கோமான்பின் சென்றவென் நெஞ்சு. - 64</poem> ::புகுவார்க்கு இடம் கொடா போதுவார்க்கு ஒல்கா நகுவாரை நாணி மறையா இகு கரையின் ஏ மான் பிணை போல நின்றதே கூடலார் கோமான் பின் சென்ற என் நெஞ்சு. ::அவன் கூடலார் கோமான். அவன் பின் என் நெஞ்சு சென்றது. என் நெஞ்சுக்குள்ளே புகுவார் யாருக்கும் அது இடம் கொடுக்கவில்லை. வழியில் யார் சென்றாலும் நெஞ்சம் தளரவில்லை. என் நெஞ்சைப் பார்த்து எள்ளி நகையாடுபவர்களைக் கண்டால் நாணி மறைந்துகொள்கிறது. இடிந்து விழுந்துகொண்டிருக்கும் ஆற்றங்கரையில் அம்பு பட்ட மான் நிற்பது போல என் நெஞ்சு அவனிடம் நிற்கிறது. ===65=== <poem>களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை அளியான் அளிப்பானே போன்றான் - தெளியாதே செங்காந்தள் மென்விரலாற் சேக்கை தடவந்தேன் என்காண்பேன் என் அலால் யான். – 65</poem> ::களி யானைத் தென்னன் கனவின் வந்து என்னை அளியான் அளிப்பானே போன்றான் தெளியாதே செங்காந்தள் மென் விரலால் சேக்கை தடவந்தேன் என் காண்பேன் என் அலால் யான். ::களிக்கும் யானைமேல் உலா வருபவன் தென்னன். அவன் என் கனவில் வந்தான். அவன் எனக்கு இன்பம் எதுவும் தரவில்லை. இன்பம் தருபவன் போல இருந்தான். உடனே செங்காந்தள் பூப் போன்ற என் விரல்களால் அவனைத் தடவினேன். உண்மையில் படுக்கையைத் தடவிக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர என் படுக்கையில் வேறு யாரும் இல்லை. ==பாண்டியன் 66-70== ===66=== <poem>கனவை நனவென் றெதிர்விழிக்கும் காணூம் நனவில் எதிர்விழிக்க நாணும் – புனையிழாய் என்கண் இவையானால் எவ்வாறே மாமாறன் தன்கண் அருள்பெறுமோ தான். – 66</poem> ::கனவை நனவு என்று எதிர் விழிக்கும் காணூம் நனவில் எதிர் விழிக்க நாணும் புனையிழாய் என் கண் இவை ஆனால் எவ்வாறே மா மாறன் தன் கண் அருள் பெறுமோ தான். ::கனவை நனவு என்று எண்ணிக்கொண்டு அவனைக் கொட்டைக் கண்ணோடு விழித்துக்கொண்டு பார்க்கிறேன். அப்போது உறங்கிக்கொண்டிருக்கும் என் கண்கள் அவனைப் பார்க்கவில்லை. நனவில் அவன் உலா வருகிறான். அப்போது என் நாணத்தால் அவனைப் பார்க்க முடியவில்லை. என் கண்ணுக்கே இந்த நிலைமை ஆனால் அவனது அருளைப் பெறுவது எப்போது? ===67=== <poem>தளையவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி களையினும்என் கண்திறந்து காட்டேன் – வளைகொடுப்போம் வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந் தென்கண் புகுந்தான் இரா. – 67</poem> ::தளை அவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி களையினும் என் கண் திறந்து காட்டேன் வளை கொடுப்போம் வன் கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து என் கண் புகுந்தான் இரா. ::மலரும் பூமாலையைக் கையில் எடுத்துக்கொண்டு வந்து நிற்கும் தாய்மார்களே! “விடிந்துவிட்டது, கண்ணைத் திற” என்கிறீர்கள். என் உயிரே போனாலும் கண்ணைத் திறக்கமாட்டேன். மாறன் என் வளையல்களைக் கழன்று விழும்படிச் செய்து எடுத்துக்கொண்டு போய்விட்டான். அவன் கொடுமைக்காரன். வாளைக் கையில் உடையவன். கருநிற யானைமேல் வந்தான். வந்தவன் இரவில் என் கண்ணுக்குள் அகப்பட்டுக்கொண்டான். கண்ணுக்குள்ளே இருக்கிறான். திறந்தால் ஓடிவிடுவான். மால் = கருமை ===68=== <poem>ஓராற்றல் என்கண் இமைபொருந்த அந்நிலையே கூரார்வேல் மாறன் என் கைப்பற்ற – வாரா நனவென் றெழுந்திருந்தேன் நல்வினையொன் றில்லேன் கனவும் இழந்திருந்த வாறு. – 68</poem> ::ஓராற்றல் என்கண் இமை பொருந்த அந் நிலையே கூர் ஆர் வேல் மாறன் என் கைப் பற்ற வாரா நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன் கனவும் இழந்து இருந்த ஆறு. ::அவனை எண்ணிக்கொண்டே இருந்தேன். தூக்கம் வரவில்லை. ஏதோ ஒரு வகையில் என் இமைகள் மூடிக்கொண்டன. அப்போதே கூரிய வேலை உடைய மாறன் அருகில் வந்து என் கைகளைப் பற்றினான். கனவை நனவு என்று எண்ணி எழுந்திருந்தேன். அவன் இல்லை. கைப்பற்றிய கனவு இன்பமும் இல்லாமல் போய்விட்டது. எனக்கு நல்வினைப்பேறு ஒன்றுகூட இல்லை. ===69=== <poem>கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர்நுனைவேலி வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற் கொண்டிருக்கப் பெற்ற குணம். – 69</poem> ::கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர் நுனை வேலி வண்டு இருக்க நக்க தார் வா மான் வழுதியால் கொண்டிருக்கப் பெற்ற குணம். ::கரிய நல்ல நீலமலர் மணக்கும் குளத்தில் நாள்தோறும் பூத்துநின்று தவம் செய்தது. அந்தத் தவத்தின் பயனால் போலும் வழுதி கழுத்தில் மாலை ஆகும் பேறு பெற்றுள்ளது. கூர்மையான நுனியை உடைய வேல் போன்ற வாயைக் கொண்டிருக்கும் வண்டு சிரிப்பொலி கேட்க மொய்க்கும் பூமாலை, வழுதி மாலை. ===70=== <poem>அறிவரார் யாமொருநாட் பெண்டிரே மாகச் செறிவார் தலைமே னடந்து – மறிதிரை மாட முரிஞ்சும் மதுரையார் கோமானைக் கூட வொருநாட் பெற. – 70</poem> ::அறிவர் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆகச் செறிவார் தலைமேல் நடந்து மறி திரை மாடம் உரிஞ்சும் மதுரையார் கோமானைக் கூட வொரு நாள் பெற. ::மோதித் திரும்பும் வைகை ஆற்று நீர்த்திரையை மாடி வீடுகள் உரிஞ்சும் ஊர் மதுரை. அவன் அந்த மதுரை மக்களின் கோமான். என்றேனும் ஒருநாள் நான் அவனோடு சேர்ந்து கூடி இருப்போன். இப்போது ஊரார் என் வாயை அடைத்து வைக்கின்றனர். நான் அவனோடு கூடியிருப்பதை அன்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். இப்போது என்னை வீட்டுக்குள்ளே அடைத்துச் செறித்து வைப்பவர்கள் அப்போது தெரிந்துகொள்வர். அப்போது அவர்கள் தலைமேல் நான் நடப்பேன். பெண்களே! இதனைத் தெரிந்துகொள்ளுங்கள். ==பாண்டியன் 71-75== ===71=== <poem>கைய தவன்கடலுள் சங்கமால் பூண்டதுவும் செய்யசங் கீன்ற செழுமுத்தால் மெய்யதுவும் மன்பொரு வேல்மாறன் வார்பொதியிற் சந்தனமால் என்பெறா வாடும் என் தோள். – 71</poem> ::கையது அவன் கடலுள் சங்கமால் பூண்டதுவும் செய்ய சங்கு ஈன்ற செழு முத்தால் மெய்யதுவும் மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனமால் என் பெறா வாடும் என் தோள். ::கடல் கைக்கும்படிக் கடலில் படுத்துத் தவம் செய்துகொண்டிருப்பதால் திருமால்தான் மாறன் என்கிறேன். திருமால் கடல் சங்கைக் கையில் வைத்துக்கொண்டிருக்கிறான். நான் மாறன் கடலில் விளைந்த சங்கில் அறுத்த வளையல்கைக் கையில் அணிந்துகொண்டிருக்கிஅறேன். மாறன் கடல் முத்தை ஆரமாக அணிந்துகொண்டிருக்கிறேன். மாறனின் பெதியமலைச் சந்தனத்தைப் பூசிக்கொண்டிருக்குறேன். சங்கம், முத்து, சந்தனம் எல்லாமே அவனுடையவை. அப்படி இருக்கும்போது என் தோள் எதனைப் பெறாமல் வாடுகிறது? வியப்பாக உள்ளது. ===72=== <poem>இப்பியீன்று இட்ட எறிகதிர் நித்திலம் கொற்கையே யல்ல படுவது – கொற்கைக் குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம் கருதியார் கண்ணும் படும். – 72</poem> ::இப்பி ஈன்று இட்ட எறி கதிர் நித்திலம் கொற்கையே அல்ல படுவது கொற்கைக் குருதி வேல் மாறன் குளிர்சாந் தகலம் கருதியார் கண்ணும் படும். ::சங்குச் சிப்பிகள் பெற்றெடுத்த முத்துகள் கொற்கையில் மட்டுமா உதிர்கின்றன? கொற்கையை ஆளும் மாறனின், குருதி தோய்ந்த வேலை உடைய மாறனின், குளிர்ந்த சந்தனம் பூசிய மார்பினை அடையக் கருதிய பெண்கள் கண்களிலிருந்தும் உதிர்கின்றன. ===73=== <poem>கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன் முடிபாடி முத்தாரம் பாடித் – தொடியுலக்கை கைம்மனையில் ஓச்சப் பெறுவெனோ யானும்ஓர் அம்மனைக் காவல் உளேன். – 73</poem> ::கொடி பாடித் தேர் பாடிக் கொய் தண் தார் மாறன் முடி பாடி முத்தாரம் பாடித் தொடி உலக்கை கைம் மனையில் ஓச்சப் பெறுவெனோ யானும் ஓர் அம் மனைக் காவல் உளேன். ::மாறன் கொடி, மாறன் தேர், மாறன் பூ மாலை, மாறன் முத்தாரம், மாறன் சூடிய முடி ஆகியவற்றைப் பாடிக்கொண்டு நான் உலக்கையால் நெல் குற்றவேண்டும். இதுதான் என் ஆசை. இப்போது வீட்டுக் காவலில் கிடக்கிறேன். \ தொடி உலக்கை – பூண் போட்ட உலக்கை \ கொய் தண் தார் – கொய்த குளிர்ந்த பூக்களால் கட்டப்பட்ட மால் \ கைம்மனை – சிறிய இல்லம் \ அம்மனை – அழகிய இல்லம் ===74=== <poem>என்னை உரையல் என் பேருரையல் ஊருரையல் அன்னையும் இன்னள் எனவுரையல் பின்னையுந் தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்கென் கண்படாவாறே யுரை. 74</poem> ::என்னை உரையல் என் பேருரையல் ஊருரையல் அன்னையும் இன்னள் என உரையல் பின்னையும் தண் படா யானைத் தமிழ்நர் பெருமாற்கு என் கண் படாவாறே உரை. ::என்னைப் பற்றிப் பேசவேண்டா. என் பேரையும் சொல்லவேண்டா. என் தாய் என்னை அடைத்து வைத்திருக்கும் கொடியவள் என்றும் சொல்லவேண்டா. பின் என்னதான் சொல்லவேண்டும் என்கிறாயா? தமிழர் பெருமானை எண்ணி என் கண் உறங்காமல் இருக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள். (தண் படா யானை = குளுமை இல்லாமல் எப்பொதும் சினம் கொண்டிருக்கும் யானை – யானையை உடைய தமிழர் பெருமான்.) ===75=== <poem>மாறடுபோர் மன்னர் மதிக்குடையும் செங்கோலும் கூறிடுவாய் நீயோ குளிர்வாடாய் சோறடுவார் ஆரத்தால் தீமூட்டும் அம்பொதியிற் கோமாற்கென் வாரத்தால் தோற்றேன் வளை. 75</poem> ::மாறு அடு போர் மன்னர் மதிக் குடையும் செம் கோலும் கூறிடுவாய் நீயோ குளிர் வாடாய் சோறு அடுவார் ஆரத்தால் தீ மூட்டும் அம் பொதியின் கோமாற்கு என் வாரத்தால் தோற்றேன் வளை. ::சோறாக்குவோர் சந்தனக்கட்டையில் அடுப்புத் தீ மூட்டும் பொதியமலை நாட்டுக் கோமான் அவன். குளிரும் வாடைக்காற்றே! நீ அவனிடம் தூது செல். மாற்றாரைப் போரில் வெல்லும் அவனது குடை, மதியம் போன்ற வெண்கொற்றக் குடை, செங்கோல் ஆகியவற்றை முதலில் சொல். பின் அவனை நெஞ்சில் பங்குபோட்டுக் கொண்டிருப்பதால் என் வளையல்களைத் தோற்றுப் போயிருக்கிறேன் என்பதையும் சொல். (வாரம் = சரிபாதி பங்கு) ==பாண்டியன் 76-80== ===76=== <poem>துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப் பிடியேயான் நின்னை யிரப்பல் – கடிகமழ்தார்ச் சேலேக வண்ணனொடு சேரி புகுதலுமெஞ் சாலேகம் சார நட. – 76</poem> ::துடி அடித் தோல் செவித் தூங்கு கைம் நால் வாய்ப் பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார்ச் சேல் ஏக வண்ணனொடு சேரி புகுதலும் எம் சாலேகம் சார நட. ::அவன் சேல் ஏக வண்ணன். மீன் கொடி கொண்ட மாறன். (மீன் கொடி கொண்ட காம வேள் மாரன்). அவனைச் சுமந்துகொண்டு வரும் பிடியே! (பெண்யானையே) உடுக்கை-மேளம் போன்ற காலடியும், தோல்-பறை போன்ற காதும், தொங்கும் கையில் துளை இருக்கும் வாயும் கொண்டிருக்கிறாய். சரி. உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். மாலை அணிந்துகொண்டு அவன் உன்மேல் வரும்போது என் தெருச்சேரிக்கு வந்ததும் என் வீட்டுச் சன்னல் (சாலேகம்) ஓரமாக நடந்து செல். நான் அவனைக் கண்ணாரக் காணவேண்டும். ===77=== <poem>எலாஅ மடப்பிடியே யெங்கூடற் கோமான் புலாஅல் நெடுநல்வேல் மாறன் – உலாஅங்கால் பைய நடக்கவுந் தேற்றாயால் நின்பெண்மை ஐயப் படுவ துடைத்து. – 77</poem> ::எலாஅ மடப் பிடியே எம் கூடல் கோமான் புலாஅல் நெடு நல் வேல் மாறன் உலாஅங்கால் பைய நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை ஐயப்படுவது உடைத்து. ::ஏ, மடத்தனம் கொண்ட பிடியே! புலால் நாற்றம் அடிக்கும் வேலையுடைய என் கூடல்-கோமான் மாறன் உலா வரும்போது மெதுவாக நடக்க உனக்குத் தெரியவில்லையே. பெண்ணின் விருப்பத்தைப் புரிந்துகொள்ளாத நீயும் ஒரு பெண்ணா? உன் பிறவி ஐயப்படத் தக்கதாக உள்ளது. ===78=== <poem>போரகத்துப் பாயுமா பாயாது பாயமா ஊரகத்து மெல்ல நடவாயோ – கூர்வேல் மதிவெங் களியானை மாறன் தன் மார்பங் கதவங்கொண் டியாமுந் தொழ. – 78</poem> ::போர் அகத்துப் பாயும் மா பாயாது பாயமா ஊர் அகத்து மெல்ல நடவாயோ கூர் வேல் மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம் கதவம் கொண்டு யாமும் தொழ. ::மாறன் மார்புக் கதவை நான் திறந்து தொழவேண்டும். அவனைச் சுமந்துவரும் களிப்பு மிக்க யானையே! போரில் பாய்வது போல நீ பாயாதே. பாயாசம் போல ஊருக்குள்ளே மெல்ல நடந்துசெல். ===79=== <poem>ஆடுகோ சூடுகோ ஐதாக் கலந்துகொண்டு ஏடுகோ டாக எழுதுகோ – நீடு புனவட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி கனவட்டங் கால்குடைந்த நீறு. – 79</poem> ::ஆடுகோ சூடுகோ ஐதாக் கலந்துகொண்டு ஏடு கோடாக எழுதுகோ நீடு புனவட்டப் பூ தெரியல் பொன் தேர் வழுதி கனவட்டம் கால் குடைந்த நீறு. ::வழுதியின் குதிரை ஊர்தியின் பெயர் ‘கனவட்டம்’. வழுதியைச் சுமந்துகொண்டு கனவட்டம் தெருவில் சென்றது. அதன் காலடி பட்ட புழுதியை நீரில் கலந்து மையாக்கிக்கொண்டு, பூவிதழ் நுனியை எழுத்தாணி ஆக்கிக்கொண்டு, என் கண்ணில் மை எழுதிக்கொள்ளட்டுமா, என் தோளில் தொய்யில் எழுதிக்கொள்ளட்டுமா – அவள் கேட்கிறாள். ===80=== <poem>பிணிகிடந் தார்க்குப் பிறந்தநாட் போல அணியிழை அஞ்ச வருமால் – மணியானை மாறன் வழுதி மணவா மருண்மாலைச் சீறியோர் வாடை சினந்து. – 80</poem> ::பிணி கிடந்தார்க்குப் பிறந்த நாள் போல அணியிழை அஞ்ச வருமால் மணி யானை மாறன் வழுதி மணவா மருண்மாலைச் சீறி ஓர் வாடை சினந்து. ::நோய்வாய்ப் பட்டுக் கிடப்பவர்களுக்குப் பிறந்தநாள் வருவது போல வாடைக்காற்று சினம் கொண்டு பாய்கிறது. பெண்ணே! பார். மாறன் வழுதியோடு கூடி இருக்காமல் தனியே இருப்பவரிடம்தான் வாடை இப்படி வருகிறது. ==பாண்டியன் 81-85== ===81=== <poem>வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோல் ஏரிய ஆயினும் என்செய்யும் –கூரிய கோட்டானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங் கோட்டுமண் கொள்ளா முலை. – 81</poem> ::வாரிய பெண்ணை வரு குரும்பை வாய்த்தன போல் ஏரிய ஆயினும் என் செய்யும் கூரிய கோட்டு ஆனைத் தென்னன் குளிர் சாந்து அணி அகலம் கோட்டு மண் கொள்ளா முலை. ::என் முலை தென்னங்குரும்பை போல் பருத்துக்கொண்டிருக்கிறது. சரி. அதனால் என்ன பயன். தென்னன் மார்பில் உள்ள சந்தனக் குழம்பை அப்பிக்கொள்ளவில்லையே! ===82=== <poem>நாணாக்காற் பெண்மை நலன் அழியும் முன்னின்று காணாக்காற் கைவளையுஞ் சோருமால் – காணேன்நான் வண்டு எவ்வந் தீர்தார் வயமான் வழுதியைக் கண்டுஎவ்வந் தீர்தார் ஆறு. – 82</poem> ::நாணாக்கால் பெண்மை நலன் அழியும் முன் நின்று காணாக்கால் கை வளையும் சோருமால் காணேன் நான் வண்டு எவ்வம் தீர் தார் வய மான் வழுதியைக் கண்டு எவ்வம் தீர் தார் ஆறு. ::வழுதி உலா வரும்போது கண்டு நாணாமல் நின்றால் என் பெண்மை அழியும். அவனைக் கண்ணாரக் காணவில்லை என்றால் என் கைவளையல் கழன்று ஓடும். எப்படித்தான் என் எவ்வத் துன்பத்தைப் போக்கிக்கொள்வேன்? பூமாலை மட்டும் வண்டின் துன்பத்தைப் போக்கிக்கொண்டு அவன் கழுத்தில் இருக்கிறதே! ===83=== <poem>மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக் காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் – கண்டக்காற் பூணாகந் தாவென்று புல்லப் பெறுவேனோ நாணோ டுடன்பிறந்த நான். – 83</poem> ::மாணார்க் கடந்த மற வெம் போர் மாறனைக் காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்டக்கால் பூண் ஆகம் தா என்று புல்லப் பெறுவேனோ நாணோடு உடன்பிறந்த நான். ::மாட்சிமை இல்லாதவர்களை வென்றவன் மாறன். அவனைக் காணாதபோது ஆயிரம் ஆயிரமாகப் பேசுவேன். கண்டால், “உன் பூண் அணிந்த மார்பை எனக்குக் கொடு” என்று கேட்டுத் தழுவமுடியுமா? நாணத்தோடு பிறந்தவள் ஆயிற்றே! ===84=== <poem>செய்யார் எனினுந் தமர்செய்வ ரென்னுஞ்சொல் மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் – கையார் வரிவளை நின்றன வையையார் கோமான் புரிவளை போந்தியம்பக் கேட்டு. – 84</poem> ::செய்யார் எனினும் தமர் செய்வர் என்னும் சொல் மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் கை ஆர் வரி வளை நின்றன வையையார் கோமான் புரி வளை போந்து இயம்பக் கேட்டு. ::மற்றவர்கள் உதவவில்லை என்றாலும், உற்றார் உறவினர் உதவுவர் என்பது உண்மை என்பது இப்போது தெரிந்துவிட்டது. வையை நாட்டாரின் அரசன் உலா வரும்போது ஊதிய சங்கின் ஓசையைக் கேட்டதும், சங்கால் செய்யப்பட்டதாய் என் கையில் இருக்கும் வளையல்கள் என் தோள்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டன. காணப்போகும் மகிழ்ச்சி. \ வரிவளை – கையில் வரிவரியாக உள்ள வளையல் \ புரிவளை – வளைந்து விரியும் சங்கு ===85=== <poem>உகுவாய் நிலத்த துயர்மணல்மேல் ஏறி நகுவாய்முத் தீன்றசைந்த சங்கம் – புகுவான் திரைவரவு பார்த்திருக்குந் தென்கொற்கைக் கோமான் உரைவரவு பார்த்திருக்கும் நெஞ்சு. – 85</poem> ::உகு வாய் நிலத்தது உயர் மணல் மேல் ஏறி நகு வாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் புகுவான் திரை வரவு பார்த்திருக்கும் தென் கொற்கைக் கோமான் உரை வரவு பார்த்திருக்கும் நெஞ்சு. ::சங்குப் பூச்சி மணலின் மேல் ஏறி பல்லைக் காட்டும் முத்துக்களைப் பெற்று வைத்துவிட்டு மீளும். அந்த முத்துக்கள் அலைகள் வந்து கொண்டுசெல்லாவா என்று காத்துக்கொண்டிருக்கும். அதுபோல நான் அந்த முத்து விளையும் கொற்கை அரசனிடமிருந்து அழைப்பு வராதா எனக் காத்திருக்கிறேன். ==பாண்டியன் 86-90== ===86=== <poem>கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவனேல் கூடு என்று – கூடல் இழைப்பாள்போற் காட்டி இழையா திருக்கும் பிழைப்பில் பிழைபாக் கறிந்து. – 86</poem> ::கூடல் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவனேல் கூடு என்று கூடல் இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும் பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து. – 86 ::கூடல் இழைத்தல் என்பது ஒருவகை விளையாட்டு. அது குறி பார்க்கும் விளையாட்டு. நடுவில் நின்றுகொண்டு, கண்களை மூடிக்கொண்டு, சுழன்று, கைவிரலால் மணலில் வட்டமிட்டுக் கோடு கிழிப்பர். வட்டம் கோணல் மாணலாக இருந்தாலும், கோடு தொடங்கிய புள்ளியில் ஒன்றுகூட வேண்டும், கூடினால் தான் விரும்பிய எண்ணம் நிறைவேறும் என்றும், கூடாமல் கோடு வேறிடம் சென்றால் விரும்பிய செயல் கைகூடாது என்றும் நம்புவர். ::இப்படி அவள் கூடல் இழைக்க முற்பட்டாள். கூடல் பெருமான் பாண்டியனை நான் கூடப்பெறுவேன் என்றால் கூடல் கோடே நீ கூடுக என்று சொல்லிக்கொண்டு கூடல் இழைக்க முற்பட்டுக் கூடல் இழைப்பது போலப் பாசாங்கு காட்டினாள். உண்மையில் அவள் கூடல் இழைக்கவில்லை. காரணம் ஒருவேளை கூடல்-கோடு கூடாமல் போய்விட்டால் அவனைக் கூடமுடியாமல் போய்விடுமே என்னும் அச்சம் அவளுக்கு. ===87=== <poem>குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம் புறப்படா பூந்தார் வழுதி – புறப்படின் ஆபுகு மாலை அணிமலையில் தீயேபோல் நாடறி கௌவை தரும். – 87</poem> ::குடத்து விளக்கே போல் கொம்பன்னார் காமம் புறப்படா. பூந்தார் வழுதி புறப்படின் ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல் நாடறி கௌவை தரும். ::கொடிக்கொம்பு (கொம்பில் ஏறும் கொடி) போன்றவர் மகளிர். மகளிர் காமம் குடத்துக்குள் வைத்த விளக்குப்போல் வெளி-உலகுக்குத் தெரியாது. ஆனால் வழுதி மாலையும் கழுத்துமாக உலா வரும்போது, ஆனிரைகள் இல்லம் புகும் மாலை வேளையில் மலையில் பற்றி எரியும் தீயைப் போல ஊருக்கெல்லாம் தெரியும்படி வெளிப்பட்டுவிடும். ===88=== <poem>ஏற்பக் குடைந்தாடில் ஏசுவர் அல்லாக்கால் மாற்றி யிருந்தாள் ஏனவுரைப்பர் – வேற்கண்ணாய் கொல்யானை மாறன் குளிர்புனல் வையைநீர் எல்லாம் எனக்கோர் இடர். – 88</poem> ::ஏற்பக் குடைந்து ஆடில் ஏசுவர் அல்லாக்கால் மாற்றி இருந்தாள் ஏன உரைப்பர் வேல் கண்ணாய் கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் எல்லாம் எனக்கு ஓர் இடர். ::அவன் கொல்யானை மேல் செல்லும் மாறன். அவன் நாட்டு வையையில் குளிர்ந்த ஊற்றுநீர் வருகிறது. அதில் மூழ்கிக் குளித்து விளையாடினால் மாறன் நாட்டு நீர் என்று மூழ்கி விளையாடுகிறாள் என்று சொல்லி ஏசுவார்கள். நீராடாமல் கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தால் தன் ஆசையை மறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று முணுமுணுப்பர். வேல் போன்ற கண்ணை உடைய என் தோழியே! எது செய்தாலும் எனக்குத் துன்பமே. ===89=== <poem>யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின் தானூட யானுணர்த்தத் தானுணரான் – தேனூறு கொய்தார் வழுதி குளிர்சாந் தணியகலம் எய்தா திராக்கழிந்த வாறு. – 89</poem> ::யான் ஊடத் தான் உணர்த்த யான் உணரா விட்டதன் பின் தான் ஊட யான் உணர்த்தத் தான் உணரான் தேன் ஊறு கொய் தார் வழுதி குளிர் சாந்து அணி அகலம் எய்தாது இராக் கழிந்தவாறு. ::நான் ஊடினேன். அவன் உணர்த்தினான். நான் என் ஊடலை விட்டு உணர்ந்துகொண்டு கூடச் சென்றேன். அப்போது வழுதி நான் முன்பு ஊடினேன் என்று ஊடினான். நான் உணர்த்தினேன். அவன் உணரவில்லை. இப்படியே இரவெல்லாம் கழிந்துவிட்டது. குளிர்ந்த சந்தனம் பூசிய அவன் மார்பு எனக்குக் கிடைக்கவே இல்லை. ===90=== <poem>புல்லாதார் வல்லே புலர்கென்பர் புல்லினார் நில்லா யிரவே நெடிதென்பர் – நல்ல விராமலர்த் தார்மாறன் வெண்சாந் தகலம் இராவளிப் பட்ட திது. – 90</poem> ::புல்லாதார் வல்லே புலர்(கு) என்பர் புல்லினார் நில்லாய் இரவே நெடிது என்பர் நல்ல விராம் மலர்த் தார் மாறன் வெண் சாந்து அகலம் இரா அளிப் பட்டது இது. ::இரவே! உடனே விடிந்துவிடு (புலர்க) என்று மாறனின் வெண்ணிறச் சந்தனம் பூசிய மார்பைத் தழுவப்பெறாதவர்கள் வேண்டுவர். தழுவப்பெற்றவர்கள் இரவே விடியாமல் நீண்டுகொண்டே இரு என்று வேண்டுவர். இப்படி இரங்கத்தக்க (அளி) இரவு என்னிடம் வந்திருக்கிறதே! ==பாண்டியன் 91-95== ===91=== <poem>பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல் நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் – சாரல் மலைபடுப யானை வயமாறன் கூர்வேல் தலைபடுப தார்வேந்தர் மார்பு.- 91</poem> ::பார் படுப செம் பொன் பதி படுப முத்தமிழ் நூல் நீர் படுப வெண் சங்கும் நித்திலமும் சாரல் மலை படுப யானை வய மாறன் கூர் வேல் தலை படுப தார் வேந்தர் மார்பு. ::மாறன் நிலமெல்லாம் செம்பொன். ::ஊரெல்லாம் முத்தமிழ் முழங்கும் நூல்கள். ::நீரெல்லாம் சங்கும், முத்தும். ::மலையெல்லாம் யானை. ::பகைவேந்தர் மார்பெல்லாம் அவன் வேல். ::எனக்கு மட்டும் எதுவுமே இல்லையா ===92=== <poem>நந்தின இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும் பந்தர் இளங்கமுகின் பாளையும் – சிந்தித் திகழ்முத்தம் போற்றோன்றும் செம்மற்றே தென்னன் நகைமுத்த வெண்குடையான் நாடு. – 92</poem> ::நந்தின இளம் சினையும் புன்னைக் குவி மொட்டும் பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தித் திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன் நகை முத்த வெண் குடையான் நாடு. ::நந்துச் சங்குகளின் இள முட்டைகளும், புன்னைப்பூ மொட்டுகளும், பந்தர்த் துறைமுகத்தில் உள்ள பாக்குப் பாளைகளும் சிந்திக் கிடப்பதால் தென்னன் நாடெங்கிலும் முத்துக்கள் சிரிப்பது போல் தோற்றமளிக்கிறது. தென்னன் குடையிலும் முத்துக்கள் தொங்குகின்றன. இது இவன் நாட்டுக்குக் கிடைத்திருக்கும் செம்மாப்பு. எனக்குத்தான் அவன் பல்நகை முத்தம் கிடைக்கவில்லை. ===93=== <poem>மைந்தரோ டூடி மகளிர் திமிர்ந்திட்ட குங்கும ஈர்ஞ்சாந்தின சேறுழக்கி – எங்கும் தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் நெடுமாடக் கூடல் அகம். – 93</poem> ::மைந்தரோடு ஊடி மகளிர் திமிர்ந்து இட்ட குங்கும ஈர்ம் சாந்தின சேறு உழக்கி எங்கும் தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் நெடு மாடக் கூடல் அகம். ::மைந்தரோடு மகளிர் ஊடுவர். அப்போது மகளிர் அணிந்திருக்கும் ஈரக் குங்குமமும், மைந்தர் அணிந்திருக்கும் ஈரச் சந்தனமும் நிலத்தில் பட்டுச் சேறாகிப், போவார் வருவாரெல்லாம் வழுக்கித் தடுமாறும் தன்மை கொண்டது தென்னன் ஆளும் கூடல் நகரம். ===94=== <poem>மடங்கா மயில்ஊர்தி மைந்தனை நாளும் கடம்பம்பூக் கொண்டேத்தி அற்றால் – தொடங்கமருள் நின்றிலங்கு வென்றி நிரைகதிர்வேல் மாறனை இன் தமிழால் யாம்பாடும் பாட்டு. – 94</poem> ::மடங்கா மயில் ஊர்தி மைந்தனை நாளும் கடம்பம்பூக் கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள் நின்று இலங்கு வென்றி நிரை கதிர் வேல் மாறனை இன் தமிழால் யாம் பாடும் பாட்டு. ::மடங்காத தோகையை உடைய மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகனைக் கடம்புப் பூப் போட்டுப் பூசை செய்வது எப்படியோ அப்படிப்பட்டதுதான் மாறனை இனிய தமிழால் நான் பாடும் பாடல் எனக் கொள்க. மாறன் தொடங்கிய போரிலெல்லாம் முருகனைப் போல வெற்றி கண்டு ஒளிரும் வேலை உடையவன். ===95=== <poem>செங்கண் நெடியான்மேல் தேர்விசையன் ஏற்றியபூப் பைங்கண்வெள் ஏற்றான்பால் கண்டற்றால் – எங்கும் முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன் அடிமிசையே காணப் படும். – 95</poem> ::செங்கண் நெடியான் மேல் தேர் விசையன் ஏற்றிய பூப் பைங் கண் வெள் ஏற்றான் பால் கண்டு அற்றால் எங்கும் முடி மன்னர் சூடிய பூ மொய்ம் மலர்த் தார் மாறன் அடி மிசையே காணப்படும். ::அருச்சுணன் திருமாலுக்குச் சாத்திய பூ அத்தனையும் காளைமாட்டு ஊர்திக் கடவுளிடம் (சிவன் திருவடிகளில்) கிடப்பதைக் கண்டனர். அப்படித்தான் மன்னர் முடியில் சூடிய பூக்கள் எல்லாம் மாறன் காலடியில் கிடந்தன. மாறனைத் தொழும்போது உதிர்ந்த பூக்கள் அவை. ==பாண்டியன் 96-100== ===96=== <poem>கூந்தன்மா கொன்று குடமாடிக் கோவலானாய்ப் பூந்தொடியைப் புல்கிய ஞான்றுண்டால் – யாங்கொளித்தாய் தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு. – 96</poem> ::கூந்தல் மா கொன்று குடம் ஆடிக் கோவலானாய்ப் பூந்தொடியைப் புல்கிய ஞான்று உண்டால் யாங்கு ஒளித்தாய் தென்னவனே தேர் வேந்தே தேறு நீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு. ::தென்னவனே! தேர் வேந்தே! தெளிந்த நீர் ஓடும் கூடல் நகரக் கோமானே! நீதான் திருமால். (நெடியோன் என்பவன் பாண்டிய மன்னர்களில் ஒருவன்) நீ கண்ணனாகத் தோன்றிய காலத்தில் கூந்தல் என்னும் குதிரையைக் கொன்றாய். குடம் தலையில் வைத்துக்கொண்டு நடனம் ஆடினாய். அழகிய வளையல்காரி நப்பின்னையை (இராதையை)த் தழுவினாய். அப்போது உன் மார்பில் மறு இருந்ததே! (திருமகளை மார்பில் கொண்டிருக்கும் மறு) அதனை இப்போது எங்கே ஒளித்து வைத்து வைத்திருக்கிறாய்? ===97=== <poem>கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர் பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் – நண்ணார்தம் தேர்வேந்தன் தென்னன் திருவுத் திராடநாள் போர்வேந்தன் பூசல் இலன். – 97</poem> ::கண்ணார் கதவம் திறமின் களிறொடு தேர் பண் ஆர் நடைப் புரவி பண் விடுமின் நண்ணார் தம் தேர் வேந்தன் தென்னன் திருவும் திராட நாள் போர் வேந்தன் பூசல் இலன். ::தென்னனை நினைக்காத பகைவர்களே! உங்கள் கதவினைத் திறந்துகொள்ளுங்கள். களிறும், தேரும், குதிரையும் போருக்காகப் பூட்டுவதை விட்டுவிடுங்கள். இன்று தென்னன் பிறந்த திருநாள். உத்திரட்டாதி நாள். தேரில் வருவான். ஆனால் போர் செய்யமாட்டான். அஞ்சவேண்டா. ===98=== <poem>நிறைமதிபோல் யானைமேல் நீலத்தார் மாறன் குடைதோன்ற ஞாலத் தரசர் – திறைகொள் இறையோ எனவந் திடம்பெறுதல் இன்றி முறையோ எனநின்றார் மொய்த்து. – 98</poem> ::நிறை மதி போல் யானை மேல் நீலத் தார் மாறன் குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள் இறையோ என வந்து இடம் பெறுதல் இன்றி முறையோ என நின்றார் மொய்த்து. ::நீலநிற வேம்புமாலை அணிந்துகொண்டு மாறன் உலா வருகிறான். அவனது வெண்கொற்றக் குடை நிறைந்த மதியம் போலக் காணப்படுகிறது. உலகத்து அரசர்களெல்லாம் திறை கொடுப்பதற்காக மொய்த்துக்கொண்டு வந்தனர். வரிசையில் காத்துக்கொண்டு நிற்கும்போது “இறைவா! இது முறையோ?” என முணுமுணுத்துக்கொண்டனர். ===99=== <poem>நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப் புரைசை யைநிமிர்ந்து பொங்கா – அரசர்தம் முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்தமாப் பொன்னுரைகல் போன்ற குளம்பு. – 99</poem> ::நிரை கதிர் வேல் மாறனை நேர் நின்றார் யானைப் புரைசையை நிமிர்ந்து பொங்கா அரசர் தம் முன் முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்த மாப் பொன்னுரை கல் போன்ற குளம்பு. – 99 ::வேல் தாங்கி மாறன் போருக்கு எழுந்தான். சிலர் அவனை எதிர்த்தனர். மாறன் யானை அவர்களின் கோட்டையை நிமிர்ந்து பார்த்துப் பொங்கிப் பாய்ந்தது. மன்னர் பலர் போரிட்டு வீழ்ந்தனர். அவர்கள் தலையில் சூடியிருந்த முடி சிதறிக் கிடந்தது. மாறன் குதிரை அந்தப் பொன்முடிகளைக் காலால் இடறியது. அதனால் அதன் குளம்புகள் பொன்னை உரைத்துப் பார்க்கும் கட்டளைக்கல் போலக் காணப்பட்டது. ===100=== <poem>அருமணி அந்தலை யாடரவம் வானத்து உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் – செருமிகுதோட் செங்கண்மா மாறன் சினவேற் கனவுமே அங்கண்மா ஞாலத் தரசு. – 100</poem> ::அரு மணி அம் தலை ஆடு அரவம் வானத்து உரும் ஏற்றை அஞ்சி ஒளிக்கும் செரு மிகு தோள் செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே அம் கண் மா ஞாலத்து அரசு. ::நஞ்சாகிய அரிய நீலமணியைக் கொண்ட நல்லபாம்பு வானத்தில் இடி முழக்கம் கேட்டால் அஞ்சி ஒடுங்கிக்கொள்ளும். அதுபோல சிவந்த கண்ணுடன் தோன்றும் மாறனின் சினங்கொண்ட வேலைக் கனவிலே கண்டு உலகிலுள்ள அரசர்கள் ஒடுங்கிக்கொள்வர். ::பாம்பு மணி உமிழுமா? ::உமிழாது ::தொண்டையில் நஞ்சு கொண்ட சிவனை மணிகண்டன் என்கிறோம். ::அதுபோல நாகத்தின் நஞ்சினை மணி என்கிறோம். ==பாண்டியன் 101-105== ===101=== <poem>நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன் காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால் ஏம மணிப்பூண் இமையார் திருந்தடி பூமி மிதியாப் பொருள். – 101</poem> ::நேமி நிமிர் தோள் நிலவு தார்த் தென்னவன் காமர் நெடும் குடைக் காவலன் ஆணையால் ஏம மணிப் பூண் இமையார் திருந்து அடி பூமி மிதியாப் பொருள். ::ஆணைச் சக்கரத்தை உருட்டி நிமிர்ந்த தோளைக் கொண்டு விளங்குபவன் தென்னவன். எல்லோரும் விரும்பும் அகன்ற வெண்கொற்றக்குடையை உடையவன். கண் இமைக்காத தேவர் தமக்குப் பாதுகாவலாக மணிப்பூண் அணிந்தவர்கள். அவர்களின் காலடி மண்ணில் படுவதில்லை. காரணம் தென்னவன் ஆணைக்குக் கட்டுப்பட வேண்டி வருமே என்னும் அச்சம். ===102=== <poem>செருவெங் கதிர்வேற் சினவெம்போர் மாறன் உருமின் இடிமுரசு ஆர்ப்ப – அரவுறழ்ந்து ஆமா உகளும் அணிவரையின் அப்புறம்போய் வேமால் வயிறெரிய வேந்து. – 102</poem> ::செரு வெம் கதிர் வேல் சின வெம் போர் மாறன் உருமின் இடி முரசு ஆர்ப்ப அரவு உறழ்ந்து ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய் வேமால் வயிறெரிய வேந்து. ::வேலேந்தி மாறன் போருக்கு எழுவான். அப்போது அவன் போர்முரசம் இடி போல் முழங்கும். அந்த முழக்கத்தைக் கேட்ட ஆமா பாம்பைப் போல் மலையெங்கும் தாவும். பின்னர் அந்த மலைக்கு அப்பால் சென்ற பின்னரும் வயற்றெரிச்சலோடு நெஞ்சம் வெந்துகொண்டிருக்கும். ===103=== <poem>மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர் உருத்தகு மார்போலை யாகத் திருத்தக்க வையக மெல்லாம் எமதென் றெழுதுமே மொய்யிலைவேல் மாறன் களிறு. - 103</poem> ::மருப்பு ஊசியாக மறம் கனல் வேல் மன்னர் உருத் தகு மார்பு ஓலையாகத் திருத் தக்க வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே மொய் இலை வேல் மாறன் களிறு. ::எழுதும் ஊசி கொண்டு ஓலை எழுதுவர். அதுபோல மாறனின் போர்யானை தன் கொம்பை எழுத்தாணி ஆக்கிக்கொண்டு உலகில் எதிர்த்த அனைத்து மன்னர் மார்புகளிலும் எழுதும். (குத்தும்) ===104=== <poem>உருவத்தார்த் தென்னன் ஓங்குஎழில் வேழத் திருகோடுஞ் செய்தொழில் வேறால் – ஒருகோடு வேற்றார் அகலம் உழுமே யொருகோடு மாற்றார் மதில்திறக்கு மால். – 104</poem> ::உருவத் தார்த் தென்னன் ஓங்கு எழில் வேழத்து இரு கோடும் செய் தொழில் வேறால் ஒரு கோடு வேற்றார் அகலம் உழுமே ஒரு கோடு மாற்றார் மதில் திறக்கும் ஆல். ::எல்லா யானைகளின் கொம்புகள் இரண்டும் ஒரே தொழிலைத்தான் செய்யும். ஆனால் தென்னவனின் போர்யானையின் இரண்டு கொம்புகளும் இருவேறு பணிகளைச் செய்யும். ஒரு கொம்பு பகையரசர் நெஞ்சில் உழும். மற்றொன்று பகையரசர் கோட்டை மதிலைத் திறக்கும் ===105=== <poem>தோற்ற மலைகடல் ஓசை புயல்கடாஅங் காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய்க் – கூற்றுங் குறியெதிர்ப்பைக் கொள்ளும் தகைமைத்தே யெங்கோன் எறிகதிர்வேல் மாறன் களிறு. - 105 </poem> ::தோற்றம் மலை கடல் ஓசை புயல் கடாஅம் காற்றின் நிமிர்ந்த செலவிற்று ஆய்க் கூற்றும் குறியெதிர்ப்பைக் கொள்ளும் தகைமைத்தே எங்கோன் எறி கதிர் வேல் மாறன் களிறு. ::எம் தலைவன் ஒளி வீசும் வேலை உடைய மாறன், அவன் களிறு தோற்றத்தில் மலை போன்றது. ஓசை புயல்மழையின் இடி முழக்கம் போன்றது. ஒழுகும் மதமும் புயல்மழை ஒழுகுவது போன்றது. அது காற்றைப்போல நிமிர்ந்து செல்லும். கொல்லும் திறத்தைக் கூற்றுவனும் கடன் வாங்கிக்கொள்ளும் திறம் படைத்தது. ==பாண்டியன் 106-110== ===106=== <poem>அடுமதில் பாய அழிந்ததன் கோட்டைப் பிடிமுன் பழகழிதல் நாணி – முடியுடை மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்வேல் தென்னவர் கோமான் களிறு. – 106</poem> ::அடு மதில் பாய அழிந்த தன் கோட்டைப் பிடி முன்பு அழகு அழிதல் நாணி முடியுடை மன்னர் குடரால் மறைக்குமே செம் கனல் வேல் தென்னவர் கோமான் களிறு. ::பகைவர் கோட்டையை அழித்துப் பாய்ச்சிய தன் கொம்பின் அழகு அழிந்து கிடப்பதைத் தன் பெண்யானைக்குக் காட்ட நாணி மன்னரைக் குத்திய குடரால் தன் கொம்பை மறைத்துக்கொண்டு தென்னவர் கோமான் களிறு வந்து நிற்கும். ===107=== <poem>வெருவரு வெஞ்சமத்து வேலிலங்க வீழ்ந்தார் புருவ முரிவுகண் டஞ்சி – நரிவெரீஇச் சேட்கணித்தாய் நின்றிழைக்குஞ் செம்மற்றே தென்னவன் வாட்கணித்தாய் வீழ்ந்தார் களம். – 107</poem> ::வெரு வரு வெம் சமத்து வேல் இலங்க வீழ்ந்தார் புருவ முரிவு கண்டு அஞ்சி நரி வெரீஇச் சேட்கு அணித்தாய் நின்று இழைக்கும் செம்மற்றே தென்னவன் வாட்கு அணித்தாய் வீழ்ந்தார் களம். ::தென்னவன் வாளுக்கு இரையாகி வேலைத் தாங்கிய கையோடு போர்க்களத்தில் வீழ்ந்து கிடப்பவரின் புருவம் வளந்திருக்கும் சினத்தைக் கண்டு அஞ்சிப் பிணம் தின்னும் நரி வெருண்டு ஓடி அண்மைய தொலைவில் நின்று பார்த்துக்கொண்டே இருக்கும். இது போர்க்களக் காட்சியின் பயங்கரத் தோற்றம். ===108=== <poem>ஏனைய பெண்டிர் எரிமூழ்கக் கண்டுதன் தானையாற் கண்புதைத்தான் தார்வழுதி – யானையும் புல்லார் பிடிபுலம்பத் தன்கண் புதைத்தே பல்யானை அட்ட களத்து. – 108</poem> ::ஏனைய பெண்டிர் எரி மூழ்கக் கண்டு தன் தானையால் கண் புதைத்தான் தார் வழுதி யானையும் புல்லார் பிடி புலம்பத் தன் கண் புதைத்தே பல் யானை அட்ட களத்து. ::வழுதி போர்க்களத்தில் பகைவரை அழித்தான். கணவன் மாண்டது கண்டு அவன் பெண்டிர் தீயில் விழுந்து உயிர் விட்டனர். வழுதி அதனைப் பார்க்க முடியாதவனாய் இரக்கம் கொண்டு தன் மேலாடையால் தன் கண்களை மூடிக்கொண்டான். பகைவரின் களிறுகள் மாண்டுபோகவே அவற்றின் பெண்யானைகளும் புலம்பின. அதனைக் கண்ட வழுதியின் களிறும் தன் கண்களைத் தன் கைகளால் மூடிக்கொண்டது. ===109=== <poem>வாகை வனமாலை சூடி அரசுறையும் ஓகை உயர்மாடத் துள்ளிருந்து – கூகை படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே தென்னன் விடுமாற்றங் கொள்ளாதார் நாடு. – 109</poem> ::வாகை வன மாலை சூடி அரசு உறையும் ஓகை உயர் மாடத்து உள் இருந்து கூகை படு பேய்க்குப் பாட்டு அயரும் பண்பிற்றே தென்னன் விடு மாற்றம் கொள்ளாதார் நாடு. ::தென்னன் ஆணையை ஏற்றுக்கொள்ளாத பகைவர் பிறரை வென்ற மாலையை அழகுடன் சூடிக்கொண்டு உவகையுடன் (ஓகை) இருப்பர். எனினும் கூகை அவர்களது மாடத்துக்குள்ளே இருந்துகொண்டு அவர்கள் சாவப்போவதைப் பாட்டாகப் பாடும். பேய்களை அழைத்துப் பாட்டுப் பாடும். இது தென்னன் அழிக்கப்போகும் அறிகுறிப் பாட்டு. ===110=== <poem>பறைநிறை கொல்யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த் திறைமுறையின் உய்யாதார் தேயம் – முறைமுறையின் ஆன்போய் அரிவையர் போய் ஆடவர்போய் ஆயிற்றே ஈன்பேய் உறையும் இடம். – 110</poem> ::பறை நிறை கொல் யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த் திறை முறையின் உய்யாதார் தேயம் முறை முறையின் ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே ஈன் பேய் உறையும் இடம். ::பஞ்சவர் என்னும் பாண்டியர்க்குத் தோழனாகித் திறை தந்து பிழைத்துக்கொள்ளாதவர் தேசமானது ஆனிரைகள், மகளிர், ஆடவர் ஆகியோர் விட்டுவிட்டுச் சென்றதால் பிணம் தின்னும் பேய் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு வாழும் இடமாக மாறிவிட்டது. ==பாண்டியன் 111-115== ===111=== <poem>கொடித்தலைத்தார்த் தென்னவன் தோற்றான்போல் நின்றான் மடித்தவாய் சுட்டிய கையாற் – பிடித்தவேற் கண்ணேரா ஓச்சிக் களிறணையாக் கண்படுத்த மண்ணேரா மன்னரைக் கண்டு. – 111</poem> ::தொடித் தலைத் தார்த் தென்னவன் தோற்றான் போல் நின்றான் மடித்த வாய் சுட்டிய கையால் பிடித்த வேல் கண் நேரா ஓச்சிக் களிறு அணையாக் கண் படுத்த மண் நேரா மன்னரைக் கண்டு. ::தன் தாயக மண்ணை நினைத்து வேலைக் கையிலே தாங்கி வந்து கண்ணோட்டம் இல்லாமல் பாய்ச்சினான் அந்த வீரன். அவன் தன் களிறு மாண்டுகிடக்கும் மெத்தையில் கண்ணுறக்கம் கொண்டிருக்கிறான். சினம் கொண்டு மடித்த வாயோடு கிடக்கிறான். தன் கையால் தென்னவனைச் சுட்டிக்கொண்டு கிடக்கிறான். அதனைப் பார்த்துத் தென்னவன் தோற்றவன் போல் நின்றான். இப்படிப்பட்ட வீரனைக் கண்டு இரக்கப்பட்டு நின்றான். ===112=== பாடல் 112 <poem>தொழில்தேற்றாப் பாலகனை முன்னேறீஇப் பின்னின் அழலிலைவேல் காய்த்தினார் பெண்டிர் – கழலடைந்து மண்ணீத்த லென்ப வயங்குதார் மாமாறன் கண்ணீத்தந் தீர்க்கு மருந்து. – 112</poem> ::தொழில் தேற்றாப் பாலகனை முன்னேறீஇப் பின்னின் அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து மண் ஈத்தல் என்ப வயங்கு தார் மா மாறன் கண் நீத்தம் தீர்க்கும் மருந்து. ::பெண்டிர் தம் போர்த்தொழில் பயிலாத பாலகனை முன்னே நிறுத்தி, மின்னும் வேலைக் கையிலே கொடுத்து, தாம் பின்னே நின்றுகொண்டு, அவனுக்கு தெம்புச்சூடு ஏற்றிப் போருக்கு அனுப்புவர். மாறன் இத்தகைய தாய்மாரின் காலைத் தொட்டு வணங்கி, தான் வென்ற நாட்டை அவளுக்குத் தருவான். இது மகனை இழந்த அந்தத் தாயின் கண்ணீர் வெள்ளத்தைத் தீர்க்கும் மருந்து. ===113=== <poem>சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறுந்துணையும் நின்றதுகொல் நேர்மருங்கில் கையூன்றி – முன்றில் முழங்கும் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்(கு) உழந்துபின் சென்றவென் நெஞ்சு. 113 </poem> ::சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறும் துணையும் நின்றதுகொல் நேர் மருங்கில் கையூன்றி முன்றில் முழங்கும் கடா யானை மொய்ம் மலர்த்தார் மாறற்(கு) உழந்து பின் சென்ற என் நெஞ்சு. ::மாறன், முழங்கும் யானைக்கடாவின்மீது வருபவன். மலர்மாலையை அணிந்திருப்பவன். அவன் பின்னே என் நெஞ்சு சென்றது. அது இப்போது அவனிடம் சென்றுவிட்டதா? அவன் நெஞ்சில் புகுந்துவிட்டதா? அவனைப் பார்ப்பதற்கு அனுமதி வெறுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறதா? அவனுக்கு நேராகப் பக்கத்தில் தன் கையை ஊன்றி நின்றுகொண்டிருக்கிறதா? இல்லை முற்றத்திலேயே இருக்கிறதா? ஒன்றும் தெரியவில்லையே! ===114=== <poem>உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக் கழுதை செவிஅரிந்து அற்றால் – வழுதியைக் கண்டநம் கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள் கொண்டன மன்னோ பசப்பு. 114</poem> ::உழுத உழுத்தம் செய் ஊர்க் கன்று மேயக் கழுதை செவி அரிந்து அற்றால் வழுதியைக் கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத் தோள் கொண்டன மன்னோ பசப்பு. ::உழுது விதைத்து விளைந்த உழுந்து வயலில் புகுந்து ஊராரின் கன்றுக்குட்டி மேய்ந்துவிட்டது. அதற்குத் தண்டனை வழங்கியவர்கள் கழுதையின் காதை அறுத்துவிட்டனர். இது எப்படி நீதி ஆகும்? அது போலத்தான் இங்கும் நடக்கிறது. வழுதியைக் கண்டதோ என் கண். அதற்குத் தண்டனையாக என் தோளில் அல்லவா பசப்பு-நோய் ஏறுகிறது. இது அடுக்குமா? ===115=== <poem>நறுவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா மறவேந்தன் வஞ்சியான் அல்லன் – துறையின் விலங்காமை நின்று வியன்தமிழ்நா டைந்தின் குலங்காவல் கொண்டொழுகும் கோ. - 115</poem> ::நறு வேந்து கோதை நலம் கவர்ந்து நல்கா மறவேந்தன் வஞ்சியான் அல்லன் துறையின் விலங்காமை நின்று வியன் தமிழ்நாடு ஐந்தின் குலம் காவல் கொண்டு ஒழுகும் கோ. ::தமிழ்நாடு ஐந்து பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. அவற்றை வெவ்வேறு குலத்தவர் ஆண்டுவந்தனர். இந்த ஐந்து குலத்தவரையும் காக்கும் பொறுப்பினை மேற்கொண்டிருந்த கோமகன் பாண்டியன். அவன் தமிழ்நாடன். அவன் நல்ல வேந்தன். கோதைமாலை அணிந்தவன். என் நலத்தையெல்லாம் கவர்ந்துகொண்டவன். கவர்ந்துகொண்டு திரும்பத் தராதவன். மறம் நிறைந்த கொடுங்கோலன். அவன் வஞ்சியரசன் சேரன் அல்லன். எனக்கு வஞ்சனை செய்யாமல் இருப்பவனும் அல்லன். என்ன செய்வது? அவன்தான் என் கோமகன். ::5 பிரிவு – சேரர், சோழர், பாண்டியர், கொங்கர், தொண்டையர் ==முன் தொகுப்பு (உரைக்காக)== பாடல் 1 :செங்கால் மடநாராய்! தென்உறந்தை சேறியேல், :நின்கால்மேல் வைப்பன்என் கையிரண்டும் - வன்பால் :கரைஉரிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற்(கு), :உரையாயோ யான்உற்ற நோய். (''அழகிய நாரையே, தெற்கேயுள்ள உறையூருக்குச் செல்வாயானால், உன் காலைப் பிடித்துக் கும்பிடத் தயார். தேகத்தின் வலிமை காரணமாகக் கரையின் மேல் உராய்ந்து, உராய்ந்து ஏறிய மீனானது மறுபடியும் நீரில் விழுந்து விடுகிற மீனின் தேகக்கொழுப்பு சோழனுக்கு யான் உற்ற காதல் கூறுவாயாக!'') (சேரன் குறிப்பு: ‘மீன்கள் கரையின் மீது துள்ளிவிழுந்து விளையாடுகின்ற காவிரிநாடனுக்கு- சோழனுக்கு - மையலால் யானடைந்துள்ள துன்பத்தைக் கூறுவாயாக.) (‘கரையேறி மீன் விளையாடும் காவிரிநாடு’ என்பது இவ்வடியின் மீளாக்கமே.) ;பாடல் 2 :துடியடி, தோல்செவி தூங்குகை, நால்வாய்ப் :பிடியே! யான் நின்னை இரப்பல், கடிகமழ்தார்ச் :சேலேக வண்ணனொடு சேரி புகுதலும்எம்் :சாலேகம் சார நட. (''கெஞ்சி கேட்டுக்கொள்ளுகிறேன். வாசனை கமழும் மாலை சூடிய,சந்தனம் பூசிய பாண்டியனோடு, ஊருக்குள் பிரவேசிக்கவும் அதாவது,நீராடிவிட்டு உன்மேல் ஏறி ஊருக்குள் மன்னன் புகும் போது, எங்கள் வீட்டு ஜன்னலை ஒட்டி நடந்து வரவேண்டும்.'') ;பாடல் 3 :குடத்து விளக்கே போல் கொம்பன்னார் காமம் :புறப்படா; பூந்தார் வழுதி - புறப்படில், :ஆபுகு மாலை அணிமலையில் தீயே போல் :நாடறி கெளவை தரும். (''பாண்டியன் மேல் பெண்கள் வைத்த காதல் வெளியே தெரியாது. மாலை சூடிய பாண்டியன் பவனி வருவதற்காகப் புறப்பட்டு விட்டாலோ பசுக்கள் மேய்ச்சல் புலங்களிலிருந்து ஊரு்க்குள் புகும் மாலை நேரத்தில் ஊருக்குப் பக்கத்தில் உள்ள மலைச்சரிவில், நாட்டார் எல்லோரும் அந்த பெண்களது காதல் நோயைத் தெரிந்து, வம்பளப்பதற்கு வாய்விடும்'') ;பாடல் 5 :நீரும் நிழலும் போல் நீண்ட அருளுடைய :ஊரிரே ! என்னை உயக்கொண்மின் ! - போரிற்(கு) :உழலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக்(கு) :அழலும்என் நெஞ்சம் கிடந்து. (''காதல் நோயால் என் நெஞ்சு சதா கொதித்த வண்ணமாக இருக்கிறது. ஊரிரே என்னை உயக்கொண்மின்!'') ;பாடல் 6 :போரகத்துப் பாயுமா ! பாயா(து) ஒருபடியா, :ஊரகத்து மெல்ல நடவாயோ ! - பார :மதவெங் களியானை மாறன் தன் மார்பம், - :கதவங்கொண்(டு) யாமும் தொழ (''இந்தக் கவி பெண்ணின் கூற்று என்பது மறைவாய் கிடக்கிறது. மார்பம் தொழ, கதவங்கொண்டு, என்னும் சொற்களை வைத்துத்தான் காதலுற்ற பெண் பேசுகிறாள். இப்படி காதலை மறைவில் வைத்துச் சொல்வதிலிருந்து ஒரு நாண பாவம் இருப்பதைத் தெளிவாக்குகிறது'') ;பாடல் 7 :தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி இளவளவன் :மண்ணகம் காவலனே என்பரால் - மண்ணகம் :காவலனே ஆனக்கால் காவானே மாலைக்கண் :கோவலர்வாய் வைத்த குழல் (''தெளிந்த நீர்நிலைகளில் பூத்த செங்கழுநீர் மலர்களை மாலையாய்த் தொடுத்து அணிந்த சென்னி என்றும் இளவளவன் என்றும் பாராட்டப்படுகிற சோழன் உலகத்தைக் காக்கிறான் என்று சொல்லுகிறார்கள். கட்டளை இட்டுத் தடுக்க மாட்டானா இந்த மாலைப்பொழுது வந்துவிட்டதை அறிவிக்கும் வாய்வைத்து ஊதுகின்ற புல்லாங்குழலை'') [[பகுப்பு:சங்க இலக்கியம்]] [[பகுப்பு :பழந்தமிழ் இலக்கியங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]] by25d61utiztr0jt6jab7c5z98nxxdo 1834741 1834739 2025-06-23T15:05:00Z 2409:408D:58E:75DF:0:0:1946:68A0 1834741 wikitext text/x-wiki {{நிறைவுறா}} {{விபரம் | title = முத்தொள்ளாயிரம் | noauthor = | section = | previous = | next = | notes = ''[[w:முத்தொள்ளாயிரம்|முத்தொள்ளாயிரம்]] என்பது தமிழ் இலக்கியத்தில் தொகை நூல் வகையைச் சேர்ந்தது. இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. இவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. பல்லாண்டுகளுக்கு முன்னர்ப் ''புறத்திரட்டு'' ஆசிரியர் நூற்றொன்பது பாக்களை மட்டும், தம் தொகை நூலில் திரட்டி வைத்துள்ளார். அவை கடவுள் வாழ்த்தாக ஒன்றும், சேரனைப் பற்றி இருபத்திரண்டும், சோழனைப் பற்றி இருபத்தொன்பதும், பாண்டியனைப் பற்றி ஐம்பத்தாறும் சிதைந்த நிலையில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெண்பாக்களாகும். மூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை முதலான அரிய செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. அருணோதயம் பதிப்பு நூலுக்கு மதிப்புரை வழங்கியுள்ள சென்னைப் புதுக்கல்லூரிப் பேராசிரியர் நா. பாண்டுரங்கன் முத்தொள்ளாயிரப் பாடல் ஒவ்வொன்றும் தகதகக்கும் தங்கநிலா என்று பாராட்டியுள்ளார். மேலும் கடைவாயில் அடக்கிக்கொண்டு சப்பிச் சுவைக்க வேண்டிய கற்கண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார். உலா வரும் அரசன்மீது காதல் கொண்டு தலைவி கூறும் ஒருதலைக் காமச் செய்திகளை, கைக்கிளைப் பொருண்மைச் செய்திகளைக் கொண்ட பாடல்கள் இதில் பெரும்பகுதியாக இடம்பெற்றுள்ளன. ''}}{{Featured download}}<br/> {{TOCright}} '''பாடல்கள்''' ==கடவுள் வாழ்த்து== <poem>மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப் – பின்னரும் ஆதிரையான் ஆதிரையான் என்றென்(று) அயருமால் ஊர்திரைநீர் வேலி உலகு – 1</poem> மன்னிய = நிலையாக இருக்கின்ற; ஆதிரை = திருஆதிரை என்னும் நட்சத்திரம், ஆகின்ற திரை (அலை); அயரும்= கொண்டாடும்; ஆல் = அசைநிலை; ஊர் = உலாவு :என்றும் நிலைபெற்றிருக்கும் விண்மீன்கள், நிலா (மதியம்), கனலும் கதிரவன் என்று இவற்றையெல்லாம் முதன்முதலில் படைத்த முதல்வனைப் பின்னரும் ஆதிரையான் (திருவாதிரை நாளுக்கு உரிய சிவன்) என்றும், ஆதிரையான் (ஆ திரையான் ஆகி, வளரும் கடலின் அலைத்திரையில் பள்ளிகொண்டிருக்கும் திருமால்) என்றும் உலாவும் அலைகளைக்கொண்ட கடலை வேலியாக உடைய உலகில் வாழும் மக்கள் கொண்டாடுகின்றனர். நாண்மீன்<ref>https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D&searchhws=yes</ref> = நாள்மீன் அதாவது அசுவினி முதலான 27 நட்சத்திரங்கள். == சேரன் 2-5== <poem>தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத் தேயத் திரிந்த குடுமியவே – ஆய்மலர் வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக் கண்டுலாஅம் வீதிக் கதவு – :[குடுமி = கதவு சுழலும் தண்டு; ஆய் = அழகு; உலா = திரி; கண்ணி = ஆடவர் தலைக்குச் சூடும் மாலை; வயமான் = குதிரை] : அழகிய மலர்களாற் கோத்த வண்டு மொய்த்துத் திரியும் தலைமாலையைச் சூடியவனும் குதிரை பூட்டிய தேரில் திரிபவனுமாகிய சேரனைக் கண்டு அவன் உலாவும் வீதிகளின் வீட்டுக் கதவுகளைத் தாய்மார்அடைப்ப மகளிர் மீண்டுந் திறப்ப என்று மாறிமாறி நிகழவும் தேய்ந்து உருமாறிய கொண்டிகளை (கதவு சுழலும் தண்டுகள்) உடையவாயின. : அதாவது, கோதை வண்டு மொய்க்கும் பூமாலை அணிந்துகொண்டு குதிரை பூட்டிய தேரில் உலா வந்தான். அவன் அழகைக் காண விரும்பி மகளிர் கதவைத் திறந்தனர். கண்டால் அவள் மயங்கிவிடுவாள் என்று அவர்களது தாய்மார் கதவை மூடினர். இப்படி ஒருவர் மூட, ஒருவர் திறக்க இருந்ததால் கதவு மாட்டியிருந்த கொண்டி தேய்ந்ததுதான் மிச்சம். யாருடைய எண்ணமும் நிறைவேறவில்லை. வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேல் கண்டவர் மாமையை அன்றோ இழப்பது – மாமையிற் பன்னூறு கோடி பழுதோ,என் மேனியிற் பொன்னூறி யன்ன பசப்பு - :சேரன் கோதை தாவும் போர்க்குதிரை பூட்டிய தேரில் செல்பவன். அவன் இப்போது மெதுவாகச் செல்லும் குதிரை பூட்டிய தேரில் உலா வருகிறான், அவனைக் கண்ட மகளிர் தன் மேனியிலிருந்த மாந்தளிர் போன்ற மாமை நிறத்தை இழந்துவிட்டனர். நானோ என் மேனியில் பொன்னிறம் ஊறிக்கிடப்பது போன்ற பசப்பு நிறத்தைப் பெற்றிருக்கிறேன். இது பழுதாகுமா? ஆகாது. மாமை நிறத்தைக் காட்டிலும் பொன்னிறம் பல நூறு மடங்கு எனக்கு மேன்மையானது. காரணம் அவனுக்காக ஏங்கிக் கிடைத்த பேறு ஆயிற்றே – என்கிறாள் ஒரு தலைவி. <poem> கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில் அடைத்தாள் தனிக்கதவம் அன்னை – அடைக்குமேல் ஆயிழையாய் என்னை அவன்மேல் எடுத்துரைப்பார் வாயும் அடைக்குமோ தான் - 4</poem> :சேரமன்னன் கோதை கடல் போன்ற படைசூழ ஊர்வலம் வருகிறான். ஆயிழைத் தோழியே! அவனைக் கண்ணாரக் காணவொட்டாமல் தாய் கதவை அடைத்துத் தாளிட்டிருக்கிறாள். ஆயின், அவனோடு என்னைச் சேர்த்துப் பேசும் ஊரார் வாயை அவளால் அடைக்கமுடியுமா? <poem> வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும் நிரைபொரு வேல்,மாந்தைக் கோவே – நிரைவளையார் தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர்தாய்மார் செங்கோலன் அல்லன் என. – 5</poem> :மன்னா! வணங்காதவரை வணங்கச் செய்து அவர்தம் மண்ணைக் கொள்ளலாம். உன் வலையில் விழுந்து கிடக்கும் பெண்ணின் அழகைக் கவரலாமா? பெண்ணின் தாய்மார் உன்னைச் செங்கோலன் அல்லன் என்று கூறுகிறார்களே! மாந்தை நகர மக்களின் கோ. மலை போல் அகன்ற மார்பினை உடையவன். நிரையாக நின்று வேலால் தாக்குபவர் மாந்தை நகர மக்கள். மகளிர் வரிசையாக வளையல் அணிந்தவர். கையின் வளையல் கோலத்தை வௌவலாமா? == சேரன் 6-10== <poem> புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை நன்னாகம் நின்றலரும் நன்னாடன் – என்னாகம் கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான் என்கொல் இவரறிந்த வாறு? – 6</poem> :மாந்தை நன்னாடனாகிய சேரன் ஒருநாள் இரவுக் கனாவில் என் மார்பகத்தைத் தடவிக்கொடுத்தான். இது இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? கண்டபடி பேசுகிறார்களே! :புன்னாகம், நன்னாகம், தென்னை ஆகியன மலரும் ஊர் மாந்தை நகரம். <poem> கடும்பனித் திங்கள்தன் கைப்போர்வை யாக நெடுங்கடை நின்றதுகொல் தோழி – நெடுஞ்சினவேல் ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக் காணிய சென்றவென் நெஞ்சு. – 7</poem> :பனி பொழியும் மாதம் இது. கையைப் போர்வையாக்கிக்கொண்டு நடுங்குகிறேன். கோதை அரசன் என் நடுக்கத்தைப் போக்குவான் என்று அவனைக் காண என் நெஞ்சு சென்றது. அவன் கோட்டை வாயிலில் அது நின்றுகொண்டிருக்கிறது போலும். என்னைப் போலவே கையைப் போர்வையாக்கிக்கொண்டு நிற்கிறது போலும். :கோதை பெருஞ்சினம் கொண்ட வேல்வீரன். பச்சைக் கல் பதித்த பூணாரமும், பூ மாலையும் அணிந்திருப்பவன். <poem> ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக் காணிய சென்று கதவடைத்தேன் – நாணிப் பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு. – 8</poem> :கோதை உலா வந்தான். அவனைக் காணவேண்டும் என்று சென்றேன். நாணம் வந்துவிட்டது. உடனே நானே கதவை அடைத்துவிட்டேன். வறுமையில் வாடுபவர் பெருஞ் செல்வம் படைத்தவர் இல்லத்துக்குச் செல்வார்கள். பின் திரும்புவார்கள். மீண்டும் செல்வார்கள். இப்படித்தான் என் நெஞ்சும் கோதை அரசனை காணப் போய் வந்துகொண்டிருக்கிறது. <poem> வருக குடநாடன் வஞ்சிக்கோ மான்என்(று) அருகலர் எல்லாம் அறிய – வருகலாம் உண்டா யிருக்கஅங்(கு) ஒண்தொடியாள் மற்(று)அவனைக் கண்டாள் ஒழிந்தாள் கலாம் – 9</poem> :கலாம் என்பது கலகலப்பு. :வருக குடநாடன் :வருக வஞ்சிக் கோமான் :என்று இவள் அருகில் இல்லாதவர்கள் எல்லாம் கலகலப்பாக இருக்கின்றனர். :ஆனால் இவள் மட்டும் அவனைக் கண்ட பின்பு கலகலப்பு ஒழிந்து காணப்படுகிறாளே! ஏங்கிக் கிடக்கிறாளே! <poem> இவன்என் நலங்கவர்ந்த கள்வன் இவன்எனது நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று – அஞ்சொலாய் செல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்குச் சொல்லும் பழியோ பெரிது. – 10</poem> :இவன் என் அழகைக் கவர்ந்துகொண்ட கள்வன், :இவன் என் நிறை நெஞ்சைக் குறை நெஞ்சு ஆக்கிய கள்வன் :என்று சேரலர் கோக்கோதை செல்லுமிடமெல்லாம் அவனைப் பழி தூற்றுகிறார்களே! :“நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை” – கலித்தொகை 133 காதலை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடக்கி வைத்திருந்தேன். என் காதலைப் பிறர் அறியும்படிக் காட்டச் செய்த கள்வன் இவன் – என்கிறாள் == சேரன் 11-15== காராட் டுதிரந்தூஉ யன்னை களனிழைத்து நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ? - போராட்டு வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதைக்கென் னெஞ்சங் களங்கொண்ட நோய். 11 இது தலைவி கூற்று. மிக்க சினத்தையும் வேலையும் கொண்டு போராடிப் பகைவரை வென்று. அவர்தம் களத்தைக் கைப்பற்றிய சேரன்பால் என் நெஞ்சே இடமாய்க்கொண்டு எழுந்த வேட்கைநோய், என் அன்னை வீட்டின்பால் ஓரிடத்தில் தெய்வத்தை எழுந்தருளச் செய்து (தெய்வத்தை ஆவாஹனம் செய்தல்) வெள்ளாட்டைப் பலியிட்டு அதன் குருதியைத் தெளித்து நீராட்டி நீங்கு. ” என்று கூறினால் நீங்கிவிடுமோ? ‘நோய் நீங்குமோ’ என இயைக்க. காராடு - வெள்ளாடு; உதிரம் - குருதி, இரத்தம்; கோதை - சேரன். மல்லல்நீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினும் சொல்லவே வேண்டும் நமகுறை - நல்ல திலகங் கிடந்த திருநுதலாய்! அஃதால் உலகங் கிடந்த இயல்பு. 12 இது தலைவி தோழிக்குக் கூறியது. சிறந்த திலகம் அணிந்த அழகிய நெற்றியையுடைய தோழியே! நீர்வளம் மிக்க மாந்தை நகரத்தாரின் பெருமை மிக்க மன்னவனாகவே இருப்பினும் அச்சேர மன்னனிடம் அஞ்சாதே சென்று என் மனக்குறையை நீ அவனிடம் சொல்லத்தான் வேண்டும். அஃதல்லவா உலகில் உயர்ந்தோரிடம் அமைந்திருக்கும் நற்பண்பாகும்? “ உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு” என்பதைத் தன் தோழிக்கு நினைவூட்டி, சேரனிடம் சென்று தன் குறையைக் கூறுமாறு தலைவி வேண்டுகிறாள். மல்லல் - வளப்பம்; மாந்தை - சேரனது நகரங்களில் ஒன்று; கடுங்கோ - சேரனது பெயர்களுள் ஒன்று, “செல்வக் கடுங்கோ வாழியாதன்” என வருதல் காண்க. நமகுறை - நம்+அ+குறை; ‘அ’ - ஆறாம் வேற்றுமை பன்மை உருபு; திலகம் - நெற்றியிலிடும் பொட்டு; திரு - அழகு; நுதல் - நெற்றி; உலகம் - உயர்ந்தோர், “உலகெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே” என்பது தொல்காப்பியம். நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய ஊரிரே என்னை உயக்கொண்மின் - போரிற் புகலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக் கழலுமென் னெஞ்சங் கிடந்து. 13 இதுவும் தலைவி கூற்று. போரை விரும்பும் கள்ளுண்டு களித்த யானைப்படைகளை யுடையவனும் பூழி நாட்டின் தலைவனாய் விளங்குகின்றவனும் ஆன சேரனிடம் யான் கொண்ட வேட்கை நோயால் என் நெஞ்சம் செயலறியாது துன்புற்று வேகின்றது; நீரும் நிழலும் தம்மையடைந்தார்க்கு எல்லாம் , வெப்பத்தைப் போக்கிக் குளிர்ச்சி தருவதுபோலப் பிறர் துன்பம் நீக்கும் மிகுந்த அருளுடைய ஊர்மக்களே! என் துயர் நீக்கி என்னை உயிர்வாழச் செய்யுங்கள். (இவ்வாறு தலைவி வேண்டுகிறாள்) புகலும் - விரும்பும், “ போரெனிற் புகலும் புனைகழல் மறவர்” எனச் சங்க இலக்கியத்துள்ளும் வந்துள்ளமை காண்க. பண்டைக்காலத்தில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரும் அதன் சுற்றுப்புறங்களும் ‘செந்தமிழ்நாடு’ என்றும் தமிழ் வழங்கிய பிற நிலப்பகுதிகள் ‘கொடுந்தமிழ்நாடுகள்’ என்றும் வழங்கப்பட்டன. அவை தென்பாண்டி நாடு, குடநாடு, குட்டநாடு, கற்காநாடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, அருவாவடதலை நாடு, சீதநாடு, மலையமான் நாடு, புனல்நாடு என்பனவாம். அவற்றுள் பூழிநாடு என்பது பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடைக்கண் அமைந்து ஒரு காலத்தில் பாண்டியர் ஆட்சியிலும் ஒரு காலத்தில் சேர மன்னர் ஆட்சியிலுமாக மாறி மாறி இருந்திருத்தல் வேண்டும். அதனால் இருவருமே “பூழியர்கோ” எனப் பாடப்பட்டுள்ளனர். “பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன்” என்பதில் பாண்டியனைக் குறித்தல் காண்க. கோதை - சேரன்; அழலும் - வேகும். அள்ளற் பழனத் தரக்காம்பல்வாயவிழ வெள்ளந்தீப் பட்டதென வெரீஇ - புள்ளினந்தங் கைச்சிறகாற் பார்ப்பொடுக்குங் கவ்வை யுடைத்தரோ நச்சிலைவேற் கோக்கோதை நாடு. 14 இது சேர நாட்டின் இயற்கைவளம் கூறுவது. நுனிக்கண் நஞ்சு தடவப்பெற்ற வேலையுடைய சேரமன்னன் நாடு, சேறு நிறைந்த வயல்களில் அரக்கு நிறத்தில் மலர்ந்து கிடக்கும் ஆம்பல் மலர்களைக் கண்ட பறவைக் கூட்டங்கள், நீரில் தீப்பற்றிக் கொண்டது என்றஞ்சித் தம் கைகளைப்போல் விளங்கும் சிறகுகளால் தம்முடைய இளங்குஞ்சுகளை அணைத்துப் பாதுகாக்க முயலும் பேரொலியையுடையதாக விளங்குகிறது. அள்ளல் - சேறு; பழனம் - வயல்; அரக்கு - செந்நிறம்; வெள்ளம் - தண்ணீர்; வெரீஇ - வெருவி, அஞ்சி; சொல்லிசையளபெடை ; புள் - பறவை; கைச்சிறகு - சிறிய சிறகு எனலுமாம்; பார்ப்பு - இளங்குஞ்சு; கவ்வை - ஆரவாரமான ஒலி. அரோ- அசை; களிகள் களிகட்கு நீட்டத்தங் கையால் களிகள் விதிர்த்திட்ட வெங்கள் - துளிகலந் தோங்கெழில் யானை மிதிப்பச் சேறாகுமே பூம்பொழில் வஞ்சி யகம். 15 இது சேர நாட்டின் தலைநகர் வஞ்சியின் வளம் கூறுவது. பூஞ்சோலைகள் நிறைந்த வஞ்சிநகரத் தெருக்கள், அத்தெருக்களில் கள்ளுண்டு களிப்பவர்கள் தம்மைப் போன்ற கட்குடியர்களுக்குத் தாம் உண்ணும் கள்ளை நீட்ட, அதனை ஏற்றுக்கொள்ளும் குடியர்கள் தம் கைகளால் தொட்டுச் சிதறிய கொடுங்கள்ளின் துளிகள் நிறைந்து, அவ்வழியாகச் செல்லும் மலைபோன்ற அழகிய யானைகள் மிதித்தலால் சேறாகிக் கிடக்கின்றன. களிகள் - கட்குடியர்கள்; விதிர்த்தல் - விரல்களை உதறுவதால் நீர்த்துளிகள் நிலத்தின்கண் சிதறச் செய்தல்; வெங்கள் - கொடிய கள்; ஓங்கெழில் யானை - மலைபோல் உயர்ந்த அழகிய யானை, ஓங்கல் - மலை; “ஓங்கலிடைத் தோன்றி உயர்ந்தோர் தொழவிளங்கி” என வருதல் காண்க. ==சேரன் 16-20 == வானிற்கு வையகம் போன்றது வானத்து மீனிற் கனையார் மறமன்னர் - வானத்து மீன்சேர் மதியனையான் விண்ணுயர் கொல்லியர் கோன்சேரன் கோதையென் பான். 16 இது சேரனின் சிறப்புக் கூறுவது. இந்நிலவுலகம் வானத்தைப் போன்றது; இவ்வுலகையாளும் மன்னர்கள் வானத்தில் விளங்கும் விண்மீன்களைப் போன்றவர்கள்; விண்ணளவு உயர்ந்த கொல்லிமலையின் தலைவனான சேரமன்னன் விண்மீன்களுக்கிடையே வீறுடன் உலாவரும் வெண்ணிலாவைப் போன்றவன். வையகம் வானைப் போன்றது எனக் கூட்டுக. ‘வானிற்கு’ என்பது உருபுமயக்கம்; மீன் - விண்மீன்; கோன் - தலைவன்; சேரன்கோதை - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பல்யானை மன்னர் படுதிறை தந்துய்ம்மின் மல்லல் நெடுமதில் வாங்குவில் பூட்டுமின் வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன் வில்லெழுதி வாழ்வார் விசும்பு. 17 இது சேரனின் வீரச்சிறப்பைக் கூறுவது. சேர மன்னவனின் தூதரின் கூற்று. பல யானைகளையுடைய மன்னர்களாக இருப்பினும் உங்கள் நாட்டு வருவாயில் சேரனுக்குரிய பங்கினை உடனே கொடுத்து உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் நகரின் வளம்மிக்க உயர்ந்த மதில்களில் சேரனது சின்னமாகிய வளைந்த வில் சின்னத்தைப் பொருத்தி வையுங்கள். வாடாத மலர்மாலைகளை அணிந்து வானில் வாழும் தேவர்களும் சேரனது வில் சின்னத்தை வானில் பொறித்து வைத்தே பாதுகாப்பாக வாழ்கின்றார்கள். திறை - சிற்றரசர்கள் பேரரசர்களுக்கு ஆண்டுதோறும் செலுத்தும் வருவாய்ப் பங்கு, இதனைக் கப்பம் என்பர். மல்லல் - வளம்; வானோர் - வானுலகில் வாழும் தேவர்கள்; வானவன் - சேர மன்னன்; விசும்பு - வானம்; விசும்பில் எழுதப்படும் வில் மழைக்காலத்தில் தோன்றும் வானவில். தற்குறிப்பேற்ற அணி. அரும்பவிழ் தார்க்கோதை அரசெறிந்த ஒள்வேல் பெரும்புலவும் செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு வண்டாடு பக்கமும் உண்டு குறுநரி கொண்டாடு பக்கமும் உண்டு. 18 இதுவும் சேர மன்னனின் வீரச்சிறப்பும் வெற்றிச்சிறப்பும் கூறுவது. அன்றலர்ந்த மலர்மாலையணிந்த சேரன் பகையரசரை வென்றுகொண்ட ஒளிபொருந்திய வேலாயுதம் ஒருபக்கம் புலால் நாற்றமும் ஒருபக்கம் குங்குமம் கலந்த சந்தனத்தின் நறுமணமும் கலந்து விளங்குகின்றது. எனவே, அவ்வேலின்கண் நறுமணத்தை நாடிச் சுரும்புகளும் வண்டுகளும் மொய்க்கின்ற பக்கமும் உண்டு; புலாலை விரும்பிச் சிறு நரிகள் கொண்டாடும் பக்கமும் உண்டு. சேரனது வேலின்கண் தோய்ந்துள்ள புலாலை நீக்குவதற்கும் நேரமின்றி வெற்றி கொண்டாடப்படுகின்றது; அக்கொண்டாட்டம் நடைபெறும்போதே மீண்டும் அவ்வேல் போர்முனைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. இடைவிடாது சேரன் போருடற்றி வென்று வருகிறான் என அவனது வீரமிகுதி கூறப்பட்டுள்ளது. ஒள்வேல் - ஒளிபடைத்த வேல். வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப் பாற எறிந்த பரிசயத்தால் - தேறாது செங்கண்மாக் கோதை சினவெங் களியானை திங்கள்மேல் நீட்டுந்தன் கை. 19 இது யானைமறம் கூறுவது. சிவந்த கண்களையுடைய பெருமைமிக்க சேர மன்னனது, சினத்தையும் கொடிய கள்ளுண்டு களித்தலையும் உடைய யானை, ஆற்றல் பொருந்திய பகையரசர்களது விரிந்த, மாலை சூட்டிய, வெண்கொற்றக் குடைகளைப் பறித்து அவை அழிந்துபடுமாறு வீசி எறிந்த பழக்கத்தால் வெண்ணிறத்தையும் வட்ட வடிவத்தையும் கொண்டு வானில் வலம்வரும் முழுநிலவையும் - நிலவு வேறு, குடை வேறு என்று தெளியாது - பகையரசரின்வெண்கொற்றக்குடையென்று கருதி அதனைப் பறித்து எறியும்பொருட்டு அந்நிலவை நோக்கித் தன் கையை நீட்டுகிறது. இது தற்குறிப்பேற்ற அணி. வீறு - பெருமை, ஆற்றல், வலிமை; சால் - சான்ற - பொருந்திய; உரிச்சொல் தொடர்; தாம்ம் - மலர்மாலை; பாற - அழியுமாறு, “பழவினைகள் பாறும்வண்ணம்” (திருவாசகம்); பரிசயம் - பரிச்சயம் - பழக்கம்; களியானை - கள்ளுண்டு களித்த யானை. அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர் எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டால் பனிக்கடலுள் பாய்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான் காய்சினதேர்க் கோதை களிறு. 20 இதுவும் யானைமறம் கூறியது. பகைவரை வருத்தும் சினத்தையும் தேரையும் உடைய எம் தயலைவனாகிய சேரமன்னனது ஆண்யானை, வலிமையுடைய பகையரசர்களது கோட்டைமதிலின் இரும்புக்கதவுகளின்மீது பாய்ந்து நொறுக்கி அக்கதவினைத் தன் தந்தங்களால் தூக்கி உயர்த்திக் கொண்டு நிற்கும் காட்சி, குளிர்ந்த கடலின் நடுவே பாய்விரித்து நிற்கும் மரக்கலம் போலத் தோன்றுகிறது . அயில் - இரும்பு; எயில் - கோட்டைமதில்; கோடு - தந்தம்; பனி - குளிர்ச்சி; நாவாய் - மரக்கலம். == சேரன் 21-32 == மரகதப்பூண் மன்னவர் தோள்வளை கீழா வயிரக் கடகக்கை வாங்கித் - துயருழந்து புண்ணுற் றழைக்கும் குறுநரித்தே பூழியனைக் கண்ணுற்று வீழ்ந்தார் களம். 21 இப்பாடல் போர்க்கள இயல்பு கூறுவது. சேரனை எதிர்த்துப் போரிட்டு மாண்டுகிடக்கும் பகைவர்களது போர்க்களம், மரகத அணிகலன்களை அணிந்த மன்னர்களின் தோள்வளைகளுக்குக் கீழாக உள்ள உறுதியான கடகம் அணிந்த கைகளைக் கடித்து அதனால் புண்பட்ட வாயோடு ஊளையிடும் சிறுநரிக் கூட்டங்களையுடையதாய் விளங்குகிறது. வயிரம் - உறுதி; நவரத்தினங்களுள் ஒன்று எனலுமாம். கடகம் - முன்கையில் அணியும் அணி; தோள்வளை - தோளில் (புயத்தில்) அணியும் வளை; வாங்குதல் - கடித்தல். கரிபரந் தெங்கும் கடுமுள்ளி பம்பி நரிபரந்து நாற்றிசையுங் கூடி - எரிபரந்த பைங்கண்மால் யானைப் பகையடுதோள் கோதையைச் செங்கண் சிவப்பித்தார் நாடு. 22 இது சேரனது பகைவர் நாட்டின் அவலம் கூறியது. பசிய கண்களையுடைய பெரிய யானைப்படைகளாகிய பகையை வென்ற தோள்களையுடைய சேரனின் சிவந்த கண்களை மேலும் சிவப்பித்த பகைவரது நாடு, நான்கு திசைகளிலும் நெருப்புப் பற்றி எரிந்து, புகையடர்ந்து, பொருள்களெல்லாம் கருகி, கூரிய முட்செடிகள் அடர்ந்து, நரிகள் நெருங்கி வாழும் பாழுங்காடாக விளங்குகிறது . முள்ளி - முட்செடி; கண்சிவப்பித்தல் - சினத்தையுண்டாக்குதல், சினத்தினால் கண் சிவத்தல் இயல்பு. வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத்து ஊரறிய லாகா கிடந்தனவே - போரின் முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான் நகையிலைவேல் காய்த்தினார் நாடு. 23 இதுவும் பகைவர்நாட்டின் அவலம் கூறியவாறு. மொட்டவிழ்ந்த மலர்மாலையணிந்தவனும் முசிறிநகர மக்களின் தலைவனும் ஆன சேரனது ஒளிபடைத்த இலைவடிவ வேலால் போரின்கண் துன்புறுத்தப்பட்ட பகைவரின் நாடு, வேரோடிய அறுகம்புல் அடர்ந்து, எங்கும் சுரைக்கொடிகள் படர்ந்து, வேளைக்கீரைகள் பூத்து, ஊர்கள் இருந்த இடங்கள் இவை என்றறிய இயலாதவாறு பாழ்பட்டுக் கிடந்தன. அறுகை - அறுகம்புல்; பம்பி - புதிராக அடர்ந்து; வேளை - காட்டுக்கீரை; முசிறி - சேர நாட்டுத் துறைமுக நகரம். . சோழன் 24 - 26 திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர் இறந்துபடின் பெரிதாம் ஏதம் - உறந்தையர்கோன் தண்ணார மார்பின் தமிழ்நர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு. 24 உறையூரின் மன்னவன் சோழன்; அவன் குளிர்ந்த மாலையணிந்த மார்பின்ன்; தமிழ்மக்களின் இறைவன்; அவன் நகர்வலம் வருகிறான். அதனைத் தங்கள் பெண்மக்கள் பார்க்க நேரின், அவன்பால் வேட்கைகொண்டு துன்புறுவர் எனக் கருதிய தாய்மார்கள் தந்தம் வீடுகளின் வாயிற்கதவுகளை அடைத்து வைக்கின்றனர். “நகர்வலத்தைக் காணவியலாத நங்கையர் ஏக்கத்தால் இறந்துவிடவும் கூடும். அவ்வாறாயின், அதனால் ஏற்படும் துன்பம் மிகப் பெரிதாம். எனவே, மங்கையர் சோழனைக் கண்ணாரக் கண்டு களிக்குமாறு கதவுகளைத் திறந்துவிடுங்கள்; அவ்வாறு காண்பதால் ஏதேனும் தீமை நேருமாயின் அதைப்பற்றிப் பின்னர் சிந்திக்கலாம்”, என்று சிலர் கூறுகின்றனர். ( சோழனது நகர்வலத்தைக் காணவியலாமையால் உயிரை இழப்பதைக் காட்டிலும் அதனைக் கண்டு மையல் கொள்வதால் ஏற்படும் தீமை பெரிதன்று, என்பது கருத்து.) ஏதம் - துன்பம். குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை வதுவை பெறுகென்றாள் அன்னை - அதுபோய் விளைந்தவா இன்று! வியன்கானல் வெண்தேர்த் துளங்குநீர் மாமருட்டி யற்று. 25 இப்பாடல் கைக்கிளை. என் அன்னை, நான் மழலை பேசும் சிறுமியாக இருந்த காலத்தில் சோழமன்னனை மணந்துகொள்ளும் பேற்றினை நான் பெறவேண்டும் என்று வாழ்த்தினாள். நான் மணப்பருவத்தையடைந்துள்ள இன்று, அக்கூற்றெல்லாம் மாறிப்போய் அவனைக் கண்ணால் காண்டலும் ஆகாது என்று வாயிற்கதவுகளை அடைத்து வைக்கிறாள். கடுங்கோடையில் தண்ணீர்போல் தோற்றமளித்து அருகில் சென்று பார்க்கும்போது மறைந்துவிடுவதாய் நீர்வேட்கை கொண்ட விலங்குகளை மயங்கச் செய்கின்ற பேய்த்தேர் போலாயிற்றே என் ஆசை! இப்பாடல் உவமையணி. குதலைப் பருவம் - மழலைமொழி பேசும் அறியாப் பருவம்; கோழிக்கோமான் - உறையூரின் மன்னனாகிய சோழன், ‘கோழி’ என்பது சோழர் தலைநகரமாகிய உறையூர்க்கு வழங்கிய மற்றொரு பெயர் ; வதுவை - திருமணம்; வியன் - பெரிய; கானல் - கோடைக்காலம் , பாலைநிலம் ; வெண்தேர் - பேய்த்தேர், கானல்நீர்; மா - விலங்கு, கால்நடைகள்; மருட்டுதல் - மயங்கச் செய்தல்; அற்று - போன்றது; ஏ - அசைச்சொல். சுடரிலைவேற் சோழன்தன் பாடல மேறிப் படர்தந்தான் பைந்தொடியார் காணத் - தொடர்புடைய நீர்வலை யிற்கயல் போல்பிற ழும்மேதம் சாலேக வாயில்தொறுங் கண். 26 ஒளிபடைத்த வேலையேந்திய சோழன் தன்பாடலம் என்னும் குதிரையின் மேலேறிப் பசிய வளையலணிந்த மகளிரும் காணுமாறு நகர்வலம் வந்தான் ; தத்தம் வீடுகள்தோறும். வலை பொருத்தப்பெற்ற சாளரங்களின்பின்னிருந்து அவனைக் காணும் மகளிரின் கண்கள், நீர்வலையில் மாட்டிக்கொண்டு பிறழ்கின்ற மீன்களைப் போலத் தோன்றுகின்றன. இதுவும் உவமை. பாடலம் - சோழனது குதிரையின் பெயர்; (பாண்டியனது குதிரை ‘கனவட்டம்’ என்றும் சேரனது குதிரை ‘கோரம்’ என்றும் வழங்கப்பெற்றன.) தொடி - வளையல்; கயல் - மீன்; சாலேகம் - சாளரம் , காலதர்; ‘பிறழுமே’ என்பது ‘பிறழும்மே’ என விரிந்துவந்தது விரித்தல் விகாரம். (அறுவகைச்செய்யுள் விகாரங்களுள் ஒன்று.) ஈற்றடி இரண்டாம் சீர் “வாயிறொறும்” எனப்புணர்த்துப் படிக்க, சீரும் தளையும் சிதையா. சோழன் 27-35== அன்னையுங் கோல்கொண் டலைக்கு மயலாரு மென்னை யழியுஞ்சொல் சொல்லுவர் - நுண்ணிலைய தெங்குண்ட தேரை படுவழிப் பட்டேன்யான் திண்டேர் வளவன் திறத்து.. 27 என் தாயும் என்னைக் கோலால் அடித்துத் துன்புறுத்துகிறாள்; அக்கம்பக்கத்தில் வாழ்வோரும் என் மானம் அழியுமாறு பழித்துப் பேசுகின்றனர்; வலிய தேரையுடைய சோழனிடம் மையல் கொண்டதால் நான், தெங்குண்ட தேரைபோலப் பழிப்பட்டேன். இது தலைவி கூற்று. அலைத்தல் - துன்புறுத்தல்; “தெங்குண்டதேரை” என்பது பழமொழி; தேங்காயில் நோய் ஏற்பட தேரை காரணமன்று, எனக்கு மையல்நோய் ஏற்பட நான் காரணம் ஆகேன், ( சோழனே காரணம்) ஆனால் உலகினர் தேரையைப் பழிப்பதுபோல என்னையும் பழிக்கின்றனர் எனத் தலைவி வருந்திக் கூறுகிறாள். தெங்கு - தேங்காய் . அலங்குதார்ச் செம்பியன் ஆடெழில்தோள் நோக்கி விலங்கியான் வேண்டா வெனினும் - நலந்தொலைந்து பீர்மேற் கொளலுற்ற பேதையர்க் கென்வாய்ச்சொல் நீர்மே லெழுந்த நெருப்பு. 28 இப்பாடல் செவிலித்தாய் கூற்று. தோளில் ஆடும் மாலையணிந்து செம்பியன் நகர்வலம் வந்தான்; அவனைச் சென்று காணவேண்டாம் என்று இளமங்கையரைச் செவிலித்தாய் தடுத்தாள்; அதனை மீறிச் சென்று, செம்பியனது வெற்றியும் அழகும் பொருந்திய தோள்களை நோக்கிய மகளிர் தம் நாணும் நிறையும் முதலிய நலங்களையும் தொலைத்து மேனியில் பசலை நோயையும் பெற்றுத் துன்புற்றனர். இப்பேதைப் பெண்களுக்கு என் வாய்ச்சொற்கள் நீர்மேல் பற்றிய நெருப்புப் போலப் பயன்படாது வீணாயிற்றே என்று செவிலித்தாய் வருந்திக் கூறுகிறாள். தார் - மலர்மாலை; செம்பியன் - சோழன்; ஆடு - வெற்றி; எழில் - அழகு; விலங்கி - வேறுபட்டு; பீர் - பசலை, மையல்நோயால் மகளிர் மேனியில் தோன்றும் நிறமாற்றம்; ‘ நீர்மேல் எழுந்த நெருப்பு ‘ என்பது பழமொழி. உவமையணி. நாணொருபால் வாங்க நலனொருபா லுள்நெகிழ்ப்பக் காமருதோள் கிள்ளிக்கென் கண்கவற்ற - யாமத் திருதலைக் கொள்ளியி னுள்ளெறும்பு போல திரிதரும் பேருமென் நெஞ்சு. 29 இது தலைவி கூற்று. கண்டார்க்கு விருப்பம் உண்டாக்கும் தோளையுடைய சோழனைக் காணவேண்டும்என என்கண்கள் கவலை கொள்ள, மகளிர்க்கேயுரிய நாணம் அவனைக் காணவிடாமல் என்னைத் தடுக்க, பெண்மைநலம் என்னுள்ளத்தை நெகிழச்செய்ய, இருதலைக் கொள்ளியின் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் சிற்றெறும்புபோல இந்த இரவுப்பொழுதில் என்னெஞ்சம் அவனைக் காணச் செல்வதும் காணாமல் திரும்புவதுமாகத் துன்புறுகிறது. ‘இருதலைக் கொள்ளி எறும்பு’ என்பது பழமொழி. கிள்ளியைக் காணவேண்டும் எனும் ஆசையாகிய எறும்பு, நாணம் ஒருபக்கமும் பெண்மைநலம் ஒருபக்கமும் தீப்பிழம்பாக நின்று தடுப்பதால் அவற்றினிடையே சிக்கிக்கொண்டு தவிக்கிறது; உவமையணி . கிள்ளி - சோழன். ஊட லெனவொன்று தோன்றி அவருறூஉங் கூட லிழந்தேன் கொடியன்னாய்! - நீடெங்கின் பாளையிற் றேன்தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக் காளையைக் கண்படையுட் பெற்று. 30 இதுவும் தலைவி கூற்று. பூங்கொடிபோன்ற என் தோழியே! உயரமான தென்னையின் பாளைகளில் தேனடைகள் உருவாகும் நீர்வளமிக்க சோழநாட்டின் தலைவனை நான் கனவின்கண் காணப்பெற்றேன்; அப்போது தோன்றிய ஊடலால் அவன்தோளையணைத்து மகிழும் கூடலையிழந்து விட்டேனே! கண்படை - கனவு; காளை - சோழன், உவமையாகுபெயர்; கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல்போனதுபோலக் கனவில்கண்ட காளையை அக்கனவில்கூடக் கூட இயலாமல் உடல் பிரித்துவிட்டதே என்று தலைவி வருந்திக் கூறியுள்ளாள். புலவி புறக்கொடுப்பன் புல்லிடின் நாண்நிற்பன் கலவி களிமயங்கிக் காணேன் - நிலவியசீர் மண்ணாளுஞ் செங்கோல் வளவனை யானிதன்றோ கண்ணாரக் கண்டறியா வாறு. 31 இதுவும் தலைவி கூற்று. சோழநாட்டைச் சிறப்போடு செங்கோலாட்சி செய்யும் சோழனை, நான் இன்றுவரை ஒருபொழுதும் கண்ணாரக் கண்டதில்லை ; ஏனெனில் , அவனோடு புலவி கொள்ளும்போது அவனுக்கு என்முதுகைக் காட்டித் திரும்பி நிற்பேன்; அவன் என் புலவியை நீக்க என்னைத் தழுவும்போது நாணத்தால் கண்களை மூடிக்கொள்வேன்; அவன் என்னோடு கலந்து உறவு கொள்ளும்போதோ மகிழ்ச்சியில் மயங்கிக் கிடப்பேன். புலவி - ஊடல்; புறம் - முதுகு; புல்லுதல் - கட்டியணைத்தல்; கலவி - கூடுதல் ; களி - மகிழ்ச்சி வளவன் - சோழன். கனவினுள் காண்கொடாக் கண்ணுங் கலந்த நனவினுள் விலக்கு நாணும் - இனவங்கம் பொங்கோதம் போழும் புகார்ப் பெருமானார் செங்கோல் வடுப்படுப்பச் சென்று. 32 இதுவும் தலைவி கூற்று. பொங்கிவரும் கடல்நீரைக் கிழித்துக்கொண்டு பலவகையான கப்பல்கள் வந்துசெல்லும் துறைமுகம் புகார் நகரம்; அதன் தலைவனாய்ச் செங்கோலாட்சி செய்பவன் சோழன்; அவனைக் கனவிலும் காணவிடாமல் உறங்காதிருக்கும் என் கண்களும் அவனோடு கலந்திருக்கும் நினைவுப்பொழுதில் முழுமையாய்க் கலந்திருக்கும் வாய்ப்பைக் கெடுக்கும் என் நாணமும் சென்று அவன் செங்கோலாட்சிக்குக் கறை (களங்கம்) ஏற்படுத்துகின்றன. வங்கம் -மரக்கலம் / கப்பல் ; ஓதம் - வெள்ளம் /கடல்அலை; போழும் - பிளந்துகொண்டு செல்லும்; புகார் - காவிரிப்பூம்பட்டினம், சோழர் துறைமுகம் ; வடுகர் - குற்றம், களங்கம். == சோழன் 36-40== ===36=== <poem>கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம் தண்டப் படுவ தடமென்தோள் – கண்டாய் உலாஅ மறுகில் உறையூர் வளவற் கெலாஅ முறைகிடந்த வாறு. – 36</poem> ::கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம் தண்டப் படுவ தடமென்தோள் கண்டாய் உலாஅ மறுகில் உறையூர் வளவற்கு எலாஅம் முறை கிடந்தவாறு. ::உறையூர் அரசன் வளவன். அவனைப் பார்த்தது என் மையுண்ட கண். அவனோடு கலந்தது என் நெஞ்சம். தண்டனை பெற்றதோ என் தோள் (தோள் வாடி என் வளையல்கள் கழன்றோடுகின்றன) வளவன் முறை செய்து நீதி வழங்குவது இப்படித்தான் முறைமாறிக் கிடக்கிறது. ===37=== <poem>என்னெஞ்சு நாணு நலனும் இவையெல்லாம் மன்னன் புனனாடன் வௌவினான் – என்னே அரவகல் அல்குலாய் ஆறில் ஒன் றன்றோ புரவலர் கொள்ளும் பொருள். – 37</poem> ::என் நெஞ்சு நாணும் நலனும் இவையெல்லாம் மன்னன் புனல் நாடன் வௌவினான் \ என்னே அரவு அகல் அல்குலாய் ஆறில் ஒன்று அன்றோ புரவலர் கொள்ளும் பொருள். ::என்னுடைய எண்ணம், நாணம், நலம் ஆகிய இவை எல்லாவற்றையும் காவிரி பாயும் புனல் நாட்டை ஆளும் சோழன் பிடுங்கிக்கொண்டான். பாம்புப்படம் போல விரிந்திருக்கும் அல்குல் கொண்ட என் தோழியே! வருவாயில் ஆறில் ஒரு பங்கைத்தானே காப்பாற்றும் மன்னவன் வரியாக வாங்கிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் பிடுங்கிக்கொள்ளலாமா? ===38=== <poem>தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி யிளவளவன் மண்ணகங் காவலனே யென்பரால் - மண்ணகங் காவலனே யானக்காற் காவானோ மாலைவாய்க் கோவலர்வாய் வைத்த குழல். – 38</poem> ::தெள் நீர் நறு மலர்த் தார்ச் சென்னி இள வளவன் மண்ணகம் காவலனே என்பரால் \ மண்ணகம் காவலனே ஆனக்கால் காவானோ மாலைவாய்க் கோவலர் வாய் வைத்த குழல். ::சென்னி இளவளவன் கழுத்திலே மாலை அணிந்தவன். அது தெளிந்த நீரிலே பூக்கும் மணம் மிக்க பூவாலானது. இந்த வளவனை மண்ணுலகைக் காக்கும் காவலன் என்கின்றனர். உண்மையில் அவன் மண்ணுலகைக் காக்கும் காவலன் ஆனால், மாலைக்காலத்தில் ஆனிரைகளுடன் இல்லம் திரும்பும் கோவலர் ஊதும் குழல் என் தனிமையைத் துன்புறுத்துகிறதே அதைத் தடுத்திருக்க வேண்டாமா? ===39=== <poem>அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி முறைசெயும் என்பரால் தோழி – இறையிறந்த அங்கோல் அணிவளையே சொல்லாதோ மற்றவன் செங்கோன்மை செந்நின்ற வாறு. – 39</poem> ::அறை பறை யானை அலங்கு தார்க் கிள்ளி முறைசெயும் என்பரால் தோழி \ இறை இறந்த அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன் செங்கோன்மை செம்மை நின்றவாறு. ::கழுத்தில் மாலை அணிந்துகொண்டு கிள்ளி பறை முழக்கத்துடன் யானைமேல் வருகிறான். அவனைப் பார்த்ததும் என் தோளிலிருந்த வளையல்கள் நழுவிக் கீழே இறங்குகின்றன. தோழி! கிள்ளி நீதி தவறாமல் முறை செய்பவன் என்கின்றர். என் தோளிலிருந்து நழுவும் வளையல் அவன் எத்த அளவில் செங்கோல் செலுத்துகிறான் என்பதைச் சொல்கிறதே! ===40=== <poem>நீள்நீலத் தார்வளவன் நின்மேலான் ஆகவும் நாணிமை யின்றி நடத்தியால் – நீள்நிலம் கண்தன்மை கொண்டலரும் காவிரி நீர்நாட்டுப் பெண்தன்மை இல்லை பிடி. – 40</poem> ::நீள் நீலத் தார் வளவன் நின்மேலான் ஆகவும் நாணிமை இன்றி நடத்தியால் நீள் நிலம் கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர்நாட்டுப் பெண்தன்மை இல்லை பிடி. ::அடி! பெண்யானையே! வளவன் ஒரு ஆண். அவன் உன்மேல் இருக்கிறான். அவனைச் சுமந்துகொண்டு, வெட்கம் இல்லாமல் வருகிறாயே! காவிரி நாட்டுப் பெண்-தண்மை உனக்கு இல்லை. நீல மலரால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலையை வளவன் அணிந்துகொண்டு வருகிறான். கண்ணோட்டம் கொண்டு உலகைக் காத்து மலரும் நாடு காவிரியாறு பாயும் நாடு. ==சோழன் 41-45== ===41=== <poem>செங்கால் மடநாராய் தென்னுறந்தை சேறியேல் நின்கால்மேல் வைப்பன்என் கையிரண்டும் – நன்பால் கரைஉரிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற் குரையாயோ யானுற்ற நோய். – 41</poem> [மடம் = சேறி = செல்லுதி, செல்கிறாய், செல்வாய்; சேறியேல் = செல்வாயேல், செல்வாயானால்; வைப்பந் = வைப்பேன், வைக்கிறேன்; பால் = இடம்; உரிஞ்சு = தேய்] :: பொருள்கோள்: செங்கால் மடநாராய் தென் உறந்தை சேறியேல், நின் கால்மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால் கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரிநீர் நாடற்கு யான் உற்ற நோய் உரையாயோ? ::சிவந்த கால்களையும், கள்ளம் கபடமற்ற தன்மையையும் உடைய நாரையே! நீ பறந்து செல்லும்போது தென்பால் உள்ள உறையூருக்குச் செல்வாயேயானால், உன் கால்மேல் என் கைகள் இரண்டையும் வைக்கிறேன். நல்ல இடங்களையுடைய ஆற்றங்கரைகளையே தேய்த்து மீன்கள் துள்ளும் காவிரிநீர் கொண்ட சோழனாகிய காவிரி நாடனுக்கு, அவன்மேற்கொண்ட காதலால் நானுற்ற துயரைச் சொல்லமாட்டாயா?. ===42=== <poem>வரக்கண்டு நாணாதே வல்லையா னெஞ்சே மரக்கண்ணோ மண்ஆள்வார் கண்ணென் – றிரக்கண்டாய் வாள்உழுவை வெல்கொடியான் வண்புனல்நீர் நாடற்கென் தோள்அழுவம் தோன்றத் தொழுது. – 42</poem> ::வரக்கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே மரக்கண்ணோ மண்ஆள்வார் கண் என்று இரக்கண்டாய் வாள் உழுவை வெல்கொடியான் வண் புனல்நீர் நாடற்கு என் தோள் அழுவம் தோன்றத் தொழுது. ::வெல்லும் புலிக்கொடியான், வளமையான ஆற்றுப்புனல் பாயும் நாடன், சோழன் உலா வரக் கண்டு, பெண்மை உணர்வோடு நாணியிருக்க உன்னால் முடியுமா? முடியாதே. அதனால், நெஞ்சே! நாணாமல் அவனைக் கண்டு இர. உன் கண் என்ன மரத்தாலான கண்ணா (இரக்கம் இல்லாத கண்ணா) என்று கேட்டு இர (கண்ணோட்டத்துடன் இரக்கம் காட்டும்படிப் பிச்சை கேள்) | வாள் உழுவை = கண்ணைக் கவரும் ஒளி மிக்க புலி. ===43=== <poem>பேயோ பெருந்தண் பனிவாடாய் பெண்பிறந்தா ரேயோ உனக்கிங் கிறைக்குடிகள் – நீயோ களிபடுமால் யானைக் கடுமான்தேர்க் கிள்ளி அளியிடை அற்றம்பார்ப் பாய். – 43</poem> ::பேயோ பெருந்தண் பனிவாடாய் பெண் பிறந்தாரேயோ உனக்கு இங்கு இறைக் குடிகள் நீயோ களி படு மால் யானைக் கடுமான் தேர்க் கிள்ளி அளி இடை அற்றம் பார்ப்பாய். ::பனிக் காலத்தில் பெருங் குளிருடன் வீசும் வாடைக் காற்றே! நீ என்ன பேயோ? கிள்ளி எனக்கு அளி செய்கிறான். அவன் எப்போது அரவணைப்பிலிருந்து விலகுவான் என்று பார்த்து வீசி என்னை ஆட்டிவைக்கிறாய். சோழனை இறைவனாகக் கொண்ட குடிமக்கள் மீது வீசுகிறாய். | கிள்ளி களிப்பூட்டும் யானை மீதும் வருகிறான். குதிரை பூட்டிய தேரிலும் வருகிறான். ===44=== <poem>நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத் தாமரையும் நீலமுந் தைவந் – தியாமத்து வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய் பண்டன்று பட்டினங் காப்பு. – 44</poem> ::நாம நெடு வேல் நலங்கிள்ளி சோணாட்டுத் தாமரையும் நீலமும் தைவந்து யாமத்து வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய் பண்டு அன்று பட்டினம் காப்பு. ::நலங்கிள்ளி அச்சம் தரும் வேலை உடையவன். அவனது சோழநாட்டில் வண்டு ஒன்று நள்ளிரவில் தாமரையிலும், நீல மலரிலும் தேனை உண்டு தடவிக்கொடுத்துவிட்டு வருகிறது. குளிரும் வாடைக்காற்றே! நலங்கிள்ளி காவிரிப்பூம் பட்டினத்தைக் காப்பாற்றும் செயல் பண்டுபோல் எல்லாருக்கும் பாதுகாப்புத் தருவதாக இல்லை. எனவே நீ இங்கு வரவேண்டாம். | வாடைக்காற்று வீசாமல் இருக்கவேண்டும் என்று நயமாக வேண்டுகிறாள். ===45=== <poem>தானைகொண் டோடுவ தாயதன் செங்கோன்மை சேனை யறியக் கிளவேனோ – யானை பிடிவீசும் வண்தடக்கைப் பெய்தண்தார்க் கிள்ளி நெடுவீதி நேர்பட்ட போது. – 45</poem> ::தானை கொண்டு ஓடுவதாய தன் செங்கோன்மை சேனை அறியக் கிளவேனோ யானை பிடி வீசும் வண் தடக்கைப் பெய் தண்தார்க் கிள்ளி நெடு வீதி நேர்பட்ட போது. ::ஆண் பெண் யானைகளை வளமாகத் தரும் கொடையாளி கிள்ளி. மாலை சூடிய அந்தக் கிள்ளி உலா வரும்வோது அவனை நீண்ட வீதியில் கண்டதும் என் சேலை நழுவியது. இப்படி நழுவச் செய்துவிட்டு அவன் ஓடும் செங்கோன்மையை அவன் படைகளெல்லாம் அறியுமாறு எடுத்துச் சொல்லாமல் இருப்போனா? ==சோழன் 46-50== ===46=== <poem>காவல் உழவர் களத்தகத்துப் போர்ஏறி நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை – காவலன்தன் கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே நல்யானைக் கோக்கிள்ளி நாடு. – 46</poem> ::காவல் உழவர் களத்தகத்துப் போர் ஏறி நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன் தன் கொல் யானை மேல் இருந்து கூற்று இசைத்தால் போலுமே நல் யானைக் கோக்கிள்ளி நாடு. ::உலகைக் காப்பாற்றும் உழவர்கள் தம் நெற்களத்தில் உள்ள போரின்மீது ஏறி “நாவலோ” என்று காலை நேரத்தில் ஓசை எழுப்பினால் எப்படியோ அப்படித்தான் இருக்கிறது, நாட்டைக் காப்பாற்றும் மன்னவன் கொல்லும் போர்யானைமேல் (எருமைக் கடா) இருந்துகொண்டு கூற்றுவன் “வாருங்கள்” என்று இசைமுழக்கம் செய்வது. இதுதான் இன்றைய கிள்ளிநாட்டு ஆட்சி நிலைமை. \ தன்னிடம் நெல் இருக்கிறது என்று கூவவேண்டிய உழவன் நாவல்பழம் பறிக்க வாருங்கள் என்று கூவும் கொடுமை கிள்ளியின் நாட்டில் இருக்கிறது. \ காப்பாற்ற வேண்டிய கிள்ளி, கொல்கிறேன் வாருங்கள் என்பவன் போல் உலா வருகிறான். ===47=== <poem>மாலை விலைபகர்வார் கிள்ளி களைந்தபூச் சால மருவியதோர் தன்மைத்தால் – காலையே வில்பயில் வானகம் போலுமே வெல்வளவன் பொற்பார் உறந்தை அகம். – 47</poem> ::மாலை விலைபகர்வார் கிள்ளி களைந்த பூச் சால மருவியது ஓர் தன்மைத்தால் காலையே வில் பயில் வானகம் போலுமே வெல் வளவன் பொன் பார் உறந்தை அகம். ::கிள்ளி காலையில் பூமாலை சூடிக்கொண்டு உலா வருகிறான். காலையிலேயே வானவில் போட்டுக்கொண்டிருக்கும் வானம் போல் அவன் தோன்றுகிறான். மாலையில் அவன் கழற்றி எறிந்த பூவை விலைக்கு விற்கின்றனர். அவன் மலையை அதிகம் பேர் விரும்பினார்கள் என்பதற்காக விற்கின்றனர். மாலையில் விற்கும் வெற்று மாலையால் என்ன பயன்? – அவள் கேட்கிறாள். \ பொற்பார் உறந்தை = பொன் விளையும் மண் கொண்ட உறையூர் ===48=== <poem>மந்தரங் காம்பாய் மணிவிசும் போலையாத் திங்கள் அதற்கோர் திலதமா எங்கணும் முற்றுநீர் வைய முழுதும் நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை. 48</poem> ::மந்தரம் காம்பாய் மணி விசும்பு ஓலையாத் திங்கள் அதற்கு ஓர் திலதமா எங்கணும் முற்று நீர் வையம் முழுதும் நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை. ::கிள்ளியின் வெண்கொற்றக் குடைக்கு மந்தர-மலை காம்பு. நீலநிற வானம் குடையில் விரிந்திருக்கும் ஓலை. வானத்து நிலா அந்தக் குடையின் உள்முகட்டில் இருக்கும் நெற்றிப்பொட்டு. இப்படி இருந்துகொண்டு உலகம் முழுவதற்கும் நிழல் தந்து அந்தக் குடை காப்பாற்றுகிறது. அது சரி. என்னை மட்டும் ஏங்கவைக்கிறது. இது கொடுமை. ===49=== <poem>அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார் – எந்தை இலங்கிலைவேற் கிள்ளி இரேவதிநாள் என்னோ சிலம்பிதன் கூடிழந்த வாறு. – 49</poem> ::அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ சிலம்பி தன் கூடு இழந்தவாறு. ::கிள்ளி இரேவதி நாளில் பிறந்தான். அவனுக்குப் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம். அன்று அந்தணர்கள் பசு, பொன் ஆகியவற்றைத் தானமாகப் பெற்றனர். நாவண்மை உடைய பாவலர் மலை போல் உயர்ந்த களிறு வழங்கப்பபட்டு அதில் ஊர்ந்தனர். ஆனால் சிலந்திப் பூச்சி மட்டும் தன் கூட்டை இழந்தது. அது ஏன்? இது முறை ஆகுமா? | (பொங்கல் நாள் அன்று பழம்பொருள்களைத் துடைத்துத் தூய்மை செய்வது போல் மன்னன் பிறந்த நாளிலும் அரண்மனை ஒட்டடை துடைத்துத் தூய்மை செய்யப்பட்டது. அப்போது சிலந்திப் பூச்சி தன் கூட்டை இழந்தது) | பிறந்த நாளில் கிள்ளி உலா வந்தான். அவனைக் கண்ட சிலம்பி என்னும் பெண் மட்டும் தன் கூடாகிய உடல் நலத்தை இழந்தாள். இதுவா அவன் தரும் பிறந்தநாள் கொடை? – அவள் வினா. ===50=== <poem>நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து முன்றந்த மன்னர் முடிதாக்க – இன்றுந் திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே பெருந்தண் உறந்தையார் கோ. – 50</poem> ::நின்றீமின் மன்னீர் நெருநல் திறை கொணர்ந்து முன் தந்த மன்னர் முடி தாக்க இன்றும் திருந்து அடி புண்ணாகிச் செவ்வி இலனே பெரும் தண் உறந்தையார் கோ. ::மன்னர்களே! சற்றே நில்லுங்கள். நேற்று, திறை தந்த மன்னர்கள் வணங்கியபோது அவர்களின் முடி தாக்கி உறையூர் மன்னன் காலடி புண்ணாகிக் கிடக்கிறது. அதனால் இன்று அவன் காட்சி தரவில்லை. அவன் பெருமையும் ஈரமும் கொண்டவன். ==சோழன் 51-56== ===51=== <poem>கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர் முடியிடறித் தேய்ந்த நகமும் – பிடிமுன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே கல்லார்தோட் கிள்ளி களிறு. – 51</poem> ::கொடி மதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர் முடி இடறித் தேய்ந்த நகமும் பிடி முன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே கல் ஆர் தோள் கிள்ளி களிறு. ::கல்மலை போன்ற தோள் கொண்டவன் கிள்ளி. அவனது ஊர்தி ஆண்யானை. அது அவனது பறைவரின் கோட்டை மதில்களைப் பாய்ந்து இடித்தது. அதனால் அதன் தந்தங்களின் நுனி முறிந்து போயிற்று. போரில் விழுந்த மன்னர்களின் தலைமுடியை (கிரீடத்தை) இடறி அதன் கால்நகங்கள் தேய்ந்து போயின. இவற்றைத் தன் பெண்யானைக்குக் காட்டுவதற்கு நாணிக் கட்டுத்தறியின் புறக்கடையிலேயை அந்த ஆண்யானை தயங்கிக்கொண்டு நின்றது. ===52=== <poem>கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால் தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் – பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமேநங் கோழியர்கோக் கிள்ளி களிறு. – 52</poem> ::கச்சி ஒருகால் மிதியா ஒரு காலால் தத்து நீர்த் தண் உஞ்சை தான் மிதியாப் பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமே நம் கோழியர் கோக் கிள்ளி களிறு. ::கிள்ளி அரசன், கோழி என்னும் உறையூர் மக்களின் தலைவன். அவன் போரிட்டபோது அதன் நான்கு கால்களும் நான்கு இடங்களை மிதித்துக்கொண்டிருந்தது. உறையூர், காஞ்சிபுரம், உஞ்சை (உஜ்ஜயினி), ஈழம் (இலங்கை) ஆகியவை அந்த ஊர்கள். ===53=== <poem>பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர நாற்றிசையும் ஓடி நரிகதிப்ப – ஆற்ற அலங்கலம் பேய்மகளிர் ஆட வருமே இலங்கிலைவேற் கிள்ளி களிறு. – 53</poem> ::பாறு இனம் ஆர்ப்பப் பருந்து வழிப் படர நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற அலங்கல் அம் பேய் மகளிர் ஆட வருமே இலங்கு இலை வேல் கிள்ளி களிறு. ::இலை உருவில் ஒளிறும் வேலேந்திய கிள்ளியின் களிறு போர்க்களத்தில் பெருமித நடை போட்டுக்கொண்டு வரும். அப்போது புலால் உண்ணும் பறவைகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும். பருந்துகள் அந்த ஆண்யானையைப் பின்தொடரும். நரிகள் நாலாப்பக்கமும் ஓடித் திரியும். அணிகலன்களைப் பெருமையாக ஆட்டிக்கொண்டு பேய்மகளிர் ஆடுவர். காரணம் எங்கும் பிணம். பிணங்களுக்கு இடையே அந்தக் களிறு வரும். ===54=== <poem>முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத் தடித்த குடர்திரியா மாட்டி – எடுத்தெடுத்துப் பேஎய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன் சேஎய் பொருத களம். - 54</poem> ::முடித்தலை வெள்ளோட்டு மூளை நெய்யாகத் தடித்த குடர் திரியா மாட்டி எடுத்து எடுத்துப் பேஎய் விளக்கு அயரும் பெற்றித்தே செம்பியன் சேஎய் பொருத களம். ::செம்பியன் போரிட்ட களத்தில் பேய் விளக்கு வைத்திருந்தது. மன்னரின் தலைமண்டை விளக்கின் ஓடு. அவர்களின் மூளை நெய். அவர்களின் குடல் திரி. இப்படிப் பேய்கள் விளக்கு வைத்து (கார்த்திகை) விழாக் கொண்டாடின. ===55=== <poem>இரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற வரியிளஞ் செங்காற் குழவி – அரையிரவில் ஊமந்தா ராட்ட உறங்கிற்றே செம்பியன் தன் நாமம்பா ராட்டாதார் நாடு. – 55</poem> ::இரியல் மகளிர் இலை ஞெமலுள் ஈன்ற வரி இளம் செங்கால் குழவி அரை இரவில் ஊமம் தாராட்ட உறங்கிற்றே செம்பியன் தன் நாமம் பாராட்டாதார் நாடு. – 55 ::செம்பியனின் பெயரைப் பாராட்டாவர் நாட்டில் உறக்கம். வீட்டை விட்டு ஓடிப் பிழைத்திருக்கும் மகளிர் உதிர்ந்து கிடக்கும் இலைச் சறுகுகளில் குழந்தைகளைப் பெற்றனர். நள்ளிரவில் கோட்டான் அந்தக் குழந்தைகளுக்குத் தாலாட்டுப் பாடியது. இப்படி அவலநிலை. ===56=== <poem>அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர் எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டால் – பனிக்கடலுள் பாய்ந்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான் காய்சினவேல் கிள்ளி களிறு. 56 </poem> ::அயில் கதவம் பாய்ந்து உழக்கி ஆற்றல் சால் மன்னர் எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனிக் கடலுள் பாய்ந்து ஓய்ந்த நாவாய் போல் தோன்றுமே எங்கோமான் காய் சின வேல் கிள்ளி களிறு. ::கிள்ளியின் யானை கடலில் செல்லும் நாவாய்க் கப்பல் போலத் தோன்றுகிறது. எப்படி? நாவாய் கடலில் பாயும். களிறு வேல் தாங்கிய கோட்டைக் கதவுகளின் மீது பாய்ந்து அழிக்கிறது. நாவாய் பாய்மரம் கொண்டிருக்கும். களிறு கோட்டைக் கதவைப் பெயர்த்துத் தூக்கிக் கொம்பில் வைத்துக்கொண்டு வருகிறது. அதனால் களிறு கப்பல் போல் தோன்றுகிறது. (குறிப்பு: இதே பாடல் சேரனைப் பற்றிய பாடல்களுள் 20ஆம்எண் பாடலாகவும் அமைந்துள்ளது. அதில் ஈற்றடி “காய்சினத்தேர்க் கோதை களிறு” எனவும் இதில் “காய்சினவேற் கிள்ளி களிறு” எனவும் உள்ளன. இஃது ஆயவுக்குரியது. இப்பாடலின் அடி 3இன் முதற்சீர் “பாய்தோய்ந்த” என்றிருத்தல் சிறப்பு; இப்பாடலைப் பதிவு செய்து உரையெழுதியவர் “பாய்ந்தோய்ந்து” என்று பாடங்கொண்டுள்ளார் .)-சேரன். ==பாண்டியன் 57-60 == ===57=== <poem>காப்படங்கென் றன்னை கடிமனை யிற்செறித்து யாப்படங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன் நன்னலம் காணக் கதவம் துளைதொட்டார்க் கென்னைகொல் கைம்மா றினி. – 57</poem> ::காப்பு அடங்கு என்று அன்னை கடி மனையில் செறித்து யாப்பு அடங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன் நல் நலம் காணக் கதவம் துளை தொட்டார்க்கு என்னைகொல் கைம்மாறு இனி. ::கடுங்கோன் உலா வந்தான். அவனை நான் காணக்கூடாது என்று, “உன்னைக் காப்பாற்றிக்கொண்டு அடங்கு” என்று சொல்லி அன்னை என்னை இல்லத்தில் செறிவாக அடைத்துவைத்தாள். உள்ளேயும் ஓடியாட முடியாமல் கட்டியும் போட்டாள். ஆனால் கதவிலே முன்பே துளை ஒன்று போட்டுவைத்திருந்தார்கள். (அது வெளியே இருப்பவர் யார் என்று பார்க்க உதவும் கதவுக்கண்.) அது அவன் நல்லழகையெல்லாம் காணும் வகையில் அமைந்திருந்தது. இப்படிக் கதவுக்கண் ஓட்டை போட்டு வைத்திருக்கிறார்களே, அவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன். – அவள் கூறுகிறாள். | கடுங்கோ = சேரன் | கடுங்கோன் = பாண்டியன். ===58=== <poem>வளையவாய் நீண்டதோள் வாட்கணாய் அன்னை இளையளாய் மூத்திலள் கொல்லோ – தளையவிழ்தார் மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக் கண்கொண்டு நோக்கல்என் பாள். – 58</poem> ::வளையவாய் நீண்ட தோள் வாள் கணாய் அன்னை இளையளாய் மூத்திலள் கொல்லோ தளையவிழ் தார் மண் கொண்ட தானை மறம் கனல் வேல் மாறனைக் கண்கொண்டு நோக்கல் என்பாள். ::வளையல் அணிந்த நீண்ட தோளும், வாள் போன்ற கண்ணும் கொண்ட தோழியே! அன்னை இளையவளா? மூத்தவளா? மூத்தவளாக இருந்தும் இளையவளாக இருக்கிறாளே! சிறுபிள்ளைத் தனமாய் நடந்துகொள்கிறாளே! மாறன் உலா வருவதைக் கண்கொண்டு பார்க்கக்கூடாது என்கிறாளே. பூக்கும் மலர்மாலை அணிந்துகொண்டு, பகைவரைக் கைப்பற்றிய படையோடு, வீரம் வெளிப்படும் வேல் ஏந்திய கோலத்துடன் வருகிறானே. அவன் மாலையையாவது, படையையாவது, வேலையாவது நான் பார்க்கக்கூடாதா? ===59=== <poem>கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென வேட்டங்குச் சென்றெவன் நெஞ்சறியாள் - கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை வெறுங்கூடு காவல்கொண் டாள். – 59</poem> ::கோள் தெங்கு சூழ் கூடல் கோமானைக் கூட என வேட்டு அங்குச் சென்ற எவன் நெஞ்சு அறியாள் கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை வெறுங்கூடு காவல் கொண்டாள். ::கொழுத்த தென்னைமரம் சூழ்ந்திருக்கும் ஊர் கூடல் நகரம். அவன் இந்தக் கூடல் அரசன். அவனை விரும்பி என் நெஞ்சு சென்றுவிட்டது. இது அன்னைக்குத் தெரியவில்லை. வெறும் உடம்புக் கூட்டுக்குக் காவல் போட்டிருக்கிறாள். | குறும்பூழ் = காடை என்னும் பறவை. | காடை பிடிக்கும் வேடன் வலையை விரித்து வைப்பான். அதன் அருகில் தான் பழக்கி வைத்திருக்கும் பெண்-காடையைப் பறக்க விடுவான். அது ஆண்-காடையை அழைத்துவந்து கூட்டில் விழச்செய்யும். அன்னை அப்படிச் செய்கிறாளே! ===60=== <poem>களியானைத் தென்னன் இளங்கோவென் றெள்ளிப் பணியாரே தம்பார் இழக்க – அணியாகங் கைதொழு தேனும் இழக்கோ நறுமாவின் கொய்தளிர் அன்ன நிறம். – 60</poem> ::களி யானைத் தென்னன் இளங்கோ என்று எள்ளிப் பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் கை தொழுதேனும் இழக்கோ நறு மாவின் கொய் தளிர் அன்ன நிறம். ::களிப்புக் கொண்ட யானைமேல் வருபவன் தென்னன். அவன் இளையவன், எளிதாக வென்றுவிடலாம் என்று ஏளனமாகப் பேசிக்கொண்டு அவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் தன் நாட்டை இழந்தனர். அது சரி. நான் தென்னனைத் தொழுதேன். ஆனால் என் மாந்தளிர் போன்ற மேனி அழகை இழந்துவிட்டேனே! இது சரியா? ==பாண்டியன் 61-65== ===61=== <poem>வழுவில்எம் வீதியுள் மாறன் வருங்கால் தொழுதேனைத் தோள்நலமுங் கொண்டான் – இமிழ்திரைக் கார்க்கடற் கொற்கையார் காவலனுந் தானேயால் யார்க்கிடுகோ பூசல் இனி. – 61</poem> ::வழு இல் எம் வீதியுள் மாறன் வருங்கால் தொழுதேனைத் தோள் நலமும் கொண்டான் இமிழ் திரைக் கார்க் கடல் கொற்கையார் காவலனுந் தானேயால் யார்க்கு இடுகோ பூசல் இனி. ::மாறன் குறையில்லாத என் வீதியில் உலா வந்தான். அப்போது நான் அவனைத் தொழுதேன். அவன் என் தோள்-அழகை வாங்கிக்கொண்டான். திறையாக வாங்கிக்கொண்டான். நான் அவன் கொற்கை நகரில் வாழும் அவனது குடிமகள். எனக்குக் காவலன் அவன்தான். அவனே இந்தக் கொடுமையைச் செய்தால் நான் யாரிடம் சென்று முறையிட்டுக்கொள்வேன்? ===62=== <poem>தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும் வானேற்ற வையகம் எல்லாமால் – யானோ எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர்ந்தண்தார் மாறன் அளியானேல் அன்றென்பார் ஆர். – 62</poem> ::தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும் வான் ஏற்ற வையகம் எல்லாமால் யானோ எளியேன் ஓர் பெண் பாலேன் ஈர்ம் தண் தார் மாறன் அளியானேல் அன்று என்பார் ஆர். ::மாறன் தான், தன் ஒப்புயர்வற்ற வெண்கொற்றக் குடையால் குடிமக்களுக்கு நிழல் தருபவன். வானுலகைத் தாங்கும் வையகத்தைக் காப்பவன். அவன் அப்படி. யானோ எளியவள். அதிலும் ஒரு பெண். அளி(இரக்கம்) தந்து காப்பாற்றப்பட வேண்டியவள். இந்த உண்மையை அன்று என்று சொல்பவர் ஆர்? அப்படி இருக்க அவன் எனக்கு அளி(இரக்கம்) செய்து காப்பாறவில்லையே!. ===63=== <poem>மன்னுயிர் காதல் தனதான அவ்வுயிருள் என்னுயிரும் எண்ணப் படுமாயின் – என்னுயிர்க்கே சீரொழுகு செங்கோற் செழியற்கே தக்கதோ நீரொழுகப் பாலொழுகா வாறு. – 63</poem> ::மன் உயிர் காதல் தனது ஆன அவ் உயிருள் என் உயிரும் எண்ணப்படும் ஆயின் என் உயிர்க்கே சீர் ஒழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ நீர் ஒழுகப் பால் ஒழுகாவாறு. ::செழியன் நிலைபெற்ற உயிரினம் எல்லாவற்றின் மீதும் காதலன்பு கொண்டவன். அந்த உயிரினங்களில் என் உயிரும் ஒன்றாக எண்ணப்படுமாயின், என்மேல் செங்கோல் ஆட்சி செய்யவில்லையே! எதுவா அவன் சீர்மை? * பச்சைமண் பாண்டத்தில் பாலை ஊற்றிவைத்தால் அதில் உள்ள நீர் கசிந்து ஒழுகுகிறது. பால் கசிந்து ஒழுகவில்லை. இது என்ன விந்தை! * அவன் நீர்மை எல்லா உயிரினங்கள் மாட்டும் பாய்கிறது. அவன் பாலுணர்வு அப்படிப் பாயவில்லையே. ===64=== <poem>புகுவார்க் கிடங்கொடா போதுவார்க் கொல்கா நகுவாரை நாணி மறையா – இகுகரையின் ஏமான் பிணைபோல நின்றதே கூடலார் கோமான்பின் சென்றவென் நெஞ்சு. - 64</poem> ::புகுவார்க்கு இடம் கொடா போதுவார்க்கு ஒல்கா நகுவாரை நாணி மறையா இகு கரையின் ஏ மான் பிணை போல நின்றதே கூடலார் கோமான் பின் சென்ற என் நெஞ்சு. ::அவன் கூடலார் கோமான். அவன் பின் என் நெஞ்சு சென்றது. என் நெஞ்சுக்குள்ளே புகுவார் யாருக்கும் அது இடம் கொடுக்கவில்லை. வழியில் யார் சென்றாலும் நெஞ்சம் தளரவில்லை. என் நெஞ்சைப் பார்த்து எள்ளி நகையாடுபவர்களைக் கண்டால் நாணி மறைந்துகொள்கிறது. இடிந்து விழுந்துகொண்டிருக்கும் ஆற்றங்கரையில் அம்பு பட்ட மான் நிற்பது போல என் நெஞ்சு அவனிடம் நிற்கிறது. ===65=== <poem>களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை அளியான் அளிப்பானே போன்றான் - தெளியாதே செங்காந்தள் மென்விரலாற் சேக்கை தடவந்தேன் என்காண்பேன் என் அலால் யான். – 65</poem> ::களி யானைத் தென்னன் கனவின் வந்து என்னை அளியான் அளிப்பானே போன்றான் தெளியாதே செங்காந்தள் மென் விரலால் சேக்கை தடவந்தேன் என் காண்பேன் என் அலால் யான். ::களிக்கும் யானைமேல் உலா வருபவன் தென்னன். அவன் என் கனவில் வந்தான். அவன் எனக்கு இன்பம் எதுவும் தரவில்லை. இன்பம் தருபவன் போல இருந்தான். உடனே செங்காந்தள் பூப் போன்ற என் விரல்களால் அவனைத் தடவினேன். உண்மையில் படுக்கையைத் தடவிக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர என் படுக்கையில் வேறு யாரும் இல்லை. ==பாண்டியன் 66-70== ===66=== <poem>கனவை நனவென் றெதிர்விழிக்கும் காணூம் நனவில் எதிர்விழிக்க நாணும் – புனையிழாய் என்கண் இவையானால் எவ்வாறே மாமாறன் தன்கண் அருள்பெறுமோ தான். – 66</poem> ::கனவை நனவு என்று எதிர் விழிக்கும் காணூம் நனவில் எதிர் விழிக்க நாணும் புனையிழாய் என் கண் இவை ஆனால் எவ்வாறே மா மாறன் தன் கண் அருள் பெறுமோ தான். ::கனவை நனவு என்று எண்ணிக்கொண்டு அவனைக் கொட்டைக் கண்ணோடு விழித்துக்கொண்டு பார்க்கிறேன். அப்போது உறங்கிக்கொண்டிருக்கும் என் கண்கள் அவனைப் பார்க்கவில்லை. நனவில் அவன் உலா வருகிறான். அப்போது என் நாணத்தால் அவனைப் பார்க்க முடியவில்லை. என் கண்ணுக்கே இந்த நிலைமை ஆனால் அவனது அருளைப் பெறுவது எப்போது? ===67=== <poem>தளையவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி களையினும்என் கண்திறந்து காட்டேன் – வளைகொடுப்போம் வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந் தென்கண் புகுந்தான் இரா. – 67</poem> ::தளை அவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி களையினும் என் கண் திறந்து காட்டேன் வளை கொடுப்போம் வன் கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து என் கண் புகுந்தான் இரா. ::மலரும் பூமாலையைக் கையில் எடுத்துக்கொண்டு வந்து நிற்கும் தாய்மார்களே! “விடிந்துவிட்டது, கண்ணைத் திற” என்கிறீர்கள். என் உயிரே போனாலும் கண்ணைத் திறக்கமாட்டேன். மாறன் என் வளையல்களைக் கழன்று விழும்படிச் செய்து எடுத்துக்கொண்டு போய்விட்டான். அவன் கொடுமைக்காரன். வாளைக் கையில் உடையவன். கருநிற யானைமேல் வந்தான். வந்தவன் இரவில் என் கண்ணுக்குள் அகப்பட்டுக்கொண்டான். கண்ணுக்குள்ளே இருக்கிறான். திறந்தால் ஓடிவிடுவான். மால் = கருமை ===68=== <poem>ஓராற்றல் என்கண் இமைபொருந்த அந்நிலையே கூரார்வேல் மாறன் என் கைப்பற்ற – வாரா நனவென் றெழுந்திருந்தேன் நல்வினையொன் றில்லேன் கனவும் இழந்திருந்த வாறு. – 68</poem> ::ஓராற்றல் என்கண் இமை பொருந்த அந் நிலையே கூர் ஆர் வேல் மாறன் என் கைப் பற்ற வாரா நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன் கனவும் இழந்து இருந்த ஆறு. ::அவனை எண்ணிக்கொண்டே இருந்தேன். தூக்கம் வரவில்லை. ஏதோ ஒரு வகையில் என் இமைகள் மூடிக்கொண்டன. அப்போதே கூரிய வேலை உடைய மாறன் அருகில் வந்து என் கைகளைப் பற்றினான். கனவை நனவு என்று எண்ணி எழுந்திருந்தேன். அவன் இல்லை. கைப்பற்றிய கனவு இன்பமும் இல்லாமல் போய்விட்டது. எனக்கு நல்வினைப்பேறு ஒன்றுகூட இல்லை. ===69=== <poem>கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர்நுனைவேலி வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற் கொண்டிருக்கப் பெற்ற குணம். – 69</poem> ::கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர் நுனை வேலி வண்டு இருக்க நக்க தார் வா மான் வழுதியால் கொண்டிருக்கப் பெற்ற குணம். ::கரிய நல்ல நீலமலர் மணக்கும் குளத்தில் நாள்தோறும் பூத்துநின்று தவம் செய்தது. அந்தத் தவத்தின் பயனால் போலும் வழுதி கழுத்தில் மாலை ஆகும் பேறு பெற்றுள்ளது. கூர்மையான நுனியை உடைய வேல் போன்ற வாயைக் கொண்டிருக்கும் வண்டு சிரிப்பொலி கேட்க மொய்க்கும் பூமாலை, வழுதி மாலை. ===70=== <poem>அறிவரார் யாமொருநாட் பெண்டிரே மாகச் செறிவார் தலைமே னடந்து – மறிதிரை மாட முரிஞ்சும் மதுரையார் கோமானைக் கூட வொருநாட் பெற. – 70</poem> ::அறிவர் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆகச் செறிவார் தலைமேல் நடந்து மறி திரை மாடம் உரிஞ்சும் மதுரையார் கோமானைக் கூட வொரு நாள் பெற. ::மோதித் திரும்பும் வைகை ஆற்று நீர்த்திரையை மாடி வீடுகள் உரிஞ்சும் ஊர் மதுரை. அவன் அந்த மதுரை மக்களின் கோமான். என்றேனும் ஒருநாள் நான் அவனோடு சேர்ந்து கூடி இருப்போன். இப்போது ஊரார் என் வாயை அடைத்து வைக்கின்றனர். நான் அவனோடு கூடியிருப்பதை அன்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். இப்போது என்னை வீட்டுக்குள்ளே அடைத்துச் செறித்து வைப்பவர்கள் அப்போது தெரிந்துகொள்வர். அப்போது அவர்கள் தலைமேல் நான் நடப்பேன். பெண்களே! இதனைத் தெரிந்துகொள்ளுங்கள். ==பாண்டியன் 71-75== ===71=== <poem>கைய தவன்கடலுள் சங்கமால் பூண்டதுவும் செய்யசங் கீன்ற செழுமுத்தால் மெய்யதுவும் மன்பொரு வேல்மாறன் வார்பொதியிற் சந்தனமால் என்பெறா வாடும் என் தோள். – 71</poem> ::கையது அவன் கடலுள் சங்கமால் பூண்டதுவும் செய்ய சங்கு ஈன்ற செழு முத்தால் மெய்யதுவும் மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனமால் என் பெறா வாடும் என் தோள். ::கடல் கைக்கும்படிக் கடலில் படுத்துத் தவம் செய்துகொண்டிருப்பதால் திருமால்தான் மாறன் என்கிறேன். திருமால் கடல் சங்கைக் கையில் வைத்துக்கொண்டிருக்கிறான். நான் மாறன் கடலில் விளைந்த சங்கில் அறுத்த வளையல்கைக் கையில் அணிந்துகொண்டிருக்கிஅறேன். மாறன் கடல் முத்தை ஆரமாக அணிந்துகொண்டிருக்கிறேன். மாறனின் பெதியமலைச் சந்தனத்தைப் பூசிக்கொண்டிருக்குறேன். சங்கம், முத்து, சந்தனம் எல்லாமே அவனுடையவை. அப்படி இருக்கும்போது என் தோள் எதனைப் பெறாமல் வாடுகிறது? வியப்பாக உள்ளது. ===72=== <poem>இப்பியீன்று இட்ட எறிகதிர் நித்திலம் கொற்கையே யல்ல படுவது – கொற்கைக் குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம் கருதியார் கண்ணும் படும். – 72</poem> ::இப்பி ஈன்று இட்ட எறி கதிர் நித்திலம் கொற்கையே அல்ல படுவது கொற்கைக் குருதி வேல் மாறன் குளிர்சாந் தகலம் கருதியார் கண்ணும் படும். ::சங்குச் சிப்பிகள் பெற்றெடுத்த முத்துகள் கொற்கையில் மட்டுமா உதிர்கின்றன? கொற்கையை ஆளும் மாறனின், குருதி தோய்ந்த வேலை உடைய மாறனின், குளிர்ந்த சந்தனம் பூசிய மார்பினை அடையக் கருதிய பெண்கள் கண்களிலிருந்தும் உதிர்கின்றன. ===73=== <poem>கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன் முடிபாடி முத்தாரம் பாடித் – தொடியுலக்கை கைம்மனையில் ஓச்சப் பெறுவெனோ யானும்ஓர் அம்மனைக் காவல் உளேன். – 73</poem> ::கொடி பாடித் தேர் பாடிக் கொய் தண் தார் மாறன் முடி பாடி முத்தாரம் பாடித் தொடி உலக்கை கைம் மனையில் ஓச்சப் பெறுவெனோ யானும் ஓர் அம் மனைக் காவல் உளேன். ::மாறன் கொடி, மாறன் தேர், மாறன் பூ மாலை, மாறன் முத்தாரம், மாறன் சூடிய முடி ஆகியவற்றைப் பாடிக்கொண்டு நான் உலக்கையால் நெல் குற்றவேண்டும். இதுதான் என் ஆசை. இப்போது வீட்டுக் காவலில் கிடக்கிறேன். \ தொடி உலக்கை – பூண் போட்ட உலக்கை \ கொய் தண் தார் – கொய்த குளிர்ந்த பூக்களால் கட்டப்பட்ட மால் \ கைம்மனை – சிறிய இல்லம் \ அம்மனை – அழகிய இல்லம் ===74=== <poem>என்னை உரையல் என் பேருரையல் ஊருரையல் அன்னையும் இன்னள் எனவுரையல் பின்னையுந் தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்கென் கண்படாவாறே யுரை. 74</poem> ::என்னை உரையல் என் பேருரையல் ஊருரையல் அன்னையும் இன்னள் என உரையல் பின்னையும் தண் படா யானைத் தமிழ்நர் பெருமாற்கு என் கண் படாவாறே உரை. ::என்னைப் பற்றிப் பேசவேண்டா. என் பேரையும் சொல்லவேண்டா. என் தாய் என்னை அடைத்து வைத்திருக்கும் கொடியவள் என்றும் சொல்லவேண்டா. பின் என்னதான் சொல்லவேண்டும் என்கிறாயா? தமிழர் பெருமானை எண்ணி என் கண் உறங்காமல் இருக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள். (தண் படா யானை = குளுமை இல்லாமல் எப்பொதும் சினம் கொண்டிருக்கும் யானை – யானையை உடைய தமிழர் பெருமான்.) ===75=== <poem>மாறடுபோர் மன்னர் மதிக்குடையும் செங்கோலும் கூறிடுவாய் நீயோ குளிர்வாடாய் சோறடுவார் ஆரத்தால் தீமூட்டும் அம்பொதியிற் கோமாற்கென் வாரத்தால் தோற்றேன் வளை. 75</poem> ::மாறு அடு போர் மன்னர் மதிக் குடையும் செம் கோலும் கூறிடுவாய் நீயோ குளிர் வாடாய் சோறு அடுவார் ஆரத்தால் தீ மூட்டும் அம் பொதியின் கோமாற்கு என் வாரத்தால் தோற்றேன் வளை. ::சோறாக்குவோர் சந்தனக்கட்டையில் அடுப்புத் தீ மூட்டும் பொதியமலை நாட்டுக் கோமான் அவன். குளிரும் வாடைக்காற்றே! நீ அவனிடம் தூது செல். மாற்றாரைப் போரில் வெல்லும் அவனது குடை, மதியம் போன்ற வெண்கொற்றக் குடை, செங்கோல் ஆகியவற்றை முதலில் சொல். பின் அவனை நெஞ்சில் பங்குபோட்டுக் கொண்டிருப்பதால் என் வளையல்களைத் தோற்றுப் போயிருக்கிறேன் என்பதையும் சொல். (வாரம் = சரிபாதி பங்கு) ==பாண்டியன் 76-80== ===76=== <poem>துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப் பிடியேயான் நின்னை யிரப்பல் – கடிகமழ்தார்ச் சேலேக வண்ணனொடு சேரி புகுதலுமெஞ் சாலேகம் சார நட. – 76</poem> ::துடி அடித் தோல் செவித் தூங்கு கைம் நால் வாய்ப் பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார்ச் சேல் ஏக வண்ணனொடு சேரி புகுதலும் எம் சாலேகம் சார நட. ::அவன் சேல் ஏக வண்ணன். மீன் கொடி கொண்ட மாறன். (மீன் கொடி கொண்ட காம வேள் மாரன்). அவனைச் சுமந்துகொண்டு வரும் பிடியே! (பெண்யானையே) உடுக்கை-மேளம் போன்ற காலடியும், தோல்-பறை போன்ற காதும், தொங்கும் கையில் துளை இருக்கும் வாயும் கொண்டிருக்கிறாய். சரி. உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். மாலை அணிந்துகொண்டு அவன் உன்மேல் வரும்போது என் தெருச்சேரிக்கு வந்ததும் என் வீட்டுச் சன்னல் (சாலேகம்) ஓரமாக நடந்து செல். நான் அவனைக் கண்ணாரக் காணவேண்டும். ===77=== <poem>எலாஅ மடப்பிடியே யெங்கூடற் கோமான் புலாஅல் நெடுநல்வேல் மாறன் – உலாஅங்கால் பைய நடக்கவுந் தேற்றாயால் நின்பெண்மை ஐயப் படுவ துடைத்து. – 77</poem> ::எலாஅ மடப் பிடியே எம் கூடல் கோமான் புலாஅல் நெடு நல் வேல் மாறன் உலாஅங்கால் பைய நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை ஐயப்படுவது உடைத்து. ::ஏ, மடத்தனம் கொண்ட பிடியே! புலால் நாற்றம் அடிக்கும் வேலையுடைய என் கூடல்-கோமான் மாறன் உலா வரும்போது மெதுவாக நடக்க உனக்குத் தெரியவில்லையே. பெண்ணின் விருப்பத்தைப் புரிந்துகொள்ளாத நீயும் ஒரு பெண்ணா? உன் பிறவி ஐயப்படத் தக்கதாக உள்ளது. ===78=== <poem>போரகத்துப் பாயுமா பாயாது பாயமா ஊரகத்து மெல்ல நடவாயோ – கூர்வேல் மதிவெங் களியானை மாறன் தன் மார்பங் கதவங்கொண் டியாமுந் தொழ. – 78</poem> ::போர் அகத்துப் பாயும் மா பாயாது பாயமா ஊர் அகத்து மெல்ல நடவாயோ கூர் வேல் மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம் கதவம் கொண்டு யாமும் தொழ. ::மாறன் மார்புக் கதவை நான் திறந்து தொழவேண்டும். அவனைச் சுமந்துவரும் களிப்பு மிக்க யானையே! போரில் பாய்வது போல நீ பாயாதே. பாயாசம் போல ஊருக்குள்ளே மெல்ல நடந்துசெல். ===79=== <poem>ஆடுகோ சூடுகோ ஐதாக் கலந்துகொண்டு ஏடுகோ டாக எழுதுகோ – நீடு புனவட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி கனவட்டங் கால்குடைந்த நீறு. – 79</poem> ::ஆடுகோ சூடுகோ ஐதாக் கலந்துகொண்டு ஏடு கோடாக எழுதுகோ நீடு புனவட்டப் பூ தெரியல் பொன் தேர் வழுதி கனவட்டம் கால் குடைந்த நீறு. ::வழுதியின் குதிரை ஊர்தியின் பெயர் ‘கனவட்டம்’. வழுதியைச் சுமந்துகொண்டு கனவட்டம் தெருவில் சென்றது. அதன் காலடி பட்ட புழுதியை நீரில் கலந்து மையாக்கிக்கொண்டு, பூவிதழ் நுனியை எழுத்தாணி ஆக்கிக்கொண்டு, என் கண்ணில் மை எழுதிக்கொள்ளட்டுமா, என் தோளில் தொய்யில் எழுதிக்கொள்ளட்டுமா – அவள் கேட்கிறாள். ===80=== <poem>பிணிகிடந் தார்க்குப் பிறந்தநாட் போல அணியிழை அஞ்ச வருமால் – மணியானை மாறன் வழுதி மணவா மருண்மாலைச் சீறியோர் வாடை சினந்து. – 80</poem> ::பிணி கிடந்தார்க்குப் பிறந்த நாள் போல அணியிழை அஞ்ச வருமால் மணி யானை மாறன் வழுதி மணவா மருண்மாலைச் சீறி ஓர் வாடை சினந்து. ::நோய்வாய்ப் பட்டுக் கிடப்பவர்களுக்குப் பிறந்தநாள் வருவது போல வாடைக்காற்று சினம் கொண்டு பாய்கிறது. பெண்ணே! பார். மாறன் வழுதியோடு கூடி இருக்காமல் தனியே இருப்பவரிடம்தான் வாடை இப்படி வருகிறது. ==பாண்டியன் 81-85== ===81=== <poem>வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோல் ஏரிய ஆயினும் என்செய்யும் –கூரிய கோட்டானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங் கோட்டுமண் கொள்ளா முலை. – 81</poem> ::வாரிய பெண்ணை வரு குரும்பை வாய்த்தன போல் ஏரிய ஆயினும் என் செய்யும் கூரிய கோட்டு ஆனைத் தென்னன் குளிர் சாந்து அணி அகலம் கோட்டு மண் கொள்ளா முலை. ::என் முலை தென்னங்குரும்பை போல் பருத்துக்கொண்டிருக்கிறது. சரி. அதனால் என்ன பயன். தென்னன் மார்பில் உள்ள சந்தனக் குழம்பை அப்பிக்கொள்ளவில்லையே! ===82=== <poem>நாணாக்காற் பெண்மை நலன் அழியும் முன்னின்று காணாக்காற் கைவளையுஞ் சோருமால் – காணேன்நான் வண்டு எவ்வந் தீர்தார் வயமான் வழுதியைக் கண்டுஎவ்வந் தீர்தார் ஆறு. – 82</poem> ::நாணாக்கால் பெண்மை நலன் அழியும் முன் நின்று காணாக்கால் கை வளையும் சோருமால் காணேன் நான் வண்டு எவ்வம் தீர் தார் வய மான் வழுதியைக் கண்டு எவ்வம் தீர் தார் ஆறு. ::வழுதி உலா வரும்போது கண்டு நாணாமல் நின்றால் என் பெண்மை அழியும். அவனைக் கண்ணாரக் காணவில்லை என்றால் என் கைவளையல் கழன்று ஓடும். எப்படித்தான் என் எவ்வத் துன்பத்தைப் போக்கிக்கொள்வேன்? பூமாலை மட்டும் வண்டின் துன்பத்தைப் போக்கிக்கொண்டு அவன் கழுத்தில் இருக்கிறதே! ===83=== <poem>மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக் காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் – கண்டக்காற் பூணாகந் தாவென்று புல்லப் பெறுவேனோ நாணோ டுடன்பிறந்த நான். – 83</poem> ::மாணார்க் கடந்த மற வெம் போர் மாறனைக் காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்டக்கால் பூண் ஆகம் தா என்று புல்லப் பெறுவேனோ நாணோடு உடன்பிறந்த நான். ::மாட்சிமை இல்லாதவர்களை வென்றவன் மாறன். அவனைக் காணாதபோது ஆயிரம் ஆயிரமாகப் பேசுவேன். கண்டால், “உன் பூண் அணிந்த மார்பை எனக்குக் கொடு” என்று கேட்டுத் தழுவமுடியுமா? நாணத்தோடு பிறந்தவள் ஆயிற்றே! ===84=== <poem>செய்யார் எனினுந் தமர்செய்வ ரென்னுஞ்சொல் மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் – கையார் வரிவளை நின்றன வையையார் கோமான் புரிவளை போந்தியம்பக் கேட்டு. – 84</poem> ::செய்யார் எனினும் தமர் செய்வர் என்னும் சொல் மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் கை ஆர் வரி வளை நின்றன வையையார் கோமான் புரி வளை போந்து இயம்பக் கேட்டு. ::மற்றவர்கள் உதவவில்லை என்றாலும், உற்றார் உறவினர் உதவுவர் என்பது உண்மை என்பது இப்போது தெரிந்துவிட்டது. வையை நாட்டாரின் அரசன் உலா வரும்போது ஊதிய சங்கின் ஓசையைக் கேட்டதும், சங்கால் செய்யப்பட்டதாய் என் கையில் இருக்கும் வளையல்கள் என் தோள்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டன. காணப்போகும் மகிழ்ச்சி. \ வரிவளை – கையில் வரிவரியாக உள்ள வளையல் \ புரிவளை – வளைந்து விரியும் சங்கு ===85=== <poem>உகுவாய் நிலத்த துயர்மணல்மேல் ஏறி நகுவாய்முத் தீன்றசைந்த சங்கம் – புகுவான் திரைவரவு பார்த்திருக்குந் தென்கொற்கைக் கோமான் உரைவரவு பார்த்திருக்கும் நெஞ்சு. – 85</poem> ::உகு வாய் நிலத்தது உயர் மணல் மேல் ஏறி நகு வாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் புகுவான் திரை வரவு பார்த்திருக்கும் தென் கொற்கைக் கோமான் உரை வரவு பார்த்திருக்கும் நெஞ்சு. ::சங்குப் பூச்சி மணலின் மேல் ஏறி பல்லைக் காட்டும் முத்துக்களைப் பெற்று வைத்துவிட்டு மீளும். அந்த முத்துக்கள் அலைகள் வந்து கொண்டுசெல்லாவா என்று காத்துக்கொண்டிருக்கும். அதுபோல நான் அந்த முத்து விளையும் கொற்கை அரசனிடமிருந்து அழைப்பு வராதா எனக் காத்திருக்கிறேன். ==பாண்டியன் 86-90== ===86=== <poem>கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவனேல் கூடு என்று – கூடல் இழைப்பாள்போற் காட்டி இழையா திருக்கும் பிழைப்பில் பிழைபாக் கறிந்து. – 86</poem> ::கூடல் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவனேல் கூடு என்று கூடல் இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும் பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து. – 86 ::கூடல் இழைத்தல் என்பது ஒருவகை விளையாட்டு. அது குறி பார்க்கும் விளையாட்டு. நடுவில் நின்றுகொண்டு, கண்களை மூடிக்கொண்டு, சுழன்று, கைவிரலால் மணலில் வட்டமிட்டுக் கோடு கிழிப்பர். வட்டம் கோணல் மாணலாக இருந்தாலும், கோடு தொடங்கிய புள்ளியில் ஒன்றுகூட வேண்டும், கூடினால் தான் விரும்பிய எண்ணம் நிறைவேறும் என்றும், கூடாமல் கோடு வேறிடம் சென்றால் விரும்பிய செயல் கைகூடாது என்றும் நம்புவர். ::இப்படி அவள் கூடல் இழைக்க முற்பட்டாள். கூடல் பெருமான் பாண்டியனை நான் கூடப்பெறுவேன் என்றால் கூடல் கோடே நீ கூடுக என்று சொல்லிக்கொண்டு கூடல் இழைக்க முற்பட்டுக் கூடல் இழைப்பது போலப் பாசாங்கு காட்டினாள். உண்மையில் அவள் கூடல் இழைக்கவில்லை. காரணம் ஒருவேளை கூடல்-கோடு கூடாமல் போய்விட்டால் அவனைக் கூடமுடியாமல் போய்விடுமே என்னும் அச்சம் அவளுக்கு. ===87=== <poem>குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம் புறப்படா பூந்தார் வழுதி – புறப்படின் ஆபுகு மாலை அணிமலையில் தீயேபோல் நாடறி கௌவை தரும். – 87</poem> ::குடத்து விளக்கே போல் கொம்பன்னார் காமம் புறப்படா. பூந்தார் வழுதி புறப்படின் ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல் நாடறி கௌவை தரும். ::கொடிக்கொம்பு (கொம்பில் ஏறும் கொடி) போன்றவர் மகளிர். மகளிர் காமம் குடத்துக்குள் வைத்த விளக்குப்போல் வெளி-உலகுக்குத் தெரியாது. ஆனால் வழுதி மாலையும் கழுத்துமாக உலா வரும்போது, ஆனிரைகள் இல்லம் புகும் மாலை வேளையில் மலையில் பற்றி எரியும் தீயைப் போல ஊருக்கெல்லாம் தெரியும்படி வெளிப்பட்டுவிடும். ===88=== <poem>ஏற்பக் குடைந்தாடில் ஏசுவர் அல்லாக்கால் மாற்றி யிருந்தாள் ஏனவுரைப்பர் – வேற்கண்ணாய் கொல்யானை மாறன் குளிர்புனல் வையைநீர் எல்லாம் எனக்கோர் இடர். – 88</poem> ::ஏற்பக் குடைந்து ஆடில் ஏசுவர் அல்லாக்கால் மாற்றி இருந்தாள் ஏன உரைப்பர் வேல் கண்ணாய் கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் எல்லாம் எனக்கு ஓர் இடர். ::அவன் கொல்யானை மேல் செல்லும் மாறன். அவன் நாட்டு வையையில் குளிர்ந்த ஊற்றுநீர் வருகிறது. அதில் மூழ்கிக் குளித்து விளையாடினால் மாறன் நாட்டு நீர் என்று மூழ்கி விளையாடுகிறாள் என்று சொல்லி ஏசுவார்கள். நீராடாமல் கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தால் தன் ஆசையை மறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று முணுமுணுப்பர். வேல் போன்ற கண்ணை உடைய என் தோழியே! எது செய்தாலும் எனக்குத் துன்பமே. ===89=== <poem>யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின் தானூட யானுணர்த்தத் தானுணரான் – தேனூறு கொய்தார் வழுதி குளிர்சாந் தணியகலம் எய்தா திராக்கழிந்த வாறு. – 89</poem> ::யான் ஊடத் தான் உணர்த்த யான் உணரா விட்டதன் பின் தான் ஊட யான் உணர்த்தத் தான் உணரான் தேன் ஊறு கொய் தார் வழுதி குளிர் சாந்து அணி அகலம் எய்தாது இராக் கழிந்தவாறு. ::நான் ஊடினேன். அவன் உணர்த்தினான். நான் என் ஊடலை விட்டு உணர்ந்துகொண்டு கூடச் சென்றேன். அப்போது வழுதி நான் முன்பு ஊடினேன் என்று ஊடினான். நான் உணர்த்தினேன். அவன் உணரவில்லை. இப்படியே இரவெல்லாம் கழிந்துவிட்டது. குளிர்ந்த சந்தனம் பூசிய அவன் மார்பு எனக்குக் கிடைக்கவே இல்லை. ===90=== <poem>புல்லாதார் வல்லே புலர்கென்பர் புல்லினார் நில்லா யிரவே நெடிதென்பர் – நல்ல விராமலர்த் தார்மாறன் வெண்சாந் தகலம் இராவளிப் பட்ட திது. – 90</poem> ::புல்லாதார் வல்லே புலர்(கு) என்பர் புல்லினார் நில்லாய் இரவே நெடிது என்பர் நல்ல விராம் மலர்த் தார் மாறன் வெண் சாந்து அகலம் இரா அளிப் பட்டது இது. ::இரவே! உடனே விடிந்துவிடு (புலர்க) என்று மாறனின் வெண்ணிறச் சந்தனம் பூசிய மார்பைத் தழுவப்பெறாதவர்கள் வேண்டுவர். தழுவப்பெற்றவர்கள் இரவே விடியாமல் நீண்டுகொண்டே இரு என்று வேண்டுவர். இப்படி இரங்கத்தக்க (அளி) இரவு என்னிடம் வந்திருக்கிறதே! ==பாண்டியன் 91-95== ===91=== <poem>பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல் நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் – சாரல் மலைபடுப யானை வயமாறன் கூர்வேல் தலைபடுப தார்வேந்தர் மார்பு.- 91</poem> ::பார் படுப செம் பொன் பதி படுப முத்தமிழ் நூல் நீர் படுப வெண் சங்கும் நித்திலமும் சாரல் மலை படுப யானை வய மாறன் கூர் வேல் தலை படுப தார் வேந்தர் மார்பு. ::மாறன் நிலமெல்லாம் செம்பொன். ::ஊரெல்லாம் முத்தமிழ் முழங்கும் நூல்கள். ::நீரெல்லாம் சங்கும், முத்தும். ::மலையெல்லாம் யானை. ::பகைவேந்தர் மார்பெல்லாம் அவன் வேல். ::எனக்கு மட்டும் எதுவுமே இல்லையா ===92=== <poem>நந்தின இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும் பந்தர் இளங்கமுகின் பாளையும் – சிந்தித் திகழ்முத்தம் போற்றோன்றும் செம்மற்றே தென்னன் நகைமுத்த வெண்குடையான் நாடு. – 92</poem> ::நந்தின இளம் சினையும் புன்னைக் குவி மொட்டும் பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தித் திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன் நகை முத்த வெண் குடையான் நாடு. ::நந்துச் சங்குகளின் இள முட்டைகளும், புன்னைப்பூ மொட்டுகளும், பந்தர்த் துறைமுகத்தில் உள்ள பாக்குப் பாளைகளும் சிந்திக் கிடப்பதால் தென்னன் நாடெங்கிலும் முத்துக்கள் சிரிப்பது போல் தோற்றமளிக்கிறது. தென்னன் குடையிலும் முத்துக்கள் தொங்குகின்றன. இது இவன் நாட்டுக்குக் கிடைத்திருக்கும் செம்மாப்பு. எனக்குத்தான் அவன் பல்நகை முத்தம் கிடைக்கவில்லை. ===93=== <poem>மைந்தரோ டூடி மகளிர் திமிர்ந்திட்ட குங்கும ஈர்ஞ்சாந்தின சேறுழக்கி – எங்கும் தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் நெடுமாடக் கூடல் அகம். – 93</poem> ::மைந்தரோடு ஊடி மகளிர் திமிர்ந்து இட்ட குங்கும ஈர்ம் சாந்தின சேறு உழக்கி எங்கும் தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் நெடு மாடக் கூடல் அகம். ::மைந்தரோடு மகளிர் ஊடுவர். அப்போது மகளிர் அணிந்திருக்கும் ஈரக் குங்குமமும், மைந்தர் அணிந்திருக்கும் ஈரச் சந்தனமும் நிலத்தில் பட்டுச் சேறாகிப், போவார் வருவாரெல்லாம் வழுக்கித் தடுமாறும் தன்மை கொண்டது தென்னன் ஆளும் கூடல் நகரம். ===94=== <poem>மடங்கா மயில்ஊர்தி மைந்தனை நாளும் கடம்பம்பூக் கொண்டேத்தி அற்றால் – தொடங்கமருள் நின்றிலங்கு வென்றி நிரைகதிர்வேல் மாறனை இன் தமிழால் யாம்பாடும் பாட்டு. – 94</poem> ::மடங்கா மயில் ஊர்தி மைந்தனை நாளும் கடம்பம்பூக் கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள் நின்று இலங்கு வென்றி நிரை கதிர் வேல் மாறனை இன் தமிழால் யாம் பாடும் பாட்டு. ::மடங்காத தோகையை உடைய மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகனைக் கடம்புப் பூப் போட்டுப் பூசை செய்வது எப்படியோ அப்படிப்பட்டதுதான் மாறனை இனிய தமிழால் நான் பாடும் பாடல் எனக் கொள்க. மாறன் தொடங்கிய போரிலெல்லாம் முருகனைப் போல வெற்றி கண்டு ஒளிரும் வேலை உடையவன். ===95=== <poem>செங்கண் நெடியான்மேல் தேர்விசையன் ஏற்றியபூப் பைங்கண்வெள் ஏற்றான்பால் கண்டற்றால் – எங்கும் முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன் அடிமிசையே காணப் படும். – 95</poem> ::செங்கண் நெடியான் மேல் தேர் விசையன் ஏற்றிய பூப் பைங் கண் வெள் ஏற்றான் பால் கண்டு அற்றால் எங்கும் முடி மன்னர் சூடிய பூ மொய்ம் மலர்த் தார் மாறன் அடி மிசையே காணப்படும். ::அருச்சுணன் திருமாலுக்குச் சாத்திய பூ அத்தனையும் காளைமாட்டு ஊர்திக் கடவுளிடம் (சிவன் திருவடிகளில்) கிடப்பதைக் கண்டனர். அப்படித்தான் மன்னர் முடியில் சூடிய பூக்கள் எல்லாம் மாறன் காலடியில் கிடந்தன. மாறனைத் தொழும்போது உதிர்ந்த பூக்கள் அவை. ==பாண்டியன் 96-100== ===96=== <poem>கூந்தன்மா கொன்று குடமாடிக் கோவலானாய்ப் பூந்தொடியைப் புல்கிய ஞான்றுண்டால் – யாங்கொளித்தாய் தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு. – 96</poem> ::கூந்தல் மா கொன்று குடம் ஆடிக் கோவலானாய்ப் பூந்தொடியைப் புல்கிய ஞான்று உண்டால் யாங்கு ஒளித்தாய் தென்னவனே தேர் வேந்தே தேறு நீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு. ::தென்னவனே! தேர் வேந்தே! தெளிந்த நீர் ஓடும் கூடல் நகரக் கோமானே! நீதான் திருமால். (நெடியோன் என்பவன் பாண்டிய மன்னர்களில் ஒருவன்) நீ கண்ணனாகத் தோன்றிய காலத்தில் கூந்தல் என்னும் குதிரையைக் கொன்றாய். குடம் தலையில் வைத்துக்கொண்டு நடனம் ஆடினாய். அழகிய வளையல்காரி நப்பின்னையை (இராதையை)த் தழுவினாய். அப்போது உன் மார்பில் மறு இருந்ததே! (திருமகளை மார்பில் கொண்டிருக்கும் மறு) அதனை இப்போது எங்கே ஒளித்து வைத்து வைத்திருக்கிறாய்? ===97=== <poem>கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர் பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் – நண்ணார்தம் தேர்வேந்தன் தென்னன் திருவுத் திராடநாள் போர்வேந்தன் பூசல் இலன். – 97</poem> ::கண்ணார் கதவம் திறமின் களிறொடு தேர் பண் ஆர் நடைப் புரவி பண் விடுமின் நண்ணார் தம் தேர் வேந்தன் தென்னன் திருவும் திராட நாள் போர் வேந்தன் பூசல் இலன். ::தென்னனை நினைக்காத பகைவர்களே! உங்கள் கதவினைத் திறந்துகொள்ளுங்கள். களிறும், தேரும், குதிரையும் போருக்காகப் பூட்டுவதை விட்டுவிடுங்கள். இன்று தென்னன் பிறந்த திருநாள். உத்திரட்டாதி நாள். தேரில் வருவான். ஆனால் போர் செய்யமாட்டான். அஞ்சவேண்டா. ===98=== <poem>நிறைமதிபோல் யானைமேல் நீலத்தார் மாறன் குடைதோன்ற ஞாலத் தரசர் – திறைகொள் இறையோ எனவந் திடம்பெறுதல் இன்றி முறையோ எனநின்றார் மொய்த்து. – 98</poem> ::நிறை மதி போல் யானை மேல் நீலத் தார் மாறன் குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள் இறையோ என வந்து இடம் பெறுதல் இன்றி முறையோ என நின்றார் மொய்த்து. ::நீலநிற வேம்புமாலை அணிந்துகொண்டு மாறன் உலா வருகிறான். அவனது வெண்கொற்றக் குடை நிறைந்த மதியம் போலக் காணப்படுகிறது. உலகத்து அரசர்களெல்லாம் திறை கொடுப்பதற்காக மொய்த்துக்கொண்டு வந்தனர். வரிசையில் காத்துக்கொண்டு நிற்கும்போது “இறைவா! இது முறையோ?” என முணுமுணுத்துக்கொண்டனர். ===99=== <poem>நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப் புரைசை யைநிமிர்ந்து பொங்கா – அரசர்தம் முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்தமாப் பொன்னுரைகல் போன்ற குளம்பு. – 99</poem> ::நிரை கதிர் வேல் மாறனை நேர் நின்றார் யானைப் புரைசையை நிமிர்ந்து பொங்கா அரசர் தம் முன் முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்த மாப் பொன்னுரை கல் போன்ற குளம்பு. – 99 ::வேல் தாங்கி மாறன் போருக்கு எழுந்தான். சிலர் அவனை எதிர்த்தனர். மாறன் யானை அவர்களின் கோட்டையை நிமிர்ந்து பார்த்துப் பொங்கிப் பாய்ந்தது. மன்னர் பலர் போரிட்டு வீழ்ந்தனர். அவர்கள் தலையில் சூடியிருந்த முடி சிதறிக் கிடந்தது. மாறன் குதிரை அந்தப் பொன்முடிகளைக் காலால் இடறியது. அதனால் அதன் குளம்புகள் பொன்னை உரைத்துப் பார்க்கும் கட்டளைக்கல் போலக் காணப்பட்டது. ===100=== <poem>அருமணி அந்தலை யாடரவம் வானத்து உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் – செருமிகுதோட் செங்கண்மா மாறன் சினவேற் கனவுமே அங்கண்மா ஞாலத் தரசு. – 100</poem> ::அரு மணி அம் தலை ஆடு அரவம் வானத்து உரும் ஏற்றை அஞ்சி ஒளிக்கும் செரு மிகு தோள் செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே அம் கண் மா ஞாலத்து அரசு. ::நஞ்சாகிய அரிய நீலமணியைக் கொண்ட நல்லபாம்பு வானத்தில் இடி முழக்கம் கேட்டால் அஞ்சி ஒடுங்கிக்கொள்ளும். அதுபோல சிவந்த கண்ணுடன் தோன்றும் மாறனின் சினங்கொண்ட வேலைக் கனவிலே கண்டு உலகிலுள்ள அரசர்கள் ஒடுங்கிக்கொள்வர். ::பாம்பு மணி உமிழுமா? ::உமிழாது ::தொண்டையில் நஞ்சு கொண்ட சிவனை மணிகண்டன் என்கிறோம். ::அதுபோல நாகத்தின் நஞ்சினை மணி என்கிறோம். ==பாண்டியன் 101-105== ===101=== <poem>நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன் காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால் ஏம மணிப்பூண் இமையார் திருந்தடி பூமி மிதியாப் பொருள். – 101</poem> ::நேமி நிமிர் தோள் நிலவு தார்த் தென்னவன் காமர் நெடும் குடைக் காவலன் ஆணையால் ஏம மணிப் பூண் இமையார் திருந்து அடி பூமி மிதியாப் பொருள். ::ஆணைச் சக்கரத்தை உருட்டி நிமிர்ந்த தோளைக் கொண்டு விளங்குபவன் தென்னவன். எல்லோரும் விரும்பும் அகன்ற வெண்கொற்றக்குடையை உடையவன். கண் இமைக்காத தேவர் தமக்குப் பாதுகாவலாக மணிப்பூண் அணிந்தவர்கள். அவர்களின் காலடி மண்ணில் படுவதில்லை. காரணம் தென்னவன் ஆணைக்குக் கட்டுப்பட வேண்டி வருமே என்னும் அச்சம். ===102=== <poem>செருவெங் கதிர்வேற் சினவெம்போர் மாறன் உருமின் இடிமுரசு ஆர்ப்ப – அரவுறழ்ந்து ஆமா உகளும் அணிவரையின் அப்புறம்போய் வேமால் வயிறெரிய வேந்து. – 102</poem> ::செரு வெம் கதிர் வேல் சின வெம் போர் மாறன் உருமின் இடி முரசு ஆர்ப்ப அரவு உறழ்ந்து ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய் வேமால் வயிறெரிய வேந்து. ::வேலேந்தி மாறன் போருக்கு எழுவான். அப்போது அவன் போர்முரசம் இடி போல் முழங்கும். அந்த முழக்கத்தைக் கேட்ட ஆமா பாம்பைப் போல் மலையெங்கும் தாவும். பின்னர் அந்த மலைக்கு அப்பால் சென்ற பின்னரும் வயற்றெரிச்சலோடு நெஞ்சம் வெந்துகொண்டிருக்கும். ===103=== <poem>மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர் உருத்தகு மார்போலை யாகத் திருத்தக்க வையக மெல்லாம் எமதென் றெழுதுமே மொய்யிலைவேல் மாறன் களிறு. - 103</poem> ::மருப்பு ஊசியாக மறம் கனல் வேல் மன்னர் உருத் தகு மார்பு ஓலையாகத் திருத் தக்க வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே மொய் இலை வேல் மாறன் களிறு. ::எழுதும் ஊசி கொண்டு ஓலை எழுதுவர். அதுபோல மாறனின் போர்யானை தன் கொம்பை எழுத்தாணி ஆக்கிக்கொண்டு உலகில் எதிர்த்த அனைத்து மன்னர் மார்புகளிலும் எழுதும். (குத்தும்) ===104=== <poem>உருவத்தார்த் தென்னன் ஓங்குஎழில் வேழத் திருகோடுஞ் செய்தொழில் வேறால் – ஒருகோடு வேற்றார் அகலம் உழுமே யொருகோடு மாற்றார் மதில்திறக்கு மால். – 104</poem> ::உருவத் தார்த் தென்னன் ஓங்கு எழில் வேழத்து இரு கோடும் செய் தொழில் வேறால் ஒரு கோடு வேற்றார் அகலம் உழுமே ஒரு கோடு மாற்றார் மதில் திறக்கும் ஆல். ::எல்லா யானைகளின் கொம்புகள் இரண்டும் ஒரே தொழிலைத்தான் செய்யும். ஆனால் தென்னவனின் போர்யானையின் இரண்டு கொம்புகளும் இருவேறு பணிகளைச் செய்யும். ஒரு கொம்பு பகையரசர் நெஞ்சில் உழும். மற்றொன்று பகையரசர் கோட்டை மதிலைத் திறக்கும் ===105=== <poem>தோற்ற மலைகடல் ஓசை புயல்கடாஅங் காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய்க் – கூற்றுங் குறியெதிர்ப்பைக் கொள்ளும் தகைமைத்தே யெங்கோன் எறிகதிர்வேல் மாறன் களிறு. - 105 </poem> ::தோற்றம் மலை கடல் ஓசை புயல் கடாஅம் காற்றின் நிமிர்ந்த செலவிற்று ஆய்க் கூற்றும் குறியெதிர்ப்பைக் கொள்ளும் தகைமைத்தே எங்கோன் எறி கதிர் வேல் மாறன் களிறு. ::எம் தலைவன் ஒளி வீசும் வேலை உடைய மாறன், அவன் களிறு தோற்றத்தில் மலை போன்றது. ஓசை புயல்மழையின் இடி முழக்கம் போன்றது. ஒழுகும் மதமும் புயல்மழை ஒழுகுவது போன்றது. அது காற்றைப்போல நிமிர்ந்து செல்லும். கொல்லும் திறத்தைக் கூற்றுவனும் கடன் வாங்கிக்கொள்ளும் திறம் படைத்தது. ==பாண்டியன் 106-110== ===106=== <poem>அடுமதில் பாய அழிந்ததன் கோட்டைப் பிடிமுன் பழகழிதல் நாணி – முடியுடை மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்வேல் தென்னவர் கோமான் களிறு. – 106</poem> ::அடு மதில் பாய அழிந்த தன் கோட்டைப் பிடி முன்பு அழகு அழிதல் நாணி முடியுடை மன்னர் குடரால் மறைக்குமே செம் கனல் வேல் தென்னவர் கோமான் களிறு. ::பகைவர் கோட்டையை அழித்துப் பாய்ச்சிய தன் கொம்பின் அழகு அழிந்து கிடப்பதைத் தன் பெண்யானைக்குக் காட்ட நாணி மன்னரைக் குத்திய குடரால் தன் கொம்பை மறைத்துக்கொண்டு தென்னவர் கோமான் களிறு வந்து நிற்கும். ===107=== <poem>வெருவரு வெஞ்சமத்து வேலிலங்க வீழ்ந்தார் புருவ முரிவுகண் டஞ்சி – நரிவெரீஇச் சேட்கணித்தாய் நின்றிழைக்குஞ் செம்மற்றே தென்னவன் வாட்கணித்தாய் வீழ்ந்தார் களம். – 107</poem> ::வெரு வரு வெம் சமத்து வேல் இலங்க வீழ்ந்தார் புருவ முரிவு கண்டு அஞ்சி நரி வெரீஇச் சேட்கு அணித்தாய் நின்று இழைக்கும் செம்மற்றே தென்னவன் வாட்கு அணித்தாய் வீழ்ந்தார் களம். ::தென்னவன் வாளுக்கு இரையாகி வேலைத் தாங்கிய கையோடு போர்க்களத்தில் வீழ்ந்து கிடப்பவரின் புருவம் வளந்திருக்கும் சினத்தைக் கண்டு அஞ்சிப் பிணம் தின்னும் நரி வெருண்டு ஓடி அண்மைய தொலைவில் நின்று பார்த்துக்கொண்டே இருக்கும். இது போர்க்களக் காட்சியின் பயங்கரத் தோற்றம். ===108=== <poem>ஏனைய பெண்டிர் எரிமூழ்கக் கண்டுதன் தானையாற் கண்புதைத்தான் தார்வழுதி – யானையும் புல்லார் பிடிபுலம்பத் தன்கண் புதைத்தே பல்யானை அட்ட களத்து. – 108</poem> ::ஏனைய பெண்டிர் எரி மூழ்கக் கண்டு தன் தானையால் கண் புதைத்தான் தார் வழுதி யானையும் புல்லார் பிடி புலம்பத் தன் கண் புதைத்தே பல் யானை அட்ட களத்து. ::வழுதி போர்க்களத்தில் பகைவரை அழித்தான். கணவன் மாண்டது கண்டு அவன் பெண்டிர் தீயில் விழுந்து உயிர் விட்டனர். வழுதி அதனைப் பார்க்க முடியாதவனாய் இரக்கம் கொண்டு தன் மேலாடையால் தன் கண்களை மூடிக்கொண்டான். பகைவரின் களிறுகள் மாண்டுபோகவே அவற்றின் பெண்யானைகளும் புலம்பின. அதனைக் கண்ட வழுதியின் களிறும் தன் கண்களைத் தன் கைகளால் மூடிக்கொண்டது. ===109=== <poem>வாகை வனமாலை சூடி அரசுறையும் ஓகை உயர்மாடத் துள்ளிருந்து – கூகை படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே தென்னன் விடுமாற்றங் கொள்ளாதார் நாடு. – 109</poem> ::வாகை வன மாலை சூடி அரசு உறையும் ஓகை உயர் மாடத்து உள் இருந்து கூகை படு பேய்க்குப் பாட்டு அயரும் பண்பிற்றே தென்னன் விடு மாற்றம் கொள்ளாதார் நாடு. ::தென்னன் ஆணையை ஏற்றுக்கொள்ளாத பகைவர் பிறரை வென்ற மாலையை அழகுடன் சூடிக்கொண்டு உவகையுடன் (ஓகை) இருப்பர். எனினும் கூகை அவர்களது மாடத்துக்குள்ளே இருந்துகொண்டு அவர்கள் சாவப்போவதைப் பாட்டாகப் பாடும். பேய்களை அழைத்துப் பாட்டுப் பாடும். இது தென்னன் அழிக்கப்போகும் அறிகுறிப் பாட்டு. ===110=== <poem>பறைநிறை கொல்யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த் திறைமுறையின் உய்யாதார் தேயம் – முறைமுறையின் ஆன்போய் அரிவையர் போய் ஆடவர்போய் ஆயிற்றே ஈன்பேய் உறையும் இடம். – 110</poem> ::பறை நிறை கொல் யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த் திறை முறையின் உய்யாதார் தேயம் முறை முறையின் ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே ஈன் பேய் உறையும் இடம். ::பஞ்சவர் என்னும் பாண்டியர்க்குத் தோழனாகித் திறை தந்து பிழைத்துக்கொள்ளாதவர் தேசமானது ஆனிரைகள், மகளிர், ஆடவர் ஆகியோர் விட்டுவிட்டுச் சென்றதால் பிணம் தின்னும் பேய் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு வாழும் இடமாக மாறிவிட்டது. ==பாண்டியன் 111-115== ===111=== <poem>கொடித்தலைத்தார்த் தென்னவன் தோற்றான்போல் நின்றான் மடித்தவாய் சுட்டிய கையாற் – பிடித்தவேற் கண்ணேரா ஓச்சிக் களிறணையாக் கண்படுத்த மண்ணேரா மன்னரைக் கண்டு. – 111</poem> ::தொடித் தலைத் தார்த் தென்னவன் தோற்றான் போல் நின்றான் மடித்த வாய் சுட்டிய கையால் பிடித்த வேல் கண் நேரா ஓச்சிக் களிறு அணையாக் கண் படுத்த மண் நேரா மன்னரைக் கண்டு. ::தன் தாயக மண்ணை நினைத்து வேலைக் கையிலே தாங்கி வந்து கண்ணோட்டம் இல்லாமல் பாய்ச்சினான் அந்த வீரன். அவன் தன் களிறு மாண்டுகிடக்கும் மெத்தையில் கண்ணுறக்கம் கொண்டிருக்கிறான். சினம் கொண்டு மடித்த வாயோடு கிடக்கிறான். தன் கையால் தென்னவனைச் சுட்டிக்கொண்டு கிடக்கிறான். அதனைப் பார்த்துத் தென்னவன் தோற்றவன் போல் நின்றான். இப்படிப்பட்ட வீரனைக் கண்டு இரக்கப்பட்டு நின்றான். ===112=== பாடல் 112 <poem>தொழில்தேற்றாப் பாலகனை முன்னேறீஇப் பின்னின் அழலிலைவேல் காய்த்தினார் பெண்டிர் – கழலடைந்து மண்ணீத்த லென்ப வயங்குதார் மாமாறன் கண்ணீத்தந் தீர்க்கு மருந்து. – 112</poem> ::தொழில் தேற்றாப் பாலகனை முன்னேறீஇப் பின்னின் அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து மண் ஈத்தல் என்ப வயங்கு தார் மா மாறன் கண் நீத்தம் தீர்க்கும் மருந்து. ::பெண்டிர் தம் போர்த்தொழில் பயிலாத பாலகனை முன்னே நிறுத்தி, மின்னும் வேலைக் கையிலே கொடுத்து, தாம் பின்னே நின்றுகொண்டு, அவனுக்கு தெம்புச்சூடு ஏற்றிப் போருக்கு அனுப்புவர். மாறன் இத்தகைய தாய்மாரின் காலைத் தொட்டு வணங்கி, தான் வென்ற நாட்டை அவளுக்குத் தருவான். இது மகனை இழந்த அந்தத் தாயின் கண்ணீர் வெள்ளத்தைத் தீர்க்கும் மருந்து. ===113=== <poem>சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறுந்துணையும் நின்றதுகொல் நேர்மருங்கில் கையூன்றி – முன்றில் முழங்கும் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்(கு) உழந்துபின் சென்றவென் நெஞ்சு. 113 </poem> ::சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறும் துணையும் நின்றதுகொல் நேர் மருங்கில் கையூன்றி முன்றில் முழங்கும் கடா யானை மொய்ம் மலர்த்தார் மாறற்(கு) உழந்து பின் சென்ற என் நெஞ்சு. ::மாறன், முழங்கும் யானைக்கடாவின்மீது வருபவன். மலர்மாலையை அணிந்திருப்பவன். அவன் பின்னே என் நெஞ்சு சென்றது. அது இப்போது அவனிடம் சென்றுவிட்டதா? அவன் நெஞ்சில் புகுந்துவிட்டதா? அவனைப் பார்ப்பதற்கு அனுமதி வெறுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறதா? அவனுக்கு நேராகப் பக்கத்தில் தன் கையை ஊன்றி நின்றுகொண்டிருக்கிறதா? இல்லை முற்றத்திலேயே இருக்கிறதா? ஒன்றும் தெரியவில்லையே! ===114=== <poem>உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக் கழுதை செவிஅரிந்து அற்றால் – வழுதியைக் கண்டநம் கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள் கொண்டன மன்னோ பசப்பு. 114</poem> ::உழுத உழுத்தம் செய் ஊர்க் கன்று மேயக் கழுதை செவி அரிந்து அற்றால் வழுதியைக் கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத் தோள் கொண்டன மன்னோ பசப்பு. ::உழுது விதைத்து விளைந்த உழுந்து வயலில் புகுந்து ஊராரின் கன்றுக்குட்டி மேய்ந்துவிட்டது. அதற்குத் தண்டனை வழங்கியவர்கள் கழுதையின் காதை அறுத்துவிட்டனர். இது எப்படி நீதி ஆகும்? அது போலத்தான் இங்கும் நடக்கிறது. வழுதியைக் கண்டதோ என் கண். அதற்குத் தண்டனையாக என் தோளில் அல்லவா பசப்பு-நோய் ஏறுகிறது. இது அடுக்குமா? ===115=== <poem>நறுவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா மறவேந்தன் வஞ்சியான் அல்லன் – துறையின் விலங்காமை நின்று வியன்தமிழ்நா டைந்தின் குலங்காவல் கொண்டொழுகும் கோ. - 115</poem> ::நறு வேந்து கோதை நலம் கவர்ந்து நல்கா மறவேந்தன் வஞ்சியான் அல்லன் துறையின் விலங்காமை நின்று வியன் தமிழ்நாடு ஐந்தின் குலம் காவல் கொண்டு ஒழுகும் கோ. ::தமிழ்நாடு ஐந்து பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. அவற்றை வெவ்வேறு குலத்தவர் ஆண்டுவந்தனர். இந்த ஐந்து குலத்தவரையும் காக்கும் பொறுப்பினை மேற்கொண்டிருந்த கோமகன் பாண்டியன். அவன் தமிழ்நாடன். அவன் நல்ல வேந்தன். கோதைமாலை அணிந்தவன். என் நலத்தையெல்லாம் கவர்ந்துகொண்டவன். கவர்ந்துகொண்டு திரும்பத் தராதவன். மறம் நிறைந்த கொடுங்கோலன். அவன் வஞ்சியரசன் சேரன் அல்லன். எனக்கு வஞ்சனை செய்யாமல் இருப்பவனும் அல்லன். என்ன செய்வது? அவன்தான் என் கோமகன். ::5 பிரிவு – சேரர், சோழர், பாண்டியர், கொங்கர், தொண்டையர் ==முன் தொகுப்பு (உரைக்காக)== பாடல் 1 :செங்கால் மடநாராய்! தென்உறந்தை சேறியேல், :நின்கால்மேல் வைப்பன்என் கையிரண்டும் - வன்பால் :கரைஉரிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற்(கு), :உரையாயோ யான்உற்ற நோய். (''அழகிய நாரையே, தெற்கேயுள்ள உறையூருக்குச் செல்வாயானால், உன் காலைப் பிடித்துக் கும்பிடத் தயார். தேகத்தின் வலிமை காரணமாகக் கரையின் மேல் உராய்ந்து, உராய்ந்து ஏறிய மீனானது மறுபடியும் நீரில் விழுந்து விடுகிற மீனின் தேகக்கொழுப்பு சோழனுக்கு யான் உற்ற காதல் கூறுவாயாக!'') (சேரன் குறிப்பு: ‘மீன்கள் கரையின் மீது துள்ளிவிழுந்து விளையாடுகின்ற காவிரிநாடனுக்கு- சோழனுக்கு - மையலால் யானடைந்துள்ள துன்பத்தைக் கூறுவாயாக.) (‘கரையேறி மீன் விளையாடும் காவிரிநாடு’ என்பது இவ்வடியின் மீளாக்கமே.) ;பாடல் 2 :துடியடி, தோல்செவி தூங்குகை, நால்வாய்ப் :பிடியே! யான் நின்னை இரப்பல், கடிகமழ்தார்ச் :சேலேக வண்ணனொடு சேரி புகுதலும்எம்் :சாலேகம் சார நட. (''கெஞ்சி கேட்டுக்கொள்ளுகிறேன். வாசனை கமழும் மாலை சூடிய,சந்தனம் பூசிய பாண்டியனோடு, ஊருக்குள் பிரவேசிக்கவும் அதாவது,நீராடிவிட்டு உன்மேல் ஏறி ஊருக்குள் மன்னன் புகும் போது, எங்கள் வீட்டு ஜன்னலை ஒட்டி நடந்து வரவேண்டும்.'') ;பாடல் 3 :குடத்து விளக்கே போல் கொம்பன்னார் காமம் :புறப்படா; பூந்தார் வழுதி - புறப்படில், :ஆபுகு மாலை அணிமலையில் தீயே போல் :நாடறி கெளவை தரும். (''பாண்டியன் மேல் பெண்கள் வைத்த காதல் வெளியே தெரியாது. மாலை சூடிய பாண்டியன் பவனி வருவதற்காகப் புறப்பட்டு விட்டாலோ பசுக்கள் மேய்ச்சல் புலங்களிலிருந்து ஊரு்க்குள் புகும் மாலை நேரத்தில் ஊருக்குப் பக்கத்தில் உள்ள மலைச்சரிவில், நாட்டார் எல்லோரும் அந்த பெண்களது காதல் நோயைத் தெரிந்து, வம்பளப்பதற்கு வாய்விடும்'') ;பாடல் 5 :நீரும் நிழலும் போல் நீண்ட அருளுடைய :ஊரிரே ! என்னை உயக்கொண்மின் ! - போரிற்(கு) :உழலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக்(கு) :அழலும்என் நெஞ்சம் கிடந்து. (''காதல் நோயால் என் நெஞ்சு சதா கொதித்த வண்ணமாக இருக்கிறது. ஊரிரே என்னை உயக்கொண்மின்!'') ;பாடல் 6 :போரகத்துப் பாயுமா ! பாயா(து) ஒருபடியா, :ஊரகத்து மெல்ல நடவாயோ ! - பார :மதவெங் களியானை மாறன் தன் மார்பம், - :கதவங்கொண்(டு) யாமும் தொழ (''இந்தக் கவி பெண்ணின் கூற்று என்பது மறைவாய் கிடக்கிறது. மார்பம் தொழ, கதவங்கொண்டு, என்னும் சொற்களை வைத்துத்தான் காதலுற்ற பெண் பேசுகிறாள். இப்படி காதலை மறைவில் வைத்துச் சொல்வதிலிருந்து ஒரு நாண பாவம் இருப்பதைத் தெளிவாக்குகிறது'') ;பாடல் 7 :தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி இளவளவன் :மண்ணகம் காவலனே என்பரால் - மண்ணகம் :காவலனே ஆனக்கால் காவானே மாலைக்கண் :கோவலர்வாய் வைத்த குழல் (''தெளிந்த நீர்நிலைகளில் பூத்த செங்கழுநீர் மலர்களை மாலையாய்த் தொடுத்து அணிந்த சென்னி என்றும் இளவளவன் என்றும் பாராட்டப்படுகிற சோழன் உலகத்தைக் காக்கிறான் என்று சொல்லுகிறார்கள். கட்டளை இட்டுத் தடுக்க மாட்டானா இந்த மாலைப்பொழுது வந்துவிட்டதை அறிவிக்கும் வாய்வைத்து ஊதுகின்ற புல்லாங்குழலை'') [[பகுப்பு:சங்க இலக்கியம்]] [[பகுப்பு :பழந்தமிழ் இலக்கியங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]] 6554jvc89utmbedcgiup2g3v0md7lvr 1834745 1834741 2025-06-23T15:08:00Z 2409:408D:58E:75DF:0:0:1946:68A0 1834745 wikitext text/x-wiki {{நிறைவுறா}} {{விபரம் | title = முத்தொள்ளாயிரம் | noauthor = | section = | previous = | next = | notes = ''[[w:முத்தொள்ளாயிரம்|முத்தொள்ளாயிரம்]] என்பது தமிழ் இலக்கியத்தில் தொகை நூல் வகையைச் சேர்ந்தது. இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. இவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. பல்லாண்டுகளுக்கு முன்னர்ப் ''புறத்திரட்டு'' ஆசிரியர் நூற்றொன்பது பாக்களை மட்டும், தம் தொகை நூலில் திரட்டி வைத்துள்ளார். அவை கடவுள் வாழ்த்தாக ஒன்றும், சேரனைப் பற்றி இருபத்திரண்டும், சோழனைப் பற்றி இருபத்தொன்பதும், பாண்டியனைப் பற்றி ஐம்பத்தாறும் சிதைந்த நிலையில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெண்பாக்களாகும். மூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை முதலான அரிய செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. அருணோதயம் பதிப்பு நூலுக்கு மதிப்புரை வழங்கியுள்ள சென்னைப் புதுக்கல்லூரிப் பேராசிரியர் நா. பாண்டுரங்கன் முத்தொள்ளாயிரப் பாடல் ஒவ்வொன்றும் தகதகக்கும் தங்கநிலா என்று பாராட்டியுள்ளார். மேலும் கடைவாயில் அடக்கிக்கொண்டு சப்பிச் சுவைக்க வேண்டிய கற்கண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார். உலா வரும் அரசன்மீது காதல் கொண்டு தலைவி கூறும் ஒருதலைக் காமச் செய்திகளை, கைக்கிளைப் பொருண்மைச் செய்திகளைக் கொண்ட பாடல்கள் இதில் பெரும்பகுதியாக இடம்பெற்றுள்ளன. ''}}{{Featured download}}<br/> {{TOCright}} '''பாடல்கள்''' ==கடவுள் வாழ்த்து== <poem>மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப் – பின்னரும் ஆதிரையான் ஆதிரையான் என்றென்(று) அயருமால் ஊர்திரைநீர் வேலி உலகு – 1</poem> மன்னிய = நிலையாக இருக்கின்ற; ஆதிரை = திருஆதிரை என்னும் நட்சத்திரம், ஆகின்ற திரை (அலை); அயரும்= கொண்டாடும்; ஆல் = அசைநிலை; ஊர் = உலாவு :என்றும் நிலைபெற்றிருக்கும் விண்மீன்கள், நிலா (மதியம்), கனலும் கதிரவன் என்று இவற்றையெல்லாம் முதன்முதலில் படைத்த முதல்வனைப் பின்னரும் ஆதிரையான் (திருவாதிரை நாளுக்கு உரிய சிவன்) என்றும், ஆதிரையான் (ஆ திரையான் ஆகி, வளரும் கடலின் அலைத்திரையில் பள்ளிகொண்டிருக்கும் திருமால்) என்றும் உலாவும் அலைகளைக்கொண்ட கடலை வேலியாக உடைய உலகில் வாழும் மக்கள் கொண்டாடுகின்றனர். நாண்மீன்<ref>https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D&searchhws=yes</ref> = நாள்மீன் அதாவது அசுவினி முதலான 27 நட்சத்திரங்கள். == சேரன் 2-5== <poem>தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத் தேயத் திரிந்த குடுமியவே – ஆய்மலர் வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக் கண்டுலாஅம் வீதிக் கதவு – :[குடுமி = கதவு சுழலும் தண்டு; ஆய் = அழகு; உலா = திரி; கண்ணி = ஆடவர் தலைக்குச் சூடும் மாலை; வயமான் = குதிரை] : அழகிய மலர்களாற் கோத்த வண்டு மொய்த்துத் திரியும் தலைமாலையைச் சூடியவனும் குதிரை பூட்டிய தேரில் திரிபவனுமாகிய சேரனைக் கண்டு அவன் உலாவும் வீதிகளின் வீட்டுக் கதவுகளைத் தாய்மார்அடைப்ப மகளிர் மீண்டுந் திறப்ப என்று மாறிமாறி நிகழவும் தேய்ந்து உருமாறிய கொண்டிகளை (கதவு சுழலும் தண்டுகள்) உடையவாயின. : அதாவது, கோதை வண்டு மொய்க்கும் பூமாலை அணிந்துகொண்டு குதிரை பூட்டிய தேரில் உலா வந்தான். அவன் அழகைக் காண விரும்பி மகளிர் கதவைத் திறந்தனர். கண்டால் அவள் மயங்கிவிடுவாள் என்று அவர்களது தாய்மார் கதவை மூடினர். இப்படி ஒருவர் மூட, ஒருவர் திறக்க இருந்ததால் கதவு மாட்டியிருந்த கொண்டி தேய்ந்ததுதான் மிச்சம். யாருடைய எண்ணமும் நிறைவேறவில்லை. வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேல் கண்டவர் மாமையை அன்றோ இழப்பது – மாமையிற் பன்னூறு கோடி பழுதோ,என் மேனியிற் பொன்னூறி யன்ன பசப்பு - :சேரன் கோதை தாவும் போர்க்குதிரை பூட்டிய தேரில் செல்பவன். அவன் இப்போது மெதுவாகச் செல்லும் குதிரை பூட்டிய தேரில் உலா வருகிறான், அவனைக் கண்ட மகளிர் தன் மேனியிலிருந்த மாந்தளிர் போன்ற மாமை நிறத்தை இழந்துவிட்டனர். நானோ என் மேனியில் பொன்னிறம் ஊறிக்கிடப்பது போன்ற பசப்பு நிறத்தைப் பெற்றிருக்கிறேன். இது பழுதாகுமா? ஆகாது. மாமை நிறத்தைக் காட்டிலும் பொன்னிறம் பல நூறு மடங்கு எனக்கு மேன்மையானது. காரணம் அவனுக்காக ஏங்கிக் கிடைத்த பேறு ஆயிற்றே – என்கிறாள் ஒரு தலைவி. கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில் அடைத்தாள் தனிக்கதவம் அன்னை – அடைக்குமேல் ஆயிழையாய் என்னை அவன்மேல் எடுத்துரைப்பார் வாயும் அடைக்குமோ தான் - :சேரமன்னன் கோதை கடல் போன்ற படைசூழ ஊர்வலம் வருகிறான். ஆயிழைத் தோழியே! அவனைக் கண்ணாரக் காணவொட்டாமல் தாய் கதவை அடைத்துத் தாளிட்டிருக்கிறாள். ஆயின், அவனோடு என்னைச் சேர்த்துப் பேசும் ஊரார் வாயை அவளால் அடைக்கமுடியுமா? <poem> வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும் நிரைபொரு வேல்,மாந்தைக் கோவே – நிரைவளையார் தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர்தாய்மார் செங்கோலன் அல்லன் என. – 5</poem> :மன்னா! வணங்காதவரை வணங்கச் செய்து அவர்தம் மண்ணைக் கொள்ளலாம். உன் வலையில் விழுந்து கிடக்கும் பெண்ணின் அழகைக் கவரலாமா? பெண்ணின் தாய்மார் உன்னைச் செங்கோலன் அல்லன் என்று கூறுகிறார்களே! மாந்தை நகர மக்களின் கோ. மலை போல் அகன்ற மார்பினை உடையவன். நிரையாக நின்று வேலால் தாக்குபவர் மாந்தை நகர மக்கள். மகளிர் வரிசையாக வளையல் அணிந்தவர். கையின் வளையல் கோலத்தை வௌவலாமா? == சேரன் 6-10== <poem> புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை நன்னாகம் நின்றலரும் நன்னாடன் – என்னாகம் கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான் என்கொல் இவரறிந்த வாறு? – 6</poem> :மாந்தை நன்னாடனாகிய சேரன் ஒருநாள் இரவுக் கனாவில் என் மார்பகத்தைத் தடவிக்கொடுத்தான். இது இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? கண்டபடி பேசுகிறார்களே! :புன்னாகம், நன்னாகம், தென்னை ஆகியன மலரும் ஊர் மாந்தை நகரம். <poem> கடும்பனித் திங்கள்தன் கைப்போர்வை யாக நெடுங்கடை நின்றதுகொல் தோழி – நெடுஞ்சினவேல் ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக் காணிய சென்றவென் நெஞ்சு. – 7</poem> :பனி பொழியும் மாதம் இது. கையைப் போர்வையாக்கிக்கொண்டு நடுங்குகிறேன். கோதை அரசன் என் நடுக்கத்தைப் போக்குவான் என்று அவனைக் காண என் நெஞ்சு சென்றது. அவன் கோட்டை வாயிலில் அது நின்றுகொண்டிருக்கிறது போலும். என்னைப் போலவே கையைப் போர்வையாக்கிக்கொண்டு நிற்கிறது போலும். :கோதை பெருஞ்சினம் கொண்ட வேல்வீரன். பச்சைக் கல் பதித்த பூணாரமும், பூ மாலையும் அணிந்திருப்பவன். <poem> ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக் காணிய சென்று கதவடைத்தேன் – நாணிப் பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு. – 8</poem> :கோதை உலா வந்தான். அவனைக் காணவேண்டும் என்று சென்றேன். நாணம் வந்துவிட்டது. உடனே நானே கதவை அடைத்துவிட்டேன். வறுமையில் வாடுபவர் பெருஞ் செல்வம் படைத்தவர் இல்லத்துக்குச் செல்வார்கள். பின் திரும்புவார்கள். மீண்டும் செல்வார்கள். இப்படித்தான் என் நெஞ்சும் கோதை அரசனை காணப் போய் வந்துகொண்டிருக்கிறது. <poem> வருக குடநாடன் வஞ்சிக்கோ மான்என்(று) அருகலர் எல்லாம் அறிய – வருகலாம் உண்டா யிருக்கஅங்(கு) ஒண்தொடியாள் மற்(று)அவனைக் கண்டாள் ஒழிந்தாள் கலாம் – 9</poem> :கலாம் என்பது கலகலப்பு. :வருக குடநாடன் :வருக வஞ்சிக் கோமான் :என்று இவள் அருகில் இல்லாதவர்கள் எல்லாம் கலகலப்பாக இருக்கின்றனர். :ஆனால் இவள் மட்டும் அவனைக் கண்ட பின்பு கலகலப்பு ஒழிந்து காணப்படுகிறாளே! ஏங்கிக் கிடக்கிறாளே! <poem> இவன்என் நலங்கவர்ந்த கள்வன் இவன்எனது நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று – அஞ்சொலாய் செல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்குச் சொல்லும் பழியோ பெரிது. – 10</poem> :இவன் என் அழகைக் கவர்ந்துகொண்ட கள்வன், :இவன் என் நிறை நெஞ்சைக் குறை நெஞ்சு ஆக்கிய கள்வன் :என்று சேரலர் கோக்கோதை செல்லுமிடமெல்லாம் அவனைப் பழி தூற்றுகிறார்களே! :“நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை” – கலித்தொகை 133 காதலை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடக்கி வைத்திருந்தேன். என் காதலைப் பிறர் அறியும்படிக் காட்டச் செய்த கள்வன் இவன் – என்கிறாள் == சேரன் 11-15== காராட் டுதிரந்தூஉ யன்னை களனிழைத்து நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ? - போராட்டு வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதைக்கென் னெஞ்சங் களங்கொண்ட நோய். 11 இது தலைவி கூற்று. மிக்க சினத்தையும் வேலையும் கொண்டு போராடிப் பகைவரை வென்று. அவர்தம் களத்தைக் கைப்பற்றிய சேரன்பால் என் நெஞ்சே இடமாய்க்கொண்டு எழுந்த வேட்கைநோய், என் அன்னை வீட்டின்பால் ஓரிடத்தில் தெய்வத்தை எழுந்தருளச் செய்து (தெய்வத்தை ஆவாஹனம் செய்தல்) வெள்ளாட்டைப் பலியிட்டு அதன் குருதியைத் தெளித்து நீராட்டி நீங்கு. ” என்று கூறினால் நீங்கிவிடுமோ? ‘நோய் நீங்குமோ’ என இயைக்க. காராடு - வெள்ளாடு; உதிரம் - குருதி, இரத்தம்; கோதை - சேரன். மல்லல்நீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினும் சொல்லவே வேண்டும் நமகுறை - நல்ல திலகங் கிடந்த திருநுதலாய்! அஃதால் உலகங் கிடந்த இயல்பு. 12 இது தலைவி தோழிக்குக் கூறியது. சிறந்த திலகம் அணிந்த அழகிய நெற்றியையுடைய தோழியே! நீர்வளம் மிக்க மாந்தை நகரத்தாரின் பெருமை மிக்க மன்னவனாகவே இருப்பினும் அச்சேர மன்னனிடம் அஞ்சாதே சென்று என் மனக்குறையை நீ அவனிடம் சொல்லத்தான் வேண்டும். அஃதல்லவா உலகில் உயர்ந்தோரிடம் அமைந்திருக்கும் நற்பண்பாகும்? “ உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு” என்பதைத் தன் தோழிக்கு நினைவூட்டி, சேரனிடம் சென்று தன் குறையைக் கூறுமாறு தலைவி வேண்டுகிறாள். மல்லல் - வளப்பம்; மாந்தை - சேரனது நகரங்களில் ஒன்று; கடுங்கோ - சேரனது பெயர்களுள் ஒன்று, “செல்வக் கடுங்கோ வாழியாதன்” என வருதல் காண்க. நமகுறை - நம்+அ+குறை; ‘அ’ - ஆறாம் வேற்றுமை பன்மை உருபு; திலகம் - நெற்றியிலிடும் பொட்டு; திரு - அழகு; நுதல் - நெற்றி; உலகம் - உயர்ந்தோர், “உலகெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே” என்பது தொல்காப்பியம். நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய ஊரிரே என்னை உயக்கொண்மின் - போரிற் புகலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக் கழலுமென் னெஞ்சங் கிடந்து. 13 இதுவும் தலைவி கூற்று. போரை விரும்பும் கள்ளுண்டு களித்த யானைப்படைகளை யுடையவனும் பூழி நாட்டின் தலைவனாய் விளங்குகின்றவனும் ஆன சேரனிடம் யான் கொண்ட வேட்கை நோயால் என் நெஞ்சம் செயலறியாது துன்புற்று வேகின்றது; நீரும் நிழலும் தம்மையடைந்தார்க்கு எல்லாம் , வெப்பத்தைப் போக்கிக் குளிர்ச்சி தருவதுபோலப் பிறர் துன்பம் நீக்கும் மிகுந்த அருளுடைய ஊர்மக்களே! என் துயர் நீக்கி என்னை உயிர்வாழச் செய்யுங்கள். (இவ்வாறு தலைவி வேண்டுகிறாள்) புகலும் - விரும்பும், “ போரெனிற் புகலும் புனைகழல் மறவர்” எனச் சங்க இலக்கியத்துள்ளும் வந்துள்ளமை காண்க. பண்டைக்காலத்தில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரும் அதன் சுற்றுப்புறங்களும் ‘செந்தமிழ்நாடு’ என்றும் தமிழ் வழங்கிய பிற நிலப்பகுதிகள் ‘கொடுந்தமிழ்நாடுகள்’ என்றும் வழங்கப்பட்டன. அவை தென்பாண்டி நாடு, குடநாடு, குட்டநாடு, கற்காநாடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, அருவாவடதலை நாடு, சீதநாடு, மலையமான் நாடு, புனல்நாடு என்பனவாம். அவற்றுள் பூழிநாடு என்பது பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடைக்கண் அமைந்து ஒரு காலத்தில் பாண்டியர் ஆட்சியிலும் ஒரு காலத்தில் சேர மன்னர் ஆட்சியிலுமாக மாறி மாறி இருந்திருத்தல் வேண்டும். அதனால் இருவருமே “பூழியர்கோ” எனப் பாடப்பட்டுள்ளனர். “பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன்” என்பதில் பாண்டியனைக் குறித்தல் காண்க. கோதை - சேரன்; அழலும் - வேகும். அள்ளற் பழனத் தரக்காம்பல்வாயவிழ வெள்ளந்தீப் பட்டதென வெரீஇ - புள்ளினந்தங் கைச்சிறகாற் பார்ப்பொடுக்குங் கவ்வை யுடைத்தரோ நச்சிலைவேற் கோக்கோதை நாடு. 14 இது சேர நாட்டின் இயற்கைவளம் கூறுவது. நுனிக்கண் நஞ்சு தடவப்பெற்ற வேலையுடைய சேரமன்னன் நாடு, சேறு நிறைந்த வயல்களில் அரக்கு நிறத்தில் மலர்ந்து கிடக்கும் ஆம்பல் மலர்களைக் கண்ட பறவைக் கூட்டங்கள், நீரில் தீப்பற்றிக் கொண்டது என்றஞ்சித் தம் கைகளைப்போல் விளங்கும் சிறகுகளால் தம்முடைய இளங்குஞ்சுகளை அணைத்துப் பாதுகாக்க முயலும் பேரொலியையுடையதாக விளங்குகிறது. அள்ளல் - சேறு; பழனம் - வயல்; அரக்கு - செந்நிறம்; வெள்ளம் - தண்ணீர்; வெரீஇ - வெருவி, அஞ்சி; சொல்லிசையளபெடை ; புள் - பறவை; கைச்சிறகு - சிறிய சிறகு எனலுமாம்; பார்ப்பு - இளங்குஞ்சு; கவ்வை - ஆரவாரமான ஒலி. அரோ- அசை; களிகள் களிகட்கு நீட்டத்தங் கையால் களிகள் விதிர்த்திட்ட வெங்கள் - துளிகலந் தோங்கெழில் யானை மிதிப்பச் சேறாகுமே பூம்பொழில் வஞ்சி யகம். 15 இது சேர நாட்டின் தலைநகர் வஞ்சியின் வளம் கூறுவது. பூஞ்சோலைகள் நிறைந்த வஞ்சிநகரத் தெருக்கள், அத்தெருக்களில் கள்ளுண்டு களிப்பவர்கள் தம்மைப் போன்ற கட்குடியர்களுக்குத் தாம் உண்ணும் கள்ளை நீட்ட, அதனை ஏற்றுக்கொள்ளும் குடியர்கள் தம் கைகளால் தொட்டுச் சிதறிய கொடுங்கள்ளின் துளிகள் நிறைந்து, அவ்வழியாகச் செல்லும் மலைபோன்ற அழகிய யானைகள் மிதித்தலால் சேறாகிக் கிடக்கின்றன. களிகள் - கட்குடியர்கள்; விதிர்த்தல் - விரல்களை உதறுவதால் நீர்த்துளிகள் நிலத்தின்கண் சிதறச் செய்தல்; வெங்கள் - கொடிய கள்; ஓங்கெழில் யானை - மலைபோல் உயர்ந்த அழகிய யானை, ஓங்கல் - மலை; “ஓங்கலிடைத் தோன்றி உயர்ந்தோர் தொழவிளங்கி” என வருதல் காண்க. ==சேரன் 16-20 == வானிற்கு வையகம் போன்றது வானத்து மீனிற் கனையார் மறமன்னர் - வானத்து மீன்சேர் மதியனையான் விண்ணுயர் கொல்லியர் கோன்சேரன் கோதையென் பான். 16 இது சேரனின் சிறப்புக் கூறுவது. இந்நிலவுலகம் வானத்தைப் போன்றது; இவ்வுலகையாளும் மன்னர்கள் வானத்தில் விளங்கும் விண்மீன்களைப் போன்றவர்கள்; விண்ணளவு உயர்ந்த கொல்லிமலையின் தலைவனான சேரமன்னன் விண்மீன்களுக்கிடையே வீறுடன் உலாவரும் வெண்ணிலாவைப் போன்றவன். வையகம் வானைப் போன்றது எனக் கூட்டுக. ‘வானிற்கு’ என்பது உருபுமயக்கம்; மீன் - விண்மீன்; கோன் - தலைவன்; சேரன்கோதை - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பல்யானை மன்னர் படுதிறை தந்துய்ம்மின் மல்லல் நெடுமதில் வாங்குவில் பூட்டுமின் வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன் வில்லெழுதி வாழ்வார் விசும்பு. 17 இது சேரனின் வீரச்சிறப்பைக் கூறுவது. சேர மன்னவனின் தூதரின் கூற்று. பல யானைகளையுடைய மன்னர்களாக இருப்பினும் உங்கள் நாட்டு வருவாயில் சேரனுக்குரிய பங்கினை உடனே கொடுத்து உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் நகரின் வளம்மிக்க உயர்ந்த மதில்களில் சேரனது சின்னமாகிய வளைந்த வில் சின்னத்தைப் பொருத்தி வையுங்கள். வாடாத மலர்மாலைகளை அணிந்து வானில் வாழும் தேவர்களும் சேரனது வில் சின்னத்தை வானில் பொறித்து வைத்தே பாதுகாப்பாக வாழ்கின்றார்கள். திறை - சிற்றரசர்கள் பேரரசர்களுக்கு ஆண்டுதோறும் செலுத்தும் வருவாய்ப் பங்கு, இதனைக் கப்பம் என்பர். மல்லல் - வளம்; வானோர் - வானுலகில் வாழும் தேவர்கள்; வானவன் - சேர மன்னன்; விசும்பு - வானம்; விசும்பில் எழுதப்படும் வில் மழைக்காலத்தில் தோன்றும் வானவில். தற்குறிப்பேற்ற அணி. அரும்பவிழ் தார்க்கோதை அரசெறிந்த ஒள்வேல் பெரும்புலவும் செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு வண்டாடு பக்கமும் உண்டு குறுநரி கொண்டாடு பக்கமும் உண்டு. 18 இதுவும் சேர மன்னனின் வீரச்சிறப்பும் வெற்றிச்சிறப்பும் கூறுவது. அன்றலர்ந்த மலர்மாலையணிந்த சேரன் பகையரசரை வென்றுகொண்ட ஒளிபொருந்திய வேலாயுதம் ஒருபக்கம் புலால் நாற்றமும் ஒருபக்கம் குங்குமம் கலந்த சந்தனத்தின் நறுமணமும் கலந்து விளங்குகின்றது. எனவே, அவ்வேலின்கண் நறுமணத்தை நாடிச் சுரும்புகளும் வண்டுகளும் மொய்க்கின்ற பக்கமும் உண்டு; புலாலை விரும்பிச் சிறு நரிகள் கொண்டாடும் பக்கமும் உண்டு. சேரனது வேலின்கண் தோய்ந்துள்ள புலாலை நீக்குவதற்கும் நேரமின்றி வெற்றி கொண்டாடப்படுகின்றது; அக்கொண்டாட்டம் நடைபெறும்போதே மீண்டும் அவ்வேல் போர்முனைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. இடைவிடாது சேரன் போருடற்றி வென்று வருகிறான் என அவனது வீரமிகுதி கூறப்பட்டுள்ளது. ஒள்வேல் - ஒளிபடைத்த வேல். வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப் பாற எறிந்த பரிசயத்தால் - தேறாது செங்கண்மாக் கோதை சினவெங் களியானை திங்கள்மேல் நீட்டுந்தன் கை. 19 இது யானைமறம் கூறுவது. சிவந்த கண்களையுடைய பெருமைமிக்க சேர மன்னனது, சினத்தையும் கொடிய கள்ளுண்டு களித்தலையும் உடைய யானை, ஆற்றல் பொருந்திய பகையரசர்களது விரிந்த, மாலை சூட்டிய, வெண்கொற்றக் குடைகளைப் பறித்து அவை அழிந்துபடுமாறு வீசி எறிந்த பழக்கத்தால் வெண்ணிறத்தையும் வட்ட வடிவத்தையும் கொண்டு வானில் வலம்வரும் முழுநிலவையும் - நிலவு வேறு, குடை வேறு என்று தெளியாது - பகையரசரின்வெண்கொற்றக்குடையென்று கருதி அதனைப் பறித்து எறியும்பொருட்டு அந்நிலவை நோக்கித் தன் கையை நீட்டுகிறது. இது தற்குறிப்பேற்ற அணி. வீறு - பெருமை, ஆற்றல், வலிமை; சால் - சான்ற - பொருந்திய; உரிச்சொல் தொடர்; தாம்ம் - மலர்மாலை; பாற - அழியுமாறு, “பழவினைகள் பாறும்வண்ணம்” (திருவாசகம்); பரிசயம் - பரிச்சயம் - பழக்கம்; களியானை - கள்ளுண்டு களித்த யானை. அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர் எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டால் பனிக்கடலுள் பாய்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான் காய்சினதேர்க் கோதை களிறு. 20 இதுவும் யானைமறம் கூறியது. பகைவரை வருத்தும் சினத்தையும் தேரையும் உடைய எம் தயலைவனாகிய சேரமன்னனது ஆண்யானை, வலிமையுடைய பகையரசர்களது கோட்டைமதிலின் இரும்புக்கதவுகளின்மீது பாய்ந்து நொறுக்கி அக்கதவினைத் தன் தந்தங்களால் தூக்கி உயர்த்திக் கொண்டு நிற்கும் காட்சி, குளிர்ந்த கடலின் நடுவே பாய்விரித்து நிற்கும் மரக்கலம் போலத் தோன்றுகிறது . அயில் - இரும்பு; எயில் - கோட்டைமதில்; கோடு - தந்தம்; பனி - குளிர்ச்சி; நாவாய் - மரக்கலம். == சேரன் 21-32 == மரகதப்பூண் மன்னவர் தோள்வளை கீழா வயிரக் கடகக்கை வாங்கித் - துயருழந்து புண்ணுற் றழைக்கும் குறுநரித்தே பூழியனைக் கண்ணுற்று வீழ்ந்தார் களம். 21 இப்பாடல் போர்க்கள இயல்பு கூறுவது. சேரனை எதிர்த்துப் போரிட்டு மாண்டுகிடக்கும் பகைவர்களது போர்க்களம், மரகத அணிகலன்களை அணிந்த மன்னர்களின் தோள்வளைகளுக்குக் கீழாக உள்ள உறுதியான கடகம் அணிந்த கைகளைக் கடித்து அதனால் புண்பட்ட வாயோடு ஊளையிடும் சிறுநரிக் கூட்டங்களையுடையதாய் விளங்குகிறது. வயிரம் - உறுதி; நவரத்தினங்களுள் ஒன்று எனலுமாம். கடகம் - முன்கையில் அணியும் அணி; தோள்வளை - தோளில் (புயத்தில்) அணியும் வளை; வாங்குதல் - கடித்தல். கரிபரந் தெங்கும் கடுமுள்ளி பம்பி நரிபரந்து நாற்றிசையுங் கூடி - எரிபரந்த பைங்கண்மால் யானைப் பகையடுதோள் கோதையைச் செங்கண் சிவப்பித்தார் நாடு. 22 இது சேரனது பகைவர் நாட்டின் அவலம் கூறியது. பசிய கண்களையுடைய பெரிய யானைப்படைகளாகிய பகையை வென்ற தோள்களையுடைய சேரனின் சிவந்த கண்களை மேலும் சிவப்பித்த பகைவரது நாடு, நான்கு திசைகளிலும் நெருப்புப் பற்றி எரிந்து, புகையடர்ந்து, பொருள்களெல்லாம் கருகி, கூரிய முட்செடிகள் அடர்ந்து, நரிகள் நெருங்கி வாழும் பாழுங்காடாக விளங்குகிறது . முள்ளி - முட்செடி; கண்சிவப்பித்தல் - சினத்தையுண்டாக்குதல், சினத்தினால் கண் சிவத்தல் இயல்பு. வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத்து ஊரறிய லாகா கிடந்தனவே - போரின் முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான் நகையிலைவேல் காய்த்தினார் நாடு. 23 இதுவும் பகைவர்நாட்டின் அவலம் கூறியவாறு. மொட்டவிழ்ந்த மலர்மாலையணிந்தவனும் முசிறிநகர மக்களின் தலைவனும் ஆன சேரனது ஒளிபடைத்த இலைவடிவ வேலால் போரின்கண் துன்புறுத்தப்பட்ட பகைவரின் நாடு, வேரோடிய அறுகம்புல் அடர்ந்து, எங்கும் சுரைக்கொடிகள் படர்ந்து, வேளைக்கீரைகள் பூத்து, ஊர்கள் இருந்த இடங்கள் இவை என்றறிய இயலாதவாறு பாழ்பட்டுக் கிடந்தன. அறுகை - அறுகம்புல்; பம்பி - புதிராக அடர்ந்து; வேளை - காட்டுக்கீரை; முசிறி - சேர நாட்டுத் துறைமுக நகரம். . சோழன் 24 - 26 திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர் இறந்துபடின் பெரிதாம் ஏதம் - உறந்தையர்கோன் தண்ணார மார்பின் தமிழ்நர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு. 24 உறையூரின் மன்னவன் சோழன்; அவன் குளிர்ந்த மாலையணிந்த மார்பின்ன்; தமிழ்மக்களின் இறைவன்; அவன் நகர்வலம் வருகிறான். அதனைத் தங்கள் பெண்மக்கள் பார்க்க நேரின், அவன்பால் வேட்கைகொண்டு துன்புறுவர் எனக் கருதிய தாய்மார்கள் தந்தம் வீடுகளின் வாயிற்கதவுகளை அடைத்து வைக்கின்றனர். “நகர்வலத்தைக் காணவியலாத நங்கையர் ஏக்கத்தால் இறந்துவிடவும் கூடும். அவ்வாறாயின், அதனால் ஏற்படும் துன்பம் மிகப் பெரிதாம். எனவே, மங்கையர் சோழனைக் கண்ணாரக் கண்டு களிக்குமாறு கதவுகளைத் திறந்துவிடுங்கள்; அவ்வாறு காண்பதால் ஏதேனும் தீமை நேருமாயின் அதைப்பற்றிப் பின்னர் சிந்திக்கலாம்”, என்று சிலர் கூறுகின்றனர். ( சோழனது நகர்வலத்தைக் காணவியலாமையால் உயிரை இழப்பதைக் காட்டிலும் அதனைக் கண்டு மையல் கொள்வதால் ஏற்படும் தீமை பெரிதன்று, என்பது கருத்து.) ஏதம் - துன்பம். குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை வதுவை பெறுகென்றாள் அன்னை - அதுபோய் விளைந்தவா இன்று! வியன்கானல் வெண்தேர்த் துளங்குநீர் மாமருட்டி யற்று. 25 இப்பாடல் கைக்கிளை. என் அன்னை, நான் மழலை பேசும் சிறுமியாக இருந்த காலத்தில் சோழமன்னனை மணந்துகொள்ளும் பேற்றினை நான் பெறவேண்டும் என்று வாழ்த்தினாள். நான் மணப்பருவத்தையடைந்துள்ள இன்று, அக்கூற்றெல்லாம் மாறிப்போய் அவனைக் கண்ணால் காண்டலும் ஆகாது என்று வாயிற்கதவுகளை அடைத்து வைக்கிறாள். கடுங்கோடையில் தண்ணீர்போல் தோற்றமளித்து அருகில் சென்று பார்க்கும்போது மறைந்துவிடுவதாய் நீர்வேட்கை கொண்ட விலங்குகளை மயங்கச் செய்கின்ற பேய்த்தேர் போலாயிற்றே என் ஆசை! இப்பாடல் உவமையணி. குதலைப் பருவம் - மழலைமொழி பேசும் அறியாப் பருவம்; கோழிக்கோமான் - உறையூரின் மன்னனாகிய சோழன், ‘கோழி’ என்பது சோழர் தலைநகரமாகிய உறையூர்க்கு வழங்கிய மற்றொரு பெயர் ; வதுவை - திருமணம்; வியன் - பெரிய; கானல் - கோடைக்காலம் , பாலைநிலம் ; வெண்தேர் - பேய்த்தேர், கானல்நீர்; மா - விலங்கு, கால்நடைகள்; மருட்டுதல் - மயங்கச் செய்தல்; அற்று - போன்றது; ஏ - அசைச்சொல். சுடரிலைவேற் சோழன்தன் பாடல மேறிப் படர்தந்தான் பைந்தொடியார் காணத் - தொடர்புடைய நீர்வலை யிற்கயல் போல்பிற ழும்மேதம் சாலேக வாயில்தொறுங் கண். 26 ஒளிபடைத்த வேலையேந்திய சோழன் தன்பாடலம் என்னும் குதிரையின் மேலேறிப் பசிய வளையலணிந்த மகளிரும் காணுமாறு நகர்வலம் வந்தான் ; தத்தம் வீடுகள்தோறும். வலை பொருத்தப்பெற்ற சாளரங்களின்பின்னிருந்து அவனைக் காணும் மகளிரின் கண்கள், நீர்வலையில் மாட்டிக்கொண்டு பிறழ்கின்ற மீன்களைப் போலத் தோன்றுகின்றன. இதுவும் உவமை. பாடலம் - சோழனது குதிரையின் பெயர்; (பாண்டியனது குதிரை ‘கனவட்டம்’ என்றும் சேரனது குதிரை ‘கோரம்’ என்றும் வழங்கப்பெற்றன.) தொடி - வளையல்; கயல் - மீன்; சாலேகம் - சாளரம் , காலதர்; ‘பிறழுமே’ என்பது ‘பிறழும்மே’ என விரிந்துவந்தது விரித்தல் விகாரம். (அறுவகைச்செய்யுள் விகாரங்களுள் ஒன்று.) ஈற்றடி இரண்டாம் சீர் “வாயிறொறும்” எனப்புணர்த்துப் படிக்க, சீரும் தளையும் சிதையா. சோழன் 27-35== அன்னையுங் கோல்கொண் டலைக்கு மயலாரு மென்னை யழியுஞ்சொல் சொல்லுவர் - நுண்ணிலைய தெங்குண்ட தேரை படுவழிப் பட்டேன்யான் திண்டேர் வளவன் திறத்து.. 27 என் தாயும் என்னைக் கோலால் அடித்துத் துன்புறுத்துகிறாள்; அக்கம்பக்கத்தில் வாழ்வோரும் என் மானம் அழியுமாறு பழித்துப் பேசுகின்றனர்; வலிய தேரையுடைய சோழனிடம் மையல் கொண்டதால் நான், தெங்குண்ட தேரைபோலப் பழிப்பட்டேன். இது தலைவி கூற்று. அலைத்தல் - துன்புறுத்தல்; “தெங்குண்டதேரை” என்பது பழமொழி; தேங்காயில் நோய் ஏற்பட தேரை காரணமன்று, எனக்கு மையல்நோய் ஏற்பட நான் காரணம் ஆகேன், ( சோழனே காரணம்) ஆனால் உலகினர் தேரையைப் பழிப்பதுபோல என்னையும் பழிக்கின்றனர் எனத் தலைவி வருந்திக் கூறுகிறாள். தெங்கு - தேங்காய் . அலங்குதார்ச் செம்பியன் ஆடெழில்தோள் நோக்கி விலங்கியான் வேண்டா வெனினும் - நலந்தொலைந்து பீர்மேற் கொளலுற்ற பேதையர்க் கென்வாய்ச்சொல் நீர்மே லெழுந்த நெருப்பு. 28 இப்பாடல் செவிலித்தாய் கூற்று. தோளில் ஆடும் மாலையணிந்து செம்பியன் நகர்வலம் வந்தான்; அவனைச் சென்று காணவேண்டாம் என்று இளமங்கையரைச் செவிலித்தாய் தடுத்தாள்; அதனை மீறிச் சென்று, செம்பியனது வெற்றியும் அழகும் பொருந்திய தோள்களை நோக்கிய மகளிர் தம் நாணும் நிறையும் முதலிய நலங்களையும் தொலைத்து மேனியில் பசலை நோயையும் பெற்றுத் துன்புற்றனர். இப்பேதைப் பெண்களுக்கு என் வாய்ச்சொற்கள் நீர்மேல் பற்றிய நெருப்புப் போலப் பயன்படாது வீணாயிற்றே என்று செவிலித்தாய் வருந்திக் கூறுகிறாள். தார் - மலர்மாலை; செம்பியன் - சோழன்; ஆடு - வெற்றி; எழில் - அழகு; விலங்கி - வேறுபட்டு; பீர் - பசலை, மையல்நோயால் மகளிர் மேனியில் தோன்றும் நிறமாற்றம்; ‘ நீர்மேல் எழுந்த நெருப்பு ‘ என்பது பழமொழி. உவமையணி. நாணொருபால் வாங்க நலனொருபா லுள்நெகிழ்ப்பக் காமருதோள் கிள்ளிக்கென் கண்கவற்ற - யாமத் திருதலைக் கொள்ளியி னுள்ளெறும்பு போல திரிதரும் பேருமென் நெஞ்சு. 29 இது தலைவி கூற்று. கண்டார்க்கு விருப்பம் உண்டாக்கும் தோளையுடைய சோழனைக் காணவேண்டும்என என்கண்கள் கவலை கொள்ள, மகளிர்க்கேயுரிய நாணம் அவனைக் காணவிடாமல் என்னைத் தடுக்க, பெண்மைநலம் என்னுள்ளத்தை நெகிழச்செய்ய, இருதலைக் கொள்ளியின் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் சிற்றெறும்புபோல இந்த இரவுப்பொழுதில் என்னெஞ்சம் அவனைக் காணச் செல்வதும் காணாமல் திரும்புவதுமாகத் துன்புறுகிறது. ‘இருதலைக் கொள்ளி எறும்பு’ என்பது பழமொழி. கிள்ளியைக் காணவேண்டும் எனும் ஆசையாகிய எறும்பு, நாணம் ஒருபக்கமும் பெண்மைநலம் ஒருபக்கமும் தீப்பிழம்பாக நின்று தடுப்பதால் அவற்றினிடையே சிக்கிக்கொண்டு தவிக்கிறது; உவமையணி . கிள்ளி - சோழன். ஊட லெனவொன்று தோன்றி அவருறூஉங் கூட லிழந்தேன் கொடியன்னாய்! - நீடெங்கின் பாளையிற் றேன்தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக் காளையைக் கண்படையுட் பெற்று. 30 இதுவும் தலைவி கூற்று. பூங்கொடிபோன்ற என் தோழியே! உயரமான தென்னையின் பாளைகளில் தேனடைகள் உருவாகும் நீர்வளமிக்க சோழநாட்டின் தலைவனை நான் கனவின்கண் காணப்பெற்றேன்; அப்போது தோன்றிய ஊடலால் அவன்தோளையணைத்து மகிழும் கூடலையிழந்து விட்டேனே! கண்படை - கனவு; காளை - சோழன், உவமையாகுபெயர்; கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல்போனதுபோலக் கனவில்கண்ட காளையை அக்கனவில்கூடக் கூட இயலாமல் உடல் பிரித்துவிட்டதே என்று தலைவி வருந்திக் கூறியுள்ளாள். புலவி புறக்கொடுப்பன் புல்லிடின் நாண்நிற்பன் கலவி களிமயங்கிக் காணேன் - நிலவியசீர் மண்ணாளுஞ் செங்கோல் வளவனை யானிதன்றோ கண்ணாரக் கண்டறியா வாறு. 31 இதுவும் தலைவி கூற்று. சோழநாட்டைச் சிறப்போடு செங்கோலாட்சி செய்யும் சோழனை, நான் இன்றுவரை ஒருபொழுதும் கண்ணாரக் கண்டதில்லை ; ஏனெனில் , அவனோடு புலவி கொள்ளும்போது அவனுக்கு என்முதுகைக் காட்டித் திரும்பி நிற்பேன்; அவன் என் புலவியை நீக்க என்னைத் தழுவும்போது நாணத்தால் கண்களை மூடிக்கொள்வேன்; அவன் என்னோடு கலந்து உறவு கொள்ளும்போதோ மகிழ்ச்சியில் மயங்கிக் கிடப்பேன். புலவி - ஊடல்; புறம் - முதுகு; புல்லுதல் - கட்டியணைத்தல்; கலவி - கூடுதல் ; களி - மகிழ்ச்சி வளவன் - சோழன். கனவினுள் காண்கொடாக் கண்ணுங் கலந்த நனவினுள் விலக்கு நாணும் - இனவங்கம் பொங்கோதம் போழும் புகார்ப் பெருமானார் செங்கோல் வடுப்படுப்பச் சென்று. 32 இதுவும் தலைவி கூற்று. பொங்கிவரும் கடல்நீரைக் கிழித்துக்கொண்டு பலவகையான கப்பல்கள் வந்துசெல்லும் துறைமுகம் புகார் நகரம்; அதன் தலைவனாய்ச் செங்கோலாட்சி செய்பவன் சோழன்; அவனைக் கனவிலும் காணவிடாமல் உறங்காதிருக்கும் என் கண்களும் அவனோடு கலந்திருக்கும் நினைவுப்பொழுதில் முழுமையாய்க் கலந்திருக்கும் வாய்ப்பைக் கெடுக்கும் என் நாணமும் சென்று அவன் செங்கோலாட்சிக்குக் கறை (களங்கம்) ஏற்படுத்துகின்றன. வங்கம் -மரக்கலம் / கப்பல் ; ஓதம் - வெள்ளம் /கடல்அலை; போழும் - பிளந்துகொண்டு செல்லும்; புகார் - காவிரிப்பூம்பட்டினம், சோழர் துறைமுகம் ; வடுகர் - குற்றம், களங்கம். == சோழன் 36-40== ===36=== <poem>கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம் தண்டப் படுவ தடமென்தோள் – கண்டாய் உலாஅ மறுகில் உறையூர் வளவற் கெலாஅ முறைகிடந்த வாறு. – 36</poem> ::கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம் தண்டப் படுவ தடமென்தோள் கண்டாய் உலாஅ மறுகில் உறையூர் வளவற்கு எலாஅம் முறை கிடந்தவாறு. ::உறையூர் அரசன் வளவன். அவனைப் பார்த்தது என் மையுண்ட கண். அவனோடு கலந்தது என் நெஞ்சம். தண்டனை பெற்றதோ என் தோள் (தோள் வாடி என் வளையல்கள் கழன்றோடுகின்றன) வளவன் முறை செய்து நீதி வழங்குவது இப்படித்தான் முறைமாறிக் கிடக்கிறது. ===37=== <poem>என்னெஞ்சு நாணு நலனும் இவையெல்லாம் மன்னன் புனனாடன் வௌவினான் – என்னே அரவகல் அல்குலாய் ஆறில் ஒன் றன்றோ புரவலர் கொள்ளும் பொருள். – 37</poem> ::என் நெஞ்சு நாணும் நலனும் இவையெல்லாம் மன்னன் புனல் நாடன் வௌவினான் \ என்னே அரவு அகல் அல்குலாய் ஆறில் ஒன்று அன்றோ புரவலர் கொள்ளும் பொருள். ::என்னுடைய எண்ணம், நாணம், நலம் ஆகிய இவை எல்லாவற்றையும் காவிரி பாயும் புனல் நாட்டை ஆளும் சோழன் பிடுங்கிக்கொண்டான். பாம்புப்படம் போல விரிந்திருக்கும் அல்குல் கொண்ட என் தோழியே! வருவாயில் ஆறில் ஒரு பங்கைத்தானே காப்பாற்றும் மன்னவன் வரியாக வாங்கிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் பிடுங்கிக்கொள்ளலாமா? ===38=== <poem>தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி யிளவளவன் மண்ணகங் காவலனே யென்பரால் - மண்ணகங் காவலனே யானக்காற் காவானோ மாலைவாய்க் கோவலர்வாய் வைத்த குழல். – 38</poem> ::தெள் நீர் நறு மலர்த் தார்ச் சென்னி இள வளவன் மண்ணகம் காவலனே என்பரால் \ மண்ணகம் காவலனே ஆனக்கால் காவானோ மாலைவாய்க் கோவலர் வாய் வைத்த குழல். ::சென்னி இளவளவன் கழுத்திலே மாலை அணிந்தவன். அது தெளிந்த நீரிலே பூக்கும் மணம் மிக்க பூவாலானது. இந்த வளவனை மண்ணுலகைக் காக்கும் காவலன் என்கின்றனர். உண்மையில் அவன் மண்ணுலகைக் காக்கும் காவலன் ஆனால், மாலைக்காலத்தில் ஆனிரைகளுடன் இல்லம் திரும்பும் கோவலர் ஊதும் குழல் என் தனிமையைத் துன்புறுத்துகிறதே அதைத் தடுத்திருக்க வேண்டாமா? ===39=== <poem>அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி முறைசெயும் என்பரால் தோழி – இறையிறந்த அங்கோல் அணிவளையே சொல்லாதோ மற்றவன் செங்கோன்மை செந்நின்ற வாறு. – 39</poem> ::அறை பறை யானை அலங்கு தார்க் கிள்ளி முறைசெயும் என்பரால் தோழி \ இறை இறந்த அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன் செங்கோன்மை செம்மை நின்றவாறு. ::கழுத்தில் மாலை அணிந்துகொண்டு கிள்ளி பறை முழக்கத்துடன் யானைமேல் வருகிறான். அவனைப் பார்த்ததும் என் தோளிலிருந்த வளையல்கள் நழுவிக் கீழே இறங்குகின்றன. தோழி! கிள்ளி நீதி தவறாமல் முறை செய்பவன் என்கின்றர். என் தோளிலிருந்து நழுவும் வளையல் அவன் எத்த அளவில் செங்கோல் செலுத்துகிறான் என்பதைச் சொல்கிறதே! ===40=== <poem>நீள்நீலத் தார்வளவன் நின்மேலான் ஆகவும் நாணிமை யின்றி நடத்தியால் – நீள்நிலம் கண்தன்மை கொண்டலரும் காவிரி நீர்நாட்டுப் பெண்தன்மை இல்லை பிடி. – 40</poem> ::நீள் நீலத் தார் வளவன் நின்மேலான் ஆகவும் நாணிமை இன்றி நடத்தியால் நீள் நிலம் கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர்நாட்டுப் பெண்தன்மை இல்லை பிடி. ::அடி! பெண்யானையே! வளவன் ஒரு ஆண். அவன் உன்மேல் இருக்கிறான். அவனைச் சுமந்துகொண்டு, வெட்கம் இல்லாமல் வருகிறாயே! காவிரி நாட்டுப் பெண்-தண்மை உனக்கு இல்லை. நீல மலரால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலையை வளவன் அணிந்துகொண்டு வருகிறான். கண்ணோட்டம் கொண்டு உலகைக் காத்து மலரும் நாடு காவிரியாறு பாயும் நாடு. ==சோழன் 41-45== ===41=== <poem>செங்கால் மடநாராய் தென்னுறந்தை சேறியேல் நின்கால்மேல் வைப்பன்என் கையிரண்டும் – நன்பால் கரைஉரிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற் குரையாயோ யானுற்ற நோய். – 41</poem> [மடம் = சேறி = செல்லுதி, செல்கிறாய், செல்வாய்; சேறியேல் = செல்வாயேல், செல்வாயானால்; வைப்பந் = வைப்பேன், வைக்கிறேன்; பால் = இடம்; உரிஞ்சு = தேய்] :: பொருள்கோள்: செங்கால் மடநாராய் தென் உறந்தை சேறியேல், நின் கால்மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால் கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரிநீர் நாடற்கு யான் உற்ற நோய் உரையாயோ? ::சிவந்த கால்களையும், கள்ளம் கபடமற்ற தன்மையையும் உடைய நாரையே! நீ பறந்து செல்லும்போது தென்பால் உள்ள உறையூருக்குச் செல்வாயேயானால், உன் கால்மேல் என் கைகள் இரண்டையும் வைக்கிறேன். நல்ல இடங்களையுடைய ஆற்றங்கரைகளையே தேய்த்து மீன்கள் துள்ளும் காவிரிநீர் கொண்ட சோழனாகிய காவிரி நாடனுக்கு, அவன்மேற்கொண்ட காதலால் நானுற்ற துயரைச் சொல்லமாட்டாயா?. ===42=== <poem>வரக்கண்டு நாணாதே வல்லையா னெஞ்சே மரக்கண்ணோ மண்ஆள்வார் கண்ணென் – றிரக்கண்டாய் வாள்உழுவை வெல்கொடியான் வண்புனல்நீர் நாடற்கென் தோள்அழுவம் தோன்றத் தொழுது. – 42</poem> ::வரக்கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே மரக்கண்ணோ மண்ஆள்வார் கண் என்று இரக்கண்டாய் வாள் உழுவை வெல்கொடியான் வண் புனல்நீர் நாடற்கு என் தோள் அழுவம் தோன்றத் தொழுது. ::வெல்லும் புலிக்கொடியான், வளமையான ஆற்றுப்புனல் பாயும் நாடன், சோழன் உலா வரக் கண்டு, பெண்மை உணர்வோடு நாணியிருக்க உன்னால் முடியுமா? முடியாதே. அதனால், நெஞ்சே! நாணாமல் அவனைக் கண்டு இர. உன் கண் என்ன மரத்தாலான கண்ணா (இரக்கம் இல்லாத கண்ணா) என்று கேட்டு இர (கண்ணோட்டத்துடன் இரக்கம் காட்டும்படிப் பிச்சை கேள்) | வாள் உழுவை = கண்ணைக் கவரும் ஒளி மிக்க புலி. ===43=== <poem>பேயோ பெருந்தண் பனிவாடாய் பெண்பிறந்தா ரேயோ உனக்கிங் கிறைக்குடிகள் – நீயோ களிபடுமால் யானைக் கடுமான்தேர்க் கிள்ளி அளியிடை அற்றம்பார்ப் பாய். – 43</poem> ::பேயோ பெருந்தண் பனிவாடாய் பெண் பிறந்தாரேயோ உனக்கு இங்கு இறைக் குடிகள் நீயோ களி படு மால் யானைக் கடுமான் தேர்க் கிள்ளி அளி இடை அற்றம் பார்ப்பாய். ::பனிக் காலத்தில் பெருங் குளிருடன் வீசும் வாடைக் காற்றே! நீ என்ன பேயோ? கிள்ளி எனக்கு அளி செய்கிறான். அவன் எப்போது அரவணைப்பிலிருந்து விலகுவான் என்று பார்த்து வீசி என்னை ஆட்டிவைக்கிறாய். சோழனை இறைவனாகக் கொண்ட குடிமக்கள் மீது வீசுகிறாய். | கிள்ளி களிப்பூட்டும் யானை மீதும் வருகிறான். குதிரை பூட்டிய தேரிலும் வருகிறான். ===44=== <poem>நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத் தாமரையும் நீலமுந் தைவந் – தியாமத்து வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய் பண்டன்று பட்டினங் காப்பு. – 44</poem> ::நாம நெடு வேல் நலங்கிள்ளி சோணாட்டுத் தாமரையும் நீலமும் தைவந்து யாமத்து வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய் பண்டு அன்று பட்டினம் காப்பு. ::நலங்கிள்ளி அச்சம் தரும் வேலை உடையவன். அவனது சோழநாட்டில் வண்டு ஒன்று நள்ளிரவில் தாமரையிலும், நீல மலரிலும் தேனை உண்டு தடவிக்கொடுத்துவிட்டு வருகிறது. குளிரும் வாடைக்காற்றே! நலங்கிள்ளி காவிரிப்பூம் பட்டினத்தைக் காப்பாற்றும் செயல் பண்டுபோல் எல்லாருக்கும் பாதுகாப்புத் தருவதாக இல்லை. எனவே நீ இங்கு வரவேண்டாம். | வாடைக்காற்று வீசாமல் இருக்கவேண்டும் என்று நயமாக வேண்டுகிறாள். ===45=== <poem>தானைகொண் டோடுவ தாயதன் செங்கோன்மை சேனை யறியக் கிளவேனோ – யானை பிடிவீசும் வண்தடக்கைப் பெய்தண்தார்க் கிள்ளி நெடுவீதி நேர்பட்ட போது. – 45</poem> ::தானை கொண்டு ஓடுவதாய தன் செங்கோன்மை சேனை அறியக் கிளவேனோ யானை பிடி வீசும் வண் தடக்கைப் பெய் தண்தார்க் கிள்ளி நெடு வீதி நேர்பட்ட போது. ::ஆண் பெண் யானைகளை வளமாகத் தரும் கொடையாளி கிள்ளி. மாலை சூடிய அந்தக் கிள்ளி உலா வரும்வோது அவனை நீண்ட வீதியில் கண்டதும் என் சேலை நழுவியது. இப்படி நழுவச் செய்துவிட்டு அவன் ஓடும் செங்கோன்மையை அவன் படைகளெல்லாம் அறியுமாறு எடுத்துச் சொல்லாமல் இருப்போனா? ==சோழன் 46-50== ===46=== <poem>காவல் உழவர் களத்தகத்துப் போர்ஏறி நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை – காவலன்தன் கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே நல்யானைக் கோக்கிள்ளி நாடு. – 46</poem> ::காவல் உழவர் களத்தகத்துப் போர் ஏறி நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன் தன் கொல் யானை மேல் இருந்து கூற்று இசைத்தால் போலுமே நல் யானைக் கோக்கிள்ளி நாடு. ::உலகைக் காப்பாற்றும் உழவர்கள் தம் நெற்களத்தில் உள்ள போரின்மீது ஏறி “நாவலோ” என்று காலை நேரத்தில் ஓசை எழுப்பினால் எப்படியோ அப்படித்தான் இருக்கிறது, நாட்டைக் காப்பாற்றும் மன்னவன் கொல்லும் போர்யானைமேல் (எருமைக் கடா) இருந்துகொண்டு கூற்றுவன் “வாருங்கள்” என்று இசைமுழக்கம் செய்வது. இதுதான் இன்றைய கிள்ளிநாட்டு ஆட்சி நிலைமை. \ தன்னிடம் நெல் இருக்கிறது என்று கூவவேண்டிய உழவன் நாவல்பழம் பறிக்க வாருங்கள் என்று கூவும் கொடுமை கிள்ளியின் நாட்டில் இருக்கிறது. \ காப்பாற்ற வேண்டிய கிள்ளி, கொல்கிறேன் வாருங்கள் என்பவன் போல் உலா வருகிறான். ===47=== <poem>மாலை விலைபகர்வார் கிள்ளி களைந்தபூச் சால மருவியதோர் தன்மைத்தால் – காலையே வில்பயில் வானகம் போலுமே வெல்வளவன் பொற்பார் உறந்தை அகம். – 47</poem> ::மாலை விலைபகர்வார் கிள்ளி களைந்த பூச் சால மருவியது ஓர் தன்மைத்தால் காலையே வில் பயில் வானகம் போலுமே வெல் வளவன் பொன் பார் உறந்தை அகம். ::கிள்ளி காலையில் பூமாலை சூடிக்கொண்டு உலா வருகிறான். காலையிலேயே வானவில் போட்டுக்கொண்டிருக்கும் வானம் போல் அவன் தோன்றுகிறான். மாலையில் அவன் கழற்றி எறிந்த பூவை விலைக்கு விற்கின்றனர். அவன் மலையை அதிகம் பேர் விரும்பினார்கள் என்பதற்காக விற்கின்றனர். மாலையில் விற்கும் வெற்று மாலையால் என்ன பயன்? – அவள் கேட்கிறாள். \ பொற்பார் உறந்தை = பொன் விளையும் மண் கொண்ட உறையூர் ===48=== <poem>மந்தரங் காம்பாய் மணிவிசும் போலையாத் திங்கள் அதற்கோர் திலதமா எங்கணும் முற்றுநீர் வைய முழுதும் நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை. 48</poem> ::மந்தரம் காம்பாய் மணி விசும்பு ஓலையாத் திங்கள் அதற்கு ஓர் திலதமா எங்கணும் முற்று நீர் வையம் முழுதும் நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை. ::கிள்ளியின் வெண்கொற்றக் குடைக்கு மந்தர-மலை காம்பு. நீலநிற வானம் குடையில் விரிந்திருக்கும் ஓலை. வானத்து நிலா அந்தக் குடையின் உள்முகட்டில் இருக்கும் நெற்றிப்பொட்டு. இப்படி இருந்துகொண்டு உலகம் முழுவதற்கும் நிழல் தந்து அந்தக் குடை காப்பாற்றுகிறது. அது சரி. என்னை மட்டும் ஏங்கவைக்கிறது. இது கொடுமை. ===49=== <poem>அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார் – எந்தை இலங்கிலைவேற் கிள்ளி இரேவதிநாள் என்னோ சிலம்பிதன் கூடிழந்த வாறு. – 49</poem> ::அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ சிலம்பி தன் கூடு இழந்தவாறு. ::கிள்ளி இரேவதி நாளில் பிறந்தான். அவனுக்குப் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம். அன்று அந்தணர்கள் பசு, பொன் ஆகியவற்றைத் தானமாகப் பெற்றனர். நாவண்மை உடைய பாவலர் மலை போல் உயர்ந்த களிறு வழங்கப்பபட்டு அதில் ஊர்ந்தனர். ஆனால் சிலந்திப் பூச்சி மட்டும் தன் கூட்டை இழந்தது. அது ஏன்? இது முறை ஆகுமா? | (பொங்கல் நாள் அன்று பழம்பொருள்களைத் துடைத்துத் தூய்மை செய்வது போல் மன்னன் பிறந்த நாளிலும் அரண்மனை ஒட்டடை துடைத்துத் தூய்மை செய்யப்பட்டது. அப்போது சிலந்திப் பூச்சி தன் கூட்டை இழந்தது) | பிறந்த நாளில் கிள்ளி உலா வந்தான். அவனைக் கண்ட சிலம்பி என்னும் பெண் மட்டும் தன் கூடாகிய உடல் நலத்தை இழந்தாள். இதுவா அவன் தரும் பிறந்தநாள் கொடை? – அவள் வினா. ===50=== <poem>நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து முன்றந்த மன்னர் முடிதாக்க – இன்றுந் திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே பெருந்தண் உறந்தையார் கோ. – 50</poem> ::நின்றீமின் மன்னீர் நெருநல் திறை கொணர்ந்து முன் தந்த மன்னர் முடி தாக்க இன்றும் திருந்து அடி புண்ணாகிச் செவ்வி இலனே பெரும் தண் உறந்தையார் கோ. ::மன்னர்களே! சற்றே நில்லுங்கள். நேற்று, திறை தந்த மன்னர்கள் வணங்கியபோது அவர்களின் முடி தாக்கி உறையூர் மன்னன் காலடி புண்ணாகிக் கிடக்கிறது. அதனால் இன்று அவன் காட்சி தரவில்லை. அவன் பெருமையும் ஈரமும் கொண்டவன். ==சோழன் 51-56== ===51=== <poem>கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர் முடியிடறித் தேய்ந்த நகமும் – பிடிமுன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே கல்லார்தோட் கிள்ளி களிறு. – 51</poem> ::கொடி மதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர் முடி இடறித் தேய்ந்த நகமும் பிடி முன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே கல் ஆர் தோள் கிள்ளி களிறு. ::கல்மலை போன்ற தோள் கொண்டவன் கிள்ளி. அவனது ஊர்தி ஆண்யானை. அது அவனது பறைவரின் கோட்டை மதில்களைப் பாய்ந்து இடித்தது. அதனால் அதன் தந்தங்களின் நுனி முறிந்து போயிற்று. போரில் விழுந்த மன்னர்களின் தலைமுடியை (கிரீடத்தை) இடறி அதன் கால்நகங்கள் தேய்ந்து போயின. இவற்றைத் தன் பெண்யானைக்குக் காட்டுவதற்கு நாணிக் கட்டுத்தறியின் புறக்கடையிலேயை அந்த ஆண்யானை தயங்கிக்கொண்டு நின்றது. ===52=== <poem>கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால் தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் – பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமேநங் கோழியர்கோக் கிள்ளி களிறு. – 52</poem> ::கச்சி ஒருகால் மிதியா ஒரு காலால் தத்து நீர்த் தண் உஞ்சை தான் மிதியாப் பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமே நம் கோழியர் கோக் கிள்ளி களிறு. ::கிள்ளி அரசன், கோழி என்னும் உறையூர் மக்களின் தலைவன். அவன் போரிட்டபோது அதன் நான்கு கால்களும் நான்கு இடங்களை மிதித்துக்கொண்டிருந்தது. உறையூர், காஞ்சிபுரம், உஞ்சை (உஜ்ஜயினி), ஈழம் (இலங்கை) ஆகியவை அந்த ஊர்கள். ===53=== <poem>பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர நாற்றிசையும் ஓடி நரிகதிப்ப – ஆற்ற அலங்கலம் பேய்மகளிர் ஆட வருமே இலங்கிலைவேற் கிள்ளி களிறு. – 53</poem> ::பாறு இனம் ஆர்ப்பப் பருந்து வழிப் படர நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற அலங்கல் அம் பேய் மகளிர் ஆட வருமே இலங்கு இலை வேல் கிள்ளி களிறு. ::இலை உருவில் ஒளிறும் வேலேந்திய கிள்ளியின் களிறு போர்க்களத்தில் பெருமித நடை போட்டுக்கொண்டு வரும். அப்போது புலால் உண்ணும் பறவைகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும். பருந்துகள் அந்த ஆண்யானையைப் பின்தொடரும். நரிகள் நாலாப்பக்கமும் ஓடித் திரியும். அணிகலன்களைப் பெருமையாக ஆட்டிக்கொண்டு பேய்மகளிர் ஆடுவர். காரணம் எங்கும் பிணம். பிணங்களுக்கு இடையே அந்தக் களிறு வரும். ===54=== <poem>முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத் தடித்த குடர்திரியா மாட்டி – எடுத்தெடுத்துப் பேஎய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன் சேஎய் பொருத களம். - 54</poem> ::முடித்தலை வெள்ளோட்டு மூளை நெய்யாகத் தடித்த குடர் திரியா மாட்டி எடுத்து எடுத்துப் பேஎய் விளக்கு அயரும் பெற்றித்தே செம்பியன் சேஎய் பொருத களம். ::செம்பியன் போரிட்ட களத்தில் பேய் விளக்கு வைத்திருந்தது. மன்னரின் தலைமண்டை விளக்கின் ஓடு. அவர்களின் மூளை நெய். அவர்களின் குடல் திரி. இப்படிப் பேய்கள் விளக்கு வைத்து (கார்த்திகை) விழாக் கொண்டாடின. ===55=== <poem>இரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற வரியிளஞ் செங்காற் குழவி – அரையிரவில் ஊமந்தா ராட்ட உறங்கிற்றே செம்பியன் தன் நாமம்பா ராட்டாதார் நாடு. – 55</poem> ::இரியல் மகளிர் இலை ஞெமலுள் ஈன்ற வரி இளம் செங்கால் குழவி அரை இரவில் ஊமம் தாராட்ட உறங்கிற்றே செம்பியன் தன் நாமம் பாராட்டாதார் நாடு. – 55 ::செம்பியனின் பெயரைப் பாராட்டாவர் நாட்டில் உறக்கம். வீட்டை விட்டு ஓடிப் பிழைத்திருக்கும் மகளிர் உதிர்ந்து கிடக்கும் இலைச் சறுகுகளில் குழந்தைகளைப் பெற்றனர். நள்ளிரவில் கோட்டான் அந்தக் குழந்தைகளுக்குத் தாலாட்டுப் பாடியது. இப்படி அவலநிலை. ===56=== <poem>அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர் எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டால் – பனிக்கடலுள் பாய்ந்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான் காய்சினவேல் கிள்ளி களிறு. 56 </poem> ::அயில் கதவம் பாய்ந்து உழக்கி ஆற்றல் சால் மன்னர் எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனிக் கடலுள் பாய்ந்து ஓய்ந்த நாவாய் போல் தோன்றுமே எங்கோமான் காய் சின வேல் கிள்ளி களிறு. ::கிள்ளியின் யானை கடலில் செல்லும் நாவாய்க் கப்பல் போலத் தோன்றுகிறது. எப்படி? நாவாய் கடலில் பாயும். களிறு வேல் தாங்கிய கோட்டைக் கதவுகளின் மீது பாய்ந்து அழிக்கிறது. நாவாய் பாய்மரம் கொண்டிருக்கும். களிறு கோட்டைக் கதவைப் பெயர்த்துத் தூக்கிக் கொம்பில் வைத்துக்கொண்டு வருகிறது. அதனால் களிறு கப்பல் போல் தோன்றுகிறது. (குறிப்பு: இதே பாடல் சேரனைப் பற்றிய பாடல்களுள் 20ஆம்எண் பாடலாகவும் அமைந்துள்ளது. அதில் ஈற்றடி “காய்சினத்தேர்க் கோதை களிறு” எனவும் இதில் “காய்சினவேற் கிள்ளி களிறு” எனவும் உள்ளன. இஃது ஆயவுக்குரியது. இப்பாடலின் அடி 3இன் முதற்சீர் “பாய்தோய்ந்த” என்றிருத்தல் சிறப்பு; இப்பாடலைப் பதிவு செய்து உரையெழுதியவர் “பாய்ந்தோய்ந்து” என்று பாடங்கொண்டுள்ளார் .)-சேரன். ==பாண்டியன் 57-60 == ===57=== <poem>காப்படங்கென் றன்னை கடிமனை யிற்செறித்து யாப்படங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன் நன்னலம் காணக் கதவம் துளைதொட்டார்க் கென்னைகொல் கைம்மா றினி. – 57</poem> ::காப்பு அடங்கு என்று அன்னை கடி மனையில் செறித்து யாப்பு அடங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன் நல் நலம் காணக் கதவம் துளை தொட்டார்க்கு என்னைகொல் கைம்மாறு இனி. ::கடுங்கோன் உலா வந்தான். அவனை நான் காணக்கூடாது என்று, “உன்னைக் காப்பாற்றிக்கொண்டு அடங்கு” என்று சொல்லி அன்னை என்னை இல்லத்தில் செறிவாக அடைத்துவைத்தாள். உள்ளேயும் ஓடியாட முடியாமல் கட்டியும் போட்டாள். ஆனால் கதவிலே முன்பே துளை ஒன்று போட்டுவைத்திருந்தார்கள். (அது வெளியே இருப்பவர் யார் என்று பார்க்க உதவும் கதவுக்கண்.) அது அவன் நல்லழகையெல்லாம் காணும் வகையில் அமைந்திருந்தது. இப்படிக் கதவுக்கண் ஓட்டை போட்டு வைத்திருக்கிறார்களே, அவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன். – அவள் கூறுகிறாள். | கடுங்கோ = சேரன் | கடுங்கோன் = பாண்டியன். ===58=== <poem>வளையவாய் நீண்டதோள் வாட்கணாய் அன்னை இளையளாய் மூத்திலள் கொல்லோ – தளையவிழ்தார் மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக் கண்கொண்டு நோக்கல்என் பாள். – 58</poem> ::வளையவாய் நீண்ட தோள் வாள் கணாய் அன்னை இளையளாய் மூத்திலள் கொல்லோ தளையவிழ் தார் மண் கொண்ட தானை மறம் கனல் வேல் மாறனைக் கண்கொண்டு நோக்கல் என்பாள். ::வளையல் அணிந்த நீண்ட தோளும், வாள் போன்ற கண்ணும் கொண்ட தோழியே! அன்னை இளையவளா? மூத்தவளா? மூத்தவளாக இருந்தும் இளையவளாக இருக்கிறாளே! சிறுபிள்ளைத் தனமாய் நடந்துகொள்கிறாளே! மாறன் உலா வருவதைக் கண்கொண்டு பார்க்கக்கூடாது என்கிறாளே. பூக்கும் மலர்மாலை அணிந்துகொண்டு, பகைவரைக் கைப்பற்றிய படையோடு, வீரம் வெளிப்படும் வேல் ஏந்திய கோலத்துடன் வருகிறானே. அவன் மாலையையாவது, படையையாவது, வேலையாவது நான் பார்க்கக்கூடாதா? ===59=== <poem>கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென வேட்டங்குச் சென்றெவன் நெஞ்சறியாள் - கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை வெறுங்கூடு காவல்கொண் டாள். – 59</poem> ::கோள் தெங்கு சூழ் கூடல் கோமானைக் கூட என வேட்டு அங்குச் சென்ற எவன் நெஞ்சு அறியாள் கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை வெறுங்கூடு காவல் கொண்டாள். ::கொழுத்த தென்னைமரம் சூழ்ந்திருக்கும் ஊர் கூடல் நகரம். அவன் இந்தக் கூடல் அரசன். அவனை விரும்பி என் நெஞ்சு சென்றுவிட்டது. இது அன்னைக்குத் தெரியவில்லை. வெறும் உடம்புக் கூட்டுக்குக் காவல் போட்டிருக்கிறாள். | குறும்பூழ் = காடை என்னும் பறவை. | காடை பிடிக்கும் வேடன் வலையை விரித்து வைப்பான். அதன் அருகில் தான் பழக்கி வைத்திருக்கும் பெண்-காடையைப் பறக்க விடுவான். அது ஆண்-காடையை அழைத்துவந்து கூட்டில் விழச்செய்யும். அன்னை அப்படிச் செய்கிறாளே! ===60=== <poem>களியானைத் தென்னன் இளங்கோவென் றெள்ளிப் பணியாரே தம்பார் இழக்க – அணியாகங் கைதொழு தேனும் இழக்கோ நறுமாவின் கொய்தளிர் அன்ன நிறம். – 60</poem> ::களி யானைத் தென்னன் இளங்கோ என்று எள்ளிப் பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் கை தொழுதேனும் இழக்கோ நறு மாவின் கொய் தளிர் அன்ன நிறம். ::களிப்புக் கொண்ட யானைமேல் வருபவன் தென்னன். அவன் இளையவன், எளிதாக வென்றுவிடலாம் என்று ஏளனமாகப் பேசிக்கொண்டு அவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் தன் நாட்டை இழந்தனர். அது சரி. நான் தென்னனைத் தொழுதேன். ஆனால் என் மாந்தளிர் போன்ற மேனி அழகை இழந்துவிட்டேனே! இது சரியா? ==பாண்டியன் 61-65== ===61=== <poem>வழுவில்எம் வீதியுள் மாறன் வருங்கால் தொழுதேனைத் தோள்நலமுங் கொண்டான் – இமிழ்திரைக் கார்க்கடற் கொற்கையார் காவலனுந் தானேயால் யார்க்கிடுகோ பூசல் இனி. – 61</poem> ::வழு இல் எம் வீதியுள் மாறன் வருங்கால் தொழுதேனைத் தோள் நலமும் கொண்டான் இமிழ் திரைக் கார்க் கடல் கொற்கையார் காவலனுந் தானேயால் யார்க்கு இடுகோ பூசல் இனி. ::மாறன் குறையில்லாத என் வீதியில் உலா வந்தான். அப்போது நான் அவனைத் தொழுதேன். அவன் என் தோள்-அழகை வாங்கிக்கொண்டான். திறையாக வாங்கிக்கொண்டான். நான் அவன் கொற்கை நகரில் வாழும் அவனது குடிமகள். எனக்குக் காவலன் அவன்தான். அவனே இந்தக் கொடுமையைச் செய்தால் நான் யாரிடம் சென்று முறையிட்டுக்கொள்வேன்? ===62=== <poem>தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும் வானேற்ற வையகம் எல்லாமால் – யானோ எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர்ந்தண்தார் மாறன் அளியானேல் அன்றென்பார் ஆர். – 62</poem> ::தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும் வான் ஏற்ற வையகம் எல்லாமால் யானோ எளியேன் ஓர் பெண் பாலேன் ஈர்ம் தண் தார் மாறன் அளியானேல் அன்று என்பார் ஆர். ::மாறன் தான், தன் ஒப்புயர்வற்ற வெண்கொற்றக் குடையால் குடிமக்களுக்கு நிழல் தருபவன். வானுலகைத் தாங்கும் வையகத்தைக் காப்பவன். அவன் அப்படி. யானோ எளியவள். அதிலும் ஒரு பெண். அளி(இரக்கம்) தந்து காப்பாற்றப்பட வேண்டியவள். இந்த உண்மையை அன்று என்று சொல்பவர் ஆர்? அப்படி இருக்க அவன் எனக்கு அளி(இரக்கம்) செய்து காப்பாறவில்லையே!. ===63=== <poem>மன்னுயிர் காதல் தனதான அவ்வுயிருள் என்னுயிரும் எண்ணப் படுமாயின் – என்னுயிர்க்கே சீரொழுகு செங்கோற் செழியற்கே தக்கதோ நீரொழுகப் பாலொழுகா வாறு. – 63</poem> ::மன் உயிர் காதல் தனது ஆன அவ் உயிருள் என் உயிரும் எண்ணப்படும் ஆயின் என் உயிர்க்கே சீர் ஒழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ நீர் ஒழுகப் பால் ஒழுகாவாறு. ::செழியன் நிலைபெற்ற உயிரினம் எல்லாவற்றின் மீதும் காதலன்பு கொண்டவன். அந்த உயிரினங்களில் என் உயிரும் ஒன்றாக எண்ணப்படுமாயின், என்மேல் செங்கோல் ஆட்சி செய்யவில்லையே! எதுவா அவன் சீர்மை? * பச்சைமண் பாண்டத்தில் பாலை ஊற்றிவைத்தால் அதில் உள்ள நீர் கசிந்து ஒழுகுகிறது. பால் கசிந்து ஒழுகவில்லை. இது என்ன விந்தை! * அவன் நீர்மை எல்லா உயிரினங்கள் மாட்டும் பாய்கிறது. அவன் பாலுணர்வு அப்படிப் பாயவில்லையே. ===64=== <poem>புகுவார்க் கிடங்கொடா போதுவார்க் கொல்கா நகுவாரை நாணி மறையா – இகுகரையின் ஏமான் பிணைபோல நின்றதே கூடலார் கோமான்பின் சென்றவென் நெஞ்சு. - 64</poem> ::புகுவார்க்கு இடம் கொடா போதுவார்க்கு ஒல்கா நகுவாரை நாணி மறையா இகு கரையின் ஏ மான் பிணை போல நின்றதே கூடலார் கோமான் பின் சென்ற என் நெஞ்சு. ::அவன் கூடலார் கோமான். அவன் பின் என் நெஞ்சு சென்றது. என் நெஞ்சுக்குள்ளே புகுவார் யாருக்கும் அது இடம் கொடுக்கவில்லை. வழியில் யார் சென்றாலும் நெஞ்சம் தளரவில்லை. என் நெஞ்சைப் பார்த்து எள்ளி நகையாடுபவர்களைக் கண்டால் நாணி மறைந்துகொள்கிறது. இடிந்து விழுந்துகொண்டிருக்கும் ஆற்றங்கரையில் அம்பு பட்ட மான் நிற்பது போல என் நெஞ்சு அவனிடம் நிற்கிறது. ===65=== <poem>களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை அளியான் அளிப்பானே போன்றான் - தெளியாதே செங்காந்தள் மென்விரலாற் சேக்கை தடவந்தேன் என்காண்பேன் என் அலால் யான். – 65</poem> ::களி யானைத் தென்னன் கனவின் வந்து என்னை அளியான் அளிப்பானே போன்றான் தெளியாதே செங்காந்தள் மென் விரலால் சேக்கை தடவந்தேன் என் காண்பேன் என் அலால் யான். ::களிக்கும் யானைமேல் உலா வருபவன் தென்னன். அவன் என் கனவில் வந்தான். அவன் எனக்கு இன்பம் எதுவும் தரவில்லை. இன்பம் தருபவன் போல இருந்தான். உடனே செங்காந்தள் பூப் போன்ற என் விரல்களால் அவனைத் தடவினேன். உண்மையில் படுக்கையைத் தடவிக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர என் படுக்கையில் வேறு யாரும் இல்லை. ==பாண்டியன் 66-70== ===66=== <poem>கனவை நனவென் றெதிர்விழிக்கும் காணூம் நனவில் எதிர்விழிக்க நாணும் – புனையிழாய் என்கண் இவையானால் எவ்வாறே மாமாறன் தன்கண் அருள்பெறுமோ தான். – 66</poem> ::கனவை நனவு என்று எதிர் விழிக்கும் காணூம் நனவில் எதிர் விழிக்க நாணும் புனையிழாய் என் கண் இவை ஆனால் எவ்வாறே மா மாறன் தன் கண் அருள் பெறுமோ தான். ::கனவை நனவு என்று எண்ணிக்கொண்டு அவனைக் கொட்டைக் கண்ணோடு விழித்துக்கொண்டு பார்க்கிறேன். அப்போது உறங்கிக்கொண்டிருக்கும் என் கண்கள் அவனைப் பார்க்கவில்லை. நனவில் அவன் உலா வருகிறான். அப்போது என் நாணத்தால் அவனைப் பார்க்க முடியவில்லை. என் கண்ணுக்கே இந்த நிலைமை ஆனால் அவனது அருளைப் பெறுவது எப்போது? ===67=== <poem>தளையவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி களையினும்என் கண்திறந்து காட்டேன் – வளைகொடுப்போம் வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந் தென்கண் புகுந்தான் இரா. – 67</poem> ::தளை அவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி களையினும் என் கண் திறந்து காட்டேன் வளை கொடுப்போம் வன் கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து என் கண் புகுந்தான் இரா. ::மலரும் பூமாலையைக் கையில் எடுத்துக்கொண்டு வந்து நிற்கும் தாய்மார்களே! “விடிந்துவிட்டது, கண்ணைத் திற” என்கிறீர்கள். என் உயிரே போனாலும் கண்ணைத் திறக்கமாட்டேன். மாறன் என் வளையல்களைக் கழன்று விழும்படிச் செய்து எடுத்துக்கொண்டு போய்விட்டான். அவன் கொடுமைக்காரன். வாளைக் கையில் உடையவன். கருநிற யானைமேல் வந்தான். வந்தவன் இரவில் என் கண்ணுக்குள் அகப்பட்டுக்கொண்டான். கண்ணுக்குள்ளே இருக்கிறான். திறந்தால் ஓடிவிடுவான். மால் = கருமை ===68=== <poem>ஓராற்றல் என்கண் இமைபொருந்த அந்நிலையே கூரார்வேல் மாறன் என் கைப்பற்ற – வாரா நனவென் றெழுந்திருந்தேன் நல்வினையொன் றில்லேன் கனவும் இழந்திருந்த வாறு. – 68</poem> ::ஓராற்றல் என்கண் இமை பொருந்த அந் நிலையே கூர் ஆர் வேல் மாறன் என் கைப் பற்ற வாரா நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன் கனவும் இழந்து இருந்த ஆறு. ::அவனை எண்ணிக்கொண்டே இருந்தேன். தூக்கம் வரவில்லை. ஏதோ ஒரு வகையில் என் இமைகள் மூடிக்கொண்டன. அப்போதே கூரிய வேலை உடைய மாறன் அருகில் வந்து என் கைகளைப் பற்றினான். கனவை நனவு என்று எண்ணி எழுந்திருந்தேன். அவன் இல்லை. கைப்பற்றிய கனவு இன்பமும் இல்லாமல் போய்விட்டது. எனக்கு நல்வினைப்பேறு ஒன்றுகூட இல்லை. ===69=== <poem>கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர்நுனைவேலி வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற் கொண்டிருக்கப் பெற்ற குணம். – 69</poem> ::கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர் நுனை வேலி வண்டு இருக்க நக்க தார் வா மான் வழுதியால் கொண்டிருக்கப் பெற்ற குணம். ::கரிய நல்ல நீலமலர் மணக்கும் குளத்தில் நாள்தோறும் பூத்துநின்று தவம் செய்தது. அந்தத் தவத்தின் பயனால் போலும் வழுதி கழுத்தில் மாலை ஆகும் பேறு பெற்றுள்ளது. கூர்மையான நுனியை உடைய வேல் போன்ற வாயைக் கொண்டிருக்கும் வண்டு சிரிப்பொலி கேட்க மொய்க்கும் பூமாலை, வழுதி மாலை. ===70=== <poem>அறிவரார் யாமொருநாட் பெண்டிரே மாகச் செறிவார் தலைமே னடந்து – மறிதிரை மாட முரிஞ்சும் மதுரையார் கோமானைக் கூட வொருநாட் பெற. – 70</poem> ::அறிவர் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆகச் செறிவார் தலைமேல் நடந்து மறி திரை மாடம் உரிஞ்சும் மதுரையார் கோமானைக் கூட வொரு நாள் பெற. ::மோதித் திரும்பும் வைகை ஆற்று நீர்த்திரையை மாடி வீடுகள் உரிஞ்சும் ஊர் மதுரை. அவன் அந்த மதுரை மக்களின் கோமான். என்றேனும் ஒருநாள் நான் அவனோடு சேர்ந்து கூடி இருப்போன். இப்போது ஊரார் என் வாயை அடைத்து வைக்கின்றனர். நான் அவனோடு கூடியிருப்பதை அன்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். இப்போது என்னை வீட்டுக்குள்ளே அடைத்துச் செறித்து வைப்பவர்கள் அப்போது தெரிந்துகொள்வர். அப்போது அவர்கள் தலைமேல் நான் நடப்பேன். பெண்களே! இதனைத் தெரிந்துகொள்ளுங்கள். ==பாண்டியன் 71-75== ===71=== <poem>கைய தவன்கடலுள் சங்கமால் பூண்டதுவும் செய்யசங் கீன்ற செழுமுத்தால் மெய்யதுவும் மன்பொரு வேல்மாறன் வார்பொதியிற் சந்தனமால் என்பெறா வாடும் என் தோள். – 71</poem> ::கையது அவன் கடலுள் சங்கமால் பூண்டதுவும் செய்ய சங்கு ஈன்ற செழு முத்தால் மெய்யதுவும் மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனமால் என் பெறா வாடும் என் தோள். ::கடல் கைக்கும்படிக் கடலில் படுத்துத் தவம் செய்துகொண்டிருப்பதால் திருமால்தான் மாறன் என்கிறேன். திருமால் கடல் சங்கைக் கையில் வைத்துக்கொண்டிருக்கிறான். நான் மாறன் கடலில் விளைந்த சங்கில் அறுத்த வளையல்கைக் கையில் அணிந்துகொண்டிருக்கிஅறேன். மாறன் கடல் முத்தை ஆரமாக அணிந்துகொண்டிருக்கிறேன். மாறனின் பெதியமலைச் சந்தனத்தைப் பூசிக்கொண்டிருக்குறேன். சங்கம், முத்து, சந்தனம் எல்லாமே அவனுடையவை. அப்படி இருக்கும்போது என் தோள் எதனைப் பெறாமல் வாடுகிறது? வியப்பாக உள்ளது. ===72=== <poem>இப்பியீன்று இட்ட எறிகதிர் நித்திலம் கொற்கையே யல்ல படுவது – கொற்கைக் குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம் கருதியார் கண்ணும் படும். – 72</poem> ::இப்பி ஈன்று இட்ட எறி கதிர் நித்திலம் கொற்கையே அல்ல படுவது கொற்கைக் குருதி வேல் மாறன் குளிர்சாந் தகலம் கருதியார் கண்ணும் படும். ::சங்குச் சிப்பிகள் பெற்றெடுத்த முத்துகள் கொற்கையில் மட்டுமா உதிர்கின்றன? கொற்கையை ஆளும் மாறனின், குருதி தோய்ந்த வேலை உடைய மாறனின், குளிர்ந்த சந்தனம் பூசிய மார்பினை அடையக் கருதிய பெண்கள் கண்களிலிருந்தும் உதிர்கின்றன. ===73=== <poem>கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன் முடிபாடி முத்தாரம் பாடித் – தொடியுலக்கை கைம்மனையில் ஓச்சப் பெறுவெனோ யானும்ஓர் அம்மனைக் காவல் உளேன். – 73</poem> ::கொடி பாடித் தேர் பாடிக் கொய் தண் தார் மாறன் முடி பாடி முத்தாரம் பாடித் தொடி உலக்கை கைம் மனையில் ஓச்சப் பெறுவெனோ யானும் ஓர் அம் மனைக் காவல் உளேன். ::மாறன் கொடி, மாறன் தேர், மாறன் பூ மாலை, மாறன் முத்தாரம், மாறன் சூடிய முடி ஆகியவற்றைப் பாடிக்கொண்டு நான் உலக்கையால் நெல் குற்றவேண்டும். இதுதான் என் ஆசை. இப்போது வீட்டுக் காவலில் கிடக்கிறேன். \ தொடி உலக்கை – பூண் போட்ட உலக்கை \ கொய் தண் தார் – கொய்த குளிர்ந்த பூக்களால் கட்டப்பட்ட மால் \ கைம்மனை – சிறிய இல்லம் \ அம்மனை – அழகிய இல்லம் ===74=== <poem>என்னை உரையல் என் பேருரையல் ஊருரையல் அன்னையும் இன்னள் எனவுரையல் பின்னையுந் தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்கென் கண்படாவாறே யுரை. 74</poem> ::என்னை உரையல் என் பேருரையல் ஊருரையல் அன்னையும் இன்னள் என உரையல் பின்னையும் தண் படா யானைத் தமிழ்நர் பெருமாற்கு என் கண் படாவாறே உரை. ::என்னைப் பற்றிப் பேசவேண்டா. என் பேரையும் சொல்லவேண்டா. என் தாய் என்னை அடைத்து வைத்திருக்கும் கொடியவள் என்றும் சொல்லவேண்டா. பின் என்னதான் சொல்லவேண்டும் என்கிறாயா? தமிழர் பெருமானை எண்ணி என் கண் உறங்காமல் இருக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள். (தண் படா யானை = குளுமை இல்லாமல் எப்பொதும் சினம் கொண்டிருக்கும் யானை – யானையை உடைய தமிழர் பெருமான்.) ===75=== <poem>மாறடுபோர் மன்னர் மதிக்குடையும் செங்கோலும் கூறிடுவாய் நீயோ குளிர்வாடாய் சோறடுவார் ஆரத்தால் தீமூட்டும் அம்பொதியிற் கோமாற்கென் வாரத்தால் தோற்றேன் வளை. 75</poem> ::மாறு அடு போர் மன்னர் மதிக் குடையும் செம் கோலும் கூறிடுவாய் நீயோ குளிர் வாடாய் சோறு அடுவார் ஆரத்தால் தீ மூட்டும் அம் பொதியின் கோமாற்கு என் வாரத்தால் தோற்றேன் வளை. ::சோறாக்குவோர் சந்தனக்கட்டையில் அடுப்புத் தீ மூட்டும் பொதியமலை நாட்டுக் கோமான் அவன். குளிரும் வாடைக்காற்றே! நீ அவனிடம் தூது செல். மாற்றாரைப் போரில் வெல்லும் அவனது குடை, மதியம் போன்ற வெண்கொற்றக் குடை, செங்கோல் ஆகியவற்றை முதலில் சொல். பின் அவனை நெஞ்சில் பங்குபோட்டுக் கொண்டிருப்பதால் என் வளையல்களைத் தோற்றுப் போயிருக்கிறேன் என்பதையும் சொல். (வாரம் = சரிபாதி பங்கு) ==பாண்டியன் 76-80== ===76=== <poem>துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப் பிடியேயான் நின்னை யிரப்பல் – கடிகமழ்தார்ச் சேலேக வண்ணனொடு சேரி புகுதலுமெஞ் சாலேகம் சார நட. – 76</poem> ::துடி அடித் தோல் செவித் தூங்கு கைம் நால் வாய்ப் பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார்ச் சேல் ஏக வண்ணனொடு சேரி புகுதலும் எம் சாலேகம் சார நட. ::அவன் சேல் ஏக வண்ணன். மீன் கொடி கொண்ட மாறன். (மீன் கொடி கொண்ட காம வேள் மாரன்). அவனைச் சுமந்துகொண்டு வரும் பிடியே! (பெண்யானையே) உடுக்கை-மேளம் போன்ற காலடியும், தோல்-பறை போன்ற காதும், தொங்கும் கையில் துளை இருக்கும் வாயும் கொண்டிருக்கிறாய். சரி. உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். மாலை அணிந்துகொண்டு அவன் உன்மேல் வரும்போது என் தெருச்சேரிக்கு வந்ததும் என் வீட்டுச் சன்னல் (சாலேகம்) ஓரமாக நடந்து செல். நான் அவனைக் கண்ணாரக் காணவேண்டும். ===77=== <poem>எலாஅ மடப்பிடியே யெங்கூடற் கோமான் புலாஅல் நெடுநல்வேல் மாறன் – உலாஅங்கால் பைய நடக்கவுந் தேற்றாயால் நின்பெண்மை ஐயப் படுவ துடைத்து. – 77</poem> ::எலாஅ மடப் பிடியே எம் கூடல் கோமான் புலாஅல் நெடு நல் வேல் மாறன் உலாஅங்கால் பைய நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை ஐயப்படுவது உடைத்து. ::ஏ, மடத்தனம் கொண்ட பிடியே! புலால் நாற்றம் அடிக்கும் வேலையுடைய என் கூடல்-கோமான் மாறன் உலா வரும்போது மெதுவாக நடக்க உனக்குத் தெரியவில்லையே. பெண்ணின் விருப்பத்தைப் புரிந்துகொள்ளாத நீயும் ஒரு பெண்ணா? உன் பிறவி ஐயப்படத் தக்கதாக உள்ளது. ===78=== <poem>போரகத்துப் பாயுமா பாயாது பாயமா ஊரகத்து மெல்ல நடவாயோ – கூர்வேல் மதிவெங் களியானை மாறன் தன் மார்பங் கதவங்கொண் டியாமுந் தொழ. – 78</poem> ::போர் அகத்துப் பாயும் மா பாயாது பாயமா ஊர் அகத்து மெல்ல நடவாயோ கூர் வேல் மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம் கதவம் கொண்டு யாமும் தொழ. ::மாறன் மார்புக் கதவை நான் திறந்து தொழவேண்டும். அவனைச் சுமந்துவரும் களிப்பு மிக்க யானையே! போரில் பாய்வது போல நீ பாயாதே. பாயாசம் போல ஊருக்குள்ளே மெல்ல நடந்துசெல். ===79=== <poem>ஆடுகோ சூடுகோ ஐதாக் கலந்துகொண்டு ஏடுகோ டாக எழுதுகோ – நீடு புனவட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி கனவட்டங் கால்குடைந்த நீறு. – 79</poem> ::ஆடுகோ சூடுகோ ஐதாக் கலந்துகொண்டு ஏடு கோடாக எழுதுகோ நீடு புனவட்டப் பூ தெரியல் பொன் தேர் வழுதி கனவட்டம் கால் குடைந்த நீறு. ::வழுதியின் குதிரை ஊர்தியின் பெயர் ‘கனவட்டம்’. வழுதியைச் சுமந்துகொண்டு கனவட்டம் தெருவில் சென்றது. அதன் காலடி பட்ட புழுதியை நீரில் கலந்து மையாக்கிக்கொண்டு, பூவிதழ் நுனியை எழுத்தாணி ஆக்கிக்கொண்டு, என் கண்ணில் மை எழுதிக்கொள்ளட்டுமா, என் தோளில் தொய்யில் எழுதிக்கொள்ளட்டுமா – அவள் கேட்கிறாள். ===80=== <poem>பிணிகிடந் தார்க்குப் பிறந்தநாட் போல அணியிழை அஞ்ச வருமால் – மணியானை மாறன் வழுதி மணவா மருண்மாலைச் சீறியோர் வாடை சினந்து. – 80</poem> ::பிணி கிடந்தார்க்குப் பிறந்த நாள் போல அணியிழை அஞ்ச வருமால் மணி யானை மாறன் வழுதி மணவா மருண்மாலைச் சீறி ஓர் வாடை சினந்து. ::நோய்வாய்ப் பட்டுக் கிடப்பவர்களுக்குப் பிறந்தநாள் வருவது போல வாடைக்காற்று சினம் கொண்டு பாய்கிறது. பெண்ணே! பார். மாறன் வழுதியோடு கூடி இருக்காமல் தனியே இருப்பவரிடம்தான் வாடை இப்படி வருகிறது. ==பாண்டியன் 81-85== ===81=== <poem>வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோல் ஏரிய ஆயினும் என்செய்யும் –கூரிய கோட்டானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங் கோட்டுமண் கொள்ளா முலை. – 81</poem> ::வாரிய பெண்ணை வரு குரும்பை வாய்த்தன போல் ஏரிய ஆயினும் என் செய்யும் கூரிய கோட்டு ஆனைத் தென்னன் குளிர் சாந்து அணி அகலம் கோட்டு மண் கொள்ளா முலை. ::என் முலை தென்னங்குரும்பை போல் பருத்துக்கொண்டிருக்கிறது. சரி. அதனால் என்ன பயன். தென்னன் மார்பில் உள்ள சந்தனக் குழம்பை அப்பிக்கொள்ளவில்லையே! ===82=== <poem>நாணாக்காற் பெண்மை நலன் அழியும் முன்னின்று காணாக்காற் கைவளையுஞ் சோருமால் – காணேன்நான் வண்டு எவ்வந் தீர்தார் வயமான் வழுதியைக் கண்டுஎவ்வந் தீர்தார் ஆறு. – 82</poem> ::நாணாக்கால் பெண்மை நலன் அழியும் முன் நின்று காணாக்கால் கை வளையும் சோருமால் காணேன் நான் வண்டு எவ்வம் தீர் தார் வய மான் வழுதியைக் கண்டு எவ்வம் தீர் தார் ஆறு. ::வழுதி உலா வரும்போது கண்டு நாணாமல் நின்றால் என் பெண்மை அழியும். அவனைக் கண்ணாரக் காணவில்லை என்றால் என் கைவளையல் கழன்று ஓடும். எப்படித்தான் என் எவ்வத் துன்பத்தைப் போக்கிக்கொள்வேன்? பூமாலை மட்டும் வண்டின் துன்பத்தைப் போக்கிக்கொண்டு அவன் கழுத்தில் இருக்கிறதே! ===83=== <poem>மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக் காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் – கண்டக்காற் பூணாகந் தாவென்று புல்லப் பெறுவேனோ நாணோ டுடன்பிறந்த நான். – 83</poem> ::மாணார்க் கடந்த மற வெம் போர் மாறனைக் காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்டக்கால் பூண் ஆகம் தா என்று புல்லப் பெறுவேனோ நாணோடு உடன்பிறந்த நான். ::மாட்சிமை இல்லாதவர்களை வென்றவன் மாறன். அவனைக் காணாதபோது ஆயிரம் ஆயிரமாகப் பேசுவேன். கண்டால், “உன் பூண் அணிந்த மார்பை எனக்குக் கொடு” என்று கேட்டுத் தழுவமுடியுமா? நாணத்தோடு பிறந்தவள் ஆயிற்றே! ===84=== <poem>செய்யார் எனினுந் தமர்செய்வ ரென்னுஞ்சொல் மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் – கையார் வரிவளை நின்றன வையையார் கோமான் புரிவளை போந்தியம்பக் கேட்டு. – 84</poem> ::செய்யார் எனினும் தமர் செய்வர் என்னும் சொல் மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் கை ஆர் வரி வளை நின்றன வையையார் கோமான் புரி வளை போந்து இயம்பக் கேட்டு. ::மற்றவர்கள் உதவவில்லை என்றாலும், உற்றார் உறவினர் உதவுவர் என்பது உண்மை என்பது இப்போது தெரிந்துவிட்டது. வையை நாட்டாரின் அரசன் உலா வரும்போது ஊதிய சங்கின் ஓசையைக் கேட்டதும், சங்கால் செய்யப்பட்டதாய் என் கையில் இருக்கும் வளையல்கள் என் தோள்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டன. காணப்போகும் மகிழ்ச்சி. \ வரிவளை – கையில் வரிவரியாக உள்ள வளையல் \ புரிவளை – வளைந்து விரியும் சங்கு ===85=== <poem>உகுவாய் நிலத்த துயர்மணல்மேல் ஏறி நகுவாய்முத் தீன்றசைந்த சங்கம் – புகுவான் திரைவரவு பார்த்திருக்குந் தென்கொற்கைக் கோமான் உரைவரவு பார்த்திருக்கும் நெஞ்சு. – 85</poem> ::உகு வாய் நிலத்தது உயர் மணல் மேல் ஏறி நகு வாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் புகுவான் திரை வரவு பார்த்திருக்கும் தென் கொற்கைக் கோமான் உரை வரவு பார்த்திருக்கும் நெஞ்சு. ::சங்குப் பூச்சி மணலின் மேல் ஏறி பல்லைக் காட்டும் முத்துக்களைப் பெற்று வைத்துவிட்டு மீளும். அந்த முத்துக்கள் அலைகள் வந்து கொண்டுசெல்லாவா என்று காத்துக்கொண்டிருக்கும். அதுபோல நான் அந்த முத்து விளையும் கொற்கை அரசனிடமிருந்து அழைப்பு வராதா எனக் காத்திருக்கிறேன். ==பாண்டியன் 86-90== ===86=== <poem>கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவனேல் கூடு என்று – கூடல் இழைப்பாள்போற் காட்டி இழையா திருக்கும் பிழைப்பில் பிழைபாக் கறிந்து. – 86</poem> ::கூடல் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவனேல் கூடு என்று கூடல் இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும் பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து. – 86 ::கூடல் இழைத்தல் என்பது ஒருவகை விளையாட்டு. அது குறி பார்க்கும் விளையாட்டு. நடுவில் நின்றுகொண்டு, கண்களை மூடிக்கொண்டு, சுழன்று, கைவிரலால் மணலில் வட்டமிட்டுக் கோடு கிழிப்பர். வட்டம் கோணல் மாணலாக இருந்தாலும், கோடு தொடங்கிய புள்ளியில் ஒன்றுகூட வேண்டும், கூடினால் தான் விரும்பிய எண்ணம் நிறைவேறும் என்றும், கூடாமல் கோடு வேறிடம் சென்றால் விரும்பிய செயல் கைகூடாது என்றும் நம்புவர். ::இப்படி அவள் கூடல் இழைக்க முற்பட்டாள். கூடல் பெருமான் பாண்டியனை நான் கூடப்பெறுவேன் என்றால் கூடல் கோடே நீ கூடுக என்று சொல்லிக்கொண்டு கூடல் இழைக்க முற்பட்டுக் கூடல் இழைப்பது போலப் பாசாங்கு காட்டினாள். உண்மையில் அவள் கூடல் இழைக்கவில்லை. காரணம் ஒருவேளை கூடல்-கோடு கூடாமல் போய்விட்டால் அவனைக் கூடமுடியாமல் போய்விடுமே என்னும் அச்சம் அவளுக்கு. ===87=== <poem>குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம் புறப்படா பூந்தார் வழுதி – புறப்படின் ஆபுகு மாலை அணிமலையில் தீயேபோல் நாடறி கௌவை தரும். – 87</poem> ::குடத்து விளக்கே போல் கொம்பன்னார் காமம் புறப்படா. பூந்தார் வழுதி புறப்படின் ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல் நாடறி கௌவை தரும். ::கொடிக்கொம்பு (கொம்பில் ஏறும் கொடி) போன்றவர் மகளிர். மகளிர் காமம் குடத்துக்குள் வைத்த விளக்குப்போல் வெளி-உலகுக்குத் தெரியாது. ஆனால் வழுதி மாலையும் கழுத்துமாக உலா வரும்போது, ஆனிரைகள் இல்லம் புகும் மாலை வேளையில் மலையில் பற்றி எரியும் தீயைப் போல ஊருக்கெல்லாம் தெரியும்படி வெளிப்பட்டுவிடும். ===88=== <poem>ஏற்பக் குடைந்தாடில் ஏசுவர் அல்லாக்கால் மாற்றி யிருந்தாள் ஏனவுரைப்பர் – வேற்கண்ணாய் கொல்யானை மாறன் குளிர்புனல் வையைநீர் எல்லாம் எனக்கோர் இடர். – 88</poem> ::ஏற்பக் குடைந்து ஆடில் ஏசுவர் அல்லாக்கால் மாற்றி இருந்தாள் ஏன உரைப்பர் வேல் கண்ணாய் கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் எல்லாம் எனக்கு ஓர் இடர். ::அவன் கொல்யானை மேல் செல்லும் மாறன். அவன் நாட்டு வையையில் குளிர்ந்த ஊற்றுநீர் வருகிறது. அதில் மூழ்கிக் குளித்து விளையாடினால் மாறன் நாட்டு நீர் என்று மூழ்கி விளையாடுகிறாள் என்று சொல்லி ஏசுவார்கள். நீராடாமல் கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தால் தன் ஆசையை மறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று முணுமுணுப்பர். வேல் போன்ற கண்ணை உடைய என் தோழியே! எது செய்தாலும் எனக்குத் துன்பமே. ===89=== <poem>யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின் தானூட யானுணர்த்தத் தானுணரான் – தேனூறு கொய்தார் வழுதி குளிர்சாந் தணியகலம் எய்தா திராக்கழிந்த வாறு. – 89</poem> ::யான் ஊடத் தான் உணர்த்த யான் உணரா விட்டதன் பின் தான் ஊட யான் உணர்த்தத் தான் உணரான் தேன் ஊறு கொய் தார் வழுதி குளிர் சாந்து அணி அகலம் எய்தாது இராக் கழிந்தவாறு. ::நான் ஊடினேன். அவன் உணர்த்தினான். நான் என் ஊடலை விட்டு உணர்ந்துகொண்டு கூடச் சென்றேன். அப்போது வழுதி நான் முன்பு ஊடினேன் என்று ஊடினான். நான் உணர்த்தினேன். அவன் உணரவில்லை. இப்படியே இரவெல்லாம் கழிந்துவிட்டது. குளிர்ந்த சந்தனம் பூசிய அவன் மார்பு எனக்குக் கிடைக்கவே இல்லை. ===90=== <poem>புல்லாதார் வல்லே புலர்கென்பர் புல்லினார் நில்லா யிரவே நெடிதென்பர் – நல்ல விராமலர்த் தார்மாறன் வெண்சாந் தகலம் இராவளிப் பட்ட திது. – 90</poem> ::புல்லாதார் வல்லே புலர்(கு) என்பர் புல்லினார் நில்லாய் இரவே நெடிது என்பர் நல்ல விராம் மலர்த் தார் மாறன் வெண் சாந்து அகலம் இரா அளிப் பட்டது இது. ::இரவே! உடனே விடிந்துவிடு (புலர்க) என்று மாறனின் வெண்ணிறச் சந்தனம் பூசிய மார்பைத் தழுவப்பெறாதவர்கள் வேண்டுவர். தழுவப்பெற்றவர்கள் இரவே விடியாமல் நீண்டுகொண்டே இரு என்று வேண்டுவர். இப்படி இரங்கத்தக்க (அளி) இரவு என்னிடம் வந்திருக்கிறதே! ==பாண்டியன் 91-95== ===91=== <poem>பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல் நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் – சாரல் மலைபடுப யானை வயமாறன் கூர்வேல் தலைபடுப தார்வேந்தர் மார்பு.- 91</poem> ::பார் படுப செம் பொன் பதி படுப முத்தமிழ் நூல் நீர் படுப வெண் சங்கும் நித்திலமும் சாரல் மலை படுப யானை வய மாறன் கூர் வேல் தலை படுப தார் வேந்தர் மார்பு. ::மாறன் நிலமெல்லாம் செம்பொன். ::ஊரெல்லாம் முத்தமிழ் முழங்கும் நூல்கள். ::நீரெல்லாம் சங்கும், முத்தும். ::மலையெல்லாம் யானை. ::பகைவேந்தர் மார்பெல்லாம் அவன் வேல். ::எனக்கு மட்டும் எதுவுமே இல்லையா ===92=== <poem>நந்தின இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும் பந்தர் இளங்கமுகின் பாளையும் – சிந்தித் திகழ்முத்தம் போற்றோன்றும் செம்மற்றே தென்னன் நகைமுத்த வெண்குடையான் நாடு. – 92</poem> ::நந்தின இளம் சினையும் புன்னைக் குவி மொட்டும் பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தித் திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன் நகை முத்த வெண் குடையான் நாடு. ::நந்துச் சங்குகளின் இள முட்டைகளும், புன்னைப்பூ மொட்டுகளும், பந்தர்த் துறைமுகத்தில் உள்ள பாக்குப் பாளைகளும் சிந்திக் கிடப்பதால் தென்னன் நாடெங்கிலும் முத்துக்கள் சிரிப்பது போல் தோற்றமளிக்கிறது. தென்னன் குடையிலும் முத்துக்கள் தொங்குகின்றன. இது இவன் நாட்டுக்குக் கிடைத்திருக்கும் செம்மாப்பு. எனக்குத்தான் அவன் பல்நகை முத்தம் கிடைக்கவில்லை. ===93=== <poem>மைந்தரோ டூடி மகளிர் திமிர்ந்திட்ட குங்கும ஈர்ஞ்சாந்தின சேறுழக்கி – எங்கும் தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் நெடுமாடக் கூடல் அகம். – 93</poem> ::மைந்தரோடு ஊடி மகளிர் திமிர்ந்து இட்ட குங்கும ஈர்ம் சாந்தின சேறு உழக்கி எங்கும் தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் நெடு மாடக் கூடல் அகம். ::மைந்தரோடு மகளிர் ஊடுவர். அப்போது மகளிர் அணிந்திருக்கும் ஈரக் குங்குமமும், மைந்தர் அணிந்திருக்கும் ஈரச் சந்தனமும் நிலத்தில் பட்டுச் சேறாகிப், போவார் வருவாரெல்லாம் வழுக்கித் தடுமாறும் தன்மை கொண்டது தென்னன் ஆளும் கூடல் நகரம். ===94=== <poem>மடங்கா மயில்ஊர்தி மைந்தனை நாளும் கடம்பம்பூக் கொண்டேத்தி அற்றால் – தொடங்கமருள் நின்றிலங்கு வென்றி நிரைகதிர்வேல் மாறனை இன் தமிழால் யாம்பாடும் பாட்டு. – 94</poem> ::மடங்கா மயில் ஊர்தி மைந்தனை நாளும் கடம்பம்பூக் கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள் நின்று இலங்கு வென்றி நிரை கதிர் வேல் மாறனை இன் தமிழால் யாம் பாடும் பாட்டு. ::மடங்காத தோகையை உடைய மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகனைக் கடம்புப் பூப் போட்டுப் பூசை செய்வது எப்படியோ அப்படிப்பட்டதுதான் மாறனை இனிய தமிழால் நான் பாடும் பாடல் எனக் கொள்க. மாறன் தொடங்கிய போரிலெல்லாம் முருகனைப் போல வெற்றி கண்டு ஒளிரும் வேலை உடையவன். ===95=== <poem>செங்கண் நெடியான்மேல் தேர்விசையன் ஏற்றியபூப் பைங்கண்வெள் ஏற்றான்பால் கண்டற்றால் – எங்கும் முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன் அடிமிசையே காணப் படும். – 95</poem> ::செங்கண் நெடியான் மேல் தேர் விசையன் ஏற்றிய பூப் பைங் கண் வெள் ஏற்றான் பால் கண்டு அற்றால் எங்கும் முடி மன்னர் சூடிய பூ மொய்ம் மலர்த் தார் மாறன் அடி மிசையே காணப்படும். ::அருச்சுணன் திருமாலுக்குச் சாத்திய பூ அத்தனையும் காளைமாட்டு ஊர்திக் கடவுளிடம் (சிவன் திருவடிகளில்) கிடப்பதைக் கண்டனர். அப்படித்தான் மன்னர் முடியில் சூடிய பூக்கள் எல்லாம் மாறன் காலடியில் கிடந்தன. மாறனைத் தொழும்போது உதிர்ந்த பூக்கள் அவை. ==பாண்டியன் 96-100== ===96=== <poem>கூந்தன்மா கொன்று குடமாடிக் கோவலானாய்ப் பூந்தொடியைப் புல்கிய ஞான்றுண்டால் – யாங்கொளித்தாய் தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு. – 96</poem> ::கூந்தல் மா கொன்று குடம் ஆடிக் கோவலானாய்ப் பூந்தொடியைப் புல்கிய ஞான்று உண்டால் யாங்கு ஒளித்தாய் தென்னவனே தேர் வேந்தே தேறு நீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு. ::தென்னவனே! தேர் வேந்தே! தெளிந்த நீர் ஓடும் கூடல் நகரக் கோமானே! நீதான் திருமால். (நெடியோன் என்பவன் பாண்டிய மன்னர்களில் ஒருவன்) நீ கண்ணனாகத் தோன்றிய காலத்தில் கூந்தல் என்னும் குதிரையைக் கொன்றாய். குடம் தலையில் வைத்துக்கொண்டு நடனம் ஆடினாய். அழகிய வளையல்காரி நப்பின்னையை (இராதையை)த் தழுவினாய். அப்போது உன் மார்பில் மறு இருந்ததே! (திருமகளை மார்பில் கொண்டிருக்கும் மறு) அதனை இப்போது எங்கே ஒளித்து வைத்து வைத்திருக்கிறாய்? ===97=== <poem>கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர் பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் – நண்ணார்தம் தேர்வேந்தன் தென்னன் திருவுத் திராடநாள் போர்வேந்தன் பூசல் இலன். – 97</poem> ::கண்ணார் கதவம் திறமின் களிறொடு தேர் பண் ஆர் நடைப் புரவி பண் விடுமின் நண்ணார் தம் தேர் வேந்தன் தென்னன் திருவும் திராட நாள் போர் வேந்தன் பூசல் இலன். ::தென்னனை நினைக்காத பகைவர்களே! உங்கள் கதவினைத் திறந்துகொள்ளுங்கள். களிறும், தேரும், குதிரையும் போருக்காகப் பூட்டுவதை விட்டுவிடுங்கள். இன்று தென்னன் பிறந்த திருநாள். உத்திரட்டாதி நாள். தேரில் வருவான். ஆனால் போர் செய்யமாட்டான். அஞ்சவேண்டா. ===98=== <poem>நிறைமதிபோல் யானைமேல் நீலத்தார் மாறன் குடைதோன்ற ஞாலத் தரசர் – திறைகொள் இறையோ எனவந் திடம்பெறுதல் இன்றி முறையோ எனநின்றார் மொய்த்து. – 98</poem> ::நிறை மதி போல் யானை மேல் நீலத் தார் மாறன் குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள் இறையோ என வந்து இடம் பெறுதல் இன்றி முறையோ என நின்றார் மொய்த்து. ::நீலநிற வேம்புமாலை அணிந்துகொண்டு மாறன் உலா வருகிறான். அவனது வெண்கொற்றக் குடை நிறைந்த மதியம் போலக் காணப்படுகிறது. உலகத்து அரசர்களெல்லாம் திறை கொடுப்பதற்காக மொய்த்துக்கொண்டு வந்தனர். வரிசையில் காத்துக்கொண்டு நிற்கும்போது “இறைவா! இது முறையோ?” என முணுமுணுத்துக்கொண்டனர். ===99=== <poem>நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப் புரைசை யைநிமிர்ந்து பொங்கா – அரசர்தம் முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்தமாப் பொன்னுரைகல் போன்ற குளம்பு. – 99</poem> ::நிரை கதிர் வேல் மாறனை நேர் நின்றார் யானைப் புரைசையை நிமிர்ந்து பொங்கா அரசர் தம் முன் முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்த மாப் பொன்னுரை கல் போன்ற குளம்பு. – 99 ::வேல் தாங்கி மாறன் போருக்கு எழுந்தான். சிலர் அவனை எதிர்த்தனர். மாறன் யானை அவர்களின் கோட்டையை நிமிர்ந்து பார்த்துப் பொங்கிப் பாய்ந்தது. மன்னர் பலர் போரிட்டு வீழ்ந்தனர். அவர்கள் தலையில் சூடியிருந்த முடி சிதறிக் கிடந்தது. மாறன் குதிரை அந்தப் பொன்முடிகளைக் காலால் இடறியது. அதனால் அதன் குளம்புகள் பொன்னை உரைத்துப் பார்க்கும் கட்டளைக்கல் போலக் காணப்பட்டது. ===100=== <poem>அருமணி அந்தலை யாடரவம் வானத்து உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் – செருமிகுதோட் செங்கண்மா மாறன் சினவேற் கனவுமே அங்கண்மா ஞாலத் தரசு. – 100</poem> ::அரு மணி அம் தலை ஆடு அரவம் வானத்து உரும் ஏற்றை அஞ்சி ஒளிக்கும் செரு மிகு தோள் செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே அம் கண் மா ஞாலத்து அரசு. ::நஞ்சாகிய அரிய நீலமணியைக் கொண்ட நல்லபாம்பு வானத்தில் இடி முழக்கம் கேட்டால் அஞ்சி ஒடுங்கிக்கொள்ளும். அதுபோல சிவந்த கண்ணுடன் தோன்றும் மாறனின் சினங்கொண்ட வேலைக் கனவிலே கண்டு உலகிலுள்ள அரசர்கள் ஒடுங்கிக்கொள்வர். ::பாம்பு மணி உமிழுமா? ::உமிழாது ::தொண்டையில் நஞ்சு கொண்ட சிவனை மணிகண்டன் என்கிறோம். ::அதுபோல நாகத்தின் நஞ்சினை மணி என்கிறோம். ==பாண்டியன் 101-105== ===101=== <poem>நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன் காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால் ஏம மணிப்பூண் இமையார் திருந்தடி பூமி மிதியாப் பொருள். – 101</poem> ::நேமி நிமிர் தோள் நிலவு தார்த் தென்னவன் காமர் நெடும் குடைக் காவலன் ஆணையால் ஏம மணிப் பூண் இமையார் திருந்து அடி பூமி மிதியாப் பொருள். ::ஆணைச் சக்கரத்தை உருட்டி நிமிர்ந்த தோளைக் கொண்டு விளங்குபவன் தென்னவன். எல்லோரும் விரும்பும் அகன்ற வெண்கொற்றக்குடையை உடையவன். கண் இமைக்காத தேவர் தமக்குப் பாதுகாவலாக மணிப்பூண் அணிந்தவர்கள். அவர்களின் காலடி மண்ணில் படுவதில்லை. காரணம் தென்னவன் ஆணைக்குக் கட்டுப்பட வேண்டி வருமே என்னும் அச்சம். ===102=== <poem>செருவெங் கதிர்வேற் சினவெம்போர் மாறன் உருமின் இடிமுரசு ஆர்ப்ப – அரவுறழ்ந்து ஆமா உகளும் அணிவரையின் அப்புறம்போய் வேமால் வயிறெரிய வேந்து. – 102</poem> ::செரு வெம் கதிர் வேல் சின வெம் போர் மாறன் உருமின் இடி முரசு ஆர்ப்ப அரவு உறழ்ந்து ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய் வேமால் வயிறெரிய வேந்து. ::வேலேந்தி மாறன் போருக்கு எழுவான். அப்போது அவன் போர்முரசம் இடி போல் முழங்கும். அந்த முழக்கத்தைக் கேட்ட ஆமா பாம்பைப் போல் மலையெங்கும் தாவும். பின்னர் அந்த மலைக்கு அப்பால் சென்ற பின்னரும் வயற்றெரிச்சலோடு நெஞ்சம் வெந்துகொண்டிருக்கும். ===103=== <poem>மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர் உருத்தகு மார்போலை யாகத் திருத்தக்க வையக மெல்லாம் எமதென் றெழுதுமே மொய்யிலைவேல் மாறன் களிறு. - 103</poem> ::மருப்பு ஊசியாக மறம் கனல் வேல் மன்னர் உருத் தகு மார்பு ஓலையாகத் திருத் தக்க வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே மொய் இலை வேல் மாறன் களிறு. ::எழுதும் ஊசி கொண்டு ஓலை எழுதுவர். அதுபோல மாறனின் போர்யானை தன் கொம்பை எழுத்தாணி ஆக்கிக்கொண்டு உலகில் எதிர்த்த அனைத்து மன்னர் மார்புகளிலும் எழுதும். (குத்தும்) ===104=== <poem>உருவத்தார்த் தென்னன் ஓங்குஎழில் வேழத் திருகோடுஞ் செய்தொழில் வேறால் – ஒருகோடு வேற்றார் அகலம் உழுமே யொருகோடு மாற்றார் மதில்திறக்கு மால். – 104</poem> ::உருவத் தார்த் தென்னன் ஓங்கு எழில் வேழத்து இரு கோடும் செய் தொழில் வேறால் ஒரு கோடு வேற்றார் அகலம் உழுமே ஒரு கோடு மாற்றார் மதில் திறக்கும் ஆல். ::எல்லா யானைகளின் கொம்புகள் இரண்டும் ஒரே தொழிலைத்தான் செய்யும். ஆனால் தென்னவனின் போர்யானையின் இரண்டு கொம்புகளும் இருவேறு பணிகளைச் செய்யும். ஒரு கொம்பு பகையரசர் நெஞ்சில் உழும். மற்றொன்று பகையரசர் கோட்டை மதிலைத் திறக்கும் ===105=== <poem>தோற்ற மலைகடல் ஓசை புயல்கடாஅங் காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய்க் – கூற்றுங் குறியெதிர்ப்பைக் கொள்ளும் தகைமைத்தே யெங்கோன் எறிகதிர்வேல் மாறன் களிறு. - 105 </poem> ::தோற்றம் மலை கடல் ஓசை புயல் கடாஅம் காற்றின் நிமிர்ந்த செலவிற்று ஆய்க் கூற்றும் குறியெதிர்ப்பைக் கொள்ளும் தகைமைத்தே எங்கோன் எறி கதிர் வேல் மாறன் களிறு. ::எம் தலைவன் ஒளி வீசும் வேலை உடைய மாறன், அவன் களிறு தோற்றத்தில் மலை போன்றது. ஓசை புயல்மழையின் இடி முழக்கம் போன்றது. ஒழுகும் மதமும் புயல்மழை ஒழுகுவது போன்றது. அது காற்றைப்போல நிமிர்ந்து செல்லும். கொல்லும் திறத்தைக் கூற்றுவனும் கடன் வாங்கிக்கொள்ளும் திறம் படைத்தது. ==பாண்டியன் 106-110== ===106=== <poem>அடுமதில் பாய அழிந்ததன் கோட்டைப் பிடிமுன் பழகழிதல் நாணி – முடியுடை மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்வேல் தென்னவர் கோமான் களிறு. – 106</poem> ::அடு மதில் பாய அழிந்த தன் கோட்டைப் பிடி முன்பு அழகு அழிதல் நாணி முடியுடை மன்னர் குடரால் மறைக்குமே செம் கனல் வேல் தென்னவர் கோமான் களிறு. ::பகைவர் கோட்டையை அழித்துப் பாய்ச்சிய தன் கொம்பின் அழகு அழிந்து கிடப்பதைத் தன் பெண்யானைக்குக் காட்ட நாணி மன்னரைக் குத்திய குடரால் தன் கொம்பை மறைத்துக்கொண்டு தென்னவர் கோமான் களிறு வந்து நிற்கும். ===107=== <poem>வெருவரு வெஞ்சமத்து வேலிலங்க வீழ்ந்தார் புருவ முரிவுகண் டஞ்சி – நரிவெரீஇச் சேட்கணித்தாய் நின்றிழைக்குஞ் செம்மற்றே தென்னவன் வாட்கணித்தாய் வீழ்ந்தார் களம். – 107</poem> ::வெரு வரு வெம் சமத்து வேல் இலங்க வீழ்ந்தார் புருவ முரிவு கண்டு அஞ்சி நரி வெரீஇச் சேட்கு அணித்தாய் நின்று இழைக்கும் செம்மற்றே தென்னவன் வாட்கு அணித்தாய் வீழ்ந்தார் களம். ::தென்னவன் வாளுக்கு இரையாகி வேலைத் தாங்கிய கையோடு போர்க்களத்தில் வீழ்ந்து கிடப்பவரின் புருவம் வளந்திருக்கும் சினத்தைக் கண்டு அஞ்சிப் பிணம் தின்னும் நரி வெருண்டு ஓடி அண்மைய தொலைவில் நின்று பார்த்துக்கொண்டே இருக்கும். இது போர்க்களக் காட்சியின் பயங்கரத் தோற்றம். ===108=== <poem>ஏனைய பெண்டிர் எரிமூழ்கக் கண்டுதன் தானையாற் கண்புதைத்தான் தார்வழுதி – யானையும் புல்லார் பிடிபுலம்பத் தன்கண் புதைத்தே பல்யானை அட்ட களத்து. – 108</poem> ::ஏனைய பெண்டிர் எரி மூழ்கக் கண்டு தன் தானையால் கண் புதைத்தான் தார் வழுதி யானையும் புல்லார் பிடி புலம்பத் தன் கண் புதைத்தே பல் யானை அட்ட களத்து. ::வழுதி போர்க்களத்தில் பகைவரை அழித்தான். கணவன் மாண்டது கண்டு அவன் பெண்டிர் தீயில் விழுந்து உயிர் விட்டனர். வழுதி அதனைப் பார்க்க முடியாதவனாய் இரக்கம் கொண்டு தன் மேலாடையால் தன் கண்களை மூடிக்கொண்டான். பகைவரின் களிறுகள் மாண்டுபோகவே அவற்றின் பெண்யானைகளும் புலம்பின. அதனைக் கண்ட வழுதியின் களிறும் தன் கண்களைத் தன் கைகளால் மூடிக்கொண்டது. ===109=== <poem>வாகை வனமாலை சூடி அரசுறையும் ஓகை உயர்மாடத் துள்ளிருந்து – கூகை படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே தென்னன் விடுமாற்றங் கொள்ளாதார் நாடு. – 109</poem> ::வாகை வன மாலை சூடி அரசு உறையும் ஓகை உயர் மாடத்து உள் இருந்து கூகை படு பேய்க்குப் பாட்டு அயரும் பண்பிற்றே தென்னன் விடு மாற்றம் கொள்ளாதார் நாடு. ::தென்னன் ஆணையை ஏற்றுக்கொள்ளாத பகைவர் பிறரை வென்ற மாலையை அழகுடன் சூடிக்கொண்டு உவகையுடன் (ஓகை) இருப்பர். எனினும் கூகை அவர்களது மாடத்துக்குள்ளே இருந்துகொண்டு அவர்கள் சாவப்போவதைப் பாட்டாகப் பாடும். பேய்களை அழைத்துப் பாட்டுப் பாடும். இது தென்னன் அழிக்கப்போகும் அறிகுறிப் பாட்டு. ===110=== <poem>பறைநிறை கொல்யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த் திறைமுறையின் உய்யாதார் தேயம் – முறைமுறையின் ஆன்போய் அரிவையர் போய் ஆடவர்போய் ஆயிற்றே ஈன்பேய் உறையும் இடம். – 110</poem> ::பறை நிறை கொல் யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த் திறை முறையின் உய்யாதார் தேயம் முறை முறையின் ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே ஈன் பேய் உறையும் இடம். ::பஞ்சவர் என்னும் பாண்டியர்க்குத் தோழனாகித் திறை தந்து பிழைத்துக்கொள்ளாதவர் தேசமானது ஆனிரைகள், மகளிர், ஆடவர் ஆகியோர் விட்டுவிட்டுச் சென்றதால் பிணம் தின்னும் பேய் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு வாழும் இடமாக மாறிவிட்டது. ==பாண்டியன் 111-115== ===111=== <poem>கொடித்தலைத்தார்த் தென்னவன் தோற்றான்போல் நின்றான் மடித்தவாய் சுட்டிய கையாற் – பிடித்தவேற் கண்ணேரா ஓச்சிக் களிறணையாக் கண்படுத்த மண்ணேரா மன்னரைக் கண்டு. – 111</poem> ::தொடித் தலைத் தார்த் தென்னவன் தோற்றான் போல் நின்றான் மடித்த வாய் சுட்டிய கையால் பிடித்த வேல் கண் நேரா ஓச்சிக் களிறு அணையாக் கண் படுத்த மண் நேரா மன்னரைக் கண்டு. ::தன் தாயக மண்ணை நினைத்து வேலைக் கையிலே தாங்கி வந்து கண்ணோட்டம் இல்லாமல் பாய்ச்சினான் அந்த வீரன். அவன் தன் களிறு மாண்டுகிடக்கும் மெத்தையில் கண்ணுறக்கம் கொண்டிருக்கிறான். சினம் கொண்டு மடித்த வாயோடு கிடக்கிறான். தன் கையால் தென்னவனைச் சுட்டிக்கொண்டு கிடக்கிறான். அதனைப் பார்த்துத் தென்னவன் தோற்றவன் போல் நின்றான். இப்படிப்பட்ட வீரனைக் கண்டு இரக்கப்பட்டு நின்றான். ===112=== பாடல் 112 <poem>தொழில்தேற்றாப் பாலகனை முன்னேறீஇப் பின்னின் அழலிலைவேல் காய்த்தினார் பெண்டிர் – கழலடைந்து மண்ணீத்த லென்ப வயங்குதார் மாமாறன் கண்ணீத்தந் தீர்க்கு மருந்து. – 112</poem> ::தொழில் தேற்றாப் பாலகனை முன்னேறீஇப் பின்னின் அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து மண் ஈத்தல் என்ப வயங்கு தார் மா மாறன் கண் நீத்தம் தீர்க்கும் மருந்து. ::பெண்டிர் தம் போர்த்தொழில் பயிலாத பாலகனை முன்னே நிறுத்தி, மின்னும் வேலைக் கையிலே கொடுத்து, தாம் பின்னே நின்றுகொண்டு, அவனுக்கு தெம்புச்சூடு ஏற்றிப் போருக்கு அனுப்புவர். மாறன் இத்தகைய தாய்மாரின் காலைத் தொட்டு வணங்கி, தான் வென்ற நாட்டை அவளுக்குத் தருவான். இது மகனை இழந்த அந்தத் தாயின் கண்ணீர் வெள்ளத்தைத் தீர்க்கும் மருந்து. ===113=== <poem>சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறுந்துணையும் நின்றதுகொல் நேர்மருங்கில் கையூன்றி – முன்றில் முழங்கும் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்(கு) உழந்துபின் சென்றவென் நெஞ்சு. 113 </poem> ::சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறும் துணையும் நின்றதுகொல் நேர் மருங்கில் கையூன்றி முன்றில் முழங்கும் கடா யானை மொய்ம் மலர்த்தார் மாறற்(கு) உழந்து பின் சென்ற என் நெஞ்சு. ::மாறன், முழங்கும் யானைக்கடாவின்மீது வருபவன். மலர்மாலையை அணிந்திருப்பவன். அவன் பின்னே என் நெஞ்சு சென்றது. அது இப்போது அவனிடம் சென்றுவிட்டதா? அவன் நெஞ்சில் புகுந்துவிட்டதா? அவனைப் பார்ப்பதற்கு அனுமதி வெறுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறதா? அவனுக்கு நேராகப் பக்கத்தில் தன் கையை ஊன்றி நின்றுகொண்டிருக்கிறதா? இல்லை முற்றத்திலேயே இருக்கிறதா? ஒன்றும் தெரியவில்லையே! ===114=== <poem>உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக் கழுதை செவிஅரிந்து அற்றால் – வழுதியைக் கண்டநம் கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள் கொண்டன மன்னோ பசப்பு. 114</poem> ::உழுத உழுத்தம் செய் ஊர்க் கன்று மேயக் கழுதை செவி அரிந்து அற்றால் வழுதியைக் கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத் தோள் கொண்டன மன்னோ பசப்பு. ::உழுது விதைத்து விளைந்த உழுந்து வயலில் புகுந்து ஊராரின் கன்றுக்குட்டி மேய்ந்துவிட்டது. அதற்குத் தண்டனை வழங்கியவர்கள் கழுதையின் காதை அறுத்துவிட்டனர். இது எப்படி நீதி ஆகும்? அது போலத்தான் இங்கும் நடக்கிறது. வழுதியைக் கண்டதோ என் கண். அதற்குத் தண்டனையாக என் தோளில் அல்லவா பசப்பு-நோய் ஏறுகிறது. இது அடுக்குமா? ===115=== <poem>நறுவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா மறவேந்தன் வஞ்சியான் அல்லன் – துறையின் விலங்காமை நின்று வியன்தமிழ்நா டைந்தின் குலங்காவல் கொண்டொழுகும் கோ. - 115</poem> ::நறு வேந்து கோதை நலம் கவர்ந்து நல்கா மறவேந்தன் வஞ்சியான் அல்லன் துறையின் விலங்காமை நின்று வியன் தமிழ்நாடு ஐந்தின் குலம் காவல் கொண்டு ஒழுகும் கோ. ::தமிழ்நாடு ஐந்து பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. அவற்றை வெவ்வேறு குலத்தவர் ஆண்டுவந்தனர். இந்த ஐந்து குலத்தவரையும் காக்கும் பொறுப்பினை மேற்கொண்டிருந்த கோமகன் பாண்டியன். அவன் தமிழ்நாடன். அவன் நல்ல வேந்தன். கோதைமாலை அணிந்தவன். என் நலத்தையெல்லாம் கவர்ந்துகொண்டவன். கவர்ந்துகொண்டு திரும்பத் தராதவன். மறம் நிறைந்த கொடுங்கோலன். அவன் வஞ்சியரசன் சேரன் அல்லன். எனக்கு வஞ்சனை செய்யாமல் இருப்பவனும் அல்லன். என்ன செய்வது? அவன்தான் என் கோமகன். ::5 பிரிவு – சேரர், சோழர், பாண்டியர், கொங்கர், தொண்டையர் ==முன் தொகுப்பு (உரைக்காக)== பாடல் 1 :செங்கால் மடநாராய்! தென்உறந்தை சேறியேல், :நின்கால்மேல் வைப்பன்என் கையிரண்டும் - வன்பால் :கரைஉரிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற்(கு), :உரையாயோ யான்உற்ற நோய். (''அழகிய நாரையே, தெற்கேயுள்ள உறையூருக்குச் செல்வாயானால், உன் காலைப் பிடித்துக் கும்பிடத் தயார். தேகத்தின் வலிமை காரணமாகக் கரையின் மேல் உராய்ந்து, உராய்ந்து ஏறிய மீனானது மறுபடியும் நீரில் விழுந்து விடுகிற மீனின் தேகக்கொழுப்பு சோழனுக்கு யான் உற்ற காதல் கூறுவாயாக!'') (சேரன் குறிப்பு: ‘மீன்கள் கரையின் மீது துள்ளிவிழுந்து விளையாடுகின்ற காவிரிநாடனுக்கு- சோழனுக்கு - மையலால் யானடைந்துள்ள துன்பத்தைக் கூறுவாயாக.) (‘கரையேறி மீன் விளையாடும் காவிரிநாடு’ என்பது இவ்வடியின் மீளாக்கமே.) ;பாடல் 2 :துடியடி, தோல்செவி தூங்குகை, நால்வாய்ப் :பிடியே! யான் நின்னை இரப்பல், கடிகமழ்தார்ச் :சேலேக வண்ணனொடு சேரி புகுதலும்எம்் :சாலேகம் சார நட. (''கெஞ்சி கேட்டுக்கொள்ளுகிறேன். வாசனை கமழும் மாலை சூடிய,சந்தனம் பூசிய பாண்டியனோடு, ஊருக்குள் பிரவேசிக்கவும் அதாவது,நீராடிவிட்டு உன்மேல் ஏறி ஊருக்குள் மன்னன் புகும் போது, எங்கள் வீட்டு ஜன்னலை ஒட்டி நடந்து வரவேண்டும்.'') ;பாடல் 3 :குடத்து விளக்கே போல் கொம்பன்னார் காமம் :புறப்படா; பூந்தார் வழுதி - புறப்படில், :ஆபுகு மாலை அணிமலையில் தீயே போல் :நாடறி கெளவை தரும். (''பாண்டியன் மேல் பெண்கள் வைத்த காதல் வெளியே தெரியாது. மாலை சூடிய பாண்டியன் பவனி வருவதற்காகப் புறப்பட்டு விட்டாலோ பசுக்கள் மேய்ச்சல் புலங்களிலிருந்து ஊரு்க்குள் புகும் மாலை நேரத்தில் ஊருக்குப் பக்கத்தில் உள்ள மலைச்சரிவில், நாட்டார் எல்லோரும் அந்த பெண்களது காதல் நோயைத் தெரிந்து, வம்பளப்பதற்கு வாய்விடும்'') ;பாடல் 5 :நீரும் நிழலும் போல் நீண்ட அருளுடைய :ஊரிரே ! என்னை உயக்கொண்மின் ! - போரிற்(கு) :உழலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக்(கு) :அழலும்என் நெஞ்சம் கிடந்து. (''காதல் நோயால் என் நெஞ்சு சதா கொதித்த வண்ணமாக இருக்கிறது. ஊரிரே என்னை உயக்கொண்மின்!'') ;பாடல் 6 :போரகத்துப் பாயுமா ! பாயா(து) ஒருபடியா, :ஊரகத்து மெல்ல நடவாயோ ! - பார :மதவெங் களியானை மாறன் தன் மார்பம், - :கதவங்கொண்(டு) யாமும் தொழ (''இந்தக் கவி பெண்ணின் கூற்று என்பது மறைவாய் கிடக்கிறது. மார்பம் தொழ, கதவங்கொண்டு, என்னும் சொற்களை வைத்துத்தான் காதலுற்ற பெண் பேசுகிறாள். இப்படி காதலை மறைவில் வைத்துச் சொல்வதிலிருந்து ஒரு நாண பாவம் இருப்பதைத் தெளிவாக்குகிறது'') ;பாடல் 7 :தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி இளவளவன் :மண்ணகம் காவலனே என்பரால் - மண்ணகம் :காவலனே ஆனக்கால் காவானே மாலைக்கண் :கோவலர்வாய் வைத்த குழல் (''தெளிந்த நீர்நிலைகளில் பூத்த செங்கழுநீர் மலர்களை மாலையாய்த் தொடுத்து அணிந்த சென்னி என்றும் இளவளவன் என்றும் பாராட்டப்படுகிற சோழன் உலகத்தைக் காக்கிறான் என்று சொல்லுகிறார்கள். கட்டளை இட்டுத் தடுக்க மாட்டானா இந்த மாலைப்பொழுது வந்துவிட்டதை அறிவிக்கும் வாய்வைத்து ஊதுகின்ற புல்லாங்குழலை'') [[பகுப்பு:சங்க இலக்கியம்]] [[பகுப்பு :பழந்தமிழ் இலக்கியங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]] iqexzraafels0yqvr7chrcxaovrj165 1834748 1834745 2025-06-23T15:10:11Z 2409:408D:58E:75DF:0:0:1946:68A0 1834748 wikitext text/x-wiki {{நிறைவுறா}} {{விபரம் | title = முத்தொள்ளாயிரம் | noauthor = | section = | previous = | next = | notes = ''[[w:முத்தொள்ளாயிரம்|முத்தொள்ளாயிரம்]] என்பது தமிழ் இலக்கியத்தில் தொகை நூல் வகையைச் சேர்ந்தது. இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. இவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. பல்லாண்டுகளுக்கு முன்னர்ப் ''புறத்திரட்டு'' ஆசிரியர் நூற்றொன்பது பாக்களை மட்டும், தம் தொகை நூலில் திரட்டி வைத்துள்ளார். அவை கடவுள் வாழ்த்தாக ஒன்றும், சேரனைப் பற்றி இருபத்திரண்டும், சோழனைப் பற்றி இருபத்தொன்பதும், பாண்டியனைப் பற்றி ஐம்பத்தாறும் சிதைந்த நிலையில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெண்பாக்களாகும். மூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை முதலான அரிய செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. அருணோதயம் பதிப்பு நூலுக்கு மதிப்புரை வழங்கியுள்ள சென்னைப் புதுக்கல்லூரிப் பேராசிரியர் நா. பாண்டுரங்கன் முத்தொள்ளாயிரப் பாடல் ஒவ்வொன்றும் தகதகக்கும் தங்கநிலா என்று பாராட்டியுள்ளார். மேலும் கடைவாயில் அடக்கிக்கொண்டு சப்பிச் சுவைக்க வேண்டிய கற்கண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார். உலா வரும் அரசன்மீது காதல் கொண்டு தலைவி கூறும் ஒருதலைக் காமச் செய்திகளை, கைக்கிளைப் பொருண்மைச் செய்திகளைக் கொண்ட பாடல்கள் இதில் பெரும்பகுதியாக இடம்பெற்றுள்ளன. ''}}{{Featured download}}<br/> {{TOCright}} '''பாடல்கள்''' ==கடவுள் வாழ்த்து== <poem>மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப் – பின்னரும் ஆதிரையான் ஆதிரையான் என்றென்(று) அயருமால் ஊர்திரைநீர் வேலி உலகு – 1</poem> மன்னிய = நிலையாக இருக்கின்ற; ஆதிரை = திருஆதிரை என்னும் நட்சத்திரம், ஆகின்ற திரை (அலை); அயரும்= கொண்டாடும்; ஆல் = அசைநிலை; ஊர் = உலாவு :என்றும் நிலைபெற்றிருக்கும் விண்மீன்கள், நிலா (மதியம்), கனலும் கதிரவன் என்று இவற்றையெல்லாம் முதன்முதலில் படைத்த முதல்வனைப் பின்னரும் ஆதிரையான் (திருவாதிரை நாளுக்கு உரிய சிவன்) என்றும், ஆதிரையான் (ஆ திரையான் ஆகி, வளரும் கடலின் அலைத்திரையில் பள்ளிகொண்டிருக்கும் திருமால்) என்றும் உலாவும் அலைகளைக்கொண்ட கடலை வேலியாக உடைய உலகில் வாழும் மக்கள் கொண்டாடுகின்றனர். நாண்மீன்<ref>https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D&searchhws=yes</ref> = நாள்மீன் அதாவது அசுவினி முதலான 27 நட்சத்திரங்கள். == சேரன் 2-5== <poem>தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத் தேயத் திரிந்த குடுமியவே – ஆய்மலர் வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக் கண்டுலாஅம் வீதிக் கதவு – 2 :[குடுமி = கதவு சுழலும் தண்டு; ஆய் = அழகு; உலா = திரி; கண்ணி = ஆடவர் தலைக்குச் சூடும் மாலை; வயமான் = குதிரை] : அழகிய மலர்களாற் கோத்த வண்டு மொய்த்துத் திரியும் தலைமாலையைச் சூடியவனும் குதிரை பூட்டிய தேரில் திரிபவனுமாகிய சேரனைக் கண்டு அவன் உலாவும் வீதிகளின் வீட்டுக் கதவுகளைத் தாய்மார்அடைப்ப மகளிர் மீண்டுந் திறப்ப என்று மாறிமாறி நிகழவும் தேய்ந்து உருமாறிய கொண்டிகளை (கதவு சுழலும் தண்டுகள்) உடையவாயின. : அதாவது, கோதை வண்டு மொய்க்கும் பூமாலை அணிந்துகொண்டு குதிரை பூட்டிய தேரில் உலா வந்தான். அவன் அழகைக் காண விரும்பி மகளிர் கதவைத் திறந்தனர். கண்டால் அவள் மயங்கிவிடுவாள் என்று அவர்களது தாய்மார் கதவை மூடினர். இப்படி ஒருவர் மூட, ஒருவர் திறக்க இருந்ததால் கதவு மாட்டியிருந்த கொண்டி தேய்ந்ததுதான் மிச்சம். யாருடைய எண்ணமும் நிறைவேறவில்லை. வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேல் கண்டவர் மாமையை அன்றோ இழப்பது – மாமையிற் பன்னூறு கோடி பழுதோ,என் மேனியிற் பொன்னூறி யன்ன பசப்பு - 3 :சேரன் கோதை தாவும் போர்க்குதிரை பூட்டிய தேரில் செல்பவன். அவன் இப்போது மெதுவாகச் செல்லும் குதிரை பூட்டிய தேரில் உலா வருகிறான், அவனைக் கண்ட மகளிர் தன் மேனியிலிருந்த மாந்தளிர் போன்ற மாமை நிறத்தை இழந்துவிட்டனர். நானோ என் மேனியில் பொன்னிறம் ஊறிக்கிடப்பது போன்ற பசப்பு நிறத்தைப் பெற்றிருக்கிறேன். இது பழுதாகுமா? ஆகாது. மாமை நிறத்தைக் காட்டிலும் பொன்னிறம் பல நூறு மடங்கு எனக்கு மேன்மையானது. காரணம் அவனுக்காக ஏங்கிக் கிடைத்த பேறு ஆயிற்றே – என்கிறாள் ஒரு தலைவி. கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில் அடைத்தாள் தனிக்கதவம் அன்னை – அடைக்குமேல் ஆயிழையாய் என்னை அவன்மேல் எடுத்துரைப்பார் வாயும் அடைக்குமோ தான் - :சேரமன்னன் கோதை கடல் போன்ற படைசூழ ஊர்வலம் வருகிறான். ஆயிழைத் தோழியே! அவனைக் கண்ணாரக் காணவொட்டாமல் தாய் கதவை அடைத்துத் தாளிட்டிருக்கிறாள். ஆயின், அவனோடு என்னைச் சேர்த்துப் பேசும் ஊரார் வாயை அவளால் அடைக்கமுடியுமா? வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும் நிரைபொரு வேல்,மாந்தைக் கோவே – நிரைவளையார் தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர்தாய்மார் செங்கோலன் அல்லன் என. – 5</poem> :மன்னா! வணங்காதவரை வணங்கச் செய்து அவர்தம் மண்ணைக் கொள்ளலாம். உன் வலையில் விழுந்து கிடக்கும் பெண்ணின் அழகைக் கவரலாமா? பெண்ணின் தாய்மார் உன்னைச் செங்கோலன் அல்லன் என்று கூறுகிறார்களே! மாந்தை நகர மக்களின் கோ. மலை போல் அகன்ற மார்பினை உடையவன். நிரையாக நின்று வேலால் தாக்குபவர் மாந்தை நகர மக்கள். மகளிர் வரிசையாக வளையல் அணிந்தவர். கையின் வளையல் கோலத்தை வௌவலாமா? == சேரன் 6-10== <poem> புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை நன்னாகம் நின்றலரும் நன்னாடன் – என்னாகம் கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான் என்கொல் இவரறிந்த வாறு? – 6</poem> :மாந்தை நன்னாடனாகிய சேரன் ஒருநாள் இரவுக் கனாவில் என் மார்பகத்தைத் தடவிக்கொடுத்தான். இது இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? கண்டபடி பேசுகிறார்களே! :புன்னாகம், நன்னாகம், தென்னை ஆகியன மலரும் ஊர் மாந்தை நகரம். <poem> கடும்பனித் திங்கள்தன் கைப்போர்வை யாக நெடுங்கடை நின்றதுகொல் தோழி – நெடுஞ்சினவேல் ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக் காணிய சென்றவென் நெஞ்சு. – 7</poem> :பனி பொழியும் மாதம் இது. கையைப் போர்வையாக்கிக்கொண்டு நடுங்குகிறேன். கோதை அரசன் என் நடுக்கத்தைப் போக்குவான் என்று அவனைக் காண என் நெஞ்சு சென்றது. அவன் கோட்டை வாயிலில் அது நின்றுகொண்டிருக்கிறது போலும். என்னைப் போலவே கையைப் போர்வையாக்கிக்கொண்டு நிற்கிறது போலும். :கோதை பெருஞ்சினம் கொண்ட வேல்வீரன். பச்சைக் கல் பதித்த பூணாரமும், பூ மாலையும் அணிந்திருப்பவன். <poem> ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக் காணிய சென்று கதவடைத்தேன் – நாணிப் பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு. – 8</poem> :கோதை உலா வந்தான். அவனைக் காணவேண்டும் என்று சென்றேன். நாணம் வந்துவிட்டது. உடனே நானே கதவை அடைத்துவிட்டேன். வறுமையில் வாடுபவர் பெருஞ் செல்வம் படைத்தவர் இல்லத்துக்குச் செல்வார்கள். பின் திரும்புவார்கள். மீண்டும் செல்வார்கள். இப்படித்தான் என் நெஞ்சும் கோதை அரசனை காணப் போய் வந்துகொண்டிருக்கிறது. <poem> வருக குடநாடன் வஞ்சிக்கோ மான்என்(று) அருகலர் எல்லாம் அறிய – வருகலாம் உண்டா யிருக்கஅங்(கு) ஒண்தொடியாள் மற்(று)அவனைக் கண்டாள் ஒழிந்தாள் கலாம் – 9</poem> :கலாம் என்பது கலகலப்பு. :வருக குடநாடன் :வருக வஞ்சிக் கோமான் :என்று இவள் அருகில் இல்லாதவர்கள் எல்லாம் கலகலப்பாக இருக்கின்றனர். :ஆனால் இவள் மட்டும் அவனைக் கண்ட பின்பு கலகலப்பு ஒழிந்து காணப்படுகிறாளே! ஏங்கிக் கிடக்கிறாளே! <poem> இவன்என் நலங்கவர்ந்த கள்வன் இவன்எனது நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று – அஞ்சொலாய் செல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்குச் சொல்லும் பழியோ பெரிது. – 10</poem> :இவன் என் அழகைக் கவர்ந்துகொண்ட கள்வன், :இவன் என் நிறை நெஞ்சைக் குறை நெஞ்சு ஆக்கிய கள்வன் :என்று சேரலர் கோக்கோதை செல்லுமிடமெல்லாம் அவனைப் பழி தூற்றுகிறார்களே! :“நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை” – கலித்தொகை 133 காதலை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடக்கி வைத்திருந்தேன். என் காதலைப் பிறர் அறியும்படிக் காட்டச் செய்த கள்வன் இவன் – என்கிறாள் == சேரன் 11-15== காராட் டுதிரந்தூஉ யன்னை களனிழைத்து நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ? - போராட்டு வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதைக்கென் னெஞ்சங் களங்கொண்ட நோய். 11 இது தலைவி கூற்று. மிக்க சினத்தையும் வேலையும் கொண்டு போராடிப் பகைவரை வென்று. அவர்தம் களத்தைக் கைப்பற்றிய சேரன்பால் என் நெஞ்சே இடமாய்க்கொண்டு எழுந்த வேட்கைநோய், என் அன்னை வீட்டின்பால் ஓரிடத்தில் தெய்வத்தை எழுந்தருளச் செய்து (தெய்வத்தை ஆவாஹனம் செய்தல்) வெள்ளாட்டைப் பலியிட்டு அதன் குருதியைத் தெளித்து நீராட்டி நீங்கு. ” என்று கூறினால் நீங்கிவிடுமோ? ‘நோய் நீங்குமோ’ என இயைக்க. காராடு - வெள்ளாடு; உதிரம் - குருதி, இரத்தம்; கோதை - சேரன். மல்லல்நீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினும் சொல்லவே வேண்டும் நமகுறை - நல்ல திலகங் கிடந்த திருநுதலாய்! அஃதால் உலகங் கிடந்த இயல்பு. 12 இது தலைவி தோழிக்குக் கூறியது. சிறந்த திலகம் அணிந்த அழகிய நெற்றியையுடைய தோழியே! நீர்வளம் மிக்க மாந்தை நகரத்தாரின் பெருமை மிக்க மன்னவனாகவே இருப்பினும் அச்சேர மன்னனிடம் அஞ்சாதே சென்று என் மனக்குறையை நீ அவனிடம் சொல்லத்தான் வேண்டும். அஃதல்லவா உலகில் உயர்ந்தோரிடம் அமைந்திருக்கும் நற்பண்பாகும்? “ உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு” என்பதைத் தன் தோழிக்கு நினைவூட்டி, சேரனிடம் சென்று தன் குறையைக் கூறுமாறு தலைவி வேண்டுகிறாள். மல்லல் - வளப்பம்; மாந்தை - சேரனது நகரங்களில் ஒன்று; கடுங்கோ - சேரனது பெயர்களுள் ஒன்று, “செல்வக் கடுங்கோ வாழியாதன்” என வருதல் காண்க. நமகுறை - நம்+அ+குறை; ‘அ’ - ஆறாம் வேற்றுமை பன்மை உருபு; திலகம் - நெற்றியிலிடும் பொட்டு; திரு - அழகு; நுதல் - நெற்றி; உலகம் - உயர்ந்தோர், “உலகெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே” என்பது தொல்காப்பியம். நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய ஊரிரே என்னை உயக்கொண்மின் - போரிற் புகலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக் கழலுமென் னெஞ்சங் கிடந்து. 13 இதுவும் தலைவி கூற்று. போரை விரும்பும் கள்ளுண்டு களித்த யானைப்படைகளை யுடையவனும் பூழி நாட்டின் தலைவனாய் விளங்குகின்றவனும் ஆன சேரனிடம் யான் கொண்ட வேட்கை நோயால் என் நெஞ்சம் செயலறியாது துன்புற்று வேகின்றது; நீரும் நிழலும் தம்மையடைந்தார்க்கு எல்லாம் , வெப்பத்தைப் போக்கிக் குளிர்ச்சி தருவதுபோலப் பிறர் துன்பம் நீக்கும் மிகுந்த அருளுடைய ஊர்மக்களே! என் துயர் நீக்கி என்னை உயிர்வாழச் செய்யுங்கள். (இவ்வாறு தலைவி வேண்டுகிறாள்) புகலும் - விரும்பும், “ போரெனிற் புகலும் புனைகழல் மறவர்” எனச் சங்க இலக்கியத்துள்ளும் வந்துள்ளமை காண்க. பண்டைக்காலத்தில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரும் அதன் சுற்றுப்புறங்களும் ‘செந்தமிழ்நாடு’ என்றும் தமிழ் வழங்கிய பிற நிலப்பகுதிகள் ‘கொடுந்தமிழ்நாடுகள்’ என்றும் வழங்கப்பட்டன. அவை தென்பாண்டி நாடு, குடநாடு, குட்டநாடு, கற்காநாடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, அருவாவடதலை நாடு, சீதநாடு, மலையமான் நாடு, புனல்நாடு என்பனவாம். அவற்றுள் பூழிநாடு என்பது பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடைக்கண் அமைந்து ஒரு காலத்தில் பாண்டியர் ஆட்சியிலும் ஒரு காலத்தில் சேர மன்னர் ஆட்சியிலுமாக மாறி மாறி இருந்திருத்தல் வேண்டும். அதனால் இருவருமே “பூழியர்கோ” எனப் பாடப்பட்டுள்ளனர். “பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன்” என்பதில் பாண்டியனைக் குறித்தல் காண்க. கோதை - சேரன்; அழலும் - வேகும். அள்ளற் பழனத் தரக்காம்பல்வாயவிழ வெள்ளந்தீப் பட்டதென வெரீஇ - புள்ளினந்தங் கைச்சிறகாற் பார்ப்பொடுக்குங் கவ்வை யுடைத்தரோ நச்சிலைவேற் கோக்கோதை நாடு. 14 இது சேர நாட்டின் இயற்கைவளம் கூறுவது. நுனிக்கண் நஞ்சு தடவப்பெற்ற வேலையுடைய சேரமன்னன் நாடு, சேறு நிறைந்த வயல்களில் அரக்கு நிறத்தில் மலர்ந்து கிடக்கும் ஆம்பல் மலர்களைக் கண்ட பறவைக் கூட்டங்கள், நீரில் தீப்பற்றிக் கொண்டது என்றஞ்சித் தம் கைகளைப்போல் விளங்கும் சிறகுகளால் தம்முடைய இளங்குஞ்சுகளை அணைத்துப் பாதுகாக்க முயலும் பேரொலியையுடையதாக விளங்குகிறது. அள்ளல் - சேறு; பழனம் - வயல்; அரக்கு - செந்நிறம்; வெள்ளம் - தண்ணீர்; வெரீஇ - வெருவி, அஞ்சி; சொல்லிசையளபெடை ; புள் - பறவை; கைச்சிறகு - சிறிய சிறகு எனலுமாம்; பார்ப்பு - இளங்குஞ்சு; கவ்வை - ஆரவாரமான ஒலி. அரோ- அசை; களிகள் களிகட்கு நீட்டத்தங் கையால் களிகள் விதிர்த்திட்ட வெங்கள் - துளிகலந் தோங்கெழில் யானை மிதிப்பச் சேறாகுமே பூம்பொழில் வஞ்சி யகம். 15 இது சேர நாட்டின் தலைநகர் வஞ்சியின் வளம் கூறுவது. பூஞ்சோலைகள் நிறைந்த வஞ்சிநகரத் தெருக்கள், அத்தெருக்களில் கள்ளுண்டு களிப்பவர்கள் தம்மைப் போன்ற கட்குடியர்களுக்குத் தாம் உண்ணும் கள்ளை நீட்ட, அதனை ஏற்றுக்கொள்ளும் குடியர்கள் தம் கைகளால் தொட்டுச் சிதறிய கொடுங்கள்ளின் துளிகள் நிறைந்து, அவ்வழியாகச் செல்லும் மலைபோன்ற அழகிய யானைகள் மிதித்தலால் சேறாகிக் கிடக்கின்றன. களிகள் - கட்குடியர்கள்; விதிர்த்தல் - விரல்களை உதறுவதால் நீர்த்துளிகள் நிலத்தின்கண் சிதறச் செய்தல்; வெங்கள் - கொடிய கள்; ஓங்கெழில் யானை - மலைபோல் உயர்ந்த அழகிய யானை, ஓங்கல் - மலை; “ஓங்கலிடைத் தோன்றி உயர்ந்தோர் தொழவிளங்கி” என வருதல் காண்க. ==சேரன் 16-20 == வானிற்கு வையகம் போன்றது வானத்து மீனிற் கனையார் மறமன்னர் - வானத்து மீன்சேர் மதியனையான் விண்ணுயர் கொல்லியர் கோன்சேரன் கோதையென் பான். 16 இது சேரனின் சிறப்புக் கூறுவது. இந்நிலவுலகம் வானத்தைப் போன்றது; இவ்வுலகையாளும் மன்னர்கள் வானத்தில் விளங்கும் விண்மீன்களைப் போன்றவர்கள்; விண்ணளவு உயர்ந்த கொல்லிமலையின் தலைவனான சேரமன்னன் விண்மீன்களுக்கிடையே வீறுடன் உலாவரும் வெண்ணிலாவைப் போன்றவன். வையகம் வானைப் போன்றது எனக் கூட்டுக. ‘வானிற்கு’ என்பது உருபுமயக்கம்; மீன் - விண்மீன்; கோன் - தலைவன்; சேரன்கோதை - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பல்யானை மன்னர் படுதிறை தந்துய்ம்மின் மல்லல் நெடுமதில் வாங்குவில் பூட்டுமின் வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன் வில்லெழுதி வாழ்வார் விசும்பு. 17 இது சேரனின் வீரச்சிறப்பைக் கூறுவது. சேர மன்னவனின் தூதரின் கூற்று. பல யானைகளையுடைய மன்னர்களாக இருப்பினும் உங்கள் நாட்டு வருவாயில் சேரனுக்குரிய பங்கினை உடனே கொடுத்து உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் நகரின் வளம்மிக்க உயர்ந்த மதில்களில் சேரனது சின்னமாகிய வளைந்த வில் சின்னத்தைப் பொருத்தி வையுங்கள். வாடாத மலர்மாலைகளை அணிந்து வானில் வாழும் தேவர்களும் சேரனது வில் சின்னத்தை வானில் பொறித்து வைத்தே பாதுகாப்பாக வாழ்கின்றார்கள். திறை - சிற்றரசர்கள் பேரரசர்களுக்கு ஆண்டுதோறும் செலுத்தும் வருவாய்ப் பங்கு, இதனைக் கப்பம் என்பர். மல்லல் - வளம்; வானோர் - வானுலகில் வாழும் தேவர்கள்; வானவன் - சேர மன்னன்; விசும்பு - வானம்; விசும்பில் எழுதப்படும் வில் மழைக்காலத்தில் தோன்றும் வானவில். தற்குறிப்பேற்ற அணி. அரும்பவிழ் தார்க்கோதை அரசெறிந்த ஒள்வேல் பெரும்புலவும் செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு வண்டாடு பக்கமும் உண்டு குறுநரி கொண்டாடு பக்கமும் உண்டு. 18 இதுவும் சேர மன்னனின் வீரச்சிறப்பும் வெற்றிச்சிறப்பும் கூறுவது. அன்றலர்ந்த மலர்மாலையணிந்த சேரன் பகையரசரை வென்றுகொண்ட ஒளிபொருந்திய வேலாயுதம் ஒருபக்கம் புலால் நாற்றமும் ஒருபக்கம் குங்குமம் கலந்த சந்தனத்தின் நறுமணமும் கலந்து விளங்குகின்றது. எனவே, அவ்வேலின்கண் நறுமணத்தை நாடிச் சுரும்புகளும் வண்டுகளும் மொய்க்கின்ற பக்கமும் உண்டு; புலாலை விரும்பிச் சிறு நரிகள் கொண்டாடும் பக்கமும் உண்டு. சேரனது வேலின்கண் தோய்ந்துள்ள புலாலை நீக்குவதற்கும் நேரமின்றி வெற்றி கொண்டாடப்படுகின்றது; அக்கொண்டாட்டம் நடைபெறும்போதே மீண்டும் அவ்வேல் போர்முனைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. இடைவிடாது சேரன் போருடற்றி வென்று வருகிறான் என அவனது வீரமிகுதி கூறப்பட்டுள்ளது. ஒள்வேல் - ஒளிபடைத்த வேல். வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப் பாற எறிந்த பரிசயத்தால் - தேறாது செங்கண்மாக் கோதை சினவெங் களியானை திங்கள்மேல் நீட்டுந்தன் கை. 19 இது யானைமறம் கூறுவது. சிவந்த கண்களையுடைய பெருமைமிக்க சேர மன்னனது, சினத்தையும் கொடிய கள்ளுண்டு களித்தலையும் உடைய யானை, ஆற்றல் பொருந்திய பகையரசர்களது விரிந்த, மாலை சூட்டிய, வெண்கொற்றக் குடைகளைப் பறித்து அவை அழிந்துபடுமாறு வீசி எறிந்த பழக்கத்தால் வெண்ணிறத்தையும் வட்ட வடிவத்தையும் கொண்டு வானில் வலம்வரும் முழுநிலவையும் - நிலவு வேறு, குடை வேறு என்று தெளியாது - பகையரசரின்வெண்கொற்றக்குடையென்று கருதி அதனைப் பறித்து எறியும்பொருட்டு அந்நிலவை நோக்கித் தன் கையை நீட்டுகிறது. இது தற்குறிப்பேற்ற அணி. வீறு - பெருமை, ஆற்றல், வலிமை; சால் - சான்ற - பொருந்திய; உரிச்சொல் தொடர்; தாம்ம் - மலர்மாலை; பாற - அழியுமாறு, “பழவினைகள் பாறும்வண்ணம்” (திருவாசகம்); பரிசயம் - பரிச்சயம் - பழக்கம்; களியானை - கள்ளுண்டு களித்த யானை. அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர் எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டால் பனிக்கடலுள் பாய்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான் காய்சினதேர்க் கோதை களிறு. 20 இதுவும் யானைமறம் கூறியது. பகைவரை வருத்தும் சினத்தையும் தேரையும் உடைய எம் தயலைவனாகிய சேரமன்னனது ஆண்யானை, வலிமையுடைய பகையரசர்களது கோட்டைமதிலின் இரும்புக்கதவுகளின்மீது பாய்ந்து நொறுக்கி அக்கதவினைத் தன் தந்தங்களால் தூக்கி உயர்த்திக் கொண்டு நிற்கும் காட்சி, குளிர்ந்த கடலின் நடுவே பாய்விரித்து நிற்கும் மரக்கலம் போலத் தோன்றுகிறது . அயில் - இரும்பு; எயில் - கோட்டைமதில்; கோடு - தந்தம்; பனி - குளிர்ச்சி; நாவாய் - மரக்கலம். == சேரன் 21-32 == மரகதப்பூண் மன்னவர் தோள்வளை கீழா வயிரக் கடகக்கை வாங்கித் - துயருழந்து புண்ணுற் றழைக்கும் குறுநரித்தே பூழியனைக் கண்ணுற்று வீழ்ந்தார் களம். 21 இப்பாடல் போர்க்கள இயல்பு கூறுவது. சேரனை எதிர்த்துப் போரிட்டு மாண்டுகிடக்கும் பகைவர்களது போர்க்களம், மரகத அணிகலன்களை அணிந்த மன்னர்களின் தோள்வளைகளுக்குக் கீழாக உள்ள உறுதியான கடகம் அணிந்த கைகளைக் கடித்து அதனால் புண்பட்ட வாயோடு ஊளையிடும் சிறுநரிக் கூட்டங்களையுடையதாய் விளங்குகிறது. வயிரம் - உறுதி; நவரத்தினங்களுள் ஒன்று எனலுமாம். கடகம் - முன்கையில் அணியும் அணி; தோள்வளை - தோளில் (புயத்தில்) அணியும் வளை; வாங்குதல் - கடித்தல். கரிபரந் தெங்கும் கடுமுள்ளி பம்பி நரிபரந்து நாற்றிசையுங் கூடி - எரிபரந்த பைங்கண்மால் யானைப் பகையடுதோள் கோதையைச் செங்கண் சிவப்பித்தார் நாடு. 22 இது சேரனது பகைவர் நாட்டின் அவலம் கூறியது. பசிய கண்களையுடைய பெரிய யானைப்படைகளாகிய பகையை வென்ற தோள்களையுடைய சேரனின் சிவந்த கண்களை மேலும் சிவப்பித்த பகைவரது நாடு, நான்கு திசைகளிலும் நெருப்புப் பற்றி எரிந்து, புகையடர்ந்து, பொருள்களெல்லாம் கருகி, கூரிய முட்செடிகள் அடர்ந்து, நரிகள் நெருங்கி வாழும் பாழுங்காடாக விளங்குகிறது . முள்ளி - முட்செடி; கண்சிவப்பித்தல் - சினத்தையுண்டாக்குதல், சினத்தினால் கண் சிவத்தல் இயல்பு. வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத்து ஊரறிய லாகா கிடந்தனவே - போரின் முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான் நகையிலைவேல் காய்த்தினார் நாடு. 23 இதுவும் பகைவர்நாட்டின் அவலம் கூறியவாறு. மொட்டவிழ்ந்த மலர்மாலையணிந்தவனும் முசிறிநகர மக்களின் தலைவனும் ஆன சேரனது ஒளிபடைத்த இலைவடிவ வேலால் போரின்கண் துன்புறுத்தப்பட்ட பகைவரின் நாடு, வேரோடிய அறுகம்புல் அடர்ந்து, எங்கும் சுரைக்கொடிகள் படர்ந்து, வேளைக்கீரைகள் பூத்து, ஊர்கள் இருந்த இடங்கள் இவை என்றறிய இயலாதவாறு பாழ்பட்டுக் கிடந்தன. அறுகை - அறுகம்புல்; பம்பி - புதிராக அடர்ந்து; வேளை - காட்டுக்கீரை; முசிறி - சேர நாட்டுத் துறைமுக நகரம். . சோழன் 24 - 26 திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர் இறந்துபடின் பெரிதாம் ஏதம் - உறந்தையர்கோன் தண்ணார மார்பின் தமிழ்நர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு. 24 உறையூரின் மன்னவன் சோழன்; அவன் குளிர்ந்த மாலையணிந்த மார்பின்ன்; தமிழ்மக்களின் இறைவன்; அவன் நகர்வலம் வருகிறான். அதனைத் தங்கள் பெண்மக்கள் பார்க்க நேரின், அவன்பால் வேட்கைகொண்டு துன்புறுவர் எனக் கருதிய தாய்மார்கள் தந்தம் வீடுகளின் வாயிற்கதவுகளை அடைத்து வைக்கின்றனர். “நகர்வலத்தைக் காணவியலாத நங்கையர் ஏக்கத்தால் இறந்துவிடவும் கூடும். அவ்வாறாயின், அதனால் ஏற்படும் துன்பம் மிகப் பெரிதாம். எனவே, மங்கையர் சோழனைக் கண்ணாரக் கண்டு களிக்குமாறு கதவுகளைத் திறந்துவிடுங்கள்; அவ்வாறு காண்பதால் ஏதேனும் தீமை நேருமாயின் அதைப்பற்றிப் பின்னர் சிந்திக்கலாம்”, என்று சிலர் கூறுகின்றனர். ( சோழனது நகர்வலத்தைக் காணவியலாமையால் உயிரை இழப்பதைக் காட்டிலும் அதனைக் கண்டு மையல் கொள்வதால் ஏற்படும் தீமை பெரிதன்று, என்பது கருத்து.) ஏதம் - துன்பம். குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை வதுவை பெறுகென்றாள் அன்னை - அதுபோய் விளைந்தவா இன்று! வியன்கானல் வெண்தேர்த் துளங்குநீர் மாமருட்டி யற்று. 25 இப்பாடல் கைக்கிளை. என் அன்னை, நான் மழலை பேசும் சிறுமியாக இருந்த காலத்தில் சோழமன்னனை மணந்துகொள்ளும் பேற்றினை நான் பெறவேண்டும் என்று வாழ்த்தினாள். நான் மணப்பருவத்தையடைந்துள்ள இன்று, அக்கூற்றெல்லாம் மாறிப்போய் அவனைக் கண்ணால் காண்டலும் ஆகாது என்று வாயிற்கதவுகளை அடைத்து வைக்கிறாள். கடுங்கோடையில் தண்ணீர்போல் தோற்றமளித்து அருகில் சென்று பார்க்கும்போது மறைந்துவிடுவதாய் நீர்வேட்கை கொண்ட விலங்குகளை மயங்கச் செய்கின்ற பேய்த்தேர் போலாயிற்றே என் ஆசை! இப்பாடல் உவமையணி. குதலைப் பருவம் - மழலைமொழி பேசும் அறியாப் பருவம்; கோழிக்கோமான் - உறையூரின் மன்னனாகிய சோழன், ‘கோழி’ என்பது சோழர் தலைநகரமாகிய உறையூர்க்கு வழங்கிய மற்றொரு பெயர் ; வதுவை - திருமணம்; வியன் - பெரிய; கானல் - கோடைக்காலம் , பாலைநிலம் ; வெண்தேர் - பேய்த்தேர், கானல்நீர்; மா - விலங்கு, கால்நடைகள்; மருட்டுதல் - மயங்கச் செய்தல்; அற்று - போன்றது; ஏ - அசைச்சொல். சுடரிலைவேற் சோழன்தன் பாடல மேறிப் படர்தந்தான் பைந்தொடியார் காணத் - தொடர்புடைய நீர்வலை யிற்கயல் போல்பிற ழும்மேதம் சாலேக வாயில்தொறுங் கண். 26 ஒளிபடைத்த வேலையேந்திய சோழன் தன்பாடலம் என்னும் குதிரையின் மேலேறிப் பசிய வளையலணிந்த மகளிரும் காணுமாறு நகர்வலம் வந்தான் ; தத்தம் வீடுகள்தோறும். வலை பொருத்தப்பெற்ற சாளரங்களின்பின்னிருந்து அவனைக் காணும் மகளிரின் கண்கள், நீர்வலையில் மாட்டிக்கொண்டு பிறழ்கின்ற மீன்களைப் போலத் தோன்றுகின்றன. இதுவும் உவமை. பாடலம் - சோழனது குதிரையின் பெயர்; (பாண்டியனது குதிரை ‘கனவட்டம்’ என்றும் சேரனது குதிரை ‘கோரம்’ என்றும் வழங்கப்பெற்றன.) தொடி - வளையல்; கயல் - மீன்; சாலேகம் - சாளரம் , காலதர்; ‘பிறழுமே’ என்பது ‘பிறழும்மே’ என விரிந்துவந்தது விரித்தல் விகாரம். (அறுவகைச்செய்யுள் விகாரங்களுள் ஒன்று.) ஈற்றடி இரண்டாம் சீர் “வாயிறொறும்” எனப்புணர்த்துப் படிக்க, சீரும் தளையும் சிதையா. சோழன் 27-35== அன்னையுங் கோல்கொண் டலைக்கு மயலாரு மென்னை யழியுஞ்சொல் சொல்லுவர் - நுண்ணிலைய தெங்குண்ட தேரை படுவழிப் பட்டேன்யான் திண்டேர் வளவன் திறத்து.. 27 என் தாயும் என்னைக் கோலால் அடித்துத் துன்புறுத்துகிறாள்; அக்கம்பக்கத்தில் வாழ்வோரும் என் மானம் அழியுமாறு பழித்துப் பேசுகின்றனர்; வலிய தேரையுடைய சோழனிடம் மையல் கொண்டதால் நான், தெங்குண்ட தேரைபோலப் பழிப்பட்டேன். இது தலைவி கூற்று. அலைத்தல் - துன்புறுத்தல்; “தெங்குண்டதேரை” என்பது பழமொழி; தேங்காயில் நோய் ஏற்பட தேரை காரணமன்று, எனக்கு மையல்நோய் ஏற்பட நான் காரணம் ஆகேன், ( சோழனே காரணம்) ஆனால் உலகினர் தேரையைப் பழிப்பதுபோல என்னையும் பழிக்கின்றனர் எனத் தலைவி வருந்திக் கூறுகிறாள். தெங்கு - தேங்காய் . அலங்குதார்ச் செம்பியன் ஆடெழில்தோள் நோக்கி விலங்கியான் வேண்டா வெனினும் - நலந்தொலைந்து பீர்மேற் கொளலுற்ற பேதையர்க் கென்வாய்ச்சொல் நீர்மே லெழுந்த நெருப்பு. 28 இப்பாடல் செவிலித்தாய் கூற்று. தோளில் ஆடும் மாலையணிந்து செம்பியன் நகர்வலம் வந்தான்; அவனைச் சென்று காணவேண்டாம் என்று இளமங்கையரைச் செவிலித்தாய் தடுத்தாள்; அதனை மீறிச் சென்று, செம்பியனது வெற்றியும் அழகும் பொருந்திய தோள்களை நோக்கிய மகளிர் தம் நாணும் நிறையும் முதலிய நலங்களையும் தொலைத்து மேனியில் பசலை நோயையும் பெற்றுத் துன்புற்றனர். இப்பேதைப் பெண்களுக்கு என் வாய்ச்சொற்கள் நீர்மேல் பற்றிய நெருப்புப் போலப் பயன்படாது வீணாயிற்றே என்று செவிலித்தாய் வருந்திக் கூறுகிறாள். தார் - மலர்மாலை; செம்பியன் - சோழன்; ஆடு - வெற்றி; எழில் - அழகு; விலங்கி - வேறுபட்டு; பீர் - பசலை, மையல்நோயால் மகளிர் மேனியில் தோன்றும் நிறமாற்றம்; ‘ நீர்மேல் எழுந்த நெருப்பு ‘ என்பது பழமொழி. உவமையணி. நாணொருபால் வாங்க நலனொருபா லுள்நெகிழ்ப்பக் காமருதோள் கிள்ளிக்கென் கண்கவற்ற - யாமத் திருதலைக் கொள்ளியி னுள்ளெறும்பு போல திரிதரும் பேருமென் நெஞ்சு. 29 இது தலைவி கூற்று. கண்டார்க்கு விருப்பம் உண்டாக்கும் தோளையுடைய சோழனைக் காணவேண்டும்என என்கண்கள் கவலை கொள்ள, மகளிர்க்கேயுரிய நாணம் அவனைக் காணவிடாமல் என்னைத் தடுக்க, பெண்மைநலம் என்னுள்ளத்தை நெகிழச்செய்ய, இருதலைக் கொள்ளியின் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் சிற்றெறும்புபோல இந்த இரவுப்பொழுதில் என்னெஞ்சம் அவனைக் காணச் செல்வதும் காணாமல் திரும்புவதுமாகத் துன்புறுகிறது. ‘இருதலைக் கொள்ளி எறும்பு’ என்பது பழமொழி. கிள்ளியைக் காணவேண்டும் எனும் ஆசையாகிய எறும்பு, நாணம் ஒருபக்கமும் பெண்மைநலம் ஒருபக்கமும் தீப்பிழம்பாக நின்று தடுப்பதால் அவற்றினிடையே சிக்கிக்கொண்டு தவிக்கிறது; உவமையணி . கிள்ளி - சோழன். ஊட லெனவொன்று தோன்றி அவருறூஉங் கூட லிழந்தேன் கொடியன்னாய்! - நீடெங்கின் பாளையிற் றேன்தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக் காளையைக் கண்படையுட் பெற்று. 30 இதுவும் தலைவி கூற்று. பூங்கொடிபோன்ற என் தோழியே! உயரமான தென்னையின் பாளைகளில் தேனடைகள் உருவாகும் நீர்வளமிக்க சோழநாட்டின் தலைவனை நான் கனவின்கண் காணப்பெற்றேன்; அப்போது தோன்றிய ஊடலால் அவன்தோளையணைத்து மகிழும் கூடலையிழந்து விட்டேனே! கண்படை - கனவு; காளை - சோழன், உவமையாகுபெயர்; கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல்போனதுபோலக் கனவில்கண்ட காளையை அக்கனவில்கூடக் கூட இயலாமல் உடல் பிரித்துவிட்டதே என்று தலைவி வருந்திக் கூறியுள்ளாள். புலவி புறக்கொடுப்பன் புல்லிடின் நாண்நிற்பன் கலவி களிமயங்கிக் காணேன் - நிலவியசீர் மண்ணாளுஞ் செங்கோல் வளவனை யானிதன்றோ கண்ணாரக் கண்டறியா வாறு. 31 இதுவும் தலைவி கூற்று. சோழநாட்டைச் சிறப்போடு செங்கோலாட்சி செய்யும் சோழனை, நான் இன்றுவரை ஒருபொழுதும் கண்ணாரக் கண்டதில்லை ; ஏனெனில் , அவனோடு புலவி கொள்ளும்போது அவனுக்கு என்முதுகைக் காட்டித் திரும்பி நிற்பேன்; அவன் என் புலவியை நீக்க என்னைத் தழுவும்போது நாணத்தால் கண்களை மூடிக்கொள்வேன்; அவன் என்னோடு கலந்து உறவு கொள்ளும்போதோ மகிழ்ச்சியில் மயங்கிக் கிடப்பேன். புலவி - ஊடல்; புறம் - முதுகு; புல்லுதல் - கட்டியணைத்தல்; கலவி - கூடுதல் ; களி - மகிழ்ச்சி வளவன் - சோழன். கனவினுள் காண்கொடாக் கண்ணுங் கலந்த நனவினுள் விலக்கு நாணும் - இனவங்கம் பொங்கோதம் போழும் புகார்ப் பெருமானார் செங்கோல் வடுப்படுப்பச் சென்று. 32 இதுவும் தலைவி கூற்று. பொங்கிவரும் கடல்நீரைக் கிழித்துக்கொண்டு பலவகையான கப்பல்கள் வந்துசெல்லும் துறைமுகம் புகார் நகரம்; அதன் தலைவனாய்ச் செங்கோலாட்சி செய்பவன் சோழன்; அவனைக் கனவிலும் காணவிடாமல் உறங்காதிருக்கும் என் கண்களும் அவனோடு கலந்திருக்கும் நினைவுப்பொழுதில் முழுமையாய்க் கலந்திருக்கும் வாய்ப்பைக் கெடுக்கும் என் நாணமும் சென்று அவன் செங்கோலாட்சிக்குக் கறை (களங்கம்) ஏற்படுத்துகின்றன. வங்கம் -மரக்கலம் / கப்பல் ; ஓதம் - வெள்ளம் /கடல்அலை; போழும் - பிளந்துகொண்டு செல்லும்; புகார் - காவிரிப்பூம்பட்டினம், சோழர் துறைமுகம் ; வடுகர் - குற்றம், களங்கம். == சோழன் 36-40== ===36=== <poem>கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம் தண்டப் படுவ தடமென்தோள் – கண்டாய் உலாஅ மறுகில் உறையூர் வளவற் கெலாஅ முறைகிடந்த வாறு. – 36</poem> ::கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம் தண்டப் படுவ தடமென்தோள் கண்டாய் உலாஅ மறுகில் உறையூர் வளவற்கு எலாஅம் முறை கிடந்தவாறு. ::உறையூர் அரசன் வளவன். அவனைப் பார்த்தது என் மையுண்ட கண். அவனோடு கலந்தது என் நெஞ்சம். தண்டனை பெற்றதோ என் தோள் (தோள் வாடி என் வளையல்கள் கழன்றோடுகின்றன) வளவன் முறை செய்து நீதி வழங்குவது இப்படித்தான் முறைமாறிக் கிடக்கிறது. ===37=== <poem>என்னெஞ்சு நாணு நலனும் இவையெல்லாம் மன்னன் புனனாடன் வௌவினான் – என்னே அரவகல் அல்குலாய் ஆறில் ஒன் றன்றோ புரவலர் கொள்ளும் பொருள். – 37</poem> ::என் நெஞ்சு நாணும் நலனும் இவையெல்லாம் மன்னன் புனல் நாடன் வௌவினான் \ என்னே அரவு அகல் அல்குலாய் ஆறில் ஒன்று அன்றோ புரவலர் கொள்ளும் பொருள். ::என்னுடைய எண்ணம், நாணம், நலம் ஆகிய இவை எல்லாவற்றையும் காவிரி பாயும் புனல் நாட்டை ஆளும் சோழன் பிடுங்கிக்கொண்டான். பாம்புப்படம் போல விரிந்திருக்கும் அல்குல் கொண்ட என் தோழியே! வருவாயில் ஆறில் ஒரு பங்கைத்தானே காப்பாற்றும் மன்னவன் வரியாக வாங்கிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் பிடுங்கிக்கொள்ளலாமா? ===38=== <poem>தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி யிளவளவன் மண்ணகங் காவலனே யென்பரால் - மண்ணகங் காவலனே யானக்காற் காவானோ மாலைவாய்க் கோவலர்வாய் வைத்த குழல். – 38</poem> ::தெள் நீர் நறு மலர்த் தார்ச் சென்னி இள வளவன் மண்ணகம் காவலனே என்பரால் \ மண்ணகம் காவலனே ஆனக்கால் காவானோ மாலைவாய்க் கோவலர் வாய் வைத்த குழல். ::சென்னி இளவளவன் கழுத்திலே மாலை அணிந்தவன். அது தெளிந்த நீரிலே பூக்கும் மணம் மிக்க பூவாலானது. இந்த வளவனை மண்ணுலகைக் காக்கும் காவலன் என்கின்றனர். உண்மையில் அவன் மண்ணுலகைக் காக்கும் காவலன் ஆனால், மாலைக்காலத்தில் ஆனிரைகளுடன் இல்லம் திரும்பும் கோவலர் ஊதும் குழல் என் தனிமையைத் துன்புறுத்துகிறதே அதைத் தடுத்திருக்க வேண்டாமா? ===39=== <poem>அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி முறைசெயும் என்பரால் தோழி – இறையிறந்த அங்கோல் அணிவளையே சொல்லாதோ மற்றவன் செங்கோன்மை செந்நின்ற வாறு. – 39</poem> ::அறை பறை யானை அலங்கு தார்க் கிள்ளி முறைசெயும் என்பரால் தோழி \ இறை இறந்த அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன் செங்கோன்மை செம்மை நின்றவாறு. ::கழுத்தில் மாலை அணிந்துகொண்டு கிள்ளி பறை முழக்கத்துடன் யானைமேல் வருகிறான். அவனைப் பார்த்ததும் என் தோளிலிருந்த வளையல்கள் நழுவிக் கீழே இறங்குகின்றன. தோழி! கிள்ளி நீதி தவறாமல் முறை செய்பவன் என்கின்றர். என் தோளிலிருந்து நழுவும் வளையல் அவன் எத்த அளவில் செங்கோல் செலுத்துகிறான் என்பதைச் சொல்கிறதே! ===40=== <poem>நீள்நீலத் தார்வளவன் நின்மேலான் ஆகவும் நாணிமை யின்றி நடத்தியால் – நீள்நிலம் கண்தன்மை கொண்டலரும் காவிரி நீர்நாட்டுப் பெண்தன்மை இல்லை பிடி. – 40</poem> ::நீள் நீலத் தார் வளவன் நின்மேலான் ஆகவும் நாணிமை இன்றி நடத்தியால் நீள் நிலம் கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர்நாட்டுப் பெண்தன்மை இல்லை பிடி. ::அடி! பெண்யானையே! வளவன் ஒரு ஆண். அவன் உன்மேல் இருக்கிறான். அவனைச் சுமந்துகொண்டு, வெட்கம் இல்லாமல் வருகிறாயே! காவிரி நாட்டுப் பெண்-தண்மை உனக்கு இல்லை. நீல மலரால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலையை வளவன் அணிந்துகொண்டு வருகிறான். கண்ணோட்டம் கொண்டு உலகைக் காத்து மலரும் நாடு காவிரியாறு பாயும் நாடு. ==சோழன் 41-45== ===41=== <poem>செங்கால் மடநாராய் தென்னுறந்தை சேறியேல் நின்கால்மேல் வைப்பன்என் கையிரண்டும் – நன்பால் கரைஉரிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற் குரையாயோ யானுற்ற நோய். – 41</poem> [மடம் = சேறி = செல்லுதி, செல்கிறாய், செல்வாய்; சேறியேல் = செல்வாயேல், செல்வாயானால்; வைப்பந் = வைப்பேன், வைக்கிறேன்; பால் = இடம்; உரிஞ்சு = தேய்] :: பொருள்கோள்: செங்கால் மடநாராய் தென் உறந்தை சேறியேல், நின் கால்மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால் கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரிநீர் நாடற்கு யான் உற்ற நோய் உரையாயோ? ::சிவந்த கால்களையும், கள்ளம் கபடமற்ற தன்மையையும் உடைய நாரையே! நீ பறந்து செல்லும்போது தென்பால் உள்ள உறையூருக்குச் செல்வாயேயானால், உன் கால்மேல் என் கைகள் இரண்டையும் வைக்கிறேன். நல்ல இடங்களையுடைய ஆற்றங்கரைகளையே தேய்த்து மீன்கள் துள்ளும் காவிரிநீர் கொண்ட சோழனாகிய காவிரி நாடனுக்கு, அவன்மேற்கொண்ட காதலால் நானுற்ற துயரைச் சொல்லமாட்டாயா?. ===42=== <poem>வரக்கண்டு நாணாதே வல்லையா னெஞ்சே மரக்கண்ணோ மண்ஆள்வார் கண்ணென் – றிரக்கண்டாய் வாள்உழுவை வெல்கொடியான் வண்புனல்நீர் நாடற்கென் தோள்அழுவம் தோன்றத் தொழுது. – 42</poem> ::வரக்கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே மரக்கண்ணோ மண்ஆள்வார் கண் என்று இரக்கண்டாய் வாள் உழுவை வெல்கொடியான் வண் புனல்நீர் நாடற்கு என் தோள் அழுவம் தோன்றத் தொழுது. ::வெல்லும் புலிக்கொடியான், வளமையான ஆற்றுப்புனல் பாயும் நாடன், சோழன் உலா வரக் கண்டு, பெண்மை உணர்வோடு நாணியிருக்க உன்னால் முடியுமா? முடியாதே. அதனால், நெஞ்சே! நாணாமல் அவனைக் கண்டு இர. உன் கண் என்ன மரத்தாலான கண்ணா (இரக்கம் இல்லாத கண்ணா) என்று கேட்டு இர (கண்ணோட்டத்துடன் இரக்கம் காட்டும்படிப் பிச்சை கேள்) | வாள் உழுவை = கண்ணைக் கவரும் ஒளி மிக்க புலி. ===43=== <poem>பேயோ பெருந்தண் பனிவாடாய் பெண்பிறந்தா ரேயோ உனக்கிங் கிறைக்குடிகள் – நீயோ களிபடுமால் யானைக் கடுமான்தேர்க் கிள்ளி அளியிடை அற்றம்பார்ப் பாய். – 43</poem> ::பேயோ பெருந்தண் பனிவாடாய் பெண் பிறந்தாரேயோ உனக்கு இங்கு இறைக் குடிகள் நீயோ களி படு மால் யானைக் கடுமான் தேர்க் கிள்ளி அளி இடை அற்றம் பார்ப்பாய். ::பனிக் காலத்தில் பெருங் குளிருடன் வீசும் வாடைக் காற்றே! நீ என்ன பேயோ? கிள்ளி எனக்கு அளி செய்கிறான். அவன் எப்போது அரவணைப்பிலிருந்து விலகுவான் என்று பார்த்து வீசி என்னை ஆட்டிவைக்கிறாய். சோழனை இறைவனாகக் கொண்ட குடிமக்கள் மீது வீசுகிறாய். | கிள்ளி களிப்பூட்டும் யானை மீதும் வருகிறான். குதிரை பூட்டிய தேரிலும் வருகிறான். ===44=== <poem>நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத் தாமரையும் நீலமுந் தைவந் – தியாமத்து வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய் பண்டன்று பட்டினங் காப்பு. – 44</poem> ::நாம நெடு வேல் நலங்கிள்ளி சோணாட்டுத் தாமரையும் நீலமும் தைவந்து யாமத்து வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய் பண்டு அன்று பட்டினம் காப்பு. ::நலங்கிள்ளி அச்சம் தரும் வேலை உடையவன். அவனது சோழநாட்டில் வண்டு ஒன்று நள்ளிரவில் தாமரையிலும், நீல மலரிலும் தேனை உண்டு தடவிக்கொடுத்துவிட்டு வருகிறது. குளிரும் வாடைக்காற்றே! நலங்கிள்ளி காவிரிப்பூம் பட்டினத்தைக் காப்பாற்றும் செயல் பண்டுபோல் எல்லாருக்கும் பாதுகாப்புத் தருவதாக இல்லை. எனவே நீ இங்கு வரவேண்டாம். | வாடைக்காற்று வீசாமல் இருக்கவேண்டும் என்று நயமாக வேண்டுகிறாள். ===45=== <poem>தானைகொண் டோடுவ தாயதன் செங்கோன்மை சேனை யறியக் கிளவேனோ – யானை பிடிவீசும் வண்தடக்கைப் பெய்தண்தார்க் கிள்ளி நெடுவீதி நேர்பட்ட போது. – 45</poem> ::தானை கொண்டு ஓடுவதாய தன் செங்கோன்மை சேனை அறியக் கிளவேனோ யானை பிடி வீசும் வண் தடக்கைப் பெய் தண்தார்க் கிள்ளி நெடு வீதி நேர்பட்ட போது. ::ஆண் பெண் யானைகளை வளமாகத் தரும் கொடையாளி கிள்ளி. மாலை சூடிய அந்தக் கிள்ளி உலா வரும்வோது அவனை நீண்ட வீதியில் கண்டதும் என் சேலை நழுவியது. இப்படி நழுவச் செய்துவிட்டு அவன் ஓடும் செங்கோன்மையை அவன் படைகளெல்லாம் அறியுமாறு எடுத்துச் சொல்லாமல் இருப்போனா? ==சோழன் 46-50== ===46=== <poem>காவல் உழவர் களத்தகத்துப் போர்ஏறி நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை – காவலன்தன் கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே நல்யானைக் கோக்கிள்ளி நாடு. – 46</poem> ::காவல் உழவர் களத்தகத்துப் போர் ஏறி நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன் தன் கொல் யானை மேல் இருந்து கூற்று இசைத்தால் போலுமே நல் யானைக் கோக்கிள்ளி நாடு. ::உலகைக் காப்பாற்றும் உழவர்கள் தம் நெற்களத்தில் உள்ள போரின்மீது ஏறி “நாவலோ” என்று காலை நேரத்தில் ஓசை எழுப்பினால் எப்படியோ அப்படித்தான் இருக்கிறது, நாட்டைக் காப்பாற்றும் மன்னவன் கொல்லும் போர்யானைமேல் (எருமைக் கடா) இருந்துகொண்டு கூற்றுவன் “வாருங்கள்” என்று இசைமுழக்கம் செய்வது. இதுதான் இன்றைய கிள்ளிநாட்டு ஆட்சி நிலைமை. \ தன்னிடம் நெல் இருக்கிறது என்று கூவவேண்டிய உழவன் நாவல்பழம் பறிக்க வாருங்கள் என்று கூவும் கொடுமை கிள்ளியின் நாட்டில் இருக்கிறது. \ காப்பாற்ற வேண்டிய கிள்ளி, கொல்கிறேன் வாருங்கள் என்பவன் போல் உலா வருகிறான். ===47=== <poem>மாலை விலைபகர்வார் கிள்ளி களைந்தபூச் சால மருவியதோர் தன்மைத்தால் – காலையே வில்பயில் வானகம் போலுமே வெல்வளவன் பொற்பார் உறந்தை அகம். – 47</poem> ::மாலை விலைபகர்வார் கிள்ளி களைந்த பூச் சால மருவியது ஓர் தன்மைத்தால் காலையே வில் பயில் வானகம் போலுமே வெல் வளவன் பொன் பார் உறந்தை அகம். ::கிள்ளி காலையில் பூமாலை சூடிக்கொண்டு உலா வருகிறான். காலையிலேயே வானவில் போட்டுக்கொண்டிருக்கும் வானம் போல் அவன் தோன்றுகிறான். மாலையில் அவன் கழற்றி எறிந்த பூவை விலைக்கு விற்கின்றனர். அவன் மலையை அதிகம் பேர் விரும்பினார்கள் என்பதற்காக விற்கின்றனர். மாலையில் விற்கும் வெற்று மாலையால் என்ன பயன்? – அவள் கேட்கிறாள். \ பொற்பார் உறந்தை = பொன் விளையும் மண் கொண்ட உறையூர் ===48=== <poem>மந்தரங் காம்பாய் மணிவிசும் போலையாத் திங்கள் அதற்கோர் திலதமா எங்கணும் முற்றுநீர் வைய முழுதும் நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை. 48</poem> ::மந்தரம் காம்பாய் மணி விசும்பு ஓலையாத் திங்கள் அதற்கு ஓர் திலதமா எங்கணும் முற்று நீர் வையம் முழுதும் நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை. ::கிள்ளியின் வெண்கொற்றக் குடைக்கு மந்தர-மலை காம்பு. நீலநிற வானம் குடையில் விரிந்திருக்கும் ஓலை. வானத்து நிலா அந்தக் குடையின் உள்முகட்டில் இருக்கும் நெற்றிப்பொட்டு. இப்படி இருந்துகொண்டு உலகம் முழுவதற்கும் நிழல் தந்து அந்தக் குடை காப்பாற்றுகிறது. அது சரி. என்னை மட்டும் ஏங்கவைக்கிறது. இது கொடுமை. ===49=== <poem>அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார் – எந்தை இலங்கிலைவேற் கிள்ளி இரேவதிநாள் என்னோ சிலம்பிதன் கூடிழந்த வாறு. – 49</poem> ::அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ சிலம்பி தன் கூடு இழந்தவாறு. ::கிள்ளி இரேவதி நாளில் பிறந்தான். அவனுக்குப் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம். அன்று அந்தணர்கள் பசு, பொன் ஆகியவற்றைத் தானமாகப் பெற்றனர். நாவண்மை உடைய பாவலர் மலை போல் உயர்ந்த களிறு வழங்கப்பபட்டு அதில் ஊர்ந்தனர். ஆனால் சிலந்திப் பூச்சி மட்டும் தன் கூட்டை இழந்தது. அது ஏன்? இது முறை ஆகுமா? | (பொங்கல் நாள் அன்று பழம்பொருள்களைத் துடைத்துத் தூய்மை செய்வது போல் மன்னன் பிறந்த நாளிலும் அரண்மனை ஒட்டடை துடைத்துத் தூய்மை செய்யப்பட்டது. அப்போது சிலந்திப் பூச்சி தன் கூட்டை இழந்தது) | பிறந்த நாளில் கிள்ளி உலா வந்தான். அவனைக் கண்ட சிலம்பி என்னும் பெண் மட்டும் தன் கூடாகிய உடல் நலத்தை இழந்தாள். இதுவா அவன் தரும் பிறந்தநாள் கொடை? – அவள் வினா. ===50=== <poem>நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து முன்றந்த மன்னர் முடிதாக்க – இன்றுந் திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே பெருந்தண் உறந்தையார் கோ. – 50</poem> ::நின்றீமின் மன்னீர் நெருநல் திறை கொணர்ந்து முன் தந்த மன்னர் முடி தாக்க இன்றும் திருந்து அடி புண்ணாகிச் செவ்வி இலனே பெரும் தண் உறந்தையார் கோ. ::மன்னர்களே! சற்றே நில்லுங்கள். நேற்று, திறை தந்த மன்னர்கள் வணங்கியபோது அவர்களின் முடி தாக்கி உறையூர் மன்னன் காலடி புண்ணாகிக் கிடக்கிறது. அதனால் இன்று அவன் காட்சி தரவில்லை. அவன் பெருமையும் ஈரமும் கொண்டவன். ==சோழன் 51-56== ===51=== <poem>கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர் முடியிடறித் தேய்ந்த நகமும் – பிடிமுன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே கல்லார்தோட் கிள்ளி களிறு. – 51</poem> ::கொடி மதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர் முடி இடறித் தேய்ந்த நகமும் பிடி முன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே கல் ஆர் தோள் கிள்ளி களிறு. ::கல்மலை போன்ற தோள் கொண்டவன் கிள்ளி. அவனது ஊர்தி ஆண்யானை. அது அவனது பறைவரின் கோட்டை மதில்களைப் பாய்ந்து இடித்தது. அதனால் அதன் தந்தங்களின் நுனி முறிந்து போயிற்று. போரில் விழுந்த மன்னர்களின் தலைமுடியை (கிரீடத்தை) இடறி அதன் கால்நகங்கள் தேய்ந்து போயின. இவற்றைத் தன் பெண்யானைக்குக் காட்டுவதற்கு நாணிக் கட்டுத்தறியின் புறக்கடையிலேயை அந்த ஆண்யானை தயங்கிக்கொண்டு நின்றது. ===52=== <poem>கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால் தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் – பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமேநங் கோழியர்கோக் கிள்ளி களிறு. – 52</poem> ::கச்சி ஒருகால் மிதியா ஒரு காலால் தத்து நீர்த் தண் உஞ்சை தான் மிதியாப் பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமே நம் கோழியர் கோக் கிள்ளி களிறு. ::கிள்ளி அரசன், கோழி என்னும் உறையூர் மக்களின் தலைவன். அவன் போரிட்டபோது அதன் நான்கு கால்களும் நான்கு இடங்களை மிதித்துக்கொண்டிருந்தது. உறையூர், காஞ்சிபுரம், உஞ்சை (உஜ்ஜயினி), ஈழம் (இலங்கை) ஆகியவை அந்த ஊர்கள். ===53=== <poem>பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர நாற்றிசையும் ஓடி நரிகதிப்ப – ஆற்ற அலங்கலம் பேய்மகளிர் ஆட வருமே இலங்கிலைவேற் கிள்ளி களிறு. – 53</poem> ::பாறு இனம் ஆர்ப்பப் பருந்து வழிப் படர நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற அலங்கல் அம் பேய் மகளிர் ஆட வருமே இலங்கு இலை வேல் கிள்ளி களிறு. ::இலை உருவில் ஒளிறும் வேலேந்திய கிள்ளியின் களிறு போர்க்களத்தில் பெருமித நடை போட்டுக்கொண்டு வரும். அப்போது புலால் உண்ணும் பறவைகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும். பருந்துகள் அந்த ஆண்யானையைப் பின்தொடரும். நரிகள் நாலாப்பக்கமும் ஓடித் திரியும். அணிகலன்களைப் பெருமையாக ஆட்டிக்கொண்டு பேய்மகளிர் ஆடுவர். காரணம் எங்கும் பிணம். பிணங்களுக்கு இடையே அந்தக் களிறு வரும். ===54=== <poem>முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத் தடித்த குடர்திரியா மாட்டி – எடுத்தெடுத்துப் பேஎய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன் சேஎய் பொருத களம். - 54</poem> ::முடித்தலை வெள்ளோட்டு மூளை நெய்யாகத் தடித்த குடர் திரியா மாட்டி எடுத்து எடுத்துப் பேஎய் விளக்கு அயரும் பெற்றித்தே செம்பியன் சேஎய் பொருத களம். ::செம்பியன் போரிட்ட களத்தில் பேய் விளக்கு வைத்திருந்தது. மன்னரின் தலைமண்டை விளக்கின் ஓடு. அவர்களின் மூளை நெய். அவர்களின் குடல் திரி. இப்படிப் பேய்கள் விளக்கு வைத்து (கார்த்திகை) விழாக் கொண்டாடின. ===55=== <poem>இரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற வரியிளஞ் செங்காற் குழவி – அரையிரவில் ஊமந்தா ராட்ட உறங்கிற்றே செம்பியன் தன் நாமம்பா ராட்டாதார் நாடு. – 55</poem> ::இரியல் மகளிர் இலை ஞெமலுள் ஈன்ற வரி இளம் செங்கால் குழவி அரை இரவில் ஊமம் தாராட்ட உறங்கிற்றே செம்பியன் தன் நாமம் பாராட்டாதார் நாடு. – 55 ::செம்பியனின் பெயரைப் பாராட்டாவர் நாட்டில் உறக்கம். வீட்டை விட்டு ஓடிப் பிழைத்திருக்கும் மகளிர் உதிர்ந்து கிடக்கும் இலைச் சறுகுகளில் குழந்தைகளைப் பெற்றனர். நள்ளிரவில் கோட்டான் அந்தக் குழந்தைகளுக்குத் தாலாட்டுப் பாடியது. இப்படி அவலநிலை. ===56=== <poem>அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர் எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டால் – பனிக்கடலுள் பாய்ந்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான் காய்சினவேல் கிள்ளி களிறு. 56 </poem> ::அயில் கதவம் பாய்ந்து உழக்கி ஆற்றல் சால் மன்னர் எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனிக் கடலுள் பாய்ந்து ஓய்ந்த நாவாய் போல் தோன்றுமே எங்கோமான் காய் சின வேல் கிள்ளி களிறு. ::கிள்ளியின் யானை கடலில் செல்லும் நாவாய்க் கப்பல் போலத் தோன்றுகிறது. எப்படி? நாவாய் கடலில் பாயும். களிறு வேல் தாங்கிய கோட்டைக் கதவுகளின் மீது பாய்ந்து அழிக்கிறது. நாவாய் பாய்மரம் கொண்டிருக்கும். களிறு கோட்டைக் கதவைப் பெயர்த்துத் தூக்கிக் கொம்பில் வைத்துக்கொண்டு வருகிறது. அதனால் களிறு கப்பல் போல் தோன்றுகிறது. (குறிப்பு: இதே பாடல் சேரனைப் பற்றிய பாடல்களுள் 20ஆம்எண் பாடலாகவும் அமைந்துள்ளது. அதில் ஈற்றடி “காய்சினத்தேர்க் கோதை களிறு” எனவும் இதில் “காய்சினவேற் கிள்ளி களிறு” எனவும் உள்ளன. இஃது ஆயவுக்குரியது. இப்பாடலின் அடி 3இன் முதற்சீர் “பாய்தோய்ந்த” என்றிருத்தல் சிறப்பு; இப்பாடலைப் பதிவு செய்து உரையெழுதியவர் “பாய்ந்தோய்ந்து” என்று பாடங்கொண்டுள்ளார் .)-சேரன். ==பாண்டியன் 57-60 == ===57=== <poem>காப்படங்கென் றன்னை கடிமனை யிற்செறித்து யாப்படங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன் நன்னலம் காணக் கதவம் துளைதொட்டார்க் கென்னைகொல் கைம்மா றினி. – 57</poem> ::காப்பு அடங்கு என்று அன்னை கடி மனையில் செறித்து யாப்பு அடங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன் நல் நலம் காணக் கதவம் துளை தொட்டார்க்கு என்னைகொல் கைம்மாறு இனி. ::கடுங்கோன் உலா வந்தான். அவனை நான் காணக்கூடாது என்று, “உன்னைக் காப்பாற்றிக்கொண்டு அடங்கு” என்று சொல்லி அன்னை என்னை இல்லத்தில் செறிவாக அடைத்துவைத்தாள். உள்ளேயும் ஓடியாட முடியாமல் கட்டியும் போட்டாள். ஆனால் கதவிலே முன்பே துளை ஒன்று போட்டுவைத்திருந்தார்கள். (அது வெளியே இருப்பவர் யார் என்று பார்க்க உதவும் கதவுக்கண்.) அது அவன் நல்லழகையெல்லாம் காணும் வகையில் அமைந்திருந்தது. இப்படிக் கதவுக்கண் ஓட்டை போட்டு வைத்திருக்கிறார்களே, அவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன். – அவள் கூறுகிறாள். | கடுங்கோ = சேரன் | கடுங்கோன் = பாண்டியன். ===58=== <poem>வளையவாய் நீண்டதோள் வாட்கணாய் அன்னை இளையளாய் மூத்திலள் கொல்லோ – தளையவிழ்தார் மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக் கண்கொண்டு நோக்கல்என் பாள். – 58</poem> ::வளையவாய் நீண்ட தோள் வாள் கணாய் அன்னை இளையளாய் மூத்திலள் கொல்லோ தளையவிழ் தார் மண் கொண்ட தானை மறம் கனல் வேல் மாறனைக் கண்கொண்டு நோக்கல் என்பாள். ::வளையல் அணிந்த நீண்ட தோளும், வாள் போன்ற கண்ணும் கொண்ட தோழியே! அன்னை இளையவளா? மூத்தவளா? மூத்தவளாக இருந்தும் இளையவளாக இருக்கிறாளே! சிறுபிள்ளைத் தனமாய் நடந்துகொள்கிறாளே! மாறன் உலா வருவதைக் கண்கொண்டு பார்க்கக்கூடாது என்கிறாளே. பூக்கும் மலர்மாலை அணிந்துகொண்டு, பகைவரைக் கைப்பற்றிய படையோடு, வீரம் வெளிப்படும் வேல் ஏந்திய கோலத்துடன் வருகிறானே. அவன் மாலையையாவது, படையையாவது, வேலையாவது நான் பார்க்கக்கூடாதா? ===59=== <poem>கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென வேட்டங்குச் சென்றெவன் நெஞ்சறியாள் - கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை வெறுங்கூடு காவல்கொண் டாள். – 59</poem> ::கோள் தெங்கு சூழ் கூடல் கோமானைக் கூட என வேட்டு அங்குச் சென்ற எவன் நெஞ்சு அறியாள் கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை வெறுங்கூடு காவல் கொண்டாள். ::கொழுத்த தென்னைமரம் சூழ்ந்திருக்கும் ஊர் கூடல் நகரம். அவன் இந்தக் கூடல் அரசன். அவனை விரும்பி என் நெஞ்சு சென்றுவிட்டது. இது அன்னைக்குத் தெரியவில்லை. வெறும் உடம்புக் கூட்டுக்குக் காவல் போட்டிருக்கிறாள். | குறும்பூழ் = காடை என்னும் பறவை. | காடை பிடிக்கும் வேடன் வலையை விரித்து வைப்பான். அதன் அருகில் தான் பழக்கி வைத்திருக்கும் பெண்-காடையைப் பறக்க விடுவான். அது ஆண்-காடையை அழைத்துவந்து கூட்டில் விழச்செய்யும். அன்னை அப்படிச் செய்கிறாளே! ===60=== <poem>களியானைத் தென்னன் இளங்கோவென் றெள்ளிப் பணியாரே தம்பார் இழக்க – அணியாகங் கைதொழு தேனும் இழக்கோ நறுமாவின் கொய்தளிர் அன்ன நிறம். – 60</poem> ::களி யானைத் தென்னன் இளங்கோ என்று எள்ளிப் பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் கை தொழுதேனும் இழக்கோ நறு மாவின் கொய் தளிர் அன்ன நிறம். ::களிப்புக் கொண்ட யானைமேல் வருபவன் தென்னன். அவன் இளையவன், எளிதாக வென்றுவிடலாம் என்று ஏளனமாகப் பேசிக்கொண்டு அவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் தன் நாட்டை இழந்தனர். அது சரி. நான் தென்னனைத் தொழுதேன். ஆனால் என் மாந்தளிர் போன்ற மேனி அழகை இழந்துவிட்டேனே! இது சரியா? ==பாண்டியன் 61-65== ===61=== <poem>வழுவில்எம் வீதியுள் மாறன் வருங்கால் தொழுதேனைத் தோள்நலமுங் கொண்டான் – இமிழ்திரைக் கார்க்கடற் கொற்கையார் காவலனுந் தானேயால் யார்க்கிடுகோ பூசல் இனி. – 61</poem> ::வழு இல் எம் வீதியுள் மாறன் வருங்கால் தொழுதேனைத் தோள் நலமும் கொண்டான் இமிழ் திரைக் கார்க் கடல் கொற்கையார் காவலனுந் தானேயால் யார்க்கு இடுகோ பூசல் இனி. ::மாறன் குறையில்லாத என் வீதியில் உலா வந்தான். அப்போது நான் அவனைத் தொழுதேன். அவன் என் தோள்-அழகை வாங்கிக்கொண்டான். திறையாக வாங்கிக்கொண்டான். நான் அவன் கொற்கை நகரில் வாழும் அவனது குடிமகள். எனக்குக் காவலன் அவன்தான். அவனே இந்தக் கொடுமையைச் செய்தால் நான் யாரிடம் சென்று முறையிட்டுக்கொள்வேன்? ===62=== <poem>தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும் வானேற்ற வையகம் எல்லாமால் – யானோ எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர்ந்தண்தார் மாறன் அளியானேல் அன்றென்பார் ஆர். – 62</poem> ::தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும் வான் ஏற்ற வையகம் எல்லாமால் யானோ எளியேன் ஓர் பெண் பாலேன் ஈர்ம் தண் தார் மாறன் அளியானேல் அன்று என்பார் ஆர். ::மாறன் தான், தன் ஒப்புயர்வற்ற வெண்கொற்றக் குடையால் குடிமக்களுக்கு நிழல் தருபவன். வானுலகைத் தாங்கும் வையகத்தைக் காப்பவன். அவன் அப்படி. யானோ எளியவள். அதிலும் ஒரு பெண். அளி(இரக்கம்) தந்து காப்பாற்றப்பட வேண்டியவள். இந்த உண்மையை அன்று என்று சொல்பவர் ஆர்? அப்படி இருக்க அவன் எனக்கு அளி(இரக்கம்) செய்து காப்பாறவில்லையே!. ===63=== <poem>மன்னுயிர் காதல் தனதான அவ்வுயிருள் என்னுயிரும் எண்ணப் படுமாயின் – என்னுயிர்க்கே சீரொழுகு செங்கோற் செழியற்கே தக்கதோ நீரொழுகப் பாலொழுகா வாறு. – 63</poem> ::மன் உயிர் காதல் தனது ஆன அவ் உயிருள் என் உயிரும் எண்ணப்படும் ஆயின் என் உயிர்க்கே சீர் ஒழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ நீர் ஒழுகப் பால் ஒழுகாவாறு. ::செழியன் நிலைபெற்ற உயிரினம் எல்லாவற்றின் மீதும் காதலன்பு கொண்டவன். அந்த உயிரினங்களில் என் உயிரும் ஒன்றாக எண்ணப்படுமாயின், என்மேல் செங்கோல் ஆட்சி செய்யவில்லையே! எதுவா அவன் சீர்மை? * பச்சைமண் பாண்டத்தில் பாலை ஊற்றிவைத்தால் அதில் உள்ள நீர் கசிந்து ஒழுகுகிறது. பால் கசிந்து ஒழுகவில்லை. இது என்ன விந்தை! * அவன் நீர்மை எல்லா உயிரினங்கள் மாட்டும் பாய்கிறது. அவன் பாலுணர்வு அப்படிப் பாயவில்லையே. ===64=== <poem>புகுவார்க் கிடங்கொடா போதுவார்க் கொல்கா நகுவாரை நாணி மறையா – இகுகரையின் ஏமான் பிணைபோல நின்றதே கூடலார் கோமான்பின் சென்றவென் நெஞ்சு. - 64</poem> ::புகுவார்க்கு இடம் கொடா போதுவார்க்கு ஒல்கா நகுவாரை நாணி மறையா இகு கரையின் ஏ மான் பிணை போல நின்றதே கூடலார் கோமான் பின் சென்ற என் நெஞ்சு. ::அவன் கூடலார் கோமான். அவன் பின் என் நெஞ்சு சென்றது. என் நெஞ்சுக்குள்ளே புகுவார் யாருக்கும் அது இடம் கொடுக்கவில்லை. வழியில் யார் சென்றாலும் நெஞ்சம் தளரவில்லை. என் நெஞ்சைப் பார்த்து எள்ளி நகையாடுபவர்களைக் கண்டால் நாணி மறைந்துகொள்கிறது. இடிந்து விழுந்துகொண்டிருக்கும் ஆற்றங்கரையில் அம்பு பட்ட மான் நிற்பது போல என் நெஞ்சு அவனிடம் நிற்கிறது. ===65=== <poem>களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை அளியான் அளிப்பானே போன்றான் - தெளியாதே செங்காந்தள் மென்விரலாற் சேக்கை தடவந்தேன் என்காண்பேன் என் அலால் யான். – 65</poem> ::களி யானைத் தென்னன் கனவின் வந்து என்னை அளியான் அளிப்பானே போன்றான் தெளியாதே செங்காந்தள் மென் விரலால் சேக்கை தடவந்தேன் என் காண்பேன் என் அலால் யான். ::களிக்கும் யானைமேல் உலா வருபவன் தென்னன். அவன் என் கனவில் வந்தான். அவன் எனக்கு இன்பம் எதுவும் தரவில்லை. இன்பம் தருபவன் போல இருந்தான். உடனே செங்காந்தள் பூப் போன்ற என் விரல்களால் அவனைத் தடவினேன். உண்மையில் படுக்கையைத் தடவிக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர என் படுக்கையில் வேறு யாரும் இல்லை. ==பாண்டியன் 66-70== ===66=== <poem>கனவை நனவென் றெதிர்விழிக்கும் காணூம் நனவில் எதிர்விழிக்க நாணும் – புனையிழாய் என்கண் இவையானால் எவ்வாறே மாமாறன் தன்கண் அருள்பெறுமோ தான். – 66</poem> ::கனவை நனவு என்று எதிர் விழிக்கும் காணூம் நனவில் எதிர் விழிக்க நாணும் புனையிழாய் என் கண் இவை ஆனால் எவ்வாறே மா மாறன் தன் கண் அருள் பெறுமோ தான். ::கனவை நனவு என்று எண்ணிக்கொண்டு அவனைக் கொட்டைக் கண்ணோடு விழித்துக்கொண்டு பார்க்கிறேன். அப்போது உறங்கிக்கொண்டிருக்கும் என் கண்கள் அவனைப் பார்க்கவில்லை. நனவில் அவன் உலா வருகிறான். அப்போது என் நாணத்தால் அவனைப் பார்க்க முடியவில்லை. என் கண்ணுக்கே இந்த நிலைமை ஆனால் அவனது அருளைப் பெறுவது எப்போது? ===67=== <poem>தளையவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி களையினும்என் கண்திறந்து காட்டேன் – வளைகொடுப்போம் வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந் தென்கண் புகுந்தான் இரா. – 67</poem> ::தளை அவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி களையினும் என் கண் திறந்து காட்டேன் வளை கொடுப்போம் வன் கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து என் கண் புகுந்தான் இரா. ::மலரும் பூமாலையைக் கையில் எடுத்துக்கொண்டு வந்து நிற்கும் தாய்மார்களே! “விடிந்துவிட்டது, கண்ணைத் திற” என்கிறீர்கள். என் உயிரே போனாலும் கண்ணைத் திறக்கமாட்டேன். மாறன் என் வளையல்களைக் கழன்று விழும்படிச் செய்து எடுத்துக்கொண்டு போய்விட்டான். அவன் கொடுமைக்காரன். வாளைக் கையில் உடையவன். கருநிற யானைமேல் வந்தான். வந்தவன் இரவில் என் கண்ணுக்குள் அகப்பட்டுக்கொண்டான். கண்ணுக்குள்ளே இருக்கிறான். திறந்தால் ஓடிவிடுவான். மால் = கருமை ===68=== <poem>ஓராற்றல் என்கண் இமைபொருந்த அந்நிலையே கூரார்வேல் மாறன் என் கைப்பற்ற – வாரா நனவென் றெழுந்திருந்தேன் நல்வினையொன் றில்லேன் கனவும் இழந்திருந்த வாறு. – 68</poem> ::ஓராற்றல் என்கண் இமை பொருந்த அந் நிலையே கூர் ஆர் வேல் மாறன் என் கைப் பற்ற வாரா நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன் கனவும் இழந்து இருந்த ஆறு. ::அவனை எண்ணிக்கொண்டே இருந்தேன். தூக்கம் வரவில்லை. ஏதோ ஒரு வகையில் என் இமைகள் மூடிக்கொண்டன. அப்போதே கூரிய வேலை உடைய மாறன் அருகில் வந்து என் கைகளைப் பற்றினான். கனவை நனவு என்று எண்ணி எழுந்திருந்தேன். அவன் இல்லை. கைப்பற்றிய கனவு இன்பமும் இல்லாமல் போய்விட்டது. எனக்கு நல்வினைப்பேறு ஒன்றுகூட இல்லை. ===69=== <poem>கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர்நுனைவேலி வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற் கொண்டிருக்கப் பெற்ற குணம். – 69</poem> ::கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர் நுனை வேலி வண்டு இருக்க நக்க தார் வா மான் வழுதியால் கொண்டிருக்கப் பெற்ற குணம். ::கரிய நல்ல நீலமலர் மணக்கும் குளத்தில் நாள்தோறும் பூத்துநின்று தவம் செய்தது. அந்தத் தவத்தின் பயனால் போலும் வழுதி கழுத்தில் மாலை ஆகும் பேறு பெற்றுள்ளது. கூர்மையான நுனியை உடைய வேல் போன்ற வாயைக் கொண்டிருக்கும் வண்டு சிரிப்பொலி கேட்க மொய்க்கும் பூமாலை, வழுதி மாலை. ===70=== <poem>அறிவரார் யாமொருநாட் பெண்டிரே மாகச் செறிவார் தலைமே னடந்து – மறிதிரை மாட முரிஞ்சும் மதுரையார் கோமானைக் கூட வொருநாட் பெற. – 70</poem> ::அறிவர் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆகச் செறிவார் தலைமேல் நடந்து மறி திரை மாடம் உரிஞ்சும் மதுரையார் கோமானைக் கூட வொரு நாள் பெற. ::மோதித் திரும்பும் வைகை ஆற்று நீர்த்திரையை மாடி வீடுகள் உரிஞ்சும் ஊர் மதுரை. அவன் அந்த மதுரை மக்களின் கோமான். என்றேனும் ஒருநாள் நான் அவனோடு சேர்ந்து கூடி இருப்போன். இப்போது ஊரார் என் வாயை அடைத்து வைக்கின்றனர். நான் அவனோடு கூடியிருப்பதை அன்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். இப்போது என்னை வீட்டுக்குள்ளே அடைத்துச் செறித்து வைப்பவர்கள் அப்போது தெரிந்துகொள்வர். அப்போது அவர்கள் தலைமேல் நான் நடப்பேன். பெண்களே! இதனைத் தெரிந்துகொள்ளுங்கள். ==பாண்டியன் 71-75== ===71=== <poem>கைய தவன்கடலுள் சங்கமால் பூண்டதுவும் செய்யசங் கீன்ற செழுமுத்தால் மெய்யதுவும் மன்பொரு வேல்மாறன் வார்பொதியிற் சந்தனமால் என்பெறா வாடும் என் தோள். – 71</poem> ::கையது அவன் கடலுள் சங்கமால் பூண்டதுவும் செய்ய சங்கு ஈன்ற செழு முத்தால் மெய்யதுவும் மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனமால் என் பெறா வாடும் என் தோள். ::கடல் கைக்கும்படிக் கடலில் படுத்துத் தவம் செய்துகொண்டிருப்பதால் திருமால்தான் மாறன் என்கிறேன். திருமால் கடல் சங்கைக் கையில் வைத்துக்கொண்டிருக்கிறான். நான் மாறன் கடலில் விளைந்த சங்கில் அறுத்த வளையல்கைக் கையில் அணிந்துகொண்டிருக்கிஅறேன். மாறன் கடல் முத்தை ஆரமாக அணிந்துகொண்டிருக்கிறேன். மாறனின் பெதியமலைச் சந்தனத்தைப் பூசிக்கொண்டிருக்குறேன். சங்கம், முத்து, சந்தனம் எல்லாமே அவனுடையவை. அப்படி இருக்கும்போது என் தோள் எதனைப் பெறாமல் வாடுகிறது? வியப்பாக உள்ளது. ===72=== <poem>இப்பியீன்று இட்ட எறிகதிர் நித்திலம் கொற்கையே யல்ல படுவது – கொற்கைக் குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம் கருதியார் கண்ணும் படும். – 72</poem> ::இப்பி ஈன்று இட்ட எறி கதிர் நித்திலம் கொற்கையே அல்ல படுவது கொற்கைக் குருதி வேல் மாறன் குளிர்சாந் தகலம் கருதியார் கண்ணும் படும். ::சங்குச் சிப்பிகள் பெற்றெடுத்த முத்துகள் கொற்கையில் மட்டுமா உதிர்கின்றன? கொற்கையை ஆளும் மாறனின், குருதி தோய்ந்த வேலை உடைய மாறனின், குளிர்ந்த சந்தனம் பூசிய மார்பினை அடையக் கருதிய பெண்கள் கண்களிலிருந்தும் உதிர்கின்றன. ===73=== <poem>கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன் முடிபாடி முத்தாரம் பாடித் – தொடியுலக்கை கைம்மனையில் ஓச்சப் பெறுவெனோ யானும்ஓர் அம்மனைக் காவல் உளேன். – 73</poem> ::கொடி பாடித் தேர் பாடிக் கொய் தண் தார் மாறன் முடி பாடி முத்தாரம் பாடித் தொடி உலக்கை கைம் மனையில் ஓச்சப் பெறுவெனோ யானும் ஓர் அம் மனைக் காவல் உளேன். ::மாறன் கொடி, மாறன் தேர், மாறன் பூ மாலை, மாறன் முத்தாரம், மாறன் சூடிய முடி ஆகியவற்றைப் பாடிக்கொண்டு நான் உலக்கையால் நெல் குற்றவேண்டும். இதுதான் என் ஆசை. இப்போது வீட்டுக் காவலில் கிடக்கிறேன். \ தொடி உலக்கை – பூண் போட்ட உலக்கை \ கொய் தண் தார் – கொய்த குளிர்ந்த பூக்களால் கட்டப்பட்ட மால் \ கைம்மனை – சிறிய இல்லம் \ அம்மனை – அழகிய இல்லம் ===74=== <poem>என்னை உரையல் என் பேருரையல் ஊருரையல் அன்னையும் இன்னள் எனவுரையல் பின்னையுந் தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்கென் கண்படாவாறே யுரை. 74</poem> ::என்னை உரையல் என் பேருரையல் ஊருரையல் அன்னையும் இன்னள் என உரையல் பின்னையும் தண் படா யானைத் தமிழ்நர் பெருமாற்கு என் கண் படாவாறே உரை. ::என்னைப் பற்றிப் பேசவேண்டா. என் பேரையும் சொல்லவேண்டா. என் தாய் என்னை அடைத்து வைத்திருக்கும் கொடியவள் என்றும் சொல்லவேண்டா. பின் என்னதான் சொல்லவேண்டும் என்கிறாயா? தமிழர் பெருமானை எண்ணி என் கண் உறங்காமல் இருக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள். (தண் படா யானை = குளுமை இல்லாமல் எப்பொதும் சினம் கொண்டிருக்கும் யானை – யானையை உடைய தமிழர் பெருமான்.) ===75=== <poem>மாறடுபோர் மன்னர் மதிக்குடையும் செங்கோலும் கூறிடுவாய் நீயோ குளிர்வாடாய் சோறடுவார் ஆரத்தால் தீமூட்டும் அம்பொதியிற் கோமாற்கென் வாரத்தால் தோற்றேன் வளை. 75</poem> ::மாறு அடு போர் மன்னர் மதிக் குடையும் செம் கோலும் கூறிடுவாய் நீயோ குளிர் வாடாய் சோறு அடுவார் ஆரத்தால் தீ மூட்டும் அம் பொதியின் கோமாற்கு என் வாரத்தால் தோற்றேன் வளை. ::சோறாக்குவோர் சந்தனக்கட்டையில் அடுப்புத் தீ மூட்டும் பொதியமலை நாட்டுக் கோமான் அவன். குளிரும் வாடைக்காற்றே! நீ அவனிடம் தூது செல். மாற்றாரைப் போரில் வெல்லும் அவனது குடை, மதியம் போன்ற வெண்கொற்றக் குடை, செங்கோல் ஆகியவற்றை முதலில் சொல். பின் அவனை நெஞ்சில் பங்குபோட்டுக் கொண்டிருப்பதால் என் வளையல்களைத் தோற்றுப் போயிருக்கிறேன் என்பதையும் சொல். (வாரம் = சரிபாதி பங்கு) ==பாண்டியன் 76-80== ===76=== <poem>துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப் பிடியேயான் நின்னை யிரப்பல் – கடிகமழ்தார்ச் சேலேக வண்ணனொடு சேரி புகுதலுமெஞ் சாலேகம் சார நட. – 76</poem> ::துடி அடித் தோல் செவித் தூங்கு கைம் நால் வாய்ப் பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார்ச் சேல் ஏக வண்ணனொடு சேரி புகுதலும் எம் சாலேகம் சார நட. ::அவன் சேல் ஏக வண்ணன். மீன் கொடி கொண்ட மாறன். (மீன் கொடி கொண்ட காம வேள் மாரன்). அவனைச் சுமந்துகொண்டு வரும் பிடியே! (பெண்யானையே) உடுக்கை-மேளம் போன்ற காலடியும், தோல்-பறை போன்ற காதும், தொங்கும் கையில் துளை இருக்கும் வாயும் கொண்டிருக்கிறாய். சரி. உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். மாலை அணிந்துகொண்டு அவன் உன்மேல் வரும்போது என் தெருச்சேரிக்கு வந்ததும் என் வீட்டுச் சன்னல் (சாலேகம்) ஓரமாக நடந்து செல். நான் அவனைக் கண்ணாரக் காணவேண்டும். ===77=== <poem>எலாஅ மடப்பிடியே யெங்கூடற் கோமான் புலாஅல் நெடுநல்வேல் மாறன் – உலாஅங்கால் பைய நடக்கவுந் தேற்றாயால் நின்பெண்மை ஐயப் படுவ துடைத்து. – 77</poem> ::எலாஅ மடப் பிடியே எம் கூடல் கோமான் புலாஅல் நெடு நல் வேல் மாறன் உலாஅங்கால் பைய நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை ஐயப்படுவது உடைத்து. ::ஏ, மடத்தனம் கொண்ட பிடியே! புலால் நாற்றம் அடிக்கும் வேலையுடைய என் கூடல்-கோமான் மாறன் உலா வரும்போது மெதுவாக நடக்க உனக்குத் தெரியவில்லையே. பெண்ணின் விருப்பத்தைப் புரிந்துகொள்ளாத நீயும் ஒரு பெண்ணா? உன் பிறவி ஐயப்படத் தக்கதாக உள்ளது. ===78=== <poem>போரகத்துப் பாயுமா பாயாது பாயமா ஊரகத்து மெல்ல நடவாயோ – கூர்வேல் மதிவெங் களியானை மாறன் தன் மார்பங் கதவங்கொண் டியாமுந் தொழ. – 78</poem> ::போர் அகத்துப் பாயும் மா பாயாது பாயமா ஊர் அகத்து மெல்ல நடவாயோ கூர் வேல் மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம் கதவம் கொண்டு யாமும் தொழ. ::மாறன் மார்புக் கதவை நான் திறந்து தொழவேண்டும். அவனைச் சுமந்துவரும் களிப்பு மிக்க யானையே! போரில் பாய்வது போல நீ பாயாதே. பாயாசம் போல ஊருக்குள்ளே மெல்ல நடந்துசெல். ===79=== <poem>ஆடுகோ சூடுகோ ஐதாக் கலந்துகொண்டு ஏடுகோ டாக எழுதுகோ – நீடு புனவட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி கனவட்டங் கால்குடைந்த நீறு. – 79</poem> ::ஆடுகோ சூடுகோ ஐதாக் கலந்துகொண்டு ஏடு கோடாக எழுதுகோ நீடு புனவட்டப் பூ தெரியல் பொன் தேர் வழுதி கனவட்டம் கால் குடைந்த நீறு. ::வழுதியின் குதிரை ஊர்தியின் பெயர் ‘கனவட்டம்’. வழுதியைச் சுமந்துகொண்டு கனவட்டம் தெருவில் சென்றது. அதன் காலடி பட்ட புழுதியை நீரில் கலந்து மையாக்கிக்கொண்டு, பூவிதழ் நுனியை எழுத்தாணி ஆக்கிக்கொண்டு, என் கண்ணில் மை எழுதிக்கொள்ளட்டுமா, என் தோளில் தொய்யில் எழுதிக்கொள்ளட்டுமா – அவள் கேட்கிறாள். ===80=== <poem>பிணிகிடந் தார்க்குப் பிறந்தநாட் போல அணியிழை அஞ்ச வருமால் – மணியானை மாறன் வழுதி மணவா மருண்மாலைச் சீறியோர் வாடை சினந்து. – 80</poem> ::பிணி கிடந்தார்க்குப் பிறந்த நாள் போல அணியிழை அஞ்ச வருமால் மணி யானை மாறன் வழுதி மணவா மருண்மாலைச் சீறி ஓர் வாடை சினந்து. ::நோய்வாய்ப் பட்டுக் கிடப்பவர்களுக்குப் பிறந்தநாள் வருவது போல வாடைக்காற்று சினம் கொண்டு பாய்கிறது. பெண்ணே! பார். மாறன் வழுதியோடு கூடி இருக்காமல் தனியே இருப்பவரிடம்தான் வாடை இப்படி வருகிறது. ==பாண்டியன் 81-85== ===81=== <poem>வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோல் ஏரிய ஆயினும் என்செய்யும் –கூரிய கோட்டானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங் கோட்டுமண் கொள்ளா முலை. – 81</poem> ::வாரிய பெண்ணை வரு குரும்பை வாய்த்தன போல் ஏரிய ஆயினும் என் செய்யும் கூரிய கோட்டு ஆனைத் தென்னன் குளிர் சாந்து அணி அகலம் கோட்டு மண் கொள்ளா முலை. ::என் முலை தென்னங்குரும்பை போல் பருத்துக்கொண்டிருக்கிறது. சரி. அதனால் என்ன பயன். தென்னன் மார்பில் உள்ள சந்தனக் குழம்பை அப்பிக்கொள்ளவில்லையே! ===82=== <poem>நாணாக்காற் பெண்மை நலன் அழியும் முன்னின்று காணாக்காற் கைவளையுஞ் சோருமால் – காணேன்நான் வண்டு எவ்வந் தீர்தார் வயமான் வழுதியைக் கண்டுஎவ்வந் தீர்தார் ஆறு. – 82</poem> ::நாணாக்கால் பெண்மை நலன் அழியும் முன் நின்று காணாக்கால் கை வளையும் சோருமால் காணேன் நான் வண்டு எவ்வம் தீர் தார் வய மான் வழுதியைக் கண்டு எவ்வம் தீர் தார் ஆறு. ::வழுதி உலா வரும்போது கண்டு நாணாமல் நின்றால் என் பெண்மை அழியும். அவனைக் கண்ணாரக் காணவில்லை என்றால் என் கைவளையல் கழன்று ஓடும். எப்படித்தான் என் எவ்வத் துன்பத்தைப் போக்கிக்கொள்வேன்? பூமாலை மட்டும் வண்டின் துன்பத்தைப் போக்கிக்கொண்டு அவன் கழுத்தில் இருக்கிறதே! ===83=== <poem>மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக் காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் – கண்டக்காற் பூணாகந் தாவென்று புல்லப் பெறுவேனோ நாணோ டுடன்பிறந்த நான். – 83</poem> ::மாணார்க் கடந்த மற வெம் போர் மாறனைக் காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்டக்கால் பூண் ஆகம் தா என்று புல்லப் பெறுவேனோ நாணோடு உடன்பிறந்த நான். ::மாட்சிமை இல்லாதவர்களை வென்றவன் மாறன். அவனைக் காணாதபோது ஆயிரம் ஆயிரமாகப் பேசுவேன். கண்டால், “உன் பூண் அணிந்த மார்பை எனக்குக் கொடு” என்று கேட்டுத் தழுவமுடியுமா? நாணத்தோடு பிறந்தவள் ஆயிற்றே! ===84=== <poem>செய்யார் எனினுந் தமர்செய்வ ரென்னுஞ்சொல் மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் – கையார் வரிவளை நின்றன வையையார் கோமான் புரிவளை போந்தியம்பக் கேட்டு. – 84</poem> ::செய்யார் எனினும் தமர் செய்வர் என்னும் சொல் மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் கை ஆர் வரி வளை நின்றன வையையார் கோமான் புரி வளை போந்து இயம்பக் கேட்டு. ::மற்றவர்கள் உதவவில்லை என்றாலும், உற்றார் உறவினர் உதவுவர் என்பது உண்மை என்பது இப்போது தெரிந்துவிட்டது. வையை நாட்டாரின் அரசன் உலா வரும்போது ஊதிய சங்கின் ஓசையைக் கேட்டதும், சங்கால் செய்யப்பட்டதாய் என் கையில் இருக்கும் வளையல்கள் என் தோள்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டன. காணப்போகும் மகிழ்ச்சி. \ வரிவளை – கையில் வரிவரியாக உள்ள வளையல் \ புரிவளை – வளைந்து விரியும் சங்கு ===85=== <poem>உகுவாய் நிலத்த துயர்மணல்மேல் ஏறி நகுவாய்முத் தீன்றசைந்த சங்கம் – புகுவான் திரைவரவு பார்த்திருக்குந் தென்கொற்கைக் கோமான் உரைவரவு பார்த்திருக்கும் நெஞ்சு. – 85</poem> ::உகு வாய் நிலத்தது உயர் மணல் மேல் ஏறி நகு வாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் புகுவான் திரை வரவு பார்த்திருக்கும் தென் கொற்கைக் கோமான் உரை வரவு பார்த்திருக்கும் நெஞ்சு. ::சங்குப் பூச்சி மணலின் மேல் ஏறி பல்லைக் காட்டும் முத்துக்களைப் பெற்று வைத்துவிட்டு மீளும். அந்த முத்துக்கள் அலைகள் வந்து கொண்டுசெல்லாவா என்று காத்துக்கொண்டிருக்கும். அதுபோல நான் அந்த முத்து விளையும் கொற்கை அரசனிடமிருந்து அழைப்பு வராதா எனக் காத்திருக்கிறேன். ==பாண்டியன் 86-90== ===86=== <poem>கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவனேல் கூடு என்று – கூடல் இழைப்பாள்போற் காட்டி இழையா திருக்கும் பிழைப்பில் பிழைபாக் கறிந்து. – 86</poem> ::கூடல் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவனேல் கூடு என்று கூடல் இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும் பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து. – 86 ::கூடல் இழைத்தல் என்பது ஒருவகை விளையாட்டு. அது குறி பார்க்கும் விளையாட்டு. நடுவில் நின்றுகொண்டு, கண்களை மூடிக்கொண்டு, சுழன்று, கைவிரலால் மணலில் வட்டமிட்டுக் கோடு கிழிப்பர். வட்டம் கோணல் மாணலாக இருந்தாலும், கோடு தொடங்கிய புள்ளியில் ஒன்றுகூட வேண்டும், கூடினால் தான் விரும்பிய எண்ணம் நிறைவேறும் என்றும், கூடாமல் கோடு வேறிடம் சென்றால் விரும்பிய செயல் கைகூடாது என்றும் நம்புவர். ::இப்படி அவள் கூடல் இழைக்க முற்பட்டாள். கூடல் பெருமான் பாண்டியனை நான் கூடப்பெறுவேன் என்றால் கூடல் கோடே நீ கூடுக என்று சொல்லிக்கொண்டு கூடல் இழைக்க முற்பட்டுக் கூடல் இழைப்பது போலப் பாசாங்கு காட்டினாள். உண்மையில் அவள் கூடல் இழைக்கவில்லை. காரணம் ஒருவேளை கூடல்-கோடு கூடாமல் போய்விட்டால் அவனைக் கூடமுடியாமல் போய்விடுமே என்னும் அச்சம் அவளுக்கு. ===87=== <poem>குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம் புறப்படா பூந்தார் வழுதி – புறப்படின் ஆபுகு மாலை அணிமலையில் தீயேபோல் நாடறி கௌவை தரும். – 87</poem> ::குடத்து விளக்கே போல் கொம்பன்னார் காமம் புறப்படா. பூந்தார் வழுதி புறப்படின் ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல் நாடறி கௌவை தரும். ::கொடிக்கொம்பு (கொம்பில் ஏறும் கொடி) போன்றவர் மகளிர். மகளிர் காமம் குடத்துக்குள் வைத்த விளக்குப்போல் வெளி-உலகுக்குத் தெரியாது. ஆனால் வழுதி மாலையும் கழுத்துமாக உலா வரும்போது, ஆனிரைகள் இல்லம் புகும் மாலை வேளையில் மலையில் பற்றி எரியும் தீயைப் போல ஊருக்கெல்லாம் தெரியும்படி வெளிப்பட்டுவிடும். ===88=== <poem>ஏற்பக் குடைந்தாடில் ஏசுவர் அல்லாக்கால் மாற்றி யிருந்தாள் ஏனவுரைப்பர் – வேற்கண்ணாய் கொல்யானை மாறன் குளிர்புனல் வையைநீர் எல்லாம் எனக்கோர் இடர். – 88</poem> ::ஏற்பக் குடைந்து ஆடில் ஏசுவர் அல்லாக்கால் மாற்றி இருந்தாள் ஏன உரைப்பர் வேல் கண்ணாய் கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் எல்லாம் எனக்கு ஓர் இடர். ::அவன் கொல்யானை மேல் செல்லும் மாறன். அவன் நாட்டு வையையில் குளிர்ந்த ஊற்றுநீர் வருகிறது. அதில் மூழ்கிக் குளித்து விளையாடினால் மாறன் நாட்டு நீர் என்று மூழ்கி விளையாடுகிறாள் என்று சொல்லி ஏசுவார்கள். நீராடாமல் கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தால் தன் ஆசையை மறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று முணுமுணுப்பர். வேல் போன்ற கண்ணை உடைய என் தோழியே! எது செய்தாலும் எனக்குத் துன்பமே. ===89=== <poem>யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின் தானூட யானுணர்த்தத் தானுணரான் – தேனூறு கொய்தார் வழுதி குளிர்சாந் தணியகலம் எய்தா திராக்கழிந்த வாறு. – 89</poem> ::யான் ஊடத் தான் உணர்த்த யான் உணரா விட்டதன் பின் தான் ஊட யான் உணர்த்தத் தான் உணரான் தேன் ஊறு கொய் தார் வழுதி குளிர் சாந்து அணி அகலம் எய்தாது இராக் கழிந்தவாறு. ::நான் ஊடினேன். அவன் உணர்த்தினான். நான் என் ஊடலை விட்டு உணர்ந்துகொண்டு கூடச் சென்றேன். அப்போது வழுதி நான் முன்பு ஊடினேன் என்று ஊடினான். நான் உணர்த்தினேன். அவன் உணரவில்லை. இப்படியே இரவெல்லாம் கழிந்துவிட்டது. குளிர்ந்த சந்தனம் பூசிய அவன் மார்பு எனக்குக் கிடைக்கவே இல்லை. ===90=== <poem>புல்லாதார் வல்லே புலர்கென்பர் புல்லினார் நில்லா யிரவே நெடிதென்பர் – நல்ல விராமலர்த் தார்மாறன் வெண்சாந் தகலம் இராவளிப் பட்ட திது. – 90</poem> ::புல்லாதார் வல்லே புலர்(கு) என்பர் புல்லினார் நில்லாய் இரவே நெடிது என்பர் நல்ல விராம் மலர்த் தார் மாறன் வெண் சாந்து அகலம் இரா அளிப் பட்டது இது. ::இரவே! உடனே விடிந்துவிடு (புலர்க) என்று மாறனின் வெண்ணிறச் சந்தனம் பூசிய மார்பைத் தழுவப்பெறாதவர்கள் வேண்டுவர். தழுவப்பெற்றவர்கள் இரவே விடியாமல் நீண்டுகொண்டே இரு என்று வேண்டுவர். இப்படி இரங்கத்தக்க (அளி) இரவு என்னிடம் வந்திருக்கிறதே! ==பாண்டியன் 91-95== ===91=== <poem>பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல் நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் – சாரல் மலைபடுப யானை வயமாறன் கூர்வேல் தலைபடுப தார்வேந்தர் மார்பு.- 91</poem> ::பார் படுப செம் பொன் பதி படுப முத்தமிழ் நூல் நீர் படுப வெண் சங்கும் நித்திலமும் சாரல் மலை படுப யானை வய மாறன் கூர் வேல் தலை படுப தார் வேந்தர் மார்பு. ::மாறன் நிலமெல்லாம் செம்பொன். ::ஊரெல்லாம் முத்தமிழ் முழங்கும் நூல்கள். ::நீரெல்லாம் சங்கும், முத்தும். ::மலையெல்லாம் யானை. ::பகைவேந்தர் மார்பெல்லாம் அவன் வேல். ::எனக்கு மட்டும் எதுவுமே இல்லையா ===92=== <poem>நந்தின இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும் பந்தர் இளங்கமுகின் பாளையும் – சிந்தித் திகழ்முத்தம் போற்றோன்றும் செம்மற்றே தென்னன் நகைமுத்த வெண்குடையான் நாடு. – 92</poem> ::நந்தின இளம் சினையும் புன்னைக் குவி மொட்டும் பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தித் திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன் நகை முத்த வெண் குடையான் நாடு. ::நந்துச் சங்குகளின் இள முட்டைகளும், புன்னைப்பூ மொட்டுகளும், பந்தர்த் துறைமுகத்தில் உள்ள பாக்குப் பாளைகளும் சிந்திக் கிடப்பதால் தென்னன் நாடெங்கிலும் முத்துக்கள் சிரிப்பது போல் தோற்றமளிக்கிறது. தென்னன் குடையிலும் முத்துக்கள் தொங்குகின்றன. இது இவன் நாட்டுக்குக் கிடைத்திருக்கும் செம்மாப்பு. எனக்குத்தான் அவன் பல்நகை முத்தம் கிடைக்கவில்லை. ===93=== <poem>மைந்தரோ டூடி மகளிர் திமிர்ந்திட்ட குங்கும ஈர்ஞ்சாந்தின சேறுழக்கி – எங்கும் தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் நெடுமாடக் கூடல் அகம். – 93</poem> ::மைந்தரோடு ஊடி மகளிர் திமிர்ந்து இட்ட குங்கும ஈர்ம் சாந்தின சேறு உழக்கி எங்கும் தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் நெடு மாடக் கூடல் அகம். ::மைந்தரோடு மகளிர் ஊடுவர். அப்போது மகளிர் அணிந்திருக்கும் ஈரக் குங்குமமும், மைந்தர் அணிந்திருக்கும் ஈரச் சந்தனமும் நிலத்தில் பட்டுச் சேறாகிப், போவார் வருவாரெல்லாம் வழுக்கித் தடுமாறும் தன்மை கொண்டது தென்னன் ஆளும் கூடல் நகரம். ===94=== <poem>மடங்கா மயில்ஊர்தி மைந்தனை நாளும் கடம்பம்பூக் கொண்டேத்தி அற்றால் – தொடங்கமருள் நின்றிலங்கு வென்றி நிரைகதிர்வேல் மாறனை இன் தமிழால் யாம்பாடும் பாட்டு. – 94</poem> ::மடங்கா மயில் ஊர்தி மைந்தனை நாளும் கடம்பம்பூக் கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள் நின்று இலங்கு வென்றி நிரை கதிர் வேல் மாறனை இன் தமிழால் யாம் பாடும் பாட்டு. ::மடங்காத தோகையை உடைய மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகனைக் கடம்புப் பூப் போட்டுப் பூசை செய்வது எப்படியோ அப்படிப்பட்டதுதான் மாறனை இனிய தமிழால் நான் பாடும் பாடல் எனக் கொள்க. மாறன் தொடங்கிய போரிலெல்லாம் முருகனைப் போல வெற்றி கண்டு ஒளிரும் வேலை உடையவன். ===95=== <poem>செங்கண் நெடியான்மேல் தேர்விசையன் ஏற்றியபூப் பைங்கண்வெள் ஏற்றான்பால் கண்டற்றால் – எங்கும் முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன் அடிமிசையே காணப் படும். – 95</poem> ::செங்கண் நெடியான் மேல் தேர் விசையன் ஏற்றிய பூப் பைங் கண் வெள் ஏற்றான் பால் கண்டு அற்றால் எங்கும் முடி மன்னர் சூடிய பூ மொய்ம் மலர்த் தார் மாறன் அடி மிசையே காணப்படும். ::அருச்சுணன் திருமாலுக்குச் சாத்திய பூ அத்தனையும் காளைமாட்டு ஊர்திக் கடவுளிடம் (சிவன் திருவடிகளில்) கிடப்பதைக் கண்டனர். அப்படித்தான் மன்னர் முடியில் சூடிய பூக்கள் எல்லாம் மாறன் காலடியில் கிடந்தன. மாறனைத் தொழும்போது உதிர்ந்த பூக்கள் அவை. ==பாண்டியன் 96-100== ===96=== <poem>கூந்தன்மா கொன்று குடமாடிக் கோவலானாய்ப் பூந்தொடியைப் புல்கிய ஞான்றுண்டால் – யாங்கொளித்தாய் தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு. – 96</poem> ::கூந்தல் மா கொன்று குடம் ஆடிக் கோவலானாய்ப் பூந்தொடியைப் புல்கிய ஞான்று உண்டால் யாங்கு ஒளித்தாய் தென்னவனே தேர் வேந்தே தேறு நீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு. ::தென்னவனே! தேர் வேந்தே! தெளிந்த நீர் ஓடும் கூடல் நகரக் கோமானே! நீதான் திருமால். (நெடியோன் என்பவன் பாண்டிய மன்னர்களில் ஒருவன்) நீ கண்ணனாகத் தோன்றிய காலத்தில் கூந்தல் என்னும் குதிரையைக் கொன்றாய். குடம் தலையில் வைத்துக்கொண்டு நடனம் ஆடினாய். அழகிய வளையல்காரி நப்பின்னையை (இராதையை)த் தழுவினாய். அப்போது உன் மார்பில் மறு இருந்ததே! (திருமகளை மார்பில் கொண்டிருக்கும் மறு) அதனை இப்போது எங்கே ஒளித்து வைத்து வைத்திருக்கிறாய்? ===97=== <poem>கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர் பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் – நண்ணார்தம் தேர்வேந்தன் தென்னன் திருவுத் திராடநாள் போர்வேந்தன் பூசல் இலன். – 97</poem> ::கண்ணார் கதவம் திறமின் களிறொடு தேர் பண் ஆர் நடைப் புரவி பண் விடுமின் நண்ணார் தம் தேர் வேந்தன் தென்னன் திருவும் திராட நாள் போர் வேந்தன் பூசல் இலன். ::தென்னனை நினைக்காத பகைவர்களே! உங்கள் கதவினைத் திறந்துகொள்ளுங்கள். களிறும், தேரும், குதிரையும் போருக்காகப் பூட்டுவதை விட்டுவிடுங்கள். இன்று தென்னன் பிறந்த திருநாள். உத்திரட்டாதி நாள். தேரில் வருவான். ஆனால் போர் செய்யமாட்டான். அஞ்சவேண்டா. ===98=== <poem>நிறைமதிபோல் யானைமேல் நீலத்தார் மாறன் குடைதோன்ற ஞாலத் தரசர் – திறைகொள் இறையோ எனவந் திடம்பெறுதல் இன்றி முறையோ எனநின்றார் மொய்த்து. – 98</poem> ::நிறை மதி போல் யானை மேல் நீலத் தார் மாறன் குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள் இறையோ என வந்து இடம் பெறுதல் இன்றி முறையோ என நின்றார் மொய்த்து. ::நீலநிற வேம்புமாலை அணிந்துகொண்டு மாறன் உலா வருகிறான். அவனது வெண்கொற்றக் குடை நிறைந்த மதியம் போலக் காணப்படுகிறது. உலகத்து அரசர்களெல்லாம் திறை கொடுப்பதற்காக மொய்த்துக்கொண்டு வந்தனர். வரிசையில் காத்துக்கொண்டு நிற்கும்போது “இறைவா! இது முறையோ?” என முணுமுணுத்துக்கொண்டனர். ===99=== <poem>நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப் புரைசை யைநிமிர்ந்து பொங்கா – அரசர்தம் முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்தமாப் பொன்னுரைகல் போன்ற குளம்பு. – 99</poem> ::நிரை கதிர் வேல் மாறனை நேர் நின்றார் யானைப் புரைசையை நிமிர்ந்து பொங்கா அரசர் தம் முன் முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்த மாப் பொன்னுரை கல் போன்ற குளம்பு. – 99 ::வேல் தாங்கி மாறன் போருக்கு எழுந்தான். சிலர் அவனை எதிர்த்தனர். மாறன் யானை அவர்களின் கோட்டையை நிமிர்ந்து பார்த்துப் பொங்கிப் பாய்ந்தது. மன்னர் பலர் போரிட்டு வீழ்ந்தனர். அவர்கள் தலையில் சூடியிருந்த முடி சிதறிக் கிடந்தது. மாறன் குதிரை அந்தப் பொன்முடிகளைக் காலால் இடறியது. அதனால் அதன் குளம்புகள் பொன்னை உரைத்துப் பார்க்கும் கட்டளைக்கல் போலக் காணப்பட்டது. ===100=== <poem>அருமணி அந்தலை யாடரவம் வானத்து உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் – செருமிகுதோட் செங்கண்மா மாறன் சினவேற் கனவுமே அங்கண்மா ஞாலத் தரசு. – 100</poem> ::அரு மணி அம் தலை ஆடு அரவம் வானத்து உரும் ஏற்றை அஞ்சி ஒளிக்கும் செரு மிகு தோள் செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே அம் கண் மா ஞாலத்து அரசு. ::நஞ்சாகிய அரிய நீலமணியைக் கொண்ட நல்லபாம்பு வானத்தில் இடி முழக்கம் கேட்டால் அஞ்சி ஒடுங்கிக்கொள்ளும். அதுபோல சிவந்த கண்ணுடன் தோன்றும் மாறனின் சினங்கொண்ட வேலைக் கனவிலே கண்டு உலகிலுள்ள அரசர்கள் ஒடுங்கிக்கொள்வர். ::பாம்பு மணி உமிழுமா? ::உமிழாது ::தொண்டையில் நஞ்சு கொண்ட சிவனை மணிகண்டன் என்கிறோம். ::அதுபோல நாகத்தின் நஞ்சினை மணி என்கிறோம். ==பாண்டியன் 101-105== ===101=== <poem>நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன் காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால் ஏம மணிப்பூண் இமையார் திருந்தடி பூமி மிதியாப் பொருள். – 101</poem> ::நேமி நிமிர் தோள் நிலவு தார்த் தென்னவன் காமர் நெடும் குடைக் காவலன் ஆணையால் ஏம மணிப் பூண் இமையார் திருந்து அடி பூமி மிதியாப் பொருள். ::ஆணைச் சக்கரத்தை உருட்டி நிமிர்ந்த தோளைக் கொண்டு விளங்குபவன் தென்னவன். எல்லோரும் விரும்பும் அகன்ற வெண்கொற்றக்குடையை உடையவன். கண் இமைக்காத தேவர் தமக்குப் பாதுகாவலாக மணிப்பூண் அணிந்தவர்கள். அவர்களின் காலடி மண்ணில் படுவதில்லை. காரணம் தென்னவன் ஆணைக்குக் கட்டுப்பட வேண்டி வருமே என்னும் அச்சம். ===102=== <poem>செருவெங் கதிர்வேற் சினவெம்போர் மாறன் உருமின் இடிமுரசு ஆர்ப்ப – அரவுறழ்ந்து ஆமா உகளும் அணிவரையின் அப்புறம்போய் வேமால் வயிறெரிய வேந்து. – 102</poem> ::செரு வெம் கதிர் வேல் சின வெம் போர் மாறன் உருமின் இடி முரசு ஆர்ப்ப அரவு உறழ்ந்து ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய் வேமால் வயிறெரிய வேந்து. ::வேலேந்தி மாறன் போருக்கு எழுவான். அப்போது அவன் போர்முரசம் இடி போல் முழங்கும். அந்த முழக்கத்தைக் கேட்ட ஆமா பாம்பைப் போல் மலையெங்கும் தாவும். பின்னர் அந்த மலைக்கு அப்பால் சென்ற பின்னரும் வயற்றெரிச்சலோடு நெஞ்சம் வெந்துகொண்டிருக்கும். ===103=== <poem>மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர் உருத்தகு மார்போலை யாகத் திருத்தக்க வையக மெல்லாம் எமதென் றெழுதுமே மொய்யிலைவேல் மாறன் களிறு. - 103</poem> ::மருப்பு ஊசியாக மறம் கனல் வேல் மன்னர் உருத் தகு மார்பு ஓலையாகத் திருத் தக்க வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே மொய் இலை வேல் மாறன் களிறு. ::எழுதும் ஊசி கொண்டு ஓலை எழுதுவர். அதுபோல மாறனின் போர்யானை தன் கொம்பை எழுத்தாணி ஆக்கிக்கொண்டு உலகில் எதிர்த்த அனைத்து மன்னர் மார்புகளிலும் எழுதும். (குத்தும்) ===104=== <poem>உருவத்தார்த் தென்னன் ஓங்குஎழில் வேழத் திருகோடுஞ் செய்தொழில் வேறால் – ஒருகோடு வேற்றார் அகலம் உழுமே யொருகோடு மாற்றார் மதில்திறக்கு மால். – 104</poem> ::உருவத் தார்த் தென்னன் ஓங்கு எழில் வேழத்து இரு கோடும் செய் தொழில் வேறால் ஒரு கோடு வேற்றார் அகலம் உழுமே ஒரு கோடு மாற்றார் மதில் திறக்கும் ஆல். ::எல்லா யானைகளின் கொம்புகள் இரண்டும் ஒரே தொழிலைத்தான் செய்யும். ஆனால் தென்னவனின் போர்யானையின் இரண்டு கொம்புகளும் இருவேறு பணிகளைச் செய்யும். ஒரு கொம்பு பகையரசர் நெஞ்சில் உழும். மற்றொன்று பகையரசர் கோட்டை மதிலைத் திறக்கும் ===105=== <poem>தோற்ற மலைகடல் ஓசை புயல்கடாஅங் காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய்க் – கூற்றுங் குறியெதிர்ப்பைக் கொள்ளும் தகைமைத்தே யெங்கோன் எறிகதிர்வேல் மாறன் களிறு. - 105 </poem> ::தோற்றம் மலை கடல் ஓசை புயல் கடாஅம் காற்றின் நிமிர்ந்த செலவிற்று ஆய்க் கூற்றும் குறியெதிர்ப்பைக் கொள்ளும் தகைமைத்தே எங்கோன் எறி கதிர் வேல் மாறன் களிறு. ::எம் தலைவன் ஒளி வீசும் வேலை உடைய மாறன், அவன் களிறு தோற்றத்தில் மலை போன்றது. ஓசை புயல்மழையின் இடி முழக்கம் போன்றது. ஒழுகும் மதமும் புயல்மழை ஒழுகுவது போன்றது. அது காற்றைப்போல நிமிர்ந்து செல்லும். கொல்லும் திறத்தைக் கூற்றுவனும் கடன் வாங்கிக்கொள்ளும் திறம் படைத்தது. ==பாண்டியன் 106-110== ===106=== <poem>அடுமதில் பாய அழிந்ததன் கோட்டைப் பிடிமுன் பழகழிதல் நாணி – முடியுடை மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்வேல் தென்னவர் கோமான் களிறு. – 106</poem> ::அடு மதில் பாய அழிந்த தன் கோட்டைப் பிடி முன்பு அழகு அழிதல் நாணி முடியுடை மன்னர் குடரால் மறைக்குமே செம் கனல் வேல் தென்னவர் கோமான் களிறு. ::பகைவர் கோட்டையை அழித்துப் பாய்ச்சிய தன் கொம்பின் அழகு அழிந்து கிடப்பதைத் தன் பெண்யானைக்குக் காட்ட நாணி மன்னரைக் குத்திய குடரால் தன் கொம்பை மறைத்துக்கொண்டு தென்னவர் கோமான் களிறு வந்து நிற்கும். ===107=== <poem>வெருவரு வெஞ்சமத்து வேலிலங்க வீழ்ந்தார் புருவ முரிவுகண் டஞ்சி – நரிவெரீஇச் சேட்கணித்தாய் நின்றிழைக்குஞ் செம்மற்றே தென்னவன் வாட்கணித்தாய் வீழ்ந்தார் களம். – 107</poem> ::வெரு வரு வெம் சமத்து வேல் இலங்க வீழ்ந்தார் புருவ முரிவு கண்டு அஞ்சி நரி வெரீஇச் சேட்கு அணித்தாய் நின்று இழைக்கும் செம்மற்றே தென்னவன் வாட்கு அணித்தாய் வீழ்ந்தார் களம். ::தென்னவன் வாளுக்கு இரையாகி வேலைத் தாங்கிய கையோடு போர்க்களத்தில் வீழ்ந்து கிடப்பவரின் புருவம் வளந்திருக்கும் சினத்தைக் கண்டு அஞ்சிப் பிணம் தின்னும் நரி வெருண்டு ஓடி அண்மைய தொலைவில் நின்று பார்த்துக்கொண்டே இருக்கும். இது போர்க்களக் காட்சியின் பயங்கரத் தோற்றம். ===108=== <poem>ஏனைய பெண்டிர் எரிமூழ்கக் கண்டுதன் தானையாற் கண்புதைத்தான் தார்வழுதி – யானையும் புல்லார் பிடிபுலம்பத் தன்கண் புதைத்தே பல்யானை அட்ட களத்து. – 108</poem> ::ஏனைய பெண்டிர் எரி மூழ்கக் கண்டு தன் தானையால் கண் புதைத்தான் தார் வழுதி யானையும் புல்லார் பிடி புலம்பத் தன் கண் புதைத்தே பல் யானை அட்ட களத்து. ::வழுதி போர்க்களத்தில் பகைவரை அழித்தான். கணவன் மாண்டது கண்டு அவன் பெண்டிர் தீயில் விழுந்து உயிர் விட்டனர். வழுதி அதனைப் பார்க்க முடியாதவனாய் இரக்கம் கொண்டு தன் மேலாடையால் தன் கண்களை மூடிக்கொண்டான். பகைவரின் களிறுகள் மாண்டுபோகவே அவற்றின் பெண்யானைகளும் புலம்பின. அதனைக் கண்ட வழுதியின் களிறும் தன் கண்களைத் தன் கைகளால் மூடிக்கொண்டது. ===109=== <poem>வாகை வனமாலை சூடி அரசுறையும் ஓகை உயர்மாடத் துள்ளிருந்து – கூகை படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே தென்னன் விடுமாற்றங் கொள்ளாதார் நாடு. – 109</poem> ::வாகை வன மாலை சூடி அரசு உறையும் ஓகை உயர் மாடத்து உள் இருந்து கூகை படு பேய்க்குப் பாட்டு அயரும் பண்பிற்றே தென்னன் விடு மாற்றம் கொள்ளாதார் நாடு. ::தென்னன் ஆணையை ஏற்றுக்கொள்ளாத பகைவர் பிறரை வென்ற மாலையை அழகுடன் சூடிக்கொண்டு உவகையுடன் (ஓகை) இருப்பர். எனினும் கூகை அவர்களது மாடத்துக்குள்ளே இருந்துகொண்டு அவர்கள் சாவப்போவதைப் பாட்டாகப் பாடும். பேய்களை அழைத்துப் பாட்டுப் பாடும். இது தென்னன் அழிக்கப்போகும் அறிகுறிப் பாட்டு. ===110=== <poem>பறைநிறை கொல்யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த் திறைமுறையின் உய்யாதார் தேயம் – முறைமுறையின் ஆன்போய் அரிவையர் போய் ஆடவர்போய் ஆயிற்றே ஈன்பேய் உறையும் இடம். – 110</poem> ::பறை நிறை கொல் யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த் திறை முறையின் உய்யாதார் தேயம் முறை முறையின் ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே ஈன் பேய் உறையும் இடம். ::பஞ்சவர் என்னும் பாண்டியர்க்குத் தோழனாகித் திறை தந்து பிழைத்துக்கொள்ளாதவர் தேசமானது ஆனிரைகள், மகளிர், ஆடவர் ஆகியோர் விட்டுவிட்டுச் சென்றதால் பிணம் தின்னும் பேய் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு வாழும் இடமாக மாறிவிட்டது. ==பாண்டியன் 111-115== ===111=== <poem>கொடித்தலைத்தார்த் தென்னவன் தோற்றான்போல் நின்றான் மடித்தவாய் சுட்டிய கையாற் – பிடித்தவேற் கண்ணேரா ஓச்சிக் களிறணையாக் கண்படுத்த மண்ணேரா மன்னரைக் கண்டு. – 111</poem> ::தொடித் தலைத் தார்த் தென்னவன் தோற்றான் போல் நின்றான் மடித்த வாய் சுட்டிய கையால் பிடித்த வேல் கண் நேரா ஓச்சிக் களிறு அணையாக் கண் படுத்த மண் நேரா மன்னரைக் கண்டு. ::தன் தாயக மண்ணை நினைத்து வேலைக் கையிலே தாங்கி வந்து கண்ணோட்டம் இல்லாமல் பாய்ச்சினான் அந்த வீரன். அவன் தன் களிறு மாண்டுகிடக்கும் மெத்தையில் கண்ணுறக்கம் கொண்டிருக்கிறான். சினம் கொண்டு மடித்த வாயோடு கிடக்கிறான். தன் கையால் தென்னவனைச் சுட்டிக்கொண்டு கிடக்கிறான். அதனைப் பார்த்துத் தென்னவன் தோற்றவன் போல் நின்றான். இப்படிப்பட்ட வீரனைக் கண்டு இரக்கப்பட்டு நின்றான். ===112=== பாடல் 112 <poem>தொழில்தேற்றாப் பாலகனை முன்னேறீஇப் பின்னின் அழலிலைவேல் காய்த்தினார் பெண்டிர் – கழலடைந்து மண்ணீத்த லென்ப வயங்குதார் மாமாறன் கண்ணீத்தந் தீர்க்கு மருந்து. – 112</poem> ::தொழில் தேற்றாப் பாலகனை முன்னேறீஇப் பின்னின் அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து மண் ஈத்தல் என்ப வயங்கு தார் மா மாறன் கண் நீத்தம் தீர்க்கும் மருந்து. ::பெண்டிர் தம் போர்த்தொழில் பயிலாத பாலகனை முன்னே நிறுத்தி, மின்னும் வேலைக் கையிலே கொடுத்து, தாம் பின்னே நின்றுகொண்டு, அவனுக்கு தெம்புச்சூடு ஏற்றிப் போருக்கு அனுப்புவர். மாறன் இத்தகைய தாய்மாரின் காலைத் தொட்டு வணங்கி, தான் வென்ற நாட்டை அவளுக்குத் தருவான். இது மகனை இழந்த அந்தத் தாயின் கண்ணீர் வெள்ளத்தைத் தீர்க்கும் மருந்து. ===113=== <poem>சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறுந்துணையும் நின்றதுகொல் நேர்மருங்கில் கையூன்றி – முன்றில் முழங்கும் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்(கு) உழந்துபின் சென்றவென் நெஞ்சு. 113 </poem> ::சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறும் துணையும் நின்றதுகொல் நேர் மருங்கில் கையூன்றி முன்றில் முழங்கும் கடா யானை மொய்ம் மலர்த்தார் மாறற்(கு) உழந்து பின் சென்ற என் நெஞ்சு. ::மாறன், முழங்கும் யானைக்கடாவின்மீது வருபவன். மலர்மாலையை அணிந்திருப்பவன். அவன் பின்னே என் நெஞ்சு சென்றது. அது இப்போது அவனிடம் சென்றுவிட்டதா? அவன் நெஞ்சில் புகுந்துவிட்டதா? அவனைப் பார்ப்பதற்கு அனுமதி வெறுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறதா? அவனுக்கு நேராகப் பக்கத்தில் தன் கையை ஊன்றி நின்றுகொண்டிருக்கிறதா? இல்லை முற்றத்திலேயே இருக்கிறதா? ஒன்றும் தெரியவில்லையே! ===114=== <poem>உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக் கழுதை செவிஅரிந்து அற்றால் – வழுதியைக் கண்டநம் கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள் கொண்டன மன்னோ பசப்பு. 114</poem> ::உழுத உழுத்தம் செய் ஊர்க் கன்று மேயக் கழுதை செவி அரிந்து அற்றால் வழுதியைக் கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத் தோள் கொண்டன மன்னோ பசப்பு. ::உழுது விதைத்து விளைந்த உழுந்து வயலில் புகுந்து ஊராரின் கன்றுக்குட்டி மேய்ந்துவிட்டது. அதற்குத் தண்டனை வழங்கியவர்கள் கழுதையின் காதை அறுத்துவிட்டனர். இது எப்படி நீதி ஆகும்? அது போலத்தான் இங்கும் நடக்கிறது. வழுதியைக் கண்டதோ என் கண். அதற்குத் தண்டனையாக என் தோளில் அல்லவா பசப்பு-நோய் ஏறுகிறது. இது அடுக்குமா? ===115=== <poem>நறுவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா மறவேந்தன் வஞ்சியான் அல்லன் – துறையின் விலங்காமை நின்று வியன்தமிழ்நா டைந்தின் குலங்காவல் கொண்டொழுகும் கோ. - 115</poem> ::நறு வேந்து கோதை நலம் கவர்ந்து நல்கா மறவேந்தன் வஞ்சியான் அல்லன் துறையின் விலங்காமை நின்று வியன் தமிழ்நாடு ஐந்தின் குலம் காவல் கொண்டு ஒழுகும் கோ. ::தமிழ்நாடு ஐந்து பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. அவற்றை வெவ்வேறு குலத்தவர் ஆண்டுவந்தனர். இந்த ஐந்து குலத்தவரையும் காக்கும் பொறுப்பினை மேற்கொண்டிருந்த கோமகன் பாண்டியன். அவன் தமிழ்நாடன். அவன் நல்ல வேந்தன். கோதைமாலை அணிந்தவன். என் நலத்தையெல்லாம் கவர்ந்துகொண்டவன். கவர்ந்துகொண்டு திரும்பத் தராதவன். மறம் நிறைந்த கொடுங்கோலன். அவன் வஞ்சியரசன் சேரன் அல்லன். எனக்கு வஞ்சனை செய்யாமல் இருப்பவனும் அல்லன். என்ன செய்வது? அவன்தான் என் கோமகன். ::5 பிரிவு – சேரர், சோழர், பாண்டியர், கொங்கர், தொண்டையர் ==முன் தொகுப்பு (உரைக்காக)== பாடல் 1 :செங்கால் மடநாராய்! தென்உறந்தை சேறியேல், :நின்கால்மேல் வைப்பன்என் கையிரண்டும் - வன்பால் :கரைஉரிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற்(கு), :உரையாயோ யான்உற்ற நோய். (''அழகிய நாரையே, தெற்கேயுள்ள உறையூருக்குச் செல்வாயானால், உன் காலைப் பிடித்துக் கும்பிடத் தயார். தேகத்தின் வலிமை காரணமாகக் கரையின் மேல் உராய்ந்து, உராய்ந்து ஏறிய மீனானது மறுபடியும் நீரில் விழுந்து விடுகிற மீனின் தேகக்கொழுப்பு சோழனுக்கு யான் உற்ற காதல் கூறுவாயாக!'') (சேரன் குறிப்பு: ‘மீன்கள் கரையின் மீது துள்ளிவிழுந்து விளையாடுகின்ற காவிரிநாடனுக்கு- சோழனுக்கு - மையலால் யானடைந்துள்ள துன்பத்தைக் கூறுவாயாக.) (‘கரையேறி மீன் விளையாடும் காவிரிநாடு’ என்பது இவ்வடியின் மீளாக்கமே.) ;பாடல் 2 :துடியடி, தோல்செவி தூங்குகை, நால்வாய்ப் :பிடியே! யான் நின்னை இரப்பல், கடிகமழ்தார்ச் :சேலேக வண்ணனொடு சேரி புகுதலும்எம்் :சாலேகம் சார நட. (''கெஞ்சி கேட்டுக்கொள்ளுகிறேன். வாசனை கமழும் மாலை சூடிய,சந்தனம் பூசிய பாண்டியனோடு, ஊருக்குள் பிரவேசிக்கவும் அதாவது,நீராடிவிட்டு உன்மேல் ஏறி ஊருக்குள் மன்னன் புகும் போது, எங்கள் வீட்டு ஜன்னலை ஒட்டி நடந்து வரவேண்டும்.'') ;பாடல் 3 :குடத்து விளக்கே போல் கொம்பன்னார் காமம் :புறப்படா; பூந்தார் வழுதி - புறப்படில், :ஆபுகு மாலை அணிமலையில் தீயே போல் :நாடறி கெளவை தரும். (''பாண்டியன் மேல் பெண்கள் வைத்த காதல் வெளியே தெரியாது. மாலை சூடிய பாண்டியன் பவனி வருவதற்காகப் புறப்பட்டு விட்டாலோ பசுக்கள் மேய்ச்சல் புலங்களிலிருந்து ஊரு்க்குள் புகும் மாலை நேரத்தில் ஊருக்குப் பக்கத்தில் உள்ள மலைச்சரிவில், நாட்டார் எல்லோரும் அந்த பெண்களது காதல் நோயைத் தெரிந்து, வம்பளப்பதற்கு வாய்விடும்'') ;பாடல் 5 :நீரும் நிழலும் போல் நீண்ட அருளுடைய :ஊரிரே ! என்னை உயக்கொண்மின் ! - போரிற்(கு) :உழலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக்(கு) :அழலும்என் நெஞ்சம் கிடந்து. (''காதல் நோயால் என் நெஞ்சு சதா கொதித்த வண்ணமாக இருக்கிறது. ஊரிரே என்னை உயக்கொண்மின்!'') ;பாடல் 6 :போரகத்துப் பாயுமா ! பாயா(து) ஒருபடியா, :ஊரகத்து மெல்ல நடவாயோ ! - பார :மதவெங் களியானை மாறன் தன் மார்பம், - :கதவங்கொண்(டு) யாமும் தொழ (''இந்தக் கவி பெண்ணின் கூற்று என்பது மறைவாய் கிடக்கிறது. மார்பம் தொழ, கதவங்கொண்டு, என்னும் சொற்களை வைத்துத்தான் காதலுற்ற பெண் பேசுகிறாள். இப்படி காதலை மறைவில் வைத்துச் சொல்வதிலிருந்து ஒரு நாண பாவம் இருப்பதைத் தெளிவாக்குகிறது'') ;பாடல் 7 :தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி இளவளவன் :மண்ணகம் காவலனே என்பரால் - மண்ணகம் :காவலனே ஆனக்கால் காவானே மாலைக்கண் :கோவலர்வாய் வைத்த குழல் (''தெளிந்த நீர்நிலைகளில் பூத்த செங்கழுநீர் மலர்களை மாலையாய்த் தொடுத்து அணிந்த சென்னி என்றும் இளவளவன் என்றும் பாராட்டப்படுகிற சோழன் உலகத்தைக் காக்கிறான் என்று சொல்லுகிறார்கள். கட்டளை இட்டுத் தடுக்க மாட்டானா இந்த மாலைப்பொழுது வந்துவிட்டதை அறிவிக்கும் வாய்வைத்து ஊதுகின்ற புல்லாங்குழலை'') [[பகுப்பு:சங்க இலக்கியம்]] [[பகுப்பு :பழந்தமிழ் இலக்கியங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]] madrkm6egii56e8aq280lpvyqnhu23h 1834751 1834748 2025-06-23T15:12:50Z 2409:408D:18A:CE42:0:0:19B3:F8B0 1834751 wikitext text/x-wiki {{நிறைவுறா}} {{விபரம் | title = முத்தொள்ளாயிரம் | noauthor = | section = | previous = | next = | notes = ''[[w:முத்தொள்ளாயிரம்|முத்தொள்ளாயிரம்]] என்பது தமிழ் இலக்கியத்தில் தொகை நூல் வகையைச் சேர்ந்தது. இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. இவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. பல்லாண்டுகளுக்கு முன்னர்ப் ''புறத்திரட்டு'' ஆசிரியர் நூற்றொன்பது பாக்களை மட்டும், தம் தொகை நூலில் திரட்டி வைத்துள்ளார். அவை கடவுள் வாழ்த்தாக ஒன்றும், சேரனைப் பற்றி இருபத்திரண்டும், சோழனைப் பற்றி இருபத்தொன்பதும், பாண்டியனைப் பற்றி ஐம்பத்தாறும் சிதைந்த நிலையில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெண்பாக்களாகும். மூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை முதலான அரிய செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. அருணோதயம் பதிப்பு நூலுக்கு மதிப்புரை வழங்கியுள்ள சென்னைப் புதுக்கல்லூரிப் பேராசிரியர் நா. பாண்டுரங்கன் முத்தொள்ளாயிரப் பாடல் ஒவ்வொன்றும் தகதகக்கும் தங்கநிலா என்று பாராட்டியுள்ளார். மேலும் கடைவாயில் அடக்கிக்கொண்டு சப்பிச் சுவைக்க வேண்டிய கற்கண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார். உலா வரும் அரசன்மீது காதல் கொண்டு தலைவி கூறும் ஒருதலைக் காமச் செய்திகளை, கைக்கிளைப் பொருண்மைச் செய்திகளைக் கொண்ட பாடல்கள் இதில் பெரும்பகுதியாக இடம்பெற்றுள்ளன. ''}}{{Featured download}}<br/> {{TOCright}} '''பாடல்கள்''' ==கடவுள் வாழ்த்து== <poem>மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப் – பின்னரும் ஆதிரையான் ஆதிரையான் என்றென்(று) அயருமால் ஊர்திரைநீர் வேலி உலகு – 1</poem> மன்னிய = நிலையாக இருக்கின்ற; ஆதிரை = திருஆதிரை என்னும் நட்சத்திரம், ஆகின்ற திரை (அலை); அயரும்= கொண்டாடும்; ஆல் = அசைநிலை; ஊர் = உலாவு :என்றும் நிலைபெற்றிருக்கும் விண்மீன்கள், நிலா (மதியம்), கனலும் கதிரவன் என்று இவற்றையெல்லாம் முதன்முதலில் படைத்த முதல்வனைப் பின்னரும் ஆதிரையான் (திருவாதிரை நாளுக்கு உரிய சிவன்) என்றும், ஆதிரையான் (ஆ திரையான் ஆகி, வளரும் கடலின் அலைத்திரையில் பள்ளிகொண்டிருக்கும் திருமால்) என்றும் உலாவும் அலைகளைக்கொண்ட கடலை வேலியாக உடைய உலகில் வாழும் மக்கள் கொண்டாடுகின்றனர். நாண்மீன்<ref>https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D&searchhws=yes</ref> = நாள்மீன் அதாவது அசுவினி முதலான 27 நட்சத்திரங்கள். == சேரன் 2-5== <poem>தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத் தேயத் திரிந்த குடுமியவே – ஆய்மலர் வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக் கண்டுலாஅம் வீதிக் கதவு – 2 :[குடுமி = கதவு சுழலும் தண்டு; ஆய் = அழகு; உலா = திரி; கண்ணி = ஆடவர் தலைக்குச் சூடும் மாலை; வயமான் = குதிரை] : அழகிய மலர்களாற் கோத்த வண்டு மொய்த்துத் திரியும் தலைமாலையைச் சூடியவனும் குதிரை பூட்டிய தேரில் திரிபவனுமாகிய சேரனைக் கண்டு அவன் உலாவும் வீதிகளின் வீட்டுக் கதவுகளைத் தாய்மார்அடைப்ப மகளிர் மீண்டுந் திறப்ப என்று மாறிமாறி நிகழவும் தேய்ந்து உருமாறிய கொண்டிகளை (கதவு சுழலும் தண்டுகள்) உடையவாயின. : அதாவது, கோதை வண்டு மொய்க்கும் பூமாலை அணிந்துகொண்டு குதிரை பூட்டிய தேரில் உலா வந்தான். அவன் அழகைக் காண விரும்பி மகளிர் கதவைத் திறந்தனர். கண்டால் அவள் மயங்கிவிடுவாள் என்று அவர்களது தாய்மார் கதவை மூடினர். இப்படி ஒருவர் மூட, ஒருவர் திறக்க இருந்ததால் கதவு மாட்டியிருந்த கொண்டி தேய்ந்ததுதான் மிச்சம். யாருடைய எண்ணமும் நிறைவேறவில்லை. வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேல் கண்டவர் மாமையை அன்றோ இழப்பது – மாமையிற் பன்னூறு கோடி பழுதோ,என் மேனியிற் பொன்னூறி யன்ன பசப்பு - 3 :சேரன் கோதை தாவும் போர்க்குதிரை பூட்டிய தேரில் செல்பவன். அவன் இப்போது மெதுவாகச் செல்லும் குதிரை பூட்டிய தேரில் உலா வருகிறான், அவனைக் கண்ட மகளிர் தன் மேனியிலிருந்த மாந்தளிர் போன்ற மாமை நிறத்தை இழந்துவிட்டனர். நானோ என் மேனியில் பொன்னிறம் ஊறிக்கிடப்பது போன்ற பசப்பு நிறத்தைப் பெற்றிருக்கிறேன். இது பழுதாகுமா? ஆகாது. மாமை நிறத்தைக் காட்டிலும் பொன்னிறம் பல நூறு மடங்கு எனக்கு மேன்மையானது. காரணம் அவனுக்காக ஏங்கிக் கிடைத்த பேறு ஆயிற்றே – என்கிறாள் ஒரு தலைவி. ‌ கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில் அடைத்தாள் தனிக்கதவம் அன்னை – அடைக்குமேல் ஆயிழையாய் என்னை அவன்மேல் எடுத்துரைப்பார் வாயும் அடைக்குமோ தான் - 4 :சேரமன்னன் கோதை கடல் போன்ற படைசூழ ஊர்வலம் வருகிறான். ஆயிழைத் தோழியே! அவனைக் கண்ணாரக் காணவொட்டாமல் தாய் கதவை அடைத்துத் தாளிட்டிருக்கிறாள். ஆயின், அவனோடு என்னைச் சேர்த்துப் பேசும் ஊரார் வாயை அவளால் அடைக்கமுடியுமா? வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும் நிரைபொரு வேல்,மாந்தைக் கோவே – நிரைவளையார் தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர்தாய்மார் செங்கோலன் அல்லன் என. – 5</poem> :மன்னா! வணங்காதவரை வணங்கச் செய்து அவர்தம் மண்ணைக் கொள்ளலாம். உன் வலையில் விழுந்து கிடக்கும் பெண்ணின் அழகைக் கவரலாமா? பெண்ணின் தாய்மார் உன்னைச் செங்கோலன் அல்லன் என்று கூறுகிறார்களே! மாந்தை நகர மக்களின் கோ. மலை போல் அகன்ற மார்பினை உடையவன். நிரையாக நின்று வேலால் தாக்குபவர் மாந்தை நகர மக்கள். மகளிர் வரிசையாக வளையல் அணிந்தவர். கையின் வளையல் கோலத்தை வௌவலாமா? == சேரன் 6-10== <poem> புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை நன்னாகம் நின்றலரும் நன்னாடன் – என்னாகம் கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான் என்கொல் இவரறிந்த வாறு? – 6</poem> :மாந்தை நன்னாடனாகிய சேரன் ஒருநாள் இரவுக் கனாவில் என் மார்பகத்தைத் தடவிக்கொடுத்தான். இது இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? கண்டபடி பேசுகிறார்களே! :புன்னாகம், நன்னாகம், தென்னை ஆகியன மலரும் ஊர் மாந்தை நகரம். <poem> கடும்பனித் திங்கள்தன் கைப்போர்வை யாக நெடுங்கடை நின்றதுகொல் தோழி – நெடுஞ்சினவேல் ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக் காணிய சென்றவென் நெஞ்சு. – 7</poem> :பனி பொழியும் மாதம் இது. கையைப் போர்வையாக்கிக்கொண்டு நடுங்குகிறேன். கோதை அரசன் என் நடுக்கத்தைப் போக்குவான் என்று அவனைக் காண என் நெஞ்சு சென்றது. அவன் கோட்டை வாயிலில் அது நின்றுகொண்டிருக்கிறது போலும். என்னைப் போலவே கையைப் போர்வையாக்கிக்கொண்டு நிற்கிறது போலும். :கோதை பெருஞ்சினம் கொண்ட வேல்வீரன். பச்சைக் கல் பதித்த பூணாரமும், பூ மாலையும் அணிந்திருப்பவன். <poem> ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக் காணிய சென்று கதவடைத்தேன் – நாணிப் பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு. – 8</poem> :கோதை உலா வந்தான். அவனைக் காணவேண்டும் என்று சென்றேன். நாணம் வந்துவிட்டது. உடனே நானே கதவை அடைத்துவிட்டேன். வறுமையில் வாடுபவர் பெருஞ் செல்வம் படைத்தவர் இல்லத்துக்குச் செல்வார்கள். பின் திரும்புவார்கள். மீண்டும் செல்வார்கள். இப்படித்தான் என் நெஞ்சும் கோதை அரசனை காணப் போய் வந்துகொண்டிருக்கிறது. <poem> வருக குடநாடன் வஞ்சிக்கோ மான்என்(று) அருகலர் எல்லாம் அறிய – வருகலாம் உண்டா யிருக்கஅங்(கு) ஒண்தொடியாள் மற்(று)அவனைக் கண்டாள் ஒழிந்தாள் கலாம் – 9</poem> :கலாம் என்பது கலகலப்பு. :வருக குடநாடன் :வருக வஞ்சிக் கோமான் :என்று இவள் அருகில் இல்லாதவர்கள் எல்லாம் கலகலப்பாக இருக்கின்றனர். :ஆனால் இவள் மட்டும் அவனைக் கண்ட பின்பு கலகலப்பு ஒழிந்து காணப்படுகிறாளே! ஏங்கிக் கிடக்கிறாளே! <poem> இவன்என் நலங்கவர்ந்த கள்வன் இவன்எனது நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று – அஞ்சொலாய் செல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்குச் சொல்லும் பழியோ பெரிது. – 10</poem> :இவன் என் அழகைக் கவர்ந்துகொண்ட கள்வன், :இவன் என் நிறை நெஞ்சைக் குறை நெஞ்சு ஆக்கிய கள்வன் :என்று சேரலர் கோக்கோதை செல்லுமிடமெல்லாம் அவனைப் பழி தூற்றுகிறார்களே! :“நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை” – கலித்தொகை 133 காதலை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடக்கி வைத்திருந்தேன். என் காதலைப் பிறர் அறியும்படிக் காட்டச் செய்த கள்வன் இவன் – என்கிறாள் == சேரன் 11-15== காராட் டுதிரந்தூஉ யன்னை களனிழைத்து நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ? - போராட்டு வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதைக்கென் னெஞ்சங் களங்கொண்ட நோய். 11 இது தலைவி கூற்று. மிக்க சினத்தையும் வேலையும் கொண்டு போராடிப் பகைவரை வென்று. அவர்தம் களத்தைக் கைப்பற்றிய சேரன்பால் என் நெஞ்சே இடமாய்க்கொண்டு எழுந்த வேட்கைநோய், என் அன்னை வீட்டின்பால் ஓரிடத்தில் தெய்வத்தை எழுந்தருளச் செய்து (தெய்வத்தை ஆவாஹனம் செய்தல்) வெள்ளாட்டைப் பலியிட்டு அதன் குருதியைத் தெளித்து நீராட்டி நீங்கு. ” என்று கூறினால் நீங்கிவிடுமோ? ‘நோய் நீங்குமோ’ என இயைக்க. காராடு - வெள்ளாடு; உதிரம் - குருதி, இரத்தம்; கோதை - சேரன். மல்லல்நீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினும் சொல்லவே வேண்டும் நமகுறை - நல்ல திலகங் கிடந்த திருநுதலாய்! அஃதால் உலகங் கிடந்த இயல்பு. 12 இது தலைவி தோழிக்குக் கூறியது. சிறந்த திலகம் அணிந்த அழகிய நெற்றியையுடைய தோழியே! நீர்வளம் மிக்க மாந்தை நகரத்தாரின் பெருமை மிக்க மன்னவனாகவே இருப்பினும் அச்சேர மன்னனிடம் அஞ்சாதே சென்று என் மனக்குறையை நீ அவனிடம் சொல்லத்தான் வேண்டும். அஃதல்லவா உலகில் உயர்ந்தோரிடம் அமைந்திருக்கும் நற்பண்பாகும்? “ உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு” என்பதைத் தன் தோழிக்கு நினைவூட்டி, சேரனிடம் சென்று தன் குறையைக் கூறுமாறு தலைவி வேண்டுகிறாள். மல்லல் - வளப்பம்; மாந்தை - சேரனது நகரங்களில் ஒன்று; கடுங்கோ - சேரனது பெயர்களுள் ஒன்று, “செல்வக் கடுங்கோ வாழியாதன்” என வருதல் காண்க. நமகுறை - நம்+அ+குறை; ‘அ’ - ஆறாம் வேற்றுமை பன்மை உருபு; திலகம் - நெற்றியிலிடும் பொட்டு; திரு - அழகு; நுதல் - நெற்றி; உலகம் - உயர்ந்தோர், “உலகெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே” என்பது தொல்காப்பியம். நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய ஊரிரே என்னை உயக்கொண்மின் - போரிற் புகலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக் கழலுமென் னெஞ்சங் கிடந்து. 13 இதுவும் தலைவி கூற்று. போரை விரும்பும் கள்ளுண்டு களித்த யானைப்படைகளை யுடையவனும் பூழி நாட்டின் தலைவனாய் விளங்குகின்றவனும் ஆன சேரனிடம் யான் கொண்ட வேட்கை நோயால் என் நெஞ்சம் செயலறியாது துன்புற்று வேகின்றது; நீரும் நிழலும் தம்மையடைந்தார்க்கு எல்லாம் , வெப்பத்தைப் போக்கிக் குளிர்ச்சி தருவதுபோலப் பிறர் துன்பம் நீக்கும் மிகுந்த அருளுடைய ஊர்மக்களே! என் துயர் நீக்கி என்னை உயிர்வாழச் செய்யுங்கள். (இவ்வாறு தலைவி வேண்டுகிறாள்) புகலும் - விரும்பும், “ போரெனிற் புகலும் புனைகழல் மறவர்” எனச் சங்க இலக்கியத்துள்ளும் வந்துள்ளமை காண்க. பண்டைக்காலத்தில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரும் அதன் சுற்றுப்புறங்களும் ‘செந்தமிழ்நாடு’ என்றும் தமிழ் வழங்கிய பிற நிலப்பகுதிகள் ‘கொடுந்தமிழ்நாடுகள்’ என்றும் வழங்கப்பட்டன. அவை தென்பாண்டி நாடு, குடநாடு, குட்டநாடு, கற்காநாடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, அருவாவடதலை நாடு, சீதநாடு, மலையமான் நாடு, புனல்நாடு என்பனவாம். அவற்றுள் பூழிநாடு என்பது பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடைக்கண் அமைந்து ஒரு காலத்தில் பாண்டியர் ஆட்சியிலும் ஒரு காலத்தில் சேர மன்னர் ஆட்சியிலுமாக மாறி மாறி இருந்திருத்தல் வேண்டும். அதனால் இருவருமே “பூழியர்கோ” எனப் பாடப்பட்டுள்ளனர். “பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன்” என்பதில் பாண்டியனைக் குறித்தல் காண்க. கோதை - சேரன்; அழலும் - வேகும். அள்ளற் பழனத் தரக்காம்பல்வாயவிழ வெள்ளந்தீப் பட்டதென வெரீஇ - புள்ளினந்தங் கைச்சிறகாற் பார்ப்பொடுக்குங் கவ்வை யுடைத்தரோ நச்சிலைவேற் கோக்கோதை நாடு. 14 இது சேர நாட்டின் இயற்கைவளம் கூறுவது. நுனிக்கண் நஞ்சு தடவப்பெற்ற வேலையுடைய சேரமன்னன் நாடு, சேறு நிறைந்த வயல்களில் அரக்கு நிறத்தில் மலர்ந்து கிடக்கும் ஆம்பல் மலர்களைக் கண்ட பறவைக் கூட்டங்கள், நீரில் தீப்பற்றிக் கொண்டது என்றஞ்சித் தம் கைகளைப்போல் விளங்கும் சிறகுகளால் தம்முடைய இளங்குஞ்சுகளை அணைத்துப் பாதுகாக்க முயலும் பேரொலியையுடையதாக விளங்குகிறது. அள்ளல் - சேறு; பழனம் - வயல்; அரக்கு - செந்நிறம்; வெள்ளம் - தண்ணீர்; வெரீஇ - வெருவி, அஞ்சி; சொல்லிசையளபெடை ; புள் - பறவை; கைச்சிறகு - சிறிய சிறகு எனலுமாம்; பார்ப்பு - இளங்குஞ்சு; கவ்வை - ஆரவாரமான ஒலி. அரோ- அசை; களிகள் களிகட்கு நீட்டத்தங் கையால் களிகள் விதிர்த்திட்ட வெங்கள் - துளிகலந் தோங்கெழில் யானை மிதிப்பச் சேறாகுமே பூம்பொழில் வஞ்சி யகம். 15 இது சேர நாட்டின் தலைநகர் வஞ்சியின் வளம் கூறுவது. பூஞ்சோலைகள் நிறைந்த வஞ்சிநகரத் தெருக்கள், அத்தெருக்களில் கள்ளுண்டு களிப்பவர்கள் தம்மைப் போன்ற கட்குடியர்களுக்குத் தாம் உண்ணும் கள்ளை நீட்ட, அதனை ஏற்றுக்கொள்ளும் குடியர்கள் தம் கைகளால் தொட்டுச் சிதறிய கொடுங்கள்ளின் துளிகள் நிறைந்து, அவ்வழியாகச் செல்லும் மலைபோன்ற அழகிய யானைகள் மிதித்தலால் சேறாகிக் கிடக்கின்றன. களிகள் - கட்குடியர்கள்; விதிர்த்தல் - விரல்களை உதறுவதால் நீர்த்துளிகள் நிலத்தின்கண் சிதறச் செய்தல்; வெங்கள் - கொடிய கள்; ஓங்கெழில் யானை - மலைபோல் உயர்ந்த அழகிய யானை, ஓங்கல் - மலை; “ஓங்கலிடைத் தோன்றி உயர்ந்தோர் தொழவிளங்கி” என வருதல் காண்க. ==சேரன் 16-20 == வானிற்கு வையகம் போன்றது வானத்து மீனிற் கனையார் மறமன்னர் - வானத்து மீன்சேர் மதியனையான் விண்ணுயர் கொல்லியர் கோன்சேரன் கோதையென் பான். 16 இது சேரனின் சிறப்புக் கூறுவது. இந்நிலவுலகம் வானத்தைப் போன்றது; இவ்வுலகையாளும் மன்னர்கள் வானத்தில் விளங்கும் விண்மீன்களைப் போன்றவர்கள்; விண்ணளவு உயர்ந்த கொல்லிமலையின் தலைவனான சேரமன்னன் விண்மீன்களுக்கிடையே வீறுடன் உலாவரும் வெண்ணிலாவைப் போன்றவன். வையகம் வானைப் போன்றது எனக் கூட்டுக. ‘வானிற்கு’ என்பது உருபுமயக்கம்; மீன் - விண்மீன்; கோன் - தலைவன்; சேரன்கோதை - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பல்யானை மன்னர் படுதிறை தந்துய்ம்மின் மல்லல் நெடுமதில் வாங்குவில் பூட்டுமின் வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன் வில்லெழுதி வாழ்வார் விசும்பு. 17 இது சேரனின் வீரச்சிறப்பைக் கூறுவது. சேர மன்னவனின் தூதரின் கூற்று. பல யானைகளையுடைய மன்னர்களாக இருப்பினும் உங்கள் நாட்டு வருவாயில் சேரனுக்குரிய பங்கினை உடனே கொடுத்து உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் நகரின் வளம்மிக்க உயர்ந்த மதில்களில் சேரனது சின்னமாகிய வளைந்த வில் சின்னத்தைப் பொருத்தி வையுங்கள். வாடாத மலர்மாலைகளை அணிந்து வானில் வாழும் தேவர்களும் சேரனது வில் சின்னத்தை வானில் பொறித்து வைத்தே பாதுகாப்பாக வாழ்கின்றார்கள். திறை - சிற்றரசர்கள் பேரரசர்களுக்கு ஆண்டுதோறும் செலுத்தும் வருவாய்ப் பங்கு, இதனைக் கப்பம் என்பர். மல்லல் - வளம்; வானோர் - வானுலகில் வாழும் தேவர்கள்; வானவன் - சேர மன்னன்; விசும்பு - வானம்; விசும்பில் எழுதப்படும் வில் மழைக்காலத்தில் தோன்றும் வானவில். தற்குறிப்பேற்ற அணி. அரும்பவிழ் தார்க்கோதை அரசெறிந்த ஒள்வேல் பெரும்புலவும் செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு வண்டாடு பக்கமும் உண்டு குறுநரி கொண்டாடு பக்கமும் உண்டு. 18 இதுவும் சேர மன்னனின் வீரச்சிறப்பும் வெற்றிச்சிறப்பும் கூறுவது. அன்றலர்ந்த மலர்மாலையணிந்த சேரன் பகையரசரை வென்றுகொண்ட ஒளிபொருந்திய வேலாயுதம் ஒருபக்கம் புலால் நாற்றமும் ஒருபக்கம் குங்குமம் கலந்த சந்தனத்தின் நறுமணமும் கலந்து விளங்குகின்றது. எனவே, அவ்வேலின்கண் நறுமணத்தை நாடிச் சுரும்புகளும் வண்டுகளும் மொய்க்கின்ற பக்கமும் உண்டு; புலாலை விரும்பிச் சிறு நரிகள் கொண்டாடும் பக்கமும் உண்டு. சேரனது வேலின்கண் தோய்ந்துள்ள புலாலை நீக்குவதற்கும் நேரமின்றி வெற்றி கொண்டாடப்படுகின்றது; அக்கொண்டாட்டம் நடைபெறும்போதே மீண்டும் அவ்வேல் போர்முனைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. இடைவிடாது சேரன் போருடற்றி வென்று வருகிறான் என அவனது வீரமிகுதி கூறப்பட்டுள்ளது. ஒள்வேல் - ஒளிபடைத்த வேல். வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப் பாற எறிந்த பரிசயத்தால் - தேறாது செங்கண்மாக் கோதை சினவெங் களியானை திங்கள்மேல் நீட்டுந்தன் கை. 19 இது யானைமறம் கூறுவது. சிவந்த கண்களையுடைய பெருமைமிக்க சேர மன்னனது, சினத்தையும் கொடிய கள்ளுண்டு களித்தலையும் உடைய யானை, ஆற்றல் பொருந்திய பகையரசர்களது விரிந்த, மாலை சூட்டிய, வெண்கொற்றக் குடைகளைப் பறித்து அவை அழிந்துபடுமாறு வீசி எறிந்த பழக்கத்தால் வெண்ணிறத்தையும் வட்ட வடிவத்தையும் கொண்டு வானில் வலம்வரும் முழுநிலவையும் - நிலவு வேறு, குடை வேறு என்று தெளியாது - பகையரசரின்வெண்கொற்றக்குடையென்று கருதி அதனைப் பறித்து எறியும்பொருட்டு அந்நிலவை நோக்கித் தன் கையை நீட்டுகிறது. இது தற்குறிப்பேற்ற அணி. வீறு - பெருமை, ஆற்றல், வலிமை; சால் - சான்ற - பொருந்திய; உரிச்சொல் தொடர்; தாம்ம் - மலர்மாலை; பாற - அழியுமாறு, “பழவினைகள் பாறும்வண்ணம்” (திருவாசகம்); பரிசயம் - பரிச்சயம் - பழக்கம்; களியானை - கள்ளுண்டு களித்த யானை. அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர் எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டால் பனிக்கடலுள் பாய்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான் காய்சினதேர்க் கோதை களிறு. 20 இதுவும் யானைமறம் கூறியது. பகைவரை வருத்தும் சினத்தையும் தேரையும் உடைய எம் தயலைவனாகிய சேரமன்னனது ஆண்யானை, வலிமையுடைய பகையரசர்களது கோட்டைமதிலின் இரும்புக்கதவுகளின்மீது பாய்ந்து நொறுக்கி அக்கதவினைத் தன் தந்தங்களால் தூக்கி உயர்த்திக் கொண்டு நிற்கும் காட்சி, குளிர்ந்த கடலின் நடுவே பாய்விரித்து நிற்கும் மரக்கலம் போலத் தோன்றுகிறது . அயில் - இரும்பு; எயில் - கோட்டைமதில்; கோடு - தந்தம்; பனி - குளிர்ச்சி; நாவாய் - மரக்கலம். == சேரன் 21-32 == மரகதப்பூண் மன்னவர் தோள்வளை கீழா வயிரக் கடகக்கை வாங்கித் - துயருழந்து புண்ணுற் றழைக்கும் குறுநரித்தே பூழியனைக் கண்ணுற்று வீழ்ந்தார் களம். 21 இப்பாடல் போர்க்கள இயல்பு கூறுவது. சேரனை எதிர்த்துப் போரிட்டு மாண்டுகிடக்கும் பகைவர்களது போர்க்களம், மரகத அணிகலன்களை அணிந்த மன்னர்களின் தோள்வளைகளுக்குக் கீழாக உள்ள உறுதியான கடகம் அணிந்த கைகளைக் கடித்து அதனால் புண்பட்ட வாயோடு ஊளையிடும் சிறுநரிக் கூட்டங்களையுடையதாய் விளங்குகிறது. வயிரம் - உறுதி; நவரத்தினங்களுள் ஒன்று எனலுமாம். கடகம் - முன்கையில் அணியும் அணி; தோள்வளை - தோளில் (புயத்தில்) அணியும் வளை; வாங்குதல் - கடித்தல். கரிபரந் தெங்கும் கடுமுள்ளி பம்பி நரிபரந்து நாற்றிசையுங் கூடி - எரிபரந்த பைங்கண்மால் யானைப் பகையடுதோள் கோதையைச் செங்கண் சிவப்பித்தார் நாடு. 22 இது சேரனது பகைவர் நாட்டின் அவலம் கூறியது. பசிய கண்களையுடைய பெரிய யானைப்படைகளாகிய பகையை வென்ற தோள்களையுடைய சேரனின் சிவந்த கண்களை மேலும் சிவப்பித்த பகைவரது நாடு, நான்கு திசைகளிலும் நெருப்புப் பற்றி எரிந்து, புகையடர்ந்து, பொருள்களெல்லாம் கருகி, கூரிய முட்செடிகள் அடர்ந்து, நரிகள் நெருங்கி வாழும் பாழுங்காடாக விளங்குகிறது . முள்ளி - முட்செடி; கண்சிவப்பித்தல் - சினத்தையுண்டாக்குதல், சினத்தினால் கண் சிவத்தல் இயல்பு. வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத்து ஊரறிய லாகா கிடந்தனவே - போரின் முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான் நகையிலைவேல் காய்த்தினார் நாடு. 23 இதுவும் பகைவர்நாட்டின் அவலம் கூறியவாறு. மொட்டவிழ்ந்த மலர்மாலையணிந்தவனும் முசிறிநகர மக்களின் தலைவனும் ஆன சேரனது ஒளிபடைத்த இலைவடிவ வேலால் போரின்கண் துன்புறுத்தப்பட்ட பகைவரின் நாடு, வேரோடிய அறுகம்புல் அடர்ந்து, எங்கும் சுரைக்கொடிகள் படர்ந்து, வேளைக்கீரைகள் பூத்து, ஊர்கள் இருந்த இடங்கள் இவை என்றறிய இயலாதவாறு பாழ்பட்டுக் கிடந்தன. அறுகை - அறுகம்புல்; பம்பி - புதிராக அடர்ந்து; வேளை - காட்டுக்கீரை; முசிறி - சேர நாட்டுத் துறைமுக நகரம். . சோழன் 24 - 26 திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர் இறந்துபடின் பெரிதாம் ஏதம் - உறந்தையர்கோன் தண்ணார மார்பின் தமிழ்நர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு. 24 உறையூரின் மன்னவன் சோழன்; அவன் குளிர்ந்த மாலையணிந்த மார்பின்ன்; தமிழ்மக்களின் இறைவன்; அவன் நகர்வலம் வருகிறான். அதனைத் தங்கள் பெண்மக்கள் பார்க்க நேரின், அவன்பால் வேட்கைகொண்டு துன்புறுவர் எனக் கருதிய தாய்மார்கள் தந்தம் வீடுகளின் வாயிற்கதவுகளை அடைத்து வைக்கின்றனர். “நகர்வலத்தைக் காணவியலாத நங்கையர் ஏக்கத்தால் இறந்துவிடவும் கூடும். அவ்வாறாயின், அதனால் ஏற்படும் துன்பம் மிகப் பெரிதாம். எனவே, மங்கையர் சோழனைக் கண்ணாரக் கண்டு களிக்குமாறு கதவுகளைத் திறந்துவிடுங்கள்; அவ்வாறு காண்பதால் ஏதேனும் தீமை நேருமாயின் அதைப்பற்றிப் பின்னர் சிந்திக்கலாம்”, என்று சிலர் கூறுகின்றனர். ( சோழனது நகர்வலத்தைக் காணவியலாமையால் உயிரை இழப்பதைக் காட்டிலும் அதனைக் கண்டு மையல் கொள்வதால் ஏற்படும் தீமை பெரிதன்று, என்பது கருத்து.) ஏதம் - துன்பம். குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை வதுவை பெறுகென்றாள் அன்னை - அதுபோய் விளைந்தவா இன்று! வியன்கானல் வெண்தேர்த் துளங்குநீர் மாமருட்டி யற்று. 25 இப்பாடல் கைக்கிளை. என் அன்னை, நான் மழலை பேசும் சிறுமியாக இருந்த காலத்தில் சோழமன்னனை மணந்துகொள்ளும் பேற்றினை நான் பெறவேண்டும் என்று வாழ்த்தினாள். நான் மணப்பருவத்தையடைந்துள்ள இன்று, அக்கூற்றெல்லாம் மாறிப்போய் அவனைக் கண்ணால் காண்டலும் ஆகாது என்று வாயிற்கதவுகளை அடைத்து வைக்கிறாள். கடுங்கோடையில் தண்ணீர்போல் தோற்றமளித்து அருகில் சென்று பார்க்கும்போது மறைந்துவிடுவதாய் நீர்வேட்கை கொண்ட விலங்குகளை மயங்கச் செய்கின்ற பேய்த்தேர் போலாயிற்றே என் ஆசை! இப்பாடல் உவமையணி. குதலைப் பருவம் - மழலைமொழி பேசும் அறியாப் பருவம்; கோழிக்கோமான் - உறையூரின் மன்னனாகிய சோழன், ‘கோழி’ என்பது சோழர் தலைநகரமாகிய உறையூர்க்கு வழங்கிய மற்றொரு பெயர் ; வதுவை - திருமணம்; வியன் - பெரிய; கானல் - கோடைக்காலம் , பாலைநிலம் ; வெண்தேர் - பேய்த்தேர், கானல்நீர்; மா - விலங்கு, கால்நடைகள்; மருட்டுதல் - மயங்கச் செய்தல்; அற்று - போன்றது; ஏ - அசைச்சொல். சுடரிலைவேற் சோழன்தன் பாடல மேறிப் படர்தந்தான் பைந்தொடியார் காணத் - தொடர்புடைய நீர்வலை யிற்கயல் போல்பிற ழும்மேதம் சாலேக வாயில்தொறுங் கண். 26 ஒளிபடைத்த வேலையேந்திய சோழன் தன்பாடலம் என்னும் குதிரையின் மேலேறிப் பசிய வளையலணிந்த மகளிரும் காணுமாறு நகர்வலம் வந்தான் ; தத்தம் வீடுகள்தோறும். வலை பொருத்தப்பெற்ற சாளரங்களின்பின்னிருந்து அவனைக் காணும் மகளிரின் கண்கள், நீர்வலையில் மாட்டிக்கொண்டு பிறழ்கின்ற மீன்களைப் போலத் தோன்றுகின்றன. இதுவும் உவமை. பாடலம் - சோழனது குதிரையின் பெயர்; (பாண்டியனது குதிரை ‘கனவட்டம்’ என்றும் சேரனது குதிரை ‘கோரம்’ என்றும் வழங்கப்பெற்றன.) தொடி - வளையல்; கயல் - மீன்; சாலேகம் - சாளரம் , காலதர்; ‘பிறழுமே’ என்பது ‘பிறழும்மே’ என விரிந்துவந்தது விரித்தல் விகாரம். (அறுவகைச்செய்யுள் விகாரங்களுள் ஒன்று.) ஈற்றடி இரண்டாம் சீர் “வாயிறொறும்” எனப்புணர்த்துப் படிக்க, சீரும் தளையும் சிதையா. சோழன் 27-35== அன்னையுங் கோல்கொண் டலைக்கு மயலாரு மென்னை யழியுஞ்சொல் சொல்லுவர் - நுண்ணிலைய தெங்குண்ட தேரை படுவழிப் பட்டேன்யான் திண்டேர் வளவன் திறத்து.. 27 என் தாயும் என்னைக் கோலால் அடித்துத் துன்புறுத்துகிறாள்; அக்கம்பக்கத்தில் வாழ்வோரும் என் மானம் அழியுமாறு பழித்துப் பேசுகின்றனர்; வலிய தேரையுடைய சோழனிடம் மையல் கொண்டதால் நான், தெங்குண்ட தேரைபோலப் பழிப்பட்டேன். இது தலைவி கூற்று. அலைத்தல் - துன்புறுத்தல்; “தெங்குண்டதேரை” என்பது பழமொழி; தேங்காயில் நோய் ஏற்பட தேரை காரணமன்று, எனக்கு மையல்நோய் ஏற்பட நான் காரணம் ஆகேன், ( சோழனே காரணம்) ஆனால் உலகினர் தேரையைப் பழிப்பதுபோல என்னையும் பழிக்கின்றனர் எனத் தலைவி வருந்திக் கூறுகிறாள். தெங்கு - தேங்காய் . அலங்குதார்ச் செம்பியன் ஆடெழில்தோள் நோக்கி விலங்கியான் வேண்டா வெனினும் - நலந்தொலைந்து பீர்மேற் கொளலுற்ற பேதையர்க் கென்வாய்ச்சொல் நீர்மே லெழுந்த நெருப்பு. 28 இப்பாடல் செவிலித்தாய் கூற்று. தோளில் ஆடும் மாலையணிந்து செம்பியன் நகர்வலம் வந்தான்; அவனைச் சென்று காணவேண்டாம் என்று இளமங்கையரைச் செவிலித்தாய் தடுத்தாள்; அதனை மீறிச் சென்று, செம்பியனது வெற்றியும் அழகும் பொருந்திய தோள்களை நோக்கிய மகளிர் தம் நாணும் நிறையும் முதலிய நலங்களையும் தொலைத்து மேனியில் பசலை நோயையும் பெற்றுத் துன்புற்றனர். இப்பேதைப் பெண்களுக்கு என் வாய்ச்சொற்கள் நீர்மேல் பற்றிய நெருப்புப் போலப் பயன்படாது வீணாயிற்றே என்று செவிலித்தாய் வருந்திக் கூறுகிறாள். தார் - மலர்மாலை; செம்பியன் - சோழன்; ஆடு - வெற்றி; எழில் - அழகு; விலங்கி - வேறுபட்டு; பீர் - பசலை, மையல்நோயால் மகளிர் மேனியில் தோன்றும் நிறமாற்றம்; ‘ நீர்மேல் எழுந்த நெருப்பு ‘ என்பது பழமொழி. உவமையணி. நாணொருபால் வாங்க நலனொருபா லுள்நெகிழ்ப்பக் காமருதோள் கிள்ளிக்கென் கண்கவற்ற - யாமத் திருதலைக் கொள்ளியி னுள்ளெறும்பு போல திரிதரும் பேருமென் நெஞ்சு. 29 இது தலைவி கூற்று. கண்டார்க்கு விருப்பம் உண்டாக்கும் தோளையுடைய சோழனைக் காணவேண்டும்என என்கண்கள் கவலை கொள்ள, மகளிர்க்கேயுரிய நாணம் அவனைக் காணவிடாமல் என்னைத் தடுக்க, பெண்மைநலம் என்னுள்ளத்தை நெகிழச்செய்ய, இருதலைக் கொள்ளியின் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் சிற்றெறும்புபோல இந்த இரவுப்பொழுதில் என்னெஞ்சம் அவனைக் காணச் செல்வதும் காணாமல் திரும்புவதுமாகத் துன்புறுகிறது. ‘இருதலைக் கொள்ளி எறும்பு’ என்பது பழமொழி. கிள்ளியைக் காணவேண்டும் எனும் ஆசையாகிய எறும்பு, நாணம் ஒருபக்கமும் பெண்மைநலம் ஒருபக்கமும் தீப்பிழம்பாக நின்று தடுப்பதால் அவற்றினிடையே சிக்கிக்கொண்டு தவிக்கிறது; உவமையணி . கிள்ளி - சோழன். ஊட லெனவொன்று தோன்றி அவருறூஉங் கூட லிழந்தேன் கொடியன்னாய்! - நீடெங்கின் பாளையிற் றேன்தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக் காளையைக் கண்படையுட் பெற்று. 30 இதுவும் தலைவி கூற்று. பூங்கொடிபோன்ற என் தோழியே! உயரமான தென்னையின் பாளைகளில் தேனடைகள் உருவாகும் நீர்வளமிக்க சோழநாட்டின் தலைவனை நான் கனவின்கண் காணப்பெற்றேன்; அப்போது தோன்றிய ஊடலால் அவன்தோளையணைத்து மகிழும் கூடலையிழந்து விட்டேனே! கண்படை - கனவு; காளை - சோழன், உவமையாகுபெயர்; கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல்போனதுபோலக் கனவில்கண்ட காளையை அக்கனவில்கூடக் கூட இயலாமல் உடல் பிரித்துவிட்டதே என்று தலைவி வருந்திக் கூறியுள்ளாள். புலவி புறக்கொடுப்பன் புல்லிடின் நாண்நிற்பன் கலவி களிமயங்கிக் காணேன் - நிலவியசீர் மண்ணாளுஞ் செங்கோல் வளவனை யானிதன்றோ கண்ணாரக் கண்டறியா வாறு. 31 இதுவும் தலைவி கூற்று. சோழநாட்டைச் சிறப்போடு செங்கோலாட்சி செய்யும் சோழனை, நான் இன்றுவரை ஒருபொழுதும் கண்ணாரக் கண்டதில்லை ; ஏனெனில் , அவனோடு புலவி கொள்ளும்போது அவனுக்கு என்முதுகைக் காட்டித் திரும்பி நிற்பேன்; அவன் என் புலவியை நீக்க என்னைத் தழுவும்போது நாணத்தால் கண்களை மூடிக்கொள்வேன்; அவன் என்னோடு கலந்து உறவு கொள்ளும்போதோ மகிழ்ச்சியில் மயங்கிக் கிடப்பேன். புலவி - ஊடல்; புறம் - முதுகு; புல்லுதல் - கட்டியணைத்தல்; கலவி - கூடுதல் ; களி - மகிழ்ச்சி வளவன் - சோழன். கனவினுள் காண்கொடாக் கண்ணுங் கலந்த நனவினுள் விலக்கு நாணும் - இனவங்கம் பொங்கோதம் போழும் புகார்ப் பெருமானார் செங்கோல் வடுப்படுப்பச் சென்று. 32 இதுவும் தலைவி கூற்று. பொங்கிவரும் கடல்நீரைக் கிழித்துக்கொண்டு பலவகையான கப்பல்கள் வந்துசெல்லும் துறைமுகம் புகார் நகரம்; அதன் தலைவனாய்ச் செங்கோலாட்சி செய்பவன் சோழன்; அவனைக் கனவிலும் காணவிடாமல் உறங்காதிருக்கும் என் கண்களும் அவனோடு கலந்திருக்கும் நினைவுப்பொழுதில் முழுமையாய்க் கலந்திருக்கும் வாய்ப்பைக் கெடுக்கும் என் நாணமும் சென்று அவன் செங்கோலாட்சிக்குக் கறை (களங்கம்) ஏற்படுத்துகின்றன. வங்கம் -மரக்கலம் / கப்பல் ; ஓதம் - வெள்ளம் /கடல்அலை; போழும் - பிளந்துகொண்டு செல்லும்; புகார் - காவிரிப்பூம்பட்டினம், சோழர் துறைமுகம் ; வடுகர் - குற்றம், களங்கம். == சோழன் 36-40== ===36=== <poem>கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம் தண்டப் படுவ தடமென்தோள் – கண்டாய் உலாஅ மறுகில் உறையூர் வளவற் கெலாஅ முறைகிடந்த வாறு. – 36</poem> ::கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம் தண்டப் படுவ தடமென்தோள் கண்டாய் உலாஅ மறுகில் உறையூர் வளவற்கு எலாஅம் முறை கிடந்தவாறு. ::உறையூர் அரசன் வளவன். அவனைப் பார்த்தது என் மையுண்ட கண். அவனோடு கலந்தது என் நெஞ்சம். தண்டனை பெற்றதோ என் தோள் (தோள் வாடி என் வளையல்கள் கழன்றோடுகின்றன) வளவன் முறை செய்து நீதி வழங்குவது இப்படித்தான் முறைமாறிக் கிடக்கிறது. ===37=== <poem>என்னெஞ்சு நாணு நலனும் இவையெல்லாம் மன்னன் புனனாடன் வௌவினான் – என்னே அரவகல் அல்குலாய் ஆறில் ஒன் றன்றோ புரவலர் கொள்ளும் பொருள். – 37</poem> ::என் நெஞ்சு நாணும் நலனும் இவையெல்லாம் மன்னன் புனல் நாடன் வௌவினான் \ என்னே அரவு அகல் அல்குலாய் ஆறில் ஒன்று அன்றோ புரவலர் கொள்ளும் பொருள். ::என்னுடைய எண்ணம், நாணம், நலம் ஆகிய இவை எல்லாவற்றையும் காவிரி பாயும் புனல் நாட்டை ஆளும் சோழன் பிடுங்கிக்கொண்டான். பாம்புப்படம் போல விரிந்திருக்கும் அல்குல் கொண்ட என் தோழியே! வருவாயில் ஆறில் ஒரு பங்கைத்தானே காப்பாற்றும் மன்னவன் வரியாக வாங்கிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் பிடுங்கிக்கொள்ளலாமா? ===38=== <poem>தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி யிளவளவன் மண்ணகங் காவலனே யென்பரால் - மண்ணகங் காவலனே யானக்காற் காவானோ மாலைவாய்க் கோவலர்வாய் வைத்த குழல். – 38</poem> ::தெள் நீர் நறு மலர்த் தார்ச் சென்னி இள வளவன் மண்ணகம் காவலனே என்பரால் \ மண்ணகம் காவலனே ஆனக்கால் காவானோ மாலைவாய்க் கோவலர் வாய் வைத்த குழல். ::சென்னி இளவளவன் கழுத்திலே மாலை அணிந்தவன். அது தெளிந்த நீரிலே பூக்கும் மணம் மிக்க பூவாலானது. இந்த வளவனை மண்ணுலகைக் காக்கும் காவலன் என்கின்றனர். உண்மையில் அவன் மண்ணுலகைக் காக்கும் காவலன் ஆனால், மாலைக்காலத்தில் ஆனிரைகளுடன் இல்லம் திரும்பும் கோவலர் ஊதும் குழல் என் தனிமையைத் துன்புறுத்துகிறதே அதைத் தடுத்திருக்க வேண்டாமா? ===39=== <poem>அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி முறைசெயும் என்பரால் தோழி – இறையிறந்த அங்கோல் அணிவளையே சொல்லாதோ மற்றவன் செங்கோன்மை செந்நின்ற வாறு. – 39</poem> ::அறை பறை யானை அலங்கு தார்க் கிள்ளி முறைசெயும் என்பரால் தோழி \ இறை இறந்த அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன் செங்கோன்மை செம்மை நின்றவாறு. ::கழுத்தில் மாலை அணிந்துகொண்டு கிள்ளி பறை முழக்கத்துடன் யானைமேல் வருகிறான். அவனைப் பார்த்ததும் என் தோளிலிருந்த வளையல்கள் நழுவிக் கீழே இறங்குகின்றன. தோழி! கிள்ளி நீதி தவறாமல் முறை செய்பவன் என்கின்றர். என் தோளிலிருந்து நழுவும் வளையல் அவன் எத்த அளவில் செங்கோல் செலுத்துகிறான் என்பதைச் சொல்கிறதே! ===40=== <poem>நீள்நீலத் தார்வளவன் நின்மேலான் ஆகவும் நாணிமை யின்றி நடத்தியால் – நீள்நிலம் கண்தன்மை கொண்டலரும் காவிரி நீர்நாட்டுப் பெண்தன்மை இல்லை பிடி. – 40</poem> ::நீள் நீலத் தார் வளவன் நின்மேலான் ஆகவும் நாணிமை இன்றி நடத்தியால் நீள் நிலம் கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர்நாட்டுப் பெண்தன்மை இல்லை பிடி. ::அடி! பெண்யானையே! வளவன் ஒரு ஆண். அவன் உன்மேல் இருக்கிறான். அவனைச் சுமந்துகொண்டு, வெட்கம் இல்லாமல் வருகிறாயே! காவிரி நாட்டுப் பெண்-தண்மை உனக்கு இல்லை. நீல மலரால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலையை வளவன் அணிந்துகொண்டு வருகிறான். கண்ணோட்டம் கொண்டு உலகைக் காத்து மலரும் நாடு காவிரியாறு பாயும் நாடு. ==சோழன் 41-45== ===41=== <poem>செங்கால் மடநாராய் தென்னுறந்தை சேறியேல் நின்கால்மேல் வைப்பன்என் கையிரண்டும் – நன்பால் கரைஉரிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற் குரையாயோ யானுற்ற நோய். – 41</poem> [மடம் = சேறி = செல்லுதி, செல்கிறாய், செல்வாய்; சேறியேல் = செல்வாயேல், செல்வாயானால்; வைப்பந் = வைப்பேன், வைக்கிறேன்; பால் = இடம்; உரிஞ்சு = தேய்] :: பொருள்கோள்: செங்கால் மடநாராய் தென் உறந்தை சேறியேல், நின் கால்மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால் கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரிநீர் நாடற்கு யான் உற்ற நோய் உரையாயோ? ::சிவந்த கால்களையும், கள்ளம் கபடமற்ற தன்மையையும் உடைய நாரையே! நீ பறந்து செல்லும்போது தென்பால் உள்ள உறையூருக்குச் செல்வாயேயானால், உன் கால்மேல் என் கைகள் இரண்டையும் வைக்கிறேன். நல்ல இடங்களையுடைய ஆற்றங்கரைகளையே தேய்த்து மீன்கள் துள்ளும் காவிரிநீர் கொண்ட சோழனாகிய காவிரி நாடனுக்கு, அவன்மேற்கொண்ட காதலால் நானுற்ற துயரைச் சொல்லமாட்டாயா?. ===42=== <poem>வரக்கண்டு நாணாதே வல்லையா னெஞ்சே மரக்கண்ணோ மண்ஆள்வார் கண்ணென் – றிரக்கண்டாய் வாள்உழுவை வெல்கொடியான் வண்புனல்நீர் நாடற்கென் தோள்அழுவம் தோன்றத் தொழுது. – 42</poem> ::வரக்கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே மரக்கண்ணோ மண்ஆள்வார் கண் என்று இரக்கண்டாய் வாள் உழுவை வெல்கொடியான் வண் புனல்நீர் நாடற்கு என் தோள் அழுவம் தோன்றத் தொழுது. ::வெல்லும் புலிக்கொடியான், வளமையான ஆற்றுப்புனல் பாயும் நாடன், சோழன் உலா வரக் கண்டு, பெண்மை உணர்வோடு நாணியிருக்க உன்னால் முடியுமா? முடியாதே. அதனால், நெஞ்சே! நாணாமல் அவனைக் கண்டு இர. உன் கண் என்ன மரத்தாலான கண்ணா (இரக்கம் இல்லாத கண்ணா) என்று கேட்டு இர (கண்ணோட்டத்துடன் இரக்கம் காட்டும்படிப் பிச்சை கேள்) | வாள் உழுவை = கண்ணைக் கவரும் ஒளி மிக்க புலி. ===43=== <poem>பேயோ பெருந்தண் பனிவாடாய் பெண்பிறந்தா ரேயோ உனக்கிங் கிறைக்குடிகள் – நீயோ களிபடுமால் யானைக் கடுமான்தேர்க் கிள்ளி அளியிடை அற்றம்பார்ப் பாய். – 43</poem> ::பேயோ பெருந்தண் பனிவாடாய் பெண் பிறந்தாரேயோ உனக்கு இங்கு இறைக் குடிகள் நீயோ களி படு மால் யானைக் கடுமான் தேர்க் கிள்ளி அளி இடை அற்றம் பார்ப்பாய். ::பனிக் காலத்தில் பெருங் குளிருடன் வீசும் வாடைக் காற்றே! நீ என்ன பேயோ? கிள்ளி எனக்கு அளி செய்கிறான். அவன் எப்போது அரவணைப்பிலிருந்து விலகுவான் என்று பார்த்து வீசி என்னை ஆட்டிவைக்கிறாய். சோழனை இறைவனாகக் கொண்ட குடிமக்கள் மீது வீசுகிறாய். | கிள்ளி களிப்பூட்டும் யானை மீதும் வருகிறான். குதிரை பூட்டிய தேரிலும் வருகிறான். ===44=== <poem>நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத் தாமரையும் நீலமுந் தைவந் – தியாமத்து வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய் பண்டன்று பட்டினங் காப்பு. – 44</poem> ::நாம நெடு வேல் நலங்கிள்ளி சோணாட்டுத் தாமரையும் நீலமும் தைவந்து யாமத்து வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய் பண்டு அன்று பட்டினம் காப்பு. ::நலங்கிள்ளி அச்சம் தரும் வேலை உடையவன். அவனது சோழநாட்டில் வண்டு ஒன்று நள்ளிரவில் தாமரையிலும், நீல மலரிலும் தேனை உண்டு தடவிக்கொடுத்துவிட்டு வருகிறது. குளிரும் வாடைக்காற்றே! நலங்கிள்ளி காவிரிப்பூம் பட்டினத்தைக் காப்பாற்றும் செயல் பண்டுபோல் எல்லாருக்கும் பாதுகாப்புத் தருவதாக இல்லை. எனவே நீ இங்கு வரவேண்டாம். | வாடைக்காற்று வீசாமல் இருக்கவேண்டும் என்று நயமாக வேண்டுகிறாள். ===45=== <poem>தானைகொண் டோடுவ தாயதன் செங்கோன்மை சேனை யறியக் கிளவேனோ – யானை பிடிவீசும் வண்தடக்கைப் பெய்தண்தார்க் கிள்ளி நெடுவீதி நேர்பட்ட போது. – 45</poem> ::தானை கொண்டு ஓடுவதாய தன் செங்கோன்மை சேனை அறியக் கிளவேனோ யானை பிடி வீசும் வண் தடக்கைப் பெய் தண்தார்க் கிள்ளி நெடு வீதி நேர்பட்ட போது. ::ஆண் பெண் யானைகளை வளமாகத் தரும் கொடையாளி கிள்ளி. மாலை சூடிய அந்தக் கிள்ளி உலா வரும்வோது அவனை நீண்ட வீதியில் கண்டதும் என் சேலை நழுவியது. இப்படி நழுவச் செய்துவிட்டு அவன் ஓடும் செங்கோன்மையை அவன் படைகளெல்லாம் அறியுமாறு எடுத்துச் சொல்லாமல் இருப்போனா? ==சோழன் 46-50== ===46=== <poem>காவல் உழவர் களத்தகத்துப் போர்ஏறி நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை – காவலன்தன் கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே நல்யானைக் கோக்கிள்ளி நாடு. – 46</poem> ::காவல் உழவர் களத்தகத்துப் போர் ஏறி நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன் தன் கொல் யானை மேல் இருந்து கூற்று இசைத்தால் போலுமே நல் யானைக் கோக்கிள்ளி நாடு. ::உலகைக் காப்பாற்றும் உழவர்கள் தம் நெற்களத்தில் உள்ள போரின்மீது ஏறி “நாவலோ” என்று காலை நேரத்தில் ஓசை எழுப்பினால் எப்படியோ அப்படித்தான் இருக்கிறது, நாட்டைக் காப்பாற்றும் மன்னவன் கொல்லும் போர்யானைமேல் (எருமைக் கடா) இருந்துகொண்டு கூற்றுவன் “வாருங்கள்” என்று இசைமுழக்கம் செய்வது. இதுதான் இன்றைய கிள்ளிநாட்டு ஆட்சி நிலைமை. \ தன்னிடம் நெல் இருக்கிறது என்று கூவவேண்டிய உழவன் நாவல்பழம் பறிக்க வாருங்கள் என்று கூவும் கொடுமை கிள்ளியின் நாட்டில் இருக்கிறது. \ காப்பாற்ற வேண்டிய கிள்ளி, கொல்கிறேன் வாருங்கள் என்பவன் போல் உலா வருகிறான். ===47=== <poem>மாலை விலைபகர்வார் கிள்ளி களைந்தபூச் சால மருவியதோர் தன்மைத்தால் – காலையே வில்பயில் வானகம் போலுமே வெல்வளவன் பொற்பார் உறந்தை அகம். – 47</poem> ::மாலை விலைபகர்வார் கிள்ளி களைந்த பூச் சால மருவியது ஓர் தன்மைத்தால் காலையே வில் பயில் வானகம் போலுமே வெல் வளவன் பொன் பார் உறந்தை அகம். ::கிள்ளி காலையில் பூமாலை சூடிக்கொண்டு உலா வருகிறான். காலையிலேயே வானவில் போட்டுக்கொண்டிருக்கும் வானம் போல் அவன் தோன்றுகிறான். மாலையில் அவன் கழற்றி எறிந்த பூவை விலைக்கு விற்கின்றனர். அவன் மலையை அதிகம் பேர் விரும்பினார்கள் என்பதற்காக விற்கின்றனர். மாலையில் விற்கும் வெற்று மாலையால் என்ன பயன்? – அவள் கேட்கிறாள். \ பொற்பார் உறந்தை = பொன் விளையும் மண் கொண்ட உறையூர் ===48=== <poem>மந்தரங் காம்பாய் மணிவிசும் போலையாத் திங்கள் அதற்கோர் திலதமா எங்கணும் முற்றுநீர் வைய முழுதும் நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை. 48</poem> ::மந்தரம் காம்பாய் மணி விசும்பு ஓலையாத் திங்கள் அதற்கு ஓர் திலதமா எங்கணும் முற்று நீர் வையம் முழுதும் நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை. ::கிள்ளியின் வெண்கொற்றக் குடைக்கு மந்தர-மலை காம்பு. நீலநிற வானம் குடையில் விரிந்திருக்கும் ஓலை. வானத்து நிலா அந்தக் குடையின் உள்முகட்டில் இருக்கும் நெற்றிப்பொட்டு. இப்படி இருந்துகொண்டு உலகம் முழுவதற்கும் நிழல் தந்து அந்தக் குடை காப்பாற்றுகிறது. அது சரி. என்னை மட்டும் ஏங்கவைக்கிறது. இது கொடுமை. ===49=== <poem>அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார் – எந்தை இலங்கிலைவேற் கிள்ளி இரேவதிநாள் என்னோ சிலம்பிதன் கூடிழந்த வாறு. – 49</poem> ::அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ சிலம்பி தன் கூடு இழந்தவாறு. ::கிள்ளி இரேவதி நாளில் பிறந்தான். அவனுக்குப் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம். அன்று அந்தணர்கள் பசு, பொன் ஆகியவற்றைத் தானமாகப் பெற்றனர். நாவண்மை உடைய பாவலர் மலை போல் உயர்ந்த களிறு வழங்கப்பபட்டு அதில் ஊர்ந்தனர். ஆனால் சிலந்திப் பூச்சி மட்டும் தன் கூட்டை இழந்தது. அது ஏன்? இது முறை ஆகுமா? | (பொங்கல் நாள் அன்று பழம்பொருள்களைத் துடைத்துத் தூய்மை செய்வது போல் மன்னன் பிறந்த நாளிலும் அரண்மனை ஒட்டடை துடைத்துத் தூய்மை செய்யப்பட்டது. அப்போது சிலந்திப் பூச்சி தன் கூட்டை இழந்தது) | பிறந்த நாளில் கிள்ளி உலா வந்தான். அவனைக் கண்ட சிலம்பி என்னும் பெண் மட்டும் தன் கூடாகிய உடல் நலத்தை இழந்தாள். இதுவா அவன் தரும் பிறந்தநாள் கொடை? – அவள் வினா. ===50=== <poem>நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து முன்றந்த மன்னர் முடிதாக்க – இன்றுந் திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே பெருந்தண் உறந்தையார் கோ. – 50</poem> ::நின்றீமின் மன்னீர் நெருநல் திறை கொணர்ந்து முன் தந்த மன்னர் முடி தாக்க இன்றும் திருந்து அடி புண்ணாகிச் செவ்வி இலனே பெரும் தண் உறந்தையார் கோ. ::மன்னர்களே! சற்றே நில்லுங்கள். நேற்று, திறை தந்த மன்னர்கள் வணங்கியபோது அவர்களின் முடி தாக்கி உறையூர் மன்னன் காலடி புண்ணாகிக் கிடக்கிறது. அதனால் இன்று அவன் காட்சி தரவில்லை. அவன் பெருமையும் ஈரமும் கொண்டவன். ==சோழன் 51-56== ===51=== <poem>கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர் முடியிடறித் தேய்ந்த நகமும் – பிடிமுன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே கல்லார்தோட் கிள்ளி களிறு. – 51</poem> ::கொடி மதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர் முடி இடறித் தேய்ந்த நகமும் பிடி முன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே கல் ஆர் தோள் கிள்ளி களிறு. ::கல்மலை போன்ற தோள் கொண்டவன் கிள்ளி. அவனது ஊர்தி ஆண்யானை. அது அவனது பறைவரின் கோட்டை மதில்களைப் பாய்ந்து இடித்தது. அதனால் அதன் தந்தங்களின் நுனி முறிந்து போயிற்று. போரில் விழுந்த மன்னர்களின் தலைமுடியை (கிரீடத்தை) இடறி அதன் கால்நகங்கள் தேய்ந்து போயின. இவற்றைத் தன் பெண்யானைக்குக் காட்டுவதற்கு நாணிக் கட்டுத்தறியின் புறக்கடையிலேயை அந்த ஆண்யானை தயங்கிக்கொண்டு நின்றது. ===52=== <poem>கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால் தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் – பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமேநங் கோழியர்கோக் கிள்ளி களிறு. – 52</poem> ::கச்சி ஒருகால் மிதியா ஒரு காலால் தத்து நீர்த் தண் உஞ்சை தான் மிதியாப் பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமே நம் கோழியர் கோக் கிள்ளி களிறு. ::கிள்ளி அரசன், கோழி என்னும் உறையூர் மக்களின் தலைவன். அவன் போரிட்டபோது அதன் நான்கு கால்களும் நான்கு இடங்களை மிதித்துக்கொண்டிருந்தது. உறையூர், காஞ்சிபுரம், உஞ்சை (உஜ்ஜயினி), ஈழம் (இலங்கை) ஆகியவை அந்த ஊர்கள். ===53=== <poem>பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர நாற்றிசையும் ஓடி நரிகதிப்ப – ஆற்ற அலங்கலம் பேய்மகளிர் ஆட வருமே இலங்கிலைவேற் கிள்ளி களிறு. – 53</poem> ::பாறு இனம் ஆர்ப்பப் பருந்து வழிப் படர நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற அலங்கல் அம் பேய் மகளிர் ஆட வருமே இலங்கு இலை வேல் கிள்ளி களிறு. ::இலை உருவில் ஒளிறும் வேலேந்திய கிள்ளியின் களிறு போர்க்களத்தில் பெருமித நடை போட்டுக்கொண்டு வரும். அப்போது புலால் உண்ணும் பறவைகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும். பருந்துகள் அந்த ஆண்யானையைப் பின்தொடரும். நரிகள் நாலாப்பக்கமும் ஓடித் திரியும். அணிகலன்களைப் பெருமையாக ஆட்டிக்கொண்டு பேய்மகளிர் ஆடுவர். காரணம் எங்கும் பிணம். பிணங்களுக்கு இடையே அந்தக் களிறு வரும். ===54=== <poem>முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத் தடித்த குடர்திரியா மாட்டி – எடுத்தெடுத்துப் பேஎய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன் சேஎய் பொருத களம். - 54</poem> ::முடித்தலை வெள்ளோட்டு மூளை நெய்யாகத் தடித்த குடர் திரியா மாட்டி எடுத்து எடுத்துப் பேஎய் விளக்கு அயரும் பெற்றித்தே செம்பியன் சேஎய் பொருத களம். ::செம்பியன் போரிட்ட களத்தில் பேய் விளக்கு வைத்திருந்தது. மன்னரின் தலைமண்டை விளக்கின் ஓடு. அவர்களின் மூளை நெய். அவர்களின் குடல் திரி. இப்படிப் பேய்கள் விளக்கு வைத்து (கார்த்திகை) விழாக் கொண்டாடின. ===55=== <poem>இரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற வரியிளஞ் செங்காற் குழவி – அரையிரவில் ஊமந்தா ராட்ட உறங்கிற்றே செம்பியன் தன் நாமம்பா ராட்டாதார் நாடு. – 55</poem> ::இரியல் மகளிர் இலை ஞெமலுள் ஈன்ற வரி இளம் செங்கால் குழவி அரை இரவில் ஊமம் தாராட்ட உறங்கிற்றே செம்பியன் தன் நாமம் பாராட்டாதார் நாடு. – 55 ::செம்பியனின் பெயரைப் பாராட்டாவர் நாட்டில் உறக்கம். வீட்டை விட்டு ஓடிப் பிழைத்திருக்கும் மகளிர் உதிர்ந்து கிடக்கும் இலைச் சறுகுகளில் குழந்தைகளைப் பெற்றனர். நள்ளிரவில் கோட்டான் அந்தக் குழந்தைகளுக்குத் தாலாட்டுப் பாடியது. இப்படி அவலநிலை. ===56=== <poem>அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர் எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டால் – பனிக்கடலுள் பாய்ந்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான் காய்சினவேல் கிள்ளி களிறு. 56 </poem> ::அயில் கதவம் பாய்ந்து உழக்கி ஆற்றல் சால் மன்னர் எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனிக் கடலுள் பாய்ந்து ஓய்ந்த நாவாய் போல் தோன்றுமே எங்கோமான் காய் சின வேல் கிள்ளி களிறு. ::கிள்ளியின் யானை கடலில் செல்லும் நாவாய்க் கப்பல் போலத் தோன்றுகிறது. எப்படி? நாவாய் கடலில் பாயும். களிறு வேல் தாங்கிய கோட்டைக் கதவுகளின் மீது பாய்ந்து அழிக்கிறது. நாவாய் பாய்மரம் கொண்டிருக்கும். களிறு கோட்டைக் கதவைப் பெயர்த்துத் தூக்கிக் கொம்பில் வைத்துக்கொண்டு வருகிறது. அதனால் களிறு கப்பல் போல் தோன்றுகிறது. (குறிப்பு: இதே பாடல் சேரனைப் பற்றிய பாடல்களுள் 20ஆம்எண் பாடலாகவும் அமைந்துள்ளது. அதில் ஈற்றடி “காய்சினத்தேர்க் கோதை களிறு” எனவும் இதில் “காய்சினவேற் கிள்ளி களிறு” எனவும் உள்ளன. இஃது ஆயவுக்குரியது. இப்பாடலின் அடி 3இன் முதற்சீர் “பாய்தோய்ந்த” என்றிருத்தல் சிறப்பு; இப்பாடலைப் பதிவு செய்து உரையெழுதியவர் “பாய்ந்தோய்ந்து” என்று பாடங்கொண்டுள்ளார் .)-சேரன். ==பாண்டியன் 57-60 == ===57=== <poem>காப்படங்கென் றன்னை கடிமனை யிற்செறித்து யாப்படங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன் நன்னலம் காணக் கதவம் துளைதொட்டார்க் கென்னைகொல் கைம்மா றினி. – 57</poem> ::காப்பு அடங்கு என்று அன்னை கடி மனையில் செறித்து யாப்பு அடங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன் நல் நலம் காணக் கதவம் துளை தொட்டார்க்கு என்னைகொல் கைம்மாறு இனி. ::கடுங்கோன் உலா வந்தான். அவனை நான் காணக்கூடாது என்று, “உன்னைக் காப்பாற்றிக்கொண்டு அடங்கு” என்று சொல்லி அன்னை என்னை இல்லத்தில் செறிவாக அடைத்துவைத்தாள். உள்ளேயும் ஓடியாட முடியாமல் கட்டியும் போட்டாள். ஆனால் கதவிலே முன்பே துளை ஒன்று போட்டுவைத்திருந்தார்கள். (அது வெளியே இருப்பவர் யார் என்று பார்க்க உதவும் கதவுக்கண்.) அது அவன் நல்லழகையெல்லாம் காணும் வகையில் அமைந்திருந்தது. இப்படிக் கதவுக்கண் ஓட்டை போட்டு வைத்திருக்கிறார்களே, அவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன். – அவள் கூறுகிறாள். | கடுங்கோ = சேரன் | கடுங்கோன் = பாண்டியன். ===58=== <poem>வளையவாய் நீண்டதோள் வாட்கணாய் அன்னை இளையளாய் மூத்திலள் கொல்லோ – தளையவிழ்தார் மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக் கண்கொண்டு நோக்கல்என் பாள். – 58</poem> ::வளையவாய் நீண்ட தோள் வாள் கணாய் அன்னை இளையளாய் மூத்திலள் கொல்லோ தளையவிழ் தார் மண் கொண்ட தானை மறம் கனல் வேல் மாறனைக் கண்கொண்டு நோக்கல் என்பாள். ::வளையல் அணிந்த நீண்ட தோளும், வாள் போன்ற கண்ணும் கொண்ட தோழியே! அன்னை இளையவளா? மூத்தவளா? மூத்தவளாக இருந்தும் இளையவளாக இருக்கிறாளே! சிறுபிள்ளைத் தனமாய் நடந்துகொள்கிறாளே! மாறன் உலா வருவதைக் கண்கொண்டு பார்க்கக்கூடாது என்கிறாளே. பூக்கும் மலர்மாலை அணிந்துகொண்டு, பகைவரைக் கைப்பற்றிய படையோடு, வீரம் வெளிப்படும் வேல் ஏந்திய கோலத்துடன் வருகிறானே. அவன் மாலையையாவது, படையையாவது, வேலையாவது நான் பார்க்கக்கூடாதா? ===59=== <poem>கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென வேட்டங்குச் சென்றெவன் நெஞ்சறியாள் - கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை வெறுங்கூடு காவல்கொண் டாள். – 59</poem> ::கோள் தெங்கு சூழ் கூடல் கோமானைக் கூட என வேட்டு அங்குச் சென்ற எவன் நெஞ்சு அறியாள் கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை வெறுங்கூடு காவல் கொண்டாள். ::கொழுத்த தென்னைமரம் சூழ்ந்திருக்கும் ஊர் கூடல் நகரம். அவன் இந்தக் கூடல் அரசன். அவனை விரும்பி என் நெஞ்சு சென்றுவிட்டது. இது அன்னைக்குத் தெரியவில்லை. வெறும் உடம்புக் கூட்டுக்குக் காவல் போட்டிருக்கிறாள். | குறும்பூழ் = காடை என்னும் பறவை. | காடை பிடிக்கும் வேடன் வலையை விரித்து வைப்பான். அதன் அருகில் தான் பழக்கி வைத்திருக்கும் பெண்-காடையைப் பறக்க விடுவான். அது ஆண்-காடையை அழைத்துவந்து கூட்டில் விழச்செய்யும். அன்னை அப்படிச் செய்கிறாளே! ===60=== <poem>களியானைத் தென்னன் இளங்கோவென் றெள்ளிப் பணியாரே தம்பார் இழக்க – அணியாகங் கைதொழு தேனும் இழக்கோ நறுமாவின் கொய்தளிர் அன்ன நிறம். – 60</poem> ::களி யானைத் தென்னன் இளங்கோ என்று எள்ளிப் பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் கை தொழுதேனும் இழக்கோ நறு மாவின் கொய் தளிர் அன்ன நிறம். ::களிப்புக் கொண்ட யானைமேல் வருபவன் தென்னன். அவன் இளையவன், எளிதாக வென்றுவிடலாம் என்று ஏளனமாகப் பேசிக்கொண்டு அவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் தன் நாட்டை இழந்தனர். அது சரி. நான் தென்னனைத் தொழுதேன். ஆனால் என் மாந்தளிர் போன்ற மேனி அழகை இழந்துவிட்டேனே! இது சரியா? ==பாண்டியன் 61-65== ===61=== <poem>வழுவில்எம் வீதியுள் மாறன் வருங்கால் தொழுதேனைத் தோள்நலமுங் கொண்டான் – இமிழ்திரைக் கார்க்கடற் கொற்கையார் காவலனுந் தானேயால் யார்க்கிடுகோ பூசல் இனி. – 61</poem> ::வழு இல் எம் வீதியுள் மாறன் வருங்கால் தொழுதேனைத் தோள் நலமும் கொண்டான் இமிழ் திரைக் கார்க் கடல் கொற்கையார் காவலனுந் தானேயால் யார்க்கு இடுகோ பூசல் இனி. ::மாறன் குறையில்லாத என் வீதியில் உலா வந்தான். அப்போது நான் அவனைத் தொழுதேன். அவன் என் தோள்-அழகை வாங்கிக்கொண்டான். திறையாக வாங்கிக்கொண்டான். நான் அவன் கொற்கை நகரில் வாழும் அவனது குடிமகள். எனக்குக் காவலன் அவன்தான். அவனே இந்தக் கொடுமையைச் செய்தால் நான் யாரிடம் சென்று முறையிட்டுக்கொள்வேன்? ===62=== <poem>தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும் வானேற்ற வையகம் எல்லாமால் – யானோ எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர்ந்தண்தார் மாறன் அளியானேல் அன்றென்பார் ஆர். – 62</poem> ::தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும் வான் ஏற்ற வையகம் எல்லாமால் யானோ எளியேன் ஓர் பெண் பாலேன் ஈர்ம் தண் தார் மாறன் அளியானேல் அன்று என்பார் ஆர். ::மாறன் தான், தன் ஒப்புயர்வற்ற வெண்கொற்றக் குடையால் குடிமக்களுக்கு நிழல் தருபவன். வானுலகைத் தாங்கும் வையகத்தைக் காப்பவன். அவன் அப்படி. யானோ எளியவள். அதிலும் ஒரு பெண். அளி(இரக்கம்) தந்து காப்பாற்றப்பட வேண்டியவள். இந்த உண்மையை அன்று என்று சொல்பவர் ஆர்? அப்படி இருக்க அவன் எனக்கு அளி(இரக்கம்) செய்து காப்பாறவில்லையே!. ===63=== <poem>மன்னுயிர் காதல் தனதான அவ்வுயிருள் என்னுயிரும் எண்ணப் படுமாயின் – என்னுயிர்க்கே சீரொழுகு செங்கோற் செழியற்கே தக்கதோ நீரொழுகப் பாலொழுகா வாறு. – 63</poem> ::மன் உயிர் காதல் தனது ஆன அவ் உயிருள் என் உயிரும் எண்ணப்படும் ஆயின் என் உயிர்க்கே சீர் ஒழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ நீர் ஒழுகப் பால் ஒழுகாவாறு. ::செழியன் நிலைபெற்ற உயிரினம் எல்லாவற்றின் மீதும் காதலன்பு கொண்டவன். அந்த உயிரினங்களில் என் உயிரும் ஒன்றாக எண்ணப்படுமாயின், என்மேல் செங்கோல் ஆட்சி செய்யவில்லையே! எதுவா அவன் சீர்மை? * பச்சைமண் பாண்டத்தில் பாலை ஊற்றிவைத்தால் அதில் உள்ள நீர் கசிந்து ஒழுகுகிறது. பால் கசிந்து ஒழுகவில்லை. இது என்ன விந்தை! * அவன் நீர்மை எல்லா உயிரினங்கள் மாட்டும் பாய்கிறது. அவன் பாலுணர்வு அப்படிப் பாயவில்லையே. ===64=== <poem>புகுவார்க் கிடங்கொடா போதுவார்க் கொல்கா நகுவாரை நாணி மறையா – இகுகரையின் ஏமான் பிணைபோல நின்றதே கூடலார் கோமான்பின் சென்றவென் நெஞ்சு. - 64</poem> ::புகுவார்க்கு இடம் கொடா போதுவார்க்கு ஒல்கா நகுவாரை நாணி மறையா இகு கரையின் ஏ மான் பிணை போல நின்றதே கூடலார் கோமான் பின் சென்ற என் நெஞ்சு. ::அவன் கூடலார் கோமான். அவன் பின் என் நெஞ்சு சென்றது. என் நெஞ்சுக்குள்ளே புகுவார் யாருக்கும் அது இடம் கொடுக்கவில்லை. வழியில் யார் சென்றாலும் நெஞ்சம் தளரவில்லை. என் நெஞ்சைப் பார்த்து எள்ளி நகையாடுபவர்களைக் கண்டால் நாணி மறைந்துகொள்கிறது. இடிந்து விழுந்துகொண்டிருக்கும் ஆற்றங்கரையில் அம்பு பட்ட மான் நிற்பது போல என் நெஞ்சு அவனிடம் நிற்கிறது. ===65=== <poem>களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை அளியான் அளிப்பானே போன்றான் - தெளியாதே செங்காந்தள் மென்விரலாற் சேக்கை தடவந்தேன் என்காண்பேன் என் அலால் யான். – 65</poem> ::களி யானைத் தென்னன் கனவின் வந்து என்னை அளியான் அளிப்பானே போன்றான் தெளியாதே செங்காந்தள் மென் விரலால் சேக்கை தடவந்தேன் என் காண்பேன் என் அலால் யான். ::களிக்கும் யானைமேல் உலா வருபவன் தென்னன். அவன் என் கனவில் வந்தான். அவன் எனக்கு இன்பம் எதுவும் தரவில்லை. இன்பம் தருபவன் போல இருந்தான். உடனே செங்காந்தள் பூப் போன்ற என் விரல்களால் அவனைத் தடவினேன். உண்மையில் படுக்கையைத் தடவிக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர என் படுக்கையில் வேறு யாரும் இல்லை. ==பாண்டியன் 66-70== ===66=== <poem>கனவை நனவென் றெதிர்விழிக்கும் காணூம் நனவில் எதிர்விழிக்க நாணும் – புனையிழாய் என்கண் இவையானால் எவ்வாறே மாமாறன் தன்கண் அருள்பெறுமோ தான். – 66</poem> ::கனவை நனவு என்று எதிர் விழிக்கும் காணூம் நனவில் எதிர் விழிக்க நாணும் புனையிழாய் என் கண் இவை ஆனால் எவ்வாறே மா மாறன் தன் கண் அருள் பெறுமோ தான். ::கனவை நனவு என்று எண்ணிக்கொண்டு அவனைக் கொட்டைக் கண்ணோடு விழித்துக்கொண்டு பார்க்கிறேன். அப்போது உறங்கிக்கொண்டிருக்கும் என் கண்கள் அவனைப் பார்க்கவில்லை. நனவில் அவன் உலா வருகிறான். அப்போது என் நாணத்தால் அவனைப் பார்க்க முடியவில்லை. என் கண்ணுக்கே இந்த நிலைமை ஆனால் அவனது அருளைப் பெறுவது எப்போது? ===67=== <poem>தளையவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி களையினும்என் கண்திறந்து காட்டேன் – வளைகொடுப்போம் வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந் தென்கண் புகுந்தான் இரா. – 67</poem> ::தளை அவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி களையினும் என் கண் திறந்து காட்டேன் வளை கொடுப்போம் வன் கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து என் கண் புகுந்தான் இரா. ::மலரும் பூமாலையைக் கையில் எடுத்துக்கொண்டு வந்து நிற்கும் தாய்மார்களே! “விடிந்துவிட்டது, கண்ணைத் திற” என்கிறீர்கள். என் உயிரே போனாலும் கண்ணைத் திறக்கமாட்டேன். மாறன் என் வளையல்களைக் கழன்று விழும்படிச் செய்து எடுத்துக்கொண்டு போய்விட்டான். அவன் கொடுமைக்காரன். வாளைக் கையில் உடையவன். கருநிற யானைமேல் வந்தான். வந்தவன் இரவில் என் கண்ணுக்குள் அகப்பட்டுக்கொண்டான். கண்ணுக்குள்ளே இருக்கிறான். திறந்தால் ஓடிவிடுவான். மால் = கருமை ===68=== <poem>ஓராற்றல் என்கண் இமைபொருந்த அந்நிலையே கூரார்வேல் மாறன் என் கைப்பற்ற – வாரா நனவென் றெழுந்திருந்தேன் நல்வினையொன் றில்லேன் கனவும் இழந்திருந்த வாறு. – 68</poem> ::ஓராற்றல் என்கண் இமை பொருந்த அந் நிலையே கூர் ஆர் வேல் மாறன் என் கைப் பற்ற வாரா நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன் கனவும் இழந்து இருந்த ஆறு. ::அவனை எண்ணிக்கொண்டே இருந்தேன். தூக்கம் வரவில்லை. ஏதோ ஒரு வகையில் என் இமைகள் மூடிக்கொண்டன. அப்போதே கூரிய வேலை உடைய மாறன் அருகில் வந்து என் கைகளைப் பற்றினான். கனவை நனவு என்று எண்ணி எழுந்திருந்தேன். அவன் இல்லை. கைப்பற்றிய கனவு இன்பமும் இல்லாமல் போய்விட்டது. எனக்கு நல்வினைப்பேறு ஒன்றுகூட இல்லை. ===69=== <poem>கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர்நுனைவேலி வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற் கொண்டிருக்கப் பெற்ற குணம். – 69</poem> ::கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர் நுனை வேலி வண்டு இருக்க நக்க தார் வா மான் வழுதியால் கொண்டிருக்கப் பெற்ற குணம். ::கரிய நல்ல நீலமலர் மணக்கும் குளத்தில் நாள்தோறும் பூத்துநின்று தவம் செய்தது. அந்தத் தவத்தின் பயனால் போலும் வழுதி கழுத்தில் மாலை ஆகும் பேறு பெற்றுள்ளது. கூர்மையான நுனியை உடைய வேல் போன்ற வாயைக் கொண்டிருக்கும் வண்டு சிரிப்பொலி கேட்க மொய்க்கும் பூமாலை, வழுதி மாலை. ===70=== <poem>அறிவரார் யாமொருநாட் பெண்டிரே மாகச் செறிவார் தலைமே னடந்து – மறிதிரை மாட முரிஞ்சும் மதுரையார் கோமானைக் கூட வொருநாட் பெற. – 70</poem> ::அறிவர் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆகச் செறிவார் தலைமேல் நடந்து மறி திரை மாடம் உரிஞ்சும் மதுரையார் கோமானைக் கூட வொரு நாள் பெற. ::மோதித் திரும்பும் வைகை ஆற்று நீர்த்திரையை மாடி வீடுகள் உரிஞ்சும் ஊர் மதுரை. அவன் அந்த மதுரை மக்களின் கோமான். என்றேனும் ஒருநாள் நான் அவனோடு சேர்ந்து கூடி இருப்போன். இப்போது ஊரார் என் வாயை அடைத்து வைக்கின்றனர். நான் அவனோடு கூடியிருப்பதை அன்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். இப்போது என்னை வீட்டுக்குள்ளே அடைத்துச் செறித்து வைப்பவர்கள் அப்போது தெரிந்துகொள்வர். அப்போது அவர்கள் தலைமேல் நான் நடப்பேன். பெண்களே! இதனைத் தெரிந்துகொள்ளுங்கள். ==பாண்டியன் 71-75== ===71=== <poem>கைய தவன்கடலுள் சங்கமால் பூண்டதுவும் செய்யசங் கீன்ற செழுமுத்தால் மெய்யதுவும் மன்பொரு வேல்மாறன் வார்பொதியிற் சந்தனமால் என்பெறா வாடும் என் தோள். – 71</poem> ::கையது அவன் கடலுள் சங்கமால் பூண்டதுவும் செய்ய சங்கு ஈன்ற செழு முத்தால் மெய்யதுவும் மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனமால் என் பெறா வாடும் என் தோள். ::கடல் கைக்கும்படிக் கடலில் படுத்துத் தவம் செய்துகொண்டிருப்பதால் திருமால்தான் மாறன் என்கிறேன். திருமால் கடல் சங்கைக் கையில் வைத்துக்கொண்டிருக்கிறான். நான் மாறன் கடலில் விளைந்த சங்கில் அறுத்த வளையல்கைக் கையில் அணிந்துகொண்டிருக்கிஅறேன். மாறன் கடல் முத்தை ஆரமாக அணிந்துகொண்டிருக்கிறேன். மாறனின் பெதியமலைச் சந்தனத்தைப் பூசிக்கொண்டிருக்குறேன். சங்கம், முத்து, சந்தனம் எல்லாமே அவனுடையவை. அப்படி இருக்கும்போது என் தோள் எதனைப் பெறாமல் வாடுகிறது? வியப்பாக உள்ளது. ===72=== <poem>இப்பியீன்று இட்ட எறிகதிர் நித்திலம் கொற்கையே யல்ல படுவது – கொற்கைக் குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம் கருதியார் கண்ணும் படும். – 72</poem> ::இப்பி ஈன்று இட்ட எறி கதிர் நித்திலம் கொற்கையே அல்ல படுவது கொற்கைக் குருதி வேல் மாறன் குளிர்சாந் தகலம் கருதியார் கண்ணும் படும். ::சங்குச் சிப்பிகள் பெற்றெடுத்த முத்துகள் கொற்கையில் மட்டுமா உதிர்கின்றன? கொற்கையை ஆளும் மாறனின், குருதி தோய்ந்த வேலை உடைய மாறனின், குளிர்ந்த சந்தனம் பூசிய மார்பினை அடையக் கருதிய பெண்கள் கண்களிலிருந்தும் உதிர்கின்றன. ===73=== <poem>கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன் முடிபாடி முத்தாரம் பாடித் – தொடியுலக்கை கைம்மனையில் ஓச்சப் பெறுவெனோ யானும்ஓர் அம்மனைக் காவல் உளேன். – 73</poem> ::கொடி பாடித் தேர் பாடிக் கொய் தண் தார் மாறன் முடி பாடி முத்தாரம் பாடித் தொடி உலக்கை கைம் மனையில் ஓச்சப் பெறுவெனோ யானும் ஓர் அம் மனைக் காவல் உளேன். ::மாறன் கொடி, மாறன் தேர், மாறன் பூ மாலை, மாறன் முத்தாரம், மாறன் சூடிய முடி ஆகியவற்றைப் பாடிக்கொண்டு நான் உலக்கையால் நெல் குற்றவேண்டும். இதுதான் என் ஆசை. இப்போது வீட்டுக் காவலில் கிடக்கிறேன். \ தொடி உலக்கை – பூண் போட்ட உலக்கை \ கொய் தண் தார் – கொய்த குளிர்ந்த பூக்களால் கட்டப்பட்ட மால் \ கைம்மனை – சிறிய இல்லம் \ அம்மனை – அழகிய இல்லம் ===74=== <poem>என்னை உரையல் என் பேருரையல் ஊருரையல் அன்னையும் இன்னள் எனவுரையல் பின்னையுந் தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்கென் கண்படாவாறே யுரை. 74</poem> ::என்னை உரையல் என் பேருரையல் ஊருரையல் அன்னையும் இன்னள் என உரையல் பின்னையும் தண் படா யானைத் தமிழ்நர் பெருமாற்கு என் கண் படாவாறே உரை. ::என்னைப் பற்றிப் பேசவேண்டா. என் பேரையும் சொல்லவேண்டா. என் தாய் என்னை அடைத்து வைத்திருக்கும் கொடியவள் என்றும் சொல்லவேண்டா. பின் என்னதான் சொல்லவேண்டும் என்கிறாயா? தமிழர் பெருமானை எண்ணி என் கண் உறங்காமல் இருக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள். (தண் படா யானை = குளுமை இல்லாமல் எப்பொதும் சினம் கொண்டிருக்கும் யானை – யானையை உடைய தமிழர் பெருமான்.) ===75=== <poem>மாறடுபோர் மன்னர் மதிக்குடையும் செங்கோலும் கூறிடுவாய் நீயோ குளிர்வாடாய் சோறடுவார் ஆரத்தால் தீமூட்டும் அம்பொதியிற் கோமாற்கென் வாரத்தால் தோற்றேன் வளை. 75</poem> ::மாறு அடு போர் மன்னர் மதிக் குடையும் செம் கோலும் கூறிடுவாய் நீயோ குளிர் வாடாய் சோறு அடுவார் ஆரத்தால் தீ மூட்டும் அம் பொதியின் கோமாற்கு என் வாரத்தால் தோற்றேன் வளை. ::சோறாக்குவோர் சந்தனக்கட்டையில் அடுப்புத் தீ மூட்டும் பொதியமலை நாட்டுக் கோமான் அவன். குளிரும் வாடைக்காற்றே! நீ அவனிடம் தூது செல். மாற்றாரைப் போரில் வெல்லும் அவனது குடை, மதியம் போன்ற வெண்கொற்றக் குடை, செங்கோல் ஆகியவற்றை முதலில் சொல். பின் அவனை நெஞ்சில் பங்குபோட்டுக் கொண்டிருப்பதால் என் வளையல்களைத் தோற்றுப் போயிருக்கிறேன் என்பதையும் சொல். (வாரம் = சரிபாதி பங்கு) ==பாண்டியன் 76-80== ===76=== <poem>துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப் பிடியேயான் நின்னை யிரப்பல் – கடிகமழ்தார்ச் சேலேக வண்ணனொடு சேரி புகுதலுமெஞ் சாலேகம் சார நட. – 76</poem> ::துடி அடித் தோல் செவித் தூங்கு கைம் நால் வாய்ப் பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார்ச் சேல் ஏக வண்ணனொடு சேரி புகுதலும் எம் சாலேகம் சார நட. ::அவன் சேல் ஏக வண்ணன். மீன் கொடி கொண்ட மாறன். (மீன் கொடி கொண்ட காம வேள் மாரன்). அவனைச் சுமந்துகொண்டு வரும் பிடியே! (பெண்யானையே) உடுக்கை-மேளம் போன்ற காலடியும், தோல்-பறை போன்ற காதும், தொங்கும் கையில் துளை இருக்கும் வாயும் கொண்டிருக்கிறாய். சரி. உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். மாலை அணிந்துகொண்டு அவன் உன்மேல் வரும்போது என் தெருச்சேரிக்கு வந்ததும் என் வீட்டுச் சன்னல் (சாலேகம்) ஓரமாக நடந்து செல். நான் அவனைக் கண்ணாரக் காணவேண்டும். ===77=== <poem>எலாஅ மடப்பிடியே யெங்கூடற் கோமான் புலாஅல் நெடுநல்வேல் மாறன் – உலாஅங்கால் பைய நடக்கவுந் தேற்றாயால் நின்பெண்மை ஐயப் படுவ துடைத்து. – 77</poem> ::எலாஅ மடப் பிடியே எம் கூடல் கோமான் புலாஅல் நெடு நல் வேல் மாறன் உலாஅங்கால் பைய நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை ஐயப்படுவது உடைத்து. ::ஏ, மடத்தனம் கொண்ட பிடியே! புலால் நாற்றம் அடிக்கும் வேலையுடைய என் கூடல்-கோமான் மாறன் உலா வரும்போது மெதுவாக நடக்க உனக்குத் தெரியவில்லையே. பெண்ணின் விருப்பத்தைப் புரிந்துகொள்ளாத நீயும் ஒரு பெண்ணா? உன் பிறவி ஐயப்படத் தக்கதாக உள்ளது. ===78=== <poem>போரகத்துப் பாயுமா பாயாது பாயமா ஊரகத்து மெல்ல நடவாயோ – கூர்வேல் மதிவெங் களியானை மாறன் தன் மார்பங் கதவங்கொண் டியாமுந் தொழ. – 78</poem> ::போர் அகத்துப் பாயும் மா பாயாது பாயமா ஊர் அகத்து மெல்ல நடவாயோ கூர் வேல் மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம் கதவம் கொண்டு யாமும் தொழ. ::மாறன் மார்புக் கதவை நான் திறந்து தொழவேண்டும். அவனைச் சுமந்துவரும் களிப்பு மிக்க யானையே! போரில் பாய்வது போல நீ பாயாதே. பாயாசம் போல ஊருக்குள்ளே மெல்ல நடந்துசெல். ===79=== <poem>ஆடுகோ சூடுகோ ஐதாக் கலந்துகொண்டு ஏடுகோ டாக எழுதுகோ – நீடு புனவட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி கனவட்டங் கால்குடைந்த நீறு. – 79</poem> ::ஆடுகோ சூடுகோ ஐதாக் கலந்துகொண்டு ஏடு கோடாக எழுதுகோ நீடு புனவட்டப் பூ தெரியல் பொன் தேர் வழுதி கனவட்டம் கால் குடைந்த நீறு. ::வழுதியின் குதிரை ஊர்தியின் பெயர் ‘கனவட்டம்’. வழுதியைச் சுமந்துகொண்டு கனவட்டம் தெருவில் சென்றது. அதன் காலடி பட்ட புழுதியை நீரில் கலந்து மையாக்கிக்கொண்டு, பூவிதழ் நுனியை எழுத்தாணி ஆக்கிக்கொண்டு, என் கண்ணில் மை எழுதிக்கொள்ளட்டுமா, என் தோளில் தொய்யில் எழுதிக்கொள்ளட்டுமா – அவள் கேட்கிறாள். ===80=== <poem>பிணிகிடந் தார்க்குப் பிறந்தநாட் போல அணியிழை அஞ்ச வருமால் – மணியானை மாறன் வழுதி மணவா மருண்மாலைச் சீறியோர் வாடை சினந்து. – 80</poem> ::பிணி கிடந்தார்க்குப் பிறந்த நாள் போல அணியிழை அஞ்ச வருமால் மணி யானை மாறன் வழுதி மணவா மருண்மாலைச் சீறி ஓர் வாடை சினந்து. ::நோய்வாய்ப் பட்டுக் கிடப்பவர்களுக்குப் பிறந்தநாள் வருவது போல வாடைக்காற்று சினம் கொண்டு பாய்கிறது. பெண்ணே! பார். மாறன் வழுதியோடு கூடி இருக்காமல் தனியே இருப்பவரிடம்தான் வாடை இப்படி வருகிறது. ==பாண்டியன் 81-85== ===81=== <poem>வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோல் ஏரிய ஆயினும் என்செய்யும் –கூரிய கோட்டானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங் கோட்டுமண் கொள்ளா முலை. – 81</poem> ::வாரிய பெண்ணை வரு குரும்பை வாய்த்தன போல் ஏரிய ஆயினும் என் செய்யும் கூரிய கோட்டு ஆனைத் தென்னன் குளிர் சாந்து அணி அகலம் கோட்டு மண் கொள்ளா முலை. ::என் முலை தென்னங்குரும்பை போல் பருத்துக்கொண்டிருக்கிறது. சரி. அதனால் என்ன பயன். தென்னன் மார்பில் உள்ள சந்தனக் குழம்பை அப்பிக்கொள்ளவில்லையே! ===82=== <poem>நாணாக்காற் பெண்மை நலன் அழியும் முன்னின்று காணாக்காற் கைவளையுஞ் சோருமால் – காணேன்நான் வண்டு எவ்வந் தீர்தார் வயமான் வழுதியைக் கண்டுஎவ்வந் தீர்தார் ஆறு. – 82</poem> ::நாணாக்கால் பெண்மை நலன் அழியும் முன் நின்று காணாக்கால் கை வளையும் சோருமால் காணேன் நான் வண்டு எவ்வம் தீர் தார் வய மான் வழுதியைக் கண்டு எவ்வம் தீர் தார் ஆறு. ::வழுதி உலா வரும்போது கண்டு நாணாமல் நின்றால் என் பெண்மை அழியும். அவனைக் கண்ணாரக் காணவில்லை என்றால் என் கைவளையல் கழன்று ஓடும். எப்படித்தான் என் எவ்வத் துன்பத்தைப் போக்கிக்கொள்வேன்? பூமாலை மட்டும் வண்டின் துன்பத்தைப் போக்கிக்கொண்டு அவன் கழுத்தில் இருக்கிறதே! ===83=== <poem>மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக் காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் – கண்டக்காற் பூணாகந் தாவென்று புல்லப் பெறுவேனோ நாணோ டுடன்பிறந்த நான். – 83</poem> ::மாணார்க் கடந்த மற வெம் போர் மாறனைக் காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்டக்கால் பூண் ஆகம் தா என்று புல்லப் பெறுவேனோ நாணோடு உடன்பிறந்த நான். ::மாட்சிமை இல்லாதவர்களை வென்றவன் மாறன். அவனைக் காணாதபோது ஆயிரம் ஆயிரமாகப் பேசுவேன். கண்டால், “உன் பூண் அணிந்த மார்பை எனக்குக் கொடு” என்று கேட்டுத் தழுவமுடியுமா? நாணத்தோடு பிறந்தவள் ஆயிற்றே! ===84=== <poem>செய்யார் எனினுந் தமர்செய்வ ரென்னுஞ்சொல் மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் – கையார் வரிவளை நின்றன வையையார் கோமான் புரிவளை போந்தியம்பக் கேட்டு. – 84</poem> ::செய்யார் எனினும் தமர் செய்வர் என்னும் சொல் மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் கை ஆர் வரி வளை நின்றன வையையார் கோமான் புரி வளை போந்து இயம்பக் கேட்டு. ::மற்றவர்கள் உதவவில்லை என்றாலும், உற்றார் உறவினர் உதவுவர் என்பது உண்மை என்பது இப்போது தெரிந்துவிட்டது. வையை நாட்டாரின் அரசன் உலா வரும்போது ஊதிய சங்கின் ஓசையைக் கேட்டதும், சங்கால் செய்யப்பட்டதாய் என் கையில் இருக்கும் வளையல்கள் என் தோள்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டன. காணப்போகும் மகிழ்ச்சி. \ வரிவளை – கையில் வரிவரியாக உள்ள வளையல் \ புரிவளை – வளைந்து விரியும் சங்கு ===85=== <poem>உகுவாய் நிலத்த துயர்மணல்மேல் ஏறி நகுவாய்முத் தீன்றசைந்த சங்கம் – புகுவான் திரைவரவு பார்த்திருக்குந் தென்கொற்கைக் கோமான் உரைவரவு பார்த்திருக்கும் நெஞ்சு. – 85</poem> ::உகு வாய் நிலத்தது உயர் மணல் மேல் ஏறி நகு வாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் புகுவான் திரை வரவு பார்த்திருக்கும் தென் கொற்கைக் கோமான் உரை வரவு பார்த்திருக்கும் நெஞ்சு. ::சங்குப் பூச்சி மணலின் மேல் ஏறி பல்லைக் காட்டும் முத்துக்களைப் பெற்று வைத்துவிட்டு மீளும். அந்த முத்துக்கள் அலைகள் வந்து கொண்டுசெல்லாவா என்று காத்துக்கொண்டிருக்கும். அதுபோல நான் அந்த முத்து விளையும் கொற்கை அரசனிடமிருந்து அழைப்பு வராதா எனக் காத்திருக்கிறேன். ==பாண்டியன் 86-90== ===86=== <poem>கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவனேல் கூடு என்று – கூடல் இழைப்பாள்போற் காட்டி இழையா திருக்கும் பிழைப்பில் பிழைபாக் கறிந்து. – 86</poem> ::கூடல் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவனேல் கூடு என்று கூடல் இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும் பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து. – 86 ::கூடல் இழைத்தல் என்பது ஒருவகை விளையாட்டு. அது குறி பார்க்கும் விளையாட்டு. நடுவில் நின்றுகொண்டு, கண்களை மூடிக்கொண்டு, சுழன்று, கைவிரலால் மணலில் வட்டமிட்டுக் கோடு கிழிப்பர். வட்டம் கோணல் மாணலாக இருந்தாலும், கோடு தொடங்கிய புள்ளியில் ஒன்றுகூட வேண்டும், கூடினால் தான் விரும்பிய எண்ணம் நிறைவேறும் என்றும், கூடாமல் கோடு வேறிடம் சென்றால் விரும்பிய செயல் கைகூடாது என்றும் நம்புவர். ::இப்படி அவள் கூடல் இழைக்க முற்பட்டாள். கூடல் பெருமான் பாண்டியனை நான் கூடப்பெறுவேன் என்றால் கூடல் கோடே நீ கூடுக என்று சொல்லிக்கொண்டு கூடல் இழைக்க முற்பட்டுக் கூடல் இழைப்பது போலப் பாசாங்கு காட்டினாள். உண்மையில் அவள் கூடல் இழைக்கவில்லை. காரணம் ஒருவேளை கூடல்-கோடு கூடாமல் போய்விட்டால் அவனைக் கூடமுடியாமல் போய்விடுமே என்னும் அச்சம் அவளுக்கு. ===87=== <poem>குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம் புறப்படா பூந்தார் வழுதி – புறப்படின் ஆபுகு மாலை அணிமலையில் தீயேபோல் நாடறி கௌவை தரும். – 87</poem> ::குடத்து விளக்கே போல் கொம்பன்னார் காமம் புறப்படா. பூந்தார் வழுதி புறப்படின் ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல் நாடறி கௌவை தரும். ::கொடிக்கொம்பு (கொம்பில் ஏறும் கொடி) போன்றவர் மகளிர். மகளிர் காமம் குடத்துக்குள் வைத்த விளக்குப்போல் வெளி-உலகுக்குத் தெரியாது. ஆனால் வழுதி மாலையும் கழுத்துமாக உலா வரும்போது, ஆனிரைகள் இல்லம் புகும் மாலை வேளையில் மலையில் பற்றி எரியும் தீயைப் போல ஊருக்கெல்லாம் தெரியும்படி வெளிப்பட்டுவிடும். ===88=== <poem>ஏற்பக் குடைந்தாடில் ஏசுவர் அல்லாக்கால் மாற்றி யிருந்தாள் ஏனவுரைப்பர் – வேற்கண்ணாய் கொல்யானை மாறன் குளிர்புனல் வையைநீர் எல்லாம் எனக்கோர் இடர். – 88</poem> ::ஏற்பக் குடைந்து ஆடில் ஏசுவர் அல்லாக்கால் மாற்றி இருந்தாள் ஏன உரைப்பர் வேல் கண்ணாய் கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் எல்லாம் எனக்கு ஓர் இடர். ::அவன் கொல்யானை மேல் செல்லும் மாறன். அவன் நாட்டு வையையில் குளிர்ந்த ஊற்றுநீர் வருகிறது. அதில் மூழ்கிக் குளித்து விளையாடினால் மாறன் நாட்டு நீர் என்று மூழ்கி விளையாடுகிறாள் என்று சொல்லி ஏசுவார்கள். நீராடாமல் கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தால் தன் ஆசையை மறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று முணுமுணுப்பர். வேல் போன்ற கண்ணை உடைய என் தோழியே! எது செய்தாலும் எனக்குத் துன்பமே. ===89=== <poem>யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின் தானூட யானுணர்த்தத் தானுணரான் – தேனூறு கொய்தார் வழுதி குளிர்சாந் தணியகலம் எய்தா திராக்கழிந்த வாறு. – 89</poem> ::யான் ஊடத் தான் உணர்த்த யான் உணரா விட்டதன் பின் தான் ஊட யான் உணர்த்தத் தான் உணரான் தேன் ஊறு கொய் தார் வழுதி குளிர் சாந்து அணி அகலம் எய்தாது இராக் கழிந்தவாறு. ::நான் ஊடினேன். அவன் உணர்த்தினான். நான் என் ஊடலை விட்டு உணர்ந்துகொண்டு கூடச் சென்றேன். அப்போது வழுதி நான் முன்பு ஊடினேன் என்று ஊடினான். நான் உணர்த்தினேன். அவன் உணரவில்லை. இப்படியே இரவெல்லாம் கழிந்துவிட்டது. குளிர்ந்த சந்தனம் பூசிய அவன் மார்பு எனக்குக் கிடைக்கவே இல்லை. ===90=== <poem>புல்லாதார் வல்லே புலர்கென்பர் புல்லினார் நில்லா யிரவே நெடிதென்பர் – நல்ல விராமலர்த் தார்மாறன் வெண்சாந் தகலம் இராவளிப் பட்ட திது. – 90</poem> ::புல்லாதார் வல்லே புலர்(கு) என்பர் புல்லினார் நில்லாய் இரவே நெடிது என்பர் நல்ல விராம் மலர்த் தார் மாறன் வெண் சாந்து அகலம் இரா அளிப் பட்டது இது. ::இரவே! உடனே விடிந்துவிடு (புலர்க) என்று மாறனின் வெண்ணிறச் சந்தனம் பூசிய மார்பைத் தழுவப்பெறாதவர்கள் வேண்டுவர். தழுவப்பெற்றவர்கள் இரவே விடியாமல் நீண்டுகொண்டே இரு என்று வேண்டுவர். இப்படி இரங்கத்தக்க (அளி) இரவு என்னிடம் வந்திருக்கிறதே! ==பாண்டியன் 91-95== ===91=== <poem>பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல் நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் – சாரல் மலைபடுப யானை வயமாறன் கூர்வேல் தலைபடுப தார்வேந்தர் மார்பு.- 91</poem> ::பார் படுப செம் பொன் பதி படுப முத்தமிழ் நூல் நீர் படுப வெண் சங்கும் நித்திலமும் சாரல் மலை படுப யானை வய மாறன் கூர் வேல் தலை படுப தார் வேந்தர் மார்பு. ::மாறன் நிலமெல்லாம் செம்பொன். ::ஊரெல்லாம் முத்தமிழ் முழங்கும் நூல்கள். ::நீரெல்லாம் சங்கும், முத்தும். ::மலையெல்லாம் யானை. ::பகைவேந்தர் மார்பெல்லாம் அவன் வேல். ::எனக்கு மட்டும் எதுவுமே இல்லையா ===92=== <poem>நந்தின இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும் பந்தர் இளங்கமுகின் பாளையும் – சிந்தித் திகழ்முத்தம் போற்றோன்றும் செம்மற்றே தென்னன் நகைமுத்த வெண்குடையான் நாடு. – 92</poem> ::நந்தின இளம் சினையும் புன்னைக் குவி மொட்டும் பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தித் திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன் நகை முத்த வெண் குடையான் நாடு. ::நந்துச் சங்குகளின் இள முட்டைகளும், புன்னைப்பூ மொட்டுகளும், பந்தர்த் துறைமுகத்தில் உள்ள பாக்குப் பாளைகளும் சிந்திக் கிடப்பதால் தென்னன் நாடெங்கிலும் முத்துக்கள் சிரிப்பது போல் தோற்றமளிக்கிறது. தென்னன் குடையிலும் முத்துக்கள் தொங்குகின்றன. இது இவன் நாட்டுக்குக் கிடைத்திருக்கும் செம்மாப்பு. எனக்குத்தான் அவன் பல்நகை முத்தம் கிடைக்கவில்லை. ===93=== <poem>மைந்தரோ டூடி மகளிர் திமிர்ந்திட்ட குங்கும ஈர்ஞ்சாந்தின சேறுழக்கி – எங்கும் தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் நெடுமாடக் கூடல் அகம். – 93</poem> ::மைந்தரோடு ஊடி மகளிர் திமிர்ந்து இட்ட குங்கும ஈர்ம் சாந்தின சேறு உழக்கி எங்கும் தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் நெடு மாடக் கூடல் அகம். ::மைந்தரோடு மகளிர் ஊடுவர். அப்போது மகளிர் அணிந்திருக்கும் ஈரக் குங்குமமும், மைந்தர் அணிந்திருக்கும் ஈரச் சந்தனமும் நிலத்தில் பட்டுச் சேறாகிப், போவார் வருவாரெல்லாம் வழுக்கித் தடுமாறும் தன்மை கொண்டது தென்னன் ஆளும் கூடல் நகரம். ===94=== <poem>மடங்கா மயில்ஊர்தி மைந்தனை நாளும் கடம்பம்பூக் கொண்டேத்தி அற்றால் – தொடங்கமருள் நின்றிலங்கு வென்றி நிரைகதிர்வேல் மாறனை இன் தமிழால் யாம்பாடும் பாட்டு. – 94</poem> ::மடங்கா மயில் ஊர்தி மைந்தனை நாளும் கடம்பம்பூக் கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள் நின்று இலங்கு வென்றி நிரை கதிர் வேல் மாறனை இன் தமிழால் யாம் பாடும் பாட்டு. ::மடங்காத தோகையை உடைய மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகனைக் கடம்புப் பூப் போட்டுப் பூசை செய்வது எப்படியோ அப்படிப்பட்டதுதான் மாறனை இனிய தமிழால் நான் பாடும் பாடல் எனக் கொள்க. மாறன் தொடங்கிய போரிலெல்லாம் முருகனைப் போல வெற்றி கண்டு ஒளிரும் வேலை உடையவன். ===95=== <poem>செங்கண் நெடியான்மேல் தேர்விசையன் ஏற்றியபூப் பைங்கண்வெள் ஏற்றான்பால் கண்டற்றால் – எங்கும் முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன் அடிமிசையே காணப் படும். – 95</poem> ::செங்கண் நெடியான் மேல் தேர் விசையன் ஏற்றிய பூப் பைங் கண் வெள் ஏற்றான் பால் கண்டு அற்றால் எங்கும் முடி மன்னர் சூடிய பூ மொய்ம் மலர்த் தார் மாறன் அடி மிசையே காணப்படும். ::அருச்சுணன் திருமாலுக்குச் சாத்திய பூ அத்தனையும் காளைமாட்டு ஊர்திக் கடவுளிடம் (சிவன் திருவடிகளில்) கிடப்பதைக் கண்டனர். அப்படித்தான் மன்னர் முடியில் சூடிய பூக்கள் எல்லாம் மாறன் காலடியில் கிடந்தன. மாறனைத் தொழும்போது உதிர்ந்த பூக்கள் அவை. ==பாண்டியன் 96-100== ===96=== <poem>கூந்தன்மா கொன்று குடமாடிக் கோவலானாய்ப் பூந்தொடியைப் புல்கிய ஞான்றுண்டால் – யாங்கொளித்தாய் தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு. – 96</poem> ::கூந்தல் மா கொன்று குடம் ஆடிக் கோவலானாய்ப் பூந்தொடியைப் புல்கிய ஞான்று உண்டால் யாங்கு ஒளித்தாய் தென்னவனே தேர் வேந்தே தேறு நீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு. ::தென்னவனே! தேர் வேந்தே! தெளிந்த நீர் ஓடும் கூடல் நகரக் கோமானே! நீதான் திருமால். (நெடியோன் என்பவன் பாண்டிய மன்னர்களில் ஒருவன்) நீ கண்ணனாகத் தோன்றிய காலத்தில் கூந்தல் என்னும் குதிரையைக் கொன்றாய். குடம் தலையில் வைத்துக்கொண்டு நடனம் ஆடினாய். அழகிய வளையல்காரி நப்பின்னையை (இராதையை)த் தழுவினாய். அப்போது உன் மார்பில் மறு இருந்ததே! (திருமகளை மார்பில் கொண்டிருக்கும் மறு) அதனை இப்போது எங்கே ஒளித்து வைத்து வைத்திருக்கிறாய்? ===97=== <poem>கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர் பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் – நண்ணார்தம் தேர்வேந்தன் தென்னன் திருவுத் திராடநாள் போர்வேந்தன் பூசல் இலன். – 97</poem> ::கண்ணார் கதவம் திறமின் களிறொடு தேர் பண் ஆர் நடைப் புரவி பண் விடுமின் நண்ணார் தம் தேர் வேந்தன் தென்னன் திருவும் திராட நாள் போர் வேந்தன் பூசல் இலன். ::தென்னனை நினைக்காத பகைவர்களே! உங்கள் கதவினைத் திறந்துகொள்ளுங்கள். களிறும், தேரும், குதிரையும் போருக்காகப் பூட்டுவதை விட்டுவிடுங்கள். இன்று தென்னன் பிறந்த திருநாள். உத்திரட்டாதி நாள். தேரில் வருவான். ஆனால் போர் செய்யமாட்டான். அஞ்சவேண்டா. ===98=== <poem>நிறைமதிபோல் யானைமேல் நீலத்தார் மாறன் குடைதோன்ற ஞாலத் தரசர் – திறைகொள் இறையோ எனவந் திடம்பெறுதல் இன்றி முறையோ எனநின்றார் மொய்த்து. – 98</poem> ::நிறை மதி போல் யானை மேல் நீலத் தார் மாறன் குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள் இறையோ என வந்து இடம் பெறுதல் இன்றி முறையோ என நின்றார் மொய்த்து. ::நீலநிற வேம்புமாலை அணிந்துகொண்டு மாறன் உலா வருகிறான். அவனது வெண்கொற்றக் குடை நிறைந்த மதியம் போலக் காணப்படுகிறது. உலகத்து அரசர்களெல்லாம் திறை கொடுப்பதற்காக மொய்த்துக்கொண்டு வந்தனர். வரிசையில் காத்துக்கொண்டு நிற்கும்போது “இறைவா! இது முறையோ?” என முணுமுணுத்துக்கொண்டனர். ===99=== <poem>நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப் புரைசை யைநிமிர்ந்து பொங்கா – அரசர்தம் முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்தமாப் பொன்னுரைகல் போன்ற குளம்பு. – 99</poem> ::நிரை கதிர் வேல் மாறனை நேர் நின்றார் யானைப் புரைசையை நிமிர்ந்து பொங்கா அரசர் தம் முன் முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்த மாப் பொன்னுரை கல் போன்ற குளம்பு. – 99 ::வேல் தாங்கி மாறன் போருக்கு எழுந்தான். சிலர் அவனை எதிர்த்தனர். மாறன் யானை அவர்களின் கோட்டையை நிமிர்ந்து பார்த்துப் பொங்கிப் பாய்ந்தது. மன்னர் பலர் போரிட்டு வீழ்ந்தனர். அவர்கள் தலையில் சூடியிருந்த முடி சிதறிக் கிடந்தது. மாறன் குதிரை அந்தப் பொன்முடிகளைக் காலால் இடறியது. அதனால் அதன் குளம்புகள் பொன்னை உரைத்துப் பார்க்கும் கட்டளைக்கல் போலக் காணப்பட்டது. ===100=== <poem>அருமணி அந்தலை யாடரவம் வானத்து உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் – செருமிகுதோட் செங்கண்மா மாறன் சினவேற் கனவுமே அங்கண்மா ஞாலத் தரசு. – 100</poem> ::அரு மணி அம் தலை ஆடு அரவம் வானத்து உரும் ஏற்றை அஞ்சி ஒளிக்கும் செரு மிகு தோள் செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே அம் கண் மா ஞாலத்து அரசு. ::நஞ்சாகிய அரிய நீலமணியைக் கொண்ட நல்லபாம்பு வானத்தில் இடி முழக்கம் கேட்டால் அஞ்சி ஒடுங்கிக்கொள்ளும். அதுபோல சிவந்த கண்ணுடன் தோன்றும் மாறனின் சினங்கொண்ட வேலைக் கனவிலே கண்டு உலகிலுள்ள அரசர்கள் ஒடுங்கிக்கொள்வர். ::பாம்பு மணி உமிழுமா? ::உமிழாது ::தொண்டையில் நஞ்சு கொண்ட சிவனை மணிகண்டன் என்கிறோம். ::அதுபோல நாகத்தின் நஞ்சினை மணி என்கிறோம். ==பாண்டியன் 101-105== ===101=== <poem>நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன் காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால் ஏம மணிப்பூண் இமையார் திருந்தடி பூமி மிதியாப் பொருள். – 101</poem> ::நேமி நிமிர் தோள் நிலவு தார்த் தென்னவன் காமர் நெடும் குடைக் காவலன் ஆணையால் ஏம மணிப் பூண் இமையார் திருந்து அடி பூமி மிதியாப் பொருள். ::ஆணைச் சக்கரத்தை உருட்டி நிமிர்ந்த தோளைக் கொண்டு விளங்குபவன் தென்னவன். எல்லோரும் விரும்பும் அகன்ற வெண்கொற்றக்குடையை உடையவன். கண் இமைக்காத தேவர் தமக்குப் பாதுகாவலாக மணிப்பூண் அணிந்தவர்கள். அவர்களின் காலடி மண்ணில் படுவதில்லை. காரணம் தென்னவன் ஆணைக்குக் கட்டுப்பட வேண்டி வருமே என்னும் அச்சம். ===102=== <poem>செருவெங் கதிர்வேற் சினவெம்போர் மாறன் உருமின் இடிமுரசு ஆர்ப்ப – அரவுறழ்ந்து ஆமா உகளும் அணிவரையின் அப்புறம்போய் வேமால் வயிறெரிய வேந்து. – 102</poem> ::செரு வெம் கதிர் வேல் சின வெம் போர் மாறன் உருமின் இடி முரசு ஆர்ப்ப அரவு உறழ்ந்து ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய் வேமால் வயிறெரிய வேந்து. ::வேலேந்தி மாறன் போருக்கு எழுவான். அப்போது அவன் போர்முரசம் இடி போல் முழங்கும். அந்த முழக்கத்தைக் கேட்ட ஆமா பாம்பைப் போல் மலையெங்கும் தாவும். பின்னர் அந்த மலைக்கு அப்பால் சென்ற பின்னரும் வயற்றெரிச்சலோடு நெஞ்சம் வெந்துகொண்டிருக்கும். ===103=== <poem>மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர் உருத்தகு மார்போலை யாகத் திருத்தக்க வையக மெல்லாம் எமதென் றெழுதுமே மொய்யிலைவேல் மாறன் களிறு. - 103</poem> ::மருப்பு ஊசியாக மறம் கனல் வேல் மன்னர் உருத் தகு மார்பு ஓலையாகத் திருத் தக்க வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே மொய் இலை வேல் மாறன் களிறு. ::எழுதும் ஊசி கொண்டு ஓலை எழுதுவர். அதுபோல மாறனின் போர்யானை தன் கொம்பை எழுத்தாணி ஆக்கிக்கொண்டு உலகில் எதிர்த்த அனைத்து மன்னர் மார்புகளிலும் எழுதும். (குத்தும்) ===104=== <poem>உருவத்தார்த் தென்னன் ஓங்குஎழில் வேழத் திருகோடுஞ் செய்தொழில் வேறால் – ஒருகோடு வேற்றார் அகலம் உழுமே யொருகோடு மாற்றார் மதில்திறக்கு மால். – 104</poem> ::உருவத் தார்த் தென்னன் ஓங்கு எழில் வேழத்து இரு கோடும் செய் தொழில் வேறால் ஒரு கோடு வேற்றார் அகலம் உழுமே ஒரு கோடு மாற்றார் மதில் திறக்கும் ஆல். ::எல்லா யானைகளின் கொம்புகள் இரண்டும் ஒரே தொழிலைத்தான் செய்யும். ஆனால் தென்னவனின் போர்யானையின் இரண்டு கொம்புகளும் இருவேறு பணிகளைச் செய்யும். ஒரு கொம்பு பகையரசர் நெஞ்சில் உழும். மற்றொன்று பகையரசர் கோட்டை மதிலைத் திறக்கும் ===105=== <poem>தோற்ற மலைகடல் ஓசை புயல்கடாஅங் காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய்க் – கூற்றுங் குறியெதிர்ப்பைக் கொள்ளும் தகைமைத்தே யெங்கோன் எறிகதிர்வேல் மாறன் களிறு. - 105 </poem> ::தோற்றம் மலை கடல் ஓசை புயல் கடாஅம் காற்றின் நிமிர்ந்த செலவிற்று ஆய்க் கூற்றும் குறியெதிர்ப்பைக் கொள்ளும் தகைமைத்தே எங்கோன் எறி கதிர் வேல் மாறன் களிறு. ::எம் தலைவன் ஒளி வீசும் வேலை உடைய மாறன், அவன் களிறு தோற்றத்தில் மலை போன்றது. ஓசை புயல்மழையின் இடி முழக்கம் போன்றது. ஒழுகும் மதமும் புயல்மழை ஒழுகுவது போன்றது. அது காற்றைப்போல நிமிர்ந்து செல்லும். கொல்லும் திறத்தைக் கூற்றுவனும் கடன் வாங்கிக்கொள்ளும் திறம் படைத்தது. ==பாண்டியன் 106-110== ===106=== <poem>அடுமதில் பாய அழிந்ததன் கோட்டைப் பிடிமுன் பழகழிதல் நாணி – முடியுடை மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்வேல் தென்னவர் கோமான் களிறு. – 106</poem> ::அடு மதில் பாய அழிந்த தன் கோட்டைப் பிடி முன்பு அழகு அழிதல் நாணி முடியுடை மன்னர் குடரால் மறைக்குமே செம் கனல் வேல் தென்னவர் கோமான் களிறு. ::பகைவர் கோட்டையை அழித்துப் பாய்ச்சிய தன் கொம்பின் அழகு அழிந்து கிடப்பதைத் தன் பெண்யானைக்குக் காட்ட நாணி மன்னரைக் குத்திய குடரால் தன் கொம்பை மறைத்துக்கொண்டு தென்னவர் கோமான் களிறு வந்து நிற்கும். ===107=== <poem>வெருவரு வெஞ்சமத்து வேலிலங்க வீழ்ந்தார் புருவ முரிவுகண் டஞ்சி – நரிவெரீஇச் சேட்கணித்தாய் நின்றிழைக்குஞ் செம்மற்றே தென்னவன் வாட்கணித்தாய் வீழ்ந்தார் களம். – 107</poem> ::வெரு வரு வெம் சமத்து வேல் இலங்க வீழ்ந்தார் புருவ முரிவு கண்டு அஞ்சி நரி வெரீஇச் சேட்கு அணித்தாய் நின்று இழைக்கும் செம்மற்றே தென்னவன் வாட்கு அணித்தாய் வீழ்ந்தார் களம். ::தென்னவன் வாளுக்கு இரையாகி வேலைத் தாங்கிய கையோடு போர்க்களத்தில் வீழ்ந்து கிடப்பவரின் புருவம் வளந்திருக்கும் சினத்தைக் கண்டு அஞ்சிப் பிணம் தின்னும் நரி வெருண்டு ஓடி அண்மைய தொலைவில் நின்று பார்த்துக்கொண்டே இருக்கும். இது போர்க்களக் காட்சியின் பயங்கரத் தோற்றம். ===108=== <poem>ஏனைய பெண்டிர் எரிமூழ்கக் கண்டுதன் தானையாற் கண்புதைத்தான் தார்வழுதி – யானையும் புல்லார் பிடிபுலம்பத் தன்கண் புதைத்தே பல்யானை அட்ட களத்து. – 108</poem> ::ஏனைய பெண்டிர் எரி மூழ்கக் கண்டு தன் தானையால் கண் புதைத்தான் தார் வழுதி யானையும் புல்லார் பிடி புலம்பத் தன் கண் புதைத்தே பல் யானை அட்ட களத்து. ::வழுதி போர்க்களத்தில் பகைவரை அழித்தான். கணவன் மாண்டது கண்டு அவன் பெண்டிர் தீயில் விழுந்து உயிர் விட்டனர். வழுதி அதனைப் பார்க்க முடியாதவனாய் இரக்கம் கொண்டு தன் மேலாடையால் தன் கண்களை மூடிக்கொண்டான். பகைவரின் களிறுகள் மாண்டுபோகவே அவற்றின் பெண்யானைகளும் புலம்பின. அதனைக் கண்ட வழுதியின் களிறும் தன் கண்களைத் தன் கைகளால் மூடிக்கொண்டது. ===109=== <poem>வாகை வனமாலை சூடி அரசுறையும் ஓகை உயர்மாடத் துள்ளிருந்து – கூகை படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே தென்னன் விடுமாற்றங் கொள்ளாதார் நாடு. – 109</poem> ::வாகை வன மாலை சூடி அரசு உறையும் ஓகை உயர் மாடத்து உள் இருந்து கூகை படு பேய்க்குப் பாட்டு அயரும் பண்பிற்றே தென்னன் விடு மாற்றம் கொள்ளாதார் நாடு. ::தென்னன் ஆணையை ஏற்றுக்கொள்ளாத பகைவர் பிறரை வென்ற மாலையை அழகுடன் சூடிக்கொண்டு உவகையுடன் (ஓகை) இருப்பர். எனினும் கூகை அவர்களது மாடத்துக்குள்ளே இருந்துகொண்டு அவர்கள் சாவப்போவதைப் பாட்டாகப் பாடும். பேய்களை அழைத்துப் பாட்டுப் பாடும். இது தென்னன் அழிக்கப்போகும் அறிகுறிப் பாட்டு. ===110=== <poem>பறைநிறை கொல்யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த் திறைமுறையின் உய்யாதார் தேயம் – முறைமுறையின் ஆன்போய் அரிவையர் போய் ஆடவர்போய் ஆயிற்றே ஈன்பேய் உறையும் இடம். – 110</poem> ::பறை நிறை கொல் யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த் திறை முறையின் உய்யாதார் தேயம் முறை முறையின் ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே ஈன் பேய் உறையும் இடம். ::பஞ்சவர் என்னும் பாண்டியர்க்குத் தோழனாகித் திறை தந்து பிழைத்துக்கொள்ளாதவர் தேசமானது ஆனிரைகள், மகளிர், ஆடவர் ஆகியோர் விட்டுவிட்டுச் சென்றதால் பிணம் தின்னும் பேய் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு வாழும் இடமாக மாறிவிட்டது. ==பாண்டியன் 111-115== ===111=== <poem>கொடித்தலைத்தார்த் தென்னவன் தோற்றான்போல் நின்றான் மடித்தவாய் சுட்டிய கையாற் – பிடித்தவேற் கண்ணேரா ஓச்சிக் களிறணையாக் கண்படுத்த மண்ணேரா மன்னரைக் கண்டு. – 111</poem> ::தொடித் தலைத் தார்த் தென்னவன் தோற்றான் போல் நின்றான் மடித்த வாய் சுட்டிய கையால் பிடித்த வேல் கண் நேரா ஓச்சிக் களிறு அணையாக் கண் படுத்த மண் நேரா மன்னரைக் கண்டு. ::தன் தாயக மண்ணை நினைத்து வேலைக் கையிலே தாங்கி வந்து கண்ணோட்டம் இல்லாமல் பாய்ச்சினான் அந்த வீரன். அவன் தன் களிறு மாண்டுகிடக்கும் மெத்தையில் கண்ணுறக்கம் கொண்டிருக்கிறான். சினம் கொண்டு மடித்த வாயோடு கிடக்கிறான். தன் கையால் தென்னவனைச் சுட்டிக்கொண்டு கிடக்கிறான். அதனைப் பார்த்துத் தென்னவன் தோற்றவன் போல் நின்றான். இப்படிப்பட்ட வீரனைக் கண்டு இரக்கப்பட்டு நின்றான். ===112=== பாடல் 112 <poem>தொழில்தேற்றாப் பாலகனை முன்னேறீஇப் பின்னின் அழலிலைவேல் காய்த்தினார் பெண்டிர் – கழலடைந்து மண்ணீத்த லென்ப வயங்குதார் மாமாறன் கண்ணீத்தந் தீர்க்கு மருந்து. – 112</poem> ::தொழில் தேற்றாப் பாலகனை முன்னேறீஇப் பின்னின் அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து மண் ஈத்தல் என்ப வயங்கு தார் மா மாறன் கண் நீத்தம் தீர்க்கும் மருந்து. ::பெண்டிர் தம் போர்த்தொழில் பயிலாத பாலகனை முன்னே நிறுத்தி, மின்னும் வேலைக் கையிலே கொடுத்து, தாம் பின்னே நின்றுகொண்டு, அவனுக்கு தெம்புச்சூடு ஏற்றிப் போருக்கு அனுப்புவர். மாறன் இத்தகைய தாய்மாரின் காலைத் தொட்டு வணங்கி, தான் வென்ற நாட்டை அவளுக்குத் தருவான். இது மகனை இழந்த அந்தத் தாயின் கண்ணீர் வெள்ளத்தைத் தீர்க்கும் மருந்து. ===113=== <poem>சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறுந்துணையும் நின்றதுகொல் நேர்மருங்கில் கையூன்றி – முன்றில் முழங்கும் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்(கு) உழந்துபின் சென்றவென் நெஞ்சு. 113 </poem> ::சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறும் துணையும் நின்றதுகொல் நேர் மருங்கில் கையூன்றி முன்றில் முழங்கும் கடா யானை மொய்ம் மலர்த்தார் மாறற்(கு) உழந்து பின் சென்ற என் நெஞ்சு. ::மாறன், முழங்கும் யானைக்கடாவின்மீது வருபவன். மலர்மாலையை அணிந்திருப்பவன். அவன் பின்னே என் நெஞ்சு சென்றது. அது இப்போது அவனிடம் சென்றுவிட்டதா? அவன் நெஞ்சில் புகுந்துவிட்டதா? அவனைப் பார்ப்பதற்கு அனுமதி வெறுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறதா? அவனுக்கு நேராகப் பக்கத்தில் தன் கையை ஊன்றி நின்றுகொண்டிருக்கிறதா? இல்லை முற்றத்திலேயே இருக்கிறதா? ஒன்றும் தெரியவில்லையே! ===114=== <poem>உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக் கழுதை செவிஅரிந்து அற்றால் – வழுதியைக் கண்டநம் கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள் கொண்டன மன்னோ பசப்பு. 114</poem> ::உழுத உழுத்தம் செய் ஊர்க் கன்று மேயக் கழுதை செவி அரிந்து அற்றால் வழுதியைக் கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத் தோள் கொண்டன மன்னோ பசப்பு. ::உழுது விதைத்து விளைந்த உழுந்து வயலில் புகுந்து ஊராரின் கன்றுக்குட்டி மேய்ந்துவிட்டது. அதற்குத் தண்டனை வழங்கியவர்கள் கழுதையின் காதை அறுத்துவிட்டனர். இது எப்படி நீதி ஆகும்? அது போலத்தான் இங்கும் நடக்கிறது. வழுதியைக் கண்டதோ என் கண். அதற்குத் தண்டனையாக என் தோளில் அல்லவா பசப்பு-நோய் ஏறுகிறது. இது அடுக்குமா? ===115=== <poem>நறுவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா மறவேந்தன் வஞ்சியான் அல்லன் – துறையின் விலங்காமை நின்று வியன்தமிழ்நா டைந்தின் குலங்காவல் கொண்டொழுகும் கோ. - 115</poem> ::நறு வேந்து கோதை நலம் கவர்ந்து நல்கா மறவேந்தன் வஞ்சியான் அல்லன் துறையின் விலங்காமை நின்று வியன் தமிழ்நாடு ஐந்தின் குலம் காவல் கொண்டு ஒழுகும் கோ. ::தமிழ்நாடு ஐந்து பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. அவற்றை வெவ்வேறு குலத்தவர் ஆண்டுவந்தனர். இந்த ஐந்து குலத்தவரையும் காக்கும் பொறுப்பினை மேற்கொண்டிருந்த கோமகன் பாண்டியன். அவன் தமிழ்நாடன். அவன் நல்ல வேந்தன். கோதைமாலை அணிந்தவன். என் நலத்தையெல்லாம் கவர்ந்துகொண்டவன். கவர்ந்துகொண்டு திரும்பத் தராதவன். மறம் நிறைந்த கொடுங்கோலன். அவன் வஞ்சியரசன் சேரன் அல்லன். எனக்கு வஞ்சனை செய்யாமல் இருப்பவனும் அல்லன். என்ன செய்வது? அவன்தான் என் கோமகன். ::5 பிரிவு – சேரர், சோழர், பாண்டியர், கொங்கர், தொண்டையர் ==முன் தொகுப்பு (உரைக்காக)== பாடல் 1 :செங்கால் மடநாராய்! தென்உறந்தை சேறியேல், :நின்கால்மேல் வைப்பன்என் கையிரண்டும் - வன்பால் :கரைஉரிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற்(கு), :உரையாயோ யான்உற்ற நோய். (''அழகிய நாரையே, தெற்கேயுள்ள உறையூருக்குச் செல்வாயானால், உன் காலைப் பிடித்துக் கும்பிடத் தயார். தேகத்தின் வலிமை காரணமாகக் கரையின் மேல் உராய்ந்து, உராய்ந்து ஏறிய மீனானது மறுபடியும் நீரில் விழுந்து விடுகிற மீனின் தேகக்கொழுப்பு சோழனுக்கு யான் உற்ற காதல் கூறுவாயாக!'') (சேரன் குறிப்பு: ‘மீன்கள் கரையின் மீது துள்ளிவிழுந்து விளையாடுகின்ற காவிரிநாடனுக்கு- சோழனுக்கு - மையலால் யானடைந்துள்ள துன்பத்தைக் கூறுவாயாக.) (‘கரையேறி மீன் விளையாடும் காவிரிநாடு’ என்பது இவ்வடியின் மீளாக்கமே.) ;பாடல் 2 :துடியடி, தோல்செவி தூங்குகை, நால்வாய்ப் :பிடியே! யான் நின்னை இரப்பல், கடிகமழ்தார்ச் :சேலேக வண்ணனொடு சேரி புகுதலும்எம்் :சாலேகம் சார நட. (''கெஞ்சி கேட்டுக்கொள்ளுகிறேன். வாசனை கமழும் மாலை சூடிய,சந்தனம் பூசிய பாண்டியனோடு, ஊருக்குள் பிரவேசிக்கவும் அதாவது,நீராடிவிட்டு உன்மேல் ஏறி ஊருக்குள் மன்னன் புகும் போது, எங்கள் வீட்டு ஜன்னலை ஒட்டி நடந்து வரவேண்டும்.'') ;பாடல் 3 :குடத்து விளக்கே போல் கொம்பன்னார் காமம் :புறப்படா; பூந்தார் வழுதி - புறப்படில், :ஆபுகு மாலை அணிமலையில் தீயே போல் :நாடறி கெளவை தரும். (''பாண்டியன் மேல் பெண்கள் வைத்த காதல் வெளியே தெரியாது. மாலை சூடிய பாண்டியன் பவனி வருவதற்காகப் புறப்பட்டு விட்டாலோ பசுக்கள் மேய்ச்சல் புலங்களிலிருந்து ஊரு்க்குள் புகும் மாலை நேரத்தில் ஊருக்குப் பக்கத்தில் உள்ள மலைச்சரிவில், நாட்டார் எல்லோரும் அந்த பெண்களது காதல் நோயைத் தெரிந்து, வம்பளப்பதற்கு வாய்விடும்'') ;பாடல் 5 :நீரும் நிழலும் போல் நீண்ட அருளுடைய :ஊரிரே ! என்னை உயக்கொண்மின் ! - போரிற்(கு) :உழலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக்(கு) :அழலும்என் நெஞ்சம் கிடந்து. (''காதல் நோயால் என் நெஞ்சு சதா கொதித்த வண்ணமாக இருக்கிறது. ஊரிரே என்னை உயக்கொண்மின்!'') ;பாடல் 6 :போரகத்துப் பாயுமா ! பாயா(து) ஒருபடியா, :ஊரகத்து மெல்ல நடவாயோ ! - பார :மதவெங் களியானை மாறன் தன் மார்பம், - :கதவங்கொண்(டு) யாமும் தொழ (''இந்தக் கவி பெண்ணின் கூற்று என்பது மறைவாய் கிடக்கிறது. மார்பம் தொழ, கதவங்கொண்டு, என்னும் சொற்களை வைத்துத்தான் காதலுற்ற பெண் பேசுகிறாள். இப்படி காதலை மறைவில் வைத்துச் சொல்வதிலிருந்து ஒரு நாண பாவம் இருப்பதைத் தெளிவாக்குகிறது'') ;பாடல் 7 :தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி இளவளவன் :மண்ணகம் காவலனே என்பரால் - மண்ணகம் :காவலனே ஆனக்கால் காவானே மாலைக்கண் :கோவலர்வாய் வைத்த குழல் (''தெளிந்த நீர்நிலைகளில் பூத்த செங்கழுநீர் மலர்களை மாலையாய்த் தொடுத்து அணிந்த சென்னி என்றும் இளவளவன் என்றும் பாராட்டப்படுகிற சோழன் உலகத்தைக் காக்கிறான் என்று சொல்லுகிறார்கள். கட்டளை இட்டுத் தடுக்க மாட்டானா இந்த மாலைப்பொழுது வந்துவிட்டதை அறிவிக்கும் வாய்வைத்து ஊதுகின்ற புல்லாங்குழலை'') [[பகுப்பு:சங்க இலக்கியம்]] [[பகுப்பு :பழந்தமிழ் இலக்கியங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]] rcza43vxwf0tk9j9ln4rvhl65qekqew பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/38 250 129935 1834678 1834545 2025-06-23T13:19:05Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834678 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|36||பாரதிக்குப் பின்}}</noinclude>பெற்றோர், அவளை மணம் முடித்து வைக்கிறார்கள். பெண்ணின் தந்தை, பாங்குமுறிவு காரணமாக ஒரே நாளில் எழையாகி விடுகிறார். உடனே பையனின் பெற்றோர் பெண் வீட்டாரைப் புறக்கணிக்கிறார்கள்; நாகராஜனுக்கு வேறொரு இடத்தில் பெண் பார்த்துத் திருமணம் செய்யத் தீர்மானிக்கிறார்கள். நாகராஜன் கைவீடமாட்டான் என்று நம்பியிருந்த ருக்மணி ஏமாற்றம் அடைகிறாள். தனது உண்மையான திட்டத்தை அவளிடம் தெரிவிக்க அவன் விரும்பவில்லை. அதனால். ருக்மணி தற்கொலை செய்து கொள்கிறாள். விரக்தியுற்ற நாகராஜன் சன்னியாசியாகிறான். ஆனால், கதை சொல்லும் உத்தி புதியது; அவ்வழியில் ஐயர் அதை எழுதிய முறையும் புதிது. ருக்மணி கதையைக் குளத்தங்கரை அரச மரம் கூறுவது போல் கதை அமைந்துள்ளது. அனுபவம் முதிர்ந்த ஒரு முதியவள் பேசுவது போலவே ஐயர் அதை எழுதியிருக்கிறார். கதையின் நடையைக் குறித்து அவர் இவ்வாறு அறிவிக்கிறார்: “கடைசிக் கதையானது எங்கள் ஊர் குளத்தங்கரை அரச மரத்தால் சொல்லப்பட்டது. அது நன்னூல் முதலிய இலக்கணங்கள் படித்ததில்லை. கிட்டத்தட்ட அது பேசியபடியே எழுதியிருக்கிறேனாதலால் படிப்போர் அக்கதையில் செந்தமிழை எதிர்பார்க்க மாட்டார்கள் என நம்புகிறேன். இருப்பினும், முற்றிலும் அது பேசியபடியே எழுதினால் இன்று, போதும் என்பன போன்ற வார்த்தைகளை இன்னு, போறும் என்று எழுத வேண்டி வரும்; படிப்போர் பொருள் கண்டு பிடிப்பது கஷ்டமாய்ப் போய்விடும் என நினைத்து அவை போன்ற மொழிகளை இலக்கணப்படுத்தியே எழுதியிருக்கிறேன்.” “குளத்தங்கரை அரசமரம்” கதையின் ஆரம்பமே எடுப்பாக அமைந்து, மேலே மேலே படித்துச் செல்லத் தூண்டுவதாக இருக்கிறது.{{nop}}<noinclude></noinclude> m4wmb0y1ac7ho93w9856r0tinq0u4hx பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/39 250 129939 1834686 816778 2025-06-23T13:32:48Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834686 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||37}}</noinclude>“பார்க்கப் போனால் நான் மரந்தான். ஆனால் என் மனசிலுள்ளதை யெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுசுக்குள் கண்ணாலே எத்தனை பார்த்திருக்கிறேன்! காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன்! உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். சிரிக்கிறீர்கள். ஆனால் நான் சொல்லுகிறதிலே எள்ளளவேனும் பொய்யில்லை. நான் பழைய நாளத்து மரம்—பொய் சொல்லக் கத்ததில்லை.” இப்படி ஆரம்பித்து, அங்கே விளையாட வருகிற குழந்தைகளைப் பற்றிச்சொல்லி, ருக்மணியை வர்ணிப்பது ரசமாக அமைந்துள்ளது. ருக்மணியும் நாகராஜனும் கடைசி முறையாகச் சந்தித்துப் பேசியதை மரம் நினைவுகூர்வதாக எழுதியுள்ள இடம் ஐயரின் ஆற்றலுக்குச் சிறந்த உதாரணமாக அமையம். ‘குளத்தங்கரை அரச மரம்’ கதை நண்பர்கள் படித்து ரசிக்கவேண்டிய ஒரு படைப்பு ஆகும். இந்தியாவின் சரித்திர காலப் பெருமையைத் தமிழ்நாட்டினருக்கு அறிவிப்பதற்காகவும், மக்களுக்கு தேசபக்தியை ஊட்டுவதற்காகவும். ஐயர் ‘சந்திரகுப்தன் சரித்திரம்’ எழுதினார். ஆகவே, கர்மவீரராக விளங்கிய வ.வெ.சு. ஐயரின் எழுத்துலக சாதனைகளும் பெரியனதான்.{{nop}}<noinclude></noinclude> eobxgolxzuedb3n0gktciu0c48rbb9j பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/40 250 129943 1834692 816780 2025-06-23T13:52:15Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834692 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>5. வ. ரா.</b>}}}} {{larger|<b>பா</b>}}ரதியின் பக்தர் வ.ரா. புதுச்சேரியில் சில வருஷங்கள் தங்கி, பாரதி, அரவிந்தர், வ.வெ.சு. ஐயர் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் அவர் வ. ராமஸ்வாமி என்பது அவர் முழுப்பெயர். ஆனால், வ.ரா, என்ற முதல் எழுத்துக்கள் மூலமே அவர் தன்கு அறிமுகமாகியிருந்தார். ‘பாரதிக்குப் பின் மணிக்கொடி காலம் ஒரு இலக்கிய காலகட்டம், அதுக்கு காரணமாக இருந்தவர் வ.ரா. பாரதியின் மறைவால் ஏற்பட்ட இடைவெளியை இட்டு திரப்பி ஒரு தொடர்ச்சி கொடுத்த, தமிழ் நாட்டில் ஆழ்ந்த கருத்துக்களோடு எழுதிய முதல் தரமான எழுத்தாளர் வ. ரா.’ இப்படி சி. சு. செல்லப்பா அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ‘எழுத்தாளர்களின் முதல்வர்’ என்றும், ‘எழுத்தாளர் தலைவர்’ என்றும், அவர் காலத்தில் வ.ரா. வை ‘மணிக்கொடி எழுத்தானர்கள்’ குறிப்பிடுவது வழக்கம். பாரதியாரின் தேச பக்தியும், சமுக சீர்திருத்த வேகமும் வ.ரா. விடம் அதிகமாகக் காணப்பட்டன. நம் நாட்டின் இழிநிலைகண்டு குமைந்து குமுறிய உள்ளம் அவருடையது. நம் நாட்டினரின் வீழ்ச்சியையும் பலவீனங்களையும் கண்டு, பாரதியைப் போலவே, ஆவரும் கொதிப்படைந்தார்.<noinclude></noinclude> 4m7xnvu5lssk4lw8kr7v5vmbbhz7n1i பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/41 250 129948 1834694 816781 2025-06-23T14:08:18Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834694 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|||39}}</noinclude>முன்னோர் பெருமை பேசிக் கொண்டு, சோம்பெறிகளாக மக்கள் வசிப்பதை அவர் வெறுத்தார். மூடப் பழக்க வழக்கங்களை, அர்த்தமற்ற நம்பிக்கைகளை, வீணான செயல்களை வெறும் பேச்சுக்களை எல்லாம் அவர் கண்டித்து எழுதி வந்தார், எழுதியதை விட அதிகமாகப் பேசிக்கொண்டிருந்தார். பேச்சு என்றால், மேடைப் பேச்சு அல்ல. நண்பர்களிடம், தெரிந்தவர்கள் மத்தியில், சிறு கூட்டத்தில், அவரைப் பார்க்க வருகிறவர்களிடம் எல்லாம், எப்போதும் தனது கருத்துக்களை எடுத்துச் சொன்னார் வ.ரா. அவர் சிறந்த சிந்தனையாளர், மற்றவர்களும், தமிழர்கள் அனைவருமே, ஆழ்ந்து சிந்தித்து, வாழ்வின் உயர்வுக்காக உழைக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ‘ஜாதி என்ற சிறிய உணர்ச்சி தொலைய வேண்டும். என்னுடையது என்ற சின்ன புத்தி போய் நம்முடையது என்ற பெரிய புத்தி வரவேண்டும். மனிதன் என்ற பெருமை, சதா மார்பில் துடித்துக் கொண்டிருக்க வேண்டும். நியாயம் என்ற துடிப்பிலே நாம் எல்லோரும் மிதக்க வேண்டும். சோர்வு என்பதை கனவிலும் காணலாகாது. எல்லோருடனும் ஒட்டி வாழும் அருங்குணங்களை பயின்று பழகிக் கொள்ள வேண்டும்,’ இவை வ.ரா.வின் கொள்கைகள். ‘எந்த விஷயம் எழுதினாலும் சரி. வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது’ என்று பாரதியார் வசன நடைக்கு வகுத்த இலக்கணத்தை வ.ரா. அப்படியே பின்பற்றினார். ஆகவே, அவருடைய கட்டுரைகளும் கதைகளும் அவரே நம்முன் இருந்து நேரே பேசுவது போல் அமைந்துள்ளன. ஒரு உதாரணம், பாருங்கள்—{{nop}}<noinclude></noinclude> qpip1vq2q41bsy5ll7grrtaw0f6r2lq பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/42 250 129951 1834715 816782 2025-06-23T14:30:09Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834715 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|40||பாரதிக்குப் பின்}}</noinclude>நம்மவர்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பும் ருசியும் இல்லை என்பது உலகப் பிரசித்தமான விஷயம். நம்மவர்களுக்கு ஆச்சரியமான பரலோகப்பார்வை இருக்கிறது என்று நம்மைத் தட்டிக் கொடுத்துவிட்டு, அன்னியர்கள் யாவரும் நம்மிடம் தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொண்டு விடுகிறார்கள். பொன் போட்டால் பொன் விளையக்கூடிய மண்ணைச் செல்வமாகக் கொண்டது இந்த நாடு. அப்பேர்ப்பட்ட நாட்டிலே உணவுப் பஞ்சம் ஏற்பட்டது என்றால், அது மக்களின் முட்டாள்தனத்தைத் தானே தெளிவாகக் குறிப்பிட முடியும்? நம்மவர்கள் ஏன் யோசிக்கும் திறமையை இழந்தார்கள்? இப்பொழுதிருக்கும் தலைமுறையில் இந்தியர்கள் நன்றாக யோசிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், குருவியின் தலையில் பனங்காயைச் சுமத்தினது போல, சிக்கலான பிரச்சினைக்கு மேல் சிக்கலான பிரச்சினைகள் வந்து குவிந்து கவிந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் யார்? நமது முதாதைகள். நாகரிகப் பண்பு சிறிதும் இல்லாத தீண்டாமைக்குக் காரணம் யார்? நமது மூதாதைகள், கசப்பையும் கலவரத்தையும் திகைப்பையும் திண்டாட்டத்தையும் உண்டாக்கி வரும் ஜாதி வேற்றுமைகளுக்கு நீங்களும் நானுமா காரணம்? நமது மூதாதைகள் தான். இல்வாழ்க்கயை, இன்பமே இல்லாத வாழ்க்கையாகச் செய்தது நானா, நீங்களா? நாமல்ல, நமது பெருமை தாங்கிய மூதாதைகள் தான். வாழ்க்கையில் வெறுப்பையும் பயத்தையும் உண்டாக்கியவர்கள் யார்? மண்ணாசை கூடாது என்று சொன்னவன் நானா? பெண் ஆசை கூடாது என்று கொன்னவன் நானா? பெண் ஆசை கூடாது என்று உபதேசம் செய்து, ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே மனக்கசப்பை உண்டாக்கியது யார்? நானா? பொன்னாசை கூடவே கூடாது என்று சொல்லி பணத்தைப் பேய் என்று<noinclude></noinclude> ln45w6p4kcqdwckoiueaj3y4qrmhbk1 1834718 1834715 2025-06-23T14:33:12Z Sridevi Jayakumar 15329 1834718 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|40||பாரதிக்குப் பின்}}</noinclude>‘நம்மவர்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பும் ருசியும் இல்லை என்பது உலகப் பிரசித்தமான விஷயம். நம்மவர்களுக்கு ஆச்சரியமான பரலோகப்பார்வை இருக்கிறது என்று நம்மைத் தட்டிக் கொடுத்துவிட்டு, அன்னியர்கள் யாவரும் நம்மிடம் தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொண்டு விடுகிறார்கள். பொன் போட்டால் பொன் விளையக்கூடிய மண்ணைச் செல்வமாகக் கொண்டது இந்த நாடு. அப்பேர்ப்பட்ட நாட்டிலே உணவுப் பஞ்சம் ஏற்பட்டது என்றால், அது மக்களின் முட்டாள்தனத்தைத் தானே தெளிவாகக் குறிப்பிட முடியும்? நம்மவர்கள் ஏன் யோசிக்கும் திறமையை இழந்தார்கள்? இப்பொழுதிருக்கும் தலைமுறையில் இந்தியர்கள் நன்றாக யோசிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், குருவியின் தலையில் பனங்காயைச் சுமத்தினது போல, சிக்கலான பிரச்சினைக்கு மேல் சிக்கலான பிரச்சினைகள் வந்து குவிந்து கவிந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் யார்? நமது முதாதைகள். நாகரிகப் பண்பு சிறிதும் இல்லாத தீண்டாமைக்குக் காரணம் யார்? நமது மூதாதைகள், கசப்பையும் கலவரத்தையும் திகைப்பையும் திண்டாட்டத்தையும் உண்டாக்கி வரும் ஜாதி வேற்றுமைகளுக்கு நீங்களும் நானுமா காரணம்? நமது மூதாதைகள் தான். இல்வாழ்க்கயை, இன்பமே இல்லாத வாழ்க்கையாகச் செய்தது நானா, நீங்களா? நாமல்ல, நமது பெருமை தாங்கிய மூதாதைகள் தான். வாழ்க்கையில் வெறுப்பையும் பயத்தையும் உண்டாக்கியவர்கள் யார்? மண்ணாசை கூடாது என்று சொன்னவன் நானா? பெண் ஆசை கூடாது என்று கொன்னவன் நானா? பெண் ஆசை கூடாது என்று உபதேசம் செய்து, ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே மனக்கசப்பை உண்டாக்கியது யார்? நானா? பொன்னாசை கூடவே கூடாது என்று சொல்லி பணத்தைப் பேய் என்று<noinclude></noinclude> sgvcwoaftm7eosrh7py8dk4q1zq0kpz பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/43 250 129955 1834727 816783 2025-06-23T14:50:39Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834727 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||41}}</noinclude>வர்ணித்து, நமது நாட்டார்களைத் தரித்திர நாராயணர்களாகச் செய்தது நான?” (இதுதான் வாழ்க்கையா? கட்டுரை); வ.ரா வின் நடைகுறித்து சி.சு.செல்லப்பா அழகாக எழுதியிருக்கிறார்: ‘வ.ரா.வின் கட்டுரைகள் ஒரு புது உருவவார்ப்பானவை. ஆர்ப்பாட்ட பீடிகை போட்டு என்கோ ஆரம்பித்து, எப்படியோ போய் எதிலோ முடிகிற மாதிரி இருக்காது. எடுப்பிலேயே கியாலப் மாதிரி எகிறும். நேரடியாக, விவகாரமாக அடிப்படை விஷயத்தைத் தொட்டு அதன் மேலேயே விவகாரம் வளரும். பேசுகிற மாதிரி நடை. நம்மோடு பேசும். வ.ரா. சம்பாஷணையில் திறமைசாலி. அந்த சம்பாஷணை நடைதான் எழுத்திலும், குறுகின சொல் அளவுக்குள்ளே நீண்ட கருத்து யாத்திரை செய்து முடித்த அனுபவத்தை உணர வைக்கும் அவர் எழுத்துக்கள். படித்த மனதிலே எதிரொலி கிளப்பிக் கொண்டே இருக்கும். தான் சிந்தித்ததோடு கேட்பவனையும் சிந்திக்கத் தூண்டும் ஒரு வேகம் அந்தக் கட்டுரைக் கோப்பிலே, நடையிலே காணலாம்.’ கருத்துகளையும் சிந்தனைகளையும் வலியுறுத்துவதற்காகவே எ.ரா.கதைகளும் நாவல்களும் எழுதினார். எனவே அவை வ.ரா. வீன் சொற்பொழிவுகளாகவே விளங்குகின்றன. பாரதியிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர், பாரதியை ‘மகாகவி’ என்று நிரூபிப்பதற்கு அரும்பாடுபட்டார். அதுவரை பாரதியாரை வெறும் தேசியக் கவி என்றும், வேதாந்தக் கவி என்றுமே பலரும் குறிப்பிட்டு வந்தனர். பாரதியை தேசீயம் என்கிற குறுகிய எல்லைக் குள்ளும், வேதாந்தச் கிமிழுக்குள்ளும் அடைத்து வைப்பது தவறு, பாரதி உண்மையில் உலக மகாகவி என்று கட்சி கட்டி வாதாடினார் வ. ரா. பாரதிக்கு மகாகவி அந்தஸ்து கிட்டும்படி செய்தார்.{{nop}}<noinclude>{{rh|பா—3||}}</noinclude> fwz4rpibukjvle4ovawa0t2q6agtzt4 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/44 250 129959 1834743 816784 2025-06-23T15:06:42Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834743 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|42||பாரதிக்குப் பின்}}</noinclude>‘மகாகவி பாரதியார்’ என்று வ.ரா. எழுதியுள்ள வாழ்க்கை வரவாறு ரொம்ப சுவாரஸ்யமானது. பாரதியைப் பற்றி எவ்வளலோ விஷயங்களை அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். வ.ரா வின் வர்ணனைத் திறமையும், மனித குணங்களை சித்திர்க்கும் ஆற்றலும் இந்த வரலாற்றில் நன்கு புலனாகின்றன. அவரது உரைநடையும் தனி அழகுடன் ஒளிர்கிறது. ‘பாரதி உயரத்தில் பெரியவர், அரவிந்தர் உருவத்தில் சிறியவர். பாரதியார் ஹங்கோசி, அரவிந்தரும் ஸங்கோகி தான். பாரதியாரின் சொற்கள் முல்லை மலரின் தாக்கும் மணம் கொண்டவை. அரவிந்தரின் சொற்கள் செந்தாமரை மலரின் பரந்து விரிந்த அழகைத் தாங்கியவை. இருவருக்கும் புதிய புதிய கருத்துக்களும் சித்திரச் சொற்களும் திடீர்திடீரென்று புதைவாணங்களைப் போலத் தோன்றும். பாரதியார் ஆகாயத்தில் ஓடுவதை எட்டிப் பிடித்ததாகச் சொற்களைப் பொழிவார். அரவிந்தர், பூமியைத் தொளைத்துத் தோண்டி, பொக்கிஷத்தைக் கொணர்ந்ததாகப் பேசுவார். இருவர் சொற்களிலும் கவிச்சுவை நிறைந்திருக்கும். பாரதியாரைப் போலவே, அரவிந்தரும் கலகலவென்று விடாமல் சிரிப்பார்’ இது ஒரு உதாரணம். பாரதியின் சிரிப்பை வ.ரா. வெகுவாக அனுபவித்து, வியந்து எழுதியிருக்கிறார். அந்த வரிகள் ரசமானவை: பாரதியாரின் சிரிப்பு, சங்கீதத்தில் ரவை புரளுவது போன்ற சிரிப்பு. அதிர் வேட்டைப் போல படீர் என்று வெடிக்கும் சிரிப்பல்ல. அமர்ந்த சிரிப்பல்ல. வஞ்சகத்தை உள்ளே வைத்துக் கொண்டு, வாயை மட்டும் திறந்து, பல்லைக் காட்டி, சிரிப்பைப் பழிக்கும் சிரிப்பல்ல புன்னகையைப் புஸ்தகத்திலே படிக்கலாம். ஆனால்<noinclude></noinclude> qpfuio9j7myut2exno72zbsclspqsky பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/45 250 129963 1834755 816785 2025-06-23T15:19:28Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834755 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||43}}</noinclude>பாரதியாரிடம் புன்சிரிப்பைப் பார்க்க முடியாது. சங்கீதச் சிரிப்பைத்தான் காணமுடியும்.” வ.ரா. என்றவுடன் ‘நடைச் சித்திரம்’ என்ற சொல்லும் தமிழ் இலக்கிய ரசிகர்களின் நினைவில் இயல்பாகவே எழும். அவ்வளவுக்கு நடைச் சித்திரம் என்ற இலக்கிய வடிவத்தைப் பிரபலப்படுத்தியவர் அவர், அதை தமிழில் புதிய உருவமாகப் படைத்து, தனக்கென்று ஒரு தனிப்பாணியில் வளர்த்த பெருமை அவருக்கு உண்டு. அதன் தோற்றம் பற்றி வ.ரா. இவ்வாறு எழுதியிருக்கிறார்: ‘தமிழ் இலக்கியத்தில், நடைச்சித்திரம் என்பது புதிய சரக்கு, மோரிசுக் கடலை நாட்டுக் கடலையை வெருட்டி விட்டு, வேரூன்றிப் போனகதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது போலவே, நடைச் சித்திரம் என்பது வேற்று நாட்டு இலக்கியத்தின் சிறந்த ஆபரணமாயிருந்தும், நமது தமிழ் நாட்டிலும் எப்படியோ நிலைத்து விட்டது. நான் நடைச்கித்திரத்தைத் துவக்கின வரலாறு விசித்திரமானது. நடைச்சித்திரம் தமிழில் எழுத வேண்டும் என்று எனக்கு ஆவல் உண்டானது ஏ. ஜி கார்டினர் அவர்களாலே. இங்கிலீஷில் தடைச் சித்திரம் எழுதுவதில் அவர் நிபுணர். இந்தச் சரக்கை தமிழிலும் ஏன் கொண்டுவரக் கூடாது என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன். கண்டிப்பாய் செய்ய வேண்டிய காரியம் என்று என் மனதிலிருந்து எனக்கு. பதில் கிடைத்தது.’ ஆகவே, அவர் ‘மணிக்கொடி’ வாரப் பத்திரிகைக்காக வாரம் ஒரு நடைச் சித்திரம் எழுதினார். குழந்தை ராமு, மைக்குறத்தி, தாசில் அன்னதான மய்யர், கந்திராட்டு குண்டுப்பிள்ளை, வாத்தியார் நாணுவய்யர், அங்காடிக் கடை லட்சுமி, மார்க்கட்டு மாணிக்கம், குப்பிப் பாட்டி, சமையல் சாமா, மைனர் துரைக்கண்ணு, தாலுகா குமாஸ்தா, ஹோட்டல் மணி,<noinclude></noinclude> 8tmwzwoqqba63hhxcib37xx98mb6loi பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/22 250 422403 1834736 1830822 2025-06-23T14:59:14Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1834736 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|14|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>அல்லாத ‘நிரந்தரமான உண்மைகளை’ப் பாடிய கண்ணன் பாட்டிலும் கூட, அதாவது கல்கியும் பி.ஸ்ரீ.யும் சிறந்த கவிதைப் படைப்புக்கள் என ஒப்புக் கொள்ளக் கூடிய அந்தப் பாட்டிலுங் கூட, :ஏழைகளைத் தோழமை கொள்வான் - செல்வம் ::ஏறியவர் தமைக்கண்டு சீறி விழுவான் — :மேலவர் கீழவர் என்றே - வெறும் ::வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம் :போலிச் சுவடியை யெல்லாம் - இன்று ::பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான் {{Right|(கண்ணன் - என் தந்தை)}} என்று பாரதி அரசியலையும் சேர்த்தே பாடியிருந்தான் என்பது அவர்கள் கண்ணுக்குப் புலப்படவும் இல்லை; அவர்கள் இதனைச் சுட்டிக் காட்டவும் இல்லை. மொத்தத்தில் இந்த விவாதமே பாரதியின் கருத்து நிலை பற்றிய விவாதமாக இல்லாமல், பாரதியின் உவமை, கற்பனை முதலியவை பற்றிய - அதாவது உருவ வாதம் பற்றிய - விவாதமாகவே மாறி விட்டது. என்றாலும், இதே காலத்தில், ‘ஆனந்தவிகட’னில் பணியாற்றி வந்த கல்கி, தமது கதைகளைப் பொறுத்த வரையில் ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களைப் போல் உருவவாதியாக மாறிவிடவில்லை. இதனால் கதைகளின் வடிவ அமைப்பிலும், அவற்றை உருவாக்கிக் காட்டும் முறையிலும், ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களைப் போல் கல்கி கைதேர்ந்த கலைஞராக இல்லாவிட்டாலும், அவர் தமது தேசிய உணர்வையும் சமூக உணர்வையும் கைவிட்டு விடவில்லை. இதற்கு அவரது ‘தியாகபூமி’, ‘மகுடபதி’ போன்ற நாவல்களும், ‘கவர்னர் விஜயம்’ போன்ற கதைகளுமே உதாரணம் எனலாம். இதனால் உருவவாதிகளான, ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் பலரையும்விட, உள்ளடக்க விஷயத்தில் கல்கி நமது கவனத்துக்கு உரியவராகிறார் கல்கி மட்டு-<noinclude></noinclude> nan2ii67mxiwqf7eislp3nxxjcez6jg பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/21 250 422404 1834735 1830404 2025-06-23T14:58:14Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1834735 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|13}} {{rule}}</noinclude>முடியும். ‘மணிக்கொடி’யில் வெளிவந்த கதைகளிலும் தேசிய உணர்வினால் எழுந்த நாட்டு மக்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் கதைப்பொருளாக்காமல், பெரும்பாலும் குடும்ப உறவுகள் சம்பந்தப்பட்ட கதைகளையே எழுதினர். மேலும் அவர்கள் கதையின் கருப்பொருளைக் காட்டிலும் அதன் வடிவ அமைப்பிலேயே பெரிதும் கவனம் செலுத்தினார். இதனால் தமிழ்ச் சிறுகதை உலகில் அருமையான வடிவ அமைதி கொண்ட கதைகளை அவர்கள் வழங்கிய போதிலும், சாராம்சத்தில் அவர்களிற் மிகப்பெரும்பாலோர் வெறும் ‘உருவ வாதிக’ளாகவே மிஞ்சி நின்றனர். ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் உருவவாதிகளாகவே மிஞ்சி நின்றனர் என்பது, ‘பாரதி மகாகவியா இல்லையா?’ என்ற ஒரு விவாதத்தை 1935ஆம் ஆண்டில் ‘நெல்லை நேசன்’ என்ற பெயரில் பி.ஸ்ரீ. ஆசார்யாவும், ‘கல்கி’ கிருஷ்ண மூர்த்தியும் தொடங்கி, பாரதி தேசியப் பாடல்களை, அதாவது “நிரந்தரமற்ற மதிப்புக்களைப் பாடிய காரணத்தால் அவன் தேசிய கவியேயன்றி மகாகவியல்ல” என்று வாதிட்டபோது, இதனை எதிர்த்து பாரதி மகாகவிதான் என்று நிலைநாட்டப் புகுந்த ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களான (‘சிட்டி’) பெ.கோ. சுந்தரராஜனும், கு.ப. ராஜகோபாலனும், “தேசிய கீதங்களைப் பாடிய பாவத்துக்காக, பாரதி சந்தேகாஸ்பதமான திதியில் இருந்து வருகிறார்” என்றும், “தேசிய கீதங்களைப் பாடிய பாவம்தான் பாரதியை தேசியக் கவியாக்கி விட்டது” என்று தாமும் எழுதி, பி.ஸ்ரீ. ஆசார்யாவும் கல்கியும் விரித்த வலையிலேயே தாமும் விழுந்துவிட்டனர். அதாவது ஒரு மகாகவி தேசிய கீதங்களைப் பாடுவது என்பது பாவம் தான், தேசியக் கவி என்றால் அது ஒரு மட்டமான தகுதிதான் என்பதை ஏற்றுக்கொண்டு, பாரதி மகாகவிதான் என்பதை நிரூபிக்க பாரதியின் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, முதலியவற்றை மேலை நாட்டுப் பெருங் கவிஞர்களின் படைப்புகளோடு ஒப்பிட்டுக்காட்ட முற்பட்டனர். எனினும் தேசிய கீதங்கள்<noinclude></noinclude> deu9uhc8h5xylf54efsh04ryc2jthw8 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/26 250 422419 1834737 1830831 2025-06-23T15:02:53Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1834737 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|18|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>நடந்த விசாரணைகளைப் பற்றிக் கூறியதோடு, ஆர்தர் கீஸ்லர் அந்த விசாரணையைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதியுள்ள ‘Darkness at Noon’ - நண்பகலில் கும்மிருட்டு - என்ற நாவலைப் படிக்குமாறு செய்தார். மேலும் கம்யூனிசத்துக்கு எதிர்காலமில்லை என்ற கருத்தை வலியுறுத்திய ஜேம்ஸ் பர்ன்ஹாம் எழுதிய Managerial Revolution - நிர்வாகப் புரட்சி - என்ற நூலை அவரே எனக்கு விலைக்கு வாங்கிக் கொடுத்தார். இதன் காரணமாக நான் கம்யூனிச விரோதிகளாக இருந்த அல்லது அவ்வாறு மாறிவிட்ட சில எழுத்தாளர்களின் நூல்களையும் படித்தேன் என்றாலும் நான் எனது கருத்து நிலையிலிருந்து மாறவில்லை. ஆயினும் ஒரு கேள்வி எழுகிறது முப்பதாம் ஆண்டுகள் சிலவற்றில் சோஷலிச வாடை வீசும் கருத்துக்களைப் பிரதிபலித்த புதுமைப்பித்தன், தமது பொறுப்பில் தயாரான ‘தினமணி’ வருட மலரில் தமது நெருங்கிய நண்பராக கே.எஸ். சோணாசலத்தின் சோஷலிசம் பற்றிய கட்டுரையை வெளியிட்ட, புதுமைப்பித்தன் எப்போது கம்யூனிச விரோதியாக மாறினார்? இதற்குக் காரணம் என்ன? ‘மாஸ்கோ விசாரணைகள்’ என்ற பெயரில் 1937இல் ஸ்டாலின் விசாரணைகளை நடத்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் பலரையும் தீர்த்துக்கட்டி ஒரு நர வேட்டையே ஆடிவந்த விவரங்கள் இப்போது நமக்கு நன்றாகத் தெரிய வந்துள்ளன. 1939இல் புதுமைப்பித்தனும், ந. ராமரத்தினமும் சேர்ந்து, ஹிட்லரைப் பற்றி எழுதிய ‘கப்சிப் தர்பார்’ என்ற நூலில் இவ்வாறு எழுதப்பட்டடுள்ளது; “பாலும் தேனும் வழிந்தோடுவதாகச் சித்திரிக்கப்படும் ருஷியாவில் இன்று என்ன ஜனநாயகம் இருக்கிறது? 1917ஆம் வருடத்திய அக்டோபர் புரட்சிக்குத் தூண்கள் போலிருந்த பல பொதுவுடைமைத் தலைவர்கள் ஏன் பீரங்கிவாய்க்கு இரையானார்கள்? ருஷியப் புரட்சிக் கோஷ்டியின் மேதையென்று புகழப்பட்ட டிராட்ஸ்கி இன்று அனாதையாக உலகமெங்கும் சுற்றித் திரிவதற்குக்<noinclude></noinclude> 4jds67avuktf0oagju3sbxfdneu7z3s பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/32 250 422426 1834749 1830853 2025-06-23T15:10:39Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1834749 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|24|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>திரும்பியதன் விளைவாக, லெனின் மதத்தைப் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாசு, ‘லெனினும் மதமும்’ என்ற மொழிபெயர்ப்பு நூலையும், தமிழ் நாட்டின் பொதுவுடைமை இயக்கத்தின் மூலவரான ம. சிங்காரவேலு எழுதிய சில நூல்களையும் ‘பொதுவுடைமைத் தத்துவங்கள்’ என்ற நூலையும் பெரியார் தமது ‘குடியரசு பதிப்பக’ வெளியீடுகளாக வெளியிட்டார், அத்துடன் அவர் பொதுவுடைமைப் பிரசாரமும் செய்தார். ஆனால் அன்றைய சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் முதலிய பிரமுகர்கள் இந்தப் பொதுவுடைமைப் பிரசாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இயக்கத்திலிருந்து வெளியேறினர்; மேலும் இந்தப் பிரசாரத்தைக் கைவிடுமாறு அன்னிய அரசாங்கமும் பெரியாரை நிர்ப்பந்தித்தது. இவற்றைத் தொடர்ந்து பெரியார் பொதுவுடைமைப் பிரசாரத்தைக் கைவிட்டுச் சமூகச் சீர்திருத்த விஷயங்களிலேயே கவனத்தைச் செலுத்தத் தொடங்கி விட்டார். இவ்வாறு பெரியாரின் சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமைக் கொள்கையைக் கைவிட்ட சமயத்தில், அந்த இயக்கத்திலிருந்து வெளியேறிச் சுயமரியாதைச் சமதர்மக் கட்சியைத் தோற்றுவித்தவர்தான் தோழர் ஜீவானந்தம். என்றாலும், அன்றைய சூழ்நிலையில் கம்யூனிஸ்டுக் கட்சி சட்ட விரோதமாக்கப்பட்டிருந்ததால், டாங்கே போன்ற இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைப்படி, கம்யூனிஸ்டுகள் பலரும் காங்கிரசுக்குள்ளேயே தோன்றியிருந்த காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சிக்குள் சேர்ந்தனர். ஜீவாவும் அவ்வாறு சேர்ந்து தமிழ்நாட்டில் அதன் பொதுச் செயலாளராகவும் விளங்கினார். இவ்வாறு காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சியில் சேர்ந்திருந்த கம்யூனிஸ்டுகளான தோழர்கள் ஜீவா, பி. ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ், ஏ.எஸ்.கே. அய்யங்கார், கே. முருகேசன் ஆகியோரே 1937ஆம் ஆண்டில் நவம்பர் புரட்சி தினத்தன்று, காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சியின் பத்திரிகையாக ‘ஜனசக்தி’ வாரப் பத்திரிகையைத் தொடங்கினர். {{nop}}<noinclude></noinclude> qxeuul2jysj0xtpzmmlzkkd97mfams1 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/28 250 422430 1834742 1830834 2025-06-23T15:05:25Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1834742 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|20|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>and Destiny வாழ்க்கையும் விதியும் - என்ற நாவல் (இது குருஷ்சேவ் ஆட்சிக் காலத்திலேயே எழுதப்பட்ட நாவலாயினும், அப்போது இதனை வெளியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது). இப்போது சோவியத் நாட்டில் கிளாஸ்னாஸ்த் தொடங்கிய பின்னால், அங்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாவலில் அவர் ஸ்டாலினையும் ஹிட்லரையும் ஒரே விதமான சர்வாதிகாரிகளாகவே மதிப்பிட்டிருக்கிறார். இதற்கு அவர் கூறும் வாதங்கள் சிந்தனையைத் தூண்டுவனவாகும் (Soviet Literature எண். 11/88). இங்கு இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். மேலை நாட்டில், குறிப்பாக மாஸ்கோ விசாரணைகளுக்குப் பின்னால், சோவியத் அபிமானிகளாகவும், கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களாகவும் அல்லது அனுதாபிகளாகவும் இருந்த பல எழுத்தாளர்கள் கட்சியிலிருந்து விலகினர்; அதன்பால் கொண்டிருந்த அபிமானத்தைக் கைவிட்டனர். இவ்வாறு மாறியவர்களில் பிரபலமான ஆறு எழுத்தாளர்கள் தங்கள் கருத்துக்களை கட்டுரைகளாக எழுதினர்; இந்தக் கட்டுரைகள் The God that failed - “கைவிட்டுவிட்ட கடவுள்” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. ஆர்தர் கீஸ்லர், இக்னேஜியோ சைலோன், ரிச்சர்டு ரைட், ஆன்ட்ரி ஜிட், லூயி பிஷர், ஸ்டீபன் ஸ்பெண்டர் ஆகியோரே அந்த ஆறு பேர். இவர்களில் ஆர்தர்கீஸ்லர் 1931இல், கம்யூனிஸ்டுகள் கட்சியில் சேர்ந்து. 1938இல் அதிலிருந்து விலகியவர். ஸ்பெயினில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, அங்குச் சென்றிருந்த காலத்தில் ஜெனரல் பிராங்கோவினால் கைது செய்யப்பட்டுச் சிறைவாசம் அனுபவித்தவர். இந்தச் சிறைவாசத்தை அவர் Dialogue with Death மரணத்தோடு உரையாடல் - என்ற நூலில் வருணித்திருக்கிறார். இந்நூலின் நடையழகையும் வேகத்தையும் வைரம் பாய்ந்த சொல்லாட்சியையும் கண்டு நான் வியந்திருக்கிறேன். இவரே மாஸ்கோ விசாரணையைக் கருப்பொருளாகக் கொண்டு,<noinclude></noinclude> iu2ol6zyi2giyuf4zz7hd5hmq42l8at பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/53 250 422432 1834671 1008786 2025-06-23T12:59:19Z Asviya Tabasum 15539 1834671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|45}} {{rule}}</noinclude>பிரசாரமாகக் கருதப்பட்டன. இதன் விளைவாக, மாற்றுக் கருத்துக் கொண்ட கட்சித் தலைவர்களுக்கு நேர்ந்த கதியைப் போலவே, மாற்றுக் கருத்து கொண்ட எழுத்தாளர்களும் சிறைத் தண்டனைக்கும், கடின உழைப்பு முகாம் வாழ்க்கைக்கும் உள்ளாயினர். பலர் தீர்த்துக் கட்டவும் பட்டனர். சொல்லப்போனால் மாக்சிம் கார்க்கியும் இவ்வாறுதான் பலியானாரோ என்று சந்தேகிக்கவும் இடமிருக்கிறது. கார்க்கி 1936ஆம் ஆண்டு, ஜூன் மாதம் காலமானார். ஆயினும் 1938இல் நடந்த விசாரணையில், சோவியத் விரோதிகளான வலதுசாரிகளும் டிராட்ஸ்கீய வாதிகளும் சதி செய்து யகோதா என்பவனைப் பயன்படுத்தி, ஏற்கெனவே காசநோயால் நொம்பலப்பட்டிருந்த கார்க்கிக்கு நிமோனியாக் காய்ச்சல் வரச் செய்து, பின்னர் அவருக்கு வைத்தியம் பார்த்த டாக்டரையும் இந்தச் சதிக்கு உடன்படச் செய்து, கார்க்கிக்குக் கொடுத்து வந்த மருந்தின் அளவை அதிகரித்து, அவரது மரணத்தைத் துரிதப்படுத்தி அவரை சாகடித்ததாக முடிவு செய்யப்பட்டது. (ஆஸ்திரேலியாவில் 1945இல் வெளியிட்ட Creative ‘Labour and Culture’ என்ற கார்க்கியின் கட்டுரைத் தொகுதிக்கு எழுதப்பட்டுள்ள முன்னுரையில், இந்த வழக்கு விவரம் விரிவாகத் தரப்பட்டுள்ளது) என்றாலும் கட்சிக்குள் தமக்கு எதிராக உருவாகி வந்த எதிர்ப்பைத் தீர்த்துக் கட்டுவதற்காக, ஸ்டாலினே லெனின் கிராடுக் கட்சிச் செயலாளராகவிருந்த செல்வாக்கு மிக்கத் தலைவரான கிரோவைக் கொலை செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்கலாம் என்ற ஐயப்பாடு குருஷ்சேவ் காலத்தில் தெரிவிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, “கார்க்கியின் மரணத்திலும் அவருக்கு (ஸ்டாலினுக்குப்) பங்கு இருந்திருக்கலாம், ஏனெனில் அது எதிராளிகளின் சதி என்று அவரது பிரசாரத்தில் அளவுக்கு மீறிச் சித்திரித்துக் காட்டப்பட்டது” என்று மிலோவன் டிஜிலாஸ் எழுதி யுள்ளார் (Conversations with Stalin - Milovan Djilas, பக்கம் 145). இப்போதோ கார்க்கி ஸ்டாலினின் நடவடிக்கைகளைக் கண்டு, மனம் வெறுப்புற்றிருக்கலாம் என்றும், எனவே<noinclude></noinclude> 4vki3pwtk7xgbcmfpvvxc699rw1410j பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/45 250 422440 1834872 1008794 2025-06-24T06:00:22Z Asviya Tabasum 15539 1834872 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|37}} {{rule}}</noinclude>விலக்காக இருக்கவில்லை. இதனால் லெனின் காலத்துக்குப் பின்னர் தோன்றிய RAPP என்னும் ரஷ்யப் பாட்டாளி வர்க்க எழுத்தாளர் ஸ்தாபனம் ஸ்டாலினின் ஆசீர்வாதத்தோடு இலக்கியத்துறையில் ஒரு சட்டாம்பிள்ளை யாகவே செயல்பட்டு வந்தது. இது மயாகோவ்ஸ்கியைக் கூட கண்டித்தது; குறை கூறியது. இதற்கு மயாகோவ்ஸ்கி எழுதிய Bath - House ‘குளியலறை’ - என்ற நாடகம், ஸ்டாலின் ஆட்சியில் வலுவாக உருப்பெற்றுவிட்ட அதிகார வர்க்கத்தின் தன்மையை அம்பலப் படுத்தியதும் ஒரு காரணமாகும். இதனால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான மயாகோவ்ஸ்கி மிகவும் மனம் உடைந்து போயிருந்தார்; அத்துடன் ஒரு காதல் விவகாரத்திலும் அவர் விரக்தியுற்றிருந்தார் இதனால் அவர் 1930இல் தம்மைத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை புரிந்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு அவரைக் கண்டித்தவர்கள் பல காரணங்களையும் கூறினர். அவர் “வாழ்நாள் முழுவதும் புளுகியே வந்தவர், பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து, பொய்யிலேயே சிக்கிக் கொண்ட அவர் தற்கொலை செய்து கொள்ளாமல் வேறு என்ன செய்வார்?” என்று கூறினர். வேறு சிலர் “அவருக்கு சிபிலிஸ் நோய். அந்த ரகசியம் வெளியே தெரியக் கூடாது என்றுதான் தற்கொலை செய்து கொண்டார்” என்று கூடப்பழி தூற்றினர் (Soviet Literature எண். 11/88). ஆனால் அவரோ தற்கொலை செய்து கொள்ளுமுன் எழுதி வைத்த குறிப்பில் ‘எனக்கு வேறு வழியில்லை, ஆனால் நான் இதை வேறு யாருக்கும் சிபாரிசு செய்ய மாட்டேன்’ என்றே எழுதியிருந்தார் (Penquin New Writing எண் 11/1942) ஆனால் உண்மையில் ‘ராப்’ அவர் மீது தொடுத்த கடுமையான கண்டன விமர்சனங்களே, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு முக்கிய காரணமாகும். ‘ராப்’ உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரான ஷோல கோவையும் கூடவிட்டு வைக்கவில்லை. ‘டான் நதி அமைதியாக ஓடுகிறது’ (And quiet flows the Don) என்ற<noinclude></noinclude> h9u6yxj7tvhljr3x79d0zb0b1q1txae பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/44 250 422441 1834710 1832735 2025-06-23T14:24:43Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834710 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|36|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>கருதினார். ஒருமுறை அவர் இளைஞர்கள் சிலரைச் சந்தித்தபோது, ‘நீங்கள் யாருடைய கவிதைகளை மிகவும் விரும்பிப் படிக்கிறீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் மயாகோவ்ஸ்கி என்று பதிலளித்தனர். அப்போது லெனின், ‘நீங்கள் புஷ்கினையும் படிக்க வேண்டும். புஷ்கின் மிகச் சிறந்த கவிஞர்’ என்று அவர்களிடம் கூறினார். என்றாலும், மயாகோவ்ஸ்கியின் கவிதைகளுக்கு இளைஞர்கள் மத்தியில் அமோகமான செல்வாக்கு இருப்பது ஏன் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதிலும் அவர் அக்கறை காட்டினார். மயாகோவ்ஸ்கியின் futurism - எதிர்காலவாதம் லெனினுக்குப் பிடிக்கவில்லை. எனவே அவரது ‘15 கோடி’ என்ற கவிதையை அதிகப்படியான பிரதிகளாக அச்சிட்டமைக்காக லெனின் லுனாச் சார்ஸ்கியைக் கண்டித்தார். ஆனால் அதே லெனின், அவசரப் பணிகளுக்குத் தீர்வு காண்பதில் அக்கறை செலுத்துவதைக் காட்டிலும், கட்சித் தலைவர்கள் எப்போது பார்த்தாலும், கமிட்டிகள் கூடி விவாதித்துக் கொண்டிருந்ததைக் கிண்டல் செய்து, மயாகோவ்ஸ்கி எழுதிய ‘மாநாடுகளைப் பற்றி’ On Conferences என்ற கவிதையை லெனின் பாராட்டவும் செய்தார். இதேபோல் கவிஞர் தெம்யாள் பெத்னி சில அற்பத்தவறுகளைச் செய்தமைக்காக, பிராவ்தா பத்திரிகையிலிருந்து அவரை வெளியேற்றிய காலத்தில், லெனின் தெம்யான் பெத்னி விஷயத்தில் அவரை நான் தொடர்ந்து ஆதரிக்கிறேன். “நண்பர்களே, மானிடத் தவறுகளில் குற்றம் காணாதீர்கள். திறமை என்பது அபூர்வமானது. அதனை முறையாகவும் கவனமாகவும் ஆதரிக்க வேண்டும்” என்று பிராவ்தாவுக்கு எழுதினார். இதன் பின்னர் தெம்யான் பெத்னி மீண்டும் பிராவ்தாவின் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். (“Soviet Literature” எண் 5/89) இதற்கெல்லாம் மாறாக, ஸ்டாலின் தமது ஆட்சிக் காலத்தில் மாற்றுக் கருத்துக்களையே சகித்துக் கொள்ளாதவராக இருந்தார். இதற்கு இலக்கியக் கர்த்தாக்களும் விதி<noinclude></noinclude> ln0qn8vsjy3meowgb6y49x8bei6kqpb பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/43 250 422442 1834695 1832732 2025-06-23T14:09:12Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834695 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|35}} {{rule}}</noinclude><b>சோவியத் நாட்டில் நடந்ததென்ன?</b> நான் முன்னர் குறிப்பிட்ட வக்கிரமான பார்வையே தமிழ்நாட்டில் முற்போக்கு இலக்கிய இயக்கம் தொடங்கிய நாற்பதாம் ஆண்டுகளில் நம்மிடையே நிலவியதற்குக் காரணம் என்ன? இதற்கு நாற்பதாம் ஆண்டுகளில் நமக்கு வழிகாட்டியாகவிருந்த சோவியத் நாட்டு இலக்கியக் கருத்து நிலை பற்றி, அங்கு கோலோச்சி நின்ற இலக்கியக் கோட்பாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்குச் சில அடியாரம்பமான விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். லெனின் காலத்தில் அவர் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்த, கட்சியோடு மாறுபட்டு நின்ற எழுத்தாளர்களையும் மதிப்பவராகவும் சகித்துக் கொள்பவராகவும் இருந்தார். உதாரணமாக, மாக்சிம் கார்க்கி 1917இல் நிகழ்ந்த புரட்சிக்குப் பின் அதன் போக்கைக் குறித்துக் கடுமையான கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்; அதனை அவர் எழுதி வெளியிடவும் செய்தார். என்றாலும் லெனின் அவரைத் தாக்கி எழுதவில்லை. ஏனெனில் கார்க்கி அவ்வாறு எழுதினாலும் அவரது உள்ளம், புரட்சியோடும் சோஷலிசத்தோடும் இணைந்தது என்பதை அவர் அறிந்தே இருந்தார். எனவே அவரோடு பேசி, அவருக்கு நிலைமையை விளக்கி, அவருக்குத் தெளிவு ஏற்படுத்தவே லெனின் முயன்றார். கார்க்கி தாம் கொண்டிருந்த கருத்து தவறானது என்று உணர்ந்தார்; இதன்பின் அவர் லெனினை வானளாவப் புகழ்ந்து எழுதத் தொடங்கினார். அப்போதுதான் லெனினுக்கு அவர்மீது கோபம் பிறந்தது இவ்வாறு தனிநபர் வழிபாட்டைப் போற்றி எழுதியதை அவர் கண்டித்தார்; பொலிட் பீரோவைக் கூட்டி, தனிநபர் வழிபாட்டைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றவும் செய்தார். இதேபோல் கவிஞர் மயாகோவ்ஸ்கியைக் காட்டிலும், புஷ்கினே சிறந்த கவிஞர் என்று லெனின்<noinclude></noinclude> bxit5xcpm2tfuzpbrnoasygupm05af5 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/42 250 422443 1834693 1832725 2025-06-23T13:57:47Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|34|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>தமிழ் ஒளி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி முதலியோர் எமுதி வந்தனர். இதே ஐம்பதுகளில் மாஜினி, ‘தமிழன்’ என்ற பத்திரிகையையும், கே.சி.எஸ். அருணாசலம் ‘நீதி’ என்ற பத்திரிகையையும் நடத்தி வந்தனர். ‘நீதி’ப் பத்திரிக்கையில் கே.சி.எஸ். எழுதிய ‘பூர்வீகச் சொத்து’ என்ற நெடுங்கதை பற்றி நடந்த விவாதம், முற்போக்கு இலக்கியப் பார்வைகள் எவ்வாறெல்லாம் வேறுபட்டிருந்தன என்பதைக் காட்டும் கண்ணாடியாக விளங்கியது எனலாம். அந்த விவாதத்தை இறுதியாக நானே முடித்து வைத்தேன். இதே காலத்தில் 1956இல் தொடங்கப்பட்ட விஜய பாஸ்கரனின் ‘சரஸ்வதியில்’ நமது முற்போக்கு எழுத்தாளர்கள் பலரும் ஜெயகாந்தன், எஸ்.ஆர்.கே, ஆர்.கே. கண்ணன், நா. வானமாமலை, தி.க.சி., வல்லிக்கண்ணன் முதலிய பலரும் எழுதி வந்தனர். ஜெயகாந்தன் சிறந்த சிறுகதையாசிரியராகப் பூரணமாக மலர்ச்சி பெற்றது இந்தக் காலப்பகுதியில்தான். இவையெல்லாம் வெளிவந்த பின்னர்தான், அதாவது ஐம்பதாம் ஆண்டுகளின் இறுதியில்தான், கம்யூனிஸ்டுக் கட்சியின் இலக்கியப் பத்திரிகையாக 1959 டிசம்பரில் ‘தாமரை’ வெளிவரத் தொடங்கியது. ஐம்பதாம் ஆண்டுகளில் - குறிப்பாக 1956இல் நடந்த 20 ஆவது சோவியத் கட்சிக் காங்கிரஸ், அதன் தொடர்பாக எழுத்தாளர்களுக்குக் கிட்டியிருந்த - எனினும் சிறிது காலத்தில் பறிபோய்விட்ட புதிய சுதந்திரம், இந்தச் சுதந்திர காலத்தில் வெளிவந்த சோவியத் இலக்கியங்கள் மற்றும் இலக்கியக் கட்டுரைகள் ஆகியவற்றின் பின்னணியில்தான், மேற்கூறிய பத்திரிகைகள் எல்லாம் முற்போக்கு இலக்கியத்தை, நாற்பதுகளில் நிலவிய குறுகிய செக்டேரியன் பார்வையிலிருந்து விடுபடச் செய்தன எனலாம் இவையனைத்தின் விளைவாகவே 1961 ஆம் ஆண்டு மத்தியில் - மே மாத இறுதியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோவையில் உருப்பெற்றது<noinclude></noinclude> hej104nv720rsvm49xpm9clm1vwg6me 1834756 1834693 2025-06-23T15:26:40Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1834756 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|34|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>தமிழ் ஒளி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி முதலியோர் எழுதி வந்தனர். இதே ஐம்பதுகளில் மாஜினி, ‘தமிழன்’ என்ற பத்திரிகையையும், கே.சி.எஸ். அருணாசலம் ‘நீதி’ என்ற பத்திரிகையையும் நடத்தி வந்தனர். ‘நீதி’ப் பத்திரிக்கையில் கே.சி.எஸ். எழுதிய ‘பூர்வீகச் சொத்து’ என்ற நெடுங்கதை பற்றி நடந்த விவாதம், முற்போக்கு இலக்கியப் பார்வைகள் எவ்வாறெல்லாம் வேறுபட்டிருந்தன என்பதைக் காட்டும் கண்ணாடியாக விளங்கியது எனலாம். அந்த விவாதத்தை இறுதியாக நானே முடித்து வைத்தேன். இதே காலத்தில் 1956இல் தொடங்கப்பட்ட விஜய பாஸ்கரனின் ‘சரஸ்வதியில்’ நமது முற்போக்கு எழுத்தாளர்கள் பலரும் ஜெயகாந்தன், எஸ்.ஆர்.கே, ஆர்.கே. கண்ணன், நா. வானமாமலை, தி.க.சி., வல்லிக்கண்ணன் முதலிய பலரும் எழுதி வந்தனர். ஜெயகாந்தன் சிறந்த சிறுகதையாசிரியராகப் பூரணமாக மலர்ச்சி பெற்றது இந்தக் காலப்பகுதியில்தான். இவையெல்லாம் வெளிவந்த பின்னர்தான், அதாவது ஐம்பதாம் ஆண்டுகளின் இறுதியில்தான், கம்யூனிஸ்டுக் கட்சியின் இலக்கியப் பத்திரிகையாக 1959 டிசம்பரில் ‘தாமரை’ வெளிவரத் தொடங்கியது. ஐம்பதாம் ஆண்டுகளில் - குறிப்பாக 1956இல் நடந்த 20 ஆவது சோவியத் கட்சிக் காங்கிரஸ், அதன் தொடர்பாக எழுத்தாளர்களுக்குக் கிட்டியிருந்த - எனினும் சிறிது காலத்தில் பறிபோய்விட்ட புதிய சுதந்திரம், இந்தச் சுதந்திர காலத்தில் வெளிவந்த சோவியத் இலக்கியங்கள் மற்றும் இலக்கியக் கட்டுரைகள் ஆகியவற்றின் பின்னணியில்தான், மேற்கூறிய பத்திரிகைகள் எல்லாம் முற்போக்கு இலக்கியத்தை, நாற்பதுகளில் நிலவிய குறுகிய செக்டேரியன் பார்வையிலிருந்து விடுபடச் செய்தன எனலாம். இவையனைத்தின் விளைவாகவே 1961 ஆம் ஆண்டு மத்தியில் - மே மாத இறுதியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோவையில் உருப்பெற்றது. {{nop}}<noinclude></noinclude> aoo5lz5dz9t0o9sq5w7gnhzinmzuhj9 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/41 250 422444 1834690 1831007 2025-06-23T13:51:17Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|33}} {{rule}}</noinclude>பத்திரிகைகள் பல வெளிவரத் தொடங்கின. 1951 ஏப்ரலில் விஜய பாஸ்கரன் ‘விடி வெள்ளி’ என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கினார். 1952இல் குயிலன் ‘வாரம்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். இவை இரண்டிலும் நானும் கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வந்தேன். 1952இல் ‘சக்தி’ பத்திரிகை பொருளாதார நெருக்கடியின் காரணமாக நின்று போனபின், நான் திருநெல்வேலிக்குத் திரும்பி வந்தேன். தி.க.சி.யும் திருநெல்வேலிக்கு மாற்றலாகி வந்திருந்தார். இதனால் 1952இல் நாங்கள் மீண்டும் ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ என்ற பெயரிலேயே ஒரு சங்கத்தைத் தொடங்கினோம். இது முறையாக செயல்பட்டு வந்தது; பல இலக்கியக் கூட்டங்களை நடத்தியது; இதில் ஜீவாவும் பாலனும் கலந்து கொண்டு பலமுறை உரையாற்றினர். 1952இல் இந்தச் சங்கம் புதுமைப்பித்தன் விழாவைப் புத்தகக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் எனப் பலவாறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. 1954 டிசம்பரில் நான் ‘சாந்தி’ப் பத்திரிகையைத் தொடங்கினேன். நெல்லையில் தோற்றுவிக்கப்பட்ட இந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அதன் நடவடிக்கைகளும், ‘சாந்தி’யின் தோற்றமும்தான் சுந்தர ராமசாமி, டி. செல்வராஜ் ஆகிய இரு சிறந்த எழுத்தாளர்களைத் தோற்றுவித்து முற்போக்கு இலக்கிய அணிக்குக் கொண்டு வந்தது. ‘சாந்தி’ நடத்திய புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்ற சுந்தர ராமசாமி முதலில் ‘சாந்தி’யிலும், பின்னர் 1955 மே மாதத்தில் விஜயபாஸ்கரன் தொடங்கிய ‘சரஸ்வதி’ப் பத்திரிகையிலும் முற்போக்கான கதைகள் பலவற்றையும் எழுதி வந்தார். 1954இல் நான் தொடங்கிய ‘சாந்தி’ 1956 முற்பகுதியில் நின்று விட்டது. என்றாலும் இதே காலகட்டத்தில் தான் விந்தன் ‘மனிதன்’ என்ற மாத இதழைத் தொடங்கினார். இது ஒன்பது மாதங்களே நடந்தது. என்றாலும், இதில்<noinclude></noinclude> f88gbxdir1zwjqis0684o6xtuf36e7l பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/40 250 422445 1834703 1830999 2025-06-23T14:19:13Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834703 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|32|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்தச் சமயத்தில் கம்யூனிஸ்டுக் கட்சி அன்றைக்கு மேற்கொண்டிருந்த வறட்டுக் கோட்பாட்டு நிலை, செக்டேரியன் நிலை ஆகியவற்றின் விளைவாக, பாரதியை வைதிகக் கவி எனவும், முதலாளித்துவக் கவிஞர் எனவும் பழிதூற்றும் காரியம் தொடங்கியது. இதனை தி.க.சி மற்றும் என்னைப் போன்ற எழுத்தாளர்கள் எதிர்க்க நேர்ந்தது, என்றாலும் இந்தப் ‘புதுமை இலக்கியம்’ இரண்டே இதழ்களுக்குப் பின் தடை செய்யப்பட்டு விட்டது. இதன்பின் குயிலனைப் பதிப்பாளராகக் கொண்டும், தமிழ் ஒளி ஆகியோரைக் கொண்டும் 1949இல் ‘முன்னணி’ என்ற வாரப் பத்திரிகை தொடங்கப்பட்டது. இதுவும் சிறிதுகாலத்தில் நின்று விட்டது. இங்கு ஒரு விஷயத்தைக் கூறியாக வேண்டும். சுதந்திரத்துக்குப் பின் தமிழ் நாட்டில் தோன்றிய முற்போக்கு இலக்கிய இயக்கம், அன்றைய சோவியத் இலக்கியங்களையும் ‘சோவியத் லிட்டரேச்சர்’ முதலிய பத்திரிகைகளில் வெளிவந்த இலக்கிய விமர்சனங்களையுமே வழிகாட்டியாகவும் முன் மாதிரியாகவும் கொண்டிருந்தன. எனவே சோவியத் நாட்டில் அன்று இலக்கியம் பற்றி நிலவிய வக்கிரமான, திரிபான, செக்டேரியன் தன்மைவாய்ந்த கட்சிப் பார்வையே தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கியவாதிகளிடம் நிலவியது. இந்த நிலைமை நாற்பதாம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து ஐம்பதாம் ஆண்டுகளின் தொடக்கம் வரை நீடித்தது எனலாம். 1956ல் சோவியத் நாட்டில் குருஷ்சேவ் ஆட்சி ஏற்பட்டு, அதன் காரணமாக இலக்கிய நோக்கிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டபின்னரே, இந்தக் கட்சிப் பார்வை விடுபடத் தொடங்கியது எனலாம். இந்தக் காலத்துக்கு முன் சோவியத் நாட்டில் நிலவிய நிலைமை என்ன என்பதைப் பின்னர் பார்ப்போம். முன்னணிக்குப் பின் ஐம்பதாம் ஆண்டுகளில்தான் முற்போக்கு இலக்கிய நோக்கைக் கொண்ட இலக்கியப்<noinclude></noinclude> 76m2a7hb4ihhugqawb1xrqi9eajobnh பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/39 250 422446 1834699 1830956 2025-06-23T14:14:53Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834699 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|31}} {{rule}}</noinclude>யில் 1947 மத்தியில் ஏற்கெனவே துணையாசிரியராகப் பணியாற்றி வந்த அழகிரிசாமியோடு ‘சக்தி’யில் நானும் அதன் துணையாசிரியராகச் சேர்ந்துவிட்டேன். தி.க.சியும் மார்ச் மாதம் சென்னைக்கு மாற்றலாகிச் சென்னை வந்து விட்டார். இத்துடன் ‘கலைஞர் கழக’மும் முடிவு கண்டு விட்டது. என்றாலும் 1948ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தோழர் முகவை ராஜமாணிக்கம் தலைமையில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது. கலந்து கொண்டவர்கள் வெளியிலிருந்து கட்சித் தோழர்களும் சில எழுத்தாளர்களும் ஆவர்; அவர்களும் வெகுசிலரே இந்த மாநாடு உருப்படியான முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எதையும் உருவாக்கவில்லை. இதனால் 1949இல் மீண்டும் ஒரு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவிக்கும் முயற்சி சென்னையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியில் நானும் அதன் அமைப்பாளர்களில் ஒருவனாக இருந்தேன். எனினும் அன்றைய சூழ்நிலையில் இந்த முயற்சியும் உருப்படியாக வெற்றி பெறவில்லை. இதன்பின் 1952இல் நாரணதுரைக்கண்ணனைத் தலைவராகக் கொண்டு, சென்னையில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டது. இதனைக் குறித்துத் தோழர் நல்லகண்ணு ‘பாட்டாளியைப் பாடிய பாவலர்கள்’ என்ற தமது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். என்றாலும், இந்தச் சங்கத்தில் நமது அணியைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர்கள் சிலபேர் இடம் பெற்றிருந்தாலும், இதுவும் உருப்படியாகச் செயல்படவில்லை. ஏனெனில் இது அமைக்கப்பட்ட சூழ்நிலையும் இதன் நோக்கமும் வேறாக இருந்தன. <b>முற்போக்கு இலக்கியப் பத்திரிகைகளின் தோற்றம்:</b> 1948இல் கம்யூனிஸ்டுக் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் ‘புதுமை இலக்கியம்’ என்ற பெயரில் ஒரு<noinclude></noinclude> 5ie6xp2zedawinlo8u35g006vj75x73 1834754 1834699 2025-06-23T15:17:14Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1834754 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|31}} {{rule}}</noinclude>யில் 1947 மத்தியில் ஏற்கெனவே துணையாசிரியராகப் பணியாற்றி வந்த அழகிரிசாமியோடு ‘சக்தி’யில் நானும் அதன் துணையாசிரியராகச் சேர்ந்துவிட்டேன். தி.க.சியும் மார்ச் மாதம் சென்னைக்கு மாற்றலாகிச் சென்னை வந்து விட்டார். இத்துடன் ‘கலைஞர் கழக’மும் முடிவு கண்டு விட்டது. என்றாலும் 1948ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தோழர் முகவை ராஜமாணிக்கம் தலைமையில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது. கலந்து கொண்டவர்கள் வெளியிலிருந்து கட்சித் தோழர்களும் சில எழுத்தாளர்களும் ஆவர்; அவர்களும் வெகுசிலரே. இந்த மாநாடு உருப்படியான முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எதையும் உருவாக்கவில்லை. இதனால் 1949இல் மீண்டும் ஒரு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவிக்கும் முயற்சி சென்னையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியில் நானும் அதன் அமைப்பாளர்களில் ஒருவனாக இருந்தேன். எனினும் அன்றைய சூழ்நிலையில் இந்த முயற்சியும் உருப்படியாக வெற்றி பெறவில்லை. இதன்பின் 1952இல் நாரணதுரைக்கண்ணனைத் தலைவராகக் கொண்டு, சென்னையில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டது. இதனைக் குறித்துத் தோழர் நல்லகண்ணு ‘பாட்டாளியைப் பாடிய பாவலர்கள்’ என்ற தமது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். என்றாலும், இந்தச் சங்கத்தில் நமது அணியைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர்கள் சிலபேர் இடம் பெற்றிருந்தாலும், இதுவும் உருப்படியாகச் செயல்படவில்லை. ஏனெனில் இது அமைக்கப்பட்ட சூழ்நிலையும் இதன் நோக்கமும் வேறாக இருந்தன. <b>முற்போக்கு இலக்கியப் பத்திரிகைகளின் தோற்றம்:</b> 1948இல் கம்யூனிஸ்டுக் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் ‘புதுமை இலக்கியம்’ என்ற பெயரில் ஒரு<noinclude></noinclude> fxw4pygkzq74xusst1v8aypnznm6o3j பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/55 250 422461 1834831 1008815 2025-06-24T05:06:43Z Asviya Tabasum 15539 1834831 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் |47}} {{rule}}</noinclude>அதன் புரட்சிகரமான வளர்ச்சியில்” இனம் கண்டு சித்திரித்துக் காட்டுவதேயாகும். (“Socialist realism is truthful, historically concrete portrayal of reality in its revolutionary development”) என்று விளக்கம் கூறினார். மேலும் இதனையே விரித்துக் கூறுகையில், “சோஷலிச எதார்த்தவாதம் மனிதனைச் செயல்படுபவனாகக் காண்கிறது; வாழ்க்கையை ஒரு படைப்பாக நடவடிக்கையாகக் கருதுகிறது; இந்த நடவடிக்கையின் நோக்கமானது இயற்கைச் சக்திகளை வெற்றி கொள்ளவும், மற்றும் நீண்ட ஆயுளைப் பெறவும், இந்த உலகில் வாழும் மாபெரும் நல்ல வாய்ப்பை அனுபவிக்கவும் வேண்டி மனிதர்கள் வழங்கும் மிகவும் மதிப்புமிக்க தனித்தனியான செல்வங்களை இடையறாது வளர்ச்சியுறச் செய்து வருவதேயாகும்; மனிதன் தனது தேவைகளின் இடையறாத வளர்ச்சிக்கு ஏற்ப, ஒரே பெரும் குடும்பமாய் புனித குலம் மகோன்னதமாக வாழும் இடம் என்ற முறையில் இந்த உலகை முழுமையாக அனுபவிக்கவும் விரும்புகிறான்” என்று கூறினார். (Socialist realism looks upon being as doing, and regards existence as a Creative activity, the object of which is the uninterumpted development of time most valuable individual gifts of man, in order that they may conquer the formes of nature, achieve health and long life and enjoy the great fortune of living on earth, which man, in conformity with the incessant growth of his needs, wants to exploit in its entirety, as the magnificient dwelling place of mankind united in one great family - “Literature and Life” - Maxim Gorky, பக்கம் 140). இந்த விளக்கம் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நல்ல விளக்கம்தான் சொல்லப்போனால், உண்மையான மனிதாபிமானம் மிக்க எந்தவோர் எழுத்தாளனுக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய குறிக்கோள்தான். ஆனால் சோஷலிச எதார்த்தவாதம் என்பதற்கு ஸ்டாலின் காலத்தில் வழங்கப்பட்டு வந்த அர்த்தபாவமும், அதனை வலியுறுத்தி<noinclude></noinclude> djr0m4s350l9r73niimlpq9pumshksc பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/54 250 422462 1834714 1008816 2025-06-23T14:29:18Z Asviya Tabasum 15539 1834714 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|46|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>டிஜிலாஸ் கூறியதுபோல், கார்க்கியின் மரணத்தில் ஸ்டாலினுக்குப் பங்கு இருந்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமிருப்பதாகத் தோன்றுகிறது. ஏனெனில் இலக்கிய சம்பந்தமான பல நூல்களை எழுதியுள்ள சோவியத் பேராசிரியரான ஜார்ஜி குனித்சின் “ஸ்டாலின் கார்க்கியைக் கண்டு அஞ்சினார் என்பதை நிரூபிப்பதற்கு நான் பின்வரும் சான்றைக் குறிப்பிட முடியும். பிராவ்தாவில் நான் கலை இலக்கியத் துறை சம்பந்தப்பட்ட இலாகாவுக்குத் தலைவனாக இருந்த காலத்தில், 1936இல் முதிய கம்பாசிட்டர் ஒருவர், கார்க்கிக்கென்றே பிரத்தியேகமாக அச்சிடப்பட்ட பிராவ்தா இதழ்களில் ‘மக்களின் எதிரிகள்’ கைது செய்யப்பட்டது குறித்த தகவல்களுக்குப் பதிலாக, நண்டுகள் பிடிக்கப்பட்டது பற்றிய செய்திகள் இட்டு நிரப்பப்பட்டன என்று என்னிடம் கூறினார். என்றாலும் இத்தகைய மூடி மறைக்கும் வேலை கார்க்கியை நெடுநாட்களுக்கு ஏமாற்ற முடியவில்லை ...” என்று எழுதியிருக்கிறார். (Soviet Literature எண் 5/89). <b>கார்க்கியின் விளக்கம்:</b> முன் குறிப்பிட்டபடி, 1932இல் சோவியத் எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்ட காலத்தில் சோஷலிச எதார்த்தவாதம்தான் சோவியத் எழுத்தாளர்களின் இலக்கிய நெறிமுறையாகும் என்று ஸ்டாலின் கூறிய பின்னர், 1934ஆம் ஆண்டில் சோவியத் எழுத்தாளர்களின் முதல் மாநாடு (First Ai1 Union Congress of Soviet Writers) நடைபெற்றது. இதில் தாம் ஆற்றிய உரையின் போது, கார்க்கி ‘சோஷலிச எதார்த்தவாதம்’ என்ற சொற்சேர்க்கையை ஏற்றுக் கொண்டாலும், அதற்கு ஸ்டாலின் வழங்கிய அர்த்த பாவத்தை ஏற்றுக் கொள்ளாமல், பொதுவான விளக்கம் ஒன்றை அளித்தார். அதாவது ‘சோஷலிச எதார்த்தவாதம்’ என்பது “உண்மையான, வரலாற்று ரீதியில் ஸ்தூலமான முறையில், எதார்த்தத்தை<noinclude></noinclude> 8a0mae8yiss71r2xhtnlo7yaey69rk5 பயனர்:Fathima Shaila 2 430664 1834707 1718311 2025-06-23T14:21:39Z Fathima Shaila 6101 /* மெய்ப்பு பார்த்த நூல்கள் */ 1834707 wikitext text/x-wiki நான் பாத்திமா. இலங்கையர். == மெய்ப்பு பார்த்த நூல்கள் == {| class= "wikitable" ! நூல்கள்!!பக்கங்களின் எண்ணிக்கை !! quarry கணக்கீடு |- |கலைக்களஞ்சியம் 1|| 150 || https://quarry.wmcloud.org/query/67543 |- |கனிச்சாறு 2|| 130 || https://quarry.wmcloud.org/query/67511 |- |கனிச்சாறு 3|| 24 || https://quarry.wmcloud.org/query/67537 |- |கனிச்சாறு 4|| 246 || https://quarry.wmcloud.org/query/67538 |- |கனிச்சாறு 5|| 88 || https://quarry.wmcloud.org/query/67539 |- |கனிச்சாறு 6|| 147 || https://quarry.wmcloud.org/query/67540 |- |கனிச்சாறு 7|| 267 || https://quarry.wmcloud.org/query/67541 |- |கனிச்சாறு 8|| 199 || https://quarry.wmcloud.org/query/67542 |- |மறைமலையம் 3|| 184 || https://quarry.wmcloud.org/query/85700 |- |அப்பாத்துரையம் 33 || 312 || https://quarry.wmcloud.org/query/85705 |- |பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 2 || 273 || https://quarry.wmcloud.org/query/85701 |- |மறைமலையம் 2|| 58 || https://quarry.wmcloud.org/query/84337 |- |பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 10|| 30 || https://quarry.wmcloud.org/query/84294 |- |மறைமலையம் 1|| 255|| https://quarry.wmcloud.org/query/84298 |- |} • புதியதோர் உலகு செய்வோம்.<br> • தென்னைமரத் தீவினிலே<br> • விந்தன் கதைகள்<br> • நாடக மேடை நினைவுகள்<br> • தமிழ்ப் பழமொழிகள் 2<br> • அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்<br> • தமிழ்ப் பழமொழிகள் 4<br> • தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்<br> • குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13<br> • குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9<br> • குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.<br> • அருள்நெறி முழக்கம்<br> • அறிவியல் தமிழின் விடிவெள்ளி<br> • எழுத்து, சி. சு. செல்லப்பா<br> • பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்<br> • மணி பல்லவம் 4<br> • கவிஞன், வெள்ளியங்காட்டான்<br> • இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா<br> • அய்யன் திருவள்ளுவர்<br> • கரிகால் வளவன்<br> • திருவாசகம் சில சிந்தனைகள்<br> • அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்<br> • கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி<br> • அறப்போர்<br> • வெள்ளியங்காட்டான் கவிதைகள்<br> • செந்தமிழ் பெட்டகம் 1<br> • அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.<br> • தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்<br> • திருவாசகம் சில சிந்தனைகள்-2<br> • தமிழ்நாடும் மொழியும்<br> • கல்வி உளவியல் கோட்பாடுகள்<br> • கருத்துக் கண்காட்சி<br> • வனதேவியின் மைந்தர்கள்<br> • மகான் குரு நானக்<br> • புரவலன், வெள்ளியங்காட்டான்<br> • சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.<br> • கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்<br> • திவான் லொடபட சிங் பகதூர்<br> • இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்<br> • உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்<br> • கல்வி உளவியல் கோட்பாடுகள்<br> • 1911 AD paper copy-சுய சரிதை, வ. உ.சிதம்பரம் பிள்ளை, 1946 print copy<br> • கவிதை உள்ளம்<br> • தமிழக வரலாறு கோசர்கள்<br> • கலைவாணன் (நாடகம்)<br> • திருக்குறளில் நகைச்சுவை<br> • பௌத்த தருமம்<br> • சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்<br> • களத்துமேடு<br> • காட்டு வழிதனிலே<br> • வள்ளுவர் வழியில் காந்தியம்<br> • பாட்டரங்கப் பாடல்கள்<br> • என் அமெரிக்கப் பயணம்.<br> சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்)<br> • எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்<br> • தமிழ் அகராதிக் கலை == மேலடி இட்ட நூல்கள் == 1. [[அட்டவணை:காவியக் கம்பன்.pdf]]<br> 2. [[அட்டவணை:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf]]<br> 3. [[அட்டவணை:ராஜா ராணி.pdf]]<br> 4. [[அட்டவணை:கொலைக்களம்.pdf]]<br> 5. [[அட்டவணை:அகிம்சா மூர்த்திகள்.pdf]] == உதவிப்பக்கங்கள் == [https://hub-paws.wmcloud.org/user/Fathima%20Shaila/lab?] Paws 33juiel7mcjpvd9gzf2l7hal8wl44uq பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/5 250 456440 1834717 1444118 2025-06-23T14:30:49Z Mohanraj20 15516 1834717 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>ஒரு கனவு நனவாகியது!</b>}}}} ::கல்லும் கதைசொல்லும் என்பார்கள்: இங்கே கால்வாய் கதை சொல்லுகிறது. கதை என்றால் கற்பனையா? இல்லை; அவை அவ்வளவும் வரலாற்று நிகழ்ச்சிகள் ஆகும். ::வெள்ளோடு உலகபுரம்கரை வெள்ளமுத்துக் கவுண்டன்வலசில் ‘மேட்டாங்காட்டில்’ பிறந்து, திருப்பூர் கருவம் பாளையத்தில் இளமையில் வளர்ந்த நான் தொலைவில் உள்ள நன்செய் வளம் கொழிக்கும் காலிங்கராயன் கால்வாய்மீது காதல் கொண்டதே ஒரு கதைதான்! ::என் தாயார் திருமதி நல்லம்மாள் சென்னிமலைக் கவுண்டர் காலிங்கராயன் கால்வாயின் உரிமை ஊர்களில் ஒன்றான சாமிநாதபுரம் ‘மேக்கால்’ வீட்டைச் சேர்ந்தவர்கள்: அத் தொடர்பும் ஒரு காரணமாக இருக்கலாம். ::என் மாமா, அத்தை, அக்கா ஆகியோர் காலிங்கராயன் கால்வாயின் மடியில் தவழும் சாவடிப் பாளையம் புதூரில் உள்ளனர். ::சாவடிப்பாளையம் புதூர் சென்று காலிங்கராயன் கரையில் மாமாவின் தோட்டத்து மாமரத்தில் மாங்காய் பறிக்கும்போதும், அத்தை வீட்டாரோடு நட்டாற்றீசுவரன் கோயில் செல்லும்போதும் என் மாமாமார்களான சொங்கப்பன், குமாரசாமி, எஸ். பி. கந்தசாமி ஆகியோர் என்னிடம் இளமையில் கூறியவை: ::‘இதோ! இந்தக் காலிங்கராயன் கால்வாய் உங்கள் பங்காளி வெட்டியது; இதன் தண்ணீரை நீங்கள் குடிக்கக் கூடாது. இக் கால்வாயில் விளையும் நெல்லைக் கூடச் சாப்பிடக் கூடாது'<noinclude></noinclude> d94r1uszmspw1ynb7xp7w5bf1w54jd1 1834866 1834717 2025-06-24T05:56:41Z Mohanraj20 15516 1834866 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>ஒரு கனவு நனவாகியது!</b>}}}} கல்லும் கதைசொல்லும் என்பார்கள்: இங்கே கால்வாய் கதை சொல்லுகிறது. கதை என்றால் கற்பனையா? இல்லை; அவை அவ்வளவும் வரலாற்று நிகழ்ச்சிகள் ஆகும். வெள்ளோடு உலகபுரம்கரை வெள்ளமுத்துக் கவுண்டன்வலசில் ‘மேட்டாங்காட்டில்’ பிறந்து, திருப்பூர் கருவம் பாளையத்தில் இளமையில் வளர்ந்த நான் தொலைவில் உள்ள நன்செய் வளம் கொழிக்கும் காலிங்கராயன் கால்வாய்மீது காதல் கொண்டதே ஒரு கதைதான்! என் தாயார் திருமதி நல்லம்மாள் சென்னிமலைக் கவுண்டர் காலிங்கராயன் கால்வாயின் உரிமை ஊர்களில் ஒன்றான சாமிநாதபுரம் ‘மேக்கால்’ வீட்டைச் சேர்ந்தவர்கள்: அத் தொடர்பும் ஒரு காரணமாக இருக்கலாம். என் மாமா, அத்தை, அக்கா ஆகியோர் காலிங்கராயன் கால்வாயின் மடியில் தவழும் சாவடிப் பாளையம் புதூரில் உள்ளனர். சாவடிப்பாளையம் புதூர் சென்று காலிங்கராயன் கரையில் மாமாவின் தோட்டத்து மாமரத்தில் மாங்காய் பறிக்கும்போதும், அத்தை வீட்டாரோடு நட்டாற்றீசுவரன் கோயில் செல்லும்போதும் என் மாமாமார்களான சொங்கப்பன், குமாரசாமி, எஸ். பி. கந்தசாமி ஆகியோர் என்னிடம் இளமையில் கூறியவை: ‘இதோ! இந்தக் காலிங்கராயன் கால்வாய் உங்கள் பங்காளி வெட்டியது; இதன் தண்ணீரை நீங்கள் குடிக்கக் கூடாது. இக் கால்வாயில் விளையும் நெல்லைக் கூடச் சாப்பிடக் கூடாது'<noinclude></noinclude> cng9zueccraudcz169vs3pwynitnq4c பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/6 250 456441 1834855 1444119 2025-06-24T05:30:09Z Mohanraj20 15516 1834855 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}} என்ற தொடர்கள்! இளமையில் கால்வாய்க் கரையில் எனக்கு அறிவுறுத்தப்பட்ட இச் சொற்களே இவ்வரலாறு உருவாவதற்கு விதையாகியது எனலாம். ::ஞானிபாளையத்தில் நான்காம் வகுப்பை முடித்து ஈரோட்டில் மூத்த சகோதரியார் திருமதி மீனாட்சி சுப்பராயன் அவர்கள் வீட்டிலிருந்து 'போர்டிங்' பள்ளிக் கூடம் என அழைக்கப்பட்ட லண்டன் மிஷன் சமுதாய நடு நிலைப் பள்ளியிலும், செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியிலும் படிக்கும்போது ஈரோடு வாட்டர் ஒர்க்சிலும், காரை வாய்க்கால் மைதானத்திலும் சக மாணவர்களோடு காலிங்கராயன் கரையில் விளையாடும்போது மீண்டும் காலிங்கராயன் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. 1959 இல் ஈரோட்டில் ஆசிரியப் பணியுடன் ஆராய்ச்சிப் பணியும் தொடங்கியது. முதல் ஆய்வு காலிங்கராயன் பற்றியது தான். அமரர் என் குருநாதர் எழுமாத்தூர் வேலம்பாளையம் பெரும்புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் ஆய்வை ஆசி கூறித் தொடங்கி வைத்தார்கள். பழைய நூலகங்கள், ஆவணக் காப்பகம், சுவடி நூலகம், புலவர் இல்லங்கள், கோயில்கள், செவிவழிச் செய்திகள், பெரியவர்களுடன் உரையாடல் மூலம் பல செய்திகள் கிடைத்தன. புலவர்கள் வெ.க. பச்சையப்பன், இரா. சி. சென்னியப்பன் ஆய்வில் உடன் வந்து உதவினர். 1963ல் குமாரபாளையம் அரசினர் பயிற்சிக் கல்லூரி மலரில் ‘காலிங்கராயன் கால்வாய்’ என்ற முதல் கட்டுரையை எழுதினேன். பலர் பாராட்டினர். நூல் வடிவாக்கத் தூண்டினர். 1966 இல் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கிலும், 1967ல் வெளிவந்த ‘எங்கள் பவானி’ என்னும் நூலிலும், ‘கொங்குமலர்’ ‘கொங்கு நண்பன்’ ‘கொங்கு’ ஆகிய இதழ்களிலும், ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவை, சுழற்குழு,<noinclude></noinclude> 9wuxsqikcg4ro45ww8eojdz3s39x4t3 1834861 1834855 2025-06-24T05:47:54Z Mohanraj20 15516 1834861 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}} என்ற தொடர்கள்! இளமையில் கால்வாய்க் கரையில் எனக்கு அறிவுறுத்தப்பட்ட இச் சொற்களே இவ்வரலாறு உருவாவதற்கு விதையாகியது எனலாம். ::ஞானிபாளையத்தில் நான்காம் வகுப்பை முடித்து ஈரோட்டில் மூத்த சகோதரியார் திருமதி மீனாட்சி சுப்பராயன் அவர்கள் வீட்டிலிருந்து 'போர்டிங்' பள்ளிக் கூடம் என அழைக்கப்பட்ட லண்டன் மிஷன் சமுதாய நடு நிலைப் பள்ளியிலும், செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியிலும் படிக்கும்போது ஈரோடு வாட்டர் ஒர்க்சிலும், காரை வாய்க்கால் மைதானத்திலும் சக மாணவர்களோடு காலிங்கராயன் கரையில் விளையாடும்போது மீண்டும் காலிங்கராயன் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. ::1959 இல் ஈரோட்டில் ஆசிரியப் பணியுடன் ஆராய்ச்சிப் பணியும் தொடங்கியது. முதல் ஆய்வு காலிங்கராயன் பற்றியது தான். அமரர் என் குருநாதர் எழுமாத்தூர் வேலம்பாளையம் பெரும்புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் ஆய்வை ஆசி கூறித் தொடங்கி வைத்தார்கள். ::பழைய நூலகங்கள், ஆவணக் காப்பகம், சுவடி நூலகம், புலவர் இல்லங்கள், கோயில்கள், செவிவழிச் செய்திகள், பெரியவர்களுடன் உரையாடல் மூலம் பல செய்திகள் கிடைத்தன. புலவர்கள் வெ.க. பச்சையப்பன், இரா. சி. சென்னியப்பன் ஆய்வில் உடன் வந்து உதவினர். ::1963ல் குமாரபாளையம் அரசினர் பயிற்சிக் கல்லூரி மலரில் ‘காலிங்கராயன் கால்வாய்’ என்ற முதல் கட்டுரையை எழுதினேன். பலர் பாராட்டினர். நூல் வடிவாக்கத் தூண்டினர். ::1966 இல் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கிலும், 1967ல் வெளிவந்த ‘எங்கள் பவானி’ என்னும் நூலிலும், ‘கொங்குமலர்’ ‘கொங்கு நண்பன்’ ‘கொங்கு’ ஆகிய இதழ்களிலும், ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவை, சுழற்குழு,<noinclude></noinclude> gldnm5xqi2578d8dvunyt7s699xzuhd 1834869 1834861 2025-06-24T05:57:26Z Mohanraj20 15516 1834869 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||5|}}</noinclude>என்ற தொடர்கள்! இளமையில் கால்வாய்க் கரையில் எனக்கு அறிவுறுத்தப்பட்ட இச் சொற்களே இவ்வரலாறு உருவாவதற்கு விதையாகியது எனலாம். ஞானிபாளையத்தில் நான்காம் வகுப்பை முடித்து ஈரோட்டில் மூத்த சகோதரியார் திருமதி மீனாட்சி சுப்பராயன் அவர்கள் வீட்டிலிருந்து ‘போர்டிங்’ பள்ளிக் கூடம் என அழைக்கப்பட்ட லண்டன் மிஷன் சமுதாய நடு நிலைப் பள்ளியிலும், செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியிலும் படிக்கும்போது ஈரோடு வாட்டர் ஒர்க்சிலும், காரை வாய்க்கால் மைதானத்திலும் சக மாணவர்களோடு காலிங்கராயன் கரையில் விளையாடும்போது மீண்டும் காலிங்கராயன் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. 1959 இல் ஈரோட்டில் ஆசிரியப் பணியுடன் ஆராய்ச்சிப் பணியும் தொடங்கியது. முதல் ஆய்வு காலிங்கராயன் பற்றியது தான். அமரர் என் குருநாதர் எழுமாத்தூர் வேலம்பாளையம் பெரும்புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் ஆய்வை ஆசி கூறித் தொடங்கி வைத்தார்கள். பழைய நூலகங்கள், ஆவணக் காப்பகம், சுவடி நூலகம், புலவர் இல்லங்கள், கோயில்கள், செவிவழிச் செய்திகள், பெரியவர்களுடன் உரையாடல் மூலம் பல செய்திகள் கிடைத்தன. புலவர்கள் வெ.க. பச்சையப்பன், இரா. சி. சென்னியப்பன் ஆய்வில் உடன் வந்து உதவினர். 1963ல் குமாரபாளையம் அரசினர் பயிற்சிக் கல்லூரி மலரில் ‘காலிங்கராயன் கால்வாய்’ என்ற முதல் கட்டுரையை எழுதினேன். பலர் பாராட்டினர். நூல் வடிவாக்கத் தூண்டினர். 1966 இல் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கிலும், 1967ல் வெளிவந்த ‘எங்கள் பவானி’ என்னும் நூலிலும், ‘கொங்குமலர்’ ‘கொங்கு நண்பன்’ ‘கொங்கு’ ஆகிய இதழ்களிலும், ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவை, சுழற்குழு,<noinclude></noinclude> 4h1nz8w22u3ce2vdzthkjbhpprmsat3 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/7 250 456442 1834875 1444120 2025-06-24T06:06:54Z Mohanraj20 15516 1834875 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||6|}}</noinclude>ஆசிரியர் மையம் போன்ற இடங்களிலும் விரிவாகப் பலகோணங்களில் காலிங்கராயன் கால்வாய் பற்றி எழுதும், பேசும் வாய்ப்புக் கிடைத்தது. என்றாவது இவ்வரலாறு விரிவான நூல் வடிவம் பெறவேண்டும் என அந்நாளில் பலர் விரும்பினர். மக்களிடையே கால்வாய் வரலாறு மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியது. அமரர் வி. எம். கைலாசக் கவுண்டர் அவர்கள் பல இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்ய வசதி செய்து தந்தார்கள். டாக்டர் எல். கே. முத்துசாமி, பொள்ளாச்சி பாராளுமன்றத் தேர்தலில் திரு. மோகன்ராஜ் காலிங்கராயர் போட்டியிட்டபோது நான் எழுதிய சிறு நூலை 25000 பிரதிகள் வெளியிட்டமு. சின்னசாமி, சி. துரைசாமி போன்றவர்கள் இவ்வரலாறு நூல் வடிவம் பெற விரும்பினர். என்பால் அன்பு கொண்டு உரையாடும் போது கருப்பண கவுண்டர், எஸ். ஆர் .பி. ராஜப்பா, செங்கோட கவுண்டர், ஏ.பி. சின்னசாமி, டாக்டர் பொ. இளங்கோ போன்ற சாத்தந்தை குலப் பெருமக்கள் ‘நூல் எழுதுக’ என்று தூண்டினர். நூல் வடிவம் பெற்று வெளி வரும்போது இப்பெருமக்கள் இன்று இல்லையே என்று ஏங்குகின்றேன். அப்பெருமக்கள் ஆசிதான் என் கனவு நனவாகியதற்குக் காரணமாகும். சித்தோடு திரு. குமார நடவரச ஈவப்பனார் அவர்கள் பல்லாண்டுகள் முன்பே வரலாறு நூல் வடிவம் பெற விரும்பினார். பாலமடை அம்மன் கோயில் திருப்பணி செய்த திரு யு. ஆர். சின்னசாமிக் கவுண்டர், டாக்டர் நல்லசாமி, டாக்டர் நடராசன் போன்றவர்கள் இம் முயற்சியை வரவேற்றனர். திரு கே. ஆர். நல்லசிவம், எழுமாத்தூர் சென்னியப்பன், சிவகிரி பழனிசாமி ஆகியோர் கொங்கு விவசாயிகள் அனைவரும் ஆதரிக்க வேண்டிய அரிய முயற்சி என்று பாராட்டுரைத்தனர்.<noinclude></noinclude> az1ekgyepqawq192hkud71d8z0jcahd பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/339 250 464186 1834771 1834492 2025-06-24T02:35:49Z மொஹமது கராம் 14681 1834771 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|326||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>செம் பொற் கச்சையர்{{float_right|பெருங். 1.39:31}} வரிக் குப்பாயத்து வார் பொற்கச்சையர்{{float_right|பெருங். 1.40:378}} மட்டப் பூந்துகிற் கட்டளைக் கச்சையர்{{float_right|பெருங். 1.4:198}} செறிமென் கச்சை சேர்ந்த அல்குலர்{{float_right|பெருங். 1.43:126}} வீக்கிய கச்சையர்{{float_right|பெருங். 1.46:18}} உற்றோனுற்ற உறுகண் டீர்க்கென கற்றோய் கலிங்கம் கட்டிய கச்சையன்{{float_right|பெருங். 1.46:96-7}} திண்மை செறிவில் சேடக மகளிர் தன்மை கூடுக்குந் தானைக் கச்சையர்{{float_right|பெருங். 1.46:242-43}} வாடாத் தாரினர் சேடார் கச்சையர்{{float_right|பெருங். 2.6:124}} குறுக்கை புக்க கொளுவமை கச்சையன்{{float_right|பெருங். 2.18:18}} நீலக் கச்சை நிறைகழல் மறவரை{{float_right|பெருங். 3.17:237}} தேனெறி குன்ற மொத்த திண் கச்சை துணிந்த வேழம்{{float_right|சீவக. 800}} கழலன் காழகம் வீக்கிய கச்சையன்{{float_right|சீவக. 939}} கச்சையும் வீக்கினன் கறங்கிரு மணி அணிந்து கச்சையங் கடகரி கழுத்தின் கண்உற ஆயிடை வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர் மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர் சீவக.1836 கம்ப. 1424 சூளா.92 கச்சை யானை மானவேற் கண்ணிலங்கு தாரினான் சூளா.139 சூளா.376 வரிந்த கச்சைய னொருவன் வந்து வண்டு இரிந்து பாய சூளா.583 மணித் தொடர் மருங்கின் வீழ்த்து வரிபுரிக் கச்சை வீக்கி சூளா.913 கட்டிய கழலார் தாழ்ந்த கச்சையர் கனலும் வாளர் சூளா.916 கச்சையங் களிநல் யானை காவலன் கனன்று சொன்னான் சூளா.1157 கச்சையங் கவிற் றோடேன னைக் கவனமா வலத்தினாலும் சூளா.1189 </poem><noinclude></noinclude> tn3ztrcnof1zrdjw6zcm76144ibqnna 1834772 1834771 2025-06-24T02:40:36Z மொஹமது கராம் 14681 1834772 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|326||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>செம் பொற் கச்சையர்{{float_right|பெருங். 1.39:31}} வரிக் குப்பாயத்து வார் பொற்கச்சையர்{{float_right|பெருங். 1.40:378}} மட்டப் பூந்துகிற் கட்டளைக் கச்சையர்{{float_right|பெருங். 1.4:198}} செறிமென் கச்சை சேர்ந்த அல்குலர்{{float_right|பெருங். 1.43:126}} வீக்கிய கச்சையர்{{float_right|பெருங். 1.46:18}} உற்றோனுற்ற உறுகண் டீர்க்கென கற்றோய் கலிங்கம் கட்டிய கச்சையன்{{float_right|பெருங். 1.46:96-7}} திண்மை செறிவில் சேடக மகளிர் தன்மை கூடுக்குந் தானைக் கச்சையர்{{float_right|பெருங். 1.46:242-43}} வாடாத் தாரினர் சேடார் கச்சையர்{{float_right|பெருங். 2.6:124}} குறுக்கை புக்க கொளுவமை கச்சையன்{{float_right|பெருங். 2.18:18}} நீலக் கச்சை நிறைகழல் மறவரை{{float_right|பெருங். 3.17:237}} தேனெறி குன்ற மொத்த திண் கச்சை துணிந்த வேழம்{{float_right|சீவக. 800}} கழலன் காழகம் வீக்கிய கச்சையன்{{float_right|சீவக. 939}} கச்சையும் வீக்கினன் கறங்கிரு மணி அணிந்து{{float_right|சீவக. 1836}} கச்சையங் கடகரி கழுத்தின் கண்உற{{float_right|கம்ப. 1424}} ஆயிடை வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர்{{float_right|சூளா. 92}} கச்சை யானை மானவேற் கண்ணிலங்கு தாரினான்{{float_right|சூளா. 139}} மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர்{{float_right|சூளா. 376}} வரிந்த கச்சைய னொருவன் வந்து வண்டு இரிந்து பாய{{float_right|சூளா. 583}} மணித் தொடர் மருங்கின் வீழ்த்து வரிபுரிக் கச்சை வீக்கி{{float_right|சூளா. 913}} கட்டிய கழலார் தாழ்ந்த கச்சையர் கனலும் வாளர்{{float_right|சூளா. 916}} கச்சையங் களிநல் யானை காவலன் கனன்று சொன்னான்{{float_right|சூளா. 1157}} கச்சையங் கவிற் றோடேனைக் கவனமா வலத்தினாலும்{{float_right|சூளா. 1189}}</poem><noinclude></noinclude> oms0oevlamot6qt124jb22d06rzrb48 1834773 1834772 2025-06-24T02:41:08Z மொஹமது கராம் 14681 1834773 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|326||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>செம் பொற் கச்சையர்{{float_right|பெருங். 1.39:31}} வரிக் குப்பாயத்து வார் பொற்கச்சையர்{{float_right|பெருங். 1.40:378}} மட்டப் பூந்துகிற் கட்டளைக் கச்சையர்{{float_right|பெருங். 1.4:198}} செறிமென் கச்சை சேர்ந்த அல்குலர்{{float_right|பெருங். 1.43:126}} வீக்கிய கச்சையர்{{float_right|பெருங். 1.46:18}} உற்றோனுற்ற உறுகண் டீர்க்கென கற்றோய் கலிங்கம் கட்டிய கச்சையன்{{float_right|பெருங். 1.46:96-7}} திண்மை செறிவில் சேடக மகளிர் தன்மை கூடுக்குந் தானைக் கச்சையர்{{float_right|பெருங். 1.46:242-43}} வாடாத் தாரினர் சேடார் கச்சையர்{{float_right|பெருங். 2.6:124}} குறுக்கை புக்க கொளுவமை கச்சையன்{{float_right|பெருங். 2.18:18}} நீலக் கச்சை நிறைகழல் மறவரை{{float_right|பெருங். 3.17:237}} தேனெறி குன்ற மொத்த திண் கச்சை துணிந்த வேழம்{{float_right|சீவக. 800}} கழலன் காழகம் வீக்கிய கச்சையன்{{float_right|சீவக. 939}} கச்சையும் வீக்கினன் கறங்கிரு மணி அணிந்து{{float_right|சீவக. 1836}} கச்சையங் கடகரி கழுத்தின் கண்உற{{float_right|கம்ப. 1424}} ஆயிடை வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர்{{float_right|சூளா. 92}} கச்சை யானை மானவேற் கண்ணிலங்கு தாரினான்{{float_right|சூளா. 139}} மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர்{{float_right|சூளா. 376}} வரிந்த கச்சைய னொருவன் வந்து வண்டு இரிந்து பாய{{float_right|சூளா. 583}} மணித் தொடர் மருங்கின் வீழ்த்து வரிபுரிக் கச்சை வீக்கி{{float_right|சூளா. 913}} கட்டிய கழலார் தாழ்ந்த கச்சையர் கனலும் வாளர்{{float_right|சூளா. 916}} கச்சையங் களிநல் யானை காவலன் கனன்று சொன்னான்{{float_right|சூளா. 1157}} கச்சையங் கவிற் றோடேனைக் கவனமா வலத்தினாலும்{{float_right|சூளா. 1189}}</poem><noinclude></noinclude> drmuavmkgen549cu831kv674kuab8js 1834774 1834773 2025-06-24T02:41:27Z மொஹமது கராம் 14681 1834774 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|326||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>செம் பொற் கச்சையர்{{float_right|பெருங். 1.39:31}} வரிக் குப்பாயத்து வார் பொற்கச்சையர்{{float_right|பெருங். 1.40:378}} மட்டப் பூந்துகிற் கட்டளைக் கச்சையர்{{float_right|பெருங். 1.4:198}} செறிமென் கச்சை சேர்ந்த அல்குலர்{{float_right|பெருங். 1.43:126}} வீக்கிய கச்சையர்{{float_right|பெருங். 1.46:18}} உற்றோனுற்ற உறுகண் டீர்க்கென கற்றோய் கலிங்கம் கட்டிய கச்சையன்{{float_right|பெருங். 1.46:96-7}} திண்மை செறிவில் சேடக மகளிர் தன்மை கூடுக்குந் தானைக் கச்சையர்{{float_right|பெருங். 1.46:242-43}} வாடாத் தாரினர் சேடார் கச்சையர்{{float_right|பெருங். 2.6:124}} குறுக்கை புக்க கொளுவமை கச்சையன்{{float_right|பெருங். 2.18:18}} நீலக் கச்சை நிறைகழல் மறவரை{{float_right|பெருங். 3.17:237}} தேனெறி குன்ற மொத்த திண் கச்சை துணிந்த வேழம்{{float_right|சீவக. 800}} கழலன் காழகம் வீக்கிய கச்சையன்{{float_right|சீவக. 939}} கச்சையும் வீக்கினன் கறங்கிரு மணி அணிந்து{{float_right|சீவக. 1836}} கச்சையங் கடகரி கழுத்தின் கண்உற{{float_right|கம்ப. 1424}} ஆயிடை வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர்{{float_right|சூளா. 92}} கச்சை யானை மானவேற் கண்ணிலங்கு தாரினான்{{float_right|சூளா. 139}} மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர்{{float_right|சூளா. 376}} வரிந்த கச்சைய னொருவன் வந்து வண்டு இரிந்து பாய{{float_right|சூளா. 583}} மணித் தொடர் மருங்கின் வீழ்த்து வரிபுரிக் கச்சை வீக்கி{{float_right|சூளா. 913}} கட்டிய கழலார் தாழ்ந்த கச்சையர் கனலும் வாளர்{{float_right|சூளா. 916}} கச்சையங் களிநல் யானை காவலன் கனன்று சொன்னான்{{float_right|சூளா. 1157}} கச்சையங் கவிற் றோடேனைக் கவனமா வலத்தினாலும்{{float_right|சூளா. 1189}}</poem><noinclude></noinclude> omcf598r8xggu0tdd5wem4r5g3rd25t 1834775 1834774 2025-06-24T02:42:12Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834775 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|326||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>செம் பொற் கச்சையர்{{float_right|பெருங். 1.39:31}} வரிக் குப்பாயத்து வார் பொற்கச்சையர்{{float_right|பெருங். 1.40:378}} மட்டப் பூந்துகிற் கட்டளைக் கச்சையர்{{float_right|பெருங். 1.4:198}} செறிமென் கச்சை சேர்ந்த அல்குலர்{{float_right|பெருங். 1.43:126}} வீக்கிய கச்சையர்{{float_right|பெருங். 1.46:18}} உற்றோனுற்ற உறுகண் டீர்க்கென கற்றோய் கலிங்கம் கட்டிய கச்சையன்{{float_right|பெருங். 1.46:96-7}} திண்மை செறிவில் சேடக மகளிர் தன்மை கூடுக்குந் தானைக் கச்சையர்{{float_right|பெருங். 1.46:242-43}} வாடாத் தாரினர் சேடார் கச்சையர்{{float_right|பெருங். 2.6:124}} குறுக்கை புக்க கொளுவமை கச்சையன்{{float_right|பெருங். 2.18:18}} நீலக் கச்சை நிறைகழல் மறவரை{{float_right|பெருங். 3.17:237}} தேனெறி குன்ற மொத்த திண் கச்சை துணிந்த வேழம்{{float_right|சீவக. 800}} கழலன் காழகம் வீக்கிய கச்சையன்{{float_right|சீவக. 939}} கச்சையும் வீக்கினன் கறங்கிரு மணி அணிந்து{{float_right|சீவக. 1836}} கச்சையங் கடகரி கழுத்தின் கண்உற{{float_right|கம்ப. 1424}} ஆயிடை வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர்{{float_right|சூளா. 92}} கச்சை யானை மானவேற் கண்ணிலங்கு தாரினான்{{float_right|சூளா. 139}} மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர்{{float_right|சூளா. 376}} வரிந்த கச்சைய னொருவன் வந்து வண்டு இரிந்து பாய{{float_right|சூளா. 583}} மணித் தொடர் மருங்கின் வீழ்த்து வரிபுரிக் கச்சை வீக்கி{{float_right|சூளா. 913}} கட்டிய கழலார் தாழ்ந்த கச்சையர் கனலும் வாளர்{{float_right|சூளா. 916}} கச்சையங் களிநல் யானை காவலன் கனன்று சொன்னான்{{float_right|சூளா. 1157}} கச்சையங் கவிற் றோடேனைக் கவனமா வலத்தினாலும்{{float_right|சூளா. 1189}}</poem><noinclude></noinclude> isxaya5rcsb6zhr4k2vo03ds3k7d00f 1834776 1834775 2025-06-24T02:42:46Z மொஹமது கராம் 14681 1834776 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|326||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>செம் பொற் கச்சையர்{{float_right|பெருங். 1.39:31}} வரிக் குப்பாயத்து வார் பொற்கச்சையர்{{float_right|பெருங். 1.40:378}} மட்டப் பூந்துகிற் கட்டளைக் கச்சையர்{{float_right|பெருங். 1.4:198}} செறிமென் கச்சை சேர்ந்த அல்குலர்{{float_right|பெருங். 1.43:126}} வீக்கிய கச்சையர்{{float_right|பெருங். 1.46:18}} உற்றோனுற்ற உறுகண் டீர்க்கென கற்றோய் கலிங்கம் கட்டிய கச்சையன்{{float_right|பெருங். 1.46:96-7}} திண்மை செறிவில் சேடக மகளிர் தன்மை கூடுக்குந் தானைக் கச்சையர்{{float_right|பெருங். 1.46:242-43}} வாடாத் தாரினர் சேடார் கச்சையர்{{float_right|பெருங். 2.6:124}} குறுக்கை புக்க கொளுவமை கச்சையன்{{float_right|பெருங். 2.18:18}} நீலக் கச்சை நிறைகழல் மறவரை{{float_right|பெருங். 3.17:237}} தேனெறி குன்ற மொத்த திண் கச்சை துணிந்த வேழம்{{float_right|சீவக. 800}} கழலன் காழகம் வீக்கிய கச்சையன்{{float_right|சீவக. 939}} கச்சையும் வீக்கினன் கறங்கிரு மணி அணிந்து{{float_right|சீவக. 1836}} கச்சையங் கடகரி கழுத்தின் கண்உற{{float_right|கம்ப. 1424}} ஆயிடை வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர்{{float_right|சூளா. 92}} கச்சை யானை மானவேற் கண்ணிலங்கு தாரினான்{{float_right|சூளா. 139}} மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர்{{float_right|சூளா. 376}} வரிந்த கச்சைய னொருவன் வந்து வண்டு இரிந்து பாய{{float_right|சூளா. 583}} மணித் தொடர் மருங்கின் வீழ்த்து வரிபுரிக் கச்சை வீக்கி{{float_right|சூளா. 913}} கட்டிய கழலார் தாழ்ந்த கச்சையர் கனலும் வாளர்{{float_right|சூளா. 916}} கச்சையங் களிநல் யானை காவலன் கனன்று சொன்னான்{{float_right|சூளா. 1157}} கச்சையங் கவிற் றோடேனைக் கவனமா வலத்தினாலும்{{float_right|சூளா. 1189}}</poem><noinclude></noinclude> 7x7pnn2hr3xs4h6kysoaedzbimjkpf6 1834777 1834776 2025-06-24T02:43:02Z மொஹமது கராம் 14681 1834777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|326||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>செம் பொற் கச்சையர்{{float_right|பெருங். 1.39:31}} வரிக் குப்பாயத்து வார் பொற்கச்சையர்{{float_right|பெருங். 1.40:378}} மட்டப் பூந்துகிற் கட்டளைக் கச்சையர்{{float_right|பெருங். 1.4:198}} செறிமென் கச்சை சேர்ந்த அல்குலர்{{float_right|பெருங். 1.43:126}} வீக்கிய கச்சையர்{{float_right|பெருங். 1.46:18}} உற்றோனுற்ற உறுகண் டீர்க்கென கற்றோய் கலிங்கம் கட்டிய கச்சையன்{{float_right|பெருங். 1.46:96-7}} திண்மை செறிவில் சேடக மகளிர் தன்மை கூடுக்குந் தானைக் கச்சையர்{{float_right|பெருங். 1.46:242-43}} வாடாத் தாரினர் சேடார் கச்சையர்{{float_right|பெருங். 2.6:124}} குறுக்கை புக்க கொளுவமை கச்சையன்{{float_right|பெருங். 2.18:18}} நீலக் கச்சை நிறைகழல் மறவரை{{float_right|பெருங். 3.17:237}} தேனெறி குன்ற மொத்த திண் கச்சை துணிந்த வேழம்{{float_right|சீவக. 800}} கழலன் காழகம் வீக்கிய கச்சையன்{{float_right|சீவக. 939}} கச்சையும் வீக்கினன் கறங்கிரு மணி அணிந்து{{float_right|சீவக. 1836}} கச்சையங் கடகரி கழுத்தின் கண்உற{{float_right|கம்ப. 1424}} ஆயிடை வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர்{{float_right|சூளா. 92}} கச்சை யானை மானவேற் கண்ணிலங்கு தாரினான்{{float_right|சூளா. 139}} மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர்{{float_right|சூளா. 376}} வரிந்த கச்சைய னொருவன் வந்து வண்டு இரிந்து பாய{{float_right|சூளா. 583}} மணித் தொடர் மருங்கின் வீழ்த்து வரிபுரிக் கச்சை வீக்கி{{float_right|சூளா. 913}} கட்டிய கழலார் தாழ்ந்த கச்சையர் கனலும் வாளர்{{float_right|சூளா. 916}} கச்சையங் களிநல் யானை காவலன் கனன்று சொன்னான்{{float_right|சூளா. 1157}} கச்சையங் கவிற் றோடேனைக் கவனமா வலத்தினாலும்{{float_right|சூளா. 1189}}</poem><noinclude></noinclude> lzky3izu9gwwpy7zzmrduy9m3iwiz7c பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/340 250 464189 1834778 1498773 2025-06-24T02:53:26Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834778 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||327}}</noinclude><poem>அச்சுவக் கிரீவனுக்கு இளைய காளையர் கச்சையங் கருங்களி யானை வல்லவர்{{float_right|சூளா. 1260}} கைவலப் படையர் கழலர் கச்சையர்{{float_right|சூளா. 1270}} கச்சையர் கருங்கழலர் காலனையு நோனார்{{float_right|சூளா. 1279}} வரிந்துவீழ் கச்சையின் வளைந்த தாடியன்{{float_right|சூளா. 1420}} {{larger|<b>கஞ்சுகம்</b>}} கஞ்சுக முதல்வர் ஈரைந் நூற்றுவர்{{float_right|சிலப். 27:188}} நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்{{float_right|சிலப். 28:80}} கஞ்சயன் முதலாத் தலைக் கீடு பெற்ற கஞ்சுக முதல்வர் ஈரைந் நூற்றுவரும்{{float_right|சிலப். 26:137-38}} கஞ்சுக மாக்கள் எஞ்சா நாவினர்{{float_right|சிலப். 26:166-67}} காவலற் றொழுது கஞ்சுகனுரைப்போன்{{float_right|மணி. 25:11}} கைதொழுதிறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன்{{float_right|மணி. 28:178}} காவன் மாக்களும் காஞ்சுகி முதியரும்{{float_right|பெருங். 1.44:111}} காஞ்சுகி முதியர்{{float_right|பெருங். 1.46:318}} காஞ்சுகி முதியர்{{float_right|பெருங். 1.47:167}} அச்சுறு நோக்கினறுபது கழிந்த கஞ்சுகி மாக்கள் சோர்ந்து புடைகாப்ப{{float_right|பெருங். 3.5:109-10}} நண்பிற் றிரியாது பண்பொடு புணர்ந்த காஞ்சுகி மாந்தரும் தாம் சென்று தருகென{{float_right|பெருங். 4.15:145-6}} காஞ்சுகி மாந்தர்க்கு ஓம்படை கூறி{{float_right|பெருங். 4.16:45}} பாதக இருள் செய் கஞ்சுகமும் பற்றலால் சாதகர் என்னவும் தகைத்து அம்மாலையே{{float_right|கம்ப. 626}} தாழ்ந்து விரிந்த கஞ்சுகத்து மெய்யார்{{float_right|கம்ப. 880}} கற்றைச் சுடர் விட்டெரி கஞ்சுகியான்{{float_right|கம்ப. ஆரணிய. 83}} மின்னுடை வேத்திரக் கையர் மெய்புகத் துன்னிடு கஞ்சுகத் துகிலர்{{float_right|கம்ப. ஆரணிய. 569}} முற்றும் மூடிய கஞ்சுகன் மூட்டிய வெற்று அனல் பொழி கண்ணினன்{{float_right|கம்ப. ஆரணிய. 6926}} நஞ்சு கக்கி எரி கண்ணினர் நாமக் கஞ்சுகத்தர் சுதை பற்றிய கையர்{{float_right|கம்ப. 7000}}</poem><noinclude></noinclude> 34hu911s2csppgzfibhb8yjosg31nn3 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/341 250 464190 1834781 1498774 2025-06-24T03:01:05Z மொஹமது கராம் 14681 1834781 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|328||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>கஞ்சுகி அயல் நின்றானை, ஈண்டு நம் தூதர் தம்மை{{float_right|கம்ப. 7404}} கஞ்சுகியவர் கண்மெய் காவல் ஓம்பினார்{{float_right|சூளா. 92}} தொண்டை தொலைவித்தத் துவர்வாய் மகளிர் சூழக் கண்டு வளர் தாயரொடு கஞ்சுகியவர் காப்ப{{float_right|சூளா. 867}} கஞ்சுகி மாந்தரும் காவன் முதியரும்{{float_right|சூளா. 1648}} விஞ்சையர் மடந்தையர் விளங்கு மேனியர் கஞ்சுகி அவரொடு மிழிந்து{{float_right|சூளா. 1276}} கஞ்சுக முகத்த முலைக்கச்சு மிக வீக்கி{{float_right|சூளா. 1796}} அரசனுக்கு வெப்படுத்தது என்றருகு கஞ்சுகிகள் உரைசெயப் பதைத்து ஒருதனித் தேவியர் புகுத{{float_right|பெரிய. திருஞான. 710}} ஆம்பவளத் திருமேனிக் கஞ்சுகத்தின் அணிவிளங்க{{float_right|சிறுத். 31}} {{larger|<b>கம்பல்</b>}} தீருத்தறைந்த தலையுந் தன் கம்பலும்{{float_right|கலித். 65}} {{larger|<b>கம்பலம்</b>}} கம்பலத்தன்ன மைம்பயிர்த்தா{{float_right|நற். 24}} கடிமலர் மாலை நாற்றிக் கம்பல விதானம் கோலி{{float_right|சீவக. 837}} சேண் குலாம் கம்பலம் செய்ய தொன்றனால் மாண் குலாங் குணத்தினாள் மறைத் திட்டாளரோ{{float_right|சீவக. 2233}} செந் நெருப்புணுஞ் செவ்வெலிம் மயிர் அந் நெருப்பளவாய் பொற் கம்பலம் மன்னருய்ப்பன மகிழ்ந்து தாங்கினார்{{float_right|சீவக. 2686}} நிலவிய தாது பொங்க நீண்மலர் மணலிற்போத்துக் கலவியிற் படுத்த தாப்பொற் கம்பல மொத்த தன்றோ{{float_right|சீவக. 2711}} {{larger|<b>கருவி</b>}} கையமைத் திளைஞருங் கருவி வீசினார் கலிங்கம் கலிங்கம் துயல்வர, செடி தொடிதெளிர்ப்ப வீசி புகாப் புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு மாசுபட்டன்றே கலிங்கமும் தோளும் சீவக. 2214 நற்.20 நற்.90 நற்.380</poem><noinclude></noinclude> f1iddcm2js79x2dyjpap9v3mkl6f1j0 1834782 1834781 2025-06-24T03:01:29Z மொஹமது கராம் 14681 1834782 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|328||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>கஞ்சுகி அயல் நின்றானை, ஈண்டு நம் தூதர் தம்மை{{float_right|கம்ப. 7404}} கஞ்சுகியவர் கண்மெய் காவல் ஓம்பினார்{{float_right|சூளா. 92}} தொண்டை தொலைவித்தத் துவர்வாய் மகளிர் சூழக் கண்டு வளர் தாயரொடு கஞ்சுகியவர் காப்ப{{float_right|சூளா. 867}} கஞ்சுகி மாந்தரும் காவன் முதியரும்{{float_right|சூளா. 1648}} விஞ்சையர் மடந்தையர் விளங்கு மேனியர் கஞ்சுகி அவரொடு மிழிந்து{{float_right|சூளா. 1276}} கஞ்சுக முகத்த முலைக்கச்சு மிக வீக்கி{{float_right|சூளா. 1796}} அரசனுக்கு வெப்படுத்தது என்றருகு கஞ்சுகிகள் உரைசெயப் பதைத்து ஒருதனித் தேவியர் புகுத{{float_right|பெரிய. திருஞான. 710}} ஆம்பவளத் திருமேனிக் கஞ்சுகத்தின் அணிவிளங்க{{float_right|சிறுத். 31}} {{larger|<b>கம்பல்</b>}} தீருத்தறைந்த தலையுந் தன் கம்பலும்{{float_right|கலித். 65}} {{larger|<b>கம்பலம்</b>}} கம்பலத்தன்ன மைம்பயிர்த்தா{{float_right|நற். 24}} கடிமலர் மாலை நாற்றிக் கம்பல விதானம் கோலி{{float_right|சீவக. 837}} சேண் குலாம் கம்பலம் செய்ய தொன்றனால் மாண் குலாங் குணத்தினாள் மறைத் திட்டாளரோ{{float_right|சீவக. 2233}} செந் நெருப்புணுஞ் செவ்வெலிம் மயிர் அந் நெருப்பளவாய் பொற் கம்பலம் மன்னருய்ப்பன மகிழ்ந்து தாங்கினார்{{float_right|சீவக. 2686}} நிலவிய தாது பொங்க நீண்மலர் மணலிற்போத்துக் கலவியிற் படுத்த தாப்பொற் கம்பல மொத்த தன்றோ{{float_right|சீவக. 2711}} {{larger|<b>கருவி</b>}} கையமைத் திளைஞருங் கருவி வீசினார் கலிங்கம் கலிங்கம் துயல்வர, செடி தொடிதெளிர்ப்ப வீசி புகாப் புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு மாசுபட்டன்றே கலிங்கமும் தோளும் சீவக. 2214 நற்.20 நற்.90 நற்.380</poem><noinclude></noinclude> 43mul0g8mea2e8qnui3zn12hg13czmh 1834783 1834782 2025-06-24T03:01:50Z மொஹமது கராம் 14681 1834783 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|328||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>கஞ்சுகி அயல் நின்றானை, ஈண்டு நம் தூதர் தம்மை{{float_right|கம்ப. 7404}} கஞ்சுகியவர் கண்மெய் காவல் ஓம்பினார்{{float_right|சூளா. 92}} தொண்டை தொலைவித்தத் துவர்வாய் மகளிர் சூழக் கண்டு வளர் தாயரொடு கஞ்சுகியவர் காப்ப{{float_right|சூளா. 867}} கஞ்சுகி மாந்தரும் காவன் முதியரும்{{float_right|சூளா. 1648}} விஞ்சையர் மடந்தையர் விளங்கு மேனியர் கஞ்சுகி அவரொடு மிழிந்து{{float_right|சூளா. 1276}} கஞ்சுக முகத்த முலைக்கச்சு மிக வீக்கி{{float_right|சூளா. 1796}} அரசனுக்கு வெப்படுத்தது என்றருகு கஞ்சுகிகள் உரைசெயப் பதைத்து ஒருதனித் தேவியர் புகுத{{float_right|பெரிய. திருஞான. 710}} ஆம்பவளத் திருமேனிக் கஞ்சுகத்தின் அணிவிளங்க{{float_right|சிறுத். 31}} {{larger|<b>கம்பல்</b>}} தீருத்தறைந்த தலையுந் தன் கம்பலும்{{float_right|கலித். 65}} {{larger|<b>கம்பலம்</b>}} கம்பலத்தன்ன மைம்பயிர்த்தா{{float_right|நற். 24}} கடிமலர் மாலை நாற்றிக் கம்பல விதானம் கோலி{{float_right|சீவக. 837}} சேண் குலாம் கம்பலம் செய்ய தொன்றனால் மாண் குலாங் குணத்தினாள் மறைத் திட்டாளரோ{{float_right|சீவக. 2233}} செந் நெருப்புணுஞ் செவ்வெலிம் மயிர் அந் நெருப்பளவாய் பொற் கம்பலம் மன்னருய்ப்பன மகிழ்ந்து தாங்கினார்{{float_right|சீவக. 2686}} நிலவிய தாது பொங்க நீண்மலர் மணலிற்போத்துக் கலவியிற் படுத்த தாப்பொற் கம்பல மொத்த தன்றோ{{float_right|சீவக. 2711}} {{larger|<b>கருவி</b>}} கையமைத் திளைஞருங் கருவி வீசினார் கலிங்கம் கலிங்கம் துயல்வர, செடி தொடிதெளிர்ப்ப வீசி புகாப் புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு மாசுபட்டன்றே கலிங்கமும் தோளும் சீவக. 2214 நற்.20 நற்.90 நற்.380</poem><noinclude></noinclude> q29pu83x957eril3s8pe1zqim2d4l34 1834784 1834783 2025-06-24T03:03:33Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834784 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|328||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>கஞ்சுகி அயல் நின்றானை, ஈண்டு நம் தூதர் தம்மை{{float_right|கம்ப. 7404}} கஞ்சுகியவர் கண்மெய் காவல் ஓம்பினார்{{float_right|சூளா. 92}} தொண்டை தொலைவித்தத் துவர்வாய் மகளிர் சூழக் கண்டு வளர் தாயரொடு கஞ்சுகியவர் காப்ப{{float_right|சூளா. 867}} கஞ்சுகி மாந்தரும் காவன் முதியரும்{{float_right|சூளா. 1648}} விஞ்சையர் மடந்தையர் விளங்கு மேனியர் கஞ்சுகி அவரொடு மிழிந்து{{float_right|சூளா. 1276}} கஞ்சுக முகத்த முலைக்கச்சு மிக வீக்கி{{float_right|சூளா. 1796}} அரசனுக்கு வெப்படுத்தது என்றருகு கஞ்சுகிகள் உரைசெயப் பதைத்து ஒருதனித் தேவியர் புகுத{{float_right|பெரிய. திருஞான. 710}} ஆம்பவளத் திருமேனிக் கஞ்சுகத்தின் அணிவிளங்க{{float_right|சிறுத். 31}} {{larger|<b>கம்பல்</b>}} தீருத்தறைந்த தலையுந் தன் கம்பலும்{{float_right|கலித். 65}} {{larger|<b>கம்பலம்</b>}} கம்பலத்தன்ன மைம்பயிர்த்தா{{float_right|நற். 24}} கடிமலர் மாலை நாற்றிக் கம்பல விதானம் கோலி{{float_right|சீவக. 837}} சேண் குலாம் கம்பலம் செய்ய தொன்றனால் மாண் குலாங் குணத்தினாள் மறைத் திட்டாளரோ{{float_right|சீவக. 2233}} செந் நெருப்புணுஞ் செவ்வெலிம் மயிர் அந் நெருப்பளவாய் பொற் கம்பலம் மன்னருய்ப்பன மகிழ்ந்து தாங்கினார்{{float_right|சீவக. 2686}} நிலவிய தாது பொங்க நீண்மலர் மணலிற்போத்துக் கலவியிற் படுத்த தாப்பொற் கம்பல மொத்த தன்றோ{{float_right|சீவக. 2711}} {{larger|<b>கருவி</b>}} கையமைத் திளைஞருங் கருவி வீசினார்{{float_right|சீவக. 2214}} {{larger|<b>கலிங்கம்</b>}} கலிங்கம் துயல்வர, செடி தொடிதெளிர்ப்ப வீசி{{float_right|நற். 20}} புகாப் புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு{{float_right|நற். 90}} மாசுபட்டன்றே கலிங்கமும் தோளும்{{float_right|நற். 380}}</poem><noinclude></noinclude> qbcxlos3eiz7w96f5c453axvsa9dt1q பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/342 250 464192 1834785 1498776 2025-06-24T03:07:10Z மொஹமது கராம் 14681 1834785 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||329}}</noinclude><poem>கழுவுறு கலிங்கம் கழாஅதுடீஇ{{float_right|குறுந். 167}} நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ{{float_right|பதி. 2:2}} கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி{{float_right|பதி. 8:6}} அல்கலைசில் பூங் கலிங்கத்தள் ஈங்கிதோள் நல்கூர்ந்தார் செல்வ மகள்{{float_right|கலித். 55}} காதல் கொள் வதுவை நாட்கலிங்கத்துள் ஒடுங்கிய{{float_right|கலித். 69}} ஒருத்தி அடிதாழ் கலிங்கம் தழீஇ ஒருகை முடிதாழ் இருங்கூந்தல் பற்றி{{float_right|கலித். 92}} கொடும் புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள்{{float_right|புறம். 86}} முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ{{float_right|புறம். 136}} பாம்புரியன்ன வடிவின காம்பின் கழைபடு சொலியின் இழையணி வாரா ஒண் பூங்கலிங்க முடீஇ புறம். 283 நேர்கரை நுண்ணூற் கலிங்க முடீஇ புறம். 392 பகன்றைப் புதுமலரன்ன அகன்றுமடி கலிங்கம் உடீஇ புறம். 393 பாம்புரித்தன்ன வான்பூங் கலிங்கம் புறம்.397 நலம்பெறு கலிங்கத்துக் குறங்கில் மிசை அசைஇயது ஒருகை காமைஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் நிழல் திகழ் நீலம் நாகம் நல்கிய கலிங்கம் திருமுருகு.109 சிறு. 85-85 சிறு. 95 ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம் இரும் பேரொக்கலோடு ஒருங்குடன் உடீஇ வெயிற் கதிர் விழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச் செக்கரன்ன சிவந்து நுணங்குருவிற் கண் பொரு புகாஉ மொண்பூங்கலிங்கம் புரளும் தானை பொன்னுரை காண்மரும் சுலிங்கம் பகர்நரும் மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப சோறமைவுற்ற நீருடை கலிங்கம் பெரும்.469-70 மது. 431-33 மது. 513 மது. 554 மது. 721</poem><noinclude></noinclude> m1mf0053dwvvf0ylo87koqa5k35i77n 1834786 1834785 2025-06-24T03:09:04Z மொஹமது கராம் 14681 1834786 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||329}}</noinclude><poem>கழுவுறு கலிங்கம் கழாஅதுடீஇ{{float_right|குறுந். 167}} நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ{{float_right|பதி. 2:2}} கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி{{float_right|பதி. 8:6}} அல்கலைசில் பூங் கலிங்கத்தள் ஈங்கிதோள் நல்கூர்ந்தார் செல்வ மகள்{{float_right|கலித். 55}} காதல் கொள் வதுவை நாட்கலிங்கத்துள் ஒடுங்கிய{{float_right|கலித். 69}} ஒருத்தி அடிதாழ் கலிங்கம் தழீஇ ஒருகை முடிதாழ் இருங்கூந்தல் பற்றி{{float_right|கலித். 92}} கொடும் புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள்{{float_right|புறம். 86}} முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ{{float_right|புறம். 136}} பாம்புரியன்ன வடிவின காம்பின் கழைபடு சொலியின் இழையணி வாரா ஒண் பூங்கலிங்க முடீஇ{{float_right|புறம். 283}} நேர்கரை நுண்ணூற் கலிங்க முடீஇ{{float_right|புறம். 392}} பகன்றைப் புதுமலரன்ன அகன்றுமடி கலிங்கம் உடீஇ{{float_right|புறம். 393}} பாம்புரித்தன்ன வான்பூங் கலிங்கம்{{float_right|புறம். 397}} நலம்பெறு கலிங்கத்துக் குறங்கில் மிசை அசைஇயது ஒருகை{{float_right|திருமுருகு. 109}} காமைஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் நிழல் திகழ் நீலம் நாகம் நல்கிய கலிங்கம் சிறு. 85-85 சிறு. 95 ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம் இரும் பேரொக்கலோடு ஒருங்குடன் உடீஇ வெயிற் கதிர் விழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச் செக்கரன்ன சிவந்து நுணங்குருவிற் கண் பொரு புகாஉ மொண்பூங்கலிங்கம் புரளும் தானை பொன்னுரை காண்மரும் சுலிங்கம் பகர்நரும் மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப சோறமைவுற்ற நீருடை கலிங்கம் பெரும்.469-70 மது. 431-33 மது. 513 மது. 554 மது. 721</poem><noinclude></noinclude> kyhv20sut2u4x0vnhdz8huorcgc2k8d 1834787 1834786 2025-06-24T03:09:37Z மொஹமது கராம் 14681 1834787 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||329}}</noinclude><poem>கழுவுறு கலிங்கம் கழாஅதுடீஇ{{float_right|குறுந். 167}} நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ{{float_right|பதி. 2:2}} கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி{{float_right|பதி. 8:6}} அல்கலைசில் பூங் கலிங்கத்தள் ஈங்கிதோள் நல்கூர்ந்தார் செல்வ மகள்{{float_right|கலித். 55}} காதல் கொள் வதுவை நாட்கலிங்கத்துள் ஒடுங்கிய{{float_right|கலித். 69}} ஒருத்தி அடிதாழ் கலிங்கம் தழீஇ ஒருகை முடிதாழ் இருங்கூந்தல் பற்றி{{float_right|கலித். 92}} கொடும் புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள்{{float_right|புறம். 86}} முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ{{float_right|புறம். 136}} பாம்புரியன்ன வடிவின காம்பின் கழைபடு சொலியின் இழையணி வாரா ஒண் பூங்கலிங்க முடீஇ{{float_right|புறம். 283}} நேர்கரை நுண்ணூற் கலிங்க முடீஇ{{float_right|புறம். 392}} பகன்றைப் புதுமலரன்ன அகன்றுமடி கலிங்கம் உடீஇ{{float_right|புறம். 393}} பாம்புரித்தன்ன வான்பூங் கலிங்கம்{{float_right|புறம். 397}} நலம்பெறு கலிங்கத்துக் குறங்கில் மிசை அசைஇயது ஒருகை{{float_right|திருமுருகு. 109}} காமைஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்{{float_right|சிறு. 85-85}} நிழல் திகழ் நீலம் நாகம் நல்கிய கலிங்கம் சிறு. 95 ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம் இரும் பேரொக்கலோடு ஒருங்குடன் உடீஇ வெயிற் கதிர் விழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச் செக்கரன்ன சிவந்து நுணங்குருவிற் கண் பொரு புகாஉ மொண்பூங்கலிங்கம் புரளும் தானை பொன்னுரை காண்மரும் சுலிங்கம் பகர்நரும் மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப சோறமைவுற்ற நீருடை கலிங்கம் பெரும்.469-70 மது. 431-33 மது. 513 மது. 554 மது. 721</poem><noinclude></noinclude> eykxjhbe9r12j5837bpmq4uc6ym5q3g 1834788 1834787 2025-06-24T03:12:14Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834788 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||329}}</noinclude><poem>கழுவுறு கலிங்கம் கழாஅதுடீஇ{{float_right|குறுந். 167}} நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ{{float_right|பதி. 2:2}} கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி{{float_right|பதி. 8:6}} அல்கலைசில் பூங் கலிங்கத்தள் ஈங்கிதோள் நல்கூர்ந்தார் செல்வ மகள்{{float_right|கலித். 55}} காதல் கொள் வதுவை நாட்கலிங்கத்துள் ஒடுங்கிய{{float_right|கலித். 69}} ஒருத்தி அடிதாழ் கலிங்கம் தழீஇ ஒருகை முடிதாழ் இருங்கூந்தல் பற்றி{{float_right|கலித். 92}} கொடும் புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள்{{float_right|புறம். 86}} முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ{{float_right|புறம். 136}} பாம்புரியன்ன வடிவின காம்பின் கழைபடு சொலியின் இழையணி வாரா ஒண் பூங்கலிங்க முடீஇ{{float_right|புறம். 283}} நேர்கரை நுண்ணூற் கலிங்க முடீஇ{{float_right|புறம். 392}} பகன்றைப் புதுமலரன்ன அகன்றுமடி கலிங்கம் உடீஇ{{float_right|புறம். 393}} பாம்புரித்தன்ன வான்பூங் கலிங்கம்{{float_right|புறம். 397}} நலம்பெறு கலிங்கத்துக் குறங்கில் மிசை அசைஇயது ஒருகை{{float_right|திருமுருகு. 109}} காமைஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்{{float_right|சிறு. 85-85}} நிழல் திகழ் நீலம் நாகம் நல்கிய கலிங்கம்{{float_right|சிறு. 95}} ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம் இரும் பேரொக்கலோடு ஒருங்குடன் உடீஇ{{float_right|பெரும். 469-70}} வெயிற் கதிர் விழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச் செக்கரன்ன சிவந்து நுணங்குருவிற் கண் பொரு புகாஉ மொண்பூங்கலிங்கம் புரளும் தானை{{float_right|மது. 431-33}} பொன்னுரை காண்மரும் கலிங்கம் பகர்நரும்{{float_right|மது. 513}} மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப{{float_right|மது. 554}} சோறமைவுற்ற நீருடை கலிங்கம்{{float_right|மது. 721}}</poem><noinclude></noinclude> 4yhq1x1e86arqrkofotsp41bj81a35e பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/344 250 464196 1834794 1498780 2025-06-24T03:30:41Z மொஹமது கராம் 14681 1834794 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||331}}</noinclude>மின் விரித்தனைய தொத்து விலைவ ரம்பறியலாகா இன்னுரை கலிங்கம் ஏற்ப{{float_right|சீவக. 697}} வழங்கு வங்கக் கலிங்கக் கடகமும்{{float_right|சீவக. 863}} தேம்புகை யுள்ளுறவுண்ட கலிங்கமுடுத்தபின்{{float_right|சீவக. 1476}} கன்னிக் கலிங்கமகிலார்ந்து கவவிக்கிடந்த குறங்கினாள்{{float_right|சீவக. 1658}} வந்துபனி வார்ந்து முலைக் கலிங்கமது நனைப்ப{{float_right|சீவக. 1785}} காதிற் கடிப்பிட்டு கலிங்க முடுத்து{{float_right|நாலா. திவ். பெரிய. திரு. 10:8:1}} கால் என, கடுஎன, கலிங்கக் கம்மியர் நூல்என{{float_right|கம்ப. 9120}} ஒட்டிய கலிங்கந் தாண்மேல் திரைத்துடுத்து{{float_right|சூளா. 842}} ஊதாவியானுடங்கு மொள்ளரத்த நுண்கலிங்க மொன்று சேர்த்தி{{float_right|சூளா. 1538}} காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த{{float_right|கலிங். 63}} ஒரு கலிங்கம் ஒருவன் உடுத்தாதே கலிங். 454 அரைக் கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் கலிங், 466 வீழ்ந்த கலிங்கர் நிணக் கலிங்கம் கலை விரித்து விரித்துப் புனையீரே பட்டார் கலையுடையும் முலைமிசைக் கச்சொடு கலையும் மூட்டு அற நீள்கலை தாங்கலர் கலைபுனை துகிலும் தோடும் ஒழிய போய்க் கரை கொள்வாரும் கலிங். 509 நீல.130 கம்ப.1070 கம்ப. 1485 சூளா. 1694 காலு மொரொன்றுடையர் கலையிலர் கவசம் புள்நிறக் கவசம் பூம்பொறி சிதைய சூளா.1975 எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின் மெய்புகு கவசமும் கவசம் வீழ்ந்த சாமரையற்ற புன்மன வேந்தர் தங்கள் பொன்னணி கவசம் கீறி புறம், 13 சிலப்.14:169 சீவக.197 சீவக. 799<noinclude></noinclude> oshce7ivct7w32j9t6oh0cju1cpvuk4 1834795 1834794 2025-06-24T03:31:04Z மொஹமது கராம் 14681 1834795 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||331}}</noinclude><poem>மின் விரித்தனைய தொத்து விலைவ ரம்பறியலாகா இன்னுரை கலிங்கம் ஏற்ப{{float_right|சீவக. 697}} வழங்கு வங்கக் கலிங்கக் கடகமும்{{float_right|சீவக. 863}} தேம்புகை யுள்ளுறவுண்ட கலிங்கமுடுத்தபின்{{float_right|சீவக. 1476}} கன்னிக் கலிங்கமகிலார்ந்து கவவிக்கிடந்த குறங்கினாள்{{float_right|சீவக. 1658}} வந்துபனி வார்ந்து முலைக் கலிங்கமது நனைப்ப{{float_right|சீவக. 1785}} காதிற் கடிப்பிட்டு கலிங்க முடுத்து{{float_right|நாலா. திவ். பெரிய. திரு. 10:8:1}} கால் என, கடுஎன, கலிங்கக் கம்மியர் நூல்என{{float_right|கம்ப. 9120}} ஒட்டிய கலிங்கந் தாண்மேல் திரைத்துடுத்து{{float_right|சூளா. 842}} ஊதாவியானுடங்கு மொள்ளரத்த நுண்கலிங்க மொன்று சேர்த்தி{{float_right|சூளா. 1538}} காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த{{float_right|கலிங். 63}} ஒரு கலிங்கம் ஒருவன் உடுத்தாதே கலிங். 454 அரைக் கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் கலிங், 466 வீழ்ந்த கலிங்கர் நிணக் கலிங்கம் கலை விரித்து விரித்துப் புனையீரே பட்டார் கலையுடையும் முலைமிசைக் கச்சொடு கலையும் மூட்டு அற நீள்கலை தாங்கலர் கலைபுனை துகிலும் தோடும் ஒழிய போய்க் கரை கொள்வாரும் கலிங். 509 நீல.130 கம்ப.1070 கம்ப. 1485 சூளா. 1694 காலு மொரொன்றுடையர் கலையிலர் கவசம் புள்நிறக் கவசம் பூம்பொறி சிதைய சூளா.1975 எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின் மெய்புகு கவசமும் கவசம் வீழ்ந்த சாமரையற்ற புன்மன வேந்தர் தங்கள் பொன்னணி கவசம் கீறி புறம், 13 சிலப்.14:169 சீவக.197 சீவக. 799</poem><noinclude></noinclude> 3uh4ny3utgxolod1f7fnr0g1wuh6xti 1834796 1834795 2025-06-24T03:31:24Z மொஹமது கராம் 14681 1834796 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||331}}</noinclude><poem>மின் விரித்தனைய தொத்து விலைவ ரம்பறியலாகா இன்னுரை கலிங்கம் ஏற்ப{{float_right|சீவக. 697}} வழங்கு வங்கக் கலிங்கக் கடகமும்{{float_right|சீவக. 863}} தேம்புகை யுள்ளுறவுண்ட கலிங்கமுடுத்தபின்{{float_right|சீவக. 1476}} கன்னிக் கலிங்கமகிலார்ந்து கவவிக்கிடந்த குறங்கினாள்{{float_right|சீவக. 1658}} வந்துபனி வார்ந்து முலைக் கலிங்கமது நனைப்ப{{float_right|சீவக. 1785}} காதிற் கடிப்பிட்டு கலிங்க முடுத்து{{float_right|நாலா. திவ். பெரிய. திரு. 10:8:1}} கால் என, கடுஎன, கலிங்கக் கம்மியர் நூல்என{{float_right|கம்ப. 9120}} ஒட்டிய கலிங்கந் தாண்மேல் திரைத்துடுத்து{{float_right|சூளா. 842}} ஊதாவியானுடங்கு மொள்ளரத்த நுண்கலிங்க மொன்று சேர்த்தி{{float_right|சூளா. 1538}} காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த{{float_right|கலிங். 63}} ஒரு கலிங்கம் ஒருவன் உடுத்தாதே கலிங். 454 அரைக் கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் கலிங், 466 வீழ்ந்த கலிங்கர் நிணக் கலிங்கம் கலை விரித்து விரித்துப் புனையீரே பட்டார் கலையுடையும் முலைமிசைக் கச்சொடு கலையும் மூட்டு அற நீள்கலை தாங்கலர் கலைபுனை துகிலும் தோடும் ஒழிய போய்க் கரை கொள்வாரும் கலிங். 509 நீல.130 கம்ப.1070 கம்ப. 1485 சூளா. 1694 காலு மொரொன்றுடையர் கலையிலர் கவசம் புள்நிறக் கவசம் பூம்பொறி சிதைய சூளா.1975 எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின் மெய்புகு கவசமும் கவசம் வீழ்ந்த சாமரையற்ற புன்மன வேந்தர் தங்கள் பொன்னணி கவசம் கீறி புறம், 13 சிலப்.14:169 சீவக.197 சீவக. 799</poem><noinclude></noinclude> raf9t66s5qt6fsst0rq376habzdhjkw 1834800 1834796 2025-06-24T03:50:38Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834800 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||331}}</noinclude><poem>மின் விரித்தனைய தொத்து விலைவ ரம்பறியலாகா இன்னுரை கலிங்கம் ஏற்ப{{float_right|சீவக. 697}} வழங்கு வங்கக் கலிங்கக் கடகமும்{{float_right|சீவக. 863}} தேம்புகை யுள்ளுறவுண்ட கலிங்கமுடுத்தபின்{{float_right|சீவக. 1476}} கன்னிக் கலிங்கமகிலார்ந்து கவவிக்கிடந்த குறங்கினாள்{{float_right|சீவக. 1658}} வந்துபனி வார்ந்து முலைக் கலிங்கமது நனைப்ப{{float_right|சீவக. 1785}} காதிற் கடிப்பிட்டு கலிங்க முடுத்து{{float_right|நாலா. திவ். பெரிய. திரு. 10:8:1}} கால் என, கடுஎன, கலிங்கக் கம்மியர் நூல்என{{float_right|கம்ப. 9120}} ஒட்டிய கலிங்கந் தாண்மேல் திரைத்துடுத்து{{float_right|சூளா. 842}} ஊதாவியானுடங்கு மொள்ளரத்த நுண்கலிங்க மொன்று சேர்த்தி{{float_right|சூளா. 1538}} காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த{{float_right|கலிங். 63}} ஒரு கலிங்கம் ஒருவன் உடுத்தாதே{{float_right|கலிங். 454}} அரைக் கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர்{{float_right|கலிங். 466}} வீழ்ந்த கலிங்கர் நிணக் கலிங்கம் விரித்து விரித்துப் புனையீரே{{float_right|கலிங். 509}} {{larger|<b>கலை</b>}} பட்டார் கலையுடையும்{{float_right|நீல. 130}} முலைமிசைக் கச்சொடு கலையும் மூட்டுஅற{{float_right|கம்ப. 1070}} நீள்கலை தாங்கலர்{{float_right|கம்ப. 1485}} கலைபுனை துகிலும் தோடும் ஒழிய போய்க் கரை கொள்வாரும்{{float_right|சூளா. 1694}} காலு மொரொன்றுடையர் கலையிலர்{{float_right|சூளா.1975}} {{larger|<b>கவசம்</b>}} புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்{{float_right|புறம். 13}} மெய்புகு கவசமும்{{float_right|சிலப். 14:169}} கவசம் வீழ்ந்த சாமரையற்ற{{float_right|சீவக. 797}} புன்மன வேந்தர் தங்கள் பொன்னணி கவசம்கீறி{{float_right|சீவக. 799}}</poem><noinclude></noinclude> rv1w4tivaqj2mjloc86fz6q3au9qhrz பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/345 250 464199 1834805 1498783 2025-06-24T04:08:32Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834805 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|332||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>வின்மரிய தோள்விசயத் தத்தனுயிர்க் கவசம்{{float_right|சீவக. 1792}} பொன்னணிக் கவசமின்ன{{float_right|சீவக. 2270}} மெய்புகு பொன்னணி கவசம் ஒப்பன{{float_right|சீவக. 2819}} கவசமா யாருயிராய் கண்ணாய் மொய்த்தவமாய் ......... காப்பானை{{float_right|கம்ப. ஆரணி. 99}} கழலினர் தாரினர் கவச மார்பினர்{{float_right|கம்ப. ஆரணி. 404}} உரம்படர் தோளின் மீளாக் கவசமிட்டுடைவாள் ஆர்த்தான்{{float_right|கம்ப. ஆரணி. 421}} சிலையன் வீரக் கவசத்தன்{{float_right|கம்ப. ஆரணி. 422}} கைகள் வாளொடு களப்பட அழுத்தற கவச மெய்கள் போழ்பட{{float_right|கம்ப. ஆரணி. 443}} கேடகத் தடக்கைய கிரியின் றோற்றத்த ஆடகக் கவசத்த கவசமாடுவ{{float_right|கம்ப. ஆரணி. 480}} நிச்சயமென்னும் கவசத்தால்{{float_right|கம்ப. ஆரணி. 503}} கருவியோடுவன்கச்சையுங் கவசமும் கழல{{float_right|கம்ப. ஆரணி. 511}} காய்ந்த வெஞ்சரம் நிருதர் தம்கவசமார்புருவ{{float_right|கம்ப. ஆரணி. 512}} கவசம்படர் மார்பிடைச் சுற்றினான்{{float_right|கம்ப. 7240}} பூஇயல் மீன் எலாம் பூத்த வான் நிகர் மேவு இரும் கவசம் இட்டு இறுக்கிவீக்கினன்{{float_right|கம்ப. 7254}} ஆரத்தொடு கவசத்து உடல் பொடிபட்டுஉக{{float_right|கம்ப. 7316}} அள்ளாடிய கவசத்து அவிர் மணி அற்றன{{float_right|கடிப. 7320}} சூர் இழந்து வன்கவசமும் இழந்து தும்பு இழந்து{{float_right|கம்ப. 7377}} கற்றை அம்சுடர்க் கவசமும் கட்டு அறக் கழித்தான்{{float_right|கம்ப. 7385}} இட்டம் உந்தும் எழில் இரு நான்கு தோள் கடவுள் ஈந்த கவசமும் கட்டினான்{{float_right|கம்ப. 7474}} நல் நெடுங் கவசத்து நாமவெங்கணை மின்னொடு நிகர்ப்பன பலவும் வீசினான்{{float_right|கம்ப. 7711}} கண்ணுதல் பெருங் கடவுள் தன் கவசத்தைக் கடந்தில கதிர் வாளி{{float_right|கம்ப. 7732}} காந்து வெஞ்சுடர்க் கவசம் அற்று உகுதலும்{{float_right|கம்ப. 7734}} பொன் தாள் கவசம் புகுதர, முகிலின் நின்றான்{{float_right|கம்ப.7875}}</poem><noinclude></noinclude> rpi4bj9wxgho9nmoyxmozwerxl4byls பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/346 250 464200 1834807 1498785 2025-06-24T04:19:44Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834807 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||333}}</noinclude><poem>வில் இடை அறுத்து, வேல்துணித்து வீரர்தம் எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து{{float_right|கம்ப. 7962}} நொய்து, அவன் கவசம் கீறி நுழைவன{{float_right|கம்ப. 8050}} நூறுகோல் கவசம் கீறி நுழைதலும்{{float_right|கம்ப. 8051}} எழுத்து அற்றார் கவசம் அற்றார்{{float_right|கம்ப. 8231}} ஏழ் இரு நூறு வாளி இலக்குவன் கவசத்து எய்தான்{{float_right|கம்ப. 8247}} ஆறுநூறு அம்பு செம்பொன் கவசம் புக்கு அழுந்த எய்தான்{{float_right|கம்ப. 8249}} தோளின்மேல் மார்பின் மேலும் சுடர்விடு கவசச் சூழல்{{float_right|கம்ப. 8250}} கண்ட நாணும் கழலும் கவசமும் ......... விண் தலத்தினின் மீன் என வீழ்தலால்{{float_right|கம்ப. 8270}} கையினால் பெரிய அம்பால் கவசத்தைக் கழித்து வீழ்த்தான்{{float_right|கம்ப. 8302}} கவசத்தைக் கழித்து வீழ்ப்பக் காப்புறு கடனின் றாகி{{float_right|கம்ப. 8303}} அளப்பிலாத பகழிகள்; கவசம் பற்று அற்று அருகின{{float_right|கம்ப. 8419}} துவசம் அன்ன தம் கூர்உகிர்ப் பெருங்குறி தோள் தோள்மேல் கவசம் நீங்கினர்{{float_right|கமப். 8498}} அம்புயக் கண்ணன் கண்டத்து ஆயிரம்பகழி நாட்டி தம்பி தன் கவச மீதே இரட்டி{{float_right|கம்ப. 8552}} தேவுண்ட கீர்த்தி அண்ணல் திருஉண்ட கவசம் சோர{{float_right|கம்ப. 8554}} வடிநெடுஞ்சிலை அறும் கவசமார்பு அறும்{{float_right|கம்ப. 8623}} கங்கணத் தொடு கலசமும் மூட்டு அறக் கழல வெங்கடுங்கணை ஐஇரண்டு உருமென வீசி{{float_right|கம்ப. 8650}} தனுவும் வெங்கணைப் புட்டிலும் கவசமும்{{float_right|கம்ப. 8638}} கைச்சிலை கோடி என்று கொடுத்தனன் கவசத்தோடும்{{float_right|கம்ப. 9077}}</poem><noinclude></noinclude> kr3b8qj8vqu2lb1i030mk1f6elpdh18 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/347 250 464201 1834808 1498786 2025-06-24T04:30:54Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834808 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|334||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>மின்மின் கொள் கவசம் இட்டான்{{float_right|கம்ப. 9154}} ஏமத்தடங் கவசத்து இகல் அகலத்தன{{float_right|கம்ப. 9184}} கலை வெங்கணை, கவசம் புக்கு ஆகமும் கழன்று ஓடிட{{float_right|கம்ப. 9188}} கவசத்தையும் நெடு மார்பையும் கழன்று அக்கணை கழிய{{float_right|கம்ப. 9193}} விள்ளா நெடுங்கவசத்திடை நுழையாது உக வெகுண்டான்{{float_right|கம்ப. 9194}} நெடுங்கவசத்தையும் குலையாச் செல்லும் கடுங்கணை யாவையும்{{float_right|கம்ப. 9196}} ஒளிகிளர் கவசம் நுழைந்து உறுகில{{float_right|கம்ப. 9274}} ஆயிடை இளையவன் விடமனையான் அவன் இடு கவசமும் அழிவுபடத் தூயினன்{{float_right|கம்ப. 9275}} தூக்கிய துணிவாங்கி தோளொடு மார்பைச் சுற்றி வீக்கிய கவசபாசம் ஒழித்து அது விரைவின் நீக்கி{{float_right|கம்ப. 9321}} கருணை அம் கடலே அன்ன எல் ஒளி மார்பில் தீராக் கவசம் இட்டு{{float_right|கம்ப. 9505}} கண்ணனே எளியேன் இட்டகவசமே{{float_right|கம்ப. 9507}} சொல் அறுக்கும் வலிஅரக்கர் தொடுகவசம் துகள் படுக்கும்{{float_right|கம்ப. 9537}} அணிகண்டிகை கவசம் கழல் திலதம் முதல் அகலம்{{float_right|கம்ப. 9549}} கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும் கட்டிச் செருவில் இந்திரன்தந்த பொன் கவசமும் சேர்ந்தான்{{float_right|கம்ப. 9786}} ஒருதன்னின் பின்ன கவசத்த பொருள் இல்லை{{float_right|கம்ப. 9820}} வில் ஒன்றால கவசம் ஒன்றால்{{float_right|கம்ப. 9859}} கருங்கணைப் புட்டிலும் கவசம் தானும் மற்று இடம்படு சுரிகையும் சேர ஈந்தவன்{{float_right|கம்ப. 10375}} மடுத்த வாளும் கேடகமும் கவசக் கண்ணு மார்பகமும் மடுத்துக் குத்தினாற் போலக் கழிந்தது அம்பு{{float_right|சூளா. 1350}} {{larger|<b>காம்பு</b>}} கச்சொடு பொற்சுரிகை காம்பு கன (க) வளை உச்சி மணிச் சுட்டி{{float_right|நாலா. திவ். பெரி. திரு. 1:3:8}}</poem><noinclude></noinclude> qhcskqgauxkmorb1k1ck5gky38guuxg பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/348 250 464203 1834811 1498788 2025-06-24T04:39:43Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834811 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||335}}</noinclude><poem>கச்சொடு பட்டைக் கிழித்து காம்பு துகிலவை கீறி நிச்சலும் தீமை செய்வாய்{{float_right|நாலா. திவ். பெரி. திரு. 2:7:3}} காம்பொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும்{{float_right|தேவா. சுந். 46:2}} {{larger|<b>காழகம்</b>}} கரையிடைக் கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால்{{float_right|கலித். மரு. 73}} ஒருத்தி வரியார் அகலல்குற் காழகம் ஒருத்தி அரியார் நெகிழ்த்தணி சுறாதட்ப{{float_right|கலித். மரு. 92}} நீயே வினை மாண் காழகம் வீங்கக் கட்டி புனைமாண் மரீஇய வம்பு தெரிதியே{{float_right|கலித். பாலை. 7}} களிறு மேற் கொள்ளவும் காழக நீப்பவும்{{float_right|புறம். 41}} ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்ஞாண் புலராக் காழகம் புலரவுடீஇ{{float_right|திருமுருகு. 183-84}} காழகம் செறிந்த உடையினன்{{float_right|சிலப். 22:91}} ஒண்ணிறக் காழகம் சேர்ந்த உடையினன்{{float_right|சிலப். 22:98}} காளக உடையினன் கந்து நாமனும்{{float_right|சீவக. 320}} காழகமூட்டப்பட்ட காரிருட் டுணியு மொப்பான்{{float_right|சீவக. 1230}} {{larger|<b>காழம்</b>}} காழமிட்ட குறங்கினன்{{float_right|கம்பு. 650}} {{larger|<b>குப்பாயம்</b>}} வரிக் குப்பாயத்து வார்பொற் கச்சையர்{{float_right|பெருங். 1.40:378}} வெங்கண் நேர்க்கிற் குப்பாய மிலேச்சனைச் செங்கண் தீவிழியா{{float_right|சீவக. 438}} நுதிமயிர்த் துகிற் குப்பாயம் புகுகென நூக்கினானே{{float_right|சீவக. 678}} குப்பாயமென நின்று காட்சி தரும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே{{float_right|நாலா. திவ். பெரி. திரு. 3:5:6}} கோர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால்யானைக் கன்றே போல{{float_right|நாச்சி. திரு. 14-4}} {{larger|<b>கூறை</b>}} அத்திட்ட கூறை அரைச் சுற்றி வாழினும் பத்தெட்டுடைமை பலருள்ளும் பாடெய்தும்{{float_right|நாலடி. 281}}</poem><noinclude></noinclude> 2pj5qwxo5uumckmr70ajp3q9fp3vem1 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/349 250 464205 1834815 1498791 2025-06-24T04:47:26Z மொஹமது கராம் 14681 1834815 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|336||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>ஊணொடு கூறை...மாணொடு கேட்டு{{float_right|ஏலாதி. 63}} கருக்கினால் கூறை கொள்வார்{{float_right|பழமொழி. 321}} நாறைங் கூந்தல் நடுங்கு துயரெய்தக் கூறை கோட்பட்டுக் கோட்டு மாவூரவும்{{float_right|சிலப். 15:98}} படுத்துடன் வைத்த பாயற்பள்ளியும் உடுத்த கூறையும் ஒள்ளெரியுறாஅ{{float_right|மணி. 16:29-30}} பேனறாக் கூறை பெருமுருகு நாறுமேல்{{float_right|நீல. 256}} கூறை யெய்தலும்{{float_right|நீல. 355}} செங் கூறையாய்{{float_right|நீல. 534}} கானெடு மனையும் கட்டுறுத்தியாத்த கூறை, வெள்ளுறிக் குண்டிகைக் காவினர் தரும தருக்கர் தற்புறம் சூழ{{float_right|பெருங். 1.36:227-29}} மூடு கூறையின் மூடுதல் வெண்டலை ஓடு கோடல்{{float_right|சீவக. 1427}} நண்ணாச் சிறுகூறை பாகமோர் கையாக உடுத்து{{float_right|சீவக. 2625}} கூறை சோறிவை தந்தெனக் கருவி{{float_right|நாலா. திவ். பெரிய. திரு. 7:7:8}} கோலப் பணைக் கச்சும் கூறையுடையும்{{float_right|நாலா. திவ். பெரிய. திரு. 3:3:7}} பூநிற கூறைசுற்றினாள் போல்{{float_right|கம்ப. 6772}} வேசியர்கள் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற{{float_right|கம்ப. 10466}} வெற்றரைச் சமணரோடு விலையுடை கூறை போர்க்கும் நற்றர்{{float_right|தேவா. திருநா. 68:9}} கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே{{float_right|தேவா. திருநா. 77:9}} குறியினின் றுண்டு கூறையிலாச் சமண் நெறியை விட்டு தேவா. திருநா. 190:4 ஈறில் கூறையனாகி யெரிந்த வெண்நீறு பூசிதேவா. திருநா. 211:5 தங்கள் கூறை யொன்றின்றியே அமணராற் தேவா.சுந்.33:9 இம்மையே தரும் சோறும் கூறையும் தேவா. சுந்.34:1 தேவா.சுந். 35:4 குற்றொருவரைக் கூறைகொண்டு கொலைகள் சூழ்ந்த களவெலாம்</poem><noinclude></noinclude> fyucjyvqqb7kezx4q0z638vg1zh6x11 1834817 1834815 2025-06-24T04:49:28Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834817 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|336||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>ஊணொடு கூறை...மாணொடு கேட்டு{{float_right|ஏலாதி. 63}} கருக்கினால் கூறை கொள்வார்{{float_right|பழமொழி. 321}} நாறைங் கூந்தல் நடுங்கு துயரெய்தக் கூறை கோட்பட்டுக் கோட்டு மாவூரவும்{{float_right|சிலப். 15:98}} படுத்துடன் வைத்த பாயற்பள்ளியும் உடுத்த கூறையும் ஒள்ளெரியுறாஅ{{float_right|மணி. 16:29-30}} பேனறாக் கூறை பெருமுருகு நாறுமேல்{{float_right|நீல. 256}} கூறை யெய்தலும்{{float_right|நீல. 355}} செங் கூறையாய்{{float_right|நீல. 534}} கானெடு மனையும் கட்டுறுத்தியாத்த கூறை, வெள்ளுறிக் குண்டிகைக் காவினர் தரும தருக்கர் தற்புறம் சூழ{{float_right|பெருங். 1.36:227-29}} மூடு கூறையின் மூடுதல் வெண்டலை ஓடு கோடல்{{float_right|சீவக. 1427}} நண்ணாச் சிறுகூறை பாகமோர் கையாக உடுத்து{{float_right|சீவக. 2625}} கூறை சோறிவை தந்தெனக் கருவி{{float_right|நாலா. திவ். பெரிய. திரு. 7:7:8}} கோலப் பணைக் கச்சும் கூறையுடையும்{{float_right|நாலா. திவ். பெரிய. திரு. 3:3:7}} பூநிற கூறைசுற்றினாள் போல்{{float_right|கம்ப. 6772}} வேசியர்கள் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற{{float_right|கம்ப. 10466}} வெற்றரைச் சமணரோடு விலையுடை கூறை போர்க்கும் நற்றர்{{float_right|தேவா. திருநா. 68:9}} கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே{{float_right|தேவா. திருநா. 77:9}} குறியினின் றுண்டு கூறையிலாச் சமண் நெறியை விட்டு{{float_right|தேவா. திருநா. 190:4}} ஈறில் கூறையனாகி யெரிந்த வெண்நீறு பூசி{{float_right|தேவா. திருநா. 211:5}} தங்கள் கூறை யொன்றின்றியே ...... அமணராற்{{float_right|தேவா. சுந். 33:9}} இம்மையே தரும் சோறும் கூறையும்{{float_right|தேவா. சுந். 34:1}} குற்றொருவரைக் கூறைகொண்டு கொலைகள் சூழ்ந்த களவெலாம்{{float_right|தேவா.சுந். 35:4}}</poem><noinclude></noinclude> 1hq3xfq2liyjruupq0rf84eq4ce7uyj 1834819 1834817 2025-06-24T04:49:51Z மொஹமது கராம் 14681 1834819 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|336||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>ஊணொடு கூறை...மாணொடு கேட்டு{{float_right|ஏலாதி. 63}} கருக்கினால் கூறை கொள்வார்{{float_right|பழமொழி. 321}} நாறைங் கூந்தல் நடுங்கு துயரெய்தக் கூறை கோட்பட்டுக் கோட்டு மாவூரவும்{{float_right|சிலப். 15:98}} படுத்துடன் வைத்த பாயற்பள்ளியும் உடுத்த கூறையும் ஒள்ளெரியுறாஅ{{float_right|மணி. 16:29-30}} பேனறாக் கூறை பெருமுருகு நாறுமேல்{{float_right|நீல. 256}} கூறை யெய்தலும்{{float_right|நீல. 355}} செங் கூறையாய்{{float_right|நீல. 534}} கானெடு மனையும் கட்டுறுத்தியாத்த கூறை, வெள்ளுறிக் குண்டிகைக் காவினர் தரும தருக்கர் தற்புறம் சூழ{{float_right|பெருங். 1.36:227-29}} மூடு கூறையின் மூடுதல் வெண்டலை ஓடு கோடல்{{float_right|சீவக. 1427}} நண்ணாச் சிறுகூறை பாகமோர் கையாக உடுத்து{{float_right|சீவக. 2625}} கூறை சோறிவை தந்தெனக் கருவி{{float_right|நாலா. திவ். பெரிய. திரு. 7:7:8}} கோலப் பணைக் கச்சும் கூறையுடையும்{{float_right|நாலா. திவ். பெரிய. திரு. 3:3:7}} பூநிற கூறைசுற்றினாள் போல்{{float_right|கம்ப. 6772}} வேசியர்கள் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற{{float_right|கம்ப. 10466}} வெற்றரைச் சமணரோடு விலையுடை கூறை போர்க்கும் நற்றர்{{float_right|தேவா. திருநா. 68:9}} கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே{{float_right|தேவா. திருநா. 77:9}} குறியினின் றுண்டு கூறையிலாச் சமண் நெறியை விட்டு{{float_right|தேவா. திருநா. 190:4}} ஈறில் கூறையனாகி யெரிந்த வெண்நீறு பூசி{{float_right|தேவா. திருநா. 211:5}} தங்கள் கூறை யொன்றின்றியே ...... அமணராற்{{float_right|தேவா. சுந். 33:9}} இம்மையே தரும் சோறும் கூறையும்{{float_right|தேவா. சுந். 34:1}} குற்றொருவரைக் கூறைகொண்டு கொலைகள் சூழ்ந்த களவெலாம்{{float_right|தேவா. சுந். 35:4}}</poem><noinclude></noinclude> 7277rsbqne1civrt9ss10sxhmb4f7ih பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/350 250 464206 1834841 1498793 2025-06-24T05:16:29Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834841 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||337}}</noinclude><poem>கூறை கொண்டு ஆறலைக்குமிடம்{{float_right|தேவா. சுந். 49:1}} உயிர்க் கொலை பலநேர்ந்து நாடொறும் கூறை கொள்ளுமிடம்{{float_right|தேவா. சுந். 49:3}} பீறற் கூறையுடுத்து{{float_right|தேவா. சுந். 49:4}} {{larger|<b>கொய்சகம்</b>}} மானமாக் கலுழன் சிறைவிரித்தென கொய்சகம் மருங்கு உறச் சேர்த்தி{{float_right|கம்ப. 9788}} கோதையுங் குழைவின் பட்டின் கொய்சகத் தலையுந் தாழ{{float_right|சூளா. 1640}} {{larger|<b>கோசிகம்</b>}} பைங்காற் பாதிரி போது பிரித்தன்ன அங்கோசிகம்{{float_right|பெருங். 1.42:204}} அங்கோசிக ஆடை பூத்தன பாதிரி{{float_right|சீவக. 1650}} களிசெய்கோசிக நீர் விழக் கடிமாலை மேற்றொடர்ந்து{{float_right|சீவக. 1673}} கோசிகத்தினுலுற்ற கொழுங்கனல்{{float_right|கம்ப. சுந்தர. 1205}} முறைவிரித் தன்ன முறுக்கிய கோசிக மருங்கில் பிறைவிரித்தன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து{{float_right|கம்ப. 9788}} பொற்பமை செங்கோடிக மொடு ஆடை புதைவுற்ற பேழை{{float_right|சூளா. 870}} {{larger|<b>கோடி</b>}} கோடி கடையுள் விரியார்{{float_right|ஆசாரக்கோவை-44}} மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற்பூண்டு நன்னிற மேகம் நின்றது போல்{{float_right|சிலப். 11:45}} கோடி ஏந்தினர் பட்டேந்தினர்{{float_right|சிலப். 20:14}} கோடி மூடியெடுப்பதன் முன்னம் கௌத்துவ மூடைக் கோவிந்தனோடு{{float_right|நாலா. திவ். பெரி. திரு. 4:5:8}} மந்திரக் கோடியுடுத்தி அந்தரிசூட்டக் கனாக் கண்டேன் தோழீநான்{{float_right|நாச்சி. திரு. 6:3}} உயர்த்த கோடி கொண்டருளும்{{float_right|பெரிய. அமர். 28}}</poem><noinclude></noinclude> ck20cyxzeguazwth234af6txxq0wbsl 1834842 1834841 2025-06-24T05:17:07Z மொஹமது கராம் 14681 1834842 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||337}}</noinclude><poem>கூறை கொண்டு ஆறலைக்குமிடம்{{float_right|தேவா. சுந். 49:1}} உயிர்க் கொலை பலநேர்ந்து நாடொறும் கூறை கொள்ளுமிடம்{{float_right|தேவா. சுந். 49:3}} பீறற் கூறையுடுத்து{{float_right|தேவா. சுந். 49:4}} {{larger|<b>கொய்சகம்</b>}} மானமாக் கலுழன் சிறைவிரித்தென கொய்சகம் மருங்கு உறச் சேர்த்தி{{float_right|கம்ப. 9788}} கோதையுங் குழைவின் பட்டின் கொய்சகத் தலையுந் தாழ{{float_right|சூளா. 1640}} {{larger|<b>கோசிகம்</b>}} பைங்காற் பாதிரி போது பிரித்தன்ன அங்கோசிகம்{{float_right|பெருங். 1.42:204}} அங்கோசிக ஆடை பூத்தன பாதிரி{{float_right|சீவக. 1650}} களிசெய்கோசிக நீர் விழக் கடிமாலை மேற்றொடர்ந்து{{float_right|சீவக. 1673}} கோசிகத்தினுலுற்ற கொழுங்கனல்{{float_right|கம்ப. சுந்தர. 1205}} முறைவிரித் தன்ன முறுக்கிய கோசிக மருங்கில் பிறைவிரித்தன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து{{float_right|கம்ப. 9788}} பொற்பமை செங்கோடிக மொடு ஆடை புதைவுற்ற பேழை{{float_right|சூளா. 870}} {{larger|<b>கோடி</b>}} கோடி கடையுள் விரியார்{{float_right|ஆசாரக்கோவை-44}} மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற்பூண்டு நன்னிற மேகம் நின்றது போல்{{float_right|சிலப். 11:45}} கோடி ஏந்தினர் பட்டேந்தினர்{{float_right|சிலப். 20:14}} கோடி மூடியெடுப்பதன் முன்னம் கௌத்துவ மூடைக் கோவிந்தனோடு{{float_right|நாலா. திவ். பெரி. திரு. 4:5:8}} மந்திரக் கோடியுடுத்தி அந்தரிசூட்டக் கனாக் கண்டேன் தோழீநான்{{float_right|நாச்சி. திரு. 6:3}} உயர்த்த கோடி கொண்டருளும்{{float_right|பெரிய. அமர். 28}}</poem>{{nop}}<noinclude></noinclude> 8r0782qn1rbvoe66oxcffqqr7d49rkn பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/351 250 464208 1834851 1498795 2025-06-24T05:28:42Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834851 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|338||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{larger|<b>கோதை</b>}} சிலைகொணாணெடிய கோதை யொலியேறு{{float_right|கம்ப. ஆரணிய. 24}} தடக்கைக்கு, இனிய கோதையும் துறந்தனர்{{float_right|கம்ப. 1658}} வீரம், பொன் மின்கொள் கோதை கையில் பூட்டினான்{{float_right|கம்ப. 9154}} கோலம்சார் நெடுங்கோதையும் புட்டிலும் கட்டி{{float_right|கம்ப. 9791}} புட்டிலொடு கோதைகள்... அங்கையின் இலங்கைக் கட்டி{{float_right|கம்ப. 9821}} {{larger|<b>கோவணம்</b>}} சுருள் கோவணம் தற்றவர்{{float_right|தேவா. திருநா. 17:5}} கோவணத் தோடக்கணிந்த வம்மானை{{float_right|தேவா திருநா. 19:2}} கோவணமுடுத்தவாறும் கோரைவசைத்தானும்{{float_right|தேவா. திரு. 77:2}} சங்கக் கலனும் சரிகோவணமும்{{float_right|தேவா. திருநா. 112:2}} அரைப்பாலுடுப்பன கோவணம்{{float_right|தேவா. திருநா. 114:7}} கொண்ட கோவண வாடையன்{{float_right|தேவா. திருநா. 120:9}} விரிகொள் கோவண வடை விருத்தரோ{{float_right|தேவா. திருநா. 124:4}} உடுப்பர் கோவணம் உண்பது பிச்சையே{{float_right|தேவா. திருநா. 126:5}} சடையனைச்சரி கோவண் வாடை கொண்டுடையன்{{float_right|தேவா. திருநா. 131:8}} குறைகொள் காதினர் கோவண வாடையர்{{float_right|தேவா. திருநா. 152:1}} அரையார் கோவண வாடையன்{{float_right|தேவா. திருநர். 167:7}} கோவணத்தர் வெண்ணூன் மார்பர்{{float_right|தேவா. திருநா. 216:9}} விரிகோவணமசைத்த வெண்ணீற்றான்{{float_right|தேவா. திருநா. 236:8}} வெளுத்தமைந்த சீளொடு கோவணமுந்தற்று{{float_right|தேவா. திருநா. 275:2}} தூவெளுத்த கோவணத்தை யரையிலார்த்த{{float_right|தேவா. திருநா. 281:1}} கோவணம் மேற்கொண்ட வேடம்{{float_right|சுந். 5:10}} அரையார் சீளொடு கோவணமும் அரவும் அசைத்து{{float_right|சுந். 27:6}} கோவணம் கொள் குழகனை{{float_right|சுந். 40:8}} கந்தை கீளாடை கோவணம் கருத்தறிந்துதவி{{float_right|பெரிய. அமர்நீதி. 3}}<noinclude></noinclude> b0iq0pdsbzvzifhdj0ub98vkonq18ev 1834852 1834851 2025-06-24T05:29:07Z மொஹமது கராம் 14681 1834852 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|338||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{larger|<b>கோதை</b>}} சிலைகொணாணெடிய கோதை யொலியேறு{{float_right|கம்ப. ஆரணிய. 24}} தடக்கைக்கு, இனிய கோதையும் துறந்தனர்{{float_right|கம்ப. 1658}} வீரம், பொன் மின்கொள் கோதை கையில் பூட்டினான்{{float_right|கம்ப. 9154}} கோலம்சார் நெடுங்கோதையும் புட்டிலும் கட்டி{{float_right|கம்ப. 9791}} புட்டிலொடு கோதைகள்... அங்கையின் இலங்கைக் கட்டி{{float_right|கம்ப. 9821}} {{larger|<b>கோவணம்</b>}} சுருள் கோவணம் தற்றவர்{{float_right|தேவா. திருநா. 17:5}} கோவணத் தோடக்கணிந்த வம்மானை{{float_right|தேவா. திருநா. 19:2}} கோவணமுடுத்தவாறும் கோரைவசைத்தானும்{{float_right|தேவா. திரு. 77:2}} சங்கக் கலனும் சரிகோவணமும்{{float_right|தேவா. திருநா. 112:2}} அரைப்பாலுடுப்பன கோவணம்{{float_right|தேவா. திருநா. 114:7}} கொண்ட கோவண வாடையன்{{float_right|தேவா. திருநா. 120:9}} விரிகொள் கோவண வடை விருத்தரோ{{float_right|தேவா. திருநா. 124:4}} உடுப்பர் கோவணம் உண்பது பிச்சையே{{float_right|தேவா. திருநா. 126:5}} சடையனைச்சரி கோவண் வாடை கொண்டுடையன்{{float_right|தேவா. திருநா. 131:8}} குறைகொள் காதினர் கோவண வாடையர்{{float_right|தேவா. திருநா. 152:1}} அரையார் கோவண வாடையன்{{float_right|தேவா. திருநர். 167:7}} கோவணத்தர் வெண்ணூன் மார்பர்{{float_right|தேவா. திருநா. 216:9}} விரிகோவணமசைத்த வெண்ணீற்றான்{{float_right|தேவா. திருநா. 236:8}} வெளுத்தமைந்த சீளொடு கோவணமுந்தற்று{{float_right|தேவா. திருநா. 275:2}} தூவெளுத்த கோவணத்தை யரையிலார்த்த{{float_right|தேவா. திருநா. 281:1}} கோவணம் மேற்கொண்ட வேடம்{{float_right|சுந். 5:10}} அரையார் சீளொடு கோவணமும் அரவும் அசைத்து{{float_right|சுந். 27:6}} கோவணம் கொள் குழகனை{{float_right|சுந். 40:8}} கந்தை கீளாடை கோவணம் கருத்தறிந்துதவி{{float_right|பெரிய. அமர்நீதி. 3}}<noinclude></noinclude> tq7of802zt0ou3ybojvrk7dwqr4mlsj பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/352 250 464209 1834860 1498796 2025-06-24T05:42:05Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834860 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||339}}</noinclude><poem>கறைக் களத்திறை கோவணம் பெருமை முன்காட்டி{{float_right|பெரிய. அமர்நீதி. 6}} தஞ்சை மாமறைக் கோவண ஆடையினதசைவும்{{float_right|பெரிய. அமர்நீதி. 8}} யாணர் வெண்கிழிக் கோவணம்ஈதல் கேட்டு{{float_right|பெரிய. அமர்நீதி. 11}} உணங்கு கோவணம் வைத்து குணங்கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்தது{{float_right|பெரிய. அமர்நீதி. 13}} ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறுமக்கே{{float_right|பெரிய. அமர்நீதி. 14}} கொடுத்த கோவணம் கைக்கொண்டு{{float_right|பெரிய. அமர்நீதி. 15}} கந்தை சீருடை கோவணம் அன்றி{{float_right|பெரிய. அமர்நீதி. 16}} போனவேதியர் வைத்த கோவணத்தினைப் போக்கி{{float_right|பெரிய. அமர்நீதி. 17}} நான் தந்த கோவணத்தைக் கொண்டுவாரும்{{float_right|பெரிய. அமர்நீதி. 19}} வைத்த கோவணம் முன் செய்ததென்{{float_right|பெரிய. அமர்நீதி. 20}} பொங்கு வெண்கிழிக் கோவணம் போயின{{float_right|பெரிய. அமர்நீதி. 21}} கீறு கோவணம் அன்று{{float_right|பெரிய. அமர்நீதி. 24}} நல்ல கோவணம் கொடுப்பன்{{float_right|பெரிய. அமர்நீதி. 26}} இக்கோவணம் அன்றி{{float_right|பெரிய. அமர்நீதி. 28}} அணியும் கோவணம் நேர்தர அமையும்{{float_right|பெரிய. அமர்நீதி. 29}} அலர்ந்த வெண்ணிறக் கோவணம்{{float_right|பெரிய. அமர்நீதி. 30}} உடுத்து கோவணம் ஒழிய{{float_right|பெரிய. அமர்நீதி. 31}} அடுத்த கோவணம் இது{{float_right|பெரிய. அமர்நீதி. 31}} கோவணம் ஒரு தட்டில் இட்டார்{{float_right|பெரிய. அமர்நீதி. 32}} அலகில் கோவணம் ஒத்திய{{float_right|பெரிய. அமர்நீதி. 34}} தட்டு மேற்படத் தாழ்ந்தது கோவணத்தட்டு{{float_right|பெரிய. அமர்நீதி. 35}} எங்கள் கோவணம் நேர்நிற்க வேண்டுவ{{float_right|பெரிய. அமர்நீதி. 37}} சிவன் விரும்பிய கோவணமிடுஞ் செழுந் தட்டுக்கு{{float_right|பெரிய. அமர்நீதி. 39}} பாங்குடை உடையுங்கீளும் முழுதில் கோவணமும் நெய்வார்{{float_right|பெரிய. நேச. 3}} உடைபெபாடு நல்ல சீறாம் ஒப்பில் கோவணமும் நெய்து{{float_right|பெரிய. நேச. 4}}</poem><noinclude> 23</noinclude> 3l4h6dxwy36chabzxohffzszlo7jwjc 1834939 1834860 2025-06-24T08:14:06Z மொஹமது கராம் 14681 1834939 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||339}}</noinclude><poem>கறைக் களத்திறை கோவணம் பெருமை முன்காட்டி{{float_right|பெரிய. அமர்நீதி. 6}} தஞ்சை மாமறைக் கோவண ஆடையினதசைவும்{{float_right|பெரிய. அமர்நீதி. 8}} யாணர் வெண்கிழிக் கோவணம்ஈதல் கேட்டு{{float_right|பெரிய. அமர்நீதி. 11}} உணங்கு கோவணம் வைத்து குணங்கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்தது{{float_right|பெரிய. அமர்நீதி. 13}} ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறுமக்கே{{float_right|பெரிய. அமர்நீதி. 14}} கொடுத்த கோவணம் கைக்கொண்டு{{float_right|பெரிய. அமர்நீதி. 15}} கந்தை சீருடை கோவணம் அன்றி{{float_right|பெரிய. அமர்நீதி. 16}} போனவேதியர் வைத்த கோவணத்தினைப் போக்கி{{float_right|பெரிய. அமர்நீதி. 17}} நான் தந்த கோவணத்தைக் கொண்டுவாரும்{{float_right|பெரிய. அமர்நீதி. 19}} வைத்த கோவணம் முன் செய்ததென்{{float_right|பெரிய. அமர்நீதி. 20}} பொங்கு வெண்கிழிக் கோவணம் போயின{{float_right|பெரிய. அமர்நீதி. 21}} கீறு கோவணம் அன்று{{float_right|பெரிய. அமர்நீதி. 24}} நல்ல கோவணம் கொடுப்பன்{{float_right|பெரிய. அமர்நீதி. 26}} இக்கோவணம் அன்றி{{float_right|பெரிய. அமர்நீதி. 28}} அணியும் கோவணம் நேர்தர அமையும்{{float_right|பெரிய. அமர்நீதி. 29}} அலர்ந்த வெண்ணிறக் கோவணம்{{float_right|பெரிய. அமர்நீதி. 30}} உடுத்து கோவணம் ஒழிய{{float_right|பெரிய. அமர்நீதி. 31}} அடுத்த கோவணம் இது{{float_right|பெரிய. அமர்நீதி. 31}} கோவணம் ஒரு தட்டில் இட்டார்{{float_right|பெரிய. அமர்நீதி. 32}} அலகில் கோவணம் ஒத்திய{{float_right|பெரிய. அமர்நீதி. 34}} தட்டு மேற்படத் தாழ்ந்தது கோவணத்தட்டு{{float_right|பெரிய. அமர்நீதி. 35}} எங்கள் கோவணம் நேர்நிற்க வேண்டுவ{{float_right|பெரிய. அமர்நீதி. 37}} சிவன் விரும்பிய கோவணமிடுஞ் செழுந் தட்டுக்கு{{float_right|பெரிய. அமர்நீதி. 39}} பாங்குடை உடையுங்கீளும் முழுதில் கோவணமும் நெய்வார்{{float_right|பெரிய. நேச. 3}} உடைபெபாடு நல்ல சீறாம் ஒப்பில் கோவணமும் நெய்து{{float_right|பெரிய. நேச. 4}}</poem>{{nop}}<noinclude> 23</noinclude> ec9ccjrtnbdcck52nvpbh23xubl2enw பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/353 250 464210 1834945 1498797 2025-06-24T08:24:54Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834945 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|340||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>{{larger|<b>சட்டை</b>}} நிணச் சட்டையிட்டு நின்ற{{float_right|கலிங். 156}} {{larger|<b>சாலிகை</b>}} சாலிகை யுடம்பினர் தறுகணாளரே{{float_right|சீவக. 2217}} சாலிகை யாக்கையர், தணிப்புஇல் வெஞ்சர வேலியைக் கடந்திலர்{{float_right|கம்ப. 9606}} திண்மார்பின் மிசைச் செறி சாலிகையின்{{float_right|கம்ப. 9643}} சாலிகை முதல ஆன போர்ப்பரம் தாங்கிற்று எல்லாம்{{float_right|கம்ப. 97:9}} {{larger|<b>சிதர்</b>}} துய்ப்போர் தம்மனைத் துணிச் சிதர் உடுத்து{{float_right|மணி. 11:109}} {{larger|<b>சிதர்வை</b>}} நின்னரைப் பாசியன்ன சிதர்வை நீக்கி{{float_right|பெரும். 462-68}} {{larger|<b>சிதவல்</b>}} தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்{{float_right|குறுந். 146}} {{larger|<b>சிதவற்றுணி</b>}} சிதவற் றுணியொடு சேணோங்கு நெடுஞ்சினை ததர் வீழ்ப் பொடித்துக் கட்டிய உடையினன்{{float_right|மணி. 3:106-7}} {{larger|<b>சிதாஅர்</b>}} நீர்ப்படு பருந்தின் ஈர்ஞ்சிறகன்ன நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை{{float_right|பதி. 2:2}} வேற்றிழை நுழைந்த வேர்நனைச் சிதாஅர்{{float_right|புறம். 69}} சிதார் உடுக்கை முதாரிப் பாண்{{float_right|புறம். 138}} பாறிய சிதாரேன்{{float_right|புறம். 150}} திறனில் சிதாஅர் வறுமை நோக்கி{{float_right|புறம். 337}} என்னரை, நிலத்தினஞ் சிதைந்த சிதாஅர் களைந்து{{float_right|புறம். 385}} ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி வேர்புரை சிதாஅர் நீக்கி{{float_right|புறம். 392}} ஈன்ற வரவினாவுரிக் கடுக்குமென் தொண்டு படு சிதாஅர் துவர நீக்கி{{float_right|புறம். 393}}</poem><noinclude></noinclude> 5e9c638jgfoamkggvkzp9phrxifaplp பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/354 250 464213 1834948 1498800 2025-06-24T08:40:54Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834948 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||341}}</noinclude><poem>விரும்பிய முகத்தனாகி என்னரைத் துரும்புபடு சிதாஅர் மருங்குநீக்கி{{float_right|புறம். 400}} ஈரும் பேனும் இருந்திறை கூடி வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த துன்னற் சிதாஅர் துவர நீக்கி{{float_right|பொருநர். 79-81}} பாசிவேரின் மாசொடு குறைந்த துன்னற் சிதாஅர் நீக்கி{{float_right|பொருநர். 153-54}} {{larger|<b>சீரம்</b>}} தீரா மனத்தாள் தர வந்தன சீரம்{{float_right|கம்ப. 1838}} {{larger|<b>சீரை</b>}} சீரை தைஇய யுடுக்கையர்{{float_right|திருமுருகு. 126}} சீரையுடுக்கை வார் வளர் புன்சடை{{float_right|பெருங். 2.15:40}} சுற்றிய சீரையும் உழையின் தோற்றமும்{{float_right|கம்ப. 251}} ஆய்தந்த மென்சீரை அணித்தடி தாழ்ந்து நின்ற{{float_right|கம்ப. 1842}} திருஅரைத் துகில் ஓரீஇ சீரை சாத்தியே{{float_right|கம்ப. 1843}} தான் புனை சீரையைத் தம்பி சாத்தி{{float_right|கம்ப. 1844}} பொன் அரைச் சீரையின் பொலிவும் நோக்கினான்{{float_right|கம்ப. 1853}} தாழ்வினை அது வரச்சீரை சாத்தினான்{{float_right|கம்ப. 1854}} சுற்றிய சீரையின் தொடர்ந்த தம்பியன்{{float_right|கம்ப. 1861}} துன் நெடுஞ் சீரையும் சுற்றிஅப் பொன் நெடுந் தேரினிடை{{float_right|கம்ப. 1878}} திருஅரைச் சுற்றிய சீரை ஆடையின்{{float_right|கம்ப. 1883}} பழுது சீரையின் உடையினன்{{float_right|கம்ப. 1909}} புனையும் சீரை துணிந்து புனைந்தனள்{{float_right|கம்ப. 1919}} சீரைச் சுற்றித் திருமகள் பின்செல{{float_right|கம்ப. 1925}} ஊரை நூறும் கருங்கனலுட் பொதி சீரை நூறவை சேமஞ் செலுத்துமோ{{float_right|கம்ப. சுந்தர. 1144}} {{larger|<b>சீவரம்</b>}} சீவரம் போற்கட்டில் செப்புவதென்னோ{{float_right|நீல. 372}} {{larger|<b>சேலம்</b>}} சேலம் திருத்தி{{float_right|பெருங். 4:12:97}}</poem>{{nop}}<noinclude></noinclude> hrrfgxmlanx0btmghawv57xdezo90gx பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/355 250 464215 1835021 1498802 2025-06-24T09:33:47Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1835021 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|342||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>{{larger|<b>சேலை</b>}} சேலையாற் செய்ய வாய் புதைத்த செங்கையன்{{float_right|கம்ப. ஆரணிய. 570}} சேலையின் வாங்கும் புதுமது{{float_right|மூவரு. 3.410-11}} {{larger|<b>தழை</b>}} பல்பூம் பகைத் தழை நுடங்கு மல்குல்{{float_right|நற். குறிஞ். 8}} தழையோர், கொய்தழை அரும்பியஞாழல்{{float_right|நற். குறிஞ். 54}} நெய்தலும் ஓம்புமதி...அணியுமார் அவையே{{float_right|நற். குறிஞ். 60}} தழையும் தாரும் தந்தனென் இவனென{{float_right|நற். குறிஞ். 80}} அம்பகை நெறித் தழை அணி பெறத் தைஇ{{float_right|நற். குறிஞ்.96}} காவி, அம்பகை நெறித் தழை அணிபெறத்தைஇ{{float_right|நற். குறிஞ். 123}} பிணையல் அம் தழை தைஇய{{float_right|நற். குறிஞ். 170}} தளிர்சேர் தண்தழை தைஇ{{float_right|நற். குறிஞ். 204}} தழையணிந்து அலமரும் அல்குல்{{float_right|நற். குறிஞ். 320}} உடுக்கும் தழை தந்தனனே{{float_right|நற். குறிஞ். 358}} பைந்தழை சிதைய, கோதை வாட{{float_right|நற். குறிஞ். 363}} கோடேந்து அல்குல் தழையணிந்து{{float_right|நற். குறிஞ். 368}} ஐதகல் அல்குல் அணிபெறத் தைஇ{{float_right|நற். குறிஞ். 390}} கூந்தலாம்பல் முழு நெறி அடைச்சி{{float_right|குறுந். 80}} சாரற் றழையணி அல்குல் மகளிர்{{float_right|குறுத். 125}} தழையணி அல்குல் தாங்கல் செல்லா{{float_right|குறுந். 159}} திருந்திழை யல்குற்குப் பெருந்தழை யுதவி{{float_right|குறுந். 214}} அய வெள்ளாம்பல் அல்லி அம்பகை நெறித்தழை தித்திக் குறங்கினூழ் மாறலைப்ப{{float_right|குறுந். 293}} பசுங்குழைத் தழையினும் உழையிற் போகான்{{float_right|குறுந். 294}} உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும் தழையணிப் பொலிந்த ஆயம்{{float_right|குறுந். 295}} குவளைத் தண்தழை யிவளீண்டு வருந்த{{float_right|குறுந். 342}} தழை தாழ் அல்குல் இவள் புலம்ப அகல{{float_right|குறுந். 345}} மணலாடு மலிர்நிறை விரும்பிய வொண்டழைப்</poem><noinclude></noinclude> 4lxvcevvsny0bu1vv4fwlmgmp30pn4q பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/356 250 464217 1835026 1498805 2025-06-24T09:43:06Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1835026 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||343}}</noinclude><poem>புனலாடு மகளிர்க்குப் புணர்துணையுதவும்{{float_right|ஐங். 15}} நுடங்கு தழைத் திதலை அல்குல்{{float_right|ஐங். 72}} வண்ண வொண்டழை நுடங்க வாலிழை ஒண்ணுதல் அரிவை{{float_right|ஐங். 73}} தண்டழை விலையென நல்கினன் நாடே{{float_right|ஐங். 147}} நெய்தலம் பகைத் தழை பாவை புனைமார் உடலகம் கொள்ளாரின்மையின்{{float_right|ஐங். 187}} கானல் ஞாழற் கவின் பெறு தழையள்{{float_right|ஐங். 191}} தானும் மலைந்தனன் எமக்குத் தழையாயின{{float_right|ஐங். 201}} செயலையம் பகைத் தழை வாடுமன்னாய்{{float_right|ஐங். 211}} வண்டுபடு கூந்தற் தண்டழைக் கொடிச்சி{{float_right|ஐங். 256}} ஆய்தழை நுடங்கு அல்குல்{{float_right|ஐங். 291}} அலர்ந்த ஆம்பலக மடிவையர்{{float_right|பதிற். 27}} செம்பொறிச் சிலம்பொடு அணித்தழைத் தூங்கும்{{float_right|பதிற். 53}} தழையுங் கோதையு மிழையு மென்றிவை தைஇனர் மகிழ்ந்து{{float_right|கலித். 102}} இலங்கேர் எல்வளையேர் தழை தைஇ{{float_right|கலித். 125}} ஒலிக்குழை செயலையுடை மாணல்குல்{{float_right|அகம். 7}} தலைமுடி சான்ற தண்டழை தைஇ{{float_right|அகம். 7}} மணிப்பூம் பைந்தழை தைஇ{{float_right|அகம். 20}} அண்டர் மகளிர் தண்டழை உடீஇயர்{{float_right|அகம். 59}} பாசளைக் கலித்த கணைக்கால் நெய்தல் விழவு அணி மகளிர் தழைஅணிக் கூட்டும்{{float_right|அகம். 70}} கழனியாம்பல் முழுநெறிப் பைந்தழை{{float_right|அகம். 156}} அரிமலராம்பலோடார் தழை தைஇ{{float_right|அகம். 176}} வயலையம் பிணையல் வார்ந்த கவா அன் திதலை அல்குல்{{float_right|அகம். 189}} தழையணிப் பொலிந்த கோடேந்து அல்குல் அம்பகை மடிவைச் குறுந்தொடி மகளிர்{{float_right|அகம். 201}} பெருந்தண் மாத்தழை யிருந்த அல்குல்{{float_right|அகம். 230}}</poem><noinclude></noinclude> 6ipm5413acdptx63pqp4pazoei32q8i பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/357 250 464220 1835034 1498808 2025-06-24T09:58:02Z மொஹமது கராம் 14681 1835034 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|344||தமிழர் ஆடைகள்}}</noinclude>344 தாருந் தையின தழையுந் தொடுத்தன பொலங்காசு நிரைத்த கோடேந்தல்குல் நலங்கேழ் மாக்குரல் குழையொடு துயல்வர ஐதகல் அல்குல் தழையணிக் கூட்டும் கூழை நொச்சிக் கீழது தழையணி அல்குல் செல்வத் தங்கையர் முறித்தழை மகளிர் மடுப்ப மாந்தி பைங்குழைத் தழையர் பழையர் மகளிர் . அல்குல் தழைக் கூட்டு அங்குழை யுதவிய கொண்டைக் கூழை தண்டழைக் கடைசியர் கூம்பவிழ் முழுநெறி புரள் வருமல்குல் ஆம்பல், இளையமாகத் தழையாயினவே தமிழர் ஆடைகள் அகம். 259 அகம்.269 அகம். 275 அகம். 320 அகம்.348 அகம். 331 அகம், 383 புறம். 61 புறம்.116 புறம். 248 மெல்லிழை மகளிர் ஐதக அல்குற் றொடலையாகவும் கண்டனம் இனியே புறம். 271 தொன்று தாமுடுத்த அம்பகைத் தெரியல் புறம்.280 பைந்தழை துயல் வருஞ் செருவிறற் புறம்.339 அணித் தழை நுடங்க ஓடி புறம். 340 ஏந்து கோட்டம்பூந் தொடலை அணித் தழையல்குல் புறம். 341 கருங்கால் வேங்கைச் செம்பூம் பினையல் ஐதேந்தல்குல் யாமணிந்து உவக்கும் பைவிரி யல்குற் கொய்தழை தைஇ புறம். 345 குறிஞ்சி. 102 பைந்தழை மாமகளிரொடு புனைபூந்தழையற் பட்டி. 9 ஐந்.ஐம்.14 ஆம்பலணித் தழை யாரந் துயல் வருந் தீம்புனலூ ரன் மகளிவள் திணை.மொழி. ஐம். 40 அன்னை யானீயு மருந்தழையா மேலாமைக் கென்னையோ நாளை யெளிது திணைமாலை. நூற்.20 தன் குறையி தென்னான் தழை கொணருந் தண் சிலம்ப திணைமாலை. நூற். 31 பைந்தழை அல்குற் பாவாய் சீவக.1499 பிடிமுதிர் முலையினாடன் றழைத்துகிற் பெண்ணினொடும் சீவக. 1231<noinclude></noinclude> pnmpen9u4gkm03ma8vgfyveo6epmwzk 1835036 1835034 2025-06-24T10:20:04Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1835036 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|344||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>தாருந் தையின தழையுந் தொடுத்தன{{float_right|அகம். 259}} பொலங்காசு நிரைத்த கோடேந்தல்குல் நலங்கேழ் மாக்குரல் குழையொடு துயல்வர{{float_right|அகம். 269}} ஐதகல் அல்குல் தழையணிக் கூட்டும் கூழை நொச்சிக் கீழது{{float_right|அகம். 275}} தழையணி அல்குல் செல்வத் தங்கையர்{{float_right|அகம். 320}} முறித்தழை மகளிர் மடுப்ப மாந்தி{{float_right|அகம். 348}} பைங்குழைத் தழையர் பழையர் மகளிர்{{float_right|அகம். 331}} அல்குல் தழைக் கூட்டு அங்குழை யுதவிய{{float_right|அகம். 383}} கொண்டைக் கூழை தண்டழைக் கடைசியர்{{float_right|புறம். 61}} கூம்பவிழ் முழுநெறி புரள் வருமல்குல்{{float_right|புறம். 116}} ஆம்பல், இளையமாகத் தழையாயினவே{{float_right|புறம். 248}} மெல்லிழை மகளிர் ஐதக அல்குற் றொடலையாகவும் கண்டனம் இனியே{{float_right|புறம். 271}} தொன்று தாமுடுத்த அம்பகைத் தெரியல்{{float_right|புறம். 280}} பைந்தழை துயல் வருஞ் செருவிறற்{{float_right|புறம். 339}} அணித் தழை நுடங்க ஓடி{{float_right|புறம். 340}} ஏந்து கோட்டம்பூந் தொடலை அணித் தழையல்குல்{{float_right|புறம். 341}} கருங்கால் வேங்கைச் செம்பூம் பினையல் ஐதேந்தல்குல் யாமணிந்து உவக்கும்{{float_right|புறம். 345}} பைவிரி யல்குற் கொய்தழை தைஇ{{float_right|குறிஞ்சி. 102}} பைந்தழை மாமகளிரொடு{{float_right|பட்டி. 9}} புனைபூந்தழையற்{{float_right|ஐந். ஐம். 14}} ஆம்பலணித் தழை யாரந் துயல் வருந் தீம்புனலூ ரன் மகளிவள்{{float_right|திணை. மொழி. ஐம். 40}} அன்னை யானீயு மருந்தழையா மேலாமைக் கென்னையோ நாளை யெளிது{{float_right|திணைமாலை. நூற். 20}} தன் குறையி தென்னான் தழை கொணருந் தண் சிலம்ப{{float_right|திணைமாலை. நூற். 31}} பைந்தழை அல்குற் பாவாய்{{float_right|சீவக. 1499}} பிடிமுதிர் முலையினாடன் றழைத்துகிற் பெண்ணினொடும் {{float_right|சீவக. 1231}}</poem><noinclude></noinclude> g2ab20tl2n2ilr9utdpgudz14p4nlgw பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/358 250 464221 1835037 1498809 2025-06-24T10:22:36Z மொஹமது கராம் 14681 1835037 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||345}}</noinclude><poem>காந்து தண்டழையுஞ் சுரமங்கையர்க் கேந்தி நின்றன{{float_right|சூளா. 752}} வயலாம்பல் நெறித்தவகைத் தழையள் விரையேற்று தளிரீனல் விழையாய் வாழி அம்பொன் செய் கலாப வல்குலந் தழை புனைந்து சூளந.809 சூளா.1126 சூளா.1633 அல்குற்றடத்தெமர் கண்டால் அயிர்ப்பர் அதுவுமன்றிப் பல் குற்றமும் வருமால் யாங்கள் வாங்கேம் பசுந்தழையே தழைப்பீலி மரவுரிமேல் சார எய்தி {{larger|<b>தானை</b>}} அரிவையது தானை என்கோ இருந்துகிற் றானை யினொன்றிப் பொருந்தலை பாய்ந்தாய்ந்த தானை பரிந்தானா மைந்தினை தஞ்சை.98 பெரிய. கண். 48 பரி. 11:28 பரி. 16:23 கலித். 96 பையென நோக்குவேன் தாழ்தானை பற்றுவேன் கலித். 96 பிடிபயின்று தரூஉம் பெருங்களிறுபோல புறம். 276 நாலடி. 134 தாரும் தானையும் பற்றி ஆரியர் குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் நிலனக முளியன் நீலத் தானையன் பட்டுடைத் தானைப் பைம்பூண் சுடர பூந்துகிற் றானைப் பற்றிக் காய்ந்தது வெண்டுகில், ஈரத்தானை நீரிடைச் சோர பாப்புரியன்ன மீக் கொடானை சிலப். 16:204 பெருங். 1.34:207 பெருங்.1.35:202 பெருங்.1.40:99-100 இரு புடை மருங்கினும் வருவளிக் கொசிந்து பெருங்.1.42:244-45 சேடக மகளிர், தன்மை கடுக்குந் தானைக் கச்சையர் பானில் வெண்டுகிலானத் தானையர் மேற்பட வெருவி நோக்கித் தானையை விட்டிட்டொல்கி பெருங்.1.46:242-43 பெருங்.2.4;147 சீவக. 675 சீவக. 978 கச்சிற் றானை வீக்கா தானையாற் தடங்கணீரைத் துடைத்து மெய்தழுவிக் சீவக. 1051 ஒன்றிய வுதிரச் செச்சை யொண்ணிண மீக்கொடானை விடுகணை தெரிந்து வீக்கற விசித்து சீவக.1080 சீவக.1086 குழைந்த தார் நெகிழ்ந்த தானைக் கொற்றவன் சீவக. 2720</poem><noinclude></noinclude> swewxr6ek2hq95rq7twq3t7h8fpmp90 அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf 252 475344 1834850 1633429 2025-06-24T05:28:32Z Booradleyp1 1964 1834850 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:தேவநேயப் பாவாணர்|தேவநேயப் பாவாணர்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம் லிமிடெட் |Address= |Year=1962 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5to10=உள்ளுறை /> |Remarks={{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/6}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/7}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/8}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/9}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/10}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:விளையாட்டுத்துறை நூல் அட்டவணைகள்]] [[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]] 3w5i6sxrruquz80q7bb5p5q5zghxa4h 1834853 1834850 2025-06-24T05:29:08Z Booradleyp1 1964 added [[Category:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1834853 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:தேவநேயப் பாவாணர்|தேவநேயப் பாவாணர்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம் லிமிடெட் |Address= |Year=1962 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5to10=உள்ளுறை /> |Remarks={{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/6}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/7}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/8}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/9}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/10}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:விளையாட்டுத்துறை நூல் அட்டவணைகள்]] [[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] dwuugxtbrru07p13a0y0g054akmpzx2 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/11 250 488992 1834885 1832742 2025-06-24T06:38:02Z Info-farmer 232 துணைப்பக்க எண்ணிக்கை சரியாக வர, A வரும் துணைப்பக்கப்பெயர்களுக்கும் தனி வரிசையெண் தரப்பட்டது. எனவே, இப்பக்கத்தில் மொத்தம் 026 துணைப்பக்கங்கள் உள்ளன 1834885 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{c|{{Box|{{larger|<b> பொருளடக்கம் </b>}}}}}} {{dhr}} {{block_center/s|width=900px|}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001|1. முருகன் கோயிலுக்கு தோப்பு அளித்த ராவுத்தர்கள்]] | {{DJVU page link| 15 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/002|2. மங்களேசுவரியம்மனுக்கு சையத் இஸ்மாயில் செய்த வெண்கலத் திருவாசி]] | {{DJVU page link| 18 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/003|3. குற்றாலநாதருக்கும் நெல்லை காந்திமதியம்மனுக்கும் இஸ்லாமிய வணிகர்கள் கொடை ]] | {{DJVU page link| 19 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/004|4. திப்பு சுல்தானின் கொடைபெற்ற கொங்குநாட்டுக் கோயில்கள் ]] | {{DJVU page link| 21 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/005 | 5. கொங்கணேசுவரருக்குக் கொடை தந்த இஸ்லாமியர்கள் ]] | {{DJVU page link| 22 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/006 |6. வராகசாமி கோயிலுக்கு சாத்துல்லாகான் காலக் கொடை ]] | {{DJVU page link| 23 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/007 |7. கான் சாகிபு வரலாற்றில் மீனாட்சியம்மன் ]] | {{DJVU page link| 24 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/008 |8. அன்வருதீன் கொடுத்த உமாமகேசுவரர் ]] | {{DJVU page link| 26 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/009 |9. சிவன்கோயில் தேருக்கு மசூதி சார்பில் பூசை]] | {{DJVU page link| 26 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/010 |10. சாததுல்லாகான் காசி- இராமேசுவரம் யாத்திரை]] | {{DJVU page link| 27 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/011 |11. சிவன் கோயிலுக்கு இலுப்பைத் தோப்பளித்த கான்சாகிபு]] | {{DJVU page link| 28 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/012 |12. சங்கர மடத்திற்கு கோல்கொண்டா சுல்தான் கொடை]] | {{DJVU page link| 30 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/013 |13. சங்கர மடத்திற்கு இஸ்லாமியர் மரியாதை]] | {{DJVU page link| 31 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/014 |14. வரதராசப் பெருமாளைப் பிரதிட்டை செய்த சாததுல்லாகான் ]] | {{DJVU page link| 32 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/015 |15. சூடிக்கொடுத்த நாச்சியார் படிமம் தந்த பரூக்சீயர்]] | {{DJVU page link| 33 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/016 |16. திருவரங்கத்தில் நவாபு செய்த பைசல்]] | {{DJVU page link| 35 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/017 |17. மதுரை சுல்தான் காலக் கொடைகள்]] | {{DJVU page link| 37 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/018 |17-A. இலுப்பூர் சிவன் கோயிலுக்கு மதுரை சுல்தான் கொடை ]] | {{DJVU page link| 38 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/019 |18. சலுகைகள் அளித்த சும்சுதீன் அடில்ஷா]] | {{DJVU page link| 39 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/020 |19. கள்ளர்களைப் பிடித்த ராவுத்தர்கள்]] | {{DJVU page link| 39 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/021 |20. பார்ப்பனப் பெண்ணுக்காக உயிர்துறந்த பக்கிரிசாயபு]] | {{DJVU page link| 40 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/022 |21. ‘ஷேக்’கின் அலுவலர் கட்டிய ஆகாச ராசன் மண்டபம் ]] | {{DJVU page link| 41 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/023 |21-A. இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து கொடுத்த கொடை]] | {{DJVU page link| 42 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/024 |22. அக்கிரகாரத்தில் கிணறு வெட்டிய ஷேக் முசாமியார்]] | {{DJVU page link| 44 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/025 |23. கிணறும் குளமும் வெட்டிய அசன்கான்]] | {{DJVU page link| 46 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/026 |24. கால்வாய் வெட்டிய ஆர்க்காடு நவாப்]] | {{DJVU page link| 46 | 1}}}}<noinclude>{{block center/e}}</noinclude> hetod6popvd6qxdgtcaabi651qftt2d பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/12 250 488993 1834947 1832869 2025-06-24T08:37:55Z Info-farmer 232 வரிசை எண் மாற்றம் 1834947 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{block_center/s|width=900px|}}</noinclude>{{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/027 |25. கால்வாய் வெட்டிய சையத் ஷா மொயினுதீன்]] | {{DJVU page link| 47 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/028 |26. கண்மாய் மடைக்கல் அமைத்த வத்தலை ராவுத்தர்]] | {{DJVU page link| 48 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/029 |27. குளத்தில் மதகு அமைத்த பத்ரே ஆலம்]] | {{DJVU page link| 49 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/030|28. ஏரிக்கு கலிங்கு கட்டிய மம்முது பாகூர் சாயபு ]] | {{DJVU page link| 50 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/031 |29. அபூப் சகா மரைக்காயர் நிர்வாகத்தில் கட்டிய கலிங்கு ]] | {{DJVU page link| 51 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/032 |30. வழிப்போக்கர் மண்டபம் கட்ட ஆர்க்காடு நவாப் ஆணை ]] | {{DJVU page link| 52 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/033 |31. ‘அஞ்சினான் புகலிடம்’ அமைத்து வரி நீக்கிய நவாபு ]] | {{DJVU page link| 53 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/034 |32. முகம்மது அலி மரைக்காயர் கட்டிய நாகூர் சத்திரம் ]] | {{DJVU page link| 54 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/035|33. தஞ்சை பெரிய கோயிலில் சோனகன் சாவூர் பரஞ்சோதி ]] | {{DJVU page link| 56 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/036 |34. ஆனைமங்கலம் செப்பேட்டில் துருக்கன் அகமது ]] | {{DJVU page link| 57 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/037 |35. திருமுருகன் பூண்டி ஆவணத்தில் இஸ்லாமியர் ]] | {{DJVU page link| 58 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/038 |36. பட்டக்காரர் பட்டாபிஷேகத்தில் கமால்சாயபு பங்கு ]] | {{DJVU page link| 59 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/039 |37. செந்தில் திருப்பணியில் சீதக்காதி]] | {{DJVU page link| 61 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/040 |38. வேளாள புராணத்தைப் புகழ்ந்த ஐயாவு ராவுத்தர்]] | {{DJVU page link| 62| 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/041 |39. கந்தன் சர்க்கரைக்கு வாள் பயிற்சி தந்த காதர் பாட்சா]] | {{DJVU page link| 63 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/042 |40. பாரதப் பார்த்தனைப் பாடிய பக்கீர் சாயபு ]] | {{DJVU page link| 64 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/043 |41. மாரியம்மன் புகழ்பாடிய மதார்சா ராவுத்தர் ]] | {{DJVU page link| 65 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/044 |42. பட்டக்காரர் மீது நான்மணிமாலை பாடிய அப்துல் சுகூர் சாஹிப்]] | {{DJVU page link| 66 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/045 |43. வெள்ளையம்மாளுக்கு சர்தார் பெற்றுத்தந்த உரிமை ]] | {{DJVU page link| 68 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/046 |43 A. ஹைதர் அலி மதித்துப் போற்றிய கிறித்தவப் பாதிரியார் ]] | {{DJVU page link| 69 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/047 |44. நாகூர் தர்காக் கல்வெட்டுக்கள்]] | {{DJVU page link| 73 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/048 |45. அதிராம்பட்டினம் தர்காவிற்கு செவ்வப்நாயக்கர் கொடை]] | {{DJVU page link| 82 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/049 |46. ஈசா பள்ளிவாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை ]] | {{DJVU page link| 83 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/050 |47. ஏர்வாடி பள்ளிவாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை]] | {{DJVU page link| 86 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/051 |48. ஆபில் காபில் பள்ளி வாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை]] | {{DJVU page link| 92 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/052 |49. இராமேசுவரம் கோயில் விசாரணையில் அலிப்புலி ராவுத்தர் ]] | {{DJVU page link| 96 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/053 |50. இஸ்லாமியர் தறிக்கு வரி நீக்கிய சேதுபதி]] | {{DJVU page link| 97 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/054 |51. சேதுபதியும் சீதக்காதியும்]] | {{DJVU page link| 98 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/055 |52. சேதுபதியாரின் அவையில் சவ்வாதுப் புலவர் (1745-1808)]] | {{DJVU page link| 100 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/056 |53. மொட்டைப் பக்கிரி தர்காவிற்கு சிவகங்கை மன்னர் கொடை]] | {{DJVU page link| 101 | 1}}}}<noinclude>{{block center/e}}</noinclude> kkjpwowl2fvh274gho1d0c6dmiorqrl 1834988 1834947 2025-06-24T08:57:28Z Info-farmer 232 43- 1834988 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{block_center/s|width=900px|}}</noinclude>{{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/027 |25. கால்வாய் வெட்டிய சையத் ஷா மொயினுதீன்]] | {{DJVU page link| 47 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/028 |26. கண்மாய் மடைக்கல் அமைத்த வத்தலை ராவுத்தர்]] | {{DJVU page link| 48 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/029 |27. குளத்தில் மதகு அமைத்த பத்ரே ஆலம்]] | {{DJVU page link| 49 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/030|28. ஏரிக்கு கலிங்கு கட்டிய மம்முது பாகூர் சாயபு ]] | {{DJVU page link| 50 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/031 |29. அபூப் சகா மரைக்காயர் நிர்வாகத்தில் கட்டிய கலிங்கு ]] | {{DJVU page link| 51 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/032 |30. வழிப்போக்கர் மண்டபம் கட்ட ஆர்க்காடு நவாப் ஆணை ]] | {{DJVU page link| 52 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/033 |31. ‘அஞ்சினான் புகலிடம்’ அமைத்து வரி நீக்கிய நவாபு ]] | {{DJVU page link| 53 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/034 |32. முகம்மது அலி மரைக்காயர் கட்டிய நாகூர் சத்திரம் ]] | {{DJVU page link| 54 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/035|33. தஞ்சை பெரிய கோயிலில் சோனகன் சாவூர் பரஞ்சோதி ]] | {{DJVU page link| 56 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/036 |34. ஆனைமங்கலம் செப்பேட்டில் துருக்கன் அகமது ]] | {{DJVU page link| 57 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/037 |35. திருமுருகன் பூண்டி ஆவணத்தில் இஸ்லாமியர் ]] | {{DJVU page link| 58 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/038 |36. பட்டக்காரர் பட்டாபிஷேகத்தில் கமால்சாயபு பங்கு ]] | {{DJVU page link| 59 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/039 |37. செந்தில் திருப்பணியில் சீதக்காதி]] | {{DJVU page link| 61 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/040 |38. வேளாள புராணத்தைப் புகழ்ந்த ஐயாவு ராவுத்தர்]] | {{DJVU page link| 62| 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/041 |39. கந்தன் சர்க்கரைக்கு வாள் பயிற்சி தந்த காதர் பாட்சா]] | {{DJVU page link| 63 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/042 |40. பாரதப் பார்த்தனைப் பாடிய பக்கீர் சாயபு ]] | {{DJVU page link| 64 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/043 |41. மாரியம்மன் புகழ்பாடிய மதார்சா ராவுத்தர் ]] | {{DJVU page link| 65 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/044 |42. பட்டக்காரர் மீது நான்மணிமாலை பாடிய அப்துல் சுகூர் சாஹிப்]] | {{DJVU page link| 66 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/045 |43. வெள்ளையம்மாளுக்கு சர்தார் பெற்றுத்தந்த உரிமை ]] | {{DJVU page link| 68 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/046 |43-A. ஹைதர் அலி மதித்துப் போற்றிய கிறித்தவப் பாதிரியார் ]] | {{DJVU page link| 69 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/047 |44. நாகூர் தர்காக் கல்வெட்டுக்கள்]] | {{DJVU page link| 73 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/048 |45. அதிராம்பட்டினம் தர்காவிற்கு செவ்வப்நாயக்கர் கொடை]] | {{DJVU page link| 82 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/049 |46. ஈசா பள்ளிவாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை ]] | {{DJVU page link| 83 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/050 |47. ஏர்வாடி பள்ளிவாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை]] | {{DJVU page link| 86 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/051 |48. ஆபில் காபில் பள்ளி வாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை]] | {{DJVU page link| 92 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/052 |49. இராமேசுவரம் கோயில் விசாரணையில் அலிப்புலி ராவுத்தர் ]] | {{DJVU page link| 96 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/053 |50. இஸ்லாமியர் தறிக்கு வரி நீக்கிய சேதுபதி]] | {{DJVU page link| 97 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/054 |51. சேதுபதியும் சீதக்காதியும்]] | {{DJVU page link| 98 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/055 |52. சேதுபதியாரின் அவையில் சவ்வாதுப் புலவர் (1745-1808)]] | {{DJVU page link| 100 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/056 |53. மொட்டைப் பக்கிரி தர்காவிற்கு சிவகங்கை மன்னர் கொடை]] | {{DJVU page link| 101 | 1}}}}<noinclude>{{block center/e}}</noinclude> dlem7t94p7mcnn5nz9lyaythibvgp6q பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/13 250 488994 1835011 1832867 2025-06-24T09:23:02Z Info-farmer 232 துணைப்பக்க வரிசையெண்கள் மாற்றம் 1835011 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{block_center/s|width=900px|}}</noinclude>{{Dtpl|dotline=...||[[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/057 |54. ஜாமி மசூதிக்கு கைக்கோளர் கொடை]] | {{DJVU page link| 102 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/058 |55. மதுரை அரசியார் மதித்த இஸ்லாம்]] | {{DJVU page link| 103 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/059 |56. அகமதுகான் நலத்திற்காக ஊரவர் வெட்டிய வாய்க்கால்]] | {{DJVU page link| 104 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/060 |57. காசிம் மைதீனுக்கு கோவை மக்கள் கொடை]] | {{DJVU page link| 105 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/061 |58. காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் பாண்டியர் கல்வெட்டுக்கள்]] | {{DJVU page link| 109 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/062 |59. உதய மார்த்தாண்டன் புதுப்பித்த பள்ளிவாசல்]] | {{DJVU page link| 114 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/063 |60. மண்ணையார்கள் தந்த பள்ளிவாசல் கொடை]] | {{DJVU page link| 116 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/064 |61. வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம்]] | {{DJVU page link| 119 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/065 |62. ரணசிங்க தேவரின் காட்டுபாவா பள்ளிவாசல் கொடை]] | {{DJVU page link| 121 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/066 |63. தொண்டைமான் அகமது சாயபுக்கு அளித்த கொடை]] | {{DJVU page link| 123 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/067 |64. லாலுகான் நலத்தின் பொருட்டு சுப்பிரமணியருக்குப் பூசை]] | {{DJVU page link| 125 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/068 |65. ஈரோடு கோட்டை அதிகாரிகளின் பள்ளிவாசல் கொடை]] | {{DJVU page link| 126 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/069 |66. இராமநாதபுரம் ஆவணங்களில் பள்ளிவாசல் கொடைகள்]] | {{DJVU page link| 131 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/070 |67. மராட்டிய மன்னர் ஆவணங்களில் இஸ்லாம்]] | {{DJVU page link| 133 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/071 |68. இஸ்லாமியரை வணங்கும் இந்துக்கள்]] | {{DJVU page link| 136 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/072 |69. மகமதுதம்பி சாகிபுக்கு சரவணப் பெருமாள் சீட்டுக்கவி]] | {{DJVU page link| 137 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/073|69A. கிறித்தவ தேவாலயத்தில் அரபு மொழிக் கல்வெட்டு.]] | {{DJVU page link| 138 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/074|69B. ஈரோட்டில் ‘கோஷா’ ஆஸ்பத்திரி]] | {{DJVU page link| 139 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/075 |70. நரசிங்கபுரம் பள்ளிவாசலுக்கு சையத் அப்துல் ஹாதி கொடை]] | {{DJVU page link| 140 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/076 |71. அம்மாபாளையம் தர்காவுக்கு ஹைதர்அலி கொடை ]] | {{DJVU page link| 141 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/077 |72. ஹைதர் அலி கொடை தந்த பீர் கயப் தர்கா]] | {{DJVU page link| 142 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/078 |73. தேங்காய்ப்பட்டினம் பள்ளிவாசல் கொடைகள்]] | {{DJVU page link| 143 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/079 |74. செஞ்சி மசூதி திருப்பணியில் சையது]] | {{DJVU page link| 144 | 1}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/080 |75. மாபூஸ்கான் கொடுத்த கொடை]] | {{DJVU page link| 145 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/081 |76. செஞ்சிக்கோட்டையை வென்ற அம்பர்கான்]] | {{DJVU page link| 146 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/082 |77. பூந்தமல்லி மசூதி கட்டிய ருஷ்தும்]] | {{DJVU page link| 147 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/083 |78. ஆர்க்காடு நவாப் அரும்பணிகள்]] | {{DJVU page link| 148 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/084 |79. புனிதரை வணங்க புகழ்மிகு கட்டிடம்]] | {{DJVU page link| 149 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/085 |80. சம்மட்டிவரத்தில் சாகிப் கான் தர்கா]] | {{DJVU page link| 150 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/086 |81. மசூதி கட்டி கொடை கொடுத்த சையது மொஹிய்யதின்]] | {{DJVU page link| 152 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/087 |82. நாகூரில் கோபுரம் கட்டிய தாவூதுகான்]] | {{DJVU page link| 154 | 1}}}}<noinclude>{{block center/e}}</noinclude> r4evcc9ii8nmaoe3oyfirn8rvn9z012 1835013 1835011 2025-06-24T09:25:39Z Info-farmer 232 - துப்புரவு 1835013 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{block_center/s|width=900px|}}</noinclude>{{Dtpl|dotline=...||[[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/057 |54. ஜாமி மசூதிக்கு கைக்கோளர் கொடை]] | {{DJVU page link| 102 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/058 |55. மதுரை அரசியார் மதித்த இஸ்லாம்]] | {{DJVU page link| 103 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/059 |56. அகமதுகான் நலத்திற்காக ஊரவர் வெட்டிய வாய்க்கால்]] | {{DJVU page link| 104 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/060 |57. காசிம் மைதீனுக்கு கோவை மக்கள் கொடை]] | {{DJVU page link| 105 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/061 |58. காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் பாண்டியர் கல்வெட்டுக்கள்]] | {{DJVU page link| 109 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/062 |59. உதய மார்த்தாண்டன் புதுப்பித்த பள்ளிவாசல்]] | {{DJVU page link| 114 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/063 |60. மண்ணையார்கள் தந்த பள்ளிவாசல் கொடை]] | {{DJVU page link| 116 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/064 |61. வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம்]] | {{DJVU page link| 119 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/065 |62. ரணசிங்க தேவரின் காட்டுபாவா பள்ளிவாசல் கொடை]] | {{DJVU page link| 121 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/066 |63. தொண்டைமான் அகமது சாயபுக்கு அளித்த கொடை]] | {{DJVU page link| 123 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/067 |64. லாலுகான் நலத்தின் பொருட்டு சுப்பிரமணியருக்குப் பூசை]] | {{DJVU page link| 125 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/068 |65. ஈரோடு கோட்டை அதிகாரிகளின் பள்ளிவாசல் கொடை]] | {{DJVU page link| 126 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/069 |66. இராமநாதபுரம் ஆவணங்களில் பள்ளிவாசல் கொடைகள்]] | {{DJVU page link| 131 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/070 |67. மராட்டிய மன்னர் ஆவணங்களில் இஸ்லாம்]] | {{DJVU page link| 133 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/071 |68. இஸ்லாமியரை வணங்கும் இந்துக்கள்]] | {{DJVU page link| 136 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/072 |69. மகமதுதம்பி சாகிபுக்கு சரவணப் பெருமாள் சீட்டுக்கவி]] | {{DJVU page link| 137 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/073|69-A. கிறித்தவ தேவாலயத்தில் அரபு மொழிக் கல்வெட்டு.]] | {{DJVU page link| 138 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/074|69-B. ஈரோட்டில் ‘கோஷா’ ஆஸ்பத்திரி]] | {{DJVU page link| 139 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/075 |70. நரசிங்கபுரம் பள்ளிவாசலுக்கு சையத் அப்துல் ஹாதி கொடை]] | {{DJVU page link| 140 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/076 |71. அம்மாபாளையம் தர்காவுக்கு ஹைதர்அலி கொடை ]] | {{DJVU page link| 141 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/077 |72. ஹைதர் அலி கொடை தந்த பீர் கயப் தர்கா]] | {{DJVU page link| 142 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/078 |73. தேங்காய்ப்பட்டினம் பள்ளிவாசல் கொடைகள்]] | {{DJVU page link| 143 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/079 |74. செஞ்சி மசூதி திருப்பணியில் சையது]] | {{DJVU page link| 144 | 1}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/080 |75. மாபூஸ்கான் கொடுத்த கொடை]] | {{DJVU page link| 145 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/081 |76. செஞ்சிக்கோட்டையை வென்ற அம்பர்கான்]] | {{DJVU page link| 146 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/082 |77. பூந்தமல்லி மசூதி கட்டிய ருஷ்தும்]] | {{DJVU page link| 147 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/083 |78. ஆர்க்காடு நவாப் அரும்பணிகள்]] | {{DJVU page link| 148 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/084 |79. புனிதரை வணங்க புகழ்மிகு கட்டிடம்]] | {{DJVU page link| 149 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/085 |80. சம்மட்டிவரத்தில் சாகிப் கான் தர்கா]] | {{DJVU page link| 150 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/086 |81. மசூதி கட்டி கொடை கொடுத்த சையது மொஹிய்யதின்]] | {{DJVU page link| 152 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/087 |82. நாகூரில் கோபுரம் கட்டிய தாவூதுகான்]] | {{DJVU page link| 154 | 1}}}}<noinclude>{{block center/e}}</noinclude> hzijliv9pu5nyiluu9kvn8y4dnviac0 1835016 1835013 2025-06-24T09:27:58Z Info-farmer 232 - துப்புரவு 1835016 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{block_center/s|width=900px|}}</noinclude>{{Dtpl|dotline=...||[[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/057 |54. ஜாமி மசூதிக்கு கைக்கோளர் கொடை]] | {{DJVU page link| 102 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/058 |55. மதுரை அரசியார் மதித்த இஸ்லாம்]] | {{DJVU page link| 103 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/059 |56. அகமதுகான் நலத்திற்காக ஊரவர் வெட்டிய வாய்க்கால்]] | {{DJVU page link| 104 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/060 |57. காசிம் மைதீனுக்கு கோவை மக்கள் கொடை]] | {{DJVU page link| 105 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/061 |58. காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் பாண்டியர் கல்வெட்டுக்கள்]] | {{DJVU page link| 109 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/062 |59. உதய மார்த்தாண்டன் புதுப்பித்த பள்ளிவாசல்]] | {{DJVU page link| 114 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/063 |60. மண்ணையார்கள் தந்த பள்ளிவாசல் கொடை]] | {{DJVU page link| 116 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/064 |61. வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம்]] | {{DJVU page link| 119 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/065 |62. ரணசிங்க தேவரின் காட்டுபாவா பள்ளிவாசல் கொடை]] | {{DJVU page link| 121 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/066 |63. தொண்டைமான் அகமது சாயபுக்கு அளித்த கொடை]] | {{DJVU page link| 123 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/067 |64. லாலுகான் நலத்தின் பொருட்டு சுப்பிரமணியருக்குப் பூசை]] | {{DJVU page link| 125 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/068 |65. ஈரோடு கோட்டை அதிகாரிகளின் பள்ளிவாசல் கொடை]] | {{DJVU page link| 126 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/069 |66. இராமநாதபுரம் ஆவணங்களில் பள்ளிவாசல் கொடைகள்]] | {{DJVU page link| 131 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/070 |67. மராட்டிய மன்னர் ஆவணங்களில் இஸ்லாம்]] | {{DJVU page link| 133 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/071 |68. இஸ்லாமியரை வணங்கும் இந்துக்கள்]] | {{DJVU page link| 136 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/072 |69. மகமதுதம்பி சாகிபுக்கு சரவணப் பெருமாள் சீட்டுக்கவி]] | {{DJVU page link| 137 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/073|69-A. கிறித்தவ தேவாலயத்தில் அரபு மொழிக் கல்வெட்டு.]] | {{DJVU page link| 138 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/074|69-B. ஈரோட்டில் ‘கோஷா’ ஆஸ்பத்திரி]] | {{DJVU page link| 139 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/075 |70. நரசிங்கபுரம் பள்ளிவாசலுக்கு சையத் அப்துல் ஹாதி கொடை]] | {{DJVU page link| 140 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/076 |71. அம்மாபாளையம் தர்காவுக்கு ஹைதர்அலி கொடை ]] | {{DJVU page link| 141 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/077 |72. ஹைதர் அலி கொடை தந்த பீர் கயப் தர்கா]] | {{DJVU page link| 142 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/078 |73. தேங்காய்ப்பட்டினம் பள்ளிவாசல் கொடைகள்]] | {{DJVU page link| 143 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/079 |74. செஞ்சி மசூதி திருப்பணியில் சையது]] | {{DJVU page link| 144 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/080 |75. மாபூஸ்கான் கொடுத்த கொடை]] | {{DJVU page link| 145 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/081 |76. செஞ்சிக்கோட்டையை வென்ற அம்பர்கான்]] | {{DJVU page link| 146 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/082 |77. பூந்தமல்லி மசூதி கட்டிய ருஷ்தும்]] | {{DJVU page link| 147 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/083 |78. ஆர்க்காடு நவாப் அரும்பணிகள்]] | {{DJVU page link| 148 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/084 |79. புனிதரை வணங்க புகழ்மிகு கட்டிடம்]] | {{DJVU page link| 149 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/085 |80. சம்மட்டிவரத்தில் சாகிப் கான் தர்கா]] | {{DJVU page link| 150 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/086 |81. மசூதி கட்டி கொடை கொடுத்த சையது மொஹிய்யதின்]] | {{DJVU page link| 152 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/087 |82. நாகூரில் கோபுரம் கட்டிய தாவூதுகான்]] | {{DJVU page link| 154 | 1}}}}<noinclude>{{block center/e}}</noinclude> bugesjc2p5zc57co9t2hip65krxf4rc 1835019 1835016 2025-06-24T09:30:03Z Info-farmer 232 சோதனைக்காக .. 1835019 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{block_center/s|width=900px|}}</noinclude>{{Dtpl|dotline=...||[[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/057 |54. ஜாமி மசூதிக்கு கைக்கோளர் கொடை]] | {{DJVU page link| 102 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/058 |55. மதுரை அரசியார் மதித்த இஸ்லாம்]] | {{DJVU page link| 103 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/059 |56. அகமதுகான் நலத்திற்காக ஊரவர் வெட்டிய வாய்க்கால்]] | {{DJVU page link| 104 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/060 |57. காசிம் மைதீனுக்கு கோவை மக்கள் கொடை]] | {{DJVU page link| 105 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/061 |58. காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் பாண்டியர் கல்வெட்டுக்கள்]] | {{DJVU page link| 109 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/062 |59. உதய மார்த்தாண்டன் புதுப்பித்த பள்ளிவாசல்]] | {{DJVU page link| 114 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/063 |60. மண்ணையார்கள் தந்த பள்ளிவாசல் கொடை]] | {{DJVU page link| 116 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/064 |61. வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம்]] | {{DJVU page link| 119 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/065 |62. ரணசிங்க தேவரின் காட்டுபாவா பள்ளிவாசல் கொடை]] | {{DJVU page link| 121 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/066 |63. தொண்டைமான் அகமது சாயபுக்கு அளித்த கொடை]] | {{DJVU page link| 123 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/067 |64. லாலுகான் நலத்தின் பொருட்டு சுப்பிரமணியருக்குப் பூசை]] | {{DJVU page link| 125 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/068 |65. ஈரோடு கோட்டை அதிகாரிகளின் பள்ளிவாசல் கொடை]] | {{DJVU page link| 126 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/069 |66. இராமநாதபுரம் ஆவணங்களில் பள்ளிவாசல் கொடைகள்]] | {{DJVU page link| 131 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/070 |67. மராட்டிய மன்னர் ஆவணங்களில் இஸ்லாம்]] | {{DJVU page link| 133 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/071 |68. இஸ்லாமியரை வணங்கும் இந்துக்கள்]] | {{DJVU page link| 136 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/072 |69. மகமதுதம்பி சாகிபுக்கு சரவணப் பெருமாள் சீட்டுக்கவி]] | {{DJVU page link| 137 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/073|69A. கிறித்தவ தேவாலயத்தில் அரபு மொழிக் கல்வெட்டு.]] | {{DJVU page link| 138 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/074|69B. ஈரோட்டில் ‘கோஷா’ ஆஸ்பத்திரி]] | {{DJVU page link| 139 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/075 |70. நரசிங்கபுரம் பள்ளிவாசலுக்கு சையத் அப்துல் ஹாதி கொடை]] | {{DJVU page link| 140 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/076 |71. அம்மாபாளையம் தர்காவுக்கு ஹைதர்அலி கொடை ]] | {{DJVU page link| 141 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/077 |72. ஹைதர் அலி கொடை தந்த பீர் கயப் தர்கா]] | {{DJVU page link| 142 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/078 |73. தேங்காய்ப்பட்டினம் பள்ளிவாசல் கொடைகள்]] | {{DJVU page link| 143 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/079 |74. செஞ்சி மசூதி திருப்பணியில் சையது]] | {{DJVU page link| 144 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/080 |75. மாபூஸ்கான் கொடுத்த கொடை]] | {{DJVU page link| 145 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/081 |76. செஞ்சிக்கோட்டையை வென்ற அம்பர்கான்]] | {{DJVU page link| 146 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/082 |77. பூந்தமல்லி மசூதி கட்டிய ருஷ்தும்]] | {{DJVU page link| 147 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/083 |78. ஆர்க்காடு நவாப் அரும்பணிகள்]] | {{DJVU page link| 148 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/084 |79. புனிதரை வணங்க புகழ்மிகு கட்டிடம்]] | {{DJVU page link| 149 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/085 |80. சம்மட்டிவரத்தில் சாகிப் கான் தர்கா]] | {{DJVU page link| 150 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/086 |81. மசூதி கட்டி கொடை கொடுத்த சையது மொஹிய்யதின்]] | {{DJVU page link| 152 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/087 |82. நாகூரில் கோபுரம் கட்டிய தாவூதுகான்]] | {{DJVU page link| 154 | 1}}}}<noinclude>{{block center/e}}</noinclude> fn111l8f6edndfdwnv95gaibli98l5m 1835023 1835019 2025-06-24T09:39:46Z Info-farmer 232 - துப்புரவு 1835023 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{block_center/s|width=900px|}}</noinclude>{{Dtpl|dotline=...||[[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/057 |54. ஜாமி மசூதிக்கு கைக்கோளர் கொடை]] | {{DJVU page link| 102 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/058 |55. மதுரை அரசியார் மதித்த இஸ்லாம்]] | {{DJVU page link| 103 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/059 |56. அகமதுகான் நலத்திற்காக ஊரவர் வெட்டிய வாய்க்கால்]] | {{DJVU page link| 104 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/060 |57. காசிம் மைதீனுக்கு கோவை மக்கள் கொடை]] | {{DJVU page link| 105 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/061 |58. காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் பாண்டியர் கல்வெட்டுக்கள்]] | {{DJVU page link| 109 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/062 |59. உதய மார்த்தாண்டன் புதுப்பித்த பள்ளிவாசல்]] | {{DJVU page link| 114 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/063 |60. மண்ணையார்கள் தந்த பள்ளிவாசல் கொடை]] | {{DJVU page link| 116 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/064 |61. வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம்]] | {{DJVU page link| 119 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/065 |62. ரணசிங்க தேவரின் காட்டுபாவா பள்ளிவாசல் கொடை]] | {{DJVU page link| 121 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/066 |63. தொண்டைமான் அகமது சாயபுக்கு அளித்த கொடை]] | {{DJVU page link| 123 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/067 |64. லாலுகான் நலத்தின் பொருட்டு சுப்பிரமணியருக்குப் பூசை]] | {{DJVU page link| 125 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/068 |65. ஈரோடு கோட்டை அதிகாரிகளின் பள்ளிவாசல் கொடை]] | {{DJVU page link| 126 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/069 |66. இராமநாதபுரம் ஆவணங்களில் பள்ளிவாசல் கொடைகள்]] | {{DJVU page link| 131 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/070 |67. மராட்டிய மன்னர் ஆவணங்களில் இஸ்லாம்]] | {{DJVU page link| 133 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/071 |68. இஸ்லாமியரை வணங்கும் இந்துக்கள்]] | {{DJVU page link| 136 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/072 |69. மகமதுதம்பி சாகிபுக்கு சரவணப் பெருமாள் சீட்டுக்கவி]] | {{DJVU page link| 137 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/073|69-A. கிறித்தவ தேவாலயத்தில் அரபு மொழிக் கல்வெட்டு.]] | {{DJVU page link| 138 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/074|69-B. ஈரோட்டில் ‘கோஷா’ ஆஸ்பத்திரி]] | {{DJVU page link| 139 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/075 |70. நரசிங்கபுரம் பள்ளிவாசலுக்கு சையத் அப்துல் ஹாதி கொடை]] | {{DJVU page link| 140 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/076 |71. அம்மாபாளையம் தர்காவுக்கு ஹைதர்அலி கொடை ]] | {{DJVU page link| 141 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/077 |72. ஹைதர் அலி கொடை தந்த பீர் கயப் தர்கா]] | {{DJVU page link| 142 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/078 |73. தேங்காய்ப்பட்டினம் பள்ளிவாசல் கொடைகள்]] | {{DJVU page link| 143 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/079 |74. செஞ்சி மசூதி திருப்பணியில் சையது]] | {{DJVU page link| 144 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/080 |75. மாபூஸ்கான் கொடுத்த கொடை]] | {{DJVU page link| 145 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/081 |76. செஞ்சிக்கோட்டையை வென்ற அம்பர்கான்]] | {{DJVU page link| 146 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/082 |77. பூந்தமல்லி மசூதி கட்டிய ருஷ்தும்]] | {{DJVU page link| 147 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/083 |78. ஆர்க்காடு நவாப் அரும்பணிகள்]] | {{DJVU page link| 148 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/084 |79. புனிதரை வணங்க புகழ்மிகு கட்டிடம்]] | {{DJVU page link| 149 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/085 |80. சம்மட்டிவரத்தில் சாகிப் கான் தர்கா]] | {{DJVU page link| 150 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/086 |81. மசூதி கட்டி கொடை கொடுத்த சையது மொஹிய்யதின்]] | {{DJVU page link| 152 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/087 |82. நாகூரில் கோபுரம் கட்டிய தாவூதுகான்]] | {{DJVU page link| 154 | 1}}}}<noinclude>{{block center/e}}</noinclude> bugesjc2p5zc57co9t2hip65krxf4rc பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/14 250 488995 1835012 1832929 2025-06-24T09:23:59Z Info-farmer 232 துணைப்பக்க வரிசையெண்கள் மாற்றம் 1835012 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{block_center/s|width=900px|}}</noinclude> {{Dtpl|dotline=...||[[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/088 |82-A. கீழக்கரை, ஓடக்கரை மசூதிக் கல்வெட்டு]] | {{DJVU page link| 155 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/089 |83. அத்தர் வியாபாரிகள் கட்டிய பள்ளிவாசல்]] | {{DJVU page link| 156 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/090 |84. கோட்டை முகப்புக் கட்டிய ஹுசைனி]] | {{DJVU page link| 157 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/091 |85. திருவறம்பூர் பள்ளிவாசல் ஓலைச்சுவடி]] | {{DJVU page link| 158 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/092 |86. துயிலிடக் கல்வெட்டுக்கள்]] | {{DJVU page link| 161 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/093 |87. கல்வெட்டில் ஏழு தலைமுறை]] | {{DJVU page link| 169 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/094 |88. இணையற்ற இரு பதக்கங்கள்]] | {{DJVU page link| 170 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/095 |88-A. தொழுகை நேரம் குறித்த கல்வெட்டு]] | {{DJVU page link| 172 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/096 |89. பேகம்பூர் பள்ளிவாசல் வரலாறு]] | {{DJVU page link| 177 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/097 |90. மகத்துவம் நடந்த சங்ககிரி பள்ளிவாசல்]] | {{DJVU page link| 180 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/098 |91. முல்லா சாஸ்திரம்]] | {{DJVU page link| 181 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/099 |92. கைக்கூலி சீதனம் குறைத்து ஒப்பந்தம்]] | {{DJVU page link| 182 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/100 |93. திப்புவின் திவான் தீர்ப்புப் பட்டயம்]] | {{DJVU page link| 185 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/101 |94. வேலூர் துலுக்கப் பிரபுக்கள் வம்சாவளி]] | {{DJVU page link| 191 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/102 |95. பந்தரும் ஃபர்கானாவும்]] | {{DJVU page link| 194 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/103 |96. தினாரும் திரமமும்]] | {{DJVU page link| 195 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/104 |97. அஞ்சு வண்ணம்]] | {{DJVU page link| 196 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/105 |98. திப்பு சுல்தான் வாங்கிய பழைய கோட்டை]] | {{DJVU page link| 198 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/106 |99. கச்சத்தீவை குத்தகைக்கு வாங்கிய இஸ்லாமியர்கள்]] | {{DJVU page link| 199 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/107 |100. புதுக்கோட்டை ஓலை ஆவணங்கள்]] | {{DJVU page link| 204 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/108 |101. பழவேற்காடு ஆவணத்தில் இஸ்லாமியர்]] | {{DJVU page link| 209 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/109 |102. கூலப்பண்டகசாலை வாங்கிய லெப்பை மரக்காயர்]] | {{DJVU page link| 210 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/110 |103. ஜம்பை காசிம் புலவர் பாடல்கள்]] | {{DJVU page link| 213 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/111 |104. ஹைதர் அலி - திப்பு சுல்தானும், பாளையக்காரர்களும் ஒரு வரலாற்றுப் பார்வை]] | {{DJVU page link| 216 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/112 |105. கொடைகளை நிறுத்திய கும்பினியார்]] | {{DJVU page link| 224 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/113 |106. தமிழ்நாடு அரசு சுவடி நூலகத்தில் இஸ்லாமிய ஆவணங்கள்]] | {{DJVU page link| 225 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/114 |107. சென்னை, தமிழ்நாடு அரசு கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ள இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்]] | {{DJVU page link| 227 | 1}}}} {{Dtpl|dotline=...|| [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/115|108. நாணயங்கள்]] | {{DJVU page link| 228 | 1}}}} {{block center/e}} {{c|✽}}{{nop}}<noinclude></noinclude> 74yse676y0rjc0hhfz3jzt7i0csoab3 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/16 250 488997 1834823 1833691 2025-06-24T04:56:48Z ஹர்ஷியா பேகம் 15001 1834823 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <section begin="1"/> {{center|{{larger|<b>1. முருகன் கோயிலுக்கு தோப்பு அளித்த ராவுத்தர்கள்</b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– || காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம், சென்னை - புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள இடைக்கழி அருகிலிருக்கும் நயினார் குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கி.மீ தூரத்தில் உள்ள தோப்பில் நடப்பட்டதூண். |- | காலம் || – || விசய நகர மன்னர் மூன்றாம் சீரங்கதேவ மகாராயர் காலம் (1642-1655) கி.பி. 1645; தாரண வருடம். |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– || விசய நகர மன்னர் காலத்தில் அப்பகுதியை வெங்கலப்ப நாயக்கர் நிர்வாகம் செய்து வந்தார். அவரது அலுவலர் குயீசனா ராவுத்தர். அவரது புண்ணியமாக நயினார் குப்பத்தை அமரக் கிராமமாகப் பெற்றிருந்தறெகனாராவுத்தர், நல்லன் ராவுத்தர், அல்லி ராவுத்தர், கான் ராவுத்தர் ஆகிய நால்வரும் அருகில் செய்யூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்குத் தென்னை, மா, பலா மற்றும் பல மரங்கள் அடங்கிய தோப்பு ஒன்றை கொடையாக அளித்தனர். அந்நிலமும் குடிகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டனர். இதற்கு தீங்கு செய்தவர்கள் தாய், தகப்பன், குரு, கங்கைக்கரையில் காராம் பசுவையும் கொன்ற பாவம் அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. தூண் 9 அடி உயரமுள்ளது. தூணின் உச்சி வளைவாய் கிணறு அல்லது ஏற்றத்தின் தூணாக இருக்கலாம். |} <poem><b><ref>* ‘கல்வெட்டு’. எண் 64, அக்டோபர் 2004: பக்கம் 5-7; தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு</ref>கல்வெட்டு</b> 1. தாரண வரு 2. ஷம் பங்கு 3. னி மாதம் 25 4. தேதி ஶ்ரீமந் ம</poem><noinclude> {{rule}}{{Reflist}}</noinclude> 4s4jbs1jdapbezs3fsmegzhadlxee7a பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/19 250 489000 1834833 1833830 2025-06-24T05:07:42Z ஹர்ஷியா பேகம் 15001 1834833 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|18 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} <section begin="2"/> {{center|<b>{{larger|2. மங்களேசுவரியம்மனுக்கு சையத் இஸ்மாயில் செய்த<br>வெண்கலத் திருவாசி*}} <ref>* ஆவணம். 7. சூலை...1996 தமிழகத் தொல்லியக் கழகம், பக்கம் 122</ref></b>}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், உத்தரகோசமங்கை மங்களேசுவரியம்மன் சன்னதி வாயில் திருவாசியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள். |- | காலம் || – ||1924 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||மதுரையில் மானேஜராக இருந்த சையத் இஸ்மாயில் சாயபு அவர்கள் 230 விளக்குகளுடன் முகப்பில் யாழி முகம் கொண்ட வெண்கலத் திருவாசி ஒன்றை மங்களேசுவரியம்மனுக்குக் கொடையாக அளித்தார். அதன் எடையும், வேலை செய்த ஆசாரியின் பெயரும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. <b>கல்வெட்டு</b> <poem> 1. சாலிவாகன சகாப்தம் 1845 சரியான குரோதி வருஷம் ஆவணி மாதம் 2. 27 தேதி சோம வாரமும் கிருஷ்ண பட்சத்துத் துவாதசியும் பூச நட்சத்திரமும் 3. வரிகநாம யோகமும் கவுலபாலகரணமும் கூடிய சுப தினத்தில் 4. திருவுத்தரகோச மங்கை ஸ்ரீமங்களேசுவரியம்மன் சன்னதிக்கு மதுரை 5. யிலிருக்கும் மகாராசராசஸ்ரீ சையது யிசுமாயில் சாயபு அவர்கள் மானேஜர் அதிகாரத்தில் மேற்படி கோயில் அமிசத்திலிருந்து செய்து வை 6. த்த 230 விளக்குள்ள வெங்கல யாழிமுகத் திருவாச்சி 7. க்கு சேர் 8. 842{{sfrac|3|4}} 9. சில்ப்பம் வீரபுத்திர ஆசா 10. ரி சுஹஸ்த லிகிதம்</poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 3rxodbtkf2wlkgz3rzaaw8ru76rn7zn 1834835 1834833 2025-06-24T05:08:10Z ஹர்ஷியா பேகம் 15001 1834835 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|18 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} <section begin="2"/> {{center|<b>{{larger|2. மங்களேசுவரியம்மனுக்கு சையத் இஸ்மாயில் செய்த<br>வெண்கலத் திருவாசி*}} <ref>* ஆவணம். 7. சூலை...1996 தமிழகத் தொல்லியக் கழகம், பக்கம் 122</ref></b>}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், உத்தரகோசமங்கை மங்களேசுவரியம்மன் சன்னதி வாயில் திருவாசியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள். |- | காலம் || – ||1924 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||மதுரையில் மானேஜராக இருந்த சையத் இஸ்மாயில் சாயபு அவர்கள் 230 விளக்குகளுடன் முகப்பில் யாழி முகம் கொண்ட வெண்கலத் திருவாசி ஒன்றை மங்களேசுவரியம்மனுக்குக் கொடையாக அளித்தார். அதன் எடையும், வேலை செய்த ஆசாரியின் பெயரும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. |} <b>கல்வெட்டு</b> <poem> 1. சாலிவாகன சகாப்தம் 1845 சரியான குரோதி வருஷம் ஆவணி மாதம் 2. 27 தேதி சோம வாரமும் கிருஷ்ண பட்சத்துத் துவாதசியும் பூச நட்சத்திரமும் 3. வரிகநாம யோகமும் கவுலபாலகரணமும் கூடிய சுப தினத்தில் 4. திருவுத்தரகோச மங்கை ஸ்ரீமங்களேசுவரியம்மன் சன்னதிக்கு மதுரை 5. யிலிருக்கும் மகாராசராசஸ்ரீ சையது யிசுமாயில் சாயபு அவர்கள் மானேஜர் அதிகாரத்தில் மேற்படி கோயில் அமிசத்திலிருந்து செய்து வை 6. த்த 230 விளக்குள்ள வெங்கல யாழிமுகத் திருவாச்சி 7. க்கு சேர் 8. 842{{sfrac|3|4}} 9. சில்ப்பம் வீரபுத்திர ஆசா 10. ரி சுஹஸ்த லிகிதம்</poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> f4miui2bjgzh0qsivw682jwjqr43hds பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/20 250 489001 1834837 1833833 2025-06-24T05:10:42Z ஹர்ஷியா பேகம் 15001 1834837 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 19}} {{rule}}</noinclude>{{dhr|3em}} <section begin="3"/> {{center|<b>{{larger|3. குற்றாலநாதருக்கும் நெல்லை காந்திமதியம்மனுக்கும்<br>இஸ்லாமிய வணிகர்கள் கொடை*}}<ref>1) மெக்கன்சி ஆவணம் ஆர் 5371-2: தமிழக அரசு கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை -5.<br>2) தென்னிந்தியக் கோயில் சாசனங்கள், மூன்றாம் தொகுதி முதல் பாகம். எண் 1099, பக்கம் 1073-4.<br>3) Annual Report on Epigraphy (A) 43 of 1946.</ref></b>}} தென்காசியில் உள்ள அகமது பேட்டையில் ஏற்றுமதி இறக்குமதிப் பொருளை வியாபாரம் செய்யும் மணியம் இசுமாயில் ராவுத்தர் உள்ளிட்ட இசுலாமிய வணிகர்கள் அனைவரும் குற்றாலம், குற்றாலநாதசுவாமி திருவிழாப் பூசைக் கட்டளைக்கும், திருநெல்வேலி காந்திமதியம்மனின் சிறுகாலைச் சந்திக் கட்டளைக்கும் கொடுத்த மகமைக் கொடையை இச்செப்பேடு கூறுகிறது. அகமது பேட்டை வணிகர்கள் இல்லாமல், செங்கோட்டை, புளியரை, பண்புளி, கடையநல்லூர், சிவராமப்பேட்டை, சுரண்டை முதலிய ஊர்ச் சந்தையில் வியாபாரம் செய்யும் இசுலாமியர்களும் இம்மகமையை மாதா மாதம் அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்குச் சைவர்கள் எவரேனும் தீங்கு செய்தால் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற தோஷத்திலும், இசுலாமியர்கள் தீங்கு செய்தால் தாய்க்கு விக்கினம் செய்த தோஷத்திலும் போவார்கள் என கூறியுள்ளனர். பட்டயம் எழுதியவர் மாடன் செட்டியார். தானாதிபதி அம்மைநாதன் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளார். இசுலாமியர்கள் சார்பில் இசுமாயில் ராவுத்தர் கையொப்பமிட்டுள்ளார். கோயில் கார்பாரு சந்திர குமாருப்பிள்ளை செப்பேடு செய்து வைத்தார். இரண்டு செப்பேடு தயார் செய்து குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலுக்கும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. கொடை அளித்த ஆண்டு கி.பி. 1795. {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> j54yr1yr29o38nerhum157rg9gdf3z9 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/22 250 489003 1834839 1833835 2025-06-24T05:12:46Z ஹர்ஷியா பேகம் 15001 1834839 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 21}} {{rule}}</noinclude><section begin="4"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|4. திப்பு சுல்தானின் கொடைபெற்ற<br>கொங்குநாட்டுக் கோயில்கள்*}}<ref>* “சேலம், நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுக்கள்”. தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு.<br>*பவானியாற்று பெருவெள்ளம்.</ref></b>}} ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் கொங்கு நாட்டில் பல பள்ளிவாசல்களிலும், தர்ஹாக்களிலும் தொழுகை நடத்தியதாகச் செவிவழிச் செய்திகளும், சில ஆவணங்களும் உள்ளன. திப்பு சுல்தான் கொங்கு நாட்டு சைவ, வைணவக் கோயில்கட்கும் கொடையளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம் மின்னக்கல்லில் ஒரு பார்ப்பனர் அக்கிரகாரம் உள்ளது. அப்பகுதிக்கு உத்தண்ட மல்ல சமுத்திரம் என்று பெயர். அங்கு பாமா ருக்மணி சமேத கோபாலகிருஷ்ணன் கோயில் உள்ளது. தந்தை காலத்திலேயே அவ்வூருக்கு வந்து ‘திப்பு சுல்தான் பகதூர்’ அவர்கள் அக்கோயிலுக்கு ஜோடிகை மானியமாக ‘575 ராஜகோபால வராகன்’ கொடையளித்ததாக அக்கோயில் கல்வெட்டுக் கூறுகிறது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், குன்னத்தூரை அடுத்துள்ள குறிச்சி என்ற ஊரில் ‘செல்லாண்டியம்மன் கோயில்’ உள்ளது. அக்கோயில் வழிபாட்டுக்காகவும், பூசாரிகள் நலத்திற்காகவும் திப்புசுல்தான் கொடை வழங்கியுள்ளார். அதற்குரிய ஆவணம் கறுப்பு கேன்வாஸ் துணியில் கன்னடத்தில் வெள்ளை எழுத்துக்களால் எழுதப்பட்டது. அந்த ஆவணம் மைசூரில் இந்திய கல்வெட்டுத் துறையின் முன்னாள் இயக்குநர் டாக்டர். கே.வி. ரமேஷ் அவர்கள் வசம் உள்ளது. ஈரோடு மாவட்ம் பவானி வட்டத்தில் ‘திப்பு செட்டி பாளையம்’ என்ற ஊர் உள்ளது. அண்மையில் உள்ள ஜம்பையில் கிடைத்த பாடல் ஒன்றில் அவ்வூர் ‘திப்பு செட்டி பாளையம்’ என்று எழுதப்பட்டுள்ளது. திப்புசுல்தான் தொடர்பு இதனால் விளங்கும்.<section end="4"/>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 1ww32i4q1jcqxhslubbll1mksrjk225 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/23 250 489004 1834656 1833763 2025-06-23T12:15:34Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|22 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="5"/> {{dhr|3em}} {{c|<b>5. {{larger|கொங்கணேசுவரருக்குக் கொடை தந்த இஸ்லாமியர்கள்}} <ref>*தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்: தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு<br>செ. இராசு. பக் - 91, 152, 154.</ref></b>}} மராட்டிய மன்னர் இரண்டாம் ஏகோசி (1735-1737) காலத்தில் 6.12.1735 அன்று தஞ்சாவூர் கொங்கணேசுவரர்-ஞானாம்பிகை, அன்ன பூரணி ஆகியோருக்குச் சோமவாரக் கட்டளை நடத்த கடைக்கு ஒரு காசு கொடுத்து பூசையை நடத்தியவர்களில் ‘பாசிக்கடை மீரா சாயபு’ ஒருவர். மராட்டிய மன்னர் பிரதாபசிங் (1739-1763) காலத்தில் 4.6.1758 அன்று ‘பலபட்டடைச் செட்டியார்கள், வர்த்தகர்கள், பதினெட்டுப் பட்டடை’ ஆகியோருடன் சேர்ந்து “துலுக்கர் லெப்பை” வியாபாரிகளும் தஞ்சாவூர் கொங்கணேசுவரருக்கு மகமைக் கொடை கொடுக்க ஒப்புக் கொண்டு இசுலாமிய வணிகர்கள் பாசிப்பேட்டை <poem>{{left_margin|6em|அகமது ராவுத்தன் அரசாங்கண்டு ராவுத்தன் சின்னபிள்ளை ராவுத்தன்}}</poem> ஆகியோர் பொதி ஒன்றுக்கு முக்கால் பணம் கொடுத்தனர். பிரவுர ராசகிரியார் <poem>{{left_margin|6em|சந்தப்பேட்டை சயிது ராவுத்தன் மகன் முத்துராவுத்தன் ராசகிரியார் மீரா லெப்பை மூக்குப்புறி கூனமீரா லெப்பை கிறுத்து லெப்பை மாதாரு லெப்பை மாம ராவுத்தன் எலிப்பாடி ராவுத்தன் மீரயாளி ராவுத்தன் களு சாத்தின ராவுத்தன் சின்ன மீரா லெப்பை பெரிய மீரா லெப்பை}}</poem> ஆகியோர் கட்டு ஒன்றுக்கு முக்காணி பணம் கொடுத்தனர்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 6qcuoenffgi3u4zlns1f4gu5w0cmcem 1834657 1834656 2025-06-23T12:18:14Z மொஹமது கராம் 14681 1834657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|22 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="5"/> {{dhr|3em}} {{c|<b>5. {{larger|கொங்கணேசுவரருக்குக் கொடை தந்த இஸ்லாமியர்கள்}} <ref>*தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்: தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு<br>செ. இராசு. பக் - 91, 152, 154.</ref></b>}} மராட்டிய மன்னர் இரண்டாம் ஏகோசி (1735-1737) காலத்தில் 6.12.1735 அன்று தஞ்சாவூர் கொங்கணேசுவரர்-ஞானாம்பிகை, அன்ன பூரணி ஆகியோருக்குச் சோமவாரக் கட்டளை நடத்த கடைக்கு ஒரு காசு கொடுத்து பூசையை நடத்தியவர்களில் ‘பாசிக்கடை மீரா சாயபு’ ஒருவர். மராட்டிய மன்னர் பிரதாபசிங் (1739-1763) காலத்தில் 4.6.1758 அன்று ‘பலபட்டடைச் செட்டியார்கள், வர்த்தகர்கள், பதினெட்டுப் பட்டடை’ ஆகியோருடன் சேர்ந்து “துலுக்கர் லெப்பை” வியாபாரிகளும் தஞ்சாவூர் கொங்கணேசுவரருக்கு மகமைக் கொடை கொடுக்க ஒப்புக் கொண்டு இசுலாமிய வணிகர்கள் {| |- | பாசிப்பேட்டை || அகமது ராவுத்தன் |- | || அரசாங்கண்டு ராவுத்தன் |- | || சின்னபிள்ளை ராவுத்தன் |} ஆகியோர் பொதி ஒன்றுக்கு முக்கால் பணம் கொடுத்தனர். பிரவுர ராசகிரியார் <poem>{{left_margin|6em|சந்தப்பேட்டை சயிது ராவுத்தன் மகன் முத்துராவுத்தன் ராசகிரியார் மீரா லெப்பை மூக்குப்புறி கூனமீரா லெப்பை கிறுத்து லெப்பை மாதாரு லெப்பை மாம ராவுத்தன் எலிப்பாடி ராவுத்தன் மீரயாளி ராவுத்தன் களு சாத்தின ராவுத்தன் சின்ன மீரா லெப்பை பெரிய மீரா லெப்பை}}</poem> ஆகியோர் கட்டு ஒன்றுக்கு முக்காணி பணம் கொடுத்தனர்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 35yzi0aosd59lmw8hkh91u5yzy5pu0b 1834658 1834657 2025-06-23T12:19:59Z மொஹமது கராம் 14681 1834658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|22 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="5"/> {{dhr|3em}} {{c|<b>5. {{larger|கொங்கணேசுவரருக்குக் கொடை தந்த இஸ்லாமியர்கள்}} <ref>*தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்: தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு செ. இராசு. பக் - 91, 152, 154.</ref></b>}} மராட்டிய மன்னர் இரண்டாம் ஏகோசி (1735-1737) காலத்தில் 6.12.1735 அன்று தஞ்சாவூர் கொங்கணேசுவரர்-ஞானாம்பிகை, அன்ன பூரணி ஆகியோருக்குச் சோமவாரக் கட்டளை நடத்த கடைக்கு ஒரு காசு கொடுத்து பூசையை நடத்தியவர்களில் ‘பாசிக்கடை மீரா சாயபு’ ஒருவர். மராட்டிய மன்னர் பிரதாபசிங் (1739-1763) காலத்தில் 4.6.1758 அன்று ‘பலபட்டடைச் செட்டியார்கள், வர்த்தகர்கள், பதினெட்டுப் பட்டடை’ ஆகியோருடன் சேர்ந்து “துலுக்கர் லெப்பை” வியாபாரிகளும் தஞ்சாவூர் கொங்கணேசுவரருக்கு மகமைக் கொடை கொடுக்க ஒப்புக் கொண்டு இசுலாமிய வணிகர்கள் {| |- | பாசிப்பேட்டை || அகமது ராவுத்தன் |- | || அரசாங்கண்டு ராவுத்தன் |- | || சின்னபிள்ளை ராவுத்தன் |} ஆகியோர் பொதி ஒன்றுக்கு முக்கால் பணம் கொடுத்தனர். பிரவுர ராசகிரியார் <poem>{{left_margin|6em|சந்தப்பேட்டை சயிது ராவுத்தன் மகன் முத்துராவுத்தன் ராசகிரியார் மீரா லெப்பை மூக்குப்புறி கூனமீரா லெப்பை கிறுத்து லெப்பை மாதாரு லெப்பை மாம ராவுத்தன் எலிப்பாடி ராவுத்தன் மீரயாளி ராவுத்தன் களு சாத்தின ராவுத்தன் சின்ன மீரா லெப்பை பெரிய மீரா லெப்பை}}</poem> ஆகியோர் கட்டு ஒன்றுக்கு முக்காணி பணம் கொடுத்தனர்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> bhl7m759buru20zubhth2r8jyxjti5z 1834702 1834658 2025-06-23T14:16:35Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1834702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|22 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="5"/> {{dhr|3em}} {{c|<b>5. {{larger|கொங்கணேசுவரருக்குக் கொடை தந்த இஸ்லாமியர்கள்}} <ref>*தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்: தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு செ. இராசு. பக் - 91, 152, 154.</ref></b>}} மராட்டிய மன்னர் இரண்டாம் ஏகோசி (1735-1737) காலத்தில் 6.12.1735 அன்று தஞ்சாவூர் கொங்கணேசுவரர்-ஞானாம்பிகை, அன்ன பூரணி ஆகியோருக்குச் சோமவாரக் கட்டளை நடத்த கடைக்கு ஒரு காசு கொடுத்து பூசையை நடத்தியவர்களில் ‘பாசிக்கடை மீரா சாயபு’ ஒருவர். மராட்டிய மன்னர் பிரதாபசிங் (1739-1763) காலத்தில் 4.6.1758 அன்று ‘பலபட்டடைச் செட்டியார்கள், வர்த்தகர்கள், பதினெட்டுப் பட்டடை’ ஆகியோருடன் சேர்ந்து “துலுக்கர் லெப்பை” வியாபாரிகளும் தஞ்சாவூர் கொங்கணேசுவரருக்கு மகமைக் கொடை கொடுக்க ஒப்புக் கொண்டு இசுலாமிய வணிகர்கள் {| |- | பாசிப்பேட்டை || அகமது ராவுத்தன் |- | || அரசாங்கண்டு ராவுத்தன் |- | || சின்னபிள்ளை ராவுத்தன் |} ஆகியோர் பொதி ஒன்றுக்கு முக்கால் பணம் கொடுத்தனர். {| |பிரவுர ராசகிரியார் || {{gap}}சந்தப்பேட்டை |- | ||சயிது ராவுத்தன் மகன் முத்துராவுத்தன்<br>ராசகிரியார் மீரா லெப்பை<br>மூக்குப்புறி கூனமீரா லெப்பை<br>கிறுத்து லெப்பை<br>மாதாரு லெப்பை<br>மாம ராவுத்தன்<br>எலிப்பாடி ராவுத்தன்<br>மீரயாளி ராவுத்தன்<br>களு சாத்தின ராவுத்தன்<br>சின்ன மீரா லெப்பை<br>பெரிய மீரா லெப்பை |- |} ஆகியோர் கட்டு ஒன்றுக்கு முக்காணி பணம் கொடுத்தனர்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> j63hcrx0o6sg83onvrhmvwdoln8sd0q 1834840 1834702 2025-06-24T05:14:31Z ஹர்ஷியா பேகம் 15001 1834840 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|22 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="5"/> {{dhr|3em}} {{c|<b>5. {{larger|கொங்கணேசுவரருக்குக் கொடை தந்த இஸ்லாமியர்கள்*}} <ref>*தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்: தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு செ. இராசு. பக் - 91, 152, 154.</ref></b>}} மராட்டிய மன்னர் இரண்டாம் ஏகோசி (1735-1737) காலத்தில் 6.12.1735 அன்று தஞ்சாவூர் கொங்கணேசுவரர்-ஞானாம்பிகை, அன்ன பூரணி ஆகியோருக்குச் சோமவாரக் கட்டளை நடத்த கடைக்கு ஒரு காசு கொடுத்து பூசையை நடத்தியவர்களில் ‘பாசிக்கடை மீரா சாயபு’ ஒருவர். மராட்டிய மன்னர் பிரதாபசிங் (1739-1763) காலத்தில் 4.6.1758 அன்று ‘பலபட்டடைச் செட்டியார்கள், வர்த்தகர்கள், பதினெட்டுப் பட்டடை’ ஆகியோருடன் சேர்ந்து “துலுக்கர் லெப்பை” வியாபாரிகளும் தஞ்சாவூர் கொங்கணேசுவரருக்கு மகமைக் கொடை கொடுக்க ஒப்புக் கொண்டு இசுலாமிய வணிகர்கள் {| |- | பாசிப்பேட்டை || அகமது ராவுத்தன் |- | || அரசாங்கண்டு ராவுத்தன் |- | || சின்னபிள்ளை ராவுத்தன் |} ஆகியோர் பொதி ஒன்றுக்கு முக்கால் பணம் கொடுத்தனர். {| |பிரவுர ராசகிரியார் || {{gap}}சந்தப்பேட்டை |- | ||சயிது ராவுத்தன் மகன் முத்துராவுத்தன்<br>ராசகிரியார் மீரா லெப்பை<br>மூக்குப்புறி கூனமீரா லெப்பை<br>கிறுத்து லெப்பை<br>மாதாரு லெப்பை<br>மாம ராவுத்தன்<br>எலிப்பாடி ராவுத்தன்<br>மீரயாளி ராவுத்தன்<br>களு சாத்தின ராவுத்தன்<br>சின்ன மீரா லெப்பை<br>பெரிய மீரா லெப்பை |- |} ஆகியோர் கட்டு ஒன்றுக்கு முக்காணி பணம் கொடுத்தனர். <section end="5"/>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> qokqwnlmampp44g5od86vgrh2zxzw9p பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/24 250 489005 1834659 1833769 2025-06-23T12:24:11Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 23}} {{rule}}</noinclude><section begin="6"/> {{center|{{larger|<b>6. வராகசாமி கோயிலுக்கு சாத்துல்லாகான் காலக் கொடை <ref>Annual Report on Epigraphy 15(A)1953<br>87(A)1953</ref></b>}}}} டில்லி பேரரசர் பரூக்ஷா பாதுஷா ஆட்சியின்போது அவரின் கீழ் கர்நாடக நவாபாக இருந்தவர் நவாப் சாத்துல்லாகான் சாகிப் அவர்கள். அவருடைய ஆணையின்படி ராஜா தோடர்மால் மூலம் ஸ்ரீமுஷ்ணம் வராகசாமி என்ற பெருமாள் கோயிலுக்கு கீழ் புளியங்குடி, புத்தூர், நெடுஞ்சேரி, மலையான்புத்து முதலிய 5 ஊர்களை மானியமாகக் கொடுத்து அதை நிர்வகிக்க உள்ளூர்ப் பாளையக்காரருக்கு அதற்குரிய சன்னதும் கொடுத்தார். இச்சிறப்பு மிகு கொடை 1.5.1714 அன்று அளிக்கப்பட்டு அதற்குரிய செப்பேடும் எழுதப்பட்டது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> auxk2vx2g90hhryt15dpg648vws0dlp 1834705 1834659 2025-06-23T14:19:27Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1834705 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 23}} {{rule}}</noinclude><section begin="6"/> {{center|{{larger|<b>* 6. வராகசாமி கோயிலுக்கு சாத்துல்லாகான் காலக் கொடை <ref>Annual Report on Epigraphy 15(A)1953<br>87(A)1953</ref></b>}}}} டில்லி பேரரசர் பரூக்ஷா பாதுஷா ஆட்சியின்போது அவரின் கீழ் கர்நாடக நவாபாக இருந்தவர் நவாப் சாத்துல்லாகான் சாகிப் அவர்கள். அவருடைய ஆணையின்படி ராஜா தோடர்மால் மூலம் ஸ்ரீமுஷ்ணம் வராகசாமி என்ற பெருமாள் கோயிலுக்கு கீழ் புளியங்குடி, புத்தூர், நெடுஞ்சேரி, மலையான்புத்து முதலிய 5 ஊர்களை மானியமாகக் கொடுத்து அதை நிர்வகிக்க உள்ளூர்ப் பாளையக்காரருக்கு அதற்குரிய சன்னதும் கொடுத்தார். இச்சிறப்பு மிகு கொடை 1.5.1714 அன்று அளிக்கப்பட்டு அதற்குரிய செப்பேடும் எழுதப்பட்டது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 58cznt267s89tmp0ghpebui4egckcfb 1834706 1834705 2025-06-23T14:20:59Z Booradleyp1 1964 1834706 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 23}} {{rule}}</noinclude><section begin="6"/> {{center|{{larger|<b>6. வராகசாமி கோயிலுக்கு சாத்துல்லாகான் காலக் கொடை <ref>* Annual Report on Epigraphy 15(A)1953<br>87(A)1953</ref></b>}}}} டில்லி பேரரசர் பரூக்ஷா பாதுஷா ஆட்சியின்போது அவரின் கீழ் கர்நாடக நவாபாக இருந்தவர் நவாப் சாத்துல்லாகான் சாகிப் அவர்கள். அவருடைய ஆணையின்படி ராஜா தோடர்மால் மூலம் ஸ்ரீமுஷ்ணம் வராகசாமி என்ற பெருமாள் கோயிலுக்கு கீழ் புளியங்குடி, புத்தூர், நெடுஞ்சேரி, மலையான்புத்து முதலிய 5 ஊர்களை மானியமாகக் கொடுத்து அதை நிர்வகிக்க உள்ளூர்ப் பாளையக்காரருக்கு அதற்குரிய சன்னதும் கொடுத்தார். இச்சிறப்பு மிகு கொடை 1.5.1714 அன்று அளிக்கப்பட்டு அதற்குரிய செப்பேடும் எழுதப்பட்டது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> dwdxnzu4qkfd1umvuhxpdpsbfzzhxs6 1834708 1834706 2025-06-23T14:22:27Z Booradleyp1 1964 1834708 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 23}} {{rule}}</noinclude><section begin="6"/> {{center|{{larger|<b>6. வராகசாமி கோயிலுக்கு சாத்துல்லாகான் காலக் கொடை <ref>* Annual Report on Epigraphy 15(A)1953<br>87(A)1953</ref></b>}}}} டில்லி பேரரசர் பரூக்ஷா பாதுஷா ஆட்சியின்போது அவரின் கீழ் கர்நாடக நவாபாக இருந்தவர் நவாப் சாத்துல்லாகான் சாகிப் அவர்கள். அவருடைய ஆணையின்படி ராஜா தோடர்மால் மூலம் ஸ்ரீமுஷ்ணம் வராகசாமி என்ற பெருமாள் கோயிலுக்கு கீழ் புளியங்குடி, புத்தூர், நெடுஞ்சேரி, மலையான்புத்து முதலிய 5 ஊர்களை மானியமாகக் கொடுத்து அதை நிர்வகிக்க உள்ளூர்ப் பாளையக்காரருக்கு அதற்குரிய சன்னதும் கொடுத்தார். இச்சிறப்பு மிகு கொடை 1.5.1714 அன்று அளிக்கப்பட்டு அதற்குரிய செப்பேடும் எழுதப்பட்டது.{{nop}} <section end="6"/><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> p7f48i2gpey91j7d4gfypu7izkbxiac 1834880 1834708 2025-06-24T06:27:52Z ஹர்ஷியா பேகம் 15001 1834880 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 23}} {{rule}}</noinclude><section begin="6"/>{{center|{{larger|<b>6. வராகசாமி கோயிலுக்கு சாத்துல்லாகான் காலக் கொடை* <ref>* Annual Report on Epigraphy 15(A)1953<br>87(A)1953</ref></b>}}}} டில்லி பேரரசர் பரூக்ஷா பாதுஷா ஆட்சியின்போது அவரின் கீழ் கர்நாடக நவாபாக இருந்தவர் நவாப் சாத்துல்லாகான் சாகிப் அவர்கள். அவருடைய ஆணையின்படி ராஜா தோடர்மால் மூலம் ஸ்ரீமுஷ்ணம் வராகசாமி என்ற பெருமாள் கோயிலுக்கு கீழ் புளியங்குடி, புத்தூர், நெடுஞ்சேரி, மலையான்புத்து முதலிய 5 ஊர்களை மானியமாகக் கொடுத்து அதை நிர்வகிக்க உள்ளூர்ப் பாளையக்காரருக்கு அதற்குரிய சன்னதும் கொடுத்தார். இச்சிறப்பு மிகு கொடை 1.5.1714 அன்று அளிக்கப்பட்டு அதற்குரிய செப்பேடும் எழுதப்பட்டது.{{nop}} <section end="6"/><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> e8ins3bkd29s6tmnogf4lxe7oz3pzb9 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/25 250 489006 1834660 1833771 2025-06-23T12:25:42Z மொஹமது கராம் 14681 1834660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|24 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="7"/> {{center|<b>{{larger|7. கான் சாகிபு வரலாற்றில் மீனாட்சியம்மன்}}</b>}} ஆர்க்காட்டு நவாப் முகமதலியிடம் சுபேதாராகப் பணியாற்றிய கான்சாகிபு முறையாக வரிவசூல் செய்யவும், அடங்காத பாளையக்காரர்களை அடக்கவும் மதுரை மண்டலத்தை வரிவசூலிக்கும் குத்தகையைப் பெற்றிருந்த கும்பினியார் சார்பில் 1757ஆம் ஆண்டு மதுரைக்கு அனுப்பப்பட்டார். வந்த அன்று மீனாட்சியம்மனை வணங்கியதாக அவர் வரலாற்றுப்பாடல் கூறுகிறது. <poem> ::“நானூறு பொன் கையில் கொடுத்து – அந்த நாழிகையில் மீனாட்சிக்குச் சிறப்புச் செய்யச் சொல்லி” “பானுமதி சூடும் மீனம்மாள் – பாதம் பணிந்து சொக்கேசரையும் வலமாக வந்து கர்த்தாக்கள் வந்திருக்கும் மேடை – அந்தக் கருங்கல்லுச் சவுக்கையிலே ஒயிலாகச் சாய்ந்து மீனாட்சி கிருபைகளினாலே – நல்ல வெங்கலக் கதவுதனைப் பேர்த்தவனெடுத்து தீரன்எனும் கான்சாகிபு துரைதான் – அதிலே ஒரு கோடி திரவியம் இருக்க மனமகிழ்ந்து விஸ்தார அரண்மனையும் கட்டி – அதிலே மேல்வீடு மாளிகையும் தானுண்டு பண்ணி அரண்மனையிலே மகிழ்வாக இருந்து” (பக்கம் 25)</poem> என்பது அப்பகுதியாகும் ::கான் சாகிபு <poem> ::“மதுரை மீனாள் தாயே ::எனக்கிந்தத் திரவியத்தைக் கொடுக்க வேணும்”</poem> என்று வேண்டிக் கொண்டாராம் (பக்கம் 31) கான்சாகிபு மனைவி ‘மாஷா’ பிரெஞ்சுக் கத்தோலிக்கக் கிறித்துவப் பெண்ணாக இருந்து இஸ்லாம் மார்க்கம் மாறியவள். அவளும் பலமுறை நினைத்து வேண்டியதாகவும், வணங்கிய தாகவும் நூலில் கூறப்படுகிறது. கான்சாகிபுவின் பணியாளர்களே சதிசெய்து அவரைப் பிடித்துக் கொடுக்க வரும்போது மதுரை மீனாட்சியே ஒரு<noinclude></noinclude> q13yjmto0upsfyradl9apkv98mczs7f 1834661 1834660 2025-06-23T12:28:47Z மொஹமது கராம் 14681 1834661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|24 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="7"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|7. கான் சாகிபு வரலாற்றில் மீனாட்சியம்மன்}}</b>}} ஆர்க்காட்டு நவாப் முகமதலியிடம் சுபேதாராகப் பணியாற்றிய கான்சாகிபு முறையாக வரிவசூல் செய்யவும், அடங்காத பாளையக்காரர்களை அடக்கவும் மதுரை மண்டலத்தை வரிவசூலிக்கும் குத்தகையைப் பெற்றிருந்த கும்பினியார் சார்பில் 1757 ஆம் ஆண்டு மதுரைக்கு அனுப்பப்பட்டார். வந்த அன்று மீனாட்சியம்மனை வணங்கியதாக அவர் வரலாற்றுப்பாடல் கூறுகிறது. {{left_margin|3em|<poem>“நானூறு பொன் கையில் கொடுத்து – அந்த நாழிகையில் மீனாட்சிக்குச் சிறப்புச் செய்யச் சொல்லி” “பானுமதி சூடும் மீனம்மாள் – பாதம் பணிந்து சொக்கேசரையும் வலமாக வந்து கர்த்தாக்கள் வந்திருக்கும் மேடை – அந்தக் கருங்கல்லுச் சவுக்கையிலே ஒயிலாகச் சாய்ந்து மீனாட்சி கிருபைகளினாலே – நல்ல வெங்கலக் கதவுதனைப் பேர்த்தவனெடுத்து தீரன்எனும் கான்சாகிபு துரைதான் – அதிலே ஒரு கோடி திரவியம் இருக்க மனமகிழ்ந்து விஸ்தார அரண்மனையும் கட்டி – அதிலே மேல்வீடு மாளிகையும் தானுண்டு பண்ணி அரண்மனையிலே மகிழ்வாக இருந்து” (பக்கம் 25)</poem>}} என்பது அப்பகுதியாகும் ::கான் சாகிபு {{left_margin|3em|<poem>“மதுரை மீனாள் தாயே எனக்கிந்தத் திரவியத்தைக் கொடுக்க வேணும்”</poem>}} என்று வேண்டிக் கொண்டாராம் (பக்கம் 31) கான்சாகிபு மனைவி ‘மாஷா’ பிரெஞ்சுக் கத்தோலிக்கக் கிறித்துவப் பெண்ணாக இருந்து இஸ்லாம் மார்க்கம் மாறியவள். அவளும் பலமுறை நினைத்து வேண்டியதாகவும், வணங்கியதாகவும் நூலில் கூறப்படுகிறது. கான்சாகிபுவின் பணியாளர்களே சதி செய்து அவரைப் பிடித்துக் கொடுக்க வரும்போது மதுரை மீனாட்சியே ஒரு<noinclude></noinclude> 08e3ntuw3znbq54tcf5r52m9nc3pbkp 1834711 1834661 2025-06-23T14:25:37Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1834711 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|24 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="7"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|7. கான் சாகிபு வரலாற்றில் மீனாட்சியம்மன்}}</b>}} ஆர்க்காட்டு நவாப் முகமதலியிடம் சுபேதாராகப் பணியாற்றிய கான்சாகிபு முறையாக வரிவசூல் செய்யவும், அடங்காத பாளையக்காரர்களை அடக்கவும் மதுரை மண்டலத்தை வரிவசூலிக்கும் குத்தகையைப் பெற்றிருந்த கும்பினியார் சார்பில் 1757 ஆம் ஆண்டு மதுரைக்கு அனுப்பப்பட்டார். வந்த அன்று மீனாட்சியம்மனை வணங்கியதாக அவர் வரலாற்றுப்பாடல் கூறுகிறது. {{left_margin|3em|<poem>“நானூறு பொன் கையில் கொடுத்து – அந்த நாழிகையில் மீனாட்சிக்குச் சிறப்புச் செய்யச் சொல்லி” “பானுமதி சூடும் மீனம்மாள் – பாதம் பணிந்து சொக்கேசரையும் வலமாக வந்து கர்த்தாக்கள் வந்திருக்கும் மேடை – அந்தக் கருங்கல்லுச் சவுக்கையிலே ஒயிலாகச் சாய்ந்து மீனாட்சி கிருபைகளினாலே – நல்ல வெங்கலக் கதவுதனைப் பேர்த்தவனெடுத்து தீரன்எனும் கான்சாகிபு துரைதான் – அதிலே ஒரு கோடி திரவியம் இருக்க மனமகிழ்ந்து விஸ்தார அரண்மனையும் கட்டி – அதிலே மேல்வீடு மாளிகையும் தானுண்டு பண்ணி அரண்மனையிலே மகிழ்வாக இருந்து” (பக்கம் 25)</poem>}} என்பது அப்பகுதியாகும் ::கான் சாகிபு {{left_margin|3em|<poem>“மதுரை மீனாள் தாயே எனக்கிந்தத் திரவியத்தைக் கொடுக்க வேணும்”</poem>}} என்று வேண்டிக் கொண்டாராம் (பக்கம் 31) கான்சாகிபு மனைவி ‘மாஷா’ பிரெஞ்சுக் கத்தோலிக்கக் கிறித்துவப் பெண்ணாக இருந்து இஸ்லாம் மார்க்கம் மாறியவள். அவளும் பலமுறை நினைத்து வேண்டியதாகவும், வணங்கியதாகவும் நூலில் கூறப்படுகிறது. கான்சாகிபுவின் பணியாளர்களே சதி செய்து அவரைப் பிடித்துக் கொடுக்க வரும்போது மதுரை மீனாட்சியே ஒரு<noinclude></noinclude> i7kshevvmyg7y14k3nr0nqap2m3akqb பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/26 250 489007 1834662 1833431 2025-06-23T12:31:33Z மொஹமது கராம் 14681 1834662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 25}} {{rule}}</noinclude>பார்ப்பனப் பெண் வடிவத்தில் வந்து எச்சரிக்கை செய்ததாகவும் பார்ப்பாரப் பேய் மிரட்டுவதாக எண்ணி எவரிடமும் கான்சாகிபு கூறவில்லை என்றும் கதைப்பாடல் கூறுவது, நம் உள்ளத்தை உருக்குவதாக உள்ளது. {{left_margin|3em|<poem>“ராசபர மேஸ்வரி மீனாள் பார்ப்பாரப் பெண்போல – மீனாள் லோகநாயகியும் கானனுக்கு மோசம் வந்ததென்று பாதகன் தலைமாட்டில் வந்துநின்று கொண்டு உன்னுடைய உப்பு தின்னுபோட்டு – கானு உந்தனுக்கு ரண்டகம் நினைந்திட்டாரப்பா இனிமேலே மதுரையிலிருந்தால் – நீயும் இறந்து போவாயடா கான்சாகிபு துரையே மலையாளம் போய்ச் சேரு கானு – என்று மதுராபுரி மீனாளும் சொல்லினாளப்பா பார்ப்பாரப்பேய் வந்து லவுண்டி – நம்மைக் கட்டியே மிரட்டுதென்று கான்சாயபு துரையும் திடீரென்று முழித்தப்போ பார்த்து - கானு சேதிகளை எவரோடும் சொல்லாம லிருந்தான்”</poem>}} என்பது “கான்சாகிபு சண்டை” கதைப்பாடல் பகுதியாகும் (பக்கம் 111) <section end="7"/>{{nop}}<noinclude></noinclude> 6lmsbxn5p32un7uigsttpulkyr1ycqc 1834716 1834662 2025-06-23T14:30:43Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1834716 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 25}} {{rule}}</noinclude>பார்ப்பனப் பெண் வடிவத்தில் வந்து எச்சரிக்கை செய்ததாகவும் பார்ப்பாரப் பேய் மிரட்டுவதாக எண்ணி எவரிடமும் கான்சாகிபு கூறவில்லை என்றும் கதைப்பாடல் கூறுவது, நம் உள்ளத்தை உருக்குவதாக உள்ளது. {{left_margin|3em|<poem>“ராசபர மேஸ்வரி மீனாள் பார்ப்பாரப் பெண்போல – மீனாள் லோகநாயகியும் கானனுக்கு மோசம் வந்ததென்று பாதகன் தலைமாட்டில் வந்துநின்று கொண்டு உன்னுடைய உப்பு தின்னுபோட்டு – கானு உந்தனுக்கு ரண்டகம் நினைந்திட்டாரப்பா இனிமேலே மதுரையிலிருந்தால் – நீயும் இறந்து போவாயடா கான்சாகிபு துரையே மலையாளம் போய்ச் சேரு கானு – என்று மதுராபுரி மீனாளும் சொல்லினாளப்பா பார்ப்பாரப்பேய் வந்து லவுண்டி – நம்மைக் கட்டியே மிரட்டுதென்று கான்சாயபு துரையும் திடீரென்று முழித்தப்போ பார்த்து - கானு சேதிகளை எவரோடும் சொல்லாம லிருந்தான்”</poem>}} என்பது “கான்சாகிபு சண்டை” கதைப்பாடல் பகுதியாகும் (பக்கம் 111) <section end="7"/>{{nop}}<noinclude></noinclude> g5axqkiaxk4nii6jkvo0dqxspv29kq2 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/27 250 489008 1834663 1833772 2025-06-23T12:39:17Z மொஹமது கராம் 14681 1834663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|26 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="8"/> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>8. அன்வருதீன் கொடுத்த உமாமகேசுவரர்</b>}}}}<ref>தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சார்பில் நடைபெற்று வந்த கருத்தரங்கில் கூறப்பட்ட செய்தி</ref> தென்பாண்டி நாட்டுத் திருநெல்வேலியில் காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் கோயிலில் இன்றும் வழிபாட்டில் உள்ள உமாமகேசுவரர் படிமம் அன்வருதீன் என்பவரால் கொடுக்கப்பட்டது. {{center|⬤ ❖ ⬤}} {{dhr|3em}} <section begin="9"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|9. சிவன்கோயில் தேருக்கு மசூதி சார்பில் பூசை</b>}}}}<ref>தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்ட செய்தி</ref> விரிஞ்சிபுரம் சிவன் கோயில் தேர்த் திருவிழாவின் போது தேர் மசூதி முன்னர் வரும்போது மசூதியின் சார்பில் சிறப்புப் பூசை நடைபெறுகிறது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 1j5hcj5e86e4e9zmhujrmj6on6ycihu 1834664 1834663 2025-06-23T12:41:20Z மொஹமது கராம் 14681 1834664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|26 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="8"/> {{dhr|3em}} {{center|{{larger|<b>8. அன்வருதீன் கொடுத்த உமாமகேசுவரர்<ref>தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சார்பில் நடைபெற்று வந்த கருத்தரங்கில் கூறப்பட்ட செய்தி</ref></b>}}}} தென்பாண்டி நாட்டுத் திருநெல்வேலியில் காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் கோயிலில் இன்றும் வழிபாட்டில் உள்ள உமாமகேசுவரர் படிமம் அன்வருதீன் என்பவரால் கொடுக்கப்பட்டது. {{center|⬤ ❖ ⬤}} {{dhr|3em}} <section begin="9"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|9. சிவன்கோயில் தேருக்கு மசூதி சார்பில் பூசை<ref>தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்ட செய்தி</ref></b>}}}} விரிஞ்சிபுரம் சிவன் கோயில் தேர்த் திருவிழாவின் போது தேர் மசூதி முன்னர் வரும்போது மசூதியின் சார்பில் சிறப்புப் பூசை நடைபெறுகிறது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> toyjcnw12huuhy1krc1bwr7oxdwwb6q 1834665 1834664 2025-06-23T12:41:48Z மொஹமது கராம் 14681 1834665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|26 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="8"/> {{dhr|3em}} {{center|{{larger|<b>8. அன்வருதீன் கொடுத்த உமாமகேசுவரர்<ref>தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சார்பில் நடைபெற்று வந்த கருத்தரங்கில் கூறப்பட்ட செய்தி</ref></b>}}}} தென்பாண்டி நாட்டுத் திருநெல்வேலியில் காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் கோயிலில் இன்றும் வழிபாட்டில் உள்ள உமாமகேசுவரர் படிமம் அன்வருதீன் என்பவரால் கொடுக்கப்பட்டது. {{dhr|2em}} {{center|⬤ ❖ ⬤}} {{dhr|3em}} <section begin="9"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|9. சிவன்கோயில் தேருக்கு மசூதி சார்பில் பூசை<ref>தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்ட செய்தி</ref></b>}}}} விரிஞ்சிபுரம் சிவன் கோயில் தேர்த் திருவிழாவின் போது தேர் மசூதி முன்னர் வரும்போது மசூதியின் சார்பில் சிறப்புப் பூசை நடைபெறுகிறது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> p5szhdnsp195ouy1acapa9gatyhphut 1834666 1834665 2025-06-23T12:42:52Z மொஹமது கராம் 14681 1834666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|26 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="8"/> {{dhr|3em}} {{center|{{larger|<b>8. அன்வருதீன் கொடுத்த உமாமகேசுவரர்<ref>தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சார்பில் நடைபெற்று வந்த கருத்தரங்கில் கூறப்பட்ட செய்தி</ref></b>}}}} தென்பாண்டி நாட்டுத் திருநெல்வேலியில் காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் கோயிலில் இன்றும் வழிபாட்டில் உள்ள உமாமகேசுவரர் படிமம் அன்வருதீன் என்பவரால் கொடுக்கப்பட்டது. {{dhr|2em}} {{center|⬤ ❖ ⬤}} <section begin="9"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|9. சிவன்கோயில் தேருக்கு மசூதி சார்பில் பூசை<ref>தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்ட செய்தி</ref></b>}}}} விரிஞ்சிபுரம் சிவன் கோயில் தேர்த் திருவிழாவின் போது தேர் மசூதி முன்னர் வரும்போது மசூதியின் சார்பில் சிறப்புப் பூசை நடைபெறுகிறது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> ombz2p9akh8jqlt9dpunw5waqzpbgia 1834719 1834666 2025-06-23T14:33:16Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1834719 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|26 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="8"/> {{dhr|3em}} {{center|{{larger|<b>8. அன்வருதீன் கொடுத்த உமாமகேசுவரர்<ref>* தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சார்பில் நடைபெற்று வந்த கருத்தரங்கில் கூறப்பட்ட செய்தி</ref></b>}}}} தென்பாண்டி நாட்டுத் திருநெல்வேலியில் காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் கோயிலில் இன்றும் வழிபாட்டில் உள்ள உமாமகேசுவரர் படிமம் அன்வருதீன் என்பவரால் கொடுக்கப்பட்டது. {{dhr|2em}} {{center|⬤ ❖ ⬤}} <section end="8"/> <section begin="9"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|9. சிவன்கோயில் தேருக்கு மசூதி சார்பில் பூசை<ref>* தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்ட செய்தி</ref></b>}}}} விரிஞ்சிபுரம் சிவன் கோயில் தேர்த் திருவிழாவின் போது தேர் மசூதி முன்னர் வரும்போது மசூதியின் சார்பில் சிறப்புப் பூசை நடைபெறுகிறது.{{nop}} <section end="9"/><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> fw1s4mep81sk9nl7ys2f8a0omg11hzh 1834881 1834719 2025-06-24T06:28:40Z ஹர்ஷியா பேகம் 15001 1834881 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|26 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="8"/>{{dhr|3em}} {{center|{{larger|<b>8. அன்வருதீன் கொடுத்த உமாமகேசுவரர்*<ref>* தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சார்பில் நடைபெற்று வந்த கருத்தரங்கில் கூறப்பட்ட செய்தி</ref></b>}}}} தென்பாண்டி நாட்டுத் திருநெல்வேலியில் காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் கோயிலில் இன்றும் வழிபாட்டில் உள்ள உமாமகேசுவரர் படிமம் அன்வருதீன் என்பவரால் கொடுக்கப்பட்டது. {{dhr|2em}} {{center|⬤ ❖ ⬤}} <section end="8"/> <section begin="9"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|9. சிவன்கோயில் தேருக்கு மசூதி சார்பில் பூசை*<ref>* தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்ட செய்தி</ref></b>}}}} விரிஞ்சிபுரம் சிவன் கோயில் தேர்த் திருவிழாவின் போது தேர் மசூதி முன்னர் வரும்போது மசூதியின் சார்பில் சிறப்புப் பூசை நடைபெறுகிறது.{{nop}} <section end="9"/><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> k53nhmyd68z39b2w4xd0gq8mpv6jmkz 1834917 1834881 2025-06-24T07:11:08Z Info-farmer 232 <section end="2"/> 1834917 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|26 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude> <section begin="1"/> {{dhr|3em}} {{center|{{larger|<b>8. அன்வருதீன் கொடுத்த உமாமகேசுவரர்*<ref>* தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சார்பில் நடைபெற்று வந்த கருத்தரங்கில் கூறப்பட்ட செய்தி</ref></b>}}}} தென்பாண்டி நாட்டுத் திருநெல்வேலியில் காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் கோயிலில் இன்றும் வழிபாட்டில் உள்ள உமாமகேசுவரர் படிமம் அன்வருதீன் என்பவரால் கொடுக்கப்பட்டது. {{dhr|2em}} {{center|⬤ ❖ ⬤}} <section end="1"/> <section begin="2"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|9. சிவன்கோயில் தேருக்கு மசூதி சார்பில் பூசை*<ref>* தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்ட செய்தி</ref></b>}}}} விரிஞ்சிபுரம் சிவன் கோயில் தேர்த் திருவிழாவின் போது தேர் மசூதி முன்னர் வரும்போது மசூதியின் சார்பில் சிறப்புப் பூசை நடைபெறுகிறது.{{nop}} <section end="2"/><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 6or9i87pv715wc978oe40gelskjov5u பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/28 250 489009 1834667 1833773 2025-06-23T12:52:54Z மொஹமது கராம் 14681 1834667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 27}} {{rule}}</noinclude><section begin="10"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|10. சாததுல்லாகான் காசி – இராமேசுவரம் யாத்திரை<ref>Annual Report on Epigraphy 618 of 1915</ref></b>}}}} பீஜப்பூர் சுல்தான் சார்பில் செஞ்சியில் ஆட்சி செய்தவர் நவாபு சாததுல்லாகான் சாயபு. அவர் காசி யாத்திரை சென்று அதன் தொடர்ச்சியாக இராமேசுவரம் செல்லும்போது விழுப்புரம் வட்டத்தில் உள்ள தாலகிரீசுவரர் கோயிலில் வணங்கினார். பனமலைக் கோயில் முன் மண்டப வாயிற்படியில் உள்ள அவர் கல்வெட்டில் அவர் தன்னை ‘மகாமண்டேலசுவர ராஜாதிராஜ ராஜபரமேசுவரன்’ என்று குறித்துக் கொண்டுள்ளார். சக வருடம் 1596 (கி.பி. 1674) ஆனந்த வருடம் மாசி மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அவர் பனைமலைக் கோயிலுக்குச் கொடையும் கொடுத்துக் கல்வெட்டு பொறித்துள்ளார். பின்னர் இவர் 1710 ஆம் ஆண்டு ஆர்க்காடு நவாப் ஆக்கப்பட்டார். இவர் சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வேப்பத்தூர் ஆகும்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> qiboe7zpev2aa9ldbclw29ypjgtvw44 1834720 1834667 2025-06-23T14:41:21Z Booradleyp1 1964 1834720 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 27}} {{rule}}</noinclude><section begin="10"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|10. சாததுல்லாகான் காசி – இராமேசுவரம் யாத்திரை<ref>Annual Report on Epigraphy 618 of 1915</ref></b>}}}} பீஜப்பூர் சுல்தான் சார்பில் செஞ்சியில் ஆட்சி செய்தவர் நவாபு சாததுல்லாகான் சாயபு. அவர் காசி யாத்திரை சென்று அதன் தொடர்ச்சியாக இராமேசுவரம் செல்லும்போது விழுப்புரம் வட்டத்தில் உள்ள தாலகிரீசுவரர் கோயிலில் வணங்கினார். பனமலைக் கோயில் முன் மண்டப வாயிற்படியில் உள்ள அவர் கல்வெட்டில் அவர் தன்னை ‘மகாமண்டேலசுவர ராஜாதிராஜ ராஜபரமேசுவரன்’ என்று குறித்துக் கொண்டுள்ளார். சக வருடம் 1596 (கி.பி. 1674) ஆனந்த வருடம் மாசி மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அவர் பனைமலைக் கோயிலுக்குச் கொடையும் கொடுத்துக் கல்வெட்டு பொறித்துள்ளார். பின்னர் இவர் 1710 ஆம் ஆண்டு ஆர்க்காடு நவாப் ஆக்கப்பட்டார். இவர் சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வேப்பத்தூர் ஆகும்.{{nop}} <section end="10"/><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 89eqhakhecctszl07g1f32gs3932n2c 1834724 1834720 2025-06-23T14:47:19Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1834724 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 27}} {{rule}}</noinclude><section begin="10"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|10. சாததுல்லாகான் காசி – இராமேசுவரம் யாத்திரை<ref>Annual Report on Epigraphy 618 of 1915</ref></b>}}}} பீஜப்பூர் சுல்தான் சார்பில் செஞ்சியில் ஆட்சி செய்தவர் நவாபு சாததுல்லாகான் சாயபு. அவர் காசி யாத்திரை சென்று அதன் தொடர்ச்சியாக இராமேசுவரம் செல்லும்போது விழுப்புரம் வட்டத்தில் உள்ள தாலகிரீசுவரர் கோயிலில் வணங்கினார். பனமலைக் கோயில் முன் மண்டப வாயிற்படியில் உள்ள அவர் கல்வெட்டில் அவர் தன்னை ‘மகாமண்டேலசுவர ராஜாதிராஜ ராஜபரமேசுவரன்’ என்று குறித்துக் கொண்டுள்ளார். சக வருடம் 1596 (கி.பி. 1674) ஆனந்த வருடம் மாசி மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அவர் பனைமலைக் கோயிலுக்குச் கொடையும் கொடுத்துக் கல்வெட்டு பொறித்துள்ளார். பின்னர் இவர் 1710 ஆம் ஆண்டு ஆர்க்காடு நவாப் ஆக்கப்பட்டார். இவர் சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வேப்பத்தூர் ஆகும்.{{nop}} <section end="10"/><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 8ctuornkarnvze7o5qhi2l7d3jz8fj1 1834883 1834724 2025-06-24T06:30:06Z ஹர்ஷியா பேகம் 15001 1834883 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 27}} {{rule}}</noinclude><section begin="10"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|10. சாததுல்லாகான் காசி – இராமேசுவரம் யாத்திரை<ref>*Annual Report on Epigraphy 618 of 1915</ref></b>}}}} பீஜப்பூர் சுல்தான் சார்பில் செஞ்சியில் ஆட்சி செய்தவர் நவாபு சாததுல்லாகான் சாயபு. அவர் காசி யாத்திரை சென்று அதன் தொடர்ச்சியாக இராமேசுவரம் செல்லும்போது விழுப்புரம் வட்டத்தில் உள்ள தாலகிரீசுவரர் கோயிலில் வணங்கினார். பனமலைக் கோயில் முன் மண்டப வாயிற்படியில் உள்ள அவர் கல்வெட்டில் அவர் தன்னை ‘மகாமண்டேலசுவர ராஜாதிராஜ ராஜபரமேசுவரன்’ என்று குறித்துக் கொண்டுள்ளார். சக வருடம் 1596 (கி.பி. 1674) ஆனந்த வருடம் மாசி மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அவர் பனைமலைக் கோயிலுக்குச் கொடையும் கொடுத்துக் கல்வெட்டு பொறித்துள்ளார். பின்னர் இவர் 1710 ஆம் ஆண்டு ஆர்க்காடு நவாப் ஆக்கப்பட்டார். இவர் சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வேப்பத்தூர் ஆகும்.{{nop}} <section end="10"/><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> jbway7d7edb9v2k8hfrnwfhzecunt5i பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/29 250 489010 1834668 1833778 2025-06-23T12:57:37Z மொஹமது கராம் 14681 1834668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|28 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="11"/> {{c|<b>{{larger|11. சிவன் கோயிலுக்கு இலுப்பைத் தோப்பளித்த கான்சாகிபு <ref>‘ஆவணம்’ 14 ஆம் பக்கம் 91-92; 2003; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– || விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், கூவனூர் அருகில் வயல் நடுவில் உள்ள பாறை. |- | காலம் || - || பிரமாதி, சகம் 1650; கி.பி. 1728. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– || பாறையில் மூன்று பகுதியாக வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில் கற்பூரவல்லி அம்மன், அகத்தீசுவரருக்குத் திருவிளக்குக்காக எண்ணெய் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் அசரது சிபிலெ கானுசாயபு அவர்களும் பிறரும் இலுப்பைத் தோப்பைக் கொடையாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மதரர் பள்ளிவாசல் பெயர் உள்ளது. கானுசாயபு அங்கு பணியாற்றுபவராக இருக்கலாம். இடப்புறம் பெரிய சூலமும், மூன்றாம் பகுதிக்குமேல் சூரியன், சந்திரன், பிறை ஆகியனவும் செதுக்கப்பட்டுள்ளன. இசுலாமியர் கொடுத்த கொடையானதால் ‘பிறை’யும் பொறிக்கப்பட்டுள்ளது. <b>கல்வெட்டு</b> <poem> 1. ஸ்வஸ்திஸ்ரீ வி 2. சயாத்புத சாலி 3. வாக சகாப்த 4. ம் 1650 யி 5. தின் மேல் செ 6. ல்லா நின்ற 7. பிறமாதி சம்வ 8. த்சரம் வைய்யா 9. சி மாதம் 25 தேதி சுக்கி 10. ரவாரணாள் அக்ஷய திறிதி 11. னாள் யிந்தசுபதினத்தில் அகி 12. லாண்டகோடி பிறமாண்ட 13. னாயகராகிய கற்பூரவல்லி அம்பா 14. ளுக்கும் ஸ்ரீ அகஸ்தீஸ்வர சுவாமியா 15. ர் திருவிளக்கு நிமித்தியம் உளக்கு</poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> g1dolc72vea2lu2e5czjz8300zatr0v 1834669 1834668 2025-06-23T12:57:55Z மொஹமது கராம் 14681 1834669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|28 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="11"/> {{c|<b>{{larger|11. சிவன் கோயிலுக்கு இலுப்பைத் தோப்பளித்த கான்சாகிபு <ref>‘ஆவணம்’ 14 ஆம் பக்கம் 91-92; 2003; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– || விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், கூவனூர் அருகில் வயல் நடுவில் உள்ள பாறை. |- | காலம் || – || பிரமாதி, சகம் 1650; கி.பி. 1728. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– || பாறையில் மூன்று பகுதியாக வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில் கற்பூரவல்லி அம்மன், அகத்தீசுவரருக்குத் திருவிளக்குக்காக எண்ணெய் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் அசரது சிபிலெ கானுசாயபு அவர்களும் பிறரும் இலுப்பைத் தோப்பைக் கொடையாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மதரர் பள்ளிவாசல் பெயர் உள்ளது. கானுசாயபு அங்கு பணியாற்றுபவராக இருக்கலாம். இடப்புறம் பெரிய சூலமும், மூன்றாம் பகுதிக்குமேல் சூரியன், சந்திரன், பிறை ஆகியனவும் செதுக்கப்பட்டுள்ளன. இசுலாமியர் கொடுத்த கொடையானதால் ‘பிறை’யும் பொறிக்கப்பட்டுள்ளது. <b>கல்வெட்டு</b> <poem> 1. ஸ்வஸ்திஸ்ரீ வி 2. சயாத்புத சாலி 3. வாக சகாப்த 4. ம் 1650 யி 5. தின் மேல் செ 6. ல்லா நின்ற 7. பிறமாதி சம்வ 8. த்சரம் வைய்யா 9. சி மாதம் 25 தேதி சுக்கி 10. ரவாரணாள் அக்ஷய திறிதி 11. னாள் யிந்தசுபதினத்தில் அகி 12. லாண்டகோடி பிறமாண்ட 13. னாயகராகிய கற்பூரவல்லி அம்பா 14. ளுக்கும் ஸ்ரீ அகஸ்தீஸ்வர சுவாமியா 15. ர் திருவிளக்கு நிமித்தியம் உளக்கு</poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> nfdrsl7ucxk571e1souhkkcmo3ccfvj 1834670 1834669 2025-06-23T12:58:34Z மொஹமது கராம் 14681 1834670 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|28 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="11"/> {{c|<b>{{larger|11. சிவன் கோயிலுக்கு இலுப்பைத் தோப்பளித்த கான்சாகிபு <ref>‘ஆவணம்’ 14 ஆம் பக்கம் 91-92; 2003; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– || விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், கூவனூர் அருகில் வயல் நடுவில் உள்ள பாறை. |- | காலம் || – || பிரமாதி, சகம் 1650; கி.பி. 1728. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– || பாறையில் மூன்று பகுதியாக வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில் கற்பூரவல்லி அம்மன், அகத்தீசுவரருக்குத் திருவிளக்குக்காக எண்ணெய் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் அசரது சிபிலெ கானுசாயபு அவர்களும் பிறரும் இலுப்பைத் தோப்பைக் கொடையாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மதரர் பள்ளிவாசல் பெயர் உள்ளது. கானுசாயபு அங்கு பணியாற்றுபவராக இருக்கலாம். இடப்புறம் பெரிய சூலமும், மூன்றாம் பகுதிக்குமேல் சூரியன், சந்திரன், பிறை ஆகியனவும் செதுக்கப்பட்டுள்ளன. இசுலாமியர் கொடுத்த கொடையானதால் ‘பிறை’யும் பொறிக்கப்பட்டுள்ளது. |} <b>கல்வெட்டு</b> <poem> 1. ஸ்வஸ்திஸ்ரீ வி 2. சயாத்புத சாலி 3. வாக சகாப்த 4. ம் 1650 யி 5. தின் மேல் செ 6. ல்லா நின்ற 7. பிறமாதி சம்வ 8. த்சரம் வைய்யா 9. சி மாதம் 25 தேதி சுக்கி 10. ரவாரணாள் அக்ஷய திறிதி 11. னாள் யிந்தசுபதினத்தில் அகி 12. லாண்டகோடி பிறமாண்ட 13. னாயகராகிய கற்பூரவல்லி அம்பா 14. ளுக்கும் ஸ்ரீ அகஸ்தீஸ்வர சுவாமியா 15. ர் திருவிளக்கு நிமித்தியம் உளக்கு</poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> n9fbczlf64o15abhxbtkppdq80ggtp5 1834790 1834670 2025-06-24T03:28:40Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1834790 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|28 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="11"/> {{c|<b>{{larger|11. சிவன் கோயிலுக்கு இலுப்பைத் தோப்பளித்த கான்சாகிபு <ref>* ‘ஆவணம்’ 14 ஆம் பக்கம் 91-92; 2003; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– || விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், கூவனூர் அருகில் வயல் நடுவில் உள்ள பாறை. |- | காலம் || – || பிரமாதி, சகம் 1650; கி.பி. 1728. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– || பாறையில் மூன்று பகுதியாக வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில் கற்பூரவல்லி அம்மன், அகத்தீசுவரருக்குத் திருவிளக்குக்காக எண்ணெய் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் அசரது சிபிலெ கானுசாயபு அவர்களும் பிறரும் இலுப்பைத் தோப்பைக் கொடையாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மதரர் பள்ளிவாசல் பெயர் உள்ளது. கானுசாயபு அங்கு பணியாற்றுபவராக இருக்கலாம். இடப்புறம் பெரிய சூலமும், மூன்றாம் பகுதிக்குமேல் சூரியன், சந்திரன், பிறை ஆகியனவும் செதுக்கப்பட்டுள்ளன. இசுலாமியர் கொடுத்த கொடையானதால் ‘பிறை’யும் பொறிக்கப்பட்டுள்ளது. |} <b>கல்வெட்டு</b> {{left_margin|3em|<poem> 1. ஸ்வஸ்திஸ்ரீ வி 2. சயாத்புத சாலி 3. வாக சகாப்த 4. ம் 1650 யி 5. தின் மேல் செ 6. ல்லா நின்ற 7. பிறமாதி சம்வ 8. த்சரம் வைய்யா 9. சி மாதம் 25 தேதி சுக்கி 10. ரவாரணாள் அக்ஷய திறிதி 11. னாள் யிந்தசுபதினத்தில் அகி 12. லாண்டகோடி பிறமாண்ட 13. னாயகராகிய கற்பூரவல்லி அம்பா 14. ளுக்கும் ஸ்ரீ அகஸ்தீஸ்வர சுவாமியா 15. ர் திருவிளக்கு நிமித்தியம் உளக்கு</poem>}}{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> fmbktbujxdqfj3bzciclkvxfk8jm0n2 1834791 1834790 2025-06-24T03:29:20Z Booradleyp1 1964 1834791 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|28 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="11"/> {{c|<b>{{larger|11. சிவன் கோயிலுக்கு இலுப்பைத் தோப்பளித்த கான்சாகிபு <ref>* ‘ஆவணம்’ 14 ஆம் பக்கம் 91-92; 2003; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– || விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், கூவனூர் அருகில் வயல் நடுவில் உள்ள பாறை. |- | காலம் || – || பிரமாதி, சகம் 1650; கி.பி. 1728. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– || பாறையில் மூன்று பகுதியாக வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில் கற்பூரவல்லி அம்மன், அகத்தீசுவரருக்குத் திருவிளக்குக்காக எண்ணெய் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் அசரது சிபிலெ கானுசாயபு அவர்களும் பிறரும் இலுப்பைத் தோப்பைக் கொடையாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மதரர் பள்ளிவாசல் பெயர் உள்ளது. கானுசாயபு அங்கு பணியாற்றுபவராக இருக்கலாம். இடப்புறம் பெரிய சூலமும், மூன்றாம் பகுதிக்குமேல் சூரியன், சந்திரன், பிறை ஆகியனவும் செதுக்கப்பட்டுள்ளன. இசுலாமியர் கொடுத்த கொடையானதால் ‘பிறை’யும் பொறிக்கப்பட்டுள்ளது. |} <b>கல்வெட்டு</b> {{left_margin|3em|<poem> 1. ஸ்வஸ்திஸ்ரீ வி 2. சயாத்புத சாலி 3. வாக சகாப்த 4. ம் 1650 யி 5. தின் மேல் செ 6. ல்லா நின்ற 7. பிறமாதி சம்வ 8. த்சரம் வைய்யா 9. சி மாதம் 25 தேதி சுக்கி 10. ரவாரணாள் அக்ஷய திறிதி 11. னாள் யிந்தசுபதினத்தில் அகி 12. லாண்டகோடி பிறமாண்ட 13. னாயகராகிய கற்பூரவல்லி அம்பா 14. ளுக்கும் ஸ்ரீ அகஸ்தீஸ்வர சுவாமியா 15. ர் திருவிளக்கு நிமித்தியம் உளக்கு</poem>}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 2z6vbst7acwvvlgczxpk6v1kj9occ31 1834843 1834791 2025-06-24T05:18:54Z ஹர்ஷியா பேகம் 15001 1834843 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|28 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="11"/> {{c|<b>{{larger|11. சிவன் கோயிலுக்கு இலுப்பைத் தோப்பளித்த கான்சாகிபு* <ref>* ‘ஆவணம்’ 14 ஆம் பக்கம் 91-92; 2003; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– || விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், கூவனூர் அருகில் வயல் நடுவில் உள்ள பாறை. |- | காலம் || – || பிரமாதி, சகம் 1650; கி.பி. 1728. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– || பாறையில் மூன்று பகுதியாக வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில் கற்பூரவல்லி அம்மன், அகத்தீசுவரருக்குத் திருவிளக்குக்காக எண்ணெய் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் அசரது சிபிலெ கானுசாயபு அவர்களும் பிறரும் இலுப்பைத் தோப்பைக் கொடையாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மதரர் பள்ளிவாசல் பெயர் உள்ளது. கானுசாயபு அங்கு பணியாற்றுபவராக இருக்கலாம். இடப்புறம் பெரிய சூலமும், மூன்றாம் பகுதிக்குமேல் சூரியன், சந்திரன், பிறை ஆகியனவும் செதுக்கப்பட்டுள்ளன. இசுலாமியர் கொடுத்த கொடையானதால் ‘பிறை’யும் பொறிக்கப்பட்டுள்ளது. |} <b>கல்வெட்டு</b> {{left_margin|3em|<poem> 1. ஸ்வஸ்திஸ்ரீ வி 2. சயாத்புத சாலி 3. வாக சகாப்த 4. ம் 1650 யி 5. தின் மேல் செ 6. ல்லா நின்ற 7. பிறமாதி சம்வ 8. த்சரம் வைய்யா 9. சி மாதம் 25 தேதி சுக்கி 10. ரவாரணாள் அக்ஷய திறிதி 11. னாள் யிந்தசுபதினத்தில் அகி 12. லாண்டகோடி பிறமாண்ட 13. னாயகராகிய கற்பூரவல்லி அம்பா 14. ளுக்கும் ஸ்ரீ அகஸ்தீஸ்வர சுவாமியா 15. ர் திருவிளக்கு நிமித்தியம் உளக்கு</poem>}}{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> ozi0k0vvzxwxg8pp9lf5ksay9kpzd1l பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/30 250 489011 1834672 1833776 2025-06-23T12:59:52Z மொஹமது கராம் 14681 1834672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 29}} {{rule}}</noinclude><poem>16. மேற்கு இலுப்பைத்தோப்பு அசர 17. து சிபிலெ கானுசாயபு அவர்களும் 18. ராசமானிய ராயஸ்ரீபண்டாரத்தா 19. ரவர்களும் கிராமத்தார் வயித்தியனாத 20. பிள்ளை மெச்சியாபிள்ளை மத்துமு 21. ண்டான முடிகளும் தான பூர்வமாக 22. சாசனம் பண்ணிக்குடுத்தோம் யிதுக்கு யாதாமொ 23. ருத்தர் விகுதம் பண்ணினார் 24. கெங்கைக் கரையில் 25. காராம்பசுவை 26. கொன்ற தோஷத்தி 27. ல் போவாராக</poem> <section end="11"/>{{nop}}<noinclude></noinclude> rca6a0m6d0cl2r6t95x8wbwzq68e1tx 1834793 1834672 2025-06-24T03:30:01Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1834793 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 29}} {{rule}}</noinclude><poem>16. மேற்கு இலுப்பைத்தோப்பு அசர 17. து சிபிலெ கானுசாயபு அவர்களும் 18. ராசமானிய ராயஸ்ரீபண்டாரத்தா 19. ரவர்களும் கிராமத்தார் வயித்தியனாத 20. பிள்ளை மெச்சியாபிள்ளை மத்துமு 21. ண்டான முடிகளும் தான பூர்வமாக 22. சாசனம் பண்ணிக்குடுத்தோம் யிதுக்கு யாதாமொ 23. ருத்தர் விகுதம் பண்ணினார் 24. கெங்கைக் கரையில் 25. காராம்பசுவை 26. கொன்ற தோஷத்தி 27. ல் போவாராக</poem> <section end="11"/>{{nop}}<noinclude></noinclude> f8ycer1ee0jqsd764upv3vb36fowjcp பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/31 250 489012 1834673 1834097 2025-06-23T13:03:05Z மொஹமது கராம் 14681 1834673 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|30 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="12"/> {{dhr|3em}} {{center|{{larger|<b>12. சங்கர மடத்திற்கு கோல்கொண்டா சுல்தான் கொடை<ref>தமிழ்நாட்டுச் செப்பேடுகள்; இரண்டாம் தொகுதி: ச. கிருஷ்ணமூர்த்தி: பக்கம் 247 - 248</ref></b>}}}} கோல்கொண்டா சுல்தான் அபுல் ஹசன் தனாஷா என்பவர் காஞ்சிபும் சங்கரமடத்திற்கு 16.11.1677 அன்றும், 1686 ஆம் ஆண்டும் இரண்டு கொடைகள் அளித்துச் செப்பேடுகள் வெட்டிக் கொடுத்துள்ளார். அச்செப்பேடுகள் தெலுங்கிலும், பெர்ஷிய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் எழுத்துக்கள் தெலுங்கு வரிவடிவில் உள்ளன. <b>முதல் செப்பேடு</b> காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் பூஜைக்காகவும், இதர மடத்தின் செலவுகட்காகவும் வருடந்தோறும் 115 வராகன் பொன் அளிக்க ஆணையிடப்பட்டதைக் கூறுகிறது. இச்செப்பேடு 16.11.1677 அன்று எழுதப்பட்டது. <b>இரண்டாம் செப்பேடு</b> சுல்தான் அபுல்ஹசன் தனாஷா தன் ஆட்சிக்குட்பட்ட கிராமமான ‘மேல்பாக்கம்’ என்ற பெரிய கிராமத்தின் வருவாய் முழுவதையும் காஞ்சிபுரம் மடத்தில் உள்ள சந்திரமவுலீச்சுவர சுவாமியின் பூசைக்காக ஒவ்வொரு போகமும் தவறாமல் சந்திரசூரியர் உள்ளவரை கொடுக்க ஆணையிட்டார். மேல்பாக்கத்தில் ஒரு சிறு பகுதி சங்கராச்சாரியார் விருப்பப்படி ஸ்ரீராமா சாஸ்திரிகள் என்பவருக்கு வழங்கப்பட்டது. இச்செப்பேடுகளில் கோல்கொண்டா சுல்தானின் அதிகாரிகள் அக்கண்ணா, மாதண்ணா ஆகியோர் குறிக்கப் பெறுகின்றனர்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 5khqz2jcjj000wvb75equ6vau1psiwg 1834844 1834673 2025-06-24T05:22:04Z ஹர்ஷியா பேகம் 15001 1834844 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|30 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="12"/> {{dhr|3em}} {{center|{{larger|<b>12. சங்கர மடத்திற்கு கோல்கொண்டா சுல்தான் கொடை*<ref>*தமிழ்நாட்டுச் செப்பேடுகள்; இரண்டாம் தொகுதி: ச. கிருஷ்ணமூர்த்தி: பக்கம் 247 - 248</ref></b>}}}} கோல்கொண்டா சுல்தான் அபுல் ஹசன் தனாஷா என்பவர் காஞ்சிபும் சங்கரமடத்திற்கு 16.11.1677 அன்றும், 1686 ஆம் ஆண்டும் இரண்டு கொடைகள் அளித்துச் செப்பேடுகள் வெட்டிக் கொடுத்துள்ளார். அச்செப்பேடுகள் தெலுங்கிலும், பெர்ஷிய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் எழுத்துக்கள் தெலுங்கு வரிவடிவில் உள்ளன. <b>முதல் செப்பேடு</b> காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் பூஜைக்காகவும், இதர மடத்தின் செலவுகட்காகவும் வருடந்தோறும் 115 வராகன் பொன் அளிக்க ஆணையிடப்பட்டதைக் கூறுகிறது. இச்செப்பேடு 16.11.1677 அன்று எழுதப்பட்டது. <b>இரண்டாம் செப்பேடு</b> சுல்தான் அபுல்ஹசன் தனாஷா தன் ஆட்சிக்குட்பட்ட கிராமமான ‘மேல்பாக்கம்’ என்ற பெரிய கிராமத்தின் வருவாய் முழுவதையும் காஞ்சிபுரம் மடத்தில் உள்ள சந்திரமவுலீச்சுவர சுவாமியின் பூசைக்காக ஒவ்வொரு போகமும் தவறாமல் சந்திரசூரியர் உள்ளவரை கொடுக்க ஆணையிட்டார். மேல்பாக்கத்தில் ஒரு சிறு பகுதி சங்கராச்சாரியார் விருப்பப்படி ஸ்ரீராமா சாஸ்திரிகள் என்பவருக்கு வழங்கப்பட்டது. இச்செப்பேடுகளில் கோல்கொண்டா சுல்தானின் அதிகாரிகள் அக்கண்ணா, மாதண்ணா ஆகியோர் குறிக்கப் பெறுகின்றனர். <section end="12"/>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 31q6nkdxmljlzfwfvftnxg9vl0bgm4c பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/32 250 489013 1834674 1834104 2025-06-23T13:05:01Z மொஹமது கராம் 14681 1834674 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 31}} {{rule}}</noinclude><section begin="13"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|13. சங்கர மடத்திற்கு இஸ்லாமியர் மரியாதை<ref>நேரில் பார்த்துப் படிக்கப்பட்டது.</ref></b>}}}} தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் மேலக்காவேரிப் பகுதி இஸ்லாமியர்கள் மொகரம் பண்டிகைக்கு இசை, வாத்தியக் கருவிகள் துணையுடன் நகரில் பல தெருக்களில் ஊர்வலம் போவது வழக்கம். 6.9.1862 அன்று அவ்வாறு மொகரம் பண்டிகை ஊர்வலம் போகும்போது சங்கரமடத்தின் எதிரில் ஐம்பது கஜ தூரத்திற்கு இசைக்கருவிகள் வாசிப்பது இல்லை என்று முடிவு செய்து அதைத் தம் பிற்காலத்தவர்களும் தெரிந்து கொள்ள சங்கரமடத்தின் எதிரில் உள்ள சாலையில் இருபுறமும் 50 கஜம் தூரம் இடைவெளியும் வடக்கிலும் தெற்கிலும் எல்லைபக்கம் நட்டு இந்த விபரத்தைத் தெரிவித்துள்ளனர். அக்கல்வெட்டுக்கள் இன்றும் உள்ளன.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> mtatbrsg1v7ktgszwnmt6a2rykha5ue 1834845 1834674 2025-06-24T05:22:59Z ஹர்ஷியா பேகம் 15001 1834845 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 31}} {{rule}}</noinclude><section begin="13"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|13. சங்கர மடத்திற்கு இஸ்லாமியர் மரியாதை*<ref>*நேரில் பார்த்துப் படிக்கப்பட்டது.</ref></b>}}}} தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் மேலக்காவேரிப் பகுதி இஸ்லாமியர்கள் மொகரம் பண்டிகைக்கு இசை, வாத்தியக் கருவிகள் துணையுடன் நகரில் பல தெருக்களில் ஊர்வலம் போவது வழக்கம். 6.9.1862 அன்று அவ்வாறு மொகரம் பண்டிகை ஊர்வலம் போகும்போது சங்கரமடத்தின் எதிரில் ஐம்பது கஜ தூரத்திற்கு இசைக்கருவிகள் வாசிப்பது இல்லை என்று முடிவு செய்து அதைத் தம் பிற்காலத்தவர்களும் தெரிந்து கொள்ள சங்கரமடத்தின் எதிரில் உள்ள சாலையில் இருபுறமும் 50 கஜம் தூரம் இடைவெளியும் வடக்கிலும் தெற்கிலும் எல்லைபக்கம் நட்டு இந்த விபரத்தைத் தெரிவித்துள்ளனர். அக்கல்வெட்டுக்கள் இன்றும் உள்ளன. <section end="13"/>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> t69otpkley3xwtopsj88bk3agz52pqf பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/33 250 489014 1834675 1834114 2025-06-23T13:09:07Z மொஹமது கராம் 14681 1834675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|32 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="14"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|14. வரதராசப் பெருமாளைப் பிரதிட்டை செய்த சாததுல்லாகான் <ref>1) South Indian Temple Inscpritions. Vol III; part II; No 1207; page 1216-1219<br>2) Annual Report on Epigraphy, 639 of 1919<br>3) தமிழக அரசு சுவடி நூலகம் No 100 Page 161 II</ref></b>}}}} இந்தியாவில் உள்ள ஏழு புனித தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுவதும், நகரங்களில் சிறந்ததாகக் கருதப்படுவதும் (நகரேஷு காஞ்சி) காஞ்சிபுரம். அன்னியர் படையெடுப்பைக் கண்டு அஞ்சிய பக்தர்களும் நிர்வாகிகளும் காஞ்சிபுரம் அருளாளப் பெருமான் ஆகிய வரதராசப் பெருமாள் திருமேனியை உடையார் பாளையம் எடுத்துக் கொண்டு சென்று அங்கு பாளையக்காரர் பாதுகாப்பில் வைத்தனர் (கி.பி. 1688). படையெடுப்பு அச்சம் நீங்கிய நிலை ஏற்பட்டவுடன் மீண்டும் வரதராசப் பெருமாளை உடையார் பாளையத்திலிருந்து காஞ்சிக்குக் கொண்டு வந்து பிரதிட்டை செய்ய நிர்வாகிகள் விரும்பினர். வரதராசப் பெருமாள் திருமேனியழகில் பெரிதும் ஈடுபட்ட உடையார்பாளையம் பாளையக்காரர் மீண்டும் வரதராசப் பெருமாளைக் காஞ்சிபுரத்தார்களுக்குக் கொடுக்க மறுத்து விட்டார். காஞ்சிபுரம் ஸ்ரீமத் பரமஹம்ச பரிவ்ராஜகாச்சார்ய சீனிவாசதாச ஆத்தான் ஜீயர் சுவாமிகள், நவாப் சாததுல்லாகான் உதவியை வேண்டினார். நவாப் தன் தளபதி லாலா தோடர்மால் அவர்களைப் படையோடு அனுப்பி வரதராசப் பெருமாளை மீண்டும் காஞ்சி கொண்டு வந்து பிரதிட்டை செய்ய ஏற்பாடு செய்தார். சாலிவாகன சகம் 16 (கி.பி. 1710) விரோதிவருஷம் பால்குண அபரபட்சத் திரிதியையும் உத்திரட்டாதி நட்சத்திரமும் கூடிய சனிக்கிழமை பெருமாள் காஞ்சிபுரத்தில் பிரதிட்டை செய்யப்பட்டார். இன்றும் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலில் ஒருநாள் ‘உடையார் பாளையம் விழா’ நடைபெறுகிறது. இதைக் குறிக்கும் நீண்ட கல்வெட்டு காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலில் தாயார் சன்னதி வடபுறம் உள்ள கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அக்கல்வெட்டு மெக்கன்சி உதவியாளர்களால் படி எடுக்கப்பட்டது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 1qqlre9813x7t8ww55iyyqyefnf9c11 1834762 1834675 2025-06-23T18:45:17Z ஹர்ஷியா பேகம் 15001 1834762 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|32 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="14"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|14. வரதராசப் பெருமாளைப் பிரதிட்டை செய்த சாததுல்லாகான் <ref>1) South Indian Temple Inscpritions. Vol III; part II; No 1207; page 1216-1219<br>2) Annual Report on Epigraphy, 639 of 1919<br>3) தமிழக அரசு சுவடி நூலகம் No 100 Page 161 II</ref></b>}}}} இந்தியாவில் உள்ள ஏழு புனித தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுவதும், நகரங்களில் சிறந்ததாகக் கருதப்படுவதும் (நகரேஷு காஞ்சி) காஞ்சிபுரம். அன்னியர் படையெடுப்பைக் கண்டு அஞ்சிய பக்தர்களும் நிர்வாகிகளும் காஞ்சிபுரம் அருளாளப் பெருமான் ஆகிய வரதராசப் பெருமாள் திருமேனியை உடையார் பாளையம் எடுத்துக் கொண்டு சென்று அங்கு பாளையக்காரர் பாதுகாப்பில் வைத்தனர் (கி.பி. 1688). படையெடுப்பு அச்சம் நீங்கிய நிலை ஏற்பட்டவுடன் மீண்டும் வரதராசப் பெருமாளை உடையார் பாளையத்திலிருந்து காஞ்சிக்குக் கொண்டு வந்து பிரதிட்டை செய்ய நிர்வாகிகள் விரும்பினர். வரதராசப் பெருமாள் திருமேனியழகில் பெரிதும் ஈடுபட்ட உடையார்பாளையம் பாளையக்காரர் மீண்டும் வரதராசப் பெருமாளைக் காஞ்சிபுரத்தார்களுக்குக் கொடுக்க மறுத்து விட்டார். காஞ்சிபுரம் ஸ்ரீமத் பரமஹம்ச பரிவ்ராஜகாச்சார்ய சீனிவாசதாச ஆத்தான் ஜீயர் சுவாமிகள், நவாப் சாததுல்லாகான் உதவியை வேண்டினார். நவாப் தன் தளபதி லாலா தோடர்மால் அவர்களைப் படையோடு அனுப்பி வரதராசப் பெருமாளை மீண்டும் காஞ்சி கொண்டு வந்து பிரதிட்டை செய்ய ஏற்பாடு செய்தார். சாலிவாகன சகம் 16 (கி.பி. 1710) விரோதிவருஷம் பால்குண அபரபட்சத் திரிதியையும் உத்திரட்டாதி நட்சத்திரமும் கூடிய சனிக்கிழமை பெருமாள் காஞ்சிபுரத்தில் பிரதிட்டை செய்யப்பட்டார். இன்றும் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலில் ஒருநாள் ‘உடையார் பாளையம் விழா’ நடைபெறுகிறது. இதைக் குறிக்கும் நீண்ட கல்வெட்டு காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலில் தாயார் சன்னதி வடபுறம் உள்ள கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அக்கல்வெட்டு மெக்கன்சி உதவியாளர்களால் படி எடுக்கப்பட்டது.<section end="14"/>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> tseoi2d5pix4cg7goxzagrvm132zxzk 1834847 1834762 2025-06-24T05:23:58Z ஹர்ஷியா பேகம் 15001 1834847 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|32 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="14"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|14. வரதராசப் பெருமாளைப் பிரதிட்டை செய்த சாததுல்லாகான்* <ref> *1) South Indian Temple Inscpritions. Vol III; part II; No 1207; page 1216-1219<br>2) Annual Report on Epigraphy, 639 of 1919<br>3) தமிழக அரசு சுவடி நூலகம் No 100 Page 161 II</ref></b>}}}} இந்தியாவில் உள்ள ஏழு புனித தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுவதும், நகரங்களில் சிறந்ததாகக் கருதப்படுவதும் (நகரேஷு காஞ்சி) காஞ்சிபுரம். அன்னியர் படையெடுப்பைக் கண்டு அஞ்சிய பக்தர்களும் நிர்வாகிகளும் காஞ்சிபுரம் அருளாளப் பெருமான் ஆகிய வரதராசப் பெருமாள் திருமேனியை உடையார் பாளையம் எடுத்துக் கொண்டு சென்று அங்கு பாளையக்காரர் பாதுகாப்பில் வைத்தனர் (கி.பி. 1688). படையெடுப்பு அச்சம் நீங்கிய நிலை ஏற்பட்டவுடன் மீண்டும் வரதராசப் பெருமாளை உடையார் பாளையத்திலிருந்து காஞ்சிக்குக் கொண்டு வந்து பிரதிட்டை செய்ய நிர்வாகிகள் விரும்பினர். வரதராசப் பெருமாள் திருமேனியழகில் பெரிதும் ஈடுபட்ட உடையார்பாளையம் பாளையக்காரர் மீண்டும் வரதராசப் பெருமாளைக் காஞ்சிபுரத்தார்களுக்குக் கொடுக்க மறுத்து விட்டார். காஞ்சிபுரம் ஸ்ரீமத் பரமஹம்ச பரிவ்ராஜகாச்சார்ய சீனிவாசதாச ஆத்தான் ஜீயர் சுவாமிகள், நவாப் சாததுல்லாகான் உதவியை வேண்டினார். நவாப் தன் தளபதி லாலா தோடர்மால் அவர்களைப் படையோடு அனுப்பி வரதராசப் பெருமாளை மீண்டும் காஞ்சி கொண்டு வந்து பிரதிட்டை செய்ய ஏற்பாடு செய்தார். சாலிவாகன சகம் 16 (கி.பி. 1710) விரோதிவருஷம் பால்குண அபரபட்சத் திரிதியையும் உத்திரட்டாதி நட்சத்திரமும் கூடிய சனிக்கிழமை பெருமாள் காஞ்சிபுரத்தில் பிரதிட்டை செய்யப்பட்டார். இன்றும் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலில் ஒருநாள் ‘உடையார் பாளையம் விழா’ நடைபெறுகிறது. இதைக் குறிக்கும் நீண்ட கல்வெட்டு காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலில் தாயார் சன்னதி வடபுறம் உள்ள கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அக்கல்வெட்டு மெக்கன்சி உதவியாளர்களால் படி எடுக்கப்பட்டது. <section end="14"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 1m9y252vyims8gks2p973evt80h0tbl பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/34 250 489015 1834679 1834122 2025-06-23T13:19:15Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834679 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 33}} {{rule}}</noinclude><section begin="15"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|15. சூடிக்கொடுத்த நாச்சியார் படிமம் தந்த பரூக்சீயர்<ref>Annual Report on Epigraphy 291 of 1954.</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை வட்டம், சோளிங்கர் பக்தவத்சல சுவாமி கோயில் முதற் பிரகாரம் வடக்குச் சுவர். |- | காலம் || – ||2.5.1716; சாலிவாகன ஆண்டு 1637 துர்முகி வைகாசி 4. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||சோளிங்கர் பக்தவத்சலசுவாமி கோயிலில் ஆண்டாள் படிமம் இல்லை என்று வேண்டிக்கொள்ள மன்னர் பரூக்சீயர் ஆணையால் படிமம் செய்யப்பட்டு, சுவாமியும் திருவீதியுலா எழுந்தருளச் செய்யப்பட்டது. |} <b>கல்வெட்டு</b> 1. ஸ்வஸ்திஸ்ரீமந் மகாமண்டலேஸ்வர ராஜாதிராஜ ராஜ பரமேஸ்வர ராஜப்பிரதாப முகலாயி பரூக்சீய சாயிபு பாச்சா அவர்கள் பிருத்விராஜ்யம் பண்ணியருளாநின்ற சாலிவா 2. கன சகாப்தம் 1637க்கு மேல் செல்லா நின்ற துன்முகி வருஷ வைய்யாசி மாதம் 4 தேதி சப்த்தமி புத வார திருவோண நக்ஷத்திரமும் பெத்த யிந்த னாள் ஸ்ரீ கெடி காசலம் அக்காரக் கன்னி தக்கான் ஸ்ரீகாரியத்துக்குக் கர்த்தராகிய கந்தாடை குமாரர் தொட்டையாச் சாரியார் அவர்கள் முத்திரைக்கு கற்தர் ஆன 3. பக்ஷிராஜபரிகரம் இவேளைவாளும் திருக்கடிகை ஸ்தானத் தாரும் பாறுபத்தியம் வெங்காஜி பண்டிதரும் உபாதானம் துவாதெசி திருவேங்கட அய்யங்கார் குமாரர் திருவளூரப்பய்யங்கார் மண்டபத்துக்குப் பொலியூட்டு பண்ணிக் குடுத்தபடி ஸ்வாமி தக்கான் சன்னதியில் சூடிக்குடுத்த நாச்சியார் யில்லபாதபடி யினாலே இந்த சூடிக்கு 4. டுத்த நாச்சியாரை ஏறியருளப்பண்ணி சம்ரோக்ஷணை பண்ணிவிக்கத் தக்கதாக தேவரீர் சங்கல்ப்பித்தருளின படியினாலே நாங்களனைவரும் சம்மதிச்சு உங்கள் உபதான மண்டபத்துக்கு எங்கள் கோயிலொ டொத்தாயி கிரி பிரதக்ஷணத்துக்கு பெருமாளை எழுந்தருளப்பண்ணி படியுங் கைக் கொண்டு{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> nqx8gk2xqkwadaek04062smk6izmhmi 1834848 1834679 2025-06-24T05:25:37Z ஹர்ஷியா பேகம் 15001 1834848 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 33}} {{rule}}</noinclude><section begin="15"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|15. சூடிக்கொடுத்த நாச்சியார் படிமம் தந்த பரூக்சீயர்*<ref>*Annual Report on Epigraphy 291 of 1954.</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை வட்டம், சோளிங்கர் பக்தவத்சல சுவாமி கோயில் முதற் பிரகாரம் வடக்குச் சுவர். |- | காலம் || – ||2.5.1716; சாலிவாகன ஆண்டு 1637 துர்முகி வைகாசி 4. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||சோளிங்கர் பக்தவத்சலசுவாமி கோயிலில் ஆண்டாள் படிமம் இல்லை என்று வேண்டிக்கொள்ள மன்னர் பரூக்சீயர் ஆணையால் படிமம் செய்யப்பட்டு, சுவாமியும் திருவீதியுலா எழுந்தருளச் செய்யப்பட்டது. |} <b>கல்வெட்டு</b> 1. ஸ்வஸ்திஸ்ரீமந் மகாமண்டலேஸ்வர ராஜாதிராஜ ராஜ பரமேஸ்வர ராஜப்பிரதாப முகலாயி பரூக்சீய சாயிபு பாச்சா அவர்கள் பிருத்விராஜ்யம் பண்ணியருளாநின்ற சாலிவா 2. கன சகாப்தம் 1637க்கு மேல் செல்லா நின்ற துன்முகி வருஷ வைய்யாசி மாதம் 4 தேதி சப்த்தமி புத வார திருவோண நக்ஷத்திரமும் பெத்த யிந்த னாள் ஸ்ரீ கெடி காசலம் அக்காரக் கன்னி தக்கான் ஸ்ரீகாரியத்துக்குக் கர்த்தராகிய கந்தாடை குமாரர் தொட்டையாச் சாரியார் அவர்கள் முத்திரைக்கு கற்தர் ஆன 3. பக்ஷிராஜபரிகரம் இவேளைவாளும் திருக்கடிகை ஸ்தானத் தாரும் பாறுபத்தியம் வெங்காஜி பண்டிதரும் உபாதானம் துவாதெசி திருவேங்கட அய்யங்கார் குமாரர் திருவளூரப்பய்யங்கார் மண்டபத்துக்குப் பொலியூட்டு பண்ணிக் குடுத்தபடி ஸ்வாமி தக்கான் சன்னதியில் சூடிக்குடுத்த நாச்சியார் யில்லபாதபடி யினாலே இந்த சூடிக்கு 4. டுத்த நாச்சியாரை ஏறியருளப்பண்ணி சம்ரோக்ஷணை பண்ணிவிக்கத் தக்கதாக தேவரீர் சங்கல்ப்பித்தருளின படியினாலே நாங்களனைவரும் சம்மதிச்சு உங்கள் உபதான மண்டபத்துக்கு எங்கள் கோயிலொ டொத்தாயி கிரி பிரதக்ஷணத்துக்கு பெருமாளை எழுந்தருளப்பண்ணி படியுங் கைக் கொண்டு{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> otqqsnoymsr9931ux15rj58475xi66b பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/35 250 489016 1834680 1834123 2025-06-23T13:21:11Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834680 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|34 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>5. வ... செய்ய... கடவோமாகவும் இந்தப்படிக்கு ஸ்தலத்தார் அனைவரும் சம்மதிச்சு பொலியொட்டு சாஸநம் பண்ணிக் குடுத்தோம். இதுக்குத் தப்பத்தக்கது இல்லை. இந்தப் பிரகாரம் ஆசந் தற்கஸ்தாயியாகி நடத்துவிக்கக் கடவோமாகவும் இந்தப்படிக்குப் பண்ணிக் குடுத்த தர்ம சாசனம் பக்ஷிராஜ பரிக 6. ரம் ஸ்ரீ வைஷ்ணவாள் கயி எழுத்து ஸ்தானத்தார் கயி எழுத்து ஸ்ரீகாரியம் வெங்காஜிராயர் கயி எழுத்து ஊரவர் முதலியான் கயி எழுத்து தற்ம்மணன் கயி எழுத்து கயிக்குள முதலிகள் னாராயணன் கயி எழுத்து இவர்கள் சம்மதியில் ஸ்தலக்கணக்கு ஆதியூர் உடையான் வீர ராகவன் புத்திரன் னாராயணன் கயி எழுத்து ஸ்ரீறாம ஜயம். <section end="15"/>{{nop}}<noinclude></noinclude> 3iy8o24md4ew59m1mx93zfw7zbh0bfy பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/36 250 489017 1834682 1834128 2025-06-23T13:25:28Z மொஹமது கராம் 14681 1834682 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 35}} {{rule}}</noinclude><section begin="16"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|16. திருவரங்கத்தில் நவாபு செய்த பைசல்<ref>தமிழக அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகம் எண்.டி.3891</ref></b>}}}} திருவரங்கம் கோயிலில் நீண்டநாள் தீர்த்தம் மரியாதை பற்றி ஒரு வழக்கு கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் ரெங்காச்சாரியார் இருவரிடையே நிலவி வந்தது. இவ்வழக்கு ஆர்க்காடு மன்னர் அசரத் நவாபு சாயபு அவர்களிடம் சென்றது. அவர் நேரில் வந்து விசாரித்துத் தீர்ப்பு அளித்த விபரம் ஒரு ஆவணமாக எழுதப்பட்டுள்ளது. அதன் மூல நகல் சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு கீழ்த்திசை சுவடிச் சாலையில் உள்ளது. அதன் எண்.டி.3891 ஆகும். அதன் விவரம் இங்கே அளிக்கப்படுகிறது. <b>ஆவணச் செய்தி</b> திருவரங்கம் வைணவர்களுக்குக் ‘கோயில்’ என்று அன்றும் இன்றும் பாராட்டப்படவது. சிறப்புமிகு அத்திருவரங்கத் தலத்தில் உள்ள கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் என்பவர் 1797 ஆம் ஆண்டு ஆர்க்காடு மன்னர் அசரத் நவாபு சாயபு அவர்களிடம் ‘பிராது’ ஒன்றைக் கொடுத்தார். 10 தலைமுறை 120 ஆண்டுகளுக்கு முன்னிருந்து மதுரை நாயக்க மன்னர் சொக்கநாத நாயக்கர் காலத்திலிருந்து (1656 - 1682) தம் பரம்பரை உரிமையை ரெங்காச்சாரியார் பரம்பரை அனுபவித்துக் கொண்டு வருவதாகவும், அதைத் தமக்கு மீட்டுத் தருமாறும் கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் கேட்டிருந்தார். கந்தாடை குடும்பம் திருவரங்கத்தில் புகழ்வாய்ந்த பழைய குடும்பம். அவர்கள் பெயரில் திருவரங்கத்தில் கந்தாடை அண்ணன் அப்பன் திருமாளிகை என்ற பெயரில் மண்டபம் ஒன்றுள்ளது. அரங்கநாதர் நாள்தோறும் எழுந்தருளும்போது வைஷ்ணவர்களுக்கு அங்கு அன்னதானமிட பெரிய கோனம்மாள் என்பவர் 2.1.1535 அன்று 800 பொன் கொடையாக அளித்துள்ளார். அவர்கள் பரம்பரையில் கந்தாடை மாதவய்யங்கார் என்பவர் திருவரங்கம் கல்வெட்டில் குறிக்கப் பெறுகிறார். ஒருநாள் நவாபு சாயபு அவர்கள் திருவரங்கம் வந்து இவ்வழக்கை விசாரித்தார். விசாரணையின் போது வழக்காளிகள் இருவரும் இருந்தனர். மற்றும் திருவரங்கம் கோயில் தொடர்பான பன்னிரண்டுபேரை நவாபு நேரில் அழைத்திருந்தார். மக்கள் நீதி<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> oxzu1h3m44uaqhsd6azgxf5oam5aldq 1834683 1834682 2025-06-23T13:25:39Z மொஹமது கராம் 14681 1834683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 35}} {{rule}}</noinclude><section begin="16"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|16. திருவரங்கத்தில் நவாபு செய்த பைசல்<ref>தமிழக அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகம் எண்.டி.3891</ref></b>}}}} திருவரங்கம் கோயிலில் நீண்டநாள் தீர்த்தம் மரியாதை பற்றி ஒரு வழக்கு கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் ரெங்காச்சாரியார் இருவரிடையே நிலவி வந்தது. இவ்வழக்கு ஆர்க்காடு மன்னர் அசரத் நவாபு சாயபு அவர்களிடம் சென்றது. அவர் நேரில் வந்து விசாரித்துத் தீர்ப்பு அளித்த விபரம் ஒரு ஆவணமாக எழுதப்பட்டுள்ளது. அதன் மூல நகல் சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு கீழ்த்திசை சுவடிச் சாலையில் உள்ளது. அதன் எண்.டி.3891 ஆகும். அதன் விவரம் இங்கே அளிக்கப்படுகிறது. <b>ஆவணச் செய்தி</b> திருவரங்கம் வைணவர்களுக்குக் ‘கோயில்’ என்று அன்றும் இன்றும் பாராட்டப்படவது. சிறப்புமிகு அத்திருவரங்கத் தலத்தில் உள்ள கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் என்பவர் 1797 ஆம் ஆண்டு ஆர்க்காடு மன்னர் அசரத் நவாபு சாயபு அவர்களிடம் ‘பிராது’ ஒன்றைக் கொடுத்தார். 10 தலைமுறை 120 ஆண்டுகளுக்கு முன்னிருந்து மதுரை நாயக்க மன்னர் சொக்கநாத நாயக்கர் காலத்திலிருந்து (1656 - 1682) தம் பரம்பரை உரிமையை ரெங்காச்சாரியார் பரம்பரை அனுபவித்துக் கொண்டு வருவதாகவும், அதைத் தமக்கு மீட்டுத் தருமாறும் கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் கேட்டிருந்தார். கந்தாடை குடும்பம் திருவரங்கத்தில் புகழ்வாய்ந்த பழைய குடும்பம். அவர்கள் பெயரில் திருவரங்கத்தில் கந்தாடை அண்ணன் அப்பன் திருமாளிகை என்ற பெயரில் மண்டபம் ஒன்றுள்ளது. அரங்கநாதர் நாள்தோறும் எழுந்தருளும்போது வைஷ்ணவர்களுக்கு அங்கு அன்னதானமிட பெரிய கோனம்மாள் என்பவர் 2.1.1535 அன்று 800 பொன் கொடையாக அளித்துள்ளார். அவர்கள் பரம்பரையில் கந்தாடை மாதவய்யங்கார் என்பவர் திருவரங்கம் கல்வெட்டில் குறிக்கப் பெறுகிறார். ஒருநாள் நவாபு சாயபு அவர்கள் திருவரங்கம் வந்து இவ்வழக்கை விசாரித்தார். விசாரணையின் போது வழக்காளிகள் இருவரும் இருந்தனர். மற்றும் திருவரங்கம் கோயில் தொடர்பான பன்னிரண்டுபேரை நவாபு நேரில் அழைத்திருந்தார். மக்கள் நீதி<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 5uzddx1fxdm7m9y2ufjan9m8z3p2q7v 1834849 1834683 2025-06-24T05:27:33Z ஹர்ஷியா பேகம் 15001 1834849 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 35}} {{rule}}</noinclude><section begin="16"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|16. திருவரங்கத்தில் நவாபு செய்த பைசல்*<ref>*தமிழக அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகம் எண்.டி.3891</ref></b>}}}} திருவரங்கம் கோயிலில் நீண்டநாள் தீர்த்தம் மரியாதை பற்றி ஒரு வழக்கு கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் ரெங்காச்சாரியார் இருவரிடையே நிலவி வந்தது. இவ்வழக்கு ஆர்க்காடு மன்னர் அசரத் நவாபு சாயபு அவர்களிடம் சென்றது. அவர் நேரில் வந்து விசாரித்துத் தீர்ப்பு அளித்த விபரம் ஒரு ஆவணமாக எழுதப்பட்டுள்ளது. அதன் மூல நகல் சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு கீழ்த்திசை சுவடிச் சாலையில் உள்ளது. அதன் எண்.டி.3891 ஆகும். அதன் விவரம் இங்கே அளிக்கப்படுகிறது. <b>ஆவணச் செய்தி</b> திருவரங்கம் வைணவர்களுக்குக் ‘கோயில்’ என்று அன்றும் இன்றும் பாராட்டப்படவது. சிறப்புமிகு அத்திருவரங்கத் தலத்தில் உள்ள கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் என்பவர் 1797 ஆம் ஆண்டு ஆர்க்காடு மன்னர் அசரத் நவாபு சாயபு அவர்களிடம் ‘பிராது’ ஒன்றைக் கொடுத்தார். 10 தலைமுறை 120 ஆண்டுகளுக்கு முன்னிருந்து மதுரை நாயக்க மன்னர் சொக்கநாத நாயக்கர் காலத்திலிருந்து (1656 - 1682) தம் பரம்பரை உரிமையை ரெங்காச்சாரியார் பரம்பரை அனுபவித்துக் கொண்டு வருவதாகவும், அதைத் தமக்கு மீட்டுத் தருமாறும் கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் கேட்டிருந்தார். கந்தாடை குடும்பம் திருவரங்கத்தில் புகழ்வாய்ந்த பழைய குடும்பம். அவர்கள் பெயரில் திருவரங்கத்தில் கந்தாடை அண்ணன் அப்பன் திருமாளிகை என்ற பெயரில் மண்டபம் ஒன்றுள்ளது. அரங்கநாதர் நாள்தோறும் எழுந்தருளும்போது வைஷ்ணவர்களுக்கு அங்கு அன்னதானமிட பெரிய கோனம்மாள் என்பவர் 2.1.1535 அன்று 800 பொன் கொடையாக அளித்துள்ளார். அவர்கள் பரம்பரையில் கந்தாடை மாதவய்யங்கார் என்பவர் திருவரங்கம் கல்வெட்டில் குறிக்கப் பெறுகிறார். ஒருநாள் நவாபு சாயபு அவர்கள் திருவரங்கம் வந்து இவ்வழக்கை விசாரித்தார். விசாரணையின் போது வழக்காளிகள் இருவரும் இருந்தனர். மற்றும் திருவரங்கம் கோயில் தொடர்பான பன்னிரண்டுபேரை நவாபு நேரில் அழைத்திருந்தார். மக்கள் நீதி<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> j0ozgk1wxqwy1gnha6jn4mlg5qbnpru பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/37 250 489018 1834696 1834130 2025-06-23T14:10:13Z மொஹமது கராம் 14681 1834696 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|36 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>மன்றம் போல அந்த அவை காணப்பட்டது. (1) ஸ்ரீரங்கநாத ஜீயர் (2) வேதவியாசபட்டர் (3) தானம் அண்ணுவய்யங்கார் (4) அமுல் சுப்பராயர் (5) பாரிசு சிராஸ்தார் வெங்கிட்டராயர் (6) கானு கோயில் சீனிவாசராயர் (7) கசானா வெங்கிட்டராயர் (8) கானு சமாளி பெடிகார் ரெட்டியார் (9) சிரஸ்தார் நாராயணய்யர் (10) சிரஸ்தார் குருநாதபிள்ளை (11) வீர ராகவ சோசி (12) சுப்பிரமணிய சோசி ஆகியோரும் தலத்தாரும் சிலர் இருந்தனர். தீர விசாரித்து நவாபு அவர்கள் பின்வருமாறு தீர்ப்பளித்தார். அதனை அட்டவணை குமாரசாமி முதலியார் ஓலையில் எழுதினார். ‘நவாபு சாயபு அவர்கள் சகலமான பேர்களிடத்திலும் தயவு பண்ணுகிறபடியினாலே தயா விசயமாய் ராசா நாள் முதல் ரெங்காச்சாரியாருக்குத் தீர்த்தமானபடியினாலே வேறே பேச்சுச் சொல்லாமல் உத்தரவு பண்ணினார். என்னவென்றால் இருவருக்கும் தீர்த்த மரியாதை பேருக்குப் பாதியாய் ஒரு மாதத்துக்கு 15 நாள் அண்ணங்காருக்கும், 15 நாள் ரெங்காச்சாரியாருக்கும் திட்டம் பண்ணினார்கள். இதனாலே முசுத்திகள் தலத்தார் முதலானபேரும் வழக்காளி இருவரும் சம்மதியில் திட்டம் பண்ணினார்கள். அசூர் உத்திரவுப்படிக்கு வழக்காளி இருவரும் தீர்த்தம் மரியாதை கோவிலிலேயே நடக்க ருசுவும் மிராசு இதுகள் பேர் பாதியாய் அனுபவிச்சுக் கொண்டு எண்ணெய்க்கும் செச்சறைப் படாமல் தீர்த்தப் பிரசாதம் நடப்பிவிச்சுக் கொண்டு தம்முடைய காரியத்திலே இருக்கவும். ஒரு வேளையிலே இவர்களில் ஒருத்தர் இந்தத் தீர்ப்புக்கு சகித்தை பண்ணினார் சருக்காருக்கு நெர்த்தராய் மிராசம் விட்டு சர்க்கார் ஆக்கினைக்கும் உட்பட்டவராவார்.’ தமிழக வைணவ வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இத்தீர்ப்பின் மூல ஓலையில் தொடர்புடையவர்கள் கையெழுத்துக்கள் உள்ளன. <section end="16"/>{{nop}}<noinclude></noinclude> ql9tirv4sc7gi5h2pjgewqxmgkvls5y பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/38 250 489019 1834697 1834277 2025-06-23T14:14:19Z மொஹமது கராம் 14681 1834697 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 37}} {{rule}}</noinclude><section begin="17"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|17. மதுரை சுல்தான் காலக் கொடைகள்<ref>புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுக்கள் - எண்669<br>Annual Report on Epigraphy - 160 of 1920</ref></b>}}}} 1) புதுக்கோட்டை மாவட்டம்; திருமெய்யம் வட்டம், ராங்கியம் பூமீசுவரர் கோயில் தென்புறச் சுவரில் “ஆதி சுரத்தானுக்கு யாண்டு 732 வது சித்திரை மாதம் 15 தியதி, பூர்வபட்சத்து ஏகாதசியும் திங்கட்கிழமையும் பெற்ற பூசத்துநாள்” என்று தொடங்கிக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. பாடிகாவல் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. {{float_right|- கல்வெட்டு எண் -669}} 2) ஈரோடு மாவட்டம், தாராபுரம் வட்டம், அயங்கியம் கலியுகக் கண்ணீசுவரர் கோயிலில் மகாமண்டப வடபுறச் சுவரில் எம்மண்டலமுங் கொண்ட ஆதிசுரத்தானுக்கு யாண்டு 751 அப்பிசை மாதம் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. தென்பொங்கலூர்க்கா நாட்டு அலங்கியமான உத்தமசோ நல்லூர் வெள்ளாளன் தேவன் சிவந்தகால் பெருமாள் என்பவ நாயனார் ஞானமூர்த்திதே நாயனார் திருமடத்திற்கு இறையிலியாக நிலக்கொடை வழங்கியுள்ளார். ‘ஆதிசுரத்தான்’ என்பதை வீரசுந்தரன் என்று தவறாகப் படித்துள்ளனர். {{float_right|- 1920 ஆம் வருட கல்வெட்டு அறிக்கை}} மதுரை சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் பல அறச்செயல்கள் நடைபெற்றுள்ளமையை ஆதிசுரத்தான் (மதுரை சுல்தான்) கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இதுபோல் இன்னும் பல கல்வெட்டுக்கள் இருக்கக்கூடும். திருச்சிராப்பள்ளி வட்ட இலுப்பூரிலும் ‘ஆதிசுரத்தான்’ காலக் கொடைக் கல்வெட்டு உள்ளது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> i82pkfnxyvotnmeb84jc0peondi1yfw 1834698 1834697 2025-06-23T14:14:41Z மொஹமது கராம் 14681 1834698 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 37}} {{rule}}</noinclude><section begin="17"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|17. மதுரை சுல்தான் காலக் கொடைகள்<ref>புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுக்கள் - எண்669<br>Annual Report on Epigraphy - 160 of 1920</ref></b>}}}} 1) புதுக்கோட்டை மாவட்டம்; திருமெய்யம் வட்டம், ராங்கியம் பூமீசுவரர் கோயில் தென்புறச் சுவரில் “ஆதி சுரத்தானுக்கு யாண்டு 732 வது சித்திரை மாதம் 15 தியதி, பூர்வபட்சத்து ஏகாதசியும் திங்கட்கிழமையும் பெற்ற பூசத்துநாள்” என்று தொடங்கிக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. பாடிகாவல் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. {{float_right|- கல்வெட்டு எண் -669}} 2) ஈரோடு மாவட்டம், தாராபுரம் வட்டம், அயங்கியம் கலியுகக் கண்ணீசுவரர் கோயிலில் மகாமண்டப வடபுறச் சுவரில் எம்மண்டலமுங் கொண்ட ஆதிசுரத்தானுக்கு யாண்டு 751 அப்பிசை மாதம் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. தென்பொங்கலூர்க்கா நாட்டு அலங்கியமான உத்தமசோ நல்லூர் வெள்ளாளன் தேவன் சிவந்தகால் பெருமாள் என்பவ நாயனார் ஞானமூர்த்திதே நாயனார் திருமடத்திற்கு இறையிலியாக நிலக்கொடை வழங்கியுள்ளார். ‘ஆதிசுரத்தான்’ என்பதை வீரசுந்தரன் என்று தவறாகப் படித்துள்ளனர். {{float_right|- 1920 ஆம் வருட கல்வெட்டு அறிக்கை}} மதுரை சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் பல அறச்செயல்கள் நடைபெற்றுள்ளமையை ஆதிசுரத்தான் (மதுரை சுல்தான்) கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இதுபோல் இன்னும் பல கல்வெட்டுக்கள் இருக்கக்கூடும். திருச்சிராப்பள்ளி வட்ட இலுப்பூரிலும் ‘ஆதிசுரத்தான்’ காலக் கொடைக் கல்வெட்டு உள்ளது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> ciw5nn8ii44noz65qbqgi6imc1ceia5 1834700 1834698 2025-06-23T14:15:01Z மொஹமது கராம் 14681 1834700 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 37}} {{rule}}</noinclude><section begin="17"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|17. மதுரை சுல்தான் காலக் கொடைகள்<ref>புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுக்கள் - எண்669<br>Annual Report on Epigraphy - 160 of 1920</ref></b>}}}} 1) புதுக்கோட்டை மாவட்டம்; திருமெய்யம் வட்டம், ராங்கியம் பூமீசுவரர் கோயில் தென்புறச் சுவரில் “ஆதி சுரத்தானுக்கு யாண்டு 732 வது சித்திரை மாதம் 15 தியதி, பூர்வபட்சத்து ஏகாதசியும் திங்கட்கிழமையும் பெற்ற பூசத்துநாள்” என்று தொடங்கிக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. பாடிகாவல் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. {{float_right|- கல்வெட்டு எண் -669}} 2) ஈரோடு மாவட்டம், தாராபுரம் வட்டம், அயங்கியம் கலியுகக் கண்ணீசுவரர் கோயிலில் மகாமண்டப வடபுறச் சுவரில் எம்மண்டலமுங் கொண்ட ஆதிசுரத்தானுக்கு யாண்டு 751 அப்பிசை மாதம் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. தென்பொங்கலூர்க்கா நாட்டு அலங்கியமான உத்தமசோ நல்லூர் வெள்ளாளன் தேவன் சிவந்தகால் பெருமாள் என்பவ நாயனார் ஞானமூர்த்திதே நாயனார் திருமடத்திற்கு இறையிலியாக நிலக்கொடை வழங்கியுள்ளார். ‘ஆதிசுரத்தான்’ என்பதை வீரசுந்தரன் என்று தவறாகப் படித்துள்ளனர். {{float_right|- 1920 ஆம் வருட கல்வெட்டு அறிக்கை}} மதுரை சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் பல அறச்செயல்கள் நடைபெற்றுள்ளமையை ஆதிசுரத்தான் (மதுரை சுல்தான்) கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இதுபோல் இன்னும் பல கல்வெட்டுக்கள் இருக்கக்கூடும். திருச்சிராப்பள்ளி வட்ட இலுப்பூரிலும் ‘ஆதிசுரத்தான்’ காலக் கொடைக் கல்வெட்டு உள்ளது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 6ijal8wk5azkpww77hhdkix97qzq6w0 1834701 1834700 2025-06-23T14:15:29Z மொஹமது கராம் 14681 1834701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 37}} {{rule}}</noinclude><section begin="17"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|17. மதுரை சுல்தான் காலக் கொடைகள்<ref>புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுக்கள் - எண்669<br>Annual Report on Epigraphy - 160 of 1920</ref></b>}}}} 1) புதுக்கோட்டை மாவட்டம்; திருமெய்யம் வட்டம், ராங்கியம் பூமீசுவரர் கோயில் தென்புறச் சுவரில் “ஆதி சுரத்தானுக்கு யாண்டு 732 வது சித்திரை மாதம் 15 தியதி, பூர்வபட்சத்து ஏகாதசியும் திங்கட்கிழமையும் பெற்ற பூசத்துநாள்” என்று தொடங்கிக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. பாடிகாவல் உரிமை அளிக்கப்பட்டுள்ளது.<br>{{float_right|- கல்வெட்டு எண் -669}} 2) ஈரோடு மாவட்டம், தாராபுரம் வட்டம், அயங்கியம் கலியுகக் கண்ணீசுவரர் கோயிலில் மகாமண்டப வடபுறச் சுவரில் எம்மண்டலமுங் கொண்ட ஆதிசுரத்தானுக்கு யாண்டு 751 அப்பிசை மாதம் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. தென்பொங்கலூர்க்கா நாட்டு அலங்கியமான உத்தமசோ நல்லூர் வெள்ளாளன் தேவன் சிவந்தகால் பெருமாள் என்பவ நாயனார் ஞானமூர்த்திதே நாயனார் திருமடத்திற்கு இறையிலியாக நிலக்கொடை வழங்கியுள்ளார். ‘ஆதிசுரத்தான்’ என்பதை வீரசுந்தரன் என்று தவறாகப் படித்துள்ளனர்.<br>{{float_right|- 1920 ஆம் வருட கல்வெட்டு அறிக்கை}} மதுரை சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் பல அறச்செயல்கள் நடைபெற்றுள்ளமையை ஆதிசுரத்தான் (மதுரை சுல்தான்) கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இதுபோல் இன்னும் பல கல்வெட்டுக்கள் இருக்கக்கூடும். திருச்சிராப்பள்ளி வட்ட இலுப்பூரிலும் ‘ஆதிசுரத்தான்’ காலக் கொடைக் கல்வெட்டு உள்ளது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 4jhmmxrynhprqdo0au6vk8w7jsv8vxr 1834763 1834701 2025-06-23T18:48:03Z ஹர்ஷியா பேகம் 15001 1834763 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 37}} {{rule}}</noinclude><section begin="17"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|17. மதுரை சுல்தான் காலக் கொடைகள்<ref>புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுக்கள் - எண்669<br>Annual Report on Epigraphy - 160 of 1920</ref></b>}}}} 1) புதுக்கோட்டை மாவட்டம்; திருமெய்யம் வட்டம், ராங்கியம் பூமீசுவரர் கோயில் தென்புறச் சுவரில் “ஆதி சுரத்தானுக்கு யாண்டு 732 வது சித்திரை மாதம் 15 தியதி, பூர்வபட்சத்து ஏகாதசியும் திங்கட்கிழமையும் பெற்ற பூசத்துநாள்” என்று தொடங்கிக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. பாடிகாவல் உரிமை அளிக்கப்பட்டுள்ளது.<br>{{float_right|- கல்வெட்டு எண் -669}} 2) ஈரோடு மாவட்டம், தாராபுரம் வட்டம், அயங்கியம் கலியுகக் கண்ணீசுவரர் கோயிலில் மகாமண்டப வடபுறச் சுவரில் எம்மண்டலமுங் கொண்ட ஆதிசுரத்தானுக்கு யாண்டு 751 அப்பிசை மாதம் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. தென்பொங்கலூர்க்கா நாட்டு அலங்கியமான உத்தமசோ நல்லூர் வெள்ளாளன் தேவன் சிவந்தகால் பெருமாள் என்பவ நாயனார் ஞானமூர்த்திதே நாயனார் திருமடத்திற்கு இறையிலியாக நிலக்கொடை வழங்கியுள்ளார். ‘ஆதிசுரத்தான்’ என்பதை வீரசுந்தரன் என்று தவறாகப் படித்துள்ளனர்.<br>{{float_right|- 1920 ஆம் வருட கல்வெட்டு அறிக்கை}} மதுரை சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் பல அறச்செயல்கள் நடைபெற்றுள்ளமையை ஆதிசுரத்தான் (மதுரை சுல்தான்) கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இதுபோல் இன்னும் பல கல்வெட்டுக்கள் இருக்கக்கூடும். திருச்சிராப்பள்ளி வட்ட இலுப்பூரிலும் ‘ஆதிசுரத்தான்’ காலக் கொடைக் கல்வெட்டு உள்ளது. <section end="17"/>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> imy0et3px8sedemuezvk0oxx1ici8h2 1834854 1834763 2025-06-24T05:29:51Z ஹர்ஷியா பேகம் 15001 1834854 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 37}} {{rule}}</noinclude><section begin="17"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|17. மதுரை சுல்தான் காலக் கொடைகள்*<ref>*புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுக்கள் - எண்669<br>Annual Report on Epigraphy - 160 of 1920</ref></b>}}}} 1) புதுக்கோட்டை மாவட்டம்; திருமெய்யம் வட்டம், ராங்கியம் பூமீசுவரர் கோயில் தென்புறச் சுவரில் “ஆதி சுரத்தானுக்கு யாண்டு 732 வது சித்திரை மாதம் 15 தியதி, பூர்வபட்சத்து ஏகாதசியும் திங்கட்கிழமையும் பெற்ற பூசத்துநாள்” என்று தொடங்கிக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. பாடிகாவல் உரிமை அளிக்கப்பட்டுள்ளது.<br>{{float_right|- கல்வெட்டு எண் -669}} 2) ஈரோடு மாவட்டம், தாராபுரம் வட்டம், அயங்கியம் கலியுகக் கண்ணீசுவரர் கோயிலில் மகாமண்டப வடபுறச் சுவரில் எம்மண்டலமுங் கொண்ட ஆதிசுரத்தானுக்கு யாண்டு 751 அப்பிசை மாதம் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. தென்பொங்கலூர்க்கா நாட்டு அலங்கியமான உத்தமசோ நல்லூர் வெள்ளாளன் தேவன் சிவந்தகால் பெருமாள் என்பவ நாயனார் ஞானமூர்த்திதே நாயனார் திருமடத்திற்கு இறையிலியாக நிலக்கொடை வழங்கியுள்ளார். ‘ஆதிசுரத்தான்’ என்பதை வீரசுந்தரன் என்று தவறாகப் படித்துள்ளனர்.<br>{{float_right|- 1920 ஆம் வருட கல்வெட்டு அறிக்கை}} மதுரை சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் பல அறச்செயல்கள் நடைபெற்றுள்ளமையை ஆதிசுரத்தான் (மதுரை சுல்தான்) கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இதுபோல் இன்னும் பல கல்வெட்டுக்கள் இருக்கக்கூடும். திருச்சிராப்பள்ளி வட்ட இலுப்பூரிலும் ‘ஆதிசுரத்தான்’ காலக் கொடைக் கல்வெட்டு உள்ளது. <section end="17"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 703s210pjtetfa4osg9imxbqkj2is92 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/39 250 489020 1834704 1834279 2025-06-23T14:19:14Z மொஹமது கராம் 14681 1834704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|38 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="17-A."/> {{dhr|3em}} {{center|<b>{{larger|17-A. இலுப்பூர் சிவன் கோயிலுக்கு மதுரை சுல்தான் கொடை <ref>Annual Report on Epigraphy 297 of 1944</ref></b>}}}} திருச்சி வட்டம், இலுப்பூரில் உள்ள சிவன் கோயிலில் இறைவனுக்கு பொன்வாசிநாதசுவாமி என்று பெயர். கல்வெட்டில் “தேவும் திருவும் உடைய நாயனார்” என்று பெயர் கூறப்படுகிறது. ஹிஜ்ரி 745 ஆம் ஆண்டு தைமாதம் மதுரையில் ஆதி சுல்தான் ஆட்சிக்காலத்தில் அன்னவாசல் கூற்றம் இருக்குமணி உடையான் பெரியவன் வழுவாதரையர் என்பவரைக் கொண்டு தச்சன்வயல் என்ற ஊரை குடிநீங்காத் தேவதானமாக ஏலத்துக்குவிட்டு கிடைத்த 80 “வாளால் வழி திறந்தான்” பணத்தைக் கொண்டு கோயிலில் பூசை நடத்த ஏற்பாடு செய்தார். அந்த ஊரின் வருவாயிலிருந்து 80 பணம் கோயிலுக்கும் கொடுக்க வேண்டும். கல்வெட்டின் தொடக்கத்தில் ‘ஆதி சுரத்தான்’ (சுல்தான்) என்று எழுதப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியம் ஈரோடு மாவட்ட அலங்கியம் ஆகிய ஊர்களிலும் ‘ஆதி சுல்தான்’ கல்வெட்டுக்கள் உள்ளன.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 9ihgv1d3p70vbj8c31kruwplr2c9066 1834764 1834704 2025-06-23T18:49:23Z ஹர்ஷியா பேகம் 15001 1834764 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|38 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="17-A."/> {{dhr|3em}} {{center|<b>{{larger|17-A. இலுப்பூர் சிவன் கோயிலுக்கு மதுரை சுல்தான் கொடை <ref>Annual Report on Epigraphy 297 of 1944</ref></b>}}}} திருச்சி வட்டம், இலுப்பூரில் உள்ள சிவன் கோயிலில் இறைவனுக்கு பொன்வாசிநாதசுவாமி என்று பெயர். கல்வெட்டில் “தேவும் திருவும் உடைய நாயனார்” என்று பெயர் கூறப்படுகிறது. ஹிஜ்ரி 745 ஆம் ஆண்டு தைமாதம் மதுரையில் ஆதி சுல்தான் ஆட்சிக்காலத்தில் அன்னவாசல் கூற்றம் இருக்குமணி உடையான் பெரியவன் வழுவாதரையர் என்பவரைக் கொண்டு தச்சன்வயல் என்ற ஊரை குடிநீங்காத் தேவதானமாக ஏலத்துக்குவிட்டு கிடைத்த 80 “வாளால் வழி திறந்தான்” பணத்தைக் கொண்டு கோயிலில் பூசை நடத்த ஏற்பாடு செய்தார். அந்த ஊரின் வருவாயிலிருந்து 80 பணம் கோயிலுக்கும் கொடுக்க வேண்டும். கல்வெட்டின் தொடக்கத்தில் ‘ஆதி சுரத்தான்’ (சுல்தான்) என்று எழுதப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியம் ஈரோடு மாவட்ட அலங்கியம் ஆகிய ஊர்களிலும் ‘ஆதி சுல்தான்’ கல்வெட்டுக்கள் உள்ளன. <section end="17-A"/>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 90jh03s9gafhdy5kamyzqmpvpmmqvgx பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/40 250 489021 1834709 1834282 2025-06-23T14:23:11Z மொஹமது கராம் 14681 1834709 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 39}} {{rule}}</noinclude><section begin="18"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|18. சலுகைகள் அளித்த சும்சுதீன் அடில்ஷா <ref>Annual Report on Epigrphy 115 (D) of 1962</ref></b>}}}} மதுரையில் சும்சுதீன் சுல்தான் அடில்ஷா ஆட்சி செய்யும் போது பொதுமக்கள், கடைக்காரர்கள், வணிகர்கள், உழவர்கள் ஆகியோருக்குப் பல்வேறு சலுகைகள் அளித்ததாக மதுரை சுல்தான் சுயாவுதீன் தர்காவில் உள்ள கல்வெட்டுக் கூறுகிறது. {{dhr|2em}} {{center|⬤ ❖ ⬤}} <section begin="19"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|19. கள்ளர்களைப் பிடித்த ராவுத்தர்கள்<ref>Annual Report on Epigraphy - 150 of 1974</ref></b>}}}} நத்தம் பகுதி பாளையக்காரராக இருந்தவர் லிங்கைய நாயக்கர் அவரிடம் அலுவலர்களாக இருந்தவர்கள் சிங்கார ராவுத்தா வத்தலை ராவுத்தர் ஆகியோர். கி.பி. 1604 ஆம் ஆண்டு கருங்காலக்குடி அருகில் கள்ளர் திருடவந்தனர். சிங்கார ராவுத்தரும், வத்தலை ராவுத்தரும் திருடர்களைப் பிடித்துக் கொடுத்தனர். இச்செய்தி மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக் குடியில் உள்ள உப்புச்சுனையின் மேல்பக்கப் பாறையில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. <b>கல்வெட்டு</b> <poem> 1. சகாப்தம் 1526 2. க்கு மேல் செல்லா நின்ற 3. குரோதி வருஷம் கார்த்திகை மாதம் 4. 3 தேதி லிங்கைய நாயக் 5. கரையன் காரியத் 6. துக்கு கடவாரான சி 7. ங்கார ராவுத்தர் வத்தலை ரா 8. வுத்தர் கள்ளரைப் பிடித்து 9. .... யுங் கள்ளன்... (அழிந்து விட்டது)</poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> ovyu4n0a78l86sotk2jg631v7zuc2wu 1834856 1834709 2025-06-24T05:32:12Z ஹர்ஷியா பேகம் 15001 1834856 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 39}} {{rule}}</noinclude><section begin="18"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|18. சலுகைகள் அளித்த சும்சுதீன் அடில்ஷா <ref>Annual Report on Epigrphy 115 (D) of 1962</ref></b>}}}} மதுரையில் சும்சுதீன் சுல்தான் அடில்ஷா ஆட்சி செய்யும் போது பொதுமக்கள், கடைக்காரர்கள், வணிகர்கள், உழவர்கள் ஆகியோருக்குப் பல்வேறு சலுகைகள் அளித்ததாக மதுரை சுல்தான் சுயாவுதீன் தர்காவில் உள்ள கல்வெட்டுக் கூறுகிறது. {{dhr|2em}} {{center|⬤ ❖ ⬤}} <section end="18"/><section begin="19"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|19. கள்ளர்களைப் பிடித்த ராவுத்தர்கள்<ref>Annual Report on Epigraphy - 150 of 1974</ref></b>}}}} நத்தம் பகுதி பாளையக்காரராக இருந்தவர் லிங்கைய நாயக்கர் அவரிடம் அலுவலர்களாக இருந்தவர்கள் சிங்கார ராவுத்தா வத்தலை ராவுத்தர் ஆகியோர். கி.பி. 1604 ஆம் ஆண்டு கருங்காலக்குடி அருகில் கள்ளர் திருடவந்தனர். சிங்கார ராவுத்தரும், வத்தலை ராவுத்தரும் திருடர்களைப் பிடித்துக் கொடுத்தனர். இச்செய்தி மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக் குடியில் உள்ள உப்புச்சுனையின் மேல்பக்கப் பாறையில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. <b>கல்வெட்டு</b> <poem> 1. சகாப்தம் 1526 2. க்கு மேல் செல்லா நின்ற 3. குரோதி வருஷம் கார்த்திகை மாதம் 4. 3 தேதி லிங்கைய நாயக் 5. கரையன் காரியத் 6. துக்கு கடவாரான சி 7. ங்கார ராவுத்தர் வத்தலை ரா 8. வுத்தர் கள்ளரைப் பிடித்து 9. .... யுங் கள்ளன்... (அழிந்து விட்டது)</poem> <section end="19"/>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> m9e9pu5rme2v6vaer7twfjkmcc88jcs 1834857 1834856 2025-06-24T05:33:58Z ஹர்ஷியா பேகம் 15001 1834857 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 39}} {{rule}}</noinclude><section begin="18"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|18. சலுகைகள் அளித்த சும்சுதீன் அடில்ஷா*<ref>*Annual Report on Epigrphy 115 (D) of 1962</ref></b>}}}} மதுரையில் சும்சுதீன் சுல்தான் அடில்ஷா ஆட்சி செய்யும் போது பொதுமக்கள், கடைக்காரர்கள், வணிகர்கள், உழவர்கள் ஆகியோருக்குப் பல்வேறு சலுகைகள் அளித்ததாக மதுரை சுல்தான் சுயாவுதீன் தர்காவில் உள்ள கல்வெட்டுக் கூறுகிறது. {{dhr|2em}} {{center|⬤ ❖ ⬤}} <section end="18"/> <section begin="19"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|19. கள்ளர்களைப் பிடித்த ராவுத்தர்கள்*<ref>*Annual Report on Epigraphy - 150 of 1974</ref></b>}}}} நத்தம் பகுதி பாளையக்காரராக இருந்தவர் லிங்கைய நாயக்கர் அவரிடம் அலுவலர்களாக இருந்தவர்கள் சிங்கார ராவுத்தா வத்தலை ராவுத்தர் ஆகியோர். கி.பி. 1604 ஆம் ஆண்டு கருங்காலக்குடி அருகில் கள்ளர் திருடவந்தனர். சிங்கார ராவுத்தரும், வத்தலை ராவுத்தரும் திருடர்களைப் பிடித்துக் கொடுத்தனர். இச்செய்தி மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக் குடியில் உள்ள உப்புச்சுனையின் மேல்பக்கப் பாறையில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. <b>கல்வெட்டு</b> <poem> 1. சகாப்தம் 1526 2. க்கு மேல் செல்லா நின்ற 3. குரோதி வருஷம் கார்த்திகை மாதம் 4. 3 தேதி லிங்கைய நாயக் 5. கரையன் காரியத் 6. துக்கு கடவாரான சி 7. ங்கார ராவுத்தர் வத்தலை ரா 8. வுத்தர் கள்ளரைப் பிடித்து 9. .... யுங் கள்ளன்... (அழிந்து விட்டது)</poem> <section end="19"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 29m6bo3ekqp57ofkzdbht7xwp1kq7cv 1834921 1834857 2025-06-24T07:19:45Z Info-farmer 232 <section end="4"/> 1834921 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 39}} {{rule}}</noinclude> <section begin="3"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|18. சலுகைகள் அளித்த சும்சுதீன் அடில்ஷா*<ref>*Annual Report on Epigrphy 115 (D) of 1962</ref></b>}}}} மதுரையில் சும்சுதீன் சுல்தான் அடில்ஷா ஆட்சி செய்யும் போது பொதுமக்கள், கடைக்காரர்கள், வணிகர்கள், உழவர்கள் ஆகியோருக்குப் பல்வேறு சலுகைகள் அளித்ததாக மதுரை சுல்தான் சுயாவுதீன் தர்காவில் உள்ள கல்வெட்டுக் கூறுகிறது. {{dhr|2em}} {{center|⬤ ❖ ⬤}} <section end="3"/> <section begin="4"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|19. கள்ளர்களைப் பிடித்த ராவுத்தர்கள்*<ref>*Annual Report on Epigraphy - 150 of 1974</ref></b>}}}} நத்தம் பகுதி பாளையக்காரராக இருந்தவர் லிங்கைய நாயக்கர் அவரிடம் அலுவலர்களாக இருந்தவர்கள் சிங்கார ராவுத்தா வத்தலை ராவுத்தர் ஆகியோர். கி.பி. 1604 ஆம் ஆண்டு கருங்காலக்குடி அருகில் கள்ளர் திருடவந்தனர். சிங்கார ராவுத்தரும், வத்தலை ராவுத்தரும் திருடர்களைப் பிடித்துக் கொடுத்தனர். இச்செய்தி மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக் குடியில் உள்ள உப்புச்சுனையின் மேல்பக்கப் பாறையில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. <b>கல்வெட்டு</b> <poem> 1. சகாப்தம் 1526 2. க்கு மேல் செல்லா நின்ற 3. குரோதி வருஷம் கார்த்திகை மாதம் 4. 3 தேதி லிங்கைய நாயக் 5. கரையன் காரியத் 6. துக்கு கடவாரான சி 7. ங்கார ராவுத்தர் வத்தலை ரா 8. வுத்தர் கள்ளரைப் பிடித்து 9. .... யுங் கள்ளன்... (அழிந்து விட்டது)</poem> <section end="4"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> fzrm4rpe4j40pf13zq1j9zcyr84rivx பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/41 250 489022 1834712 1834534 2025-06-23T14:26:07Z மொஹமது கராம் 14681 1834712 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|40 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="20"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|20. பார்ப்பனப் பெண்ணுக்காக உயிர்துறந்த பக்கிரிசாயபு<ref>தமிழ்நாட்டுச் செப்பேடுகள்: பகுதி 2; பக் 59: ச. கிருஷ்ணமூர்த்தி</ref></b>}}}} ஒரு பார்ப்பனப் பெண்ணின் பொருட்டு உயிர்துறந்து வீர மரணம் அடைந்த ஒரு தீரமிக்க இஸ்லாமியர் பக்கிரிசாயபு அவர்களின் வரலாற்றை இச்செப்பேடு கூறுகிறது. இந்தச் செப்பேடு தஞ்சை நாயக்க மன்னர் விசயராகவ நாயக்கரால் கொடுக்கப்பட்டுள்ளது. (1640-1674) தஞ்சாவூர் நாயக்கமன்னர் விசயரகுநாத நாயக்கர் வழங்கியது இச்செப்பேடாகும். ஆனந்த வருடம் கார்த்திகை மாதம் 13ஆம் நாள் என்று காணப்படுகிறது. கி.பி. 1674 ஆம் ஆண்டாகும். இச்செப்பேட்டில் மிகவும் அரிய செய்தி ஒன்று கூறப்படுகிறது. தஞ்சாவூரிலிருந்து வல்லத்திற்குச் செல்லும் காட்டு வழியில் பக்கிரிசாயபு என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். வல்லத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணைச் சிலர் வழிமறித்துக் கெடுக்க முயன்றனர். அதைக் கண்ட பக்கிரிசாயபு அப்பெண்ணைக் காப்பாற்றப் போராடினார். திருடர்கள் பக்கிரிசாயபுவைக் குத்திக் கொன்றனர். தன் மானத்தைக் காக்கும் பொருட்டு சாயபு உயிர் விட்டாரே என்று கலங்கிய அப்பார்ப்பனப் பெண் தன் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு அங்கேயே மரணமடைந்தாள். அப்போது திருடர்கட்குக் கண்பார்வை போய்விட்டது. திருடர்கள் இறைவனை நோக்கி “நாங்கள் அறியாமல் செய்து விட்டோம். தாங்கள் மன்னித்தால் பார்ப்பனப் பெண்ணுக்குக் கோயில் கட்டுகிறோம்” என்று வேண்டினர். கண்பார்வை கிடைத்தது. வேண்டிக் கொண்டவாறே அப்பெண்ணுக்கு நினைவுக் கோயில்கட்டிக் குளமும் வெட்டினர். இந்தக் கோயிலுக்கு விசயராகவ நாயக்கர் 1500 குழி நன்செய் நிலத்தைக் கொடையாக அளித்தார். இதைச் செப்பேடாகவும் வெட்டினார்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> fb6586jpms17uzpvrpyvwk4of0rfsal 1834765 1834712 2025-06-23T18:52:26Z ஹர்ஷியா பேகம் 15001 1834765 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|40 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="20"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|20. பார்ப்பனப் பெண்ணுக்காக உயிர்துறந்த பக்கிரிசாயபு<ref>தமிழ்நாட்டுச் செப்பேடுகள்: பகுதி 2; பக் 59: ச. கிருஷ்ணமூர்த்தி</ref></b>}}}} ஒரு பார்ப்பனப் பெண்ணின் பொருட்டு உயிர்துறந்து வீர மரணம் அடைந்த ஒரு தீரமிக்க இஸ்லாமியர் பக்கிரிசாயபு அவர்களின் வரலாற்றை இச்செப்பேடு கூறுகிறது. இந்தச் செப்பேடு தஞ்சை நாயக்க மன்னர் விசயராகவ நாயக்கரால் கொடுக்கப்பட்டுள்ளது. (1640-1674) தஞ்சாவூர் நாயக்கமன்னர் விசயரகுநாத நாயக்கர் வழங்கியது இச்செப்பேடாகும். ஆனந்த வருடம் கார்த்திகை மாதம் 13ஆம் நாள் என்று காணப்படுகிறது. கி.பி. 1674 ஆம் ஆண்டாகும். இச்செப்பேட்டில் மிகவும் அரிய செய்தி ஒன்று கூறப்படுகிறது. தஞ்சாவூரிலிருந்து வல்லத்திற்குச் செல்லும் காட்டு வழியில் பக்கிரிசாயபு என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். வல்லத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணைச் சிலர் வழிமறித்துக் கெடுக்க முயன்றனர். அதைக் கண்ட பக்கிரிசாயபு அப்பெண்ணைக் காப்பாற்றப் போராடினார். திருடர்கள் பக்கிரிசாயபுவைக் குத்திக் கொன்றனர். தன் மானத்தைக் காக்கும் பொருட்டு சாயபு உயிர் விட்டாரே என்று கலங்கிய அப்பார்ப்பனப் பெண் தன் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு அங்கேயே மரணமடைந்தாள். அப்போது திருடர்கட்குக் கண்பார்வை போய்விட்டது. திருடர்கள் இறைவனை நோக்கி “நாங்கள் அறியாமல் செய்து விட்டோம். தாங்கள் மன்னித்தால் பார்ப்பனப் பெண்ணுக்குக் கோயில் கட்டுகிறோம்” என்று வேண்டினர். கண்பார்வை கிடைத்தது. வேண்டிக் கொண்டவாறே அப்பெண்ணுக்கு நினைவுக் கோயில்கட்டிக் குளமும் வெட்டினர். இந்தக் கோயிலுக்கு விசயராகவ நாயக்கர் 1500 குழி நன்செய் நிலத்தைக் கொடையாக அளித்தார். இதைச் செப்பேடாகவும் வெட்டினார். <section end="20"/>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> hb4edw81oay71daezr8hb5rtefdsl16 1834858 1834765 2025-06-24T05:35:00Z ஹர்ஷியா பேகம் 15001 1834858 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|40 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="20"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|20. பார்ப்பனப் பெண்ணுக்காக உயிர்துறந்த பக்கிரிசாயபு*<ref>*தமிழ்நாட்டுச் செப்பேடுகள்: பகுதி 2; பக் 59: ச. கிருஷ்ணமூர்த்தி</ref></b>}}}} ஒரு பார்ப்பனப் பெண்ணின் பொருட்டு உயிர்துறந்து வீர மரணம் அடைந்த ஒரு தீரமிக்க இஸ்லாமியர் பக்கிரிசாயபு அவர்களின் வரலாற்றை இச்செப்பேடு கூறுகிறது. இந்தச் செப்பேடு தஞ்சை நாயக்க மன்னர் விசயராகவ நாயக்கரால் கொடுக்கப்பட்டுள்ளது. (1640-1674) தஞ்சாவூர் நாயக்கமன்னர் விசயரகுநாத நாயக்கர் வழங்கியது இச்செப்பேடாகும். ஆனந்த வருடம் கார்த்திகை மாதம் 13ஆம் நாள் என்று காணப்படுகிறது. கி.பி. 1674 ஆம் ஆண்டாகும். இச்செப்பேட்டில் மிகவும் அரிய செய்தி ஒன்று கூறப்படுகிறது. தஞ்சாவூரிலிருந்து வல்லத்திற்குச் செல்லும் காட்டு வழியில் பக்கிரிசாயபு என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். வல்லத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணைச் சிலர் வழிமறித்துக் கெடுக்க முயன்றனர். அதைக் கண்ட பக்கிரிசாயபு அப்பெண்ணைக் காப்பாற்றப் போராடினார். திருடர்கள் பக்கிரிசாயபுவைக் குத்திக் கொன்றனர். தன் மானத்தைக் காக்கும் பொருட்டு சாயபு உயிர் விட்டாரே என்று கலங்கிய அப்பார்ப்பனப் பெண் தன் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு அங்கேயே மரணமடைந்தாள். அப்போது திருடர்கட்குக் கண்பார்வை போய்விட்டது. திருடர்கள் இறைவனை நோக்கி “நாங்கள் அறியாமல் செய்து விட்டோம். தாங்கள் மன்னித்தால் பார்ப்பனப் பெண்ணுக்குக் கோயில் கட்டுகிறோம்” என்று வேண்டினர். கண்பார்வை கிடைத்தது. வேண்டிக் கொண்டவாறே அப்பெண்ணுக்கு நினைவுக் கோயில்கட்டிக் குளமும் வெட்டினர். இந்தக் கோயிலுக்கு விசயராகவ நாயக்கர் 1500 குழி நன்செய் நிலத்தைக் கொடையாக அளித்தார். இதைச் செப்பேடாகவும் வெட்டினார். <section end="20"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> dxijshkusaprw02qw4xnoufyqno7e2g பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/42 250 489023 1834713 1834535 2025-06-23T14:28:19Z மொஹமது கராம் 14681 1834713 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 41}} {{rule}}</noinclude><section begin="21"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|21. ‘ஷேக்’கின் அலுவலர் கட்டிய ஆகாச ராசன் மண்டபம்<ref>Annual Report on Epigraphy - 298 of 1960</ref></b>}}}} கோயமுத்தூர் மாவட்டம், அவினாசி வட்டம், அவினாசி அருகில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் ஆகாசராசன் கோயிலில் ஆகாசராசன் மண்டபத்தைக் கட்டியவர் ஷேக் அவர்களின் காரியத்துக்குக் கர்த்தரு, சென்னி திருமலை செட்டியார் பேரனும் ஆகிய ஒருவர் (பெயர் அழிந்து விட்டது) கலியுகம் 4793 ஆங்கிரச வருடம் சித்திரை முதல் தேதி கட்டினார் (கி.பி. 1693).{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> p2fs1tdafxfpedj0ky5xat14ya2gaua 1834766 1834713 2025-06-23T18:53:11Z ஹர்ஷியா பேகம் 15001 1834766 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 41}} {{rule}}</noinclude><section begin="21"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|21. ‘ஷேக்’கின் அலுவலர் கட்டிய ஆகாச ராசன் மண்டபம்<ref>Annual Report on Epigraphy - 298 of 1960</ref></b>}}}} கோயமுத்தூர் மாவட்டம், அவினாசி வட்டம், அவினாசி அருகில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் ஆகாசராசன் கோயிலில் ஆகாசராசன் மண்டபத்தைக் கட்டியவர் ஷேக் அவர்களின் காரியத்துக்குக் கர்த்தரு, சென்னி திருமலை செட்டியார் பேரனும் ஆகிய ஒருவர் (பெயர் அழிந்து விட்டது) கலியுகம் 4793 ஆங்கிரச வருடம் சித்திரை முதல் தேதி கட்டினார் (கி.பி. 1693). <section end="21"/>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> exdmtghu6r7b21cx8urcvs7fgh8up76 1834859 1834766 2025-06-24T05:36:27Z ஹர்ஷியா பேகம் 15001 1834859 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 41}} {{rule}}</noinclude><section begin="21"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|21. ‘ஷேக்’கின் அலுவலர் கட்டிய ஆகாச ராசன் மண்டபம்*<ref>*Annual Report on Epigraphy - 298 of 1960</ref></b>}}}} கோயமுத்தூர் மாவட்டம், அவினாசி வட்டம், அவினாசி அருகில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் ஆகாசராசன் கோயிலில் ஆகாசராசன் மண்டபத்தைக் கட்டியவர் ஷேக் அவர்களின் காரியத்துக்குக் கர்த்தரு, சென்னி திருமலை செட்டியார் பேரனும் ஆகிய ஒருவர் (பெயர் அழிந்து விட்டது) கலியுகம் 4793 ஆங்கிரச வருடம் சித்திரை முதல் தேதி கட்டினார் (கி.பி. 1693). <section end="21"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> rgdywabuxu115yt3hdbt1gh4gnhaxdc பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/43 250 489024 1834721 1834605 2025-06-23T14:45:25Z மொஹமது கராம் 14681 1834721 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|<b>{{larger|42}}</b> {{gap+|1}} ❋ {{gap+|1}}தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="21-A"/> {{center|<b>{{larger|21-A. இந்துக்களும் இஸ்லாமியர்களும்<br> இணைந்து கொடுத்த கொடை <ref>இக்கல்வெட்டை அனுப்பி உதவியவர். சு. இராசகோபால், தொல்லியல் துறை, சென்னை</ref>}}</b>}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் திருநாகேசுவரம் கிரி குஜாம்பாள் சன்னதி முன்பாக நடப்பட்டுள்ள கல். |- | காலம் || - ||கி.பி.1783 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||நவக்கிரகத் தலங்களுள் ஒன்றான திருநாகேசுவரத்தில் உள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் தங்கள் கடைகளில் மகமைப்பணம் வசூல் செய்து அம்மன் கோயிலிலும் பள்ளிவாசலிலும் விளக்கெரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு குடை மகமையைப் பள்ளி வாசலுக்குக் கொடுக்க அனைவரும் சம்மதித்தனர். தோஷம் என்பது தோழம் என எழுதப்பட்டுள்ளது. |} <b>கல்வெட்டு</b> <poem>1. உஸ்வஸ்தி ஸ்ரீ 2. சாலிவாகன சகா 3. த்தம் 1705 க 4. லியாத்தம் 5. 4884 யினிமேல் செல்ல 6. ர நின்ட குரோதி u தையி 7. மீ திருனாகீசுவரம் னாகலிங்க 8. சுவாமியார் குண்டுமுலை 9. அம்மனுக்கு உள்ளூர் கடைக்காரர் அநி 10. வரும் மகமைப்பட்டையம் செ 11. யிது குடுத்தபடி பட்டையமாவது 12. நிதம் திருவிளக்கு பாத்துவர உப் 13. பிலியப்பன் கோவில் கடைமுதல் 14. வடக்குக் கடை ராவுத்தர் கடைவரை 15. ரக்கும் கடை 1க்கு நிதம் அரைக்கா 16. சு வீதம் அவரவர் கடைத் தெருவி 17. ல் மாதம் ஒருத்தர் முறையா தன் 18. டி எல்லாக் காசும் ஒருத்தர் வச </poem> <section end="21-A"/>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> d5dxdl5vu7425j0i5gstn57uo2jjm0r 1834722 1834721 2025-06-23T14:46:31Z மொஹமது கராம் 14681 1834722 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|42 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="21-A"/>{{center|<b>{{larger|21-A. இந்துக்களும் இஸ்லாமியர்களும்<br> இணைந்து கொடுத்த கொடை <ref>இக்கல்வெட்டை அனுப்பி உதவியவர். சு. இராசகோபால், தொல்லியல் துறை, சென்னை</ref>}}</b>}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் திருநாகேசுவரம் கிரி குஜாம்பாள் சன்னதி முன்பாக நடப்பட்டுள்ள கல். |- | காலம் || - ||கி.பி.1783 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||நவக்கிரகத் தலங்களுள் ஒன்றான திருநாகேசுவரத்தில் உள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் தங்கள் கடைகளில் மகமைப்பணம் வசூல் செய்து அம்மன் கோயிலிலும் பள்ளிவாசலிலும் விளக்கெரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு குடை மகமையைப் பள்ளி வாசலுக்குக் கொடுக்க அனைவரும் சம்மதித்தனர். தோஷம் என்பது தோழம் என எழுதப்பட்டுள்ளது. |} <b>கல்வெட்டு</b> <poem>1. உஸ்வஸ்தி ஸ்ரீ 2. சாலிவாகன சகா 3. த்தம் 1705 க 4. லியாத்தம் 5. 4884 யினிமேல் செல்ல 6. ர நின்ட குரோதி u தையி 7. மீ திருனாகீசுவரம் னாகலிங்க 8. சுவாமியார் குண்டுமுலை 9. அம்மனுக்கு உள்ளூர் கடைக்காரர் அநி 10. வரும் மகமைப்பட்டையம் செ 11. யிது குடுத்தபடி பட்டையமாவது 12. நிதம் திருவிளக்கு பாத்துவர உப் 13. பிலியப்பன் கோவில் கடைமுதல் 14. வடக்குக் கடை ராவுத்தர் கடைவரை 15. ரக்கும் கடை 1க்கு நிதம் அரைக்கா 16. சு வீதம் அவரவர் கடைத் தெருவி 17. ல் மாதம் ஒருத்தர் முறையா தன் 18. டி எல்லாக் காசும் ஒருத்தர் வச </poem> <section end="21-A"/> {{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 9klm75n63q8wrs91sz231xisqtvmizi 1834723 1834722 2025-06-23T14:47:07Z மொஹமது கராம் 14681 1834723 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|42 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="21-A"/>{{center|<b>{{larger|21-A. இந்துக்களும் இஸ்லாமியர்களும்<br> இணைந்து கொடுத்த கொடை <ref>இக்கல்வெட்டை அனுப்பி உதவியவர். சு. இராசகோபால், தொல்லியல் துறை, சென்னை</ref>}}</b>}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் திருநாகேசுவரம் கிரி குஜாம்பாள் சன்னதி முன்பாக நடப்பட்டுள்ள கல். |- | காலம் || – ||கி.பி.1783 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||நவக்கிரகத் தலங்களுள் ஒன்றான திருநாகேசுவரத்தில் உள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் தங்கள் கடைகளில் மகமைப்பணம் வசூல் செய்து அம்மன் கோயிலிலும் பள்ளிவாசலிலும் விளக்கெரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு குடை மகமையைப் பள்ளி வாசலுக்குக் கொடுக்க அனைவரும் சம்மதித்தனர். தோஷம் என்பது தோழம் என எழுதப்பட்டுள்ளது. |} <b>கல்வெட்டு</b> <poem>1. உஸ்வஸ்தி ஸ்ரீ 2. சாலிவாகன சகா 3. த்தம் 1705 க 4. லியாத்தம் 5. 4884 யினிமேல் செல்ல 6. ர நின்ட குரோதி u தையி 7. மீ திருனாகீசுவரம் னாகலிங்க 8. சுவாமியார் குண்டுமுலை 9. அம்மனுக்கு உள்ளூர் கடைக்காரர் அநி 10. வரும் மகமைப்பட்டையம் செ 11. யிது குடுத்தபடி பட்டையமாவது 12. நிதம் திருவிளக்கு பாத்துவர உப் 13. பிலியப்பன் கோவில் கடைமுதல் 14. வடக்குக் கடை ராவுத்தர் கடைவரை 15. ரக்கும் கடை 1க்கு நிதம் அரைக்கா 16. சு வீதம் அவரவர் கடைத் தெருவி 17. ல் மாதம் ஒருத்தர் முறையா தன் 18. டி எல்லாக் காசும் ஒருத்தர் வச </poem> <section end="21-A"/> {{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 1n6dfmadoibshqn8bjzjnxm7ryj59cp 1834725 1834723 2025-06-23T14:47:29Z மொஹமது கராம் 14681 1834725 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|42 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="21-A"/>{{center|<b>{{larger|21-A. இந்துக்களும் இஸ்லாமியர்களும்<br> இணைந்து கொடுத்த கொடை <ref>இக்கல்வெட்டை அனுப்பி உதவியவர். சு. இராசகோபால், தொல்லியல் துறை, சென்னை</ref>}}</b>}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் திருநாகேசுவரம் கிரி குஜாம்பாள் சன்னதி முன்பாக நடப்பட்டுள்ள கல். |- | காலம் || – ||கி.பி. 1783. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||நவக்கிரகத் தலங்களுள் ஒன்றான திருநாகேசுவரத்தில் உள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் தங்கள் கடைகளில் மகமைப்பணம் வசூல் செய்து அம்மன் கோயிலிலும் பள்ளிவாசலிலும் விளக்கெரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு குடை மகமையைப் பள்ளி வாசலுக்குக் கொடுக்க அனைவரும் சம்மதித்தனர். தோஷம் என்பது தோழம் என எழுதப்பட்டுள்ளது. |} <b>கல்வெட்டு</b> <poem>1. உஸ்வஸ்தி ஸ்ரீ 2. சாலிவாகன சகா 3. த்தம் 1705 க 4. லியாத்தம் 5. 4884 யினிமேல் செல்ல 6. ர நின்ட குரோதி u தையி 7. மீ திருனாகீசுவரம் னாகலிங்க 8. சுவாமியார் குண்டுமுலை 9. அம்மனுக்கு உள்ளூர் கடைக்காரர் அநி 10. வரும் மகமைப்பட்டையம் செ 11. யிது குடுத்தபடி பட்டையமாவது 12. நிதம் திருவிளக்கு பாத்துவர உப் 13. பிலியப்பன் கோவில் கடைமுதல் 14. வடக்குக் கடை ராவுத்தர் கடைவரை 15. ரக்கும் கடை 1க்கு நிதம் அரைக்கா 16. சு வீதம் அவரவர் கடைத் தெருவி 17. ல் மாதம் ஒருத்தர் முறையா தன் 18. டி எல்லாக் காசும் ஒருத்தர் வச </poem> <section end="21-A"/> {{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 32e7bmdb1lq9jnk1la34bjpxyz03eut 1834862 1834725 2025-06-24T05:51:46Z ஹர்ஷியா பேகம் 15001 1834862 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|42 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="21-A"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|21-A. இந்துக்களும் இஸ்லாமியர்களும்<br> இணைந்து கொடுத்த கொடை*<ref>*இக்கல்வெட்டை அனுப்பி உதவியவர். சு. இராசகோபால், தொல்லியல் துறை, சென்னை</ref>}}</b>}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் திருநாகேசுவரம் கிரி குஜாம்பாள் சன்னதி முன்பாக நடப்பட்டுள்ள கல். |- | காலம் || – ||கி.பி. 1783. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||நவக்கிரகத் தலங்களுள் ஒன்றான திருநாகேசுவரத்தில் உள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் தங்கள் கடைகளில் மகமைப்பணம் வசூல் செய்து அம்மன் கோயிலிலும் பள்ளிவாசலிலும் விளக்கெரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு குடை மகமையைப் பள்ளி வாசலுக்குக் கொடுக்க அனைவரும் சம்மதித்தனர். தோஷம் என்பது தோழம் என எழுதப்பட்டுள்ளது. |} <b>கல்வெட்டு</b> <poem> 1. உஸ்வஸ்தி ஸ்ரீ 2. சாலிவாகன சகா 3. த்தம் 1705 க 4. லியாத்தம் 5. 4884 யினிமேல் செல்ல 6. ர நின்ட குரோதி u தையி 7. மீ திருனாகீசுவரம் னாகலிங்க 8. சுவாமியார் குண்டுமுலை 9. அம்மனுக்கு உள்ளூர் கடைக்காரர் அநி 10. வரும் மகமைப்பட்டையம் செ 11. யிது குடுத்தபடி பட்டையமாவது 12. நிதம் திருவிளக்கு பாத்துவர உப் 13. பிலியப்பன் கோவில் கடைமுதல் 14. வடக்குக் கடை ராவுத்தர் கடைவரை 15. ரக்கும் கடை 1க்கு நிதம் அரைக்கா 16. சு வீதம் அவரவர் கடைத் தெருவி 17. ல் மாதம் ஒருத்தர் முறையா தன் 18. டி எல்லாக் காசும் ஒருத்தர் வச </poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> auajobz7zso2s87ssgz7jvpnjkltwys பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/45 250 489026 1834729 1834604 2025-06-23T14:51:49Z மொஹமது கராம் 14681 1834729 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|44 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="22"/> {{center|<b>{{larger|22. அக்கிரகாரத்தில் கிணறு வெட்டிய ஷேக் முசாமியார் <ref>Annual Report on Epigraphy 56 of 1909.<br>தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 26 எண்: 58;<br>இதற்கு பெர்சியன்மொழிக் கல்வெட்டு உண்டு.<br> ARE 138 of 1967; South Indian Inscription Vol X 780.</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||சென்னை, பல்லாவரம் அக்கிரகாரத்தில் உள்ள கிணற்றின் அருகேயுள்ள கல்வெட்டு. |- | காலம் || - ||பிரமாதிச வருடம், ஆவணி மாதம் 15; கி.பி. 1733. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||பல்லாவரம் அக்கிரகாரத்திற்கு “அவுளம்மா சமுத்திரம்” என்று பெயர். அங்கு வசிக்கும் அய்யங்கார்களுக்கு தர்மக் கிணறு ஒன்றை சேகு அலாவுதீன் குமாரர் சேகு, முசாமியார் வெட்டிக் கொடுத்தார். கிணறு வெட்டும் இடத்தையும் அய்யங்கார்களிடம் விலை கொடுத்து வாங்கிக் கிணறு வெட்டிய செய்தி இக்கல்வெட்டில் கூறப்படுகிறது. இது மிக மிக அரிய செயலாகும். |} <b>கல்வெட்டு</b> <poem> 1. பிறமாதிச வருஷம் ஆவணி மாதம் 15 2. அகரம் பல்லாபுரத்துக்கு பிறதி னா 3. மமான அவுபளம்ம சமுத்திரத்தி 4. ல் யிசமானர் முதலான அசேஷ 5. வித்துவ சென அய்யங்கார்கள் 6. சேகு அலாவுத்தீன் குமாரன் சே 7. கு முசாமியரவர்களுக்குப் பிறத் 8. தெரு ரெட்டைத்தெருவில் கண 9. க்குப்பிள்ளைகள் வீட்டுக்குக் கிழ 10. க்கு வடவண்டை வாசல்ப் பிறத் 11. தில் கிழக்கு மேற்கு இருபதடியு 12. ம் தெற்கு வடக்கு யிருபதடியு 13. ம் உமக்கு தற்மமாகக் கிணத்துக்குக் 14. கிறையமாகக் கொடுத்து னா 15. ங்கள் வாங்கிக் கொண்ட 16. பணம் ரெண்டு இந்தப்பண 17. ம் ரெண்டும் நாங்கள் வாங்கி 18. க் கொண்டு தற்மகிணத்து 19. க்கு தெற்கு வடக்கு இருபதடியு 20. ம் கிழக்கு மேற்கு இருபதடியு 21. ம் உமக்கு ஆச்சந்திரார்க் 22. கமாக இந்தப் பண்ணயம் </poem><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 7oq595wmagqdsi9dez88kzqunu8oenj 1834730 1834729 2025-06-23T14:52:18Z மொஹமது கராம் 14681 1834730 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|44 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="22"/> {{center|<b>{{larger|22. அக்கிரகாரத்தில் கிணறு வெட்டிய ஷேக் முசாமியார் <ref>Annual Report on Epigraphy 56 of 1909.<br>தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 26 எண்: 58;<br>இதற்கு பெர்சியன்மொழிக் கல்வெட்டு உண்டு.<br> ARE 138 of 1967; South Indian Inscription Vol X 780.</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||சென்னை, பல்லாவரம் அக்கிரகாரத்தில் உள்ள கிணற்றின் அருகேயுள்ள கல்வெட்டு. |- | காலம் || – ||பிரமாதிச வருடம், ஆவணி மாதம் 15; கி.பி. 1733. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||பல்லாவரம் அக்கிரகாரத்திற்கு “அவுளம்மா சமுத்திரம்” என்று பெயர். அங்கு வசிக்கும் அய்யங்கார்களுக்கு தர்மக் கிணறு ஒன்றை சேகு அலாவுதீன் குமாரர் சேகு, முசாமியார் வெட்டிக் கொடுத்தார். கிணறு வெட்டும் இடத்தையும் அய்யங்கார்களிடம் விலை கொடுத்து வாங்கிக் கிணறு வெட்டிய செய்தி இக்கல்வெட்டில் கூறப்படுகிறது. இது மிக மிக அரிய செயலாகும். |} <b>கல்வெட்டு</b> <poem> 1. பிறமாதிச வருஷம் ஆவணி மாதம் 15 2. அகரம் பல்லாபுரத்துக்கு பிறதி னா 3. மமான அவுபளம்ம சமுத்திரத்தி 4. ல் யிசமானர் முதலான அசேஷ 5. வித்துவ சென அய்யங்கார்கள் 6. சேகு அலாவுத்தீன் குமாரன் சே 7. கு முசாமியரவர்களுக்குப் பிறத் 8. தெரு ரெட்டைத்தெருவில் கண 9. க்குப்பிள்ளைகள் வீட்டுக்குக் கிழ 10. க்கு வடவண்டை வாசல்ப் பிறத் 11. தில் கிழக்கு மேற்கு இருபதடியு 12. ம் தெற்கு வடக்கு யிருபதடியு 13. ம் உமக்கு தற்மமாகக் கிணத்துக்குக் 14. கிறையமாகக் கொடுத்து னா 15. ங்கள் வாங்கிக் கொண்ட 16. பணம் ரெண்டு இந்தப்பண 17. ம் ரெண்டும் நாங்கள் வாங்கி 18. க் கொண்டு தற்மகிணத்து 19. க்கு தெற்கு வடக்கு இருபதடியு 20. ம் கிழக்கு மேற்கு இருபதடியு 21. ம் உமக்கு ஆச்சந்திரார்க் 22. கமாக இந்தப் பண்ணயம் </poem><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> bs2d0e4q2trvezqowk2rjbnypcfd1pi 1834767 1834730 2025-06-23T18:56:44Z ஹர்ஷியா பேகம் 15001 1834767 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|44 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="22"/> {{center|<b>{{larger|22. அக்கிரகாரத்தில் கிணறு வெட்டிய ஷேக் முசாமியார் <ref>Annual Report on Epigraphy 56 of 1909.<br>தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 26 எண்: 58;<br>இதற்கு பெர்சியன்மொழிக் கல்வெட்டு உண்டு.<br> ARE 138 of 1967; South Indian Inscription Vol X 780.</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||சென்னை, பல்லாவரம் அக்கிரகாரத்தில் உள்ள கிணற்றின் அருகேயுள்ள கல்வெட்டு. |- | காலம் || – ||பிரமாதிச வருடம், ஆவணி மாதம் 15; கி.பி. 1733. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||பல்லாவரம் அக்கிரகாரத்திற்கு “அவுளம்மா சமுத்திரம்” என்று பெயர். அங்கு வசிக்கும் அய்யங்கார்களுக்கு தர்மக் கிணறு ஒன்றை சேகு அலாவுதீன் குமாரர் சேகு, முசாமியார் வெட்டிக் கொடுத்தார். கிணறு வெட்டும் இடத்தையும் அய்யங்கார்களிடம் விலை கொடுத்து வாங்கிக் கிணறு வெட்டிய செய்தி இக்கல்வெட்டில் கூறப்படுகிறது. இது மிக மிக அரிய செயலாகும். |} <b>கல்வெட்டு</b> <poem> 1. பிறமாதிச வருஷம் ஆவணி மாதம் 15 2. அகரம் பல்லாபுரத்துக்கு பிறதி னா 3. மமான அவுபளம்ம சமுத்திரத்தி 4. ல் யிசமானர் முதலான அசேஷ 5. வித்துவ சென அய்யங்கார்கள் 6. சேகு அலாவுத்தீன் குமாரன் சே 7. கு முசாமியரவர்களுக்குப் பிறத் 8. தெரு ரெட்டைத்தெருவில் கண 9. க்குப்பிள்ளைகள் வீட்டுக்குக் கிழ 10. க்கு வடவண்டை வாசல்ப் பிறத் 11. தில் கிழக்கு மேற்கு இருபதடியு 12. ம் தெற்கு வடக்கு யிருபதடியு 13. ம் உமக்கு தற்மமாகக் கிணத்துக்குக் 14. கிறையமாகக் கொடுத்து னா 15. ங்கள் வாங்கிக் கொண்ட 16. பணம் ரெண்டு இந்தப்பண 17. ம் ரெண்டும் நாங்கள் வாங்கி 18. க் கொண்டு தற்மகிணத்து 19. க்கு தெற்கு வடக்கு இருபதடியு 20. ம் கிழக்கு மேற்கு இருபதடியு 21. ம் உமக்கு ஆச்சந்திரார்க் 22. கமாக இந்தப் பண்ணயம் </poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> qphlicmde9dmqdi6850j6tynas4oqhm 1834863 1834767 2025-06-24T05:53:27Z ஹர்ஷியா பேகம் 15001 1834863 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|44 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="22"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|22. அக்கிரகாரத்தில் கிணறு வெட்டிய ஷேக் முசாமியார் <ref>Annual Report on Epigraphy 56 of 1909.<br>தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 26 எண்: 58;<br>இதற்கு பெர்சியன்மொழிக் கல்வெட்டு உண்டு.<br> ARE 138 of 1967; South Indian Inscription Vol X 780.</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||சென்னை, பல்லாவரம் அக்கிரகாரத்தில் உள்ள கிணற்றின் அருகேயுள்ள கல்வெட்டு. |- | காலம் || – ||பிரமாதிச வருடம், ஆவணி மாதம் 15; கி.பி. 1733. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||பல்லாவரம் அக்கிரகாரத்திற்கு “அவுளம்மா சமுத்திரம்” என்று பெயர். அங்கு வசிக்கும் அய்யங்கார்களுக்கு தர்மக் கிணறு ஒன்றை சேகு அலாவுதீன் குமாரர் சேகு, முசாமியார் வெட்டிக் கொடுத்தார். கிணறு வெட்டும் இடத்தையும் அய்யங்கார்களிடம் விலை கொடுத்து வாங்கிக் கிணறு வெட்டிய செய்தி இக்கல்வெட்டில் கூறப்படுகிறது. இது மிக மிக அரிய செயலாகும். |} <b>கல்வெட்டு</b> <poem> 1. பிறமாதிச வருஷம் ஆவணி மாதம் 15 2. அகரம் பல்லாபுரத்துக்கு பிறதி னா 3. மமான அவுபளம்ம சமுத்திரத்தி 4. ல் யிசமானர் முதலான அசேஷ 5. வித்துவ சென அய்யங்கார்கள் 6. சேகு அலாவுத்தீன் குமாரன் சே 7. கு முசாமியரவர்களுக்குப் பிறத் 8. தெரு ரெட்டைத்தெருவில் கண 9. க்குப்பிள்ளைகள் வீட்டுக்குக் கிழ 10. க்கு வடவண்டை வாசல்ப் பிறத் 11. தில் கிழக்கு மேற்கு இருபதடியு 12. ம் தெற்கு வடக்கு யிருபதடியு 13. ம் உமக்கு தற்மமாகக் கிணத்துக்குக் 14. கிறையமாகக் கொடுத்து னா 15. ங்கள் வாங்கிக் கொண்ட 16. பணம் ரெண்டு இந்தப்பண 17. ம் ரெண்டும் நாங்கள் வாங்கி 18. க் கொண்டு தற்மகிணத்து 19. க்கு தெற்கு வடக்கு இருபதடியு 20. ம் கிழக்கு மேற்கு இருபதடியு 21. ம் உமக்கு ஆச்சந்திரார்க் 22. கமாக இந்தப் பண்ணயம் </poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> k5fkakwyrvb3gn1d4f1fser1svqwgvs 1834884 1834863 2025-06-24T06:35:47Z ஹர்ஷியா பேகம் 15001 1834884 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|44 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="22"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|22. அக்கிரகாரத்தில் கிணறு வெட்டிய ஷேக் முசாமியார்* <ref>Annual Report on Epigraphy 56 of 1909.<br>தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 26 எண்: 58;<br>இதற்கு பெர்சியன்மொழிக் கல்வெட்டு உண்டு.<br> ARE 138 of 1967; South Indian Inscription Vol X 780.</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||சென்னை, பல்லாவரம் அக்கிரகாரத்தில் உள்ள கிணற்றின் அருகேயுள்ள கல்வெட்டு. |- | காலம் || – ||பிரமாதிச வருடம், ஆவணி மாதம் 15; கி.பி. 1733. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||பல்லாவரம் அக்கிரகாரத்திற்கு “அவுளம்மா சமுத்திரம்” என்று பெயர். அங்கு வசிக்கும் அய்யங்கார்களுக்கு தர்மக் கிணறு ஒன்றை சேகு அலாவுதீன் குமாரர் சேகு, முசாமியார் வெட்டிக் கொடுத்தார். கிணறு வெட்டும் இடத்தையும் அய்யங்கார்களிடம் விலை கொடுத்து வாங்கிக் கிணறு வெட்டிய செய்தி இக்கல்வெட்டில் கூறப்படுகிறது. இது மிக மிக அரிய செயலாகும். |} <b>கல்வெட்டு</b> <poem> 1. பிறமாதிச வருஷம் ஆவணி மாதம் 15 2. அகரம் பல்லாபுரத்துக்கு பிறதி னா 3. மமான அவுபளம்ம சமுத்திரத்தி 4. ல் யிசமானர் முதலான அசேஷ 5. வித்துவ சென அய்யங்கார்கள் 6. சேகு அலாவுத்தீன் குமாரன் சே 7. கு முசாமியரவர்களுக்குப் பிறத் 8. தெரு ரெட்டைத்தெருவில் கண 9. க்குப்பிள்ளைகள் வீட்டுக்குக் கிழ 10. க்கு வடவண்டை வாசல்ப் பிறத் 11. தில் கிழக்கு மேற்கு இருபதடியு 12. ம் தெற்கு வடக்கு யிருபதடியு 13. ம் உமக்கு தற்மமாகக் கிணத்துக்குக் 14. கிறையமாகக் கொடுத்து னா 15. ங்கள் வாங்கிக் கொண்ட 16. பணம் ரெண்டு இந்தப்பண 17. ம் ரெண்டும் நாங்கள் வாங்கி 18. க் கொண்டு தற்மகிணத்து 19. க்கு தெற்கு வடக்கு இருபதடியு 20. ம் கிழக்கு மேற்கு இருபதடியு 21. ம் உமக்கு ஆச்சந்திரார்க் 22. கமாக இந்தப் பண்ணயம் </poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 0p6yiva3i67x1mzshv0rvwdpy05642d பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/47 250 489028 1834732 1834598 2025-06-23T14:54:33Z மொஹமது கராம் 14681 1834732 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|46 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="23"/>{{center|<b>{{larger|23. கிணறும் குளமும் வெட்டிய அசன்கான் <ref>Annual Report on Epigraphy 142(D) of 1971</ref>}}</b>}} சென்னை மயிலாப்பூரில் பாட்ஷா பாக் என்னும் இடத்தில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் உபதேச மேடையருகில் ஒரு கல் உள்ளது. அதில் ஹிஜ்ரி 1135ஆம் ஆண்டு (கி.பி. 1722-23) எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அசன்கான் என்பவர் அவ்வாண்டில் கிணறும் குளமும் அமைத்த செய்தி கூறப்படுகிறது. {{dhr|2em}} {{center|⬤ ❖ ⬤}} <section end="33"/> <section end="23"/> <section begin="24"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|24. கால்வாய் வெட்டிய ஆர்க்காடு நவாப் <ref>Annual Report on Epigraphy 110 of 1955</ref>}}</b>}} ஹிஜ்ரி 1205ஆம் ஆண்டு (கி.பி. 1790-91) ஆர்க்காடு நவாப் வாலாஜா பாசன வசதிக்காகக் கால்வாய் ஒன்றை வெட்டினார். அக்கால்வாய் நவாப் பெயரால் ‘வாலாஜா கால்வாய்’ என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. <section end="24"/> {{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 61j1k3qj0xr61zov0kyhio6dp5ho6kz 1834733 1834732 2025-06-23T14:56:22Z மொஹமது கராம் 14681 1834733 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|46 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="23"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|23. கிணறும் குளமும் வெட்டிய அசன்கான்<ref>Annual Report on Epigraphy 142(D) of 1971</ref></b>}}}} சென்னை மயிலாப்பூரில் பாட்ஷா பாக் என்னும் இடத்தில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் உபதேச மேடையருகில் ஒரு கல் உள்ளது. அதில் ஹிஜ்ரி 1135 ஆம் ஆண்டு (கி.பி. 1722-23) எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அசன்கான் என்பவர் அவ்வாண்டில் கிணறும் குளமும் அமைத்த செய்தி கூறப்படுகிறது. {{dhr|2em}} {{center|⬤ ❖ ⬤}} <section end="23"/> <section begin="24"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|24. கால்வாய் வெட்டிய ஆர்க்காடு நவாப்<ref>Annual Report on Epigraphy 110 of 1955</ref></b>}}}} ஹிஜ்ரி 1205 ஆம் ஆண்டு (கி.பி. 1790-91) ஆர்க்காடு நவாப் வாலாஜா பாசன வசதிக்காகக் கால்வாய் ஒன்றை வெட்டினார். அக்கால்வாய் நவாப் பெயரால் ‘வாலாஜா கால்வாய்’ என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. ####{{nop}} <section end="24"/><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 3o56ywpajv1f58ufbo5lag33v9676va 1834734 1834733 2025-06-23T14:56:46Z மொஹமது கராம் 14681 1834734 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|46 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="23"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|23. கிணறும் குளமும் வெட்டிய அசன்கான்<ref>Annual Report on Epigraphy 142(D) of 1971</ref></b>}}}} சென்னை மயிலாப்பூரில் பாட்ஷா பாக் என்னும் இடத்தில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் உபதேச மேடையருகில் ஒரு கல் உள்ளது. அதில் ஹிஜ்ரி 1135 ஆம் ஆண்டு (கி.பி. 1722-23) எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அசன்கான் என்பவர் அவ்வாண்டில் கிணறும் குளமும் அமைத்த செய்தி கூறப்படுகிறது. {{dhr|2em}} {{center|⬤ ❖ ⬤}} <section end="23"/> <section begin="24"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|24. கால்வாய் வெட்டிய ஆர்க்காடு நவாப்<ref>Annual Report on Epigraphy 110 of 1955</ref></b>}}}} ஹிஜ்ரி 1205 ஆம் ஆண்டு (கி.பி. 1790-91) ஆர்க்காடு நவாப் வாலாஜா பாசன வசதிக்காகக் கால்வாய் ஒன்றை வெட்டினார். அக்கால்வாய் நவாப் பெயரால் ‘வாலாஜா கால்வாய்’ என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. <section end="24"/>{{nop}} <section end="24"/><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> gzt57qqmuayohauo46q9rmmai4l4xpw 1834768 1834734 2025-06-23T18:59:09Z ஹர்ஷியா பேகம் 15001 1834768 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|46 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="23"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|23. கிணறும் குளமும் வெட்டிய அசன்கான்<ref>Annual Report on Epigraphy 142(D) of 1971</ref></b>}}}} சென்னை மயிலாப்பூரில் பாட்ஷா பாக் என்னும் இடத்தில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் உபதேச மேடையருகில் ஒரு கல் உள்ளது. அதில் ஹிஜ்ரி 1135 ஆம் ஆண்டு (கி.பி. 1722-23) எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அசன்கான் என்பவர் அவ்வாண்டில் கிணறும் குளமும் அமைத்த செய்தி கூறப்படுகிறது. {{dhr|2em}} {{center|⬤ ❖ ⬤}} <section begin="24"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|24. கால்வாய் வெட்டிய ஆர்க்காடு நவாப்<ref>Annual Report on Epigraphy 110 of 1955</ref></b>}}}} ஹிஜ்ரி 1205 ஆம் ஆண்டு (கி.பி. 1790-91) ஆர்க்காடு நவாப் வாலாஜா பாசன வசதிக்காகக் கால்வாய் ஒன்றை வெட்டினார். அக்கால்வாய் நவாப் பெயரால் ‘வாலாஜா கால்வாய்’ என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> fwnjwx25izohmgbzugui6o69d3oksc0 1834864 1834768 2025-06-24T05:55:48Z ஹர்ஷியா பேகம் 15001 1834864 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|46 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="23"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|23. கிணறும் குளமும் வெட்டிய அசன்கான்<ref>Annual Report on Epigraphy 142(D) of 1971</ref></b>}}}} சென்னை மயிலாப்பூரில் பாட்ஷா பாக் என்னும் இடத்தில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் உபதேச மேடையருகில் ஒரு கல் உள்ளது. அதில் ஹிஜ்ரி 1135 ஆம் ஆண்டு (கி.பி. 1722-23) எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அசன்கான் என்பவர் அவ்வாண்டில் கிணறும் குளமும் அமைத்த செய்தி கூறப்படுகிறது. {{dhr|2em}} {{center|⬤ ❖ ⬤}} <section end="23"/><section begin="24"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|24. கால்வாய் வெட்டிய ஆர்க்காடு நவாப்<ref>Annual Report on Epigraphy 110 of 1955</ref></b>}}}} ஹிஜ்ரி 1205 ஆம் ஆண்டு (கி.பி. 1790-91) ஆர்க்காடு நவாப் வாலாஜா பாசன வசதிக்காகக் கால்வாய் ஒன்றை வெட்டினார். அக்கால்வாய் நவாப் பெயரால் ‘வாலாஜா கால்வாய்’ என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. <section end="24"/>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> of2l9qhczzpoaftmvkksfqh4rjmryhg 1834867 1834864 2025-06-24T05:56:44Z ஹர்ஷியா பேகம் 15001 1834867 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|46 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="23"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|23. கிணறும் குளமும் வெட்டிய அசன்கான்<ref>Annual Report on Epigraphy 142(D) of 1971</ref></b>}}}} சென்னை மயிலாப்பூரில் பாட்ஷா பாக் என்னும் இடத்தில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் உபதேச மேடையருகில் ஒரு கல் உள்ளது. அதில் ஹிஜ்ரி 1135 ஆம் ஆண்டு (கி.பி. 1722-23) எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அசன்கான் என்பவர் அவ்வாண்டில் கிணறும் குளமும் அமைத்த செய்தி கூறப்படுகிறது. {{dhr|2em}} {{center|⬤ ❖ ⬤}} <section end="23"/> <section begin="24"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|24. கால்வாய் வெட்டிய ஆர்க்காடு நவாப்<ref>Annual Report on Epigraphy 110 of 1955</ref></b>}}}} ஹிஜ்ரி 1205 ஆம் ஆண்டு (கி.பி. 1790-91) ஆர்க்காடு நவாப் வாலாஜா பாசன வசதிக்காகக் கால்வாய் ஒன்றை வெட்டினார். அக்கால்வாய் நவாப் பெயரால் ‘வாலாஜா கால்வாய்’ என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. <section end="24"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> ncjw7x0k7e6xamcg60xaj5z568c8mn4 1834868 1834867 2025-06-24T05:57:24Z ஹர்ஷியா பேகம் 15001 1834868 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|46 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="23"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|23. கிணறும் குளமும் வெட்டிய அசன்கான்*<ref>*Annual Report on Epigraphy 142(D) of 1971</ref></b>}}}} சென்னை மயிலாப்பூரில் பாட்ஷா பாக் என்னும் இடத்தில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் உபதேச மேடையருகில் ஒரு கல் உள்ளது. அதில் ஹிஜ்ரி 1135 ஆம் ஆண்டு (கி.பி. 1722-23) எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அசன்கான் என்பவர் அவ்வாண்டில் கிணறும் குளமும் அமைத்த செய்தி கூறப்படுகிறது. {{dhr|2em}} {{center|⬤ ❖ ⬤}} <section end="23"/> <section begin="24"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|24. கால்வாய் வெட்டிய ஆர்க்காடு நவாப்*<ref>*Annual Report on Epigraphy 110 of 1955</ref></b>}}}} ஹிஜ்ரி 1205 ஆம் ஆண்டு (கி.பி. 1790-91) ஆர்க்காடு நவாப் வாலாஜா பாசன வசதிக்காகக் கால்வாய் ஒன்றை வெட்டினார். அக்கால்வாய் நவாப் பெயரால் ‘வாலாஜா கால்வாய்’ என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. <section end="24"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> sv7alk8u3i0rveskqc4c3zb5kgksard 1834925 1834868 2025-06-24T07:25:15Z Info-farmer 232 <section end="6"/> {{nop}} 1834925 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|46 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="5"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|23. கிணறும் குளமும் வெட்டிய அசன்கான்*<ref>*Annual Report on Epigraphy 142(D) of 1971</ref></b>}}}} சென்னை மயிலாப்பூரில் பாட்ஷா பாக் என்னும் இடத்தில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் உபதேச மேடையருகில் ஒரு கல் உள்ளது. அதில் ஹிஜ்ரி 1135 ஆம் ஆண்டு (கி.பி. 1722-23) எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அசன்கான் என்பவர் அவ்வாண்டில் கிணறும் குளமும் அமைத்த செய்தி கூறப்படுகிறது. {{dhr|2em}} {{center|⬤ ❖ ⬤}} <section end="5"/><section begin="6"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|24. கால்வாய் வெட்டிய ஆர்க்காடு நவாப்*<ref>*Annual Report on Epigraphy 110 of 1955</ref></b>}}}} ஹிஜ்ரி 1205 ஆம் ஆண்டு (கி.பி. 1790-91) ஆர்க்காடு நவாப் வாலாஜா பாசன வசதிக்காகக் கால்வாய் ஒன்றை வெட்டினார். அக்கால்வாய் நவாப் பெயரால் ‘வாலாஜா கால்வாய்’ என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. <section end="6"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 1s1xm0qhp1fi42xoms79zsiqffr3jwe பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/48 250 489029 1834738 1834607 2025-06-23T15:03:45Z மொஹமது கராம் 14681 1834738 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 47}} {{rule}}</noinclude><section begin="25"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|25. கால்வாய் வெட்டிய சையத் ஷா மொயினுதீன் <ref>‘ஆவணம்’ 10, 1999; பக்கம் 91; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ள கிள்ளை என்ற கிராமத்தில் உள்ள பக்கிரி வாய்க்கால் மதகுக் கல்வெட்டு |- | காலம் || – ||கி.பி. 1875, மே மாதம் 10. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||சையத் ஷா மொயினுதீன் பார்ஷா சாயபு என்பவர் தன் முன்னோர் ஹஜரத் சையத் ஷா ரகமதுல்லா சாயபு தன் மானிய நிலங்களுக்குப் பாசன வசதி பெற வாய்க்காலையும் மதகையும் சொந்தப் பணத்தில் அமைத்ததை மீண்டும் புதுப்பித்த செய்தி கூறப்படுகிறது. இவ்வாய்க்கால் ராஜா வாய்க்கால் பாயமான் பிரிவில் தொடங்கி பாசனத்துக்குப் பயன்பட்டு வெள்ளாற்றில் கலக்கிறது. மக்கள் இவ்வாய்க்காலை பக்கிரி வாய்க்கால் என்றே இன்றும் அழைக்கின்றனர். மொயினுதீன் மகன் சையத் ஷா உயாம் 1905ல் வாரிசு இல்லாமல் இறந்தார். நீதிமன்ற ஆணைப்படி அறங்காவலர் வசம் நிலங்கள் உள்ளன. |} <b>கல்வெட்டு</b> <poem> 1. ஹஜரத் சைய்யத் ஷா ரகமதுல்லா சாயபுக்கு கிள்ளையிலிறு 2. க்கப்பட்ட தன் இனாம் நிலங்களில் பாய்ச்சலுக்கு ஆதியி 3. ல் சொந்தத்தில் பணம் போட்டு வாய்க்கால் 4. வெட்டி இந்த மதகும் கட்டினார் மதகு சி 5. கஸ்தாய் போனபடியால் மறுபடி மேற்படியா 6. றுடைய 4வது தலைமுறை பேரப்பிள்ளை சையது 7. ஷா மொயினுதீன் பார்ஸா சாயா தன் சொந் 8. தப்பணம் சிலவு செய்து இந்த மதகை அஸ்த்தியா 9. ரமும் புதிதாய்க் கட்டினார் 1875 வருஷம் 10. மே மாதம் 10 தேதி</poem> <section end="25"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 2zp4vm36693j6o969zsgcy15lydm9fe 1834870 1834738 2025-06-24T05:58:31Z ஹர்ஷியா பேகம் 15001 1834870 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 47}} {{rule}}</noinclude><section begin="25"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|25. கால்வாய் வெட்டிய சையத் ஷா மொயினுதீன்* <ref>*‘ஆவணம்’ 10, 1999; பக்கம் 91; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ள கிள்ளை என்ற கிராமத்தில் உள்ள பக்கிரி வாய்க்கால் மதகுக் கல்வெட்டு |- | காலம் || – ||கி.பி. 1875, மே மாதம் 10. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||சையத் ஷா மொயினுதீன் பார்ஷா சாயபு என்பவர் தன் முன்னோர் ஹஜரத் சையத் ஷா ரகமதுல்லா சாயபு தன் மானிய நிலங்களுக்குப் பாசன வசதி பெற வாய்க்காலையும் மதகையும் சொந்தப் பணத்தில் அமைத்ததை மீண்டும் புதுப்பித்த செய்தி கூறப்படுகிறது. இவ்வாய்க்கால் ராஜா வாய்க்கால் பாயமான் பிரிவில் தொடங்கி பாசனத்துக்குப் பயன்பட்டு வெள்ளாற்றில் கலக்கிறது. மக்கள் இவ்வாய்க்காலை பக்கிரி வாய்க்கால் என்றே இன்றும் அழைக்கின்றனர். மொயினுதீன் மகன் சையத் ஷா உயாம் 1905ல் வாரிசு இல்லாமல் இறந்தார். நீதிமன்ற ஆணைப்படி அறங்காவலர் வசம் நிலங்கள் உள்ளன. |} <b>கல்வெட்டு</b> <poem> 1. ஹஜரத் சைய்யத் ஷா ரகமதுல்லா சாயபுக்கு கிள்ளையிலிறு 2. க்கப்பட்ட தன் இனாம் நிலங்களில் பாய்ச்சலுக்கு ஆதியி 3. ல் சொந்தத்தில் பணம் போட்டு வாய்க்கால் 4. வெட்டி இந்த மதகும் கட்டினார் மதகு சி 5. கஸ்தாய் போனபடியால் மறுபடி மேற்படியா 6. றுடைய 4வது தலைமுறை பேரப்பிள்ளை சையது 7. ஷா மொயினுதீன் பார்ஸா சாயா தன் சொந் 8. தப்பணம் சிலவு செய்து இந்த மதகை அஸ்த்தியா 9. ரமும் புதிதாய்க் கட்டினார் 1875 வருஷம் 10. மே மாதம் 10 தேதி</poem> <section end="25"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> hb5jk1v74k96n2hlwaxo8rwou2k5nqv பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/49 250 489030 1834740 1834611 2025-06-23T15:04:53Z மொஹமது கராம் 14681 1834740 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|48 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="26"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|26. கண்மாய் மடைக்கல் அமைத்த வத்தலை ராவுத்தர்<ref>Annual Report on Epigraphy 157 of 1974</ref></b>}}}} மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடியில் நத்தம் லிங்கைய நாயக்கரின் காரியத்துக்குக் கர்த்தராக இருந்தவர் வத்தலை ராவுத்தர். கருங்காலக்குடியில் வயலிப்பாறை என்னும் பகுதியில் உள்ள கண்மாயில் நீர்ப்பாசன வசதிக்காக மடை ஒன்றை வத்தலை ராவுத்தர் அமைத்தார். அவர் கட்டிய மடைக்கல்லிலேயே இக்கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. இவர் கி.பி. 17ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் வாழ்ந்தவர். அமைக்கப்பட்ட குளத்தின் பெயர் வயலிக்குளம். <b>கல்வெட்டு</b> <poem>1. வத்தலை 2. ராவுத்தர் 3. தந்த ம 4. டை </poem> <section end="26"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> fggeoe5xxgfln368susjnmovgn6hmbp 1834871 1834740 2025-06-24T05:59:08Z ஹர்ஷியா பேகம் 15001 1834871 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|48 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="26"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|26. கண்மாய் மடைக்கல் அமைத்த வத்தலை ராவுத்தர்<ref>*Annual Report on Epigraphy 157 of 1974</ref></b>}}}} மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடியில் நத்தம் லிங்கைய நாயக்கரின் காரியத்துக்குக் கர்த்தராக இருந்தவர் வத்தலை ராவுத்தர். கருங்காலக்குடியில் வயலிப்பாறை என்னும் பகுதியில் உள்ள கண்மாயில் நீர்ப்பாசன வசதிக்காக மடை ஒன்றை வத்தலை ராவுத்தர் அமைத்தார். அவர் கட்டிய மடைக்கல்லிலேயே இக்கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. இவர் கி.பி. 17ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் வாழ்ந்தவர். அமைக்கப்பட்ட குளத்தின் பெயர் வயலிக்குளம். <b>கல்வெட்டு</b> <poem>1. வத்தலை 2. ராவுத்தர் 3. தந்த ம 4. டை </poem> <section end="26"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> oyt27p1r95iye5of4ulop07qc643tl4 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/50 250 489031 1834744 1834620 2025-06-23T15:07:39Z மொஹமது கராம் 14681 1834744 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 49}} {{rule}}</noinclude><section begin="27"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|27. குளத்தில் மதகு அமைத்த பத்ரே ஆலம் <ref>*‘ஆவணம்’ 12 சூலை 2001, தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு. பக்78</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||திருச்சிரப்பள்ளி மாவட்டம், நாவலூர் குட்டப்பட்டு என்னும் ஊரில் உள்ள பெரிய குளம், பாப்பன்குளம் ஆகிய இரு குளங்களிலும் குமிழியில் உள்ள கல்வெட்டு (குமிழி - மதகு) |- | காலம் || – ||ஹிஜ்ரி 1166; கி.பி. 1746. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||குமிழிக் கல்லில் நிலவின் சின்னமும் அரபு மொழியில் ‘பத்ரே ஆலயம்’ என எழுதப்பட்டுள்ளது. ‘பத்ரே ஆலயம்’ என்பவர் இக்குமிழிகளை அமைத்துள்ளார். |} <b>கல்வெட்டு</b> <poem> 1. ஹிஜ்ரி 2. 1166 3. பத்ரே ஆலயம் </poem> {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 50 |bSize = 425 |cWidth = 248 |cHeight = 252 |oTop = 276 |oLeft = 98 |Location = center |Description = }} <section end="27"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}} 4</noinclude> 9yfd04zluaxvkkkwzuxqhf7qt6mha0p 1834873 1834744 2025-06-24T06:00:24Z ஹர்ஷியா பேகம் 15001 1834873 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 49}} {{rule}}</noinclude><section begin="27"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|27. குளத்தில் மதகு அமைத்த பத்ரே ஆலம்*<ref>*‘ஆவணம்’ 12 சூலை 2001, தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு. பக்78</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||திருச்சிரப்பள்ளி மாவட்டம், நாவலூர் குட்டப்பட்டு என்னும் ஊரில் உள்ள பெரிய குளம், பாப்பன்குளம் ஆகிய இரு குளங்களிலும் குமிழியில் உள்ள கல்வெட்டு (குமிழி - மதகு) |- | காலம் || – ||ஹிஜ்ரி 1166; கி.பி. 1746. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||குமிழிக் கல்லில் நிலவின் சின்னமும் அரபு மொழியில் ‘பத்ரே ஆலயம்’ என எழுதப்பட்டுள்ளது. ‘பத்ரே ஆலயம்’ என்பவர் இக்குமிழிகளை அமைத்துள்ளார். |} <b>கல்வெட்டு</b> <poem> 1. ஹிஜ்ரி 2. 1166 3. பத்ரே ஆலயம் </poem> {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 50 |bSize = 425 |cWidth = 248 |cHeight = 252 |oTop = 276 |oLeft = 98 |Location = center |Description = }} <section end="27"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}} 4</noinclude> o225mwzi9664s1tybripiqudtkpugwz பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/51 250 489032 1834747 1834627 2025-06-23T15:09:36Z மொஹமது கராம் 14681 1834747 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|50 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="28"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|28. ஏரிக்கு கலிங்கு கட்டிய மம்முது பாகூர் சாயபு<ref>ஆவணம் 15, ஜூலை 2004, பக் 68; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||வேலூர் நகரம், வேலூர் நகருக்குக் குடிநீர் வழங்கும் ஒட்டேரியின் மேற்கக் கலிங்கில் உள்ள கல்வெட்டு. |- | காலம் || – ||கி.பி. 1772. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||ஹஜ்ரத் மகமது பாகூர் சாயபு என்பவர் ஏரிக் கலிங்கு அமைத்ததைக் கூறுகிறது. |} <b>கல்வெட்டு</b> <poem>1. நந்தன 2. வருஷம் ஆவ 3. ணி மாதம் 20 4. தேதி அசரது ம 5. ம்மது பா 6. கூற் சா 7. யபு க 8. ட்டி வச்ச 9. கலிங் 10. கில்</poem> <section end="28"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> jwkytkzb7n4v7ndkpocnv6ij1po1vqg 1834874 1834747 2025-06-24T06:01:57Z ஹர்ஷியா பேகம் 15001 1834874 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|50 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="28"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|28. ஏரிக்கு கலிங்கு கட்டிய மம்முது பாகூர் சாயபு*<ref>*ஆவணம் 15, ஜூலை 2004, பக் 68; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||வேலூர் நகரம், வேலூர் நகருக்குக் குடிநீர் வழங்கும் ஒட்டேரியின் மேற்கக் கலிங்கில் உள்ள கல்வெட்டு. |- | காலம் || – ||கி.பி. 1772. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||ஹஜ்ரத் மகமது பாகூர் சாயபு என்பவர் ஏரிக் கலிங்கு அமைத்ததைக் கூறுகிறது. |} <b>கல்வெட்டு</b> <poem>1. நந்தன 2. வருஷம் ஆவ 3. ணி மாதம் 20 4. தேதி அசரது ம 5. ம்மது பா 6. கூற் சா 7. யபு க 8. ட்டி வச்ச 9. கலிங் 10. கில்</poem> <section end="28"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 8li8f4c48j0sra19pp9tn4e1ig5jfd7 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/52 250 489033 1834750 1834631 2025-06-23T15:11:46Z மொஹமது கராம் 14681 1834750 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 51}} {{rule}}</noinclude><section begin="29"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|29. அபூப் சகா மரைக்காயர் நிர்வாகத்தில் கட்டிய கலிங்கு <ref>மருது பாண்டிய மன்னர்கள், மீ. மனோகரன், பக்கம் 687</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டம், தொண்டி கைக்களான்குளம் கலிங்குக் கல். |- | காலம் || – || 9.11.1795; மருது பாண்டியர் திருப்பணி. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||தொண்டிப்பட்டணம் கைக்களான்குளம் கலிங்கு மருது பாண்டியரால் கட்டப்பட்டபோது, அப்பகுதிக்கு அரசு அதிகாரியாக இருந்தவர் அபூப் சகா மரைக்காயர் என்பது குறிக்கப்பட்டுள்ளது. கட்டிட கட்டிட வேலை செய்தவர் அருணாசல ஆசாரி. |} <b>கல்வெட்டு</b> <poem> 1. சிவமயம் கலியுகம் 4896 சாலிவாகன சகாப் 2. தம் 1717 இதின்மேல் செல்லாநின்ற றாகக்ஷத அற் 3. ப்பிசி மாதம் 27 சோமவாரமும் பஞ்சமியும் புநற்பூச நக்ஷத்ர 4. மும் கூடிய சுபதினத்தில் தொண்டிப்பட்டணம் கைக்களான் 5. குளம் கலிங்கு கட்டி முகிஞ்சுது ராசமானிய ரா. மருதுபாண்டி 6. யின் உபயம், அபுப்சகா மரைக்காயர் அதிகாரத்தில் கட்டி முகிஞ்சுது. 7. அருணாசல ஆசாரி கட்டி. முகிஞ்சுது </poem> <section end="29"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 1j3ludm4fvifcqk2d079h74lzjsvl04 1834878 1834750 2025-06-24T06:25:31Z ஹர்ஷியா பேகம் 15001 1834878 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 51}} {{rule}}</noinclude><section begin="29"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|29. அபூப் சகா மரைக்காயர் நிர்வாகத்தில் கட்டிய கலிங்கு* <ref>*மருது பாண்டிய மன்னர்கள், மீ. மனோகரன், பக்கம் 687</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டம், தொண்டி கைக்களான்குளம் கலிங்குக் கல். |- | காலம் || – || 9.11.1795; மருது பாண்டியர் திருப்பணி. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||தொண்டிப்பட்டணம் கைக்களான்குளம் கலிங்கு மருது பாண்டியரால் கட்டப்பட்டபோது, அப்பகுதிக்கு அரசு அதிகாரியாக இருந்தவர் அபூப் சகா மரைக்காயர் என்பது குறிக்கப்பட்டுள்ளது. கட்டிட கட்டிட வேலை செய்தவர் அருணாசல ஆசாரி. |} <b>கல்வெட்டு</b> <poem> 1. சிவமயம் கலியுகம் 4896 சாலிவாகன சகாப் 2. தம் 1717 இதின்மேல் செல்லாநின்ற றாகக்ஷத அற் 3. ப்பிசி மாதம் 27 சோமவாரமும் பஞ்சமியும் புநற்பூச நக்ஷத்ர 4. மும் கூடிய சுபதினத்தில் தொண்டிப்பட்டணம் கைக்களான் 5. குளம் கலிங்கு கட்டி முகிஞ்சுது ராசமானிய ரா. மருதுபாண்டி 6. யின் உபயம், அபுப்சகா மரைக்காயர் அதிகாரத்தில் கட்டி முகிஞ்சுது. 7. அருணாசல ஆசாரி கட்டி. முகிஞ்சுது </poem> <section end="29"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> rm6vgpg4f6z9lvodzlxs4l82ipva3mo பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/53 250 489034 1834752 1834634 2025-06-23T15:13:41Z மொஹமது கராம் 14681 1834752 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|52 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="30"/>{{center|<b>{{larger|30. வழிப்போக்கர் மண்டபம் கட்ட ஆர்க்காடு நவாப் ஆணை <ref>ஆவணம் 14, சூலை 2003, பக் 104; தமிழக தொல்லியல் கழக வெளியீடு.</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து வயிரபுரம் போகும் வழியில் உள்ள அய்யன் தோப்பு செங்கல் மண்டபம். |- | {{ts|vtt}}|காலம் || {{ts|vtt}}|– ||ஆர்க்காடு நவாப் சாததுல்லாகான் விரோதி கிறிது வருஷம் சித்திரை மாதம் முதல்தேதி. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தில் வழிப்போக்கர்கள் தங்க முத்தான் செட்டி மண்டபம் கட்டினர். |} <poem>1. ஸ்ரீ விரோதி கிறுது வருஷம் சித்திரை 2. மாதம் முதல் திண்டிவனம்.. 3. நவாபு சாதுக்துலா கான் சாயுபு 4. ...திண்டிவனம் 5. நகரம் அயின ஊரில் 6. ....வாணிய 7. கோத்திரம் 8. செட்டி குமாரன் சனா 9. தம்பி செட்டி கு 10. செட்டி தம்பி 11. முத்தப்பன் தம்பி 12. முத்தான் இந்த 13-15........ 16. புண்ணி[யம்]</poem> {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 53 |bSize = 425 |cWidth = 266 |cHeight = 120 |oTop = 426 |oLeft = 95 |Location = center |Description = }} <section end="30"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> g3fr42iqln8jxnq8yqaqay5tyxhcdb2 1834753 1834752 2025-06-23T15:13:59Z மொஹமது கராம் 14681 1834753 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|52 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="30"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|30. வழிப்போக்கர் மண்டபம் கட்ட ஆர்க்காடு நவாப் ஆணை <ref>ஆவணம் 14, சூலை 2003, பக் 104; தமிழக தொல்லியல் கழக வெளியீடு.</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து வயிரபுரம் போகும் வழியில் உள்ள அய்யன் தோப்பு செங்கல் மண்டபம். |- | {{ts|vtt}}|காலம் || {{ts|vtt}}|– ||ஆர்க்காடு நவாப் சாததுல்லாகான் விரோதி கிறிது வருஷம் சித்திரை மாதம் முதல்தேதி. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தில் வழிப்போக்கர்கள் தங்க முத்தான் செட்டி மண்டபம் கட்டினர். |} <poem>1. ஸ்ரீ விரோதி கிறுது வருஷம் சித்திரை 2. மாதம் முதல் திண்டிவனம்.. 3. நவாபு சாதுக்துலா கான் சாயுபு 4. ...திண்டிவனம் 5. நகரம் அயின ஊரில் 6. ....வாணிய 7. கோத்திரம் 8. செட்டி குமாரன் சனா 9. தம்பி செட்டி கு 10. செட்டி தம்பி 11. முத்தப்பன் தம்பி 12. முத்தான் இந்த 13-15........ 16. புண்ணி[யம்]</poem> {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 53 |bSize = 425 |cWidth = 266 |cHeight = 120 |oTop = 426 |oLeft = 95 |Location = center |Description = }} <section end="30"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 4v7eulwelu2nwnkdfsnbbe679gq8cni 1834879 1834753 2025-06-24T06:26:21Z ஹர்ஷியா பேகம் 15001 1834879 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|52 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="30"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|30. வழிப்போக்கர் மண்டபம் கட்ட ஆர்க்காடு நவாப் ஆணை* <ref>*ஆவணம் 14, சூலை 2003, பக் 104; தமிழக தொல்லியல் கழக வெளியீடு.</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து வயிரபுரம் போகும் வழியில் உள்ள அய்யன் தோப்பு செங்கல் மண்டபம். |- | {{ts|vtt}}|காலம் || {{ts|vtt}}|– ||ஆர்க்காடு நவாப் சாததுல்லாகான் விரோதி கிறிது வருஷம் சித்திரை மாதம் முதல்தேதி. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தில் வழிப்போக்கர்கள் தங்க முத்தான் செட்டி மண்டபம் கட்டினர். |} <poem>1. ஸ்ரீ விரோதி கிறுது வருஷம் சித்திரை 2. மாதம் முதல் திண்டிவனம்.. 3. நவாபு சாதுக்துலா கான் சாயுபு 4. ...திண்டிவனம் 5. நகரம் அயின ஊரில் 6. ....வாணிய 7. கோத்திரம் 8. செட்டி குமாரன் சனா 9. தம்பி செட்டி கு 10. செட்டி தம்பி 11. முத்தப்பன் தம்பி 12. முத்தான் இந்த 13-15........ 16. புண்ணி[யம்]</poem> {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 53 |bSize = 425 |cWidth = 266 |cHeight = 120 |oTop = 426 |oLeft = 95 |Location = center |Description = }} <section end="30"/> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> i9zkioo5ijebbna7zd9n1nh9nb0rk8u பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/54 250 489035 1834950 1646024 2025-06-24T08:45:57Z ஹர்ஷியா பேகம் 15001 1834950 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 53}} {{rule}}</noinclude><section begin="31"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|31. ‘அஞ்சினான் புகலிடம்’ அமைத்து வரி நீக்கிய நவாபு*}}<ref>*Annual Report Epigraphy 617, 619 of 1915</ref></b>}} பேரரசர் ஔரங்கசீப் பெரும்படை ஜரல்ஃகார்கான் தலைமையில் செஞ்சிமீது படையெடுத்தபோது, மக்கள் உயிருக்கும் பயந்தனர். அவர்கள் எல்லாம் ‘நஞ்சனபேட்டை’ என்னுமிடத்தில் பாதுகாப்பாகத் தங்கலாம் என்று கூறி அவ்வாறு பாதுகாப்பு அளித்தவர் சாததுல்லாகான். ‘காசாய வர்க்கக் குடிகள்’ தலைக்கு நான்கு பணம் அளிக்க வேண்டும் என்றும், ‘உழுகுடிகள்’ கொடுக்க வேண்டிய வரியில் முக்கால் பங்கு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. பீஜப்பூர் சுல்தான் அலி அடில்ஷா நெசவாளர்கட்கும், மளிகை வியாபாரிகட்கும் உள்ள வரியை நீக்கினார். சுல்தானின் அதிகாரி கானி ஆஜம்கான் சாயபு 12 ஆண்டுகட்கு ‘சிற்றாலம்’ முதலிய வரிகளை நீக்கினார். <section end="31"/>{{nop}}<noinclude></noinclude> qbc9qw4oqb2aqvrep65wa80v6viynt9 1834951 1834950 2025-06-24T08:46:24Z ஹர்ஷியா பேகம் 15001 1834951 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 53}} {{rule}}</noinclude><section begin="31"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|31. ‘அஞ்சினான் புகலிடம்’ அமைத்து வரி நீக்கிய நவாபு*}}<ref>*Annual Report Epigraphy 617, 619 of 1915</ref></b>}} பேரரசர் ஔரங்கசீப் பெரும்படை ஜரல்ஃகார்கான் தலைமையில் செஞ்சிமீது படையெடுத்தபோது, மக்கள் உயிருக்கும் பயந்தனர். அவர்கள் எல்லாம் ‘நஞ்சனபேட்டை’ என்னுமிடத்தில் பாதுகாப்பாகத் தங்கலாம் என்று கூறி அவ்வாறு பாதுகாப்பு அளித்தவர் சாததுல்லாகான். ‘காசாய வர்க்கக் குடிகள்’ தலைக்கு நான்கு பணம் அளிக்க வேண்டும் என்றும், ‘உழுகுடிகள்’ கொடுக்க வேண்டிய வரியில் முக்கால் பங்கு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. பீஜப்பூர் சுல்தான் அலி அடில்ஷா நெசவாளர்கட்கும், மளிகை வியாபாரிகட்கும் உள்ள வரியை நீக்கினார். சுல்தானின் அதிகாரி கானி ஆஜம்கான் சாயபு 12 ஆண்டுகட்கு ‘சிற்றாலம்’ முதலிய வரிகளை நீக்கினார். <section end="31"/>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 3knwg1f1dj2xnzwh5l9y2w4ve0ccrii பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/55 250 489036 1834990 1636402 2025-06-24T08:57:54Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1834990 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|54 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="32"/> {{dhr|3em}} {{center|{{larger|<b>32. முகம்மது அலி மரைக்காயர் கட்டிய நாகூர் சத்திரம்* <ref>*“கல்வெட்டு” இதழ் 68: அக்டோபர் 2005: தமிழ்நாடு தொல்லியல்துறை வெளியீடு.</ref></b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் பேருந்துவழி நெடுஞ்சாலை மேல் புறம் உள்ள பழைய வீட்டுத் திண்ணைச் சுவரில் உள்ள கல்வெட்டு |- | காலம் || – ||9.12.1812 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||நாகூர் நூர் முகமது மரைக்காயர் மகன் முகமது அலி மரைக்காயர் பொதுமக்கள் உபயோகத்திற்காக குளம், திருவாசல், தோட்டம், வீடு, கடை ஆகியவைகளைக் கொடையாகக் கொடுத்தார். மக்கள் ‘சத்திரம்’ என்று அழைக்கின்றனர். இதற்கு உதவி செய்பவர்கள் அல்லாவுடைய றெகுமத்துக்குப் பெறுவார்கள் தீமை செய்வோர் அல்லாவுடைய முனிவில் அகப்படுவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. இன்று சத்திரம் பயன்பாட்டில் இல்லை. |} <b>கல்வெட்டு</b> <poem> 1. கிசுறத்து 1227 வருஷம் ஏமல் 2. ஆங்கிலா வருஷம் கார்த்திகை மாதம் 26 தேதி 3. னாகூரிலிருக்கும் 4. நூறு முகம்மது மரைக்காயர் 5. குமரர் முகம்மது அலி மரைக்காயர் 6. அல்லாவுக்காக வெகு ச 7. னங்களுக்கு உதவும் 8. படியாகச் செய்துவைத்த 9. குளம் திருவாசல் தோட்டம் 10. வீடு கடைத் திருப்பணி அடங் 11. கலும் தறுமம் பண்ணினதுக்கு 12. யெல்லை ராசவீதிகி மேற்க்கத்ய கீ 13. ள்புறம் தெற்கு வடக்கு சாதி 14. அடி 194 மேல்தலை சா 15. தி அடி 206 கிளக்கு மேற்க் 16. கு சாதி அடி 295 யிதெ </poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> hisr4duy6m3d38qsonyfbdlabwbrn9y பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/56 250 489037 1834998 1636403 2025-06-24T09:04:31Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1834998 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 55}}{{rule}}</noinclude><poem>17. சாற்ந்த தாராசம் தெற்க் 18. கு வடக்கு சாதி அடி 15 கி 19. ளக்கு மேற்க்கு சாதி அடி 20. 72 இதுகள் அடக்கலு 21. ம் தற்ம்மத்துக்கு விட்டபடி 22. யினாலே யெந்தக் காலத் 23. திலேயும் யிதுக்கு உதவி 24. யாக யிருக்குற பேர்கள் 25. யெல்லாம் அல்லாவு 26. டைய றெகுமத்துக்குப் பெ 27. றுவார்கள் யாதொரு 28. முகாந்திரத்திலே விகர்த 29. ம் நினைக்குற பேர்கள் யெ 30. ல்லாம் அல்லாவுடை 31. ய முனிவில் அகப்படு 32. வார்கள்</poem> <section end="32"/>{{nop}}<noinclude></noinclude> 9m0jm1gwroms24ry7h401yio9aaq30t பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/57 250 489038 1835017 1636404 2025-06-24T09:28:15Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1835017 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|56 ❋ தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்||}}{{rule}}</noinclude><section begin="33"/> {{dhr|3em}} {{center|{{larger|<b>33. தஞ்சை பெரிய கோயிலில் சோனகன் சாவூர் பரஞ்சோதி* <ref>*1) S.I.I Vol II No 95</ref></b>}}}} மாமன்னன் முதலாம் இராசராசன் காலத்தில் (985-1014) கட்டப்பட்ட ஈடும் எடுப்பும் அற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் காந்தருவிகளுக்கும், தளிச்சேரிப் பெண்டுகளுக்கும் நாயகம் செய்யும் (தலைவர்) உயர் அலுவலராக இருந்தவர் ‘சோனகன் சாவூர்’ என்பவர் ஆவார். அவர் தஞ்சாவூர்ப் புறம்படியில் இராஜவித்யாதரப் பெரும் தெருவில் வாழ்ந்து வந்தார். அவர் மூன்று தவணைகளில் (5+15+12) 32 பொற்காசுகள் கொடுத்து 96 ஆடுகளை விளக்கெரிக்கத் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் மூலப்பொருளாக வைத்தார். இவருக்குப் பரஞ்சோதி என்ற பெயர் பட்டப் பெயராக விளங்கியது. சோனகன் காவூர் இராசேந்திரசோழன் காலத்தில் (1012-1044) கங்கை கொண்ட சோழபுரத்தில் பெருந்தரத்து அதிகாரியாகவும்; பெருமந்திர ஓலை நாயகமாகவும் இருந்துள்ளார். இவை இரண்டும் பொறுப்பான பெரும் பதவிகள் ஆகும். இராசேந்திர சோழனால் சோனகன் சாவூருக்கு ‘இராசேந்திர சோழக் கந்தருவப் பேரரையன்’ என்ற உயர் பட்டமும் அளிக்கப்பட்டது.<ref>2) E.C.Vol X No 3</ref> புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் ராசேந்திர சோழனின் எசாயம் செப்பேட்டில் இதே சாவூர்சோனகன் பரஞ்சோதி ‘ஓலைநாயகம்’ என்ற உயர் அதிகாரியாக “சோனகன் சாவூர் பரஞ்சோதி ஆன இராஜேந்திரச் சோழக் கந்திருவர் பேரரயன்” என்று குறிக்கப்படுகின்றன. டாக்டர். எ. சுப்பராயலு, ச. கிருஷ்ணமூர்த்தி, மா. சந்திரமூர்த்தி ஆகியோர் ‘சோனகன்’ என்று படித்து இஸ்லாமியர் என்று சரியாக எழுதியிருக்க, முன்னாள் தொல்லியல் துறை இயக்குநர்கள் டாக்டர் இரா. நாகசாமியும், நடன.காசிநாதனும் ‘சோழகன்’ ‘சோழகோன்’ என்று பிழையாகப் படித்துள்ளனர். ‘சோனகன்’ என்று தெளிவாக உள்ளது.<ref>3)‘தமிழ்நாட்டுச் செப்பேடுகள்’. முதல் தொகுதி பக் 341, 342</ref> ‘சோனகன்’ என்ற சொல்லுக்குத் தமிழ் அகராதிகள் துலுக்கர் என்றே பொருள் கூறுகிறது. இராசராசன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்குக் கொடுத்த அணிகலன்களில் ‘சோனகச்சிடுக்கு’ என்பதும் ஒன்றாகும். “சோனகன்விளை, சோனகன் பேட்டை” என்பன தமிழ் நாட்டு இசுலாமிய ஊர்களாகும். கடலூர், தொண்டி, காயல்பட்டினம் போன்ற ஊர்களில் இசுலாம் பெருமக்கள் வாழும் தெருக்கள் “சோனகர்” தெரு என்று அழைக்கப்படுகிறது.<ref>4 “எசாலம் வரலாற்றுப் புதையல் பக் - 124”</ref><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 6u4mger39v5u24nrau67c9ij287uypw 1835018 1835017 2025-06-24T09:28:47Z ஹர்ஷியா பேகம் 15001 1835018 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|56 ❋ தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்||}}{{rule}}</noinclude><section begin="33"/> {{dhr|3em}} {{center|{{larger|<b>33. தஞ்சை பெரிய கோயிலில் சோனகன் சாவூர் பரஞ்சோதி* <ref>*1) S.I.I Vol II No 95</ref></b>}}}} மாமன்னன் முதலாம் இராசராசன் காலத்தில் (985-1014) கட்டப்பட்ட ஈடும் எடுப்பும் அற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் காந்தருவிகளுக்கும், தளிச்சேரிப் பெண்டுகளுக்கும் நாயகம் செய்யும் (தலைவர்) உயர் அலுவலராக இருந்தவர் ‘சோனகன் சாவூர்’ என்பவர் ஆவார். அவர் தஞ்சாவூர்ப் புறம்படியில் இராஜவித்யாதரப் பெரும் தெருவில் வாழ்ந்து வந்தார். அவர் மூன்று தவணைகளில் (5+15+12) 32 பொற்காசுகள் கொடுத்து 96 ஆடுகளை விளக்கெரிக்கத் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் மூலப்பொருளாக வைத்தார். இவருக்குப் பரஞ்சோதி என்ற பெயர் பட்டப் பெயராக விளங்கியது. சோனகன் காவூர் இராசேந்திரசோழன் காலத்தில் (1012-1044) கங்கை கொண்ட சோழபுரத்தில் பெருந்தரத்து அதிகாரியாகவும்; பெருமந்திர ஓலை நாயகமாகவும் இருந்துள்ளார். இவை இரண்டும் பொறுப்பான பெரும் பதவிகள் ஆகும். இராசேந்திர சோழனால் சோனகன் சாவூருக்கு ‘இராசேந்திர சோழக் கந்தருவப் பேரரையன்’ என்ற உயர் பட்டமும் அளிக்கப்பட்டது.<ref>2) E.C.Vol X No 3</ref> புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் ராசேந்திர சோழனின் எசாயம் செப்பேட்டில் இதே சாவூர்சோனகன் பரஞ்சோதி ‘ஓலைநாயகம்’ என்ற உயர் அதிகாரியாக “சோனகன் சாவூர் பரஞ்சோதி ஆன இராஜேந்திரச் சோழக் கந்திருவர் பேரரயன்” என்று குறிக்கப்படுகின்றன. டாக்டர். எ. சுப்பராயலு, ச. கிருஷ்ணமூர்த்தி, மா. சந்திரமூர்த்தி ஆகியோர் ‘சோனகன்’ என்று படித்து இஸ்லாமியர் என்று சரியாக எழுதியிருக்க, முன்னாள் தொல்லியல் துறை இயக்குநர்கள் டாக்டர் இரா. நாகசாமியும், நடன.காசிநாதனும் ‘சோழகன்’ ‘சோழகோன்’ என்று பிழையாகப் படித்துள்ளனர். ‘சோனகன்’ என்று தெளிவாக உள்ளது.<ref>3)‘தமிழ்நாட்டுச் செப்பேடுகள்’. முதல் தொகுதி பக் 341, 342</ref> ‘சோனகன்’ என்ற சொல்லுக்குத் தமிழ் அகராதிகள் துலுக்கர் என்றே பொருள் கூறுகிறது. இராசராசன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்குக் கொடுத்த அணிகலன்களில் ‘சோனகச்சிடுக்கு’ என்பதும் ஒன்றாகும். “சோனகன்விளை, சோனகன் பேட்டை” என்பன தமிழ் நாட்டு இசுலாமிய ஊர்களாகும். கடலூர், தொண்டி, காயல்பட்டினம் போன்ற ஊர்களில் இசுலாம் பெருமக்கள் வாழும் தெருக்கள் “சோனகர்” தெரு என்று அழைக்கப்படுகிறது.<ref>4 “எசாலம் வரலாற்றுப் புதையல் பக் - 124”</ref> <section end="33"/>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> fnc7fctgvb68jfknmsfgc99ck2fyynj பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/58 250 489039 1835024 1636405 2025-06-24T09:40:18Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1835024 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 57}} {{rule}}</noinclude><section begin="34"/> {{dhr|3em}} {{center|{{larger|<b>34. ஆனைமங்கலம் செப்பேட்டில் துருக்கன் அகமது*<ref>*1) கல்வெட்டு ஓர் அறிமுகம், பக்கம் - 6</ref></b>}}}} கடாரத்து மன்னன் மாறவிஜயோத்துங்கபன்மன் சோழநாட்டு நாகப்பட்டினத்தில் கட்டிய சூளாமணி பௌத்த விகாரத்திற்கு இராசராசன் (985-1014) ‘ஆனைமங்கலம்’ என்ற பேரூரைக் கொடையாக அளித்தான். இராசேந்திரன் காலத்தில் அதற்குரிய செப்பேடு எழுதப்பட்டது. அந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் ‘லெய்டன்’நகர அருங்காட்சியகத்தில் உள்ளது. அந்தக் கொடைக்குப் பல ஊர் உயர் அலுவலர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அச்செப்பேட்டில் முக்கியமான பகுதி: “க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்துப் பிரமதேயம் சன்னமங்கலத்துச் சபையோம் சொல்ல எழுதினேன் இவ்வூர்க் கரணத்தான் மத்யஸ்தன் துருக்கன் அகமுதனேன். இன என் எழுத்து என்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நட அறவோலை செய்து கொடுத்தோம்.” <ref>2) ஆனைமங்கலச் செப்பேடு. இப்போது இச்செப்பேடு லெய்டன் நகர அருங்காட்சியகத்தில் உள்ளது.</ref> ‘துருக்கர்’ என்பது இசுலாமியர்களைக் குறிக்கும் சொ சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய கொங்கு நாட்டு அடியார்க்கு நல்லார் ‘யவனத் துருக்கர்’ என்ற சொல்லைக் கையாளுகிறார். <section end="34"/>{{nop}}<noinclude></noinclude> h2yeag69ypwee81jcoehcanbijw4xd1 1835025 1835024 2025-06-24T09:40:37Z ஹர்ஷியா பேகம் 15001 1835025 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 57}} {{rule}}</noinclude><section begin="34"/> {{dhr|3em}} {{center|{{larger|<b>34. ஆனைமங்கலம் செப்பேட்டில் துருக்கன் அகமது*<ref>*1) கல்வெட்டு ஓர் அறிமுகம், பக்கம் - 6</ref></b>}}}} கடாரத்து மன்னன் மாறவிஜயோத்துங்கபன்மன் சோழநாட்டு நாகப்பட்டினத்தில் கட்டிய சூளாமணி பௌத்த விகாரத்திற்கு இராசராசன் (985-1014) ‘ஆனைமங்கலம்’ என்ற பேரூரைக் கொடையாக அளித்தான். இராசேந்திரன் காலத்தில் அதற்குரிய செப்பேடு எழுதப்பட்டது. அந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் ‘லெய்டன்’நகர அருங்காட்சியகத்தில் உள்ளது. அந்தக் கொடைக்குப் பல ஊர் உயர் அலுவலர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அச்செப்பேட்டில் முக்கியமான பகுதி: “க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்துப் பிரமதேயம் சன்னமங்கலத்துச் சபையோம் சொல்ல எழுதினேன் இவ்வூர்க் கரணத்தான் மத்யஸ்தன் துருக்கன் அகமுதனேன். இன என் எழுத்து என்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நட அறவோலை செய்து கொடுத்தோம்.” <ref>2) ஆனைமங்கலச் செப்பேடு. இப்போது இச்செப்பேடு லெய்டன் நகர அருங்காட்சியகத்தில் உள்ளது.</ref> ‘துருக்கர்’ என்பது இசுலாமியர்களைக் குறிக்கும் சொ சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய கொங்கு நாட்டு அடியார்க்கு நல்லார் ‘யவனத் துருக்கர்’ என்ற சொல்லைக் கையாளுகிறார். <section end="34"/>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 6081c73ehauhtv7eax0oc5nqvar397v பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/59 250 489040 1835027 1636406 2025-06-24T09:48:52Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1835027 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|58 ❋ தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="35"/> {{dhr|3em}} {{center|{{larger|<b>35. திருமுருகன் பூண்டி ஆவணத்தில் இஸ்லாமியர்*<ref>*கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள். தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு</ref></b>}}}} மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கோவை மாவட்டத்துத் திருமுருகன் பூண்டி, அவிநாசி, மங்கலம் முதலிய ஊர்களைப் பாலவேளாளர் பைசலிய கோத்திர வீரவிக்கிரம சோழியாண்டாக் கவுண்டர் நிர்வாகம் செய்து வந்தார். அவர் மதுரைக்கு வரிப்பணம் 15000 பொன் செலுத்த முடியாதபோது எழுமாத்தூர்ப் பனங்காடைகுலக் கொங்கு வேளாளர் பொய்ங்காக் கவுண்டரும், மருதுறை ஆந்தை குலத்து செல்லப்பக் கவுண்டரும், கொற்றனூர் ஆந்தை குல சரவணக் கவுண்டரும் ஆளுக்கு 5000 பொன் வீதம் கொடுத்து வீரவிக்கிரம சோழியாண்டாக் கவுண்டரிடம் அவ்வூர்களை விலைக்கு வாங்கினர். அவ்வூர்களின் காணியுரிமை மாற்றத்தை உள்ளூர்ப் பொதுமக்கள் பலரும் ஆதரித்துக் கையெழுத்திட்டனர். அவர்களில் மூவர் இஸ்லாமமியர். பட்டயத்தில் “முசலிமான் சேக்கு அப்துல்கான், இபுராமு மீராகான், மம்முது கான்” என்று காணப்படுகிறது. <section end="35"/>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> ma5g7xboheg9blo46t1irs4jav5u28o பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/60 250 489041 1835028 1636442 2025-06-24T09:55:40Z ஹர்ஷியா பேகம் 15001 1835028 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|||புலவர் செ. இராசு ❋}} {{rule}}</noinclude><section begin="36"/> {{dhr|3em}} {{c|<b>36. பட்டக்காரர் பட்டாபிஷேகத்தில் கமால்சாயபு பங்கு*</b><ref>* பழையகோட்டை மரபுப்பாடல் எண் 47. பக்கம் 60</ref>}} இராமாயணத்தில் மிக முக்கியமான நிகழ்ச்சி இராமன் முடிசூடல். அம்முடி சூட்டு நிகழ்ச்சியில் மிக முக்கியமானவர்கள் பட்டாபிஷேகச் சடங்கில் பங்கு பெறுவார்கள். இராமர் பட்டாபிஷேகத்தில் அங்கதன் உடைவாள் ஏந்தியதாகக் கம்பர் பாடுகிறார். அங்கதன் வாலியின் மைந்தன். பழைய கோட்டைப் பட்டக்காரர்கட்கு முடிசூட்டும் பட்டாபிஷேக நிகழ்ச்சி மிக முக்கியமானது. கொங்கு நாட்டுப் பிற பட்டக்காரர்களும், பாளையக்காரர்களும், மிட்டாதார், மிராசுதார்களும், அரசு அலுவலர்களும், உற்றாரும், உறவினரும் கூடி செய்யும் மிக முக்கியமான நிகழ்ச்சி. அம்முடிசூட்டு விழாவில் முக்கியமான சடங்குகளில் மிக முக்கியமானவர்கள் மட்டுமே நேரடியாக பங்கேற்பர். பட்டாபிஷேகத்தில் பழையகோட்டை மரபு அரண்மனை ஆயுதங்களான சமுதாடு, வல்லயம், சொட்டை முனை என்ற ஆயுதங்களைப் பிடித்து பட்டாபிஷேகத்தில் பங்கு பெறும் உரிமை இசுலாமியப் பெரியவர்கட்கு அளிக்கப்பட்டிருந்தது. 19ஆம் பட்டக்காரர் கொற்றவேல் சர்க்கரை மன்றாடியார் முடிசூட்டுவிழா பழையகோட்டையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், {{left_margin|3em|<poem> “போர்வீரராம் ஐதர்அலி சர்க்காரின் புலிபோன்ற தாசில்களும் புனிதமுள சிரஸ்துகளும் ஒருபுறம்” </poem>}} :::(தாசில்தார், சிரஸ்தார்கள்) வீற்றிருந்தனர். முடிசூட்டும்போது சமுதாடு வல்லயம் பழைய கோட்டைக் கேயுரிய சொட்டை முனை ஆயுதங்களைக் கமால் சாயபு பிடித்து நின்றதாகச் சடைப் பெருமாள்பிள்ளை பாடிய நீண்ட பாடலில் காணப்படுகிறது. {{left_margin|3em|<poem><b> “தங்காது விசிறிவெண் சாமரை ளதுவீச ::தகுந்தவா சனைநிமிர்ந்து </b></poem>}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> lszscbkr6ozc26ziwamljo634fe10qr 1835029 1835028 2025-06-24T09:56:13Z ஹர்ஷியா பேகம் 15001 1835029 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|||புலவர் செ. இராசு ❋}} {{rule}}</noinclude><section begin="36"/> {{dhr|3em}} {{c|<b>36. பட்டக்காரர் பட்டாபிஷேகத்தில் கமால்சாயபு பங்கு*</b><ref>* பழையகோட்டை மரபுப்பாடல் எண் 47. பக்கம் 60</ref>}} இராமாயணத்தில் மிக முக்கியமான நிகழ்ச்சி இராமன் முடிசூடல். அம்முடி சூட்டு நிகழ்ச்சியில் மிக முக்கியமானவர்கள் பட்டாபிஷேகச் சடங்கில் பங்கு பெறுவார்கள். இராமர் பட்டாபிஷேகத்தில் அங்கதன் உடைவாள் ஏந்தியதாகக் கம்பர் பாடுகிறார். அங்கதன் வாலியின் மைந்தன். பழைய கோட்டைப் பட்டக்காரர்கட்கு முடிசூட்டும் பட்டாபிஷேக நிகழ்ச்சி மிக முக்கியமானது. கொங்கு நாட்டுப் பிற பட்டக்காரர்களும், பாளையக்காரர்களும், மிட்டாதார், மிராசுதார்களும், அரசு அலுவலர்களும், உற்றாரும், உறவினரும் கூடி செய்யும் மிக முக்கியமான நிகழ்ச்சி. அம்முடிசூட்டு விழாவில் முக்கியமான சடங்குகளில் மிக முக்கியமானவர்கள் மட்டுமே நேரடியாக பங்கேற்பர். பட்டாபிஷேகத்தில் பழையகோட்டை மரபு அரண்மனை ஆயுதங்களான சமுதாடு, வல்லயம், சொட்டை முனை என்ற ஆயுதங்களைப் பிடித்து பட்டாபிஷேகத்தில் பங்கு பெறும் உரிமை இசுலாமியப் பெரியவர்கட்கு அளிக்கப்பட்டிருந்தது. 19ஆம் பட்டக்காரர் கொற்றவேல் சர்க்கரை மன்றாடியார் முடிசூட்டுவிழா பழையகோட்டையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், {{left_margin|3em|<poem> <b>“போர்வீரராம் ஐதர்அலி சர்க்காரின் புலிபோன்ற தாசில்களும் புனிதமுள சிரஸ்துகளும் ஒருபுறம்”</b> </poem>}} ::(தாசில்தார், சிரஸ்தார்கள்) வீற்றிருந்தனர். முடிசூட்டும்போது சமுதாடு வல்லயம் பழைய கோட்டைக் கேயுரிய சொட்டை முனை ஆயுதங்களைக் கமால் சாயபு பிடித்து நின்றதாகச் சடைப் பெருமாள்பிள்ளை பாடிய நீண்ட பாடலில் காணப்படுகிறது. {{left_margin|3em|<poem><b> “தங்காது விசிறிவெண் சாமரை ளதுவீச ::தகுந்தவா சனைநிமிர்ந்து </b></poem>}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> hnuuwt29oj7wjtc9q96rlxqfgmmf8c0 1835030 1835029 2025-06-24T09:56:32Z ஹர்ஷியா பேகம் 15001 1835030 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|||புலவர் செ. இராசு ❋}} {{rule}}</noinclude><section begin="36"/> {{dhr|3em}} {{c|<b>36. பட்டக்காரர் பட்டாபிஷேகத்தில் கமால்சாயபு பங்கு*</b><ref>* பழையகோட்டை மரபுப்பாடல் எண் 47. பக்கம் 60</ref>}} இராமாயணத்தில் மிக முக்கியமான நிகழ்ச்சி இராமன் முடிசூடல். அம்முடி சூட்டு நிகழ்ச்சியில் மிக முக்கியமானவர்கள் பட்டாபிஷேகச் சடங்கில் பங்கு பெறுவார்கள். இராமர் பட்டாபிஷேகத்தில் அங்கதன் உடைவாள் ஏந்தியதாகக் கம்பர் பாடுகிறார். அங்கதன் வாலியின் மைந்தன். பழைய கோட்டைப் பட்டக்காரர்கட்கு முடிசூட்டும் பட்டாபிஷேக நிகழ்ச்சி மிக முக்கியமானது. கொங்கு நாட்டுப் பிற பட்டக்காரர்களும், பாளையக்காரர்களும், மிட்டாதார், மிராசுதார்களும், அரசு அலுவலர்களும், உற்றாரும், உறவினரும் கூடி செய்யும் மிக முக்கியமான நிகழ்ச்சி. அம்முடிசூட்டு விழாவில் முக்கியமான சடங்குகளில் மிக முக்கியமானவர்கள் மட்டுமே நேரடியாக பங்கேற்பர். பட்டாபிஷேகத்தில் பழையகோட்டை மரபு அரண்மனை ஆயுதங்களான சமுதாடு, வல்லயம், சொட்டை முனை என்ற ஆயுதங்களைப் பிடித்து பட்டாபிஷேகத்தில் பங்கு பெறும் உரிமை இசுலாமியப் பெரியவர்கட்கு அளிக்கப்பட்டிருந்தது. 19ஆம் பட்டக்காரர் கொற்றவேல் சர்க்கரை மன்றாடியார் முடிசூட்டுவிழா பழையகோட்டையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், {{left_margin|3em|<poem> <b>“போர்வீரராம் ஐதர்அலி சர்க்காரின் புலிபோன்ற தாசில்களும் புனிதமுள சிரஸ்துகளும் ஒருபுறம்”</b> </poem>}} ::(தாசில்தார், சிரஸ்தார்கள்) வீற்றிருந்தனர். முடிசூட்டும்போது சமுதாடு வல்லயம் பழைய கோட்டைக் கேயுரிய சொட்டை முனை ஆயுதங்களைக் கமால் சாயபு பிடித்து நின்றதாகச் சடைப் பெருமாள்பிள்ளை பாடிய நீண்ட பாடலில் காணப்படுகிறது. {{left_margin|3em|<poem><b> “தங்காது விசிறிவெண் சாமரை ளதுவீச ::தகுந்தவா சனைநிமிர்ந்து </b></poem>}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> ik6cnnoaefe3jq6768dzhu59do2xca4 1835031 1835030 2025-06-24T09:56:46Z ஹர்ஷியா பேகம் 15001 1835031 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|||புலவர் செ. இராசு ❋}} {{rule}}</noinclude><section begin="36"/> {{dhr|3em}} {{c|<b>36. பட்டக்காரர் பட்டாபிஷேகத்தில் கமால்சாயபு பங்கு*</b><ref>* பழையகோட்டை மரபுப்பாடல் எண் 47. பக்கம் 60</ref>}} இராமாயணத்தில் மிக முக்கியமான நிகழ்ச்சி இராமன் முடிசூடல். அம்முடி சூட்டு நிகழ்ச்சியில் மிக முக்கியமானவர்கள் பட்டாபிஷேகச் சடங்கில் பங்கு பெறுவார்கள். இராமர் பட்டாபிஷேகத்தில் அங்கதன் உடைவாள் ஏந்தியதாகக் கம்பர் பாடுகிறார். அங்கதன் வாலியின் மைந்தன். பழைய கோட்டைப் பட்டக்காரர்கட்கு முடிசூட்டும் பட்டாபிஷேக நிகழ்ச்சி மிக முக்கியமானது. கொங்கு நாட்டுப் பிற பட்டக்காரர்களும், பாளையக்காரர்களும், மிட்டாதார், மிராசுதார்களும், அரசு அலுவலர்களும், உற்றாரும், உறவினரும் கூடி செய்யும் மிக முக்கியமான நிகழ்ச்சி. அம்முடிசூட்டு விழாவில் முக்கியமான சடங்குகளில் மிக முக்கியமானவர்கள் மட்டுமே நேரடியாக பங்கேற்பர். பட்டாபிஷேகத்தில் பழையகோட்டை மரபு அரண்மனை ஆயுதங்களான சமுதாடு, வல்லயம், சொட்டை முனை என்ற ஆயுதங்களைப் பிடித்து பட்டாபிஷேகத்தில் பங்கு பெறும் உரிமை இசுலாமியப் பெரியவர்கட்கு அளிக்கப்பட்டிருந்தது. 19ஆம் பட்டக்காரர் கொற்றவேல் சர்க்கரை மன்றாடியார் முடிசூட்டுவிழா பழையகோட்டையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், {{left_margin|3em|<poem> <b>“போர்வீரராம் ஐதர்அலி சர்க்காரின் புலிபோன்ற தாசில்களும் புனிதமுள சிரஸ்துகளும் ஒருபுறம்”</b> </poem>}} ::(தாசில்தார், சிரஸ்தார்கள்) வீற்றிருந்தனர். முடிசூட்டும்போது சமுதாடு வல்லயம் பழைய கோட்டைக் கேயுரிய சொட்டை முனை ஆயுதங்களைக் கமால் சாயபு பிடித்து நின்றதாகச் சடைப் பெருமாள்பிள்ளை பாடிய நீண்ட பாடலில் காணப்படுகிறது. {{left_margin|3em|<poem><b> “தங்காது விசிறிவெண் சாமரை ளதுவீச ::தகுந்தவா சனைநிமிர்ந்து </b></poem>}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> hnuuwt29oj7wjtc9q96rlxqfgmmf8c0 1835032 1835031 2025-06-24T09:57:01Z ஹர்ஷியா பேகம் 15001 1835032 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|||புலவர் செ. இராசு ❋}} {{rule}}</noinclude><section begin="36"/> {{dhr|3em}} {{c|<b>36. பட்டக்காரர் பட்டாபிஷேகத்தில் கமால்சாயபு பங்கு*</b><ref>* பழையகோட்டை மரபுப்பாடல் எண் 47. பக்கம் 60</ref>}} இராமாயணத்தில் மிக முக்கியமான நிகழ்ச்சி இராமன் முடிசூடல். அம்முடி சூட்டு நிகழ்ச்சியில் மிக முக்கியமானவர்கள் பட்டாபிஷேகச் சடங்கில் பங்கு பெறுவார்கள். இராமர் பட்டாபிஷேகத்தில் அங்கதன் உடைவாள் ஏந்தியதாகக் கம்பர் பாடுகிறார். அங்கதன் வாலியின் மைந்தன். பழைய கோட்டைப் பட்டக்காரர்கட்கு முடிசூட்டும் பட்டாபிஷேக நிகழ்ச்சி மிக முக்கியமானது. கொங்கு நாட்டுப் பிற பட்டக்காரர்களும், பாளையக்காரர்களும், மிட்டாதார், மிராசுதார்களும், அரசு அலுவலர்களும், உற்றாரும், உறவினரும் கூடி செய்யும் மிக முக்கியமான நிகழ்ச்சி. அம்முடிசூட்டு விழாவில் முக்கியமான சடங்குகளில் மிக முக்கியமானவர்கள் மட்டுமே நேரடியாக பங்கேற்பர். பட்டாபிஷேகத்தில் பழையகோட்டை மரபு அரண்மனை ஆயுதங்களான சமுதாடு, வல்லயம், சொட்டை முனை என்ற ஆயுதங்களைப் பிடித்து பட்டாபிஷேகத்தில் பங்கு பெறும் உரிமை இசுலாமியப் பெரியவர்கட்கு அளிக்கப்பட்டிருந்தது. 19ஆம் பட்டக்காரர் கொற்றவேல் சர்க்கரை மன்றாடியார் முடிசூட்டுவிழா பழையகோட்டையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், {{left_margin|3em|<poem> <b>“போர்வீரராம் ஐதர்அலி சர்க்காரின் புலிபோன்ற தாசில்களும் புனிதமுள சிரஸ்துகளும் ஒருபுறம்”</b></poem>}} ::(தாசில்தார், சிரஸ்தார்கள்) வீற்றிருந்தனர். முடிசூட்டும்போது சமுதாடு வல்லயம் பழைய கோட்டைக் கேயுரிய சொட்டை முனை ஆயுதங்களைக் கமால் சாயபு பிடித்து நின்றதாகச் சடைப் பெருமாள்பிள்ளை பாடிய நீண்ட பாடலில் காணப்படுகிறது. {{left_margin|3em|<poem><b> “தங்காது விசிறிவெண் சாமரை ளதுவீச ::தகுந்தவா சனைநிமிர்ந்து </b></poem>}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> qkdvum1japu4c6phw7qet526riabmfo 1835033 1835032 2025-06-24T09:57:14Z ஹர்ஷியா பேகம் 15001 1835033 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|||புலவர் செ. இராசு ❋}} {{rule}}</noinclude><section begin="36"/> {{dhr|3em}} {{c|<b>36. பட்டக்காரர் பட்டாபிஷேகத்தில் கமால்சாயபு பங்கு*</b><ref>* பழையகோட்டை மரபுப்பாடல் எண் 47. பக்கம் 60</ref>}} இராமாயணத்தில் மிக முக்கியமான நிகழ்ச்சி இராமன் முடிசூடல். அம்முடி சூட்டு நிகழ்ச்சியில் மிக முக்கியமானவர்கள் பட்டாபிஷேகச் சடங்கில் பங்கு பெறுவார்கள். இராமர் பட்டாபிஷேகத்தில் அங்கதன் உடைவாள் ஏந்தியதாகக் கம்பர் பாடுகிறார். அங்கதன் வாலியின் மைந்தன். பழைய கோட்டைப் பட்டக்காரர்கட்கு முடிசூட்டும் பட்டாபிஷேக நிகழ்ச்சி மிக முக்கியமானது. கொங்கு நாட்டுப் பிற பட்டக்காரர்களும், பாளையக்காரர்களும், மிட்டாதார், மிராசுதார்களும், அரசு அலுவலர்களும், உற்றாரும், உறவினரும் கூடி செய்யும் மிக முக்கியமான நிகழ்ச்சி. அம்முடிசூட்டு விழாவில் முக்கியமான சடங்குகளில் மிக முக்கியமானவர்கள் மட்டுமே நேரடியாக பங்கேற்பர். பட்டாபிஷேகத்தில் பழையகோட்டை மரபு அரண்மனை ஆயுதங்களான சமுதாடு, வல்லயம், சொட்டை முனை என்ற ஆயுதங்களைப் பிடித்து பட்டாபிஷேகத்தில் பங்கு பெறும் உரிமை இசுலாமியப் பெரியவர்கட்கு அளிக்கப்பட்டிருந்தது. 19ஆம் பட்டக்காரர் கொற்றவேல் சர்க்கரை மன்றாடியார் முடிசூட்டுவிழா பழையகோட்டையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், {{left_margin|3em|<poem> <b>“போர்வீரராம் ஐதர்அலி சர்க்காரின் புலிபோன்ற தாசில்களும் புனிதமுள சிரஸ்துகளும் ஒருபுறம்”</b></poem>}} ::(தாசில்தார், சிரஸ்தார்கள்) வீற்றிருந்தனர். முடிசூட்டும்போது சமுதாடு வல்லயம் பழைய கோட்டைக் கேயுரிய சொட்டை முனை ஆயுதங்களைக் கமால் சாயபு பிடித்து நின்றதாகச் சடைப் பெருமாள்பிள்ளை பாடிய நீண்ட பாடலில் காணப்படுகிறது. {{left_margin|3em|<poem><b> “தங்காது விசிறிவெண் சாமரை ளதுவீச ::தகுந்தவா சனைநிமிர்ந்து </b></poem>}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> pc3evmd1t0tiuu4mpuguthrhuyow84i பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/61 250 489042 1835035 1643710 2025-06-24T10:00:25Z ஹர்ஷியா பேகம் 15001 1835035 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|60 ❋ தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude> {{left_margin|3em|<poem><b> சந்தனம் புஷ்பங்கள் பன்னீர்க ளதுவீச ::சமூகவித் வான்கள்பாட சதுர்மறைக ளோடுவெகு மறைகளும் ஒத ::சக்கரக் குடைபிடிக்க சமுதாடு வல்லயம் சொட்டை யைக்கமால் ::சாயபு பிடித்து நிற்க</b>” </poem>}} என்பது பாடல் பகுதி <section end="36"/>{{nop}}<noinclude></noinclude> bwzcflwmlgryncv2r9vgmrt2vbgr7me பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/62 250 489043 1835038 1644160 2025-06-24T10:27:07Z ஹர்ஷியா பேகம் 15001 1835038 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 61}} {{rule}}</noinclude><section begin="37"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|37. செந்தில் திருப்பணியில் சீதக்காதி*<ref>*திருச்செந்தூர்க் கோயில் வரலாறு - தேவஸ்தான வெளியீடு.</ref>}}</b>}} திருச் சீரலைவாய் என்று சிறப்பிக்கப்பெறும் திருச்செந்தூர் முருகன் கோயில் பெரும் புகழ்பெற்றது. புறநானூறு, சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப்படை முதலிய இலக்கியங்களில் சிறப்பிக்கப் படுவது. முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாவது. அருணகிரிநாதர் இத்தலத்திற்கு 83 திருப்புகழ்ப் பாடல்கள் பாடியுள்ளார். இக்கோயிலில் மிகப் பெருமை மிக்கது. மேலைக் கோபுரம் ஆகும். அதனை முன்னின்று கட்டும் திருப்பணியை மேற்கொண்டவர் திருவாவடுதுறை ஆதீன ஒடுக்கத் தம்பிரான் தேசிக மூர்த்தி சுவாமிகள். அவர் கோயில் அருகில் உள்ள திருவாவடுதுறைக் கட்டளை மடத்தில் தங்கித் திருப்பணி வேலையை மேற்கொண்டு வந்தார். ஒன்பது நிலைகளையுடைய அக்கோபுரத் திருப்பணி ஆறு நிலைகள் கட்டியவுடன் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. திருப்பணி வேலை நின்றுவிட்டது. தேசிக மூர்த்தி சுவாமிகள் மிக வருந்தினார். முருகனை வேண்டினார். ஒருநாள் அவர் கனவில் முருகன் தோன்றி “வள்ளல் சீதக்காதி கீழக்கரையில் உள்ளார் அவரிடம் செல்க” என்று கூறினார். தேசிகர் கீழக்கரை சென்றார். சீதக்காதியைக் கண்டார். சீதக்காதி அவர் கருத்தறிந்து ஒரு மூட்டை உப்பைக் கொடுத்து கோயிலுக்குச் சென்று அவிழ்த்துப் பார்க்குமாறு கூறினார். அவ்வாறே கோயில் வந்த தீட்சிதர் உப்பு மூட்டையை அவிழ்த்துப் பார்த்தார். உள்ளே ஏராளமான தங்கக் காசுகள் இருந்தன. அவற்றைக் கொண்டு தேசிகர் கோபுர வேலையை இனிதே முடித்தார். இந்த அரிய செய்தி திருச்செந்தூர் தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. <section end="37"/>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 3xtpswrp6n2rq5fp3ppw28fox3va1mm பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/63 250 489044 1835039 1644170 2025-06-24T10:35:04Z ஹர்ஷியா பேகம் 15001 1835039 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|62 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="38"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|38. வேளாள புராணத்தைப் புகழ்ந்த ஐயாவு ராவுத்தர்}}</b>}} இவர் ஈரோடு மாவட்டம் காங்கயத்தைச் சேர்ந்தவர். காங்கயம் அட்டாவதானி சேசாசலக் கவிராயரிடம் தமிழ் கற்றுப் பெரும்புலவராக விளங்கினார். இவர் செய்த தொழில் காளை, குதிரைகட்கு லாடம் அடிக்கும் வேலை! “லாடவேலை” ஐயாவு ராவுத்தர் என்றே இவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. வீராட்சி மங்கலம் கந்தசாமிக் கவிராயர் பாடிய வேளாள புராணத்தைக் கொங்கார்பாளையம் முத்துசாமிக் கவிராயர் ஈரோடு நித்திய கலியாண சுந்தரம் அச்சுக் கூடத்தில் 1907ஆம் ஆண்டு அச்சிட்டார். அந்நூலுக்கு ஐயாவு ராவுத்தர் சாற்றுக்கவிகள் அளித்துள்ளார். ஐயாவு ராவுத்தர் காங்கயம் அட்டாவதானி சேஷாசலக் கவிராயரிடம் தமிழ் கற்றவர். <poem> ::1) மணிதாங்கும் எழில் மாடம் அவரும்எழில் வீராட்சி :மங்கலத்தில் ::பிணிதாங்கும் அகல்ஞாலம் முழுதேத்த வந்ததிக :பாலவல்லோரின் ::அணிதாங்கும் கவிகந்த சாமிஎனும் நாவலவன் :அன்பின் கீர்த்தி ::கணிதாங்கும் குவளைமலர்க் காராளர் குலப்பெருமை :கதிக்கவேண்டி :2) சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்கும் ::தொடராஇன்பத்து :என்நோக்கம் நன்னோக்காய் இசையும்இலக் காணமுறையில் ::ஏயும் அன்பால் :முன்நோக்கும் புலவர்அவர் தம்நோக்கும் தன்நோக்காய் ::மொழிய நாளும் :பன்னோக்கும் ஆர்ந்திடும்வே ளாளர்புரா ணத்தை இங்கு ::பணிந்து தந்தான் </poem> என்பவை அவற்றில் இரு பாடல்களாகும். <section end="38"/>{{nop}}<noinclude></noinclude> mmram75e2hexsrirlspa1iwurelhi2h 1835040 1835039 2025-06-24T10:35:57Z ஹர்ஷியா பேகம் 15001 1835040 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|62 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="38"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|38. வேளாள புராணத்தைப் புகழ்ந்த ஐயாவு ராவுத்தர்}}</b>}} இவர் ஈரோடு மாவட்டம் காங்கயத்தைச் சேர்ந்தவர். காங்கயம் அட்டாவதானி சேசாசலக் கவிராயரிடம் தமிழ் கற்றுப் பெரும்புலவராக விளங்கினார். இவர் செய்த தொழில் காளை, குதிரைகட்கு லாடம் அடிக்கும் வேலை! “லாடவேலை” ஐயாவு ராவுத்தர் என்றே இவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. வீராட்சி மங்கலம் கந்தசாமிக் கவிராயர் பாடிய வேளாள புராணத்தைக் கொங்கார்பாளையம் முத்துசாமிக் கவிராயர் ஈரோடு நித்திய கலியாண சுந்தரம் அச்சுக் கூடத்தில் 1907ஆம் ஆண்டு அச்சிட்டார். அந்நூலுக்கு ஐயாவு ராவுத்தர் சாற்றுக்கவிகள் அளித்துள்ளார். ஐயாவு ராவுத்தர் காங்கயம் அட்டாவதானி சேஷாசலக் கவிராயரிடம் தமிழ் கற்றவர். <poem> :1) மணிதாங்கும் எழில் மாடம் அவரும்எழில் வீராட்சி :மங்கலத்தில் ::பிணிதாங்கும் அகல்ஞாலம் முழுதேத்த வந்ததிக :பாலவல்லோரின் ::அணிதாங்கும் கவிகந்த சாமிஎனும் நாவலவன் :அன்பின் கீர்த்தி ::கணிதாங்கும் குவளைமலர்க் காராளர் குலப்பெருமை :கதிக்கவேண்டி :2) சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்கும் ::தொடராஇன்பத்து :என்நோக்கம் நன்னோக்காய் இசையும்இலக் காணமுறையில் ::ஏயும் அன்பால் :முன்நோக்கும் புலவர்அவர் தம்நோக்கும் தன்நோக்காய் ::மொழிய நாளும் :பன்னோக்கும் ஆர்ந்திடும்வே ளாளர்புரா ணத்தை இங்கு ::பணிந்து தந்தான் </poem> என்பவை அவற்றில் இரு பாடல்களாகும். <section end="38"/>{{nop}}<noinclude></noinclude> gio6nho4qcy9qx2l5d9g0mk5t1dgur4 1835041 1835040 2025-06-24T10:37:13Z ஹர்ஷியா பேகம் 15001 1835041 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|62 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="38"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|38. வேளாள புராணத்தைப் புகழ்ந்த ஐயாவு ராவுத்தர்}}</b>}} இவர் ஈரோடு மாவட்டம் காங்கயத்தைச் சேர்ந்தவர். காங்கயம் அட்டாவதானி சேசாசலக் கவிராயரிடம் தமிழ் கற்றுப் பெரும்புலவராக விளங்கினார். இவர் செய்த தொழில் காளை, குதிரைகட்கு லாடம் அடிக்கும் வேலை! “லாடவேலை” ஐயாவு ராவுத்தர் என்றே இவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. வீராட்சி மங்கலம் கந்தசாமிக் கவிராயர் பாடிய வேளாள புராணத்தைக் கொங்கார்பாளையம் முத்துசாமிக் கவிராயர் ஈரோடு நித்திய கலியாண சுந்தரம் அச்சுக் கூடத்தில் 1907ஆம் ஆண்டு அச்சிட்டார். அந்நூலுக்கு ஐயாவு ராவுத்தர் சாற்றுக்கவிகள் அளித்துள்ளார். ஐயாவு ராவுத்தர் காங்கயம் அட்டாவதானி சேஷாசலக் கவிராயரிடம் தமிழ் கற்றவர். <poem> :1) மணிதாங்கும் எழில் மாடம் அவரும்எழில் வீராட்சி :::மங்கலத்தில் :பிணிதாங்கும் அகல்ஞாலம் முழுதேத்த வந்ததிக :::பாலவல்லோரின் :அணிதாங்கும் கவிகந்த சாமிஎனும் நாவலவன் :::அன்பின் கீர்த்தி :கணிதாங்கும் குவளைமலர்க் காராளர் குலப்பெருமை :::கதிக்கவேண்டி :2) சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்கும் :::தொடராஇன்பத்து :என்நோக்கம் நன்னோக்காய் இசையும்இலக் காணமுறையில் :::ஏயும் அன்பால் :முன்நோக்கும் புலவர்அவர் தம்நோக்கும் தன்நோக்காய் :::மொழிய நாளும் :பன்னோக்கும் ஆர்ந்திடும்வே ளாளர்புரா ணத்தை இங்கு :::பணிந்து தந்தான் </poem> என்பவை அவற்றில் இரு பாடல்களாகும். <section end="38"/>{{nop}}<noinclude></noinclude> n0ujbovjqnquhhi1n7pdjkp1isnopxh 1835043 1835041 2025-06-24T10:47:26Z ஹர்ஷியா பேகம் 15001 1835043 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|62 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="38"/>{{dhr|3em}} {{center|<b>{{larger|38. வேளாள புராணத்தைப் புகழ்ந்த ஐயாவு ராவுத்தர்}}</b>}} இவர் ஈரோடு மாவட்டம் காங்கயத்தைச் சேர்ந்தவர். காங்கயம் அட்டாவதானி சேசாசலக் கவிராயரிடம் தமிழ் கற்றுப் பெரும்புலவராக விளங்கினார். இவர் செய்த தொழில் காளை, குதிரைகட்கு லாடம் அடிக்கும் வேலை! “லாடவேலை” ஐயாவு ராவுத்தர் என்றே இவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. வீராட்சி மங்கலம் கந்தசாமிக் கவிராயர் பாடிய வேளாள புராணத்தைக் கொங்கார்பாளையம் முத்துசாமிக் கவிராயர் ஈரோடு நித்திய கலியாண சுந்தரம் அச்சுக் கூடத்தில் 1907ஆம் ஆண்டு அச்சிட்டார். அந்நூலுக்கு ஐயாவு ராவுத்தர் சாற்றுக்கவிகள் அளித்துள்ளார். ஐயாவு ராவுத்தர் காங்கயம் அட்டாவதானி சேஷாசலக் கவிராயரிடம் தமிழ் கற்றவர். <poem> 1) மணிதாங்கும் எழில் மாடம் அவரும்எழில் வீராட்சி ::மங்கலத்தில் பிணிதாங்கும் அகல்ஞாலம் முழுதேத்த வந்ததிக ::பாலவல்லோரின் அணிதாங்கும் கவிகந்த சாமிஎனும் நாவலவன் ::அன்பின் கீர்த்தி கணிதாங்கும் குவளைமலர்க் காராளர் குலப்பெருமை ::கதிக்கவேண்டி 2) சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்கும் ::தொடராஇன்பத்து என்நோக்கம் நன்னோக்காய் இசையும்இலக் காணமுறையில் ::ஏயும் அன்பால் முன்நோக்கும் புலவர்அவர் தம்நோக்கும் தன்நோக்காய் ::மொழிய நாளும் பன்னோக்கும் ஆர்ந்திடும்வே ளாளர்புரா ணத்தை இங்கு ::பணிந்து தந்தான் </poem> என்பவை அவற்றில் இரு பாடல்களாகும். <section end="38"/> {{nop}}<noinclude></noinclude> sa1xliz7uvu5ub59ggf7gq7j33sf3se பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/64 250 489045 1835042 1658078 2025-06-24T10:46:06Z ஹர்ஷியா பேகம் 15001 1835042 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 63}} {{rule}}</noinclude><section begin="39"/> {{dhr|3em}} {{center|<b>{{larger|39. கந்தன் சர்க்கரைக்கு வாள் பயிற்சி தந்த காதர் பாட்சா}}<ref>*பழையகோட்டை மரபுப் பாடல்கள் - எண் 37: பக்கம் 41</ref></b>}} தமிழ்நாட்டில் பல வேலூர்கள் உண்டு. அதனால் வட ஆர்க்காடு மாவட்டத்திலிருந்து பிரிந்து மாவட்டத் தலைநகராக விளங்கும் வேலூரை மக்கள் ராய வேலூர் (அரசர் உள்ள வேலூர்) என்று அழைப்பர். அங்கு 16ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மிகப் புகழ்வாய்ந்த வாள்போர் வீரர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் காதர் பாட்சா என்பதாகும். வாள்போர் பயிற்சி அளிப்பதில் காதர் பாட்சா மிகவும் வல்லவர். ஈரோடு மாவட்டம், காங்கயம் வட்டம், பழைய கோட்டைப் பட்டக்காரர்கள் கொங்கு வேளாளர் சமூகத் தலைவர்கள் ஆவார். அப்போது 14ஆம் பட்டக்காரராக இருந்த கந்தன் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் வாள் பயிற்சி பெற, குறிப்பாக இரண்டு கைகளிலும் இரு வாள்களை வைத்துக் கொண்டு இரு கைகளாலும் சண்டை செய்யப் பழக வேண்டும் என்று விரும்பினார். காதர் பாட்சா பழைய கோட்டைக்கு வந்தார். பழைய கோட்டை அரண்மனையில் தங்கி 48 நாட்கள் பயிற்சி அளித்தார். பட்டக்காரர் இருகைகளிலும் வாள் எடுத்துச் சண்டை செய்யவும் வல்லமை பெற்றவர். பட்டக்காரர் மிக மகிழ்ந்து அவருக்குப் பயிற்சி அளித்த தொகையுடன் ஒரு குதிரையையும் இனாமாகக் கொடுத்தார். இந் நிகழ்ச்சியைப் பழையகோட்டை அரண்மனைப் சுவடிப் பாடல் விளக்குகிறது. <poem> அட்டான நாடுபுகழ் கந்தன்சர் கரைஎன்னும் ::அதிபருக்கு பட்டாணி முகமதிய ராயவேலூர் காதர் ::பாட்சா என்போன் எட்டாறு நாளினிலே இரண்டுகை யிலும்கத்தி ::எடுத்து வீச நெட்டாகப் பழக்கெஒரு குதிரைஒன்று இனாம்கொடுக்க ::நிலைபெற்றானே</poem> <section end="39"/>{{nop}}<noinclude> {{rule}} {{Reflist}}</noinclude> sysg1y1gwb98951dlkuryhrc6nn5h38 அட்டவணை பேச்சு:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf 253 537219 1834994 1833824 2025-06-24T09:01:26Z Info-farmer 232 /* பொருளடக்கப் பக்கங்கள் */ புதிய பகுதி 1834994 wikitext text/x-wiki == மேற்கோளிடல் == [[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/60]] என்ற பக்கத்தின் மேற்கோள் அதன் அடுத்தப் பக்கத்தில் உள்ளது. அதற்குரிய குறியீடுகளை இரு பக்கத்திலும் இட்டுள்ளேன். புதியவருக்கு இது தவறு போல தோன்றும். ஏனெனில் ஒரு பக்கத்தில் இல்லாத தரவு, அப்பக்கத்தில் இருக்கிறது. ஆனால் மெய்ப்பு காண்பது என்பது இறுதியில் பக்க ஒருங்கிணைவு செய்து, மெய்ப்பு முடிந்த நூலினை [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில் இணைப்பது என்பதனை கருத்தில் கொண்டு பங்களியுங்கள். எனவே, மேற்கோள் குறிகளைக் கையாளுங்கள். ஐயமிருப்பின் உடன் பங்களிக்கும் நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:57, 16 சூலை 2024 (UTC) ===pdf/16, 18=== {{ping|Info-farmer}}16 ஆம் பக்கத்தில் சான்றுக்கான குறியும் 18 ஆம் பக்கத்தில் சான்றும் உள்ளது. நான் சான்றை 16 ஆம் பக்கத்தில் இணைத்து விட்டு, 18 இல் நீக்கியிருக்கிறேன். ஒருங்கிணைவில் இது சரியாக அமையும்தானே? இரு பக்கங்களிலும் அவசியம் இருக்க வேண்டுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:48, 20 சூன் 2025 (UTC) :மிகச்சரி. அப்பொழுதுதான் பக்க ஒருங்கிணைவின் இறுதி ஆவணம் சிறப்பாக அமையும். ஏனெனில், இது போன்ற வடிவமைப்புப் பிழைகளை, நீங்கள் செய்தபடி செய்வதே சிறப்பு. நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:24, 21 சூன் 2025 (UTC) :pdf/18 இன் கீழடியில் தமிழெழுத்துப்போல ஒன்று உள்ளது. அதை எவ்வாறு தட்டச்சுவது என்று தெரியவில்லை. வழிகாட்டுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:51, 20 சூன் 2025 (UTC) ::அது நூலினை உருவாக்கும் போது, அச்சகத்தில் அவர்கள் வசதிக்காக எழுதிய குறிப்பு என்றே எண்ணுகிறேன். மேலும், கீழடி பெரும்பாலும் சான்றுகள் தரும் பகுதி அது பக்க ஒருங்கிணைவில் வராது. ஆனால் சான்று வார்ப்புரு இட வேண்டும். அப்பொழுதே பக்க ஒருங்கிணைவின் இறுதியில் அச்சான்றுகள் தோன்றும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:21, 21 சூன் 2025 (UTC) == பொருளடக்கப் பக்கங்கள் == @[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] வணக்கம். இந்நூலில் நான்கு பொருளடக்கப் பக்கங்கள் உள்ளன. முதல் இரண்டு பக்கங்களுக்குரிய துணைப்பக்கங்களை உருவாக்கியுள்ளேன். அதாவது 101வது பக்கம் வரை. அத்துணைப்பக்கங்கள், மெய்ப்புத்திருத்தலுக்கு உதவும் என்றே எண்ணுகிறேன். ஓரிரு நாட்களில் மீதமுள்ள பொருளடக்கப் பக்கங்களுக்கும், துணைப்பக்கங்களை உருவாக்கித் தருகிறேன். இது போன்று உருவாக்குதல் உங்களுக்கு மேற்பார்வையிட உதவியாக இருக்குமா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:01, 24 சூன் 2025 (UTC) 6r3tobowubtv26c0uc1g3cnpnch7bcj 1835004 1834994 2025-06-24T09:10:14Z Info-farmer 232 /* பிரிவுக்குறியீடுகள் */ புதிய பகுதி 1835004 wikitext text/x-wiki == மேற்கோளிடல் == [[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/60]] என்ற பக்கத்தின் மேற்கோள் அதன் அடுத்தப் பக்கத்தில் உள்ளது. அதற்குரிய குறியீடுகளை இரு பக்கத்திலும் இட்டுள்ளேன். புதியவருக்கு இது தவறு போல தோன்றும். ஏனெனில் ஒரு பக்கத்தில் இல்லாத தரவு, அப்பக்கத்தில் இருக்கிறது. ஆனால் மெய்ப்பு காண்பது என்பது இறுதியில் பக்க ஒருங்கிணைவு செய்து, மெய்ப்பு முடிந்த நூலினை [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில் இணைப்பது என்பதனை கருத்தில் கொண்டு பங்களியுங்கள். எனவே, மேற்கோள் குறிகளைக் கையாளுங்கள். ஐயமிருப்பின் உடன் பங்களிக்கும் நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:57, 16 சூலை 2024 (UTC) ===pdf/16, 18=== {{ping|Info-farmer}}16 ஆம் பக்கத்தில் சான்றுக்கான குறியும் 18 ஆம் பக்கத்தில் சான்றும் உள்ளது. நான் சான்றை 16 ஆம் பக்கத்தில் இணைத்து விட்டு, 18 இல் நீக்கியிருக்கிறேன். ஒருங்கிணைவில் இது சரியாக அமையும்தானே? இரு பக்கங்களிலும் அவசியம் இருக்க வேண்டுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:48, 20 சூன் 2025 (UTC) :மிகச்சரி. அப்பொழுதுதான் பக்க ஒருங்கிணைவின் இறுதி ஆவணம் சிறப்பாக அமையும். ஏனெனில், இது போன்ற வடிவமைப்புப் பிழைகளை, நீங்கள் செய்தபடி செய்வதே சிறப்பு. நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:24, 21 சூன் 2025 (UTC) :pdf/18 இன் கீழடியில் தமிழெழுத்துப்போல ஒன்று உள்ளது. அதை எவ்வாறு தட்டச்சுவது என்று தெரியவில்லை. வழிகாட்டுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:51, 20 சூன் 2025 (UTC) ::அது நூலினை உருவாக்கும் போது, அச்சகத்தில் அவர்கள் வசதிக்காக எழுதிய குறிப்பு என்றே எண்ணுகிறேன். மேலும், கீழடி பெரும்பாலும் சான்றுகள் தரும் பகுதி அது பக்க ஒருங்கிணைவில் வராது. ஆனால் சான்று வார்ப்புரு இட வேண்டும். அப்பொழுதே பக்க ஒருங்கிணைவின் இறுதியில் அச்சான்றுகள் தோன்றும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:21, 21 சூன் 2025 (UTC) == பொருளடக்கப் பக்கங்கள் == @[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] வணக்கம். இந்நூலில் நான்கு பொருளடக்கப் பக்கங்கள் உள்ளன. முதல் இரண்டு பக்கங்களுக்குரிய துணைப்பக்கங்களை உருவாக்கியுள்ளேன். அதாவது 101வது பக்கம் வரை. அத்துணைப்பக்கங்கள், மெய்ப்புத்திருத்தலுக்கு உதவும் என்றே எண்ணுகிறேன். ஓரிரு நாட்களில் மீதமுள்ள பொருளடக்கப் பக்கங்களுக்கும், துணைப்பக்கங்களை உருவாக்கித் தருகிறேன். இது போன்று உருவாக்குதல் உங்களுக்கு மேற்பார்வையிட உதவியாக இருக்குமா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:01, 24 சூன் 2025 (UTC) == பிரிவுக்குறியீடுகள் == @[[பயனர்:Booradleyp1|Booradleyp1]][https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf%2F47&diff=1834925&oldid=1834868 இதுபோன்று (<.section begin="5"/>)பிரிவுக்குறியீடுகளை தேவைப்படும் இடங்களில் நான் போட்டுவிடுகிறேன். நூல் முழுவதும் போட வேண்டியதில்லை. அதாவது ஒரு பக்கத்தில் இரண்டு தலைப்புகள் வரும் இடத்தில் மட்டும் போட்டால் போதும். அதாவது பொருளடக்கப் பக்கத்தின் வரிசை எண் ஒரே மாதிரி இருக்கும் இடத்தில் மட்டும் போட்டால் போதும். எடுத்துக்காட்டு, [[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/47|அச்சு எண் 46]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:10, 24 சூன் 2025 (UTC) pwqk7av7hb5izjmeh60pk5ti9zjc5ia 1835005 1835004 2025-06-24T09:10:48Z Info-farmer 232 /* பிரிவுக்குறியீடுகள் */ இணைப்பு 1835005 wikitext text/x-wiki == மேற்கோளிடல் == [[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/60]] என்ற பக்கத்தின் மேற்கோள் அதன் அடுத்தப் பக்கத்தில் உள்ளது. அதற்குரிய குறியீடுகளை இரு பக்கத்திலும் இட்டுள்ளேன். புதியவருக்கு இது தவறு போல தோன்றும். ஏனெனில் ஒரு பக்கத்தில் இல்லாத தரவு, அப்பக்கத்தில் இருக்கிறது. ஆனால் மெய்ப்பு காண்பது என்பது இறுதியில் பக்க ஒருங்கிணைவு செய்து, மெய்ப்பு முடிந்த நூலினை [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில் இணைப்பது என்பதனை கருத்தில் கொண்டு பங்களியுங்கள். எனவே, மேற்கோள் குறிகளைக் கையாளுங்கள். ஐயமிருப்பின் உடன் பங்களிக்கும் நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:57, 16 சூலை 2024 (UTC) ===pdf/16, 18=== {{ping|Info-farmer}}16 ஆம் பக்கத்தில் சான்றுக்கான குறியும் 18 ஆம் பக்கத்தில் சான்றும் உள்ளது. நான் சான்றை 16 ஆம் பக்கத்தில் இணைத்து விட்டு, 18 இல் நீக்கியிருக்கிறேன். ஒருங்கிணைவில் இது சரியாக அமையும்தானே? இரு பக்கங்களிலும் அவசியம் இருக்க வேண்டுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:48, 20 சூன் 2025 (UTC) :மிகச்சரி. அப்பொழுதுதான் பக்க ஒருங்கிணைவின் இறுதி ஆவணம் சிறப்பாக அமையும். ஏனெனில், இது போன்ற வடிவமைப்புப் பிழைகளை, நீங்கள் செய்தபடி செய்வதே சிறப்பு. நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:24, 21 சூன் 2025 (UTC) :pdf/18 இன் கீழடியில் தமிழெழுத்துப்போல ஒன்று உள்ளது. அதை எவ்வாறு தட்டச்சுவது என்று தெரியவில்லை. வழிகாட்டுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:51, 20 சூன் 2025 (UTC) ::அது நூலினை உருவாக்கும் போது, அச்சகத்தில் அவர்கள் வசதிக்காக எழுதிய குறிப்பு என்றே எண்ணுகிறேன். மேலும், கீழடி பெரும்பாலும் சான்றுகள் தரும் பகுதி அது பக்க ஒருங்கிணைவில் வராது. ஆனால் சான்று வார்ப்புரு இட வேண்டும். அப்பொழுதே பக்க ஒருங்கிணைவின் இறுதியில் அச்சான்றுகள் தோன்றும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:21, 21 சூன் 2025 (UTC) == பொருளடக்கப் பக்கங்கள் == @[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] வணக்கம். இந்நூலில் நான்கு பொருளடக்கப் பக்கங்கள் உள்ளன. முதல் இரண்டு பக்கங்களுக்குரிய துணைப்பக்கங்களை உருவாக்கியுள்ளேன். அதாவது 101வது பக்கம் வரை. அத்துணைப்பக்கங்கள், மெய்ப்புத்திருத்தலுக்கு உதவும் என்றே எண்ணுகிறேன். ஓரிரு நாட்களில் மீதமுள்ள பொருளடக்கப் பக்கங்களுக்கும், துணைப்பக்கங்களை உருவாக்கித் தருகிறேன். இது போன்று உருவாக்குதல் உங்களுக்கு மேற்பார்வையிட உதவியாக இருக்குமா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:01, 24 சூன் 2025 (UTC) == பிரிவுக்குறியீடுகள் == @[[பயனர்:Booradleyp1|Booradleyp1]][https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf%2F47&diff=1834925&oldid=1834868 இதுபோன்று (<.section begin="5"/>) பிரிவுக்குறியீடுகளைத்] தேவைப்படும் இடங்களில் நான் போட்டுவிடுகிறேன். நூல் முழுவதும் போட வேண்டியதில்லை. அதாவது ஒரு பக்கத்தில் இரண்டு தலைப்புகள் வரும் இடத்தில் மட்டும் போட்டால் போதும். அதாவது பொருளடக்கப் பக்கத்தின் வரிசை எண் ஒரே மாதிரி இருக்கும் இடத்தில் மட்டும் போட்டால் போதும். எடுத்துக்காட்டு, [[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/47|அச்சு எண் 46]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:10, 24 சூன் 2025 (UTC) csbi1rzwr7nynt0nubbx1cujd7xj1ka பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/136 250 616193 1834676 1820650 2025-06-23T13:16:13Z Booradleyp1 1964 1834676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகாலவருச சுபதுங்கர்|100|அகிச்சத்திரா}}</noinclude>{{larger|<b>அகாலவருச சுபதுங்கர்:</b>}} இராட்டிரகூட அரசர் கிருட்டிணராசருக்கு, சுபதுங்கர், அகாலவருசர் என்னும் பெயர்கள் உண்டு. தந்திதுருகர் என்னும் அரசர் குழந்தையின்றி இறந்தார் என்பதனைக் கர்தா (Karda) என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வேட்டு ஒன்று குறிப்பிட்டுள்ளது. அவருக்குப் பின்னர்ப் பட்டத்திற்கு வந்தவர்தான் கிருட்டிணராசர்; அவர் தந்திதுருகரின் தந்தைவழிச் சிற்றப்பனாவர். தந்திதுருகர் விட்டுச் சென்ற பணியை அகாலவருசர் நிறைவேற்றினார். அவர் சாளுக்கியர்களை வெற்றி கண்டார். அவரைப் பற்றிக் கூறும் இரு கல்வெட்டுகள், அவர் “சாளுக்கிய இனம் என்னும் கடலைக் கடைந்து இலக்குமி என்னும் முதன்மையான பேராட்சியை நிலைநாட்டினார்” என்று உருவகப்படுத்திக் கூறுகின்றன. இராகப்பா என்பவரைத் தோற்கடித்து முதன்மையான பேராட்சியை நிலைநாட்டினர் என்று அகாலவருச சுபதுங்க கிருட்டிணராசரைப் பற்றிக் கூறுவர். வார்தாச் செப்பேடுகள் இவ்வரசர் சிவனுக்குப் பல கோயில்களைக் கட்டினார் என்றும் அவை கயிலை மலையை ஒத்திருந்தன என்றும் கூறுகின்றன. கிருட்டிணராசர், எலபுரா மலையில் அழகான கோயிலைக் கட்டுவித்தார் என்று பரோடா கல்வெட்டுச் சாசனம் குறிப்பிடுகிறது. அவரால் கட்டப்பட்ட சிவன்கோயில் இன்றும் நிலைத்துள்ளது. கிருட்டிணராச அகாலவருச சுபதுங்கர் கி.பி. 753-775 வரை ஆண்டிருக்க வேண்டும் என்பது இராதாகிருட்டிண கோபால் பண்டார்க்கரின் கருத்தாகும். {{larger|<b>அகிச்சத்திரா</b>}} உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பரேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம், மகாபாரத காலத்திலிருந்தே இந்நகர் இருந்ததாகக் கருதுவர். தாலமி இதனை அதிசத்ரா (Adisadra) என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு வருகை புரிந்த யுவான் சுவாங் என்னும் சீன நாட்டுப் பயணி இங்குப் பல பெளத்த மடாலயங்கள் இருந்ததாகத் தம் குறிப்புகளில் எழுதியுள்ளார், இந்நகர மக்கள் கல்வி கற்பதிலும் விடாமுயற்சியிலும் பெயர் பெற்றவர்கள் என்றும், உணவுப் பொருள்களை விளைவித்தும் காடுகளை வளர்த்தும் வந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் தட்பவெப்ப நிலை வாழ்வதற்கேற்றதாக இருந்தது என்றும் அவர் கூறுகிறார். சமணர்கள் இந்நகரைச் சம்கயவதி எனக் குறித்தனர். பார்சுவநாதர் இவ்விடத்திற்கு வந்ததாகவும் தெரிகிறது. முகலாயர்களின் காலத்தில் இந்நகர் தனது மதிப்பினை இழந்தது. இங்கு அழிந்த நிலையில் காணப்பட்ட கோட்டைகளையும் பிற அழிவுச் சின்னங்களையும் பார்வையிட்ட ஆட்சன் (Hodgson) என்ற தொல்லியல் அறிஞர் இவ்வூரின் பழைமையை வெளிப்படுத்தினார். பின்னர் அலெக்சாந்தர் கன்னிங்காம் இங்கு அகழாய்வினை மேற்கொண்டார். இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை இவ்விடத்தில் 1940-44 வரை இராவ்பகதூர் கே.என். தீக்சித், ஏ. கோசு (A. Ghosh) ஆகியோர் தலைமையில் அகழாய்வினை மேற்கொண்டது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 136 |bSize = 480 |cWidth = 195 |cHeight = 125 |oTop = 172 |oLeft = 260 |Location = center |Description = }} {{center|அகிச்சத்திரா - அழிவுச்சின்னம்}} இவ்வூரில் கி.மு. 300 முதல் கி.பி. 1100 வரை நிலவிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகள் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பண்பாட்டுக் கூறுகள் ஒன்பது காலப் பிரிவுகளாகப் (Periods) பிரிக்கப்பட்டன. அகழாய்வில் வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள், வடக்கத்திய பளபளப்பான கருப்பு மட்பாண்டங்கள் (N.B.P. Ware) போன்றவை கிடைத்தன. பாஞ்சால அரசர்கள் பயன்படுத்திய நாணயங்கள், குசானர் நாணயங்கள், அச்சு என்ற எழுத்து பொறிக்கப்பட்ட நாணயம் ஆகியவை கிடைத்தன. இவற்றுள் அச்சு என்ற எழுத்து பொறிக்கப்பட்ட நாணயம் அச்சுதர் என்ற அரசரின் நாணயமாக இருக்கலாம் என்று தொல்லியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். அச்சுதர் என்னும் அரசனை, சமுத்திரகுப்தர் தோற்கடித்ததாக அலகாபாத் கற்றூண் குறிப்பிட்டுள்ளது. ஆதிவராகன், விக்கிரகன் என்னும் பெயர் கொண்ட 9, 10–ஆம் நூற்றாண்டு நாணயங்களும் இங்குக் கிடைத்துள்ளன. மேலும் கோயில்களின் அழிவுச் சின்னங்கள், சுடுமண் பொம்மைகள் போன்றவை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. சுடுமண் பொம்மைகளில் சுங்கர் காலத்தைச்<noinclude></noinclude> oa7q1pxs11a1xy9sxgy8q2k9x5ktmim பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/137 250 616203 1834677 1820984 2025-06-23T13:16:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகிம்சை|101|அகிம்சை}}</noinclude>சார்ந்த மிதுனா சுடுமண் உருவம் மிக்க அழகு வாய்ந்தது. {{larger|<b>அகிம்சை</b>}} என்பது கொல்லாமை, தீங்குசெய்யாமை என்று பொருள்படுவதுடன் தீமையான செயல்களைப் பற்றி மனத்தாலும் நினையாமை என்றும் பொருள்படும். காந்தியடிகள் கடைப்பிடித்த அகிம்சைக் கொள்கைக்கும் இதுவே விளக்கமாகும். இதிலிருந்து அகிம்சை என்னும் அறப்பண்பு எவ்வளவு ஆழமானதென்பது அறியப்படும். காந்தியடிகள் மேல் வாரியான நோக்கில் அறத்தின் இலக்கணத்தைக் கூறவில்லை. அவற்றைச் செயற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் தமது அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்திய பின்னரே பிறருக்கு அறிவுரை செய்தார். அதனால்தான், தமது சுயசரிதைக்கு உண்மையின் ஆராய்ச்சி (சத்திய சோதனை–My Experiments with Truth) என்ற தலைப்பினையும் அமைத்தார். காந்தி அடிகளின் அகிம்சைத் தத்துவத்திற்கு இன்னும் விளக்கம் தருவது, எல்லாச் சமயங்களின் அடிப்படையும் அகிம்சைதான் என்பது. இது அடிகளின் அசையாத நம்பிக்கை. இதுதான் உண்மையுமாகும். இந்நிலையில், வாய்மையும் அகிம்சையும் நெருங்கிய தொடர்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று விரும்பினார். அன்றாட வாழ்க்கையில் அகிம்சை நேரடியாகவே தொடர்பு கொண்டுள்ளது; வாய்மை அத்தொடர்புக்கு உறுதியளிக்கிறது. ஆகவே, வாய்மையில்லாத அகிம்சை பொருளற்ற செயலாகிவிடும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அகிம்சையின் ஆழமான பகுதியை மேலும் விளக்க முற்பட்டு அதனை மூன்று பிரிவுகளாக எடுத்துக் காட்டினார். தெளிந்த சிந்தனையும் ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டவர்கள் பின்பற்றும் அகிம்சை (Non-Violence of the Enlightened) முதன்மையானதாகும். அறிவு வளர்ச்சியும் ஆழ்ந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள் பின்பற்றும் அகிம்சை (Passive Non–Violence) இரண்டாம் நிலையினதாகும். கோழைகள் பிடிவாதமாகப் பின்பற்றும் அகிம்சை (Non–Violence of the coward) மூன்றாம் நிலையினதாகும். இவற்றுள் முதலில் குறிப்பிடப்பட்ட அகிம்சையே காந்தி அடிகள் சிறப்பானதென்று வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு வாய்மை, அகிம்சை என்னும் அறக் கருத்துகளின் ஆழமான விளக்கங்களைக் கூறியதுடன் காந்தியடிகள் அமையவில்லை; அக்கருத்துகள் எந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்வில் பயன்படும், பயன்படுத்தவேண்டும் என்பதையும் வரையறைப்படுத்திக் காட்டியுள்ளார். காந்தியடிகளின் அகிம்சைத் தத்துவம் சிந்தனை, சொல் என்ற அளவில் நின்றுவிடாமல் செயல் வடிவம் பெற்றுச் சிறப்பெய்துவதாகும். பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் துன்பமும் தொல்லையும் மனிதனை எதிர்கொள்ளத்தான் செய்கின்றன. அவற்றை அகிம்சையின் அடிப்படையில் அமைதியோடும் உறுதியோடும் வாய்மையின் அடிப்படையில் உள்ளத்தூய்மையோடும் துணிவோடும் அணுகும் செயல் முறையையே அவர் சத்தியாக்கிரகம் என்று கூறினார். காத்தி அடிகள் வழங்கிய சத்தியாக்கிரகக் கோட்பாடு இன்றைய அரசியல் உலகில் ஒரு சிறந்த தத்துவமாகவே திகழ்கிறது. தீமைகளைத் தீமையாலும் வன்முறைகளாலும் தீர்த்துவிட முடியாது; உண்மையான அன்பினாலும் தன்னலமற்ற தியாகத்தினாலும்தான் அவற்றை அகற்றவியலும், இக்கருத்தினையே திருவள்ளுவரும் வலியுறுத்திக் கூறியுள்ளார். ‘அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுபவர் உண்மையை அறியாதவரே; ஆராய்ந்து பார்க்குங்கால் பகையை ஒழிப்பதற்கும் துணையாக நின்று செயற்படுவது அன்பே’. காந்தி அடிகளின் சத்தியாக்கிரகம் என்னும் கோட்பாட்டைப் பின்பற்றுகிறவர்கள் முதற்கண் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து தீய எண்ணங்களையும் தன்னல உணர்வுகளையும் களைந்தெறிய வேண்டும்; உள்ளம் தூய்மை அடையும்போதுதான் அங்கே வாய்மை வலிமைபெறும்; உண்மை ஒளிவீசும்; அப்போதுதான் எதிரியின் உள்ளத்தையும் உருக்க முடியும். இந்நிலையில்தான் வாய்மையே வெல்லும் (Satyameva Jayate) என்ற அடிப்படைத் தத்துவம் மலருகிறது. இவ்விளக்கங்களிலிருந்து சத்யாக்கிரகம் என்னும் அறப்போர் எல்லோராலும் எளிதாகக் கையாளக் கூடியது அன்று என்ற உண்மையும் நன்கு விளங்குவதாகும். எனினும் இம்முறையைக் கடமை உணர்வுடனும் கட்டுப்பாட்டுடனும் கண்ணியமாகக் கையாண்டால் மனிதனுக்கு மனிதன் வேறுபாடுகளை உண்டாக்கிப் பகைமையை வளர்க்கும் மனப்பான்மை அழியும்; ஒழியும். சுருங்கக் கூறின், காந்தி அடிகளின் சத்தியாக்கிரகக் கோட்பாடு அறத்திறன் அடிப்படையில் அமைந்து அகிம்சையில் உருப்பெற்று வாய்மையில் செயற்படுவதாகும். அதில் வன்முறைக்கு இடமில்லை. மனிதனின் தன்னடக்கத்தாலும் உள்ளுணர்வாலும் தன்னலமற்ற தியாக உணர்வாலும் ஊக்குவிக்கப் பெற்று, வாய்மையே வெல்லும் என்னும் புனிதமான உணர்வின் அடிப்படையில் சத்யாக்கிரகம் இயங்க வேண்டும்; இயக்கவும் வேண்டும் என்பதுதான் காந்தியடிகளின் கொள்கையாகும். உண்ணாமை (Fasting), ஒத்துழையாமை (Non-Co-operation), அரசு பணி மறுப்பு (Civil-disobedience) போன்ற நடவடிக்கைகள் சத்தியாக்கிரகத்தின் செயல் வடிவங்களாகக்<noinclude></noinclude> h6nnc8w46fmkj7ae3qf1f9jqa2t3nhn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/138 250 616219 1834681 1820692 2025-06-23T13:22:02Z Booradleyp1 1964 1834681 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகிரிமன்|102|அகுதை}}</noinclude>கருதப்பட்டன. இருந்தபோதிலும், அச்செயல் வடிவங்களனைத்திற்கும் அடிப்படையாகிய அறத்தை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. ஏனென்றால் அறத்தை அடிப்படையாகக் கொள்ளாத எந்தச் செயலையும், காந்தியடிகள் மனிதச் செயலாகக் கருதவில்லை. அதனால்தான், அரசியலைப் புனிதப்படுத்தியவர் காந்தியடிகள் என்றும் அவர் புகழப்பட்டார். அறக்கருத்துகளேயாயினும், அவை அரசியல் அரங்கில் செயற்படும் நிலையில் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதனையும் காந்தியடிகள் அறிவுறுத்தியுள்ளார்கள். வழியும் முடிவும் என்பதே அக்கோட்பாடாகும் (Means and End). வாய்மையும் அகிம்சையும் என்னவென்பதைத் தெளிவாகத் தெரிந்து உணர்ந்து அவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பவர்களே, வழியும் முடிவும் என்ற கோட்பாட்டினையும் பின்பற்ற முடியும். பொதுவாக, ஒவ்வொருவரும் – ஆடவரும் பெண்டிரும், இளைஞரும் — முதியோரும் — ஏதாவதொன்றினை அடைவதற்கே முயன்றுகொண்டு இருக்கிறார்கள், பொருளைச் சேர்ப்பதிலோ பொன்னைப் பெறுவதிலோ புகழை ஈட்டுவதிலோ பதவிகளைப் பெறுவதிலோ வரம்பற்ற அதிகாரத்தைப் பெறுவதிலோ மனிதமனம் சிக்கி உழல்கிறது. இந்நிலையில், தாம் அடைய விரும்பும் எதனையும் சிறந்ததாகக் கருதி, எப்படியேனும் அதை அடைந்துவிட வேண்டும் என்று முயன்றால், அது தவறாகும். ஒரு பொருளை அடைய முற்படுவது எவ்வளவு சிறந்ததோ அவ்வளவு சிறந்தது அதனை அடைவதற்காகப் பின்பற்றும்வழி முறைகளும். சுருங்கக் கூறின், தவறான முறைகளைக் கொண்டு நல்லதொரு முடிபை அடைதல் கூடாது; வழிமுறையும் தூயதாக இருத்தல் வேண்டும். முடிவாகக் கூறுமிடத்து, இன்றைய அரசியல் உலகில் இந்தியாவில் மட்டுமன்றி அனைத்துலக அரங்கிலும் காந்தியடிகளின் அகிம்சைத் தத்துவம் மனித சமுதாயத்தின் அனைத்துச் சிக்கல்களையும் நல்ல முறையில் தீர்த்து உறவு மனப்பான்மையுடன் அனைத்து மக்களும் நாடுகளும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு உற்ற துணையாக உள்ளது என்பதை மேல்நாட்டு அரசியல் அறிஞர்களே ஏற்றுப் போற்றியுள்ளனர்.{{float_right|மு.மு.}} {{larger|<b>அகிரிமன்</b>}} செண்டு அவசுதா (Zend Avestha) என்ற சொராத்திரிய வேதத்தில் குறிப்பிடப் பெற்றுள்ள தீய தேவதையாகும். ஆகூரா மாசுதா எனும் தெய்வம் நற்கொள்கையின் உருவகம். சொராத்திரரின் கொள்கைப்படி உலகில் ஒரு கடவுள்தான் உண்டு. அவர்தாம் நற்கொள்கையின் உருவகமாகிய ஆகூரா மாசுதா (Ahura Mazda). அகிரிமனுக்கும் ஆகூரா மாசுதாவுக்கும் ஓயாத போராட்டம் நடைபெற்று வருவதாகவும் இறுதியில் ஆகூரா மாசுதாவே வெற்றி பெறுவதாகவும் சொராத்திரர்கள் நம்புகிறார்கள். {{larger|<b>அகிலேசபிள்ளை</b>}} யாழ்ப்பாணத்தைச் சார்ந்த திரிகோணமலையில் வாழ்ந்த புலவர். கார் காத்த வேளாளர். கி.பி. 1853-இல் பிறந்த இவர் 57 ஆண்டுகள் வாழ்ந்தார். தந்தை பெயர் அளகைக்கோன் வேலுப்பிள்ளை. இவர் நிகண்டுகள், நீதிநூல்கள் போன்றவற்றைக் குமாரவேலுப் பிள்ளையிடமும் இலக்கண இலக்கிய நூல்களையும் வடமொழியையும் தம் சிறிய தந்தையாராகிய தையல் பாகம் பிள்ளையிடமும் பயின்றார். ஆசிரியப் பயிற்சி பெற்று அரசினர் கல்லூரியில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். பணி ஓய்வு பெற்ற பின்னர்த் தமிழ்த் தொண்டிலும் சிவத்தொண்டிலும் ஈடுபட்டார். திருக்கோண நாயகர் பதிகம், திரிகோணமலை வில்லூன்றிக் கந்தசாமி பத்துப் பதிகம், திரிகோணமலை வில்லூன்றிக் கந்தசாமி பதம், கந்தசாமி கலிவெண்பா, திரிகோணமலை சிவகாமியம்மன் கும்மி, திரிகோணமலை விசாலாட்சியம்மன் விருத்தம், வெருகல் சித்திர வேலாயுதசாமி விருத்தம், சித்திர வேலாயுதசாமி தரிசனப் பத்து, சிவகாமியம்மன் ஊஞ்சல், சித்தி விநாயகர் ஊஞ்சல், பத்திரகாளி ஊஞ்சல், வேற்பத்து, மயிற்பத்து, விசுவநாதர் விருத்தம், தனிப்பாடல்கள், கண்டி நாடகம், கண்டனங்கள், நெஞ்சறி மாலை, விசாலாட்சியம்மை பெருங்கழி நெடில் விருத்தம், கந்தசாமி விருத்தம், திருக்கோணாசல வைபவம் என்பன இவர் செய்த நூல்கள். திருக்கரசைப் புராணம், திருக்கோணாசல வைபவம், கோணேசர் கல்வெட்டு, நரேந்திர சிங்கராசன் வசந்தன் சிந்து, வெருகல் சித்திர வேலாயுதசாமி காதல் என்னும் நூல்களை இவர் பதிப்பித்துள்ளார்.{{float_right|த.கு.மு.}} {{larger|<b>அகுதை</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த வீரனும் வள்ளலும் ஆவான். இவன் பெயர் அஃதை எனவும் சிலவிடங்களில் காணப்படுகிறது. இவன் நாளோலக்கத்தில் இருக்கையில் தன்பால் வரும் புலவர்கட்கு இனிய கள்ளும் களிறும் வழங்கும் இயல்பினன். இவன் அகவன் மகளிர்க்குப் பிடி யானைகளைப் பரிசிலாக நல்கினவன். ஆய் எயினன், மிஞிலியால் போரில் இறந்தபொழுது, எயினனைச் சார்ந்த வேண் மகளிர் பலரும் அழுது புலம்பினர். அவ்வொலியைக் கேட்டும் நன்னன் அங்குச் செல்லாததனை அறிந்து, அகுதை அங்குச் சென்று அம்மகளிரின் பெருந்துயரைப் போக்கி ஆறுதல் அளித்தான். இதனால் இவனது அருள்திறம் புலனாகிறது. கூடல் மாநகர்<noinclude></noinclude> a7apovlboyjveub52k87vmhs6r4arq4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/139 250 616230 1834684 1820716 2025-06-23T13:28:20Z Booradleyp1 1964 1834684 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகூகன்|103|அகோரமூர்த்தி}}</noinclude>இவனுக்குரியதாகும். இவனைக் கபிலர், பரணர் ஆகியோர் பாடியுள்ளனர். இவனுக்கு ஏதம் வாராது பாதுகாத்துக் கோசர் காவல் புரிந்தனர். {{larger|<b>அகூகன்</b>}} பண்டைய யாதவ அரசர்களுள் ஒருவன். கரந்துரை வாழ்விலிருந்து திரும்பி வந்த தருமர், அகூகனின் அரண்மனையில் நுழைந்தார். அக்குரூரர் என்பவருக்கு அவரைக் கிருட்டிணன் அறிமுகப்படுத்தினான். அகூகனுக்கு நூறு ஆண்பிள்ளைகள். அவர்கள் ஒவ்வொருவரும் தெய்வத்திற்கு இணையானவர்கள். சல்லியனின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் துவாரகையைப் பாதுகாத்தார்கள். அவருடைய ஆணையின்படி போதைப் பொருள்களின் உற்பத்தி அங்குத் தடைசெய்யப்பட்டது. இச்செய்தியை மகாபாரதத்தில் அறியலாம். {{larger|<b>அகோ (கி.பி. 1615–1675)</b>}} என்பார் ஒரு ஞானி. இவர் கி.பி. 1615–ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் பிறந்தவர்; தட்டார வகுப்பினர். இவர் குருவின் பெயர் பிரமானந்தர்; காசி நகரைச் சார்ந்தவர். தாழ்த்தப்பட்டவரான இவருக்குப் பிரமானந்தர் உண்மை ஞானத்தைக் கற்பித்தார். வேதாந்தத்தைப் பற்றி ‘அகே கீதா’ முதலிய பல காவிய நூல்களையும் ஆறு அடிகள் கொண்ட சந்தப்பாக்களையும் அகோ (Akko) இயற்றினார். குசராத்தி இலக்கியத்திற்குப் புது வழிகாட்டிப் புதுநடை வகுத்தளித்தவர் இவர். {{larger|<b>அகோபிலம்</b>}} என்பது ஓர் ஊர். இவ்வூரில் வைணவப் பெரியாரான அழகிய சிங்கர் மடம் உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டம் சிரவேல் வட்டத்தில் உள்ள இவ்வூரில் பெரிய அளவில் பெருமாள் கோயில் உள்ளது. மலையுச்சியிலும் சரிவிலும், அடிவாரத்திலுமாக மூன்று கோயில்கள் உள்ளன. மலை அடிவாரக் கோயிற் சுவரில் தீட்டப் பெற்றுள்ள இராமாயணக் காட்சிகள் எழில்மிக்கவை. மண்டபத் தூண்கள் ஏறத்தாழ மூன்று மீட்டர் சுற்றளவு கொண்டவை. கோயிலைச் சார்ந்த அகோபில மடம், ஆதிவண் சடகோப சுவாமிகளால் நிறுவப்பட்டது. அகோபில மடத்தின் கிளைகள் திருவரங்கம், காஞ்சிபுரம், திருவள்ளூர் முதலான ஊர்களில் உள்ளன. அகோபில மடத்தைச் சார்ந்த பள்ளிகளில் வேதங்கள் ஓதுவிக்கப்படுகின்றன. சென்னையில் அகோபில மடத்தில் வேத பாடசாலையொன்று செயற்பட்டு வருகிறது. {{larger|<b>அகோர சிவாச்சாரியார்</b>}} சோழ நாட்டைச் சேர்ந்தவர். இவர் குரு சர்வாத்ம சம்பு. கெளண்டில்ய கோத்திரத்தைச் சார்ந்த இவர் சிதம்பரத்தில் வாழ்ந்து வந்தார். இவர் வேதங்களையும் ஆகமங்களையும் பிற கருவி நூல்களையும் நன்கு கற்று உணர்ந்தவர். சர்வஞானோத்திரவிருத்தி, மிருகேந்திர விருத்தி, தீபிகை ஆகிய உரைநூல்களையும், பரார்த்த நித்திய பூசாவிதி போன்ற நூலையும் இயற்றினார். மேலும் தத்துவப் பிரகாசிகை, தத்துவ சங்கிரகம், நாத காரிகை, போக காரிகை முதலான நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவையன்றி, இவர் எழுதிய பாசண்டாப சயம், நாட்டியாப்யுதயம் முதலான நூல்கள் காலிய வகையைச் சார்ந்தவை. இவர் பெயரால் வழங்கும் அகோரசிவ பத்ததி தமிழ்நாட்டில் இன்றும் சைவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆசிரியர் இந்நாளுக்கு இட்ட பெயர் கிரியாதிரமோத்யோதிகை என்பதாகும். ‘பத்ததி’ என்பது ‘மரபுவழி’ என்று பொருள்படும். பதினெட்டுப் பத்ததிகள் உள்ளன. அகோரசிவ பத்ததியில் நித்திய கருமவிதி, பவித்திர விதி, கணேச பூசை, இட்டலிங்க பூசை, சாமானியதீட்சை, விசேட தீட்சை, நிருவாண தீட்சை, ஆசாரியாபிடேகம், அபர கிரியை என்று கூறப்படும் அந்தியேட்டி பற்றிய விதிமுறை விரிவாகக் கூறப்பட்டுள்ளன.{{float_right|பெ.தி.}} {{larger|<b>அகோர முனிவர்</b>}} சமயத் தலைவராகவும் பெரும்புலவராகவும் விளங்கியவர். இவர் கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். இவரை அகோரத் தம்பிரான் எனவும் அகோர முனிவர் எனவும் அழைப்பர். இவர் திருவாரூர்க் கோயிலில் திருமஞ்சனம் என்னும் அபிடேகக் கட்டளையை மேற்பார்க்கும் பொறுப்பில் இருந்தார். வடமொழி, தென்மொழி ஆகிய இரு மொழிப் புலமையும் வாய்க்கப் பெற்றவர். கும்பகோணப் புராணம், வேதாரணிய புராணம், திருக்கானப்பேர்ப் (காளையார் கோயில்) புராணம் என்னும் நூல்களை இயற்றியவர். இலக்கண விளக்கம் இயற்றிய வைத்தியநாத தேசிகருக்கு ஆசிரியர் இவர். ‘அகோரம்’ என்ற சொல் அச்சம் விளைக்கும் ‘உக்கிரம்’ என்ற பொருள் கொண்டது. இது பஞ்ச மந்திரங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. சிவபிரானுடைய ஐந்து முகங்களுள் ஒன்றாக அகோர முகம் குறிக்கப்படுகிறது.{{float_right|கி.கோ.}} {{larger|<b>அகோரமூர்த்தி</b>}} என்பது அச்சத்தினை விளைவிக்கும் சிவபெருமானது திருவுருவங்களுள் ஒன்றாகும். அகோரமூர்த்தியின் திருவுருவக் குறிப்புகள் காரணாகமம், சிவதத்வரத்னாகரம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன. இத்திருவுருவம் எட்டு, பத்து, முப்பத்திரண்டு கைகளுடையதாக அமைக்கப்படுவதுண்டு. எட்டுக் கைகளுடைய திருவுருவத்தில் சூலம், உடுக்கை, பாசம், கபாலம், தண்டம், வில், அம்பு, குறுவாள் ஆகியவை இடம் பெறும். கருத்த நிறம் உடைய இவரது உடல் ஆடையின்றியோ யானை, சிங்கம் ஆகியவற்றின் தோல்களிலான ஆடையணிந்தோ காணப்படும். உடலில் பாம்புகள்<noinclude></noinclude> aza2n23oggnnr3i0757pdvrjz5bd783 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/140 250 616383 1834685 1821273 2025-06-23T13:32:34Z Booradleyp1 1964 1834685 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகோரா|104|அங்கத பூபதி`}}</noinclude>தேள்கள் ஆகியவை அணிகலன்களாகத் திகழும். மிகுந்த அச்சத்தினையூட்டும் முகத்தோற்றமும், வாயின் இருபுறமும் வளைந்த கோரைப் பற்களும், பாம்பினால் கட்டப்பட்ட தலைமுடியும், கழுத்தில் மட்டும் நீல நிறமும் இத்திருவுருவத்தின் சிறப்புகளாம். மற்றொரு திருவுருவ அமைப்பில் எட்டுக் கைகளும், மூன்று கண்களும், அச்சம் தரும் முகத்தோற்றமும், கறுத்த நிறமும், வளைந்த கோரைப் பற்களும் காணப்படும். இவரது கழுத்தில் தலை மாலையும், குறுவாள் (Kadagamala) மாலையும் தேள்களாலான மாலையும் இடம் பெறுவதுண்டு. தலைமுடி தீச்சுடர் போலிருக்கும். செந்நிற ஆடையும் சிவந்த மலர் மாலையும் இவருக்கு அணிவது வழக்கம். இவர் கைகள் வேதாளம், குறுவாள், உடுக்கை, கபாலம், மணி முதலியவைகளைக் கொண்டும், மற்றிரு கைகள், சூலத்தை மார்புக்கு எதிராகச் சற்று மேல் நோக்கிப் பிடித்தவாறும் காணப்படும். பத்துக் கைகளையுடைய அகோரமூர்த்தி ‘தசபுய’ அகோரமூர்த்தி எனச் சொல்லப் பெறுவார். இவர் எட்டுக் கைகளில் பரசு, உடுக்கை, குறுவாள், கேடயம், அம்பு, வில், சூலம், கபாலம் ஆகியவை கொண்டிருப்பார். எஞ்சியுள்ள இரண்டு கைகள் அபயம், வரதம் ஆகிய முத்திரைகளைக் கொண்டு விளங்கும். முப்பத்திரண்டு கைகளையுடைய அகோரமூர்த்தி அச்சத்தின் வடிவாய்த் தலையில் சடாமகுடம், பிறைச் சந்திரன் ஆகியவற்றையும் முக்கண்களையும் கொண்டவராகக் காட்சியளிப்பார். தமிழகத்தில் காணப்படும் அகோரமூர்த்திச் சிற்பங்களுள் திருக்கழுக்குன்றம், பட்டீசுவரம் போன்ற இடங்களிலுள்ளவை அழகும் சிறப்பும் வாய்ந்தவையாகும்.{{float_right|ஏ.ஏ.}} {{larger|<b>அகோரா</b>}} என்பது பண்டைக் கிரேக்க நகரங்களில் இருந்த சந்தைக் கடையாகும். மக்களின் சமூக வணிக வாழ்வின் மையமும் அதுவேயாம். அகோரா திறந்த வெளிச் சதுர அமைப்பைக் கொண்ட முற்றம் போன்றது. திறந்தவெளி அரங்கத்தைச் சுற்றிலும் எல்லையாகப் பொதுக் கட்டிடங்களும், நகரின் சிறப்பான கோயில்களும், கடைகளும் இருந்தன. தொன்மையான கிரேக்க நகரங்களில் அகோராக்கள் எனப்படும் சந்தைக்கடைகள் யாதொரு திட்டவட்டமான அமைப்பில்லாமல் ஒழுங்கீனமான முறையில் எழுந்தன. ஆனால், அலெக்சாந்தரால் நிறுவப்பெற்ற நகரங்கள் எழுந்தபோது அகோராக்கள் திட்டமிட்ட முறையில் அமைக்கப்பெற்றன. ஆதன்சு (Athens) நகரில் அகோராக்கள் மேற்குறிப்பிட்ட இரண்டு வகைகளையும் இணைத்து எழுப்பப் பெற்றன. {{larger|<b>அகோராத்திரமூர்த்தி</b>}} சிவமூர்த்தங்களுள் ஒன்று. சத்ததந்து என்னும் அசுரனைக் கொல்லச் சிவபெருமான் மேற்கொண்ட கோலமாகும். சத்த தந்து என்பவன் தக்கனைப் போல் வேள்வி செய்ய அதில் தேவர் பலர் அவிகொள்ளச் சென்றனர். அதனால், அவ்வேள்வியை அழிக்கச் சிவபெருமான் எண்ணி, ஆகாயத்தைத் தேராகவும், வாயுவைக் குதிரையாகவும், அக்கினியை வில்லாகவும், சந்திரனை நாணாகவும், நீரை அம்பாகவும் கொண்டு தேவரை விரட்டி யாகத்தை அழித்ததாகக் கூறப்படுகிறது. சிவபெருமானது ஆயுதம் ஒன்றையும் இப்பெயரால் குறிப்பர். {{larger|<b>அங்கத பூபதி</b>}} வடநாட்டில் வாழ்ந்து, திருமாலடியாராகத் திகழ்ந்தவன். இவனுக்கு இராயசிங்கு என்னும் பெயருடைய உடன் பிறந்தான் ஒருவன் திருந்தான். அங்கத பூபதியின் மனைவி திருமாலடியார்களிடம் அன்புடையவளாக இருந்தாள். அவளுக்கு அருளுரை கூறிய ஆச்சாரியார் ஒரு நாள் அவன் இல்லத்திற்கு வந்தார். அங்கத பூபதியின் மனைவி தன் ஆச்சாரியாருக்குச் சிறப்பாக உணவு படைக்க ஏற்பாடு செய்தாள். இதனைக் கண்டு அங்கதபூபதி பொறாமை கொண்டான். தன் மனைவியைப் பார்த்து, “கற்புடைய பெண்களுக்குக் கணவனைப் பார்க்கினுஞ் சிறந்த தெய்வம் வேறு இருக்கிறதோ? இருந்தால் காட்டு, நான் ஒருவன் இருக்கும்போது இவ்வாறெல்லாஞ் செய்கின்றாயே” என்று கேட்டான். அங்கத பூபதி கூறியதைக் கேட்டதும் அவன் மனைவிக்கு மிகுந்த வருத்தம் உண்டாயிற்று. உணவு முதலியன கொள்ளாமல் மூன்று நாள் திருமாலையே நினைந்திருந்தாள். திருமால் அங்கத பூபதியின் கனவில் தோன்றி, ‘உன் மனைவியிடம் கணவனினும் சிறந்த தெய்வத்தைக் காட்டுமாறு கேட்ட தெய்வம் நான்தான்’ என்று கூறி மறைந்தருளினார். அங்கத பூபதி திடுக்கிட்டு விழித்தான். தன் மனைவியிடம் போய், “நான் உன் மீது வீணே சினங் கொண்டேன். நீ உனது விருப்பம் போல் திருமாலையும் அவனடியார்களையும் போற்றி வழிபடுவாயாக” என்று சொன்னான். உடனே அவள் தன் ஆச்சாரியாரைக் கொண்டு கணவனுக்கும் தீட்சை வழங்கச் செய்தாள். அதன் பிறகு கணவன், மனைவி இருவருமே திருமாலிடத்தில் பெருமாலுடையவர்களாய் விளங்கினர். இவ்வாறு இருக்கையில், அங்கத பூபதியின் அண்ணன் இராயசிங்கு தன் பகைவர்கள் மீது தம்பியைப் படையெடுத்துச் செல்லப் பணித்தான். அங்கத பூபதியும் அவ்வாறே போய்ப் பகைவர்களை வென்று அவர்களுடைய பொருள்களைக் கைப்பற்றினான். அப்பொழுது பெரிய வயிரமணி ஒன்று கிடைத்தது. அது அழகியதாகவும் அருமை-<noinclude></noinclude> dilamam8dyvmga6vy0aky9raq0tcefx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/141 250 616399 1834687 1821314 2025-06-23T13:37:30Z Booradleyp1 1964 1834687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்கதம்|105|அங்கதம்}}</noinclude>யானதாகவும் இருந்தபடியால் அதனைத் திருமாலுக்குச் சூட்ட விரும்பிப் பாதுகாத்து வைத்திருந்தான். இராயசிங்கு இச்செய்தியை அறிந்தான். அம்மணியை எவ்வாறேனும் கைப்பற்ற வேண்டும் என்று பெருமுயற்சி செய்தான். முடியாமற் போகவே தம்பியைக் கொன்று கைப்பற்றுவதென்று முடிவு செய்தான். தன் தங்கையிடம் நஞ்சினைக் கொடுத்து உணவிற் கலந்து கொடுக்குமாறு கட்டளையிட்டான். அண்ணனுக்கு அஞ்சிய அவள் அவ்வாறே செய்தாள். அங்கத பூபதி இதனை அறிந்தும், அதனைக் கடவுளுக்குப் படைத்து உண்டான். அதனால் அவனுக்கு எத்தகைய ஊறும் உண்டாகவில்லை. பின்னர் அங்கிருப்பதற்கு விருப்பமில்லாதவனாய் மனைவியோடு சகநாதத்தை நோக்கிப் புறப்பட்டான். இதனை இராயசிங்கு உணர்ந்து அவ்வயிரமணியைக் கைப்பற்றி வருமாறு அமைச்சனைப் படையோடு அனுப்பி வைத்தான். அமைச்சன் சென்று வயிரமணியைக் கைப்பற்ற எண்ணினான். அங்கத பூபதி அவ்வயிரமணியை அண்மையில் இருந்த ஆற்றில் எறிந்து விட்டதைக் கண்ட அமைச்சன் தன் படைகளைப் பார்த்து அதனைத் தேடிக் கண்டெடுத்து வருமாறு சொன்னான். படையினர் நெடுநேரம் தேடி முயன்றும் அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கத பூபதி, அமைச்சனையும் தேடுபவர்களையும் பார்த்து, “நீங்களேன் வீணாக வருந்துகிறீர்கள்? என்னோடு வந்தால் அது சகநாதர்மீது இருத்தலைக் காட்டுகிறேன்” என்றான். எல்லோரும் சகநாதத்தையடைந்து சகநாதரைப் போற்றி வழிபட்டனர். அப்பொழுது அம்மணி சகநாதர் மார்பில் இருப்பதை அங்கத பூபதி அமைச்சனிடம் காட்டினான். அமைச்சன் கோயில் பூசாரிகளைப் பார்த்து இம்மணி இங்கு எவ்வாறு வந்தது? என்று கேட்டான். பூசாரிகள், மூன்று நாட்களுக்கு முன்பு அங்கத பூபதி இதனை எங்களிடம் கொடுத்தார். சகநாதர், பதக்கத்திற்பதித்து இதனை அணிக என்று கட்டளையிட்டனர். அவ்வாறே செய்துள்ளோம் என்று கூறினர். அமைச்சன் இச்செய்திகளை இராயசிங்கிற்குத் தெரியப்படுத்தினான். இராயசிங்கு தன் தம்பி சகநாதனுக்குத் தொண்டனானதை அறிந்து மகிழ்ந்தான். அவனிடத்துப் பேரன்பு கொண்டான். உடனே திரும்பி இங்கு வந்து விடுக – சகநாதன் மீது ஆணை என்று கடிதம் எழுதினான். அங்கத பூபதியும் திரும்பி ஊரையடைந்து திருமாலைப் போற்றி வழிபாடு செய்து வாழ்ந்தான்.{{float_right|த.கோ.}} {{larger|<b>அங்கதம்</b>}} என்பது ஓர் இலக்கிய வகை. இது தனிமனிதன், சமுதாயம், நிறுவனம் முதலியவற்றில் காணப்படும் குறைபாடுகளைத் திறனாய்வு செய்யும் ஒரு கேலிச் சித்திரம். அன்றியும், அங்கதம் (Satire) செய்யுளில் எடுத்தாளப்படும் ஓர் உத்தியுமாகும். அங்கத இலக்கியம் முதன்முதல் உரோம் நாட்டில் தோன்றியது எனச் சில திறனாய்வாளர் கருதுகின்றனர். ஆனால் அதற்கு முன்னரே மிகப் பழைய கிரேக்க நாடகங்களில் அங்கதக் குறிப்புகள் அமைந்துள்ளன என்று மற்றொருசார் திறனாய்வாளர் கருதுவர். கிரேக்க உரோமானிய இலக்கியங்களில் அமைந்திருந்தது போலவே, பழந்தமிழ் இலக்கியங்களிலும் அங்கதக் குறிப்புகள் வந்துள்ளன. காலத்தால் எது முந்தியது பிந்தியது என அறுதியிட்டுக் கூறுவதற்கில்லை. கிரேக்க, இலத்தீன், தமிழ் இவக்கியங்களை அடியொற்றி ஆங்கில இலக்கியத்திலும் அங்கதம் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. பொதுவாக மேலைநாட்டில் கவிதையின் வடிவம் கொண்டு அங்கதத்தைப் பாகுபடுத்தினர். பொருள் நோக்கிப் பிரிக்கும் நிலை காலத்தால் பிற்பட்டது. அங்கதம் கொடுமைகளையும் முறைகேடுகளையும் சாடுதல் என்ற கொள்கையிலிருந்து முகிழ்த்தது. பின்னர், அதுவே ஒரு கலையாக வளர்ந்தது. அங்கதப் படைப்பில் யாதேனும் ஒரு குறிக்கோள் இருத்தல் வேண்டும். சமுதாயம் திருந்த வேண்டும் என்ற குறிக்கோளுடன், கேலியும் நகையும் கலந்து பாடப்படுவது இது. ஒன்றன் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதற்கும், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கும் உள்ள வேறுபாட்டையே அங்கதம் அறிவுறுத்த முற்படுகிறது. மக்களால் புறக்கணிக்கப்பட்டவருடைய குற்றங்குறைகளைத் தகர்த்தெறிவதற்காக எவன் ஒருவன் மக்களை ஆற்றுப்படுத்துகிறானோ அவனே சிறந்த அங்கதப் படைப்பாளி ஆவான் என்பது மேனாட்டார் கருத்து. தொல்காப்பியர் எழுவகைப்பட்ட இலக்கியங்களைக் கூறும்போது அங்கதத்தையும் குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் ‘கூற்றிடை வைத்த குறிப்பு’ என்பர். இது செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என இருவகைப்படும். தொன்மைக்காலம் தொடங்கி இக்காலம் வரை எழுந்துள்ள தமிழிலக்கியங்களில் அங்கதப் பாங்கு தொடர்ந்து வந்துள்ளது. தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவையார் அவனது படைக்கலக் கொட்டிலைக் கண்டு பாடிய ‘இவ்வே பீலியணிந்து’ எனத் தொடங்கும் புறநானுற்றுப் பாடல் (95) அங்கதக் குறிப்புடையது எனப் பல திறனாய்வாளர் விளக்கியுள்ளனர். இது பழிகரப்பு அங்கதத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஒளவையார் தொண்டைமானின் படைக்கருவிகளைப் புகழ்வது போலப் புகழ்ந்து அவனது போர்த் திறமை இன்மையை - போர்க்களமே காணாத தன்-<noinclude></noinclude> sslae3nliy7mfcbw7fzk7t8bf39ujnt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/142 250 616432 1834688 1821546 2025-06-23T13:41:40Z Booradleyp1 1964 1834688 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்கதர்|106|அங்கதர்}}</noinclude>மையைச் சாடியுள்ளார். அதே நேரத்தில், அதிகமான் அஞ்சி படைப் பயிற்சி மிக்கவன் என்பதையும் அடிக்கடி போர்க்களம் செல்வதால் இவன் போர்க்கருவிகள் மழுங்கி எப்பொழுதும் கொல்லன் உலைக் களத்தில் கிடந்தன என்பதையும் கட்டியுள்ளார். இப்பாடலில் அங்கதக் குறிப்பு அமைந்துள்ளது. பிற்காலத் தனிப்பாடல்களில் அங்கதத்தினை மிகுதியாகக் காணமுடிகிறது. காளமேகப்புலவர் சிறந்த அங்கதப் புலவராவர். இவர் ஒரு சமயம் நாகப்பட்டினத்தில் உள்ள காத்தான் என்பவனது சத்திரத்திற்குச் சென்றார். அங்கு உணவு உண்பதற்காகப் புலவர் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. அதனால் மனம் வெதும்பிய காளமேகப்புலவர் காத்தானையும் அவனது சத்திரத்தையும் அவன் உணவு அளிக்கும் விதத்தையும் ஏளனமாகப் பாடினார். இப்பாடல் குறைகளைச் சுட்டிக்காட்டுவதால் அங்கதமாகிறது. “கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்” என்று தொடங்குவது அப்பாடல். இக்கால இலக்கியங்களுள் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை இயற்றிய ‘மருமக்கள் வழி மான்மியம்’ சிறந்த அங்கதக் குறிப்புகளையுடைய நூலாகும். நூற்பெயரிலும் பகுப்பிலும் அவர் அங்கதத்தைக் கையாண்டுள்ளார். நாஞ்சில் நாட்டுச்சமுதாயம் ஒன்றும் அதன் பல்வேறு அங்கங்களும் அங்கதப் பார்வைக்கு ஆளாயின. மூடப்பழக்க வழக்கங்களும் கவிஞரால் பெரிதும் சாடப்பட்டுள்ளன. இன்றைய புதுக்கவிதைகளில் அங்கதக் குறிப்பு முதலிடம் பெற்றுள்ளது. சங்க காலத்திலிருந்தே அங்கதச் சுவைதரும் பாடல்கள் இருந்தாலும் புதுக் கவிதைதரும் அங்கதத் தொனி புதுமையாக உள்ளது. அரசியல், சமுதாயம், கல்வி, நீதி, சாதி வெறி, நிருவாகம் போன்ற அனைத்துத் துறைகளுள்ளும் காணலாகும் குறைகளைச் சாடுவதில் வல்லவர்களாகப் புதுக் கவிஞர்கள் உள்ளார்கள். கவிதைகள் தவிர கதை, இக்காலக் கட்டுரை, நாடகம் போன்றவற்றுள்ளும் அங்கதம் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது. குற்றங் குறைகளை எதிர்த்து மனிதனால் வெற்றி பெற முடியாமல் இருக்கலாம். ஆனால் அவன் நீதியற்ற முறையை எதிர்த்துப் போராடிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற கொள்கையை உடையவர்களாக அங்கதக் கவிஞர்கள் இருக்கிறார்கள்.{{float_right|நா.செ.}} {{larger|<b>அங்கதர்</b>}} என்பவர் குருநானக்கைத் தொடர்ந்து வந்த சீக்கியர்களின் இரண்டாம் குரு. இவரது இயற்பெயர் இலானா. இவர் கி.பி. 1504-இல் பியாசு ஆற்றங்கரைக்கு அருகில் கடூர் என்ற சிற்றூரில் பிறந்தார். சீக்கியக் குருக்கள் வழிவழியாக அமர்த்தப்பட்டவர்கள் அல்லர். சீக்கியர் மக்களாட்சிக் கொள்கையின் அடிப்படையில் குருக்களை அமர்த்தினர். குருநானக்குக்கு இரு புதல்வர் இருந்த போதிலும், அவர் தம் வாரிசாகக் குரு அங்கதர் என்பாரையே அமர்த்தினார். அங்கதர் நேர்மை மிக்கவர்; கடமை தவறாதவர். நிறைந்த இறை ஈடுபாடு கொண்டவர். இவர் தம் தொடக்க நாள்களில் சுவாலமுகியில் உள்ள தேவியின் பக்தராக விளங்கினார். அதற்காகப் பன்முறை பயணங்களை மேற்கொண்டார். குருநானக் தம் வாழ்நாள் முழுதும் மக்களுக்குத் தன்னலமற்ற சேவை செய்தவர். இவரைப் பின்பற்றி மக்களுக்கு நீதி நெறிகளைப் போதித்தவர் அங்கதர். இவர் கி.பி. 1539—52–இல் குருவாக விளங்கினார். இவர் பஞ்சாபி மொழியின் எழுத்து வடிவத்தை வழக்கத்திற்குக் கொண்டு வந்தார். இதுவே காலப் போக்கில் துதிப்பாடல்களுக்குப் புனிதவடிவெழுத்துக்களாக உருப்பெற்றது. அங்கதர் குருநானக்கின் வரலாற்றைத் தொகுத்துள்ளார்; அவர்தம் துதிப்பாடல்கள் அனைத்தையும் திரட்டியுள்ளார். குருநானக்கின் வரவாற்றுத் தொகுப்பில் அவரைப் பற்றிய சீரிய உண்மை நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளன. அவர் காசுக்கு உணவு விற்கப்படாதவாறு பொது உணவுக் கூடத்தை ஏற்படுத்தினார். இக்கூடம் சீக்கிய சமயத்தினரின் பெருமைக்குச் சான்றாகும். இக்கூடத்திற்கு விருந்தினராகப் பலர் அழைக்கப்பட்டனர். எச்சமயத்தினராயினும், எத்தொழிலைப் புரிபவராயினும், எவ்வினத்தவராயினும், ஏழையாயினும், பணக்காரராயினும், எப்பாலாராயினும் அவர்கள் சீக்கிய குருவுடனும் சீடர்களுடனும் சேர்ந்து உணவருந்த அழைக்கப்பெற்றனர். இக்கூடம் ‘லங்கார்’ நிலையம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. உமாயூன் 1540-இல் செர்சாவால் முறியடிக்கப்பட்டு இலாகூர் நோக்கிச் செல்லும்போது, அங்கதரைப் பற்றிக் கேள்வியுற்றார். மொகலாயப் பேரரசு தமக்குக்கிடைக்க உதவிடுமாறு அங்கதரிடம் வேண்ட உமாயூன் கடூர் சென்றார். அப்போது அங்கதர் வழிபாட்டில் ஆழ்ந்திருந்தார். அவர் சீடர்கள் துதிப் பாடல்களை இசைத்தபடி அமர்ந்திருந்தார்கள். அதனால் உமாயூன் நெடுநேரம் காத்திருக்க நேர்ந்தது. உமாயூன் பொறுமை இழந்து சினமுற்றுக் குரு அங்கதரைக் கொல்ல நினைத்துக் கத்தியை ஓங்கினார். அப்போது அங்கதர் உமாயூனை நோக்கி ‘நீ செர்சாவை நோக்கிக் கத்தியை வீசாமல் கோழையாக ஓடிவந்து, இப்போது வீரனைப் போன்று இறையீடுபாட்டில் இருக்கும் குற்றமற்றவர்கள் மீது கத்தியினை வீசுகிறாய்’ என்று கூறினார். அதனைக் கேட்-<noinclude></noinclude> tsaj3zuaoh97x2cropmkdp7m3xnpzqm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/143 250 616456 1834689 1821596 2025-06-23T13:46:22Z Booradleyp1 1964 1834689 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்கதன்|107|அங்கப்ப நாவலர்}}</noinclude>டவுடன் உமாயூன் மன்னிப்புக் கேட்டார். பின்னர்ச் சிந்து ஆற்றைக் கடந்து ஈரான் நாடு சென்றடைந்தார். இந்நிகழ்ச்சியினை ஆதாரமற்றதெனச் சில வரலாற்று ஆசிரியர்கள் மறுத்துரைக்கிறார்கள். இருப்பினும், அனைத்துச் சீக்கிய வரலாறுகளும் இந்நிகழ்ச்சியினைக் கூறுகின்றன. உமாயூன் அங்கதரைச் சந்தித்து நல்வாழ்த்துப் பெற்றவர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தாமியற்றிய துதிப்பாடல்களை அங்கதர், ஆதிகிரந்தத்தில் இணைத்துள்ளார். இவருக்கு இரண்டு புதல்வர் இருந்தனர். இருவரும் பெரிய அறிவாளிகளாகத் திகழ்ந்தனர். எனினும், அவர்களை விடுத்து அமர்தாசர் என்பாரையே அங்கதர் மூன்றாம் சீக்கிய குருவாக அமர்த்தினார்.{{float_right|தி.வீ.}} {{larger|<b>அங்கதன்</b>}} கம்பராமாயணக் கதை மாந்தருள் சிறப்பிடம் பெற்றவன். இவன் வாலிக்கும் தாரைக்கும் பிறந்தவன். அழகு, அறிவு, ஆற்றல் போன்ற பண்புகளின் உறைவிடம். கம்பர் காப்பியத்தில் இராமனை முழு முதற் கடவுளாக உணர்ந்தோர் அனுமன், வீடணன் போன்ற சிலரே ஆவர். உயிர் பிரியும் காலத்துத் தன் மகனை அருகழைத்து “மால்தரும் பிறவி நோய்க்கு” இவன் மருந்து என்று நல்லுரை கூறுகிறான் வாலி. இறைக் காட்சி பெற்ற தந்தையைக் குருவாகப் பெற்று இராமனைப் பரம்பொருள் என்றுணரும் பேறு பெற்றவன் அங்கதன். வாலியின் வேண்டுகோளின்படி இராமன் அங்கதனை அடைக்கலமாக ஏற்றுக் கொள்ளும்போது தனது உடைவாளை அவன் கையில் கொடுக்கிறான். அதனைத் தாங்கும் தனிச் சிறப்பு அங்கதனுக்கே வாய்த்தது. இராம காதையின் முடிமணிப் பாடலில் ‘அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள்’ ஏந்தி நிற்கும் காட்சியைக் கம்பர் காட்டுகிறார். வாலியின் அன்பு மகன் என்பதை ‘வாலி காதலன்’ என்னும் தொடர் காட்டும். அரசியல் படலத்தில் ‘சீலம் நீ உடையை’ என இராமன் கூறுவது அங்கதனின் ஒழுக்கச் சிறப்புக்குச் சான்று பாரும். உரிய காலத்தில் உதவச் சுக்கிரீவன் செல்லாத போது, இலக்குவன் சினந்து வருகிறான். அப்போது அங்கதன் சுக்கிரீவனிடம் ‘செல்வம் எய்தி வியந்தனை, உதவி கொன்றாய், மெய்யிலை’ என இடித்துக் கூறும் தொடர்கள், செல்வத்தால் மயங்குதல், செய்ந்நன்றி மறத்தல், பொய்யனாதல் போன்ற தீய பண்புகளை அவன் வெறுத்த தன்மையைக் காட்டுவனவாம். சீதையைத் தேடிக் காணாது வருந்தித் தளரும் வானரப் படைக்கு ஊக்கம் கொடுப்பவன் அங்கதனே. கடல் கடந்த பின் இராமன் தூது அனுப்ப நினைக்கிறான். மாருதியின் நினைவு வருகிறது. மாருதியே மீண்டும் செல்லின் மிடல் உடையார் வேறில்லை என்று பகைவர் கருதுவர் என்ற ஐயமும் தோன்றுகிறது. ‘யாரினி ஏகத் தக்கார்’ என்ற இராமனின் வினாவிற்கு ‘அங்கதன் அமையும்’ என்ற சுக்கிரீவனின் சுருக்கமான விடை அவனது ஆற்றலுக்குப் பெரு விளக்கமாகும். ‘மாருதி அல்லனாகில், நீ எனும் மாற்றம் பெற்றேன்’ என்று அங்கதன் மகிழ்கிறான். ‘அனுமன் இல்லாவிட்டால் அங்கதன்’ என்னும் பழமொழியும் இது பற்றி எழுந்ததாகும். காப்பிய உறுப்புகளில் தூது சிறப்புடைய ஒன்று. இராம காதையில் அத்தகு சிறப்பினை அங்கதன் தூது பெறுகிறது. புகலடைகிறானா? போர் செய்ய விரும்புகிறானா? என இரண்டில் ஒன்று கேட்டு வா என்று அங்கதனைத் தூதனுப்புகிறான் இராமன். இராவணன் அவையில், ‘தேவியை விடுக, அன்றேல் ஆவியை விடுக’ என்று கூறுகிறான். மூர்க்கன் முடித்தலை அற்ற போதன்றி, ஆசை அறான் என்று இரத்தினச் சுருக்கமாகக் கூறி இருப்பது அங்கதனின் சொல்லாற்றலுக்குச் சான்று பகரும். மூல பலத்தின் ஆற்றலுக்கஞ்சி வானரச் சேனை சிதறி ஓடுகிறது. அப்போது, அதனை அமைதிப்படுத்தி, அபயம் கூறி, அச்சம் நீக்கி, அறஞ்சாரா அரக்கர், தொகையால் மிக்கவராயினும் மடிவர் என்று கூறி, மீண்டும் போராடச் செய்த பெருமை அங்கதனுடையது. வீடணன் மீது இராவணன் வேல் எறியும்போது அவன்முன் சென்று அதைத் தாங்க முற்படும் துணிவும் தியாக உணர்வும் படைத்தவன் அங்கதன். இந்திரசித்தின் தலையை இளையவீரன் கொய்து வீழ்த்தியபோது, அதனை ஏந்தி இராமனிடம் கொண்டு வரும் பெருமை அங்கதனைச் சார்ந்தது. போர்க்களத்தில் இராமனை அனுமன் தாங்கியது போல, இலக்குவனை அங்கதன் தாங்கி நிற்கிறான். அயோத்திக்கு இராமன் மீண்டு வருகிறபோது, அங்கதனே முன்னதாகச் செல்லும் சிறப்பும் பெறுகிறான். அனுமனுக்கு அடுத்தபடி வானரச் சேனையில் ஆற்றலும் அறிவும் படைத்தவன் அங்கதனே. இராமனுக்கு உதவுவதிலும் அவன் முந்தி வரும் இயல்பினன். “புகழுடைக் குரிசில்” என்று கம்பர் போற்றும் சிறப்பு அங்கதனுக்கே உரியதாம்.{{float_right|ஜி.ஆர்.கி.}} {{larger|<b>அங்கப்ப நாவலர்</b>}} விசுவகரும வகுப்பினைச் சேர்ந்த புலவர். இவர் செய்த நூல்கள் பரசமய கோளரியார் பிள்ளைத்தமிழ், பரசமய கோளரியார் திருவூசல், பரசமய கோளரியார் திருவம்மானை, பரசமய கோளரியார் ஆசிரியப்பாமாலை முதலியன. பரசமய கோளரியார் பிற சமயங்களை வென்ற<noinclude></noinclude> nxrvdig9b6uedwhgqsmroq7yvybwqtn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/144 250 616461 1834691 1821608 2025-06-23T13:51:49Z Booradleyp1 1964 1834691 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்கப்பப் பிள்ளை, நா.|108|அங்கவை}}</noinclude>சைவப் பெரியார். திருநெல்வேலியில் அவர் வாழ்ந்தவர் என்பது பரசமய கோளரி பிள்ளைத் தமிழால் தெரிகிறது. தொண்டை மண்டலத்துப் பொன்விளைந்த களத்தூரில் சிறந்து விளங்கிய வேதகிரி முதலியாரின் மைந்தர்களால் சிறப்பிக்கப் பெற்றவராதலின், அங்கப்பநாவலர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகலாம்.{{float_right|த.கு.மு.}} {{larger|<b>அங்கப்பப் பிள்ளை, நா.</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் பெரியார் மாவட்டம் பவானி என்னும் ஊரில் வாழ்ந்த புலவர். இவர் வாணியம்பாடி சங்கரச் செட்டியார் மகன் முருகப்பச் செட்டியாரின் சிறப்புகளை விளக்கிப் பாடியுள்ளார். இவர் பாடியுள்ள இந்நூல் முருகப்ப நவரச சிலேடை எனப் பெயர் பெறும். இது முருகப்பரவச சிலேடை என்றும் வழங்கப்படும். இதன்கண் 9 பாடல்களும் சில கையறுநிலைச் செய்யுட்களும் முருகப்பச் செட்டியாரின் மனைவி கன்னியம்மாள் மீது பிறர் பாடிய பாடல்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன. {{larger|<b>அங்கப்பப் பிள்ளை, பி.</b>}} திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் என்னும் ஊரினர். 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்புலவர் ஊர்க்காடு என்னும் ஊரில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர்தம் ஞானாசிரியராக விளங்கிய இராமசாமி சுவாமிகள் இயற்றிய ‘வேதாந்தப் பிரதீபம்’ என்னும் நூலுக்குச் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார். {{larger|<b>அங்கம்{{sup|1}}</b>}} கி.மு. 6–ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் இருந்த பதினாறு அரசுகளும் (மகாசனபதங்களுள்) ஒன்று. அது மகதப் பேரரசின் பகுதியாக இருந்தது. செல்வச் செழிப்பு மிக்கது. வரலாற்றுச் சிறப்பு நோக்கி, அங்கத்தைப் பற்றிய விவரங்களை மகாவத்து, யோகதந்திரம், இராமாயணம், மகாபாரதம், இருக்குவேதம், இலலிதவித்தாரம் போன்ற நூல்களில் காணலாம். இது சமண பௌத்த சமய வரலாறுகளுடன் நெருங்கிய தொடர்புடையது. பீகார் மாநிலத்தைச் சார்ந்த பாகல்பூர் பண்டைய அங்கம் எனக் கருதப்படுகிறது. இப்பகுதி கௌடில்யருக்கு நன்கு தெரிந்திருந்தது. அங்கத்தில் உயர்தர யானைகள் கிடைத்தனவென அவர் குறிப்பிட்டுள்ளார். {{larger|<b>அங்கம்{{sup|2}}</b>}} ஒரு மொழியின் பெயரும் ஆகும். பீகார் மாநிலத்தில் அங்கமொழி பேசுவோர் தொகை ஆறாயிரம் எனக் கருதப்படுகிறது. {{larger|<b>அங்கம்{{sup|3}}</b>}} என்பது இருக்கு முதலிய வேதங்களின் பகுதிகளையும் சுட்டும். சுவேதாம்பர, திகம்பர சமண சமய நூல்கள் பன்னிரண்டு அங்கங்களாகவும், பன்னிரண்டு உப அங்கங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. சமணத் துறவிகள் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்கள் இவற்றில் விளக்கப்பட்டுள்ளன. {{larger|<b>அங்கமாலை</b>}} பிற்காலத்தே தமிழில் தோன்றியுள்ள சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. வெண்பாப் பாட்டியல், பிரபந்த மரபியல் முதலிய பாட்டியல் நூல்களில் இதன் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. ஓராண்மகன் அல்லது பெண்மகளின் உறுப்புகளை வெண்பா அல்லது வெளி விருத்தங்களால் முறை பிறழாது தொடர்ச்சியுறப் பாடுவது அங்க மாலையாகும். “நிறுத்த வெளி விருத்தம் நீடுறுப்பில் வந்தால் குறித்தங்க மாலையாக் கொள்க” என வெண்பாப் பாட்டியலும், “அவ்வப் பெயரின் அங்க வகையை விளம்பி ஒழுங்கின் வெளி விருத்தத்தால், வழுத்துவது அங்க மாலையாமே” எனப் பிரபந்த மரபியலும் இதற்கு இலக்கணம் வகுத்துள்ளன. நான்காந்திருமுறையில் ஒன்பதாம் பதிகமாகச் சாதாரிப் பண்ணில் அமைந்துள்ள ‘தலையே நீ வணங்காய்’ எனத் தொடங்கும் திருநாவுக்கரசர் தேவாரப் பதிகம் இதற்கு எடுத்துக்காட்டாகும். இப்பதிகம் ‘திருவங்கமாலை’ என்று வழங்கப்படுகிறது. பன்னிரண்டு பாடல்களைக் கொண்ட இப்பதிகத்தில் தலை, கண், செவி, மூக்கு, வாய், நெஞ்சு, கை, ஆக்கை, கால் ஆகிய உறுப்புகளைத் தனித் தனியே விளித்து, அவை தத்தம் இயல்பினால் இறைவனைப் போற்றி நிற்றல் வேண்டும் என்பதனையும், அவ்வாறு போற்றாவிடில் அவற்றால் பயனில்லை என்பதனையும் திருநாவுக்கரசர் சிறப்பாக வலியுறுத்திப் பாடியுள்ளார். {{larger|<b>அங்கவை</b>}} கடையெழு வள்ளல்களுள் ஒருவனான பாரியின் மகளிர் இருவருள் ஒருத்தி. மூவேந்தர் சூழ்ச்சியால் பாரி இறந்தபின், அவன் மகளிர் இருவரையும், உயிர் நண்பராகிய கபிலர் அழைத்துச் சென்று, மன்னர்களுக்கு மணமுடிக்க முயன்று, முடியாமையின் பார்ப்பார் சிலரின் பாதுகாவலில் அவர்களை இருத்தி வடக்கே சென்றார் என்பது கூறப்படுகிறது. பாரி மகளிராகிய அங்கவையும் சங்கவையும் தம் வறிய நிலையினும் தம்மிடம் வந்த ஔவையாருக்கு விருந்திட, அவர் மகிழ்ந்து, இருவரையும் திருக்கோயிலூர் மன்னன் மலையமான் தெய்வீகனுக்கு மணமுடித்துத் தம் ஆற்றலால் மூவேந்தர் பகைமையையும் தீர்த்தருளினார் என்றும் கூறுவர். பாரி மகளிர் பெயர் அங்கவை சங்கவை என்பதற்குச் சங்க நூல்களிற் சான்றில்லை. ஒளவையார் பாரி மகளிர்க்குத் திருமணம் நிகழ்த்திய செய்திகள், சங்க காலத்திற்குப் பின்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒளவையாரின் தனிப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன.{{larger|<b>த.கு.மு.</b>}} {{nop}}<noinclude></noinclude> c70x53u8uy5gg06gbul8i17k28zfbuz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/183 250 617707 1835003 1826370 2025-06-24T09:08:08Z Desappan sathiyamoorthy 14764 1835003 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அசுதெக்கு|147|அசுதெக்கு}}</noinclude>பல்வேறு அரண்மனைகளையும் ஏறக்குறைய 2000 பணியாட்களையும் அவர் கொண்டிருந்தார். பல அதிகாரங்களைத் தம் விருப்பம் போல் பெற்றிருந்தும், அரசர் தாமே செயற்படும் உரிமையினை இழந்திருந்தார். அரசரைத் தேர்ந்தெடுக்கவும் கருத்துரை வழங்கவும் அவருக்கு உதவியாக மேலாண்மை மன்றம் ஒன்று இருந்தது. இராணுவ அமைப்பு அசுதெக்கு அரசின் பிறிதொரு சிறப்பு ஆகும். பெருங்குடி மக்கள் பலர் இராணுவத் தலைவர்களாகவும் ஆளுநர்களாகவும் பணியாற்றினர். பெருங்குடி மக்கள், பொதுமக்கள், ஊழியர்கள், அடிமைகள் என நான்கு பிரிவுகளாக அசுதெக்குகள் பிரிந்திருந்தார்கள். பெருங்குடிமக்களும் பொது மக்களும் சமூகத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டார்கள். பெருங்குடி மக்களின் நிலங்களில் வேலை செய்வோர் ஊழியர் எனப்பட்டனர். போர்க் கைதிகளாக வந்தோர் அடிமைகள் எனப்பட்டனர். அடிமைகள் உடைமைகளாகக் கருதப்பட்டார்கள். அசுதெக்குகள் தம்முடைய ஆண் குழந்தைகளுக்கு 15 வயது வரை வீட்டில் கல்வி கற்றுக் கொடுத்தார்கள். அதன் பின்னர், அவர்களுக்குப் படைக்கலப் பயிற்சியோ சமயம் பற்றிய கருத்துகளோ கற்றுத் தரப்பட்டன. பெண்கள் வீட்டு வேலைகளை மட்டுமே கவனித்து வந்தார்கள். ஆண்களே குடும்பத் தலைவர்களாயிருந்தார்கள். பலதார மணம் பெருங்குடி மக்களிடம் நிலவி வந்தது. மணவிலக்குச் செய்தல், மறுமணம் செய்தல் போன்றவை ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கங்களாம். பருத்தி ஆடைகளையே உயர் வகுப்பினர் அணிந்தனர். ஏழைகள் நாரினால் செய்யப்பட்ட ஆடைகளை உடுத்தினர். பெண்டிர் கைகளில்லா மேல்சட்டையையும் பாவாடையையும் உடுத்தினர். உயர்ந்த வகுப்பினர் பல அணிகலன்களை அணிந்து வாழ்ந்தனர். நாணல் தட்டிகளால் ஆன குடிசைகளில் அசுதெக்குகள் வாழ்ந்தனர். உயர் வகுப்பினர் கல் வீடுகளில் வசித்து வந்தனர். சாம்பல் அல்லது சிவந்த மஞ்சள் நிறமுடைய மட்பாண்டங்களை இவர்கள் பயன்படுத்தினார்கள். அசுதெக்குகள் தங்கள் பொழுதைச் சமய விழாக்களில் கழித்தார்கள். இயற்கையை வழிபட்ட இவர்களின் முதன்மைத் தெய்வம் சூரியன், கடவுளுக்கு நரபலி கொடுக்கும் வழக்கம் இவர்களிடம் மிகுந்த அளவில் காணப்பட்டது. இரண்டாம் மொன்ட்சுமா அரசர் (Montezuma) காலத்தில் ஏறக் குறைய 20,000 அடிமைகள் நரபலியிடப்பட்டனர். சமய குருமார் பெரிதும் மதிக்கப்பட்டனர். விதியை நம்பிய இம்மக்கள், போரிட்டு, அடிமைகளைக் கொண்டு செய் வந்து நரபலி இடுவதே இறைவனுக்குத் தாம் செய்யும் தொண்டு எனக் கருதினர். அசுதெக்குகளின் ஆண்டுக் குறிப்பேடு 52 ஆண்டுகளைக் கொண்டது. அவரை, மிளகு, மக்காச்சோளம், புகையிலை, தக்காளி போன்றவை இவர்கள் உற்பத்தி செய்த வேளாண்மைப் பொருள்களாகும். அசுதெக்குகள் உழவுக் கருவிகளைக் கற்களினாலேயே செய்தார்கள். நாணய முறை பற்றி இவர்கள் அறியமாட்டார்கள். பொருள்கள் பண்டமாற்று முறையில் பெறப்பட்டன. நகரங்களில் அடிக்கடி சந்தைகளைக் கூட்டினர். தெலாடிலோல்கா (Tlatelolco) என்னும் இடத்தில் மிகப் பெரிய சந்தையொன்று நடந்தது. ஏறக் குறைய 60,000 மக்கள் இச்சந்தையில் கூடுவர். அசுதெக்குகள் குதிரைகளின் பயன்களை அறியவில்லை. கால்நடையாகவும் நீர்வழியாகவும் இவர்கள் ஓரிடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்குச் சென்றார்கள். இவர்களின் மொழி செவ்விந்திய மொழிகளுள் ஒன்றாகும். நாகுதல் (Nahutal) அல்லது அசுதெக் டானோன் (Aztec - Tanoan) என இம்மொழி குறிக்கப்பட்டது. சித்திர வடிவ எழுத்து முறையை இவர்கள் அறிந்திருந்தார்கள். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 183 |bSize = 480 |cWidth = 180 |cHeight = 196 |oTop = 290 |oLeft = 250 |Location = center |Description = }} {{center|அசுதெக்கு ஆண்டுக் குறிப்பேடு}} அசுதெக்குகளின் கலைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு கல்லினால் செய்யப்பட்ட வட்டவடிவமான ஆண்டுக் குறிப்பேடாகும். இந்தக்கல், மிகுந்த வேலைப்பாடுடன் சூரியக் கடவுளின் முக அமைப்பை நடுவில் பெற்று அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்லின் குறுக்களவு 3.7மீ. அசுதெக்குகளின் வாய் மொழி<noinclude></noinclude> pwj8763q7awn7rln827hkm7q8kqcqo7 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175 0 618874 1834779 1834578 2025-06-24T02:59:02Z Meykandan 544 /* பாடல்: 156-160 */ 1834779 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 151-175 === ==பாடல்: 151-155== {{dhr}} === (தெளிகயம்) === : <b> தெளிக யம்மலர் மேலுறை தேவியி || <FONT COLOR="FF 63 47 "> தெளி கயம் மலர் மேல் உறை தேவியின் </FONT></b> : <b> னொளியுஞ் சாயலு மொப்புமை யில்லவள் || <FONT COLOR="FF 63 47 "> ஒளியும் சாயலும் ஒப்புமை இல்லவள் </FONT></b> : <b> களிகொள் காமத்திற் கையற வெய்தித்தன் || <FONT COLOR="FF 63 47 "> களி கொள் காமத்தின் கையறவு எய்தி </FONT></b> : <b> கிளியைத் தூதுவிட் டாள்கிளந் தென்பவே (1001) || <FONT COLOR="FF 63 47 "> கிளியைத் தூது விட்டாள் கிளந்து என்பவே. (௧௫௧) </FONT></b> === (பூணொடேந்) === : <b> பூணொ டேந்திய வெம்முலைப் பொன்னனாள் || <FONT COLOR="FF 63 47 "> பூணொடு ஏந்திய வெம் முலை பொன் அனாள் </FONT></b> : <b> நாணுந் தன்குல னுந்நலங் கீழ்ப்பட || <FONT COLOR="FF 63 47 "> நாணும் தன் குலனும் நலம் கீழ்ப்பட </FONT></b> : <b> வீணை வித்தகற் காணிய விண்படர்ந் || <FONT COLOR="FF 63 47 "> வீணை வித்தகன் காணிய விண் படர்ந்து </FONT></b> : <b> தாணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே. (1002) || <FONT COLOR="FF 63 47 "> ஆணு பைம் கிளி ஆண்டு பறந்ததே. (௧௫௨) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (கூட்டினான்) === : <b> கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன் || <FONT COLOR="FF 63 47 "> கூட்டினான் மணி பல தெளித்து கொண்டு அவன் </FONT></b> : <b> தீட்டினான் கிழிமிசைத் திலக வாணுதல் || <FONT COLOR="FF 63 47 "> தீட்டினான் கிழி மிசை திலக வாள் நுதல் </FONT></b> : <b> வேட்டமால் களிற்றிடை வெருவி நின்றதோர் || <FONT COLOR="FF 63 47 "> வேட்ட மால் களிற்று இடை வெருவி நின்றது ஓர் </FONT></b> : <b> நாட்டமு நடுக்கமு நங்கை வண்ணமே. (1003) || <FONT COLOR="FF 63 47 "> நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே. (௧௫௩) </FONT></b> === (நெகிழ்ந்து) === : <b> நெகிழ்ந்துசோர் பூந்துகி னோக்கி நோக்கியே || <FONT COLOR="FF 63 47 "> நெகிழ்ந்து சோர் பூம் துகில் நோக்கி நோக்கியே </FONT></b> : <b> மகிழ்ந்துவீழ் மணிக்குழன் மாலை காறொடும் || <FONT COLOR="FF 63 47 "> மகிழ்ந்து வீழ் மணி குழல் மாலை கால் தொடும் </FONT></b> : <b> முகிழ்த்துவீங் கிளமுலை முத்தந் தைவரும் || <FONT COLOR="FF 63 47 "> முகிழ்த்து வீங்கு இள முலை முத்தம் தைவரும் </FONT></b> : <b> புகழ்ந்துதன் றோள்களிற் புல்லு மெல்லவே. (1004) || <FONT COLOR="FF 63 47 "> புகழ்ந்து தன் தோள்களில் புல்லும் மெல்லவே. (௧௫௪) </FONT></b> ===(படைமலர்) === : <b> படைமலர் நெடுங்கணாள் பாவை யேந்தல்குல் || <FONT COLOR="FF 63 47 "> படை மலர் நெடும் கணாள் பாவை ஏந்து அல்குல் </FONT></b> : <b> மிடைமணி மேகலை நோற்ற வெந்தொழிற் || <FONT COLOR="FF 63 47 "> மிடை மணி மேகலை நோற்ற வெம் தொழில் </FONT></b> : <b> புடைதிரள் வனமுலைப் பூணு நோற்றன || <FONT COLOR="FF 63 47 "> புடை திரள் வன முலை பூணும் நோற்றன </FONT></b> : <b> வடிமலர்த் தாமரை சிலம்பு நோற்றவே. (1005) || <FONT COLOR="FF 63 47 "> அடிமலர் தாமரை சிலம்பும் நோற்றவே. (௧௫௫) </FONT></b> ==பாடல்: 156-160== === (மின்னணங்) === மின் : <b> மின்னணங் குறுமிடை மேவர் சாயலுக் || <FONT COLOR="FF 63 47 "> மின் அணங்குறும் இடை மேவர் சாயலுக்கு </FONT></b> : <b> கின்னண மிறைமகன் புலம்ப யாவதுந் || <FONT COLOR="FF 63 47 "> இன்னணம் இறை மகன் புலம்ப யாவதும் </FONT></b> : <b> தன்னணங் குறுமொழித் தத்தை தத்தையை || <FONT COLOR="FF 63 47 "> தன் அணங்கு உறு மொழி தத்தை தத்தையை </FONT></b> : <b> மன்னணங் குறலொடு மகிழ்ந்து கண்டதே. (1006) || <FONT COLOR="FF 63 47 "> மன் அணங்குறலோடு மகிழ்ந்து கண்டதே. (௧௫௬) </FONT></b> === (ஆடுபாம்பென) === : <b> ஆடுபாம் பெனப்புடை யகன்ற வல்குன்மேற் || <FONT COLOR="FF 63 47 "> ஆடு பாம்பு என புடை அகன்ற அல்குல் மேல் </FONT></b> : <b> சூடிய கலைப்புறஞ் சூழ்ந்த பூந்துகி || <FONT COLOR="FF 63 47 "> சூடிய கலை புறம் சூழ்ந்த பூ துகில் </FONT></b> : <b> லோடிய வெரிவளைத் துருவ வெண்புகை || <FONT COLOR="FF 63 47 "> ஓடிய எரி வளைத்து உருவ வெண் புகை </FONT></b> : <b> கூடிமற் றதன்புறன் குலாய கொள்கைத்தே. (1007) || <FONT COLOR="FF 63 47 "> கூடி மற்று அதன் புறன் குலாய கொள்கைத்தே. (௧௫௭) </FONT></b> === (கொன்வளர்) === : <b> கொன்வளர் குவிமுலைக் கோட்டிற் றாழ்ந்தன || <FONT COLOR="FF 63 47 "> கொன் வளர் குவி முலை கோட்டில் தாழ்ந்தன </FONT></b> : <b> மின்வளர் திரள்வடம் விளங்கு பைங்கதி || <FONT COLOR="FF 63 47 "> மின் வளர் திரள் வடம் விளங்கு பைம் கதிர் </FONT></b> : <b> ரின்வள ரிளம்பிறை யெழுதப் பட்டன || <FONT COLOR="FF 63 47 "> இன் வளர் இளம் பிறை எழுதப்பட்டன </FONT></b> : <b> பொன்வளர் செப்பின்மேற் பொலிந்த போன்றவே. (1008) || <FONT COLOR="FF 63 47 "> பொன் வளர் செப்பின் மேல் பொலிந்த போன்றவே. (௧௫௮) </FONT></b> === (குண்டல) === : <b> குண்டல மொருபுடை குலாவி வில்லிட || <FONT COLOR="FF 63 47 "> குண்டலம் ஒரு புடை குலாவி வில் இட </FONT></b> : <b> விண்டலர்ந் தொருபுடை தோடு மின்செய || <FONT COLOR="FF 63 47 "> விண்டு அலர்ந்து ஒரு புடை தோடு மின் செய </FONT></b> : <b> மண்டல நிறைந்ததோர் மதிய மன்னதே || <FONT COLOR="FF 63 47 "> மண்டலம் நிறைந்தது ஓர் மதியம் அன்னதே </FONT></b> : <b>யொண்டொடி திருமுகத் துருவ மாட்சியே. (1009) || <FONT COLOR="FF 63 47 "> ஒள் தொடி திரு முகத்து உருவ மாட்சியே. (௧௫௯) </FONT></b> === (பூணிற) === : <b> பூணிற முலையவள் பொருவில் பூநுதல் || <FONT COLOR="FF 63 47 "> பூண் நிறம் முலையவள் பொரு இல் பூ நுதல் </FONT></b> : <b> மாணிறக் கருங்குழன் மருங்கிற் போக்கிய || <FONT COLOR="FF 63 47 "> மாண் நிறம் கரும் குழல் மருங்கில் போக்கிய </FONT></b> : <b> நாணிற மிகுகதிர்ப் பட்ட நல்லொளி || <FONT COLOR="FF 63 47 "> நாள் நிறம் மிகு கதிர் பட்டம் நல் ஒளி </FONT></b> : <b> வாணிற மின்னிருள் வளைத்த தொத்ததே. (1010) || <FONT COLOR="FF 63 47 "> மாண் நிறம் மின் இருள் வளைத்தது ஒத்ததே. (௧௬௦) </FONT></b> ==பாடல்: 161-165== === (கடிகமழ்) === : <b> கடிகமழ் பூஞ்சிகை காமர் மல்லிகை || <FONT COLOR="FF 63 47 "> கடி கமழ் பூம் சிகை காமர் மல்லிகை </FONT></b> : <b> வடிவுடை மாலைகா றொடர்ந்து வாய்ந்தது || <FONT COLOR="FF 63 47 "> வடிவு உடை மாலை கால் தொடர்ந்து வாய்ந்தது </FONT></b> : <b> நடுவொசிந் தொல்கிய நாறு மாமலர்க் || <FONT COLOR="FF 63 47 "> நடு ஒசிந்து ஒல்கிய நாறும் மா மலர் </FONT></b> : <b> கொடியின்மேற் குயில்குனிந் திருந்த தொத்ததே. (1011) || <FONT COLOR="FF 63 47 "> கொடியின் மேல் குயில் குனிந்து இருந்தது ஒத்ததே. (௧௬௧) </FONT></b> === (சிலம்பொடு) === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] ====பார்க்க:=== :🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]]. 5h0lqnou6xfs092m1w98fq4w6h4stzj 1834780 1834779 2025-06-24T02:59:23Z Meykandan 544 /* (மின்னணங்) */ 1834780 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 151-175 === ==பாடல்: 151-155== {{dhr}} === (தெளிகயம்) === : <b> தெளிக யம்மலர் மேலுறை தேவியி || <FONT COLOR="FF 63 47 "> தெளி கயம் மலர் மேல் உறை தேவியின் </FONT></b> : <b> னொளியுஞ் சாயலு மொப்புமை யில்லவள் || <FONT COLOR="FF 63 47 "> ஒளியும் சாயலும் ஒப்புமை இல்லவள் </FONT></b> : <b> களிகொள் காமத்திற் கையற வெய்தித்தன் || <FONT COLOR="FF 63 47 "> களி கொள் காமத்தின் கையறவு எய்தி </FONT></b> : <b> கிளியைத் தூதுவிட் டாள்கிளந் தென்பவே (1001) || <FONT COLOR="FF 63 47 "> கிளியைத் தூது விட்டாள் கிளந்து என்பவே. (௧௫௧) </FONT></b> === (பூணொடேந்) === : <b> பூணொ டேந்திய வெம்முலைப் பொன்னனாள் || <FONT COLOR="FF 63 47 "> பூணொடு ஏந்திய வெம் முலை பொன் அனாள் </FONT></b> : <b> நாணுந் தன்குல னுந்நலங் கீழ்ப்பட || <FONT COLOR="FF 63 47 "> நாணும் தன் குலனும் நலம் கீழ்ப்பட </FONT></b> : <b> வீணை வித்தகற் காணிய விண்படர்ந் || <FONT COLOR="FF 63 47 "> வீணை வித்தகன் காணிய விண் படர்ந்து </FONT></b> : <b> தாணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே. (1002) || <FONT COLOR="FF 63 47 "> ஆணு பைம் கிளி ஆண்டு பறந்ததே. (௧௫௨) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (கூட்டினான்) === : <b> கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன் || <FONT COLOR="FF 63 47 "> கூட்டினான் மணி பல தெளித்து கொண்டு அவன் </FONT></b> : <b> தீட்டினான் கிழிமிசைத் திலக வாணுதல் || <FONT COLOR="FF 63 47 "> தீட்டினான் கிழி மிசை திலக வாள் நுதல் </FONT></b> : <b> வேட்டமால் களிற்றிடை வெருவி நின்றதோர் || <FONT COLOR="FF 63 47 "> வேட்ட மால் களிற்று இடை வெருவி நின்றது ஓர் </FONT></b> : <b> நாட்டமு நடுக்கமு நங்கை வண்ணமே. (1003) || <FONT COLOR="FF 63 47 "> நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே. (௧௫௩) </FONT></b> === (நெகிழ்ந்து) === : <b> நெகிழ்ந்துசோர் பூந்துகி னோக்கி நோக்கியே || <FONT COLOR="FF 63 47 "> நெகிழ்ந்து சோர் பூம் துகில் நோக்கி நோக்கியே </FONT></b> : <b> மகிழ்ந்துவீழ் மணிக்குழன் மாலை காறொடும் || <FONT COLOR="FF 63 47 "> மகிழ்ந்து வீழ் மணி குழல் மாலை கால் தொடும் </FONT></b> : <b> முகிழ்த்துவீங் கிளமுலை முத்தந் தைவரும் || <FONT COLOR="FF 63 47 "> முகிழ்த்து வீங்கு இள முலை முத்தம் தைவரும் </FONT></b> : <b> புகழ்ந்துதன் றோள்களிற் புல்லு மெல்லவே. (1004) || <FONT COLOR="FF 63 47 "> புகழ்ந்து தன் தோள்களில் புல்லும் மெல்லவே. (௧௫௪) </FONT></b> ===(படைமலர்) === : <b> படைமலர் நெடுங்கணாள் பாவை யேந்தல்குல் || <FONT COLOR="FF 63 47 "> படை மலர் நெடும் கணாள் பாவை ஏந்து அல்குல் </FONT></b> : <b> மிடைமணி மேகலை நோற்ற வெந்தொழிற் || <FONT COLOR="FF 63 47 "> மிடை மணி மேகலை நோற்ற வெம் தொழில் </FONT></b> : <b> புடைதிரள் வனமுலைப் பூணு நோற்றன || <FONT COLOR="FF 63 47 "> புடை திரள் வன முலை பூணும் நோற்றன </FONT></b> : <b> வடிமலர்த் தாமரை சிலம்பு நோற்றவே. (1005) || <FONT COLOR="FF 63 47 "> அடிமலர் தாமரை சிலம்பும் நோற்றவே. (௧௫௫) </FONT></b> ==பாடல்: 156-160== === (மின்னணங்) === : <b> மின்னணங் குறுமிடை மேவர் சாயலுக் || <FONT COLOR="FF 63 47 "> மின் அணங்குறும் இடை மேவர் சாயலுக்கு </FONT></b> : <b> கின்னண மிறைமகன் புலம்ப யாவதுந் || <FONT COLOR="FF 63 47 "> இன்னணம் இறை மகன் புலம்ப யாவதும் </FONT></b> : <b> தன்னணங் குறுமொழித் தத்தை தத்தையை || <FONT COLOR="FF 63 47 "> தன் அணங்கு உறு மொழி தத்தை தத்தையை </FONT></b> : <b> மன்னணங் குறலொடு மகிழ்ந்து கண்டதே. (1006) || <FONT COLOR="FF 63 47 "> மன் அணங்குறலோடு மகிழ்ந்து கண்டதே. (௧௫௬) </FONT></b> === (ஆடுபாம்பென) === : <b> ஆடுபாம் பெனப்புடை யகன்ற வல்குன்மேற் || <FONT COLOR="FF 63 47 "> ஆடு பாம்பு என புடை அகன்ற அல்குல் மேல் </FONT></b> : <b> சூடிய கலைப்புறஞ் சூழ்ந்த பூந்துகி || <FONT COLOR="FF 63 47 "> சூடிய கலை புறம் சூழ்ந்த பூ துகில் </FONT></b> : <b> லோடிய வெரிவளைத் துருவ வெண்புகை || <FONT COLOR="FF 63 47 "> ஓடிய எரி வளைத்து உருவ வெண் புகை </FONT></b> : <b> கூடிமற் றதன்புறன் குலாய கொள்கைத்தே. (1007) || <FONT COLOR="FF 63 47 "> கூடி மற்று அதன் புறன் குலாய கொள்கைத்தே. (௧௫௭) </FONT></b> === (கொன்வளர்) === : <b> கொன்வளர் குவிமுலைக் கோட்டிற் றாழ்ந்தன || <FONT COLOR="FF 63 47 "> கொன் வளர் குவி முலை கோட்டில் தாழ்ந்தன </FONT></b> : <b> மின்வளர் திரள்வடம் விளங்கு பைங்கதி || <FONT COLOR="FF 63 47 "> மின் வளர் திரள் வடம் விளங்கு பைம் கதிர் </FONT></b> : <b> ரின்வள ரிளம்பிறை யெழுதப் பட்டன || <FONT COLOR="FF 63 47 "> இன் வளர் இளம் பிறை எழுதப்பட்டன </FONT></b> : <b> பொன்வளர் செப்பின்மேற் பொலிந்த போன்றவே. (1008) || <FONT COLOR="FF 63 47 "> பொன் வளர் செப்பின் மேல் பொலிந்த போன்றவே. (௧௫௮) </FONT></b> === (குண்டல) === : <b> குண்டல மொருபுடை குலாவி வில்லிட || <FONT COLOR="FF 63 47 "> குண்டலம் ஒரு புடை குலாவி வில் இட </FONT></b> : <b> விண்டலர்ந் தொருபுடை தோடு மின்செய || <FONT COLOR="FF 63 47 "> விண்டு அலர்ந்து ஒரு புடை தோடு மின் செய </FONT></b> : <b> மண்டல நிறைந்ததோர் மதிய மன்னதே || <FONT COLOR="FF 63 47 "> மண்டலம் நிறைந்தது ஓர் மதியம் அன்னதே </FONT></b> : <b>யொண்டொடி திருமுகத் துருவ மாட்சியே. (1009) || <FONT COLOR="FF 63 47 "> ஒள் தொடி திரு முகத்து உருவ மாட்சியே. (௧௫௯) </FONT></b> === (பூணிற) === : <b> பூணிற முலையவள் பொருவில் பூநுதல் || <FONT COLOR="FF 63 47 "> பூண் நிறம் முலையவள் பொரு இல் பூ நுதல் </FONT></b> : <b> மாணிறக் கருங்குழன் மருங்கிற் போக்கிய || <FONT COLOR="FF 63 47 "> மாண் நிறம் கரும் குழல் மருங்கில் போக்கிய </FONT></b> : <b> நாணிற மிகுகதிர்ப் பட்ட நல்லொளி || <FONT COLOR="FF 63 47 "> நாள் நிறம் மிகு கதிர் பட்டம் நல் ஒளி </FONT></b> : <b> வாணிற மின்னிருள் வளைத்த தொத்ததே. (1010) || <FONT COLOR="FF 63 47 "> மாண் நிறம் மின் இருள் வளைத்தது ஒத்ததே. (௧௬௦) </FONT></b> ==பாடல்: 161-165== === (கடிகமழ்) === : <b> கடிகமழ் பூஞ்சிகை காமர் மல்லிகை || <FONT COLOR="FF 63 47 "> கடி கமழ் பூம் சிகை காமர் மல்லிகை </FONT></b> : <b> வடிவுடை மாலைகா றொடர்ந்து வாய்ந்தது || <FONT COLOR="FF 63 47 "> வடிவு உடை மாலை கால் தொடர்ந்து வாய்ந்தது </FONT></b> : <b> நடுவொசிந் தொல்கிய நாறு மாமலர்க் || <FONT COLOR="FF 63 47 "> நடு ஒசிந்து ஒல்கிய நாறும் மா மலர் </FONT></b> : <b> கொடியின்மேற் குயில்குனிந் திருந்த தொத்ததே. (1011) || <FONT COLOR="FF 63 47 "> கொடியின் மேல் குயில் குனிந்து இருந்தது ஒத்ததே. (௧௬௧) </FONT></b> === (சிலம்பொடு) === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] ====பார்க்க:=== :🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]]. g8z3208ujm93pji2e6knozozxg4t3lw 1834792 1834780 2025-06-24T03:29:49Z Meykandan 544 /* பாடல்: 161-165 */ 1834792 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 151-175 === ==பாடல்: 151-155== {{dhr}} === (தெளிகயம்) === : <b> தெளிக யம்மலர் மேலுறை தேவியி || <FONT COLOR="FF 63 47 "> தெளி கயம் மலர் மேல் உறை தேவியின் </FONT></b> : <b> னொளியுஞ் சாயலு மொப்புமை யில்லவள் || <FONT COLOR="FF 63 47 "> ஒளியும் சாயலும் ஒப்புமை இல்லவள் </FONT></b> : <b> களிகொள் காமத்திற் கையற வெய்தித்தன் || <FONT COLOR="FF 63 47 "> களி கொள் காமத்தின் கையறவு எய்தி </FONT></b> : <b> கிளியைத் தூதுவிட் டாள்கிளந் தென்பவே (1001) || <FONT COLOR="FF 63 47 "> கிளியைத் தூது விட்டாள் கிளந்து என்பவே. (௧௫௧) </FONT></b> === (பூணொடேந்) === : <b> பூணொ டேந்திய வெம்முலைப் பொன்னனாள் || <FONT COLOR="FF 63 47 "> பூணொடு ஏந்திய வெம் முலை பொன் அனாள் </FONT></b> : <b> நாணுந் தன்குல னுந்நலங் கீழ்ப்பட || <FONT COLOR="FF 63 47 "> நாணும் தன் குலனும் நலம் கீழ்ப்பட </FONT></b> : <b> வீணை வித்தகற் காணிய விண்படர்ந் || <FONT COLOR="FF 63 47 "> வீணை வித்தகன் காணிய விண் படர்ந்து </FONT></b> : <b> தாணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே. (1002) || <FONT COLOR="FF 63 47 "> ஆணு பைம் கிளி ஆண்டு பறந்ததே. (௧௫௨) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (கூட்டினான்) === : <b> கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன் || <FONT COLOR="FF 63 47 "> கூட்டினான் மணி பல தெளித்து கொண்டு அவன் </FONT></b> : <b> தீட்டினான் கிழிமிசைத் திலக வாணுதல் || <FONT COLOR="FF 63 47 "> தீட்டினான் கிழி மிசை திலக வாள் நுதல் </FONT></b> : <b> வேட்டமால் களிற்றிடை வெருவி நின்றதோர் || <FONT COLOR="FF 63 47 "> வேட்ட மால் களிற்று இடை வெருவி நின்றது ஓர் </FONT></b> : <b> நாட்டமு நடுக்கமு நங்கை வண்ணமே. (1003) || <FONT COLOR="FF 63 47 "> நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே. (௧௫௩) </FONT></b> === (நெகிழ்ந்து) === : <b> நெகிழ்ந்துசோர் பூந்துகி னோக்கி நோக்கியே || <FONT COLOR="FF 63 47 "> நெகிழ்ந்து சோர் பூம் துகில் நோக்கி நோக்கியே </FONT></b> : <b> மகிழ்ந்துவீழ் மணிக்குழன் மாலை காறொடும் || <FONT COLOR="FF 63 47 "> மகிழ்ந்து வீழ் மணி குழல் மாலை கால் தொடும் </FONT></b> : <b> முகிழ்த்துவீங் கிளமுலை முத்தந் தைவரும் || <FONT COLOR="FF 63 47 "> முகிழ்த்து வீங்கு இள முலை முத்தம் தைவரும் </FONT></b> : <b> புகழ்ந்துதன் றோள்களிற் புல்லு மெல்லவே. (1004) || <FONT COLOR="FF 63 47 "> புகழ்ந்து தன் தோள்களில் புல்லும் மெல்லவே. (௧௫௪) </FONT></b> ===(படைமலர்) === : <b> படைமலர் நெடுங்கணாள் பாவை யேந்தல்குல் || <FONT COLOR="FF 63 47 "> படை மலர் நெடும் கணாள் பாவை ஏந்து அல்குல் </FONT></b> : <b> மிடைமணி மேகலை நோற்ற வெந்தொழிற் || <FONT COLOR="FF 63 47 "> மிடை மணி மேகலை நோற்ற வெம் தொழில் </FONT></b> : <b> புடைதிரள் வனமுலைப் பூணு நோற்றன || <FONT COLOR="FF 63 47 "> புடை திரள் வன முலை பூணும் நோற்றன </FONT></b> : <b> வடிமலர்த் தாமரை சிலம்பு நோற்றவே. (1005) || <FONT COLOR="FF 63 47 "> அடிமலர் தாமரை சிலம்பும் நோற்றவே. (௧௫௫) </FONT></b> ==பாடல்: 156-160== === (மின்னணங்) === : <b> மின்னணங் குறுமிடை மேவர் சாயலுக் || <FONT COLOR="FF 63 47 "> மின் அணங்குறும் இடை மேவர் சாயலுக்கு </FONT></b> : <b> கின்னண மிறைமகன் புலம்ப யாவதுந் || <FONT COLOR="FF 63 47 "> இன்னணம் இறை மகன் புலம்ப யாவதும் </FONT></b> : <b> தன்னணங் குறுமொழித் தத்தை தத்தையை || <FONT COLOR="FF 63 47 "> தன் அணங்கு உறு மொழி தத்தை தத்தையை </FONT></b> : <b> மன்னணங் குறலொடு மகிழ்ந்து கண்டதே. (1006) || <FONT COLOR="FF 63 47 "> மன் அணங்குறலோடு மகிழ்ந்து கண்டதே. (௧௫௬) </FONT></b> === (ஆடுபாம்பென) === : <b> ஆடுபாம் பெனப்புடை யகன்ற வல்குன்மேற் || <FONT COLOR="FF 63 47 "> ஆடு பாம்பு என புடை அகன்ற அல்குல் மேல் </FONT></b> : <b> சூடிய கலைப்புறஞ் சூழ்ந்த பூந்துகி || <FONT COLOR="FF 63 47 "> சூடிய கலை புறம் சூழ்ந்த பூ துகில் </FONT></b> : <b> லோடிய வெரிவளைத் துருவ வெண்புகை || <FONT COLOR="FF 63 47 "> ஓடிய எரி வளைத்து உருவ வெண் புகை </FONT></b> : <b> கூடிமற் றதன்புறன் குலாய கொள்கைத்தே. (1007) || <FONT COLOR="FF 63 47 "> கூடி மற்று அதன் புறன் குலாய கொள்கைத்தே. (௧௫௭) </FONT></b> === (கொன்வளர்) === : <b> கொன்வளர் குவிமுலைக் கோட்டிற் றாழ்ந்தன || <FONT COLOR="FF 63 47 "> கொன் வளர் குவி முலை கோட்டில் தாழ்ந்தன </FONT></b> : <b> மின்வளர் திரள்வடம் விளங்கு பைங்கதி || <FONT COLOR="FF 63 47 "> மின் வளர் திரள் வடம் விளங்கு பைம் கதிர் </FONT></b> : <b> ரின்வள ரிளம்பிறை யெழுதப் பட்டன || <FONT COLOR="FF 63 47 "> இன் வளர் இளம் பிறை எழுதப்பட்டன </FONT></b> : <b> பொன்வளர் செப்பின்மேற் பொலிந்த போன்றவே. (1008) || <FONT COLOR="FF 63 47 "> பொன் வளர் செப்பின் மேல் பொலிந்த போன்றவே. (௧௫௮) </FONT></b> === (குண்டல) === : <b> குண்டல மொருபுடை குலாவி வில்லிட || <FONT COLOR="FF 63 47 "> குண்டலம் ஒரு புடை குலாவி வில் இட </FONT></b> : <b> விண்டலர்ந் தொருபுடை தோடு மின்செய || <FONT COLOR="FF 63 47 "> விண்டு அலர்ந்து ஒரு புடை தோடு மின் செய </FONT></b> : <b> மண்டல நிறைந்ததோர் மதிய மன்னதே || <FONT COLOR="FF 63 47 "> மண்டலம் நிறைந்தது ஓர் மதியம் அன்னதே </FONT></b> : <b>யொண்டொடி திருமுகத் துருவ மாட்சியே. (1009) || <FONT COLOR="FF 63 47 "> ஒள் தொடி திரு முகத்து உருவ மாட்சியே. (௧௫௯) </FONT></b> === (பூணிற) === : <b> பூணிற முலையவள் பொருவில் பூநுதல் || <FONT COLOR="FF 63 47 "> பூண் நிறம் முலையவள் பொரு இல் பூ நுதல் </FONT></b> : <b> மாணிறக் கருங்குழன் மருங்கிற் போக்கிய || <FONT COLOR="FF 63 47 "> மாண் நிறம் கரும் குழல் மருங்கில் போக்கிய </FONT></b> : <b> நாணிற மிகுகதிர்ப் பட்ட நல்லொளி || <FONT COLOR="FF 63 47 "> நாள் நிறம் மிகு கதிர் பட்டம் நல் ஒளி </FONT></b> : <b> வாணிற மின்னிருள் வளைத்த தொத்ததே. (1010) || <FONT COLOR="FF 63 47 "> மாண் நிறம் மின் இருள் வளைத்தது ஒத்ததே. (௧௬௦) </FONT></b> ==பாடல்: 161-165== === (கடிகமழ்) === : <b> கடிகமழ் பூஞ்சிகை காமர் மல்லிகை || <FONT COLOR="FF 63 47 "> கடி கமழ் பூம் சிகை காமர் மல்லிகை </FONT></b> : <b> வடிவுடை மாலைகா றொடர்ந்து வாய்ந்தது || <FONT COLOR="FF 63 47 "> வடிவு உடை மாலை கால் தொடர்ந்து வாய்ந்தது </FONT></b> : <b> நடுவொசிந் தொல்கிய நாறு மாமலர்க் || <FONT COLOR="FF 63 47 "> நடு ஒசிந்து ஒல்கிய நாறும் மா மலர் </FONT></b> : <b> கொடியின்மேற் குயில்குனிந் திருந்த தொத்ததே. (1011) || <FONT COLOR="FF 63 47 "> கொடியின் மேல் குயில் குனிந்து இருந்தது ஒத்ததே. (௧௬௧) </FONT></b> === (சிலம்பொடு) === : <b> சிலம்பொடு மேகலை மிழற்றத் தேனின || <FONT COLOR="FF 63 47 "> சிலம்பொடு மேகலை மிழற்ற தேன் இனம் </FONT></b> : <b> மலங்கலுண் டியாழ்செயு மம்பொற் பூங்கோடி || <FONT COLOR="FF 63 47 "> அலங்கல் உண்டு யாழ் செயும் அம் பொன் பூம் கொடி </FONT></b> : <b> நலம்பட நன்னடை கற்ற தொக்குமிவ் || <FONT COLOR="FF 63 47 "> நலம்பட நல் நடை கற்றது ஒக்கும் இவ் </FONT></b> : <b> விலங்கரித் தடங்கணா ளியாவ ளாங்கொலோ. (1012) || <FONT COLOR="FF 63 47 "> விலங்கு அரி தடம் கணாள் யாவளாம் கொலோ. (௧௬௨) </FONT></b> === (யாவளே) === : <b> யாவளே யாயினு மாக மற்றிவள் || <FONT COLOR="FF 63 47 "> யாவளே ஆயினும் ஆக மற்று இவள் </FONT></b> : <b> மேவிய பொருளொடு மீண்ட பின்னலா || <FONT COLOR="FF 63 47 "> மேவிய பொருளொடு மீண்ட பின் அலால் </FONT></b> : <b> லேவலாற் சேர்கலே னென்று பைங்கிளி || <FONT COLOR="FF 63 47 "> ஏவலால்(ன்) சேர்கலேன் என்று பைம் கிளி </FONT></b> : <b> பூவளர் சண்பகம் பொருந்திற் றென்பவே. (1013) || <FONT COLOR="FF 63 47 "> பூ வளர் சண்பகம் பொருந்திற்று என்பவே. (௧௬௩) </FONT></b> === (மதுக்களி) === : <b> மதுக்களி நெடுங்கணாள் வான்பொற் கிண்கிணி || <FONT COLOR="FF 63 47 "> மது களி நெடும் கணாள் வான் பொன் கிண்கிணி </FONT></b> : <b> யொதுக்கிடை மிழற்றச்சென் றெய்தி யூன்கவர் || <FONT COLOR="FF 63 47 "> ஒதுக்கிடை மிழற்ற சென்று எய்தி ஊன் கவர் </FONT></b> : <b> கதக்களி வேலினாற் கண்டு காமநீர்ப் || <FONT COLOR="FF 63 47 "> கதம் களி வேலினான் கண்டு காம நீர் </FONT></b> : <b> புதுத்தளி ரனையவள் புலந்து நோக்கினாள். (1014) || <FONT COLOR="FF 63 47 "> புது தளிர் அனையவள் புலந்து நோக்கினாள். (௧௬௪) </FONT></b> === (இதுவென) === : <b> இதுவென வுருவென வியக்கி யென்றலும் || <FONT COLOR="FF 63 47 "> இது என உரு என இயக்கி என்றலும் </FONT></b> : <b> புதிதிது பூந்துகிற் குழல்கள் சோ்தலால் || <FONT COLOR="FF 63 47 "> புதிது இது பூம் துகில் குழல்கள் சோர்தலால் </FONT></b> : <b> மதுவிரி கோதையம் மாலை நின்மன || <FONT COLOR="FF 63 47 "> மது விரி கோதை அம் மாலை நின் மனம் </FONT></b> : <b> மதுமுறை யியக்கலி னியக்கி யாகுமே. (1015) || <FONT COLOR="FF 63 47 "> அது முறை இயக்கலின் இயக்கி ஆகுமேஏ. (௧௬௫) </FONT></b> ==பாடல்: 166-170== === (முளைத்தெழு) === : <b> முளைத்தெழு மதியமுத் தரும்பி யாங்கென || <FONT COLOR="FF 63 47 "> முளைத்து எழு மதியம் முத்து அரும்பியாங்கு என </FONT></b> : <b> விளைத்தது திருமுகம் வியர்ப்ப வெஞ்சிலை || <FONT COLOR="FF 63 47 "> விளைத்தது திரு முகம் வியர்ப்ப வெம் சிலை </FONT></b> : <b> வளைத்தன புருவமு முரிந்த வல்லையே || <FONT COLOR="FF 63 47 "> வளைத்தன புருவமும் முரிந்த வல்லையே </FONT></b> : <b> கிளைக்கழு நீர்க்கணுஞ் சிவப்பிற் கேழ்த்தவே. (1016) || <FONT COLOR="FF 63 47 "> கிளை கழுநீர் கணும் சிவப்பின் கேழ்த்தவே. (௧௬௬) </FONT></b> === (பாவைநீ) === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] ====பார்க்க:=== :🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]]. dng04nn8ssv721nb3kf2k7i2u7uy4zg 1834803 1834792 2025-06-24T04:00:04Z Meykandan 544 /* பாடல்: 166-170 */ 1834803 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 151-175 === ==பாடல்: 151-155== {{dhr}} === (தெளிகயம்) === : <b> தெளிக யம்மலர் மேலுறை தேவியி || <FONT COLOR="FF 63 47 "> தெளி கயம் மலர் மேல் உறை தேவியின் </FONT></b> : <b> னொளியுஞ் சாயலு மொப்புமை யில்லவள் || <FONT COLOR="FF 63 47 "> ஒளியும் சாயலும் ஒப்புமை இல்லவள் </FONT></b> : <b> களிகொள் காமத்திற் கையற வெய்தித்தன் || <FONT COLOR="FF 63 47 "> களி கொள் காமத்தின் கையறவு எய்தி </FONT></b> : <b> கிளியைத் தூதுவிட் டாள்கிளந் தென்பவே (1001) || <FONT COLOR="FF 63 47 "> கிளியைத் தூது விட்டாள் கிளந்து என்பவே. (௧௫௧) </FONT></b> === (பூணொடேந்) === : <b> பூணொ டேந்திய வெம்முலைப் பொன்னனாள் || <FONT COLOR="FF 63 47 "> பூணொடு ஏந்திய வெம் முலை பொன் அனாள் </FONT></b> : <b> நாணுந் தன்குல னுந்நலங் கீழ்ப்பட || <FONT COLOR="FF 63 47 "> நாணும் தன் குலனும் நலம் கீழ்ப்பட </FONT></b> : <b> வீணை வித்தகற் காணிய விண்படர்ந் || <FONT COLOR="FF 63 47 "> வீணை வித்தகன் காணிய விண் படர்ந்து </FONT></b> : <b> தாணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே. (1002) || <FONT COLOR="FF 63 47 "> ஆணு பைம் கிளி ஆண்டு பறந்ததே. (௧௫௨) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (கூட்டினான்) === : <b> கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன் || <FONT COLOR="FF 63 47 "> கூட்டினான் மணி பல தெளித்து கொண்டு அவன் </FONT></b> : <b> தீட்டினான் கிழிமிசைத் திலக வாணுதல் || <FONT COLOR="FF 63 47 "> தீட்டினான் கிழி மிசை திலக வாள் நுதல் </FONT></b> : <b> வேட்டமால் களிற்றிடை வெருவி நின்றதோர் || <FONT COLOR="FF 63 47 "> வேட்ட மால் களிற்று இடை வெருவி நின்றது ஓர் </FONT></b> : <b> நாட்டமு நடுக்கமு நங்கை வண்ணமே. (1003) || <FONT COLOR="FF 63 47 "> நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே. (௧௫௩) </FONT></b> === (நெகிழ்ந்து) === : <b> நெகிழ்ந்துசோர் பூந்துகி னோக்கி நோக்கியே || <FONT COLOR="FF 63 47 "> நெகிழ்ந்து சோர் பூம் துகில் நோக்கி நோக்கியே </FONT></b> : <b> மகிழ்ந்துவீழ் மணிக்குழன் மாலை காறொடும் || <FONT COLOR="FF 63 47 "> மகிழ்ந்து வீழ் மணி குழல் மாலை கால் தொடும் </FONT></b> : <b> முகிழ்த்துவீங் கிளமுலை முத்தந் தைவரும் || <FONT COLOR="FF 63 47 "> முகிழ்த்து வீங்கு இள முலை முத்தம் தைவரும் </FONT></b> : <b> புகழ்ந்துதன் றோள்களிற் புல்லு மெல்லவே. (1004) || <FONT COLOR="FF 63 47 "> புகழ்ந்து தன் தோள்களில் புல்லும் மெல்லவே. (௧௫௪) </FONT></b> ===(படைமலர்) === : <b> படைமலர் நெடுங்கணாள் பாவை யேந்தல்குல் || <FONT COLOR="FF 63 47 "> படை மலர் நெடும் கணாள் பாவை ஏந்து அல்குல் </FONT></b> : <b> மிடைமணி மேகலை நோற்ற வெந்தொழிற் || <FONT COLOR="FF 63 47 "> மிடை மணி மேகலை நோற்ற வெம் தொழில் </FONT></b> : <b> புடைதிரள் வனமுலைப் பூணு நோற்றன || <FONT COLOR="FF 63 47 "> புடை திரள் வன முலை பூணும் நோற்றன </FONT></b> : <b> வடிமலர்த் தாமரை சிலம்பு நோற்றவே. (1005) || <FONT COLOR="FF 63 47 "> அடிமலர் தாமரை சிலம்பும் நோற்றவே. (௧௫௫) </FONT></b> ==பாடல்: 156-160== === (மின்னணங்) === : <b> மின்னணங் குறுமிடை மேவர் சாயலுக் || <FONT COLOR="FF 63 47 "> மின் அணங்குறும் இடை மேவர் சாயலுக்கு </FONT></b> : <b> கின்னண மிறைமகன் புலம்ப யாவதுந் || <FONT COLOR="FF 63 47 "> இன்னணம் இறை மகன் புலம்ப யாவதும் </FONT></b> : <b> தன்னணங் குறுமொழித் தத்தை தத்தையை || <FONT COLOR="FF 63 47 "> தன் அணங்கு உறு மொழி தத்தை தத்தையை </FONT></b> : <b> மன்னணங் குறலொடு மகிழ்ந்து கண்டதே. (1006) || <FONT COLOR="FF 63 47 "> மன் அணங்குறலோடு மகிழ்ந்து கண்டதே. (௧௫௬) </FONT></b> === (ஆடுபாம்பென) === : <b> ஆடுபாம் பெனப்புடை யகன்ற வல்குன்மேற் || <FONT COLOR="FF 63 47 "> ஆடு பாம்பு என புடை அகன்ற அல்குல் மேல் </FONT></b> : <b> சூடிய கலைப்புறஞ் சூழ்ந்த பூந்துகி || <FONT COLOR="FF 63 47 "> சூடிய கலை புறம் சூழ்ந்த பூ துகில் </FONT></b> : <b> லோடிய வெரிவளைத் துருவ வெண்புகை || <FONT COLOR="FF 63 47 "> ஓடிய எரி வளைத்து உருவ வெண் புகை </FONT></b> : <b> கூடிமற் றதன்புறன் குலாய கொள்கைத்தே. (1007) || <FONT COLOR="FF 63 47 "> கூடி மற்று அதன் புறன் குலாய கொள்கைத்தே. (௧௫௭) </FONT></b> === (கொன்வளர்) === : <b> கொன்வளர் குவிமுலைக் கோட்டிற் றாழ்ந்தன || <FONT COLOR="FF 63 47 "> கொன் வளர் குவி முலை கோட்டில் தாழ்ந்தன </FONT></b> : <b> மின்வளர் திரள்வடம் விளங்கு பைங்கதி || <FONT COLOR="FF 63 47 "> மின் வளர் திரள் வடம் விளங்கு பைம் கதிர் </FONT></b> : <b> ரின்வள ரிளம்பிறை யெழுதப் பட்டன || <FONT COLOR="FF 63 47 "> இன் வளர் இளம் பிறை எழுதப்பட்டன </FONT></b> : <b> பொன்வளர் செப்பின்மேற் பொலிந்த போன்றவே. (1008) || <FONT COLOR="FF 63 47 "> பொன் வளர் செப்பின் மேல் பொலிந்த போன்றவே. (௧௫௮) </FONT></b> === (குண்டல) === : <b> குண்டல மொருபுடை குலாவி வில்லிட || <FONT COLOR="FF 63 47 "> குண்டலம் ஒரு புடை குலாவி வில் இட </FONT></b> : <b> விண்டலர்ந் தொருபுடை தோடு மின்செய || <FONT COLOR="FF 63 47 "> விண்டு அலர்ந்து ஒரு புடை தோடு மின் செய </FONT></b> : <b> மண்டல நிறைந்ததோர் மதிய மன்னதே || <FONT COLOR="FF 63 47 "> மண்டலம் நிறைந்தது ஓர் மதியம் அன்னதே </FONT></b> : <b>யொண்டொடி திருமுகத் துருவ மாட்சியே. (1009) || <FONT COLOR="FF 63 47 "> ஒள் தொடி திரு முகத்து உருவ மாட்சியே. (௧௫௯) </FONT></b> === (பூணிற) === : <b> பூணிற முலையவள் பொருவில் பூநுதல் || <FONT COLOR="FF 63 47 "> பூண் நிறம் முலையவள் பொரு இல் பூ நுதல் </FONT></b> : <b> மாணிறக் கருங்குழன் மருங்கிற் போக்கிய || <FONT COLOR="FF 63 47 "> மாண் நிறம் கரும் குழல் மருங்கில் போக்கிய </FONT></b> : <b> நாணிற மிகுகதிர்ப் பட்ட நல்லொளி || <FONT COLOR="FF 63 47 "> நாள் நிறம் மிகு கதிர் பட்டம் நல் ஒளி </FONT></b> : <b> வாணிற மின்னிருள் வளைத்த தொத்ததே. (1010) || <FONT COLOR="FF 63 47 "> மாண் நிறம் மின் இருள் வளைத்தது ஒத்ததே. (௧௬௦) </FONT></b> ==பாடல்: 161-165== === (கடிகமழ்) === : <b> கடிகமழ் பூஞ்சிகை காமர் மல்லிகை || <FONT COLOR="FF 63 47 "> கடி கமழ் பூம் சிகை காமர் மல்லிகை </FONT></b> : <b> வடிவுடை மாலைகா றொடர்ந்து வாய்ந்தது || <FONT COLOR="FF 63 47 "> வடிவு உடை மாலை கால் தொடர்ந்து வாய்ந்தது </FONT></b> : <b> நடுவொசிந் தொல்கிய நாறு மாமலர்க் || <FONT COLOR="FF 63 47 "> நடு ஒசிந்து ஒல்கிய நாறும் மா மலர் </FONT></b> : <b> கொடியின்மேற் குயில்குனிந் திருந்த தொத்ததே. (1011) || <FONT COLOR="FF 63 47 "> கொடியின் மேல் குயில் குனிந்து இருந்தது ஒத்ததே. (௧௬௧) </FONT></b> === (சிலம்பொடு) === : <b> சிலம்பொடு மேகலை மிழற்றத் தேனின || <FONT COLOR="FF 63 47 "> சிலம்பொடு மேகலை மிழற்ற தேன் இனம் </FONT></b> : <b> மலங்கலுண் டியாழ்செயு மம்பொற் பூங்கோடி || <FONT COLOR="FF 63 47 "> அலங்கல் உண்டு யாழ் செயும் அம் பொன் பூம் கொடி </FONT></b> : <b> நலம்பட நன்னடை கற்ற தொக்குமிவ் || <FONT COLOR="FF 63 47 "> நலம்பட நல் நடை கற்றது ஒக்கும் இவ் </FONT></b> : <b> விலங்கரித் தடங்கணா ளியாவ ளாங்கொலோ. (1012) || <FONT COLOR="FF 63 47 "> விலங்கு அரி தடம் கணாள் யாவளாம் கொலோ. (௧௬௨) </FONT></b> === (யாவளே) === : <b> யாவளே யாயினு மாக மற்றிவள் || <FONT COLOR="FF 63 47 "> யாவளே ஆயினும் ஆக மற்று இவள் </FONT></b> : <b> மேவிய பொருளொடு மீண்ட பின்னலா || <FONT COLOR="FF 63 47 "> மேவிய பொருளொடு மீண்ட பின் அலால் </FONT></b> : <b> லேவலாற் சேர்கலே னென்று பைங்கிளி || <FONT COLOR="FF 63 47 "> ஏவலால்(ன்) சேர்கலேன் என்று பைம் கிளி </FONT></b> : <b> பூவளர் சண்பகம் பொருந்திற் றென்பவே. (1013) || <FONT COLOR="FF 63 47 "> பூ வளர் சண்பகம் பொருந்திற்று என்பவே. (௧௬௩) </FONT></b> === (மதுக்களி) === : <b> மதுக்களி நெடுங்கணாள் வான்பொற் கிண்கிணி || <FONT COLOR="FF 63 47 "> மது களி நெடும் கணாள் வான் பொன் கிண்கிணி </FONT></b> : <b> யொதுக்கிடை மிழற்றச்சென் றெய்தி யூன்கவர் || <FONT COLOR="FF 63 47 "> ஒதுக்கிடை மிழற்ற சென்று எய்தி ஊன் கவர் </FONT></b> : <b> கதக்களி வேலினாற் கண்டு காமநீர்ப் || <FONT COLOR="FF 63 47 "> கதம் களி வேலினான் கண்டு காம நீர் </FONT></b> : <b> புதுத்தளி ரனையவள் புலந்து நோக்கினாள். (1014) || <FONT COLOR="FF 63 47 "> புது தளிர் அனையவள் புலந்து நோக்கினாள். (௧௬௪) </FONT></b> === (இதுவென) === : <b> இதுவென வுருவென வியக்கி யென்றலும் || <FONT COLOR="FF 63 47 "> இது என உரு என இயக்கி என்றலும் </FONT></b> : <b> புதிதிது பூந்துகிற் குழல்கள் சோ்தலால் || <FONT COLOR="FF 63 47 "> புதிது இது பூம் துகில் குழல்கள் சோர்தலால் </FONT></b> : <b> மதுவிரி கோதையம் மாலை நின்மன || <FONT COLOR="FF 63 47 "> மது விரி கோதை அம் மாலை நின் மனம் </FONT></b> : <b> மதுமுறை யியக்கலி னியக்கி யாகுமே. (1015) || <FONT COLOR="FF 63 47 "> அது முறை இயக்கலின் இயக்கி ஆகுமேஏ. (௧௬௫) </FONT></b> ==பாடல்: 166-170== === (முளைத்தெழு) === : <b> முளைத்தெழு மதியமுத் தரும்பி யாங்கென || <FONT COLOR="FF 63 47 "> முளைத்து எழு மதியம் முத்து அரும்பியாங்கு என </FONT></b> : <b> விளைத்தது திருமுகம் வியர்ப்ப வெஞ்சிலை || <FONT COLOR="FF 63 47 "> விளைத்தது திரு முகம் வியர்ப்ப வெம் சிலை </FONT></b> : <b> வளைத்தன புருவமு முரிந்த வல்லையே || <FONT COLOR="FF 63 47 "> வளைத்தன புருவமும் முரிந்த வல்லையே </FONT></b> : <b> கிளைக்கழு நீர்க்கணுஞ் சிவப்பிற் கேழ்த்தவே. (1016) || <FONT COLOR="FF 63 47 "> கிளை கழுநீர் கணும் சிவப்பின் கேழ்த்தவே. (௧௬௬) </FONT></b> === (பாவைநீ) === : <b> பாவைநீ புலவியி னிடல் பாவியேற் || <FONT COLOR="FF 63 47 "> பாவை நீ புலவியின் நீடல் பாவியேற்கு </FONT></b> : <b> காவியொன் றிரண்டுடம் பல்ல தூற்றுநீர்க் || <FONT COLOR="FF 63 47 "> ஆவி ஒன்று இரண்டு உடம்பு அல்லது ஊற்று நீர் </FONT></b> : <b> கூவல்வாய் வெண்மணல் குறுகச் செல்லுமே || <FONT COLOR="FF 63 47 "> கூவல் வாய் வெள் மணல் குறுக செல்லுமே மே </FONT></b> : <b> மேவிப்பூங் கங்கையுள் விழைந்த வன்னமே. (1017) || <FONT COLOR="FF 63 47 "> மேவி பூம் கங்கையுள் விழைந்த அன்னமே. (௧௬௭) </FONT></b> === (பேரினும்) === : <b> பேரினும் பெண்டிரைப் பொறாது சீறுவா || <FONT COLOR="FF 63 47 "> பேரினும் பெண்டிரை பொறாது சீறுவாள் </FONT></b> : <b> ணேர்மலர்ப் பாவையை நோக்கி நெய்சொரி || <FONT COLOR="FF 63 47 "> நேர் மலர் பாவையை நோக்கி நெய் சொரி </FONT></b> : <b> கூரழற் போல்வதோர் புலவி கூர்ந்ததே || <FONT COLOR="FF 63 47 "> கூர் அழல் போல்வது ஓர் புலவி கூர்ந்ததே </FONT></b> : <b> யார்வுறு கணவன்மாட் டமிர்தின் சாயற்கே. (1018) || <FONT COLOR="FF 63 47 "> ஆர்வு உறு கணவன் மாட்டு அமிர்தின் சாயற்கே. (௧௬௮) </FONT></b> === (புலந்தவள்) === : <b> புலந்தவள் கொடியென நடுங்கிப் பொன்னரிச் || <FONT COLOR="FF 63 47 "> புலந்தவள் கொடி என நடுங்கி பொன் அரி </FONT></b> : <b> சிலம்பொடு மேகலை மிழற்றச் சென்னிமே || <FONT COLOR="FF 63 47 "> சிலம்பொடு மேகலை மிழற்ற சென்னி மேல் </FONT></b> : <b> லலங்கல்வா யடிமல ரணிந்து குண்டல|| <FONT COLOR="FF 63 47 "> அலங்கல் வாய் அடி மலர் அணிந்து குண்டலம் </FONT></b> : <b> மிலங்கப்பேர்ந் தினமலர்ச் சிதறி யேகினாள். (1019) || <FONT COLOR="FF 63 47 "> இலங்க பேர்ந்து இனம் மலர் சிதறி ஏகினாள். (௧௬௯) </FONT></b> === (துனிப்புறு) === : <b> துனிப்புறு கிளவியாற் றுணைவி யேகலு || <FONT COLOR="FF 63 47 "> துனிப்பு உறு கிளவியால் துணைவி ஏகலும் </FONT></b> : <b> மினிப்பிறர்க் கிடமிலை யெழுவ லீங்கெனாக் || <FONT COLOR="FF 63 47 "> இனி பிறர்க்கு இடம் இலை எழுவல் ஈங்கு எனா </FONT></b> : <b> கனிப்புறு சொல்லளைஇப் பறந்து காளைதன் || <FONT COLOR="FF 63 47 "> கனிப்புறு சொல் அளைஇ பறந்து காளை தன் </FONT></b> : <b> பனிக்கதிர்ப் பகைமலர்ப் பாதஞ் சேர்ந்ததே. (1020) || <FONT COLOR="FF 63 47 "> பனி கதிர் பகை மலர் பாதம் சேர்ந்ததே. (௧௭௦) </FONT></b> ==பாடல்: 171-175== === (வாழ்கநின்) === : <b> வாழ்கநின் கழலடி மைந்த வென்னவே || <FONT COLOR="FF 63 47 "> வாழ்க நின் கழல் அடி மைந்த என்னவே </FONT></b> : <b> தோழியர் சுவாகதம் போது கீங்கெனச் || <FONT COLOR="FF 63 47 "> தோழியர் சுவாகதம் போதுக ஈங்கு என </FONT></b> : <b> சூழ்மணி மோதிரஞ் சுடர்ந்து வில்லிட || <FONT COLOR="FF 63 47 "> சூழ் மணி மோதிரம் சுடர்ந்து வில்லிட </FONT></b> : <b> யாழறி வித்தக னங்கை நீட்டினான். (1021) || <FONT COLOR="FF 63 47 "> யாழ் அறி வித்தகன் அங்கை நீட்டினான். (௧௭௧) </FONT></b> === (பொன்னியல்) === : <b> பொன்னியல் குரும்பையிற் பொலிந்த வெம்முலைக் || <FONT COLOR="FF 63 47 "> பொன் இயல் குரும்பையின் பொலிந்த வெம் முலை </FONT></b> : <b> கன்னியர் தூதொடு காமர் பைங்கிளி || <FONT COLOR="FF 63 47 "> கன்னியர் தூதொடு காமர் பைங்கிளி </FONT></b> : <b> முன்னமே வந்தென முறுவ னோக்கமொ || <FONT COLOR="FF 63 47 "> முன்னமே வந்தென முறுவல் நோக்கமொடு </FONT></b> : <b> டென்னைகொல் வரவென வினிய செப்பினான். (1022) || <FONT COLOR="FF 63 47 "> என்னை கொல் வரவு என இனிய செப்பினான். (௧௭௨) </FONT></b> === (மையலங்) === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] ====பார்க்க:=== :🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]]. sf6hcv9wc2m14nwkgd8e97go0jmj07n 1834804 1834803 2025-06-24T04:00:48Z Meykandan 544 /* (பூணொடேந்) */ 1834804 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 151-175 === ==பாடல்: 151-155== {{dhr}} === (தெளிகயம்) === : <b> தெளிக யம்மலர் மேலுறை தேவியி || <FONT COLOR="FF 63 47 "> தெளி கயம் மலர் மேல் உறை தேவியின் </FONT></b> : <b> னொளியுஞ் சாயலு மொப்புமை யில்லவள் || <FONT COLOR="FF 63 47 "> ஒளியும் சாயலும் ஒப்புமை இல்லவள் </FONT></b> : <b> களிகொள் காமத்திற் கையற வெய்தித்தன் || <FONT COLOR="FF 63 47 "> களி கொள் காமத்தின் கையறவு எய்தி </FONT></b> : <b> கிளியைத் தூதுவிட் டாள்கிளந் தென்பவே (1001) || <FONT COLOR="FF 63 47 "> கிளியைத் தூது விட்டாள் கிளந்து என்பவே. (௧௫௧) </FONT></b> === (பூணொடேந்) === : <b> பூணொ டேந்திய வெம்முலைப் பொன்னனாள் || <FONT COLOR="FF 63 47 "> பூணொடு ஏந்திய வெம் முலை பொன் அனாள் </FONT></b> : <b> நாணுந் தன்குல னுந்நலங் கீழ்ப்பட || <FONT COLOR="FF 63 47 "> நாணும் தன் குலனும் நலம் கீழ்ப்பட </FONT></b> : <b> வீணை வித்தகற் காணிய விண்படர்ந் || <FONT COLOR="FF 63 47 "> வீணை வித்தகன் காணிய விண் படர்ந்து </FONT></b> : <b> தாணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே. (1002) || <FONT COLOR="FF 63 47 "> ஆணு பைம் கிளி ஆண்டு பறந்ததே. (௧௫௨) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (கூட்டினான்) === : <b> கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன் || <FONT COLOR="FF 63 47 "> கூட்டினான் மணி பல தெளித்து கொண்டு அவன் </FONT></b> : <b> தீட்டினான் கிழிமிசைத் திலக வாணுதல் || <FONT COLOR="FF 63 47 "> தீட்டினான் கிழி மிசை திலக வாள் நுதல் </FONT></b> : <b> வேட்டமால் களிற்றிடை வெருவி நின்றதோர் || <FONT COLOR="FF 63 47 "> வேட்ட மால் களிற்று இடை வெருவி நின்றது ஓர் </FONT></b> : <b> நாட்டமு நடுக்கமு நங்கை வண்ணமே. (1003) || <FONT COLOR="FF 63 47 "> நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே. (௧௫௩) </FONT></b> === (நெகிழ்ந்து) === : <b> நெகிழ்ந்துசோர் பூந்துகி னோக்கி நோக்கியே || <FONT COLOR="FF 63 47 "> நெகிழ்ந்து சோர் பூம் துகில் நோக்கி நோக்கியே </FONT></b> : <b> மகிழ்ந்துவீழ் மணிக்குழன் மாலை காறொடும் || <FONT COLOR="FF 63 47 "> மகிழ்ந்து வீழ் மணி குழல் மாலை கால் தொடும் </FONT></b> : <b> முகிழ்த்துவீங் கிளமுலை முத்தந் தைவரும் || <FONT COLOR="FF 63 47 "> முகிழ்த்து வீங்கு இள முலை முத்தம் தைவரும் </FONT></b> : <b> புகழ்ந்துதன் றோள்களிற் புல்லு மெல்லவே. (1004) || <FONT COLOR="FF 63 47 "> புகழ்ந்து தன் தோள்களில் புல்லும் மெல்லவே. (௧௫௪) </FONT></b> ===(படைமலர்) === : <b> படைமலர் நெடுங்கணாள் பாவை யேந்தல்குல் || <FONT COLOR="FF 63 47 "> படை மலர் நெடும் கணாள் பாவை ஏந்து அல்குல் </FONT></b> : <b> மிடைமணி மேகலை நோற்ற வெந்தொழிற் || <FONT COLOR="FF 63 47 "> மிடை மணி மேகலை நோற்ற வெம் தொழில் </FONT></b> : <b> புடைதிரள் வனமுலைப் பூணு நோற்றன || <FONT COLOR="FF 63 47 "> புடை திரள் வன முலை பூணும் நோற்றன </FONT></b> : <b> வடிமலர்த் தாமரை சிலம்பு நோற்றவே. (1005) || <FONT COLOR="FF 63 47 "> அடிமலர் தாமரை சிலம்பும் நோற்றவே. (௧௫௫) </FONT></b> ==பாடல்: 156-160== === (மின்னணங்) === : <b> மின்னணங் குறுமிடை மேவர் சாயலுக் || <FONT COLOR="FF 63 47 "> மின் அணங்குறும் இடை மேவர் சாயலுக்கு </FONT></b> : <b> கின்னண மிறைமகன் புலம்ப யாவதுந் || <FONT COLOR="FF 63 47 "> இன்னணம் இறை மகன் புலம்ப யாவதும் </FONT></b> : <b> தன்னணங் குறுமொழித் தத்தை தத்தையை || <FONT COLOR="FF 63 47 "> தன் அணங்கு உறு மொழி தத்தை தத்தையை </FONT></b> : <b> மன்னணங் குறலொடு மகிழ்ந்து கண்டதே. (1006) || <FONT COLOR="FF 63 47 "> மன் அணங்குறலோடு மகிழ்ந்து கண்டதே. (௧௫௬) </FONT></b> === (ஆடுபாம்பென) === : <b> ஆடுபாம் பெனப்புடை யகன்ற வல்குன்மேற் || <FONT COLOR="FF 63 47 "> ஆடு பாம்பு என புடை அகன்ற அல்குல் மேல் </FONT></b> : <b> சூடிய கலைப்புறஞ் சூழ்ந்த பூந்துகி || <FONT COLOR="FF 63 47 "> சூடிய கலை புறம் சூழ்ந்த பூ துகில் </FONT></b> : <b> லோடிய வெரிவளைத் துருவ வெண்புகை || <FONT COLOR="FF 63 47 "> ஓடிய எரி வளைத்து உருவ வெண் புகை </FONT></b> : <b> கூடிமற் றதன்புறன் குலாய கொள்கைத்தே. (1007) || <FONT COLOR="FF 63 47 "> கூடி மற்று அதன் புறன் குலாய கொள்கைத்தே. (௧௫௭) </FONT></b> === (கொன்வளர்) === : <b> கொன்வளர் குவிமுலைக் கோட்டிற் றாழ்ந்தன || <FONT COLOR="FF 63 47 "> கொன் வளர் குவி முலை கோட்டில் தாழ்ந்தன </FONT></b> : <b> மின்வளர் திரள்வடம் விளங்கு பைங்கதி || <FONT COLOR="FF 63 47 "> மின் வளர் திரள் வடம் விளங்கு பைம் கதிர் </FONT></b> : <b> ரின்வள ரிளம்பிறை யெழுதப் பட்டன || <FONT COLOR="FF 63 47 "> இன் வளர் இளம் பிறை எழுதப்பட்டன </FONT></b> : <b> பொன்வளர் செப்பின்மேற் பொலிந்த போன்றவே. (1008) || <FONT COLOR="FF 63 47 "> பொன் வளர் செப்பின் மேல் பொலிந்த போன்றவே. (௧௫௮) </FONT></b> === (குண்டல) === : <b> குண்டல மொருபுடை குலாவி வில்லிட || <FONT COLOR="FF 63 47 "> குண்டலம் ஒரு புடை குலாவி வில் இட </FONT></b> : <b> விண்டலர்ந் தொருபுடை தோடு மின்செய || <FONT COLOR="FF 63 47 "> விண்டு அலர்ந்து ஒரு புடை தோடு மின் செய </FONT></b> : <b> மண்டல நிறைந்ததோர் மதிய மன்னதே || <FONT COLOR="FF 63 47 "> மண்டலம் நிறைந்தது ஓர் மதியம் அன்னதே </FONT></b> : <b>யொண்டொடி திருமுகத் துருவ மாட்சியே. (1009) || <FONT COLOR="FF 63 47 "> ஒள் தொடி திரு முகத்து உருவ மாட்சியே. (௧௫௯) </FONT></b> === (பூணிற) === : <b> பூணிற முலையவள் பொருவில் பூநுதல் || <FONT COLOR="FF 63 47 "> பூண் நிறம் முலையவள் பொரு இல் பூ நுதல் </FONT></b> : <b> மாணிறக் கருங்குழன் மருங்கிற் போக்கிய || <FONT COLOR="FF 63 47 "> மாண் நிறம் கரும் குழல் மருங்கில் போக்கிய </FONT></b> : <b> நாணிற மிகுகதிர்ப் பட்ட நல்லொளி || <FONT COLOR="FF 63 47 "> நாள் நிறம் மிகு கதிர் பட்டம் நல் ஒளி </FONT></b> : <b> வாணிற மின்னிருள் வளைத்த தொத்ததே. (1010) || <FONT COLOR="FF 63 47 "> மாண் நிறம் மின் இருள் வளைத்தது ஒத்ததே. (௧௬௦) </FONT></b> ==பாடல்: 161-165== === (கடிகமழ்) === : <b> கடிகமழ் பூஞ்சிகை காமர் மல்லிகை || <FONT COLOR="FF 63 47 "> கடி கமழ் பூம் சிகை காமர் மல்லிகை </FONT></b> : <b> வடிவுடை மாலைகா றொடர்ந்து வாய்ந்தது || <FONT COLOR="FF 63 47 "> வடிவு உடை மாலை கால் தொடர்ந்து வாய்ந்தது </FONT></b> : <b> நடுவொசிந் தொல்கிய நாறு மாமலர்க் || <FONT COLOR="FF 63 47 "> நடு ஒசிந்து ஒல்கிய நாறும் மா மலர் </FONT></b> : <b> கொடியின்மேற் குயில்குனிந் திருந்த தொத்ததே. (1011) || <FONT COLOR="FF 63 47 "> கொடியின் மேல் குயில் குனிந்து இருந்தது ஒத்ததே. (௧௬௧) </FONT></b> === (சிலம்பொடு) === : <b> சிலம்பொடு மேகலை மிழற்றத் தேனின || <FONT COLOR="FF 63 47 "> சிலம்பொடு மேகலை மிழற்ற தேன் இனம் </FONT></b> : <b> மலங்கலுண் டியாழ்செயு மம்பொற் பூங்கோடி || <FONT COLOR="FF 63 47 "> அலங்கல் உண்டு யாழ் செயும் அம் பொன் பூம் கொடி </FONT></b> : <b> நலம்பட நன்னடை கற்ற தொக்குமிவ் || <FONT COLOR="FF 63 47 "> நலம்பட நல் நடை கற்றது ஒக்கும் இவ் </FONT></b> : <b> விலங்கரித் தடங்கணா ளியாவ ளாங்கொலோ. (1012) || <FONT COLOR="FF 63 47 "> விலங்கு அரி தடம் கணாள் யாவளாம் கொலோ. (௧௬௨) </FONT></b> === (யாவளே) === : <b> யாவளே யாயினு மாக மற்றிவள் || <FONT COLOR="FF 63 47 "> யாவளே ஆயினும் ஆக மற்று இவள் </FONT></b> : <b> மேவிய பொருளொடு மீண்ட பின்னலா || <FONT COLOR="FF 63 47 "> மேவிய பொருளொடு மீண்ட பின் அலால் </FONT></b> : <b> லேவலாற் சேர்கலே னென்று பைங்கிளி || <FONT COLOR="FF 63 47 "> ஏவலால்(ன்) சேர்கலேன் என்று பைம் கிளி </FONT></b> : <b> பூவளர் சண்பகம் பொருந்திற் றென்பவே. (1013) || <FONT COLOR="FF 63 47 "> பூ வளர் சண்பகம் பொருந்திற்று என்பவே. (௧௬௩) </FONT></b> === (மதுக்களி) === : <b> மதுக்களி நெடுங்கணாள் வான்பொற் கிண்கிணி || <FONT COLOR="FF 63 47 "> மது களி நெடும் கணாள் வான் பொன் கிண்கிணி </FONT></b> : <b> யொதுக்கிடை மிழற்றச்சென் றெய்தி யூன்கவர் || <FONT COLOR="FF 63 47 "> ஒதுக்கிடை மிழற்ற சென்று எய்தி ஊன் கவர் </FONT></b> : <b> கதக்களி வேலினாற் கண்டு காமநீர்ப் || <FONT COLOR="FF 63 47 "> கதம் களி வேலினான் கண்டு காம நீர் </FONT></b> : <b> புதுத்தளி ரனையவள் புலந்து நோக்கினாள். (1014) || <FONT COLOR="FF 63 47 "> புது தளிர் அனையவள் புலந்து நோக்கினாள். (௧௬௪) </FONT></b> === (இதுவென) === : <b> இதுவென வுருவென வியக்கி யென்றலும் || <FONT COLOR="FF 63 47 "> இது என உரு என இயக்கி என்றலும் </FONT></b> : <b> புதிதிது பூந்துகிற் குழல்கள் சோ்தலால் || <FONT COLOR="FF 63 47 "> புதிது இது பூம் துகில் குழல்கள் சோர்தலால் </FONT></b> : <b> மதுவிரி கோதையம் மாலை நின்மன || <FONT COLOR="FF 63 47 "> மது விரி கோதை அம் மாலை நின் மனம் </FONT></b> : <b> மதுமுறை யியக்கலி னியக்கி யாகுமே. (1015) || <FONT COLOR="FF 63 47 "> அது முறை இயக்கலின் இயக்கி ஆகுமேஏ. (௧௬௫) </FONT></b> ==பாடல்: 166-170== === (முளைத்தெழு) === : <b> முளைத்தெழு மதியமுத் தரும்பி யாங்கென || <FONT COLOR="FF 63 47 "> முளைத்து எழு மதியம் முத்து அரும்பியாங்கு என </FONT></b> : <b> விளைத்தது திருமுகம் வியர்ப்ப வெஞ்சிலை || <FONT COLOR="FF 63 47 "> விளைத்தது திரு முகம் வியர்ப்ப வெம் சிலை </FONT></b> : <b> வளைத்தன புருவமு முரிந்த வல்லையே || <FONT COLOR="FF 63 47 "> வளைத்தன புருவமும் முரிந்த வல்லையே </FONT></b> : <b> கிளைக்கழு நீர்க்கணுஞ் சிவப்பிற் கேழ்த்தவே. (1016) || <FONT COLOR="FF 63 47 "> கிளை கழுநீர் கணும் சிவப்பின் கேழ்த்தவே. (௧௬௬) </FONT></b> === (பாவைநீ) === : <b> பாவைநீ புலவியி னிடல் பாவியேற் || <FONT COLOR="FF 63 47 "> பாவை நீ புலவியின் நீடல் பாவியேற்கு </FONT></b> : <b> காவியொன் றிரண்டுடம் பல்ல தூற்றுநீர்க் || <FONT COLOR="FF 63 47 "> ஆவி ஒன்று இரண்டு உடம்பு அல்லது ஊற்று நீர் </FONT></b> : <b> கூவல்வாய் வெண்மணல் குறுகச் செல்லுமே || <FONT COLOR="FF 63 47 "> கூவல் வாய் வெள் மணல் குறுக செல்லுமே மே </FONT></b> : <b> மேவிப்பூங் கங்கையுள் விழைந்த வன்னமே. (1017) || <FONT COLOR="FF 63 47 "> மேவி பூம் கங்கையுள் விழைந்த அன்னமே. (௧௬௭) </FONT></b> === (பேரினும்) === : <b> பேரினும் பெண்டிரைப் பொறாது சீறுவா || <FONT COLOR="FF 63 47 "> பேரினும் பெண்டிரை பொறாது சீறுவாள் </FONT></b> : <b> ணேர்மலர்ப் பாவையை நோக்கி நெய்சொரி || <FONT COLOR="FF 63 47 "> நேர் மலர் பாவையை நோக்கி நெய் சொரி </FONT></b> : <b> கூரழற் போல்வதோர் புலவி கூர்ந்ததே || <FONT COLOR="FF 63 47 "> கூர் அழல் போல்வது ஓர் புலவி கூர்ந்ததே </FONT></b> : <b> யார்வுறு கணவன்மாட் டமிர்தின் சாயற்கே. (1018) || <FONT COLOR="FF 63 47 "> ஆர்வு உறு கணவன் மாட்டு அமிர்தின் சாயற்கே. (௧௬௮) </FONT></b> === (புலந்தவள்) === : <b> புலந்தவள் கொடியென நடுங்கிப் பொன்னரிச் || <FONT COLOR="FF 63 47 "> புலந்தவள் கொடி என நடுங்கி பொன் அரி </FONT></b> : <b> சிலம்பொடு மேகலை மிழற்றச் சென்னிமே || <FONT COLOR="FF 63 47 "> சிலம்பொடு மேகலை மிழற்ற சென்னி மேல் </FONT></b> : <b> லலங்கல்வா யடிமல ரணிந்து குண்டல|| <FONT COLOR="FF 63 47 "> அலங்கல் வாய் அடி மலர் அணிந்து குண்டலம் </FONT></b> : <b> மிலங்கப்பேர்ந் தினமலர்ச் சிதறி யேகினாள். (1019) || <FONT COLOR="FF 63 47 "> இலங்க பேர்ந்து இனம் மலர் சிதறி ஏகினாள். (௧௬௯) </FONT></b> === (துனிப்புறு) === : <b> துனிப்புறு கிளவியாற் றுணைவி யேகலு || <FONT COLOR="FF 63 47 "> துனிப்பு உறு கிளவியால் துணைவி ஏகலும் </FONT></b> : <b> மினிப்பிறர்க் கிடமிலை யெழுவ லீங்கெனாக் || <FONT COLOR="FF 63 47 "> இனி பிறர்க்கு இடம் இலை எழுவல் ஈங்கு எனா </FONT></b> : <b> கனிப்புறு சொல்லளைஇப் பறந்து காளைதன் || <FONT COLOR="FF 63 47 "> கனிப்புறு சொல் அளைஇ பறந்து காளை தன் </FONT></b> : <b> பனிக்கதிர்ப் பகைமலர்ப் பாதஞ் சேர்ந்ததே. (1020) || <FONT COLOR="FF 63 47 "> பனி கதிர் பகை மலர் பாதம் சேர்ந்ததே. (௧௭௦) </FONT></b> ==பாடல்: 171-175== === (வாழ்கநின்) === : <b> வாழ்கநின் கழலடி மைந்த வென்னவே || <FONT COLOR="FF 63 47 "> வாழ்க நின் கழல் அடி மைந்த என்னவே </FONT></b> : <b> தோழியர் சுவாகதம் போது கீங்கெனச் || <FONT COLOR="FF 63 47 "> தோழியர் சுவாகதம் போதுக ஈங்கு என </FONT></b> : <b> சூழ்மணி மோதிரஞ் சுடர்ந்து வில்லிட || <FONT COLOR="FF 63 47 "> சூழ் மணி மோதிரம் சுடர்ந்து வில்லிட </FONT></b> : <b> யாழறி வித்தக னங்கை நீட்டினான். (1021) || <FONT COLOR="FF 63 47 "> யாழ் அறி வித்தகன் அங்கை நீட்டினான். (௧௭௧) </FONT></b> === (பொன்னியல்) === : <b> பொன்னியல் குரும்பையிற் பொலிந்த வெம்முலைக் || <FONT COLOR="FF 63 47 "> பொன் இயல் குரும்பையின் பொலிந்த வெம் முலை </FONT></b> : <b> கன்னியர் தூதொடு காமர் பைங்கிளி || <FONT COLOR="FF 63 47 "> கன்னியர் தூதொடு காமர் பைங்கிளி </FONT></b> : <b> முன்னமே வந்தென முறுவ னோக்கமொ || <FONT COLOR="FF 63 47 "> முன்னமே வந்தென முறுவல் நோக்கமொடு </FONT></b> : <b> டென்னைகொல் வரவென வினிய செப்பினான். (1022) || <FONT COLOR="FF 63 47 "> என்னை கொல் வரவு என இனிய செப்பினான். (௧௭௨) </FONT></b> === (மையலங்) === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] ====பார்க்க:=== :🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]]. l3a57om39wyu77k1p1h8410w3xa7pjw 1834967 1834804 2025-06-24T08:50:34Z Meykandan 544 /* பாடல்: 171-175 */ 1834967 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 151-175 === ==பாடல்: 151-155== {{dhr}} === (தெளிகயம்) === : <b> தெளிக யம்மலர் மேலுறை தேவியி || <FONT COLOR="FF 63 47 "> தெளி கயம் மலர் மேல் உறை தேவியின் </FONT></b> : <b> னொளியுஞ் சாயலு மொப்புமை யில்லவள் || <FONT COLOR="FF 63 47 "> ஒளியும் சாயலும் ஒப்புமை இல்லவள் </FONT></b> : <b> களிகொள் காமத்திற் கையற வெய்தித்தன் || <FONT COLOR="FF 63 47 "> களி கொள் காமத்தின் கையறவு எய்தி </FONT></b> : <b> கிளியைத் தூதுவிட் டாள்கிளந் தென்பவே (1001) || <FONT COLOR="FF 63 47 "> கிளியைத் தூது விட்டாள் கிளந்து என்பவே. (௧௫௧) </FONT></b> === (பூணொடேந்) === : <b> பூணொ டேந்திய வெம்முலைப் பொன்னனாள் || <FONT COLOR="FF 63 47 "> பூணொடு ஏந்திய வெம் முலை பொன் அனாள் </FONT></b> : <b> நாணுந் தன்குல னுந்நலங் கீழ்ப்பட || <FONT COLOR="FF 63 47 "> நாணும் தன் குலனும் நலம் கீழ்ப்பட </FONT></b> : <b> வீணை வித்தகற் காணிய விண்படர்ந் || <FONT COLOR="FF 63 47 "> வீணை வித்தகன் காணிய விண் படர்ந்து </FONT></b> : <b> தாணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே. (1002) || <FONT COLOR="FF 63 47 "> ஆணு பைம் கிளி ஆண்டு பறந்ததே. (௧௫௨) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (கூட்டினான்) === : <b> கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன் || <FONT COLOR="FF 63 47 "> கூட்டினான் மணி பல தெளித்து கொண்டு அவன் </FONT></b> : <b> தீட்டினான் கிழிமிசைத் திலக வாணுதல் || <FONT COLOR="FF 63 47 "> தீட்டினான் கிழி மிசை திலக வாள் நுதல் </FONT></b> : <b> வேட்டமால் களிற்றிடை வெருவி நின்றதோர் || <FONT COLOR="FF 63 47 "> வேட்ட மால் களிற்று இடை வெருவி நின்றது ஓர் </FONT></b> : <b> நாட்டமு நடுக்கமு நங்கை வண்ணமே. (1003) || <FONT COLOR="FF 63 47 "> நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே. (௧௫௩) </FONT></b> === (நெகிழ்ந்து) === : <b> நெகிழ்ந்துசோர் பூந்துகி னோக்கி நோக்கியே || <FONT COLOR="FF 63 47 "> நெகிழ்ந்து சோர் பூம் துகில் நோக்கி நோக்கியே </FONT></b> : <b> மகிழ்ந்துவீழ் மணிக்குழன் மாலை காறொடும் || <FONT COLOR="FF 63 47 "> மகிழ்ந்து வீழ் மணி குழல் மாலை கால் தொடும் </FONT></b> : <b> முகிழ்த்துவீங் கிளமுலை முத்தந் தைவரும் || <FONT COLOR="FF 63 47 "> முகிழ்த்து வீங்கு இள முலை முத்தம் தைவரும் </FONT></b> : <b> புகழ்ந்துதன் றோள்களிற் புல்லு மெல்லவே. (1004) || <FONT COLOR="FF 63 47 "> புகழ்ந்து தன் தோள்களில் புல்லும் மெல்லவே. (௧௫௪) </FONT></b> ===(படைமலர்) === : <b> படைமலர் நெடுங்கணாள் பாவை யேந்தல்குல் || <FONT COLOR="FF 63 47 "> படை மலர் நெடும் கணாள் பாவை ஏந்து அல்குல் </FONT></b> : <b> மிடைமணி மேகலை நோற்ற வெந்தொழிற் || <FONT COLOR="FF 63 47 "> மிடை மணி மேகலை நோற்ற வெம் தொழில் </FONT></b> : <b> புடைதிரள் வனமுலைப் பூணு நோற்றன || <FONT COLOR="FF 63 47 "> புடை திரள் வன முலை பூணும் நோற்றன </FONT></b> : <b> வடிமலர்த் தாமரை சிலம்பு நோற்றவே. (1005) || <FONT COLOR="FF 63 47 "> அடிமலர் தாமரை சிலம்பும் நோற்றவே. (௧௫௫) </FONT></b> ==பாடல்: 156-160== === (மின்னணங்) === : <b> மின்னணங் குறுமிடை மேவர் சாயலுக் || <FONT COLOR="FF 63 47 "> மின் அணங்குறும் இடை மேவர் சாயலுக்கு </FONT></b> : <b> கின்னண மிறைமகன் புலம்ப யாவதுந் || <FONT COLOR="FF 63 47 "> இன்னணம் இறை மகன் புலம்ப யாவதும் </FONT></b> : <b> தன்னணங் குறுமொழித் தத்தை தத்தையை || <FONT COLOR="FF 63 47 "> தன் அணங்கு உறு மொழி தத்தை தத்தையை </FONT></b> : <b> மன்னணங் குறலொடு மகிழ்ந்து கண்டதே. (1006) || <FONT COLOR="FF 63 47 "> மன் அணங்குறலோடு மகிழ்ந்து கண்டதே. (௧௫௬) </FONT></b> === (ஆடுபாம்பென) === : <b> ஆடுபாம் பெனப்புடை யகன்ற வல்குன்மேற் || <FONT COLOR="FF 63 47 "> ஆடு பாம்பு என புடை அகன்ற அல்குல் மேல் </FONT></b> : <b> சூடிய கலைப்புறஞ் சூழ்ந்த பூந்துகி || <FONT COLOR="FF 63 47 "> சூடிய கலை புறம் சூழ்ந்த பூ துகில் </FONT></b> : <b> லோடிய வெரிவளைத் துருவ வெண்புகை || <FONT COLOR="FF 63 47 "> ஓடிய எரி வளைத்து உருவ வெண் புகை </FONT></b> : <b> கூடிமற் றதன்புறன் குலாய கொள்கைத்தே. (1007) || <FONT COLOR="FF 63 47 "> கூடி மற்று அதன் புறன் குலாய கொள்கைத்தே. (௧௫௭) </FONT></b> === (கொன்வளர்) === : <b> கொன்வளர் குவிமுலைக் கோட்டிற் றாழ்ந்தன || <FONT COLOR="FF 63 47 "> கொன் வளர் குவி முலை கோட்டில் தாழ்ந்தன </FONT></b> : <b> மின்வளர் திரள்வடம் விளங்கு பைங்கதி || <FONT COLOR="FF 63 47 "> மின் வளர் திரள் வடம் விளங்கு பைம் கதிர் </FONT></b> : <b> ரின்வள ரிளம்பிறை யெழுதப் பட்டன || <FONT COLOR="FF 63 47 "> இன் வளர் இளம் பிறை எழுதப்பட்டன </FONT></b> : <b> பொன்வளர் செப்பின்மேற் பொலிந்த போன்றவே. (1008) || <FONT COLOR="FF 63 47 "> பொன் வளர் செப்பின் மேல் பொலிந்த போன்றவே. (௧௫௮) </FONT></b> === (குண்டல) === : <b> குண்டல மொருபுடை குலாவி வில்லிட || <FONT COLOR="FF 63 47 "> குண்டலம் ஒரு புடை குலாவி வில் இட </FONT></b> : <b> விண்டலர்ந் தொருபுடை தோடு மின்செய || <FONT COLOR="FF 63 47 "> விண்டு அலர்ந்து ஒரு புடை தோடு மின் செய </FONT></b> : <b> மண்டல நிறைந்ததோர் மதிய மன்னதே || <FONT COLOR="FF 63 47 "> மண்டலம் நிறைந்தது ஓர் மதியம் அன்னதே </FONT></b> : <b>யொண்டொடி திருமுகத் துருவ மாட்சியே. (1009) || <FONT COLOR="FF 63 47 "> ஒள் தொடி திரு முகத்து உருவ மாட்சியே. (௧௫௯) </FONT></b> === (பூணிற) === : <b> பூணிற முலையவள் பொருவில் பூநுதல் || <FONT COLOR="FF 63 47 "> பூண் நிறம் முலையவள் பொரு இல் பூ நுதல் </FONT></b> : <b> மாணிறக் கருங்குழன் மருங்கிற் போக்கிய || <FONT COLOR="FF 63 47 "> மாண் நிறம் கரும் குழல் மருங்கில் போக்கிய </FONT></b> : <b> நாணிற மிகுகதிர்ப் பட்ட நல்லொளி || <FONT COLOR="FF 63 47 "> நாள் நிறம் மிகு கதிர் பட்டம் நல் ஒளி </FONT></b> : <b> வாணிற மின்னிருள் வளைத்த தொத்ததே. (1010) || <FONT COLOR="FF 63 47 "> மாண் நிறம் மின் இருள் வளைத்தது ஒத்ததே. (௧௬௦) </FONT></b> ==பாடல்: 161-165== === (கடிகமழ்) === : <b> கடிகமழ் பூஞ்சிகை காமர் மல்லிகை || <FONT COLOR="FF 63 47 "> கடி கமழ் பூம் சிகை காமர் மல்லிகை </FONT></b> : <b> வடிவுடை மாலைகா றொடர்ந்து வாய்ந்தது || <FONT COLOR="FF 63 47 "> வடிவு உடை மாலை கால் தொடர்ந்து வாய்ந்தது </FONT></b> : <b> நடுவொசிந் தொல்கிய நாறு மாமலர்க் || <FONT COLOR="FF 63 47 "> நடு ஒசிந்து ஒல்கிய நாறும் மா மலர் </FONT></b> : <b> கொடியின்மேற் குயில்குனிந் திருந்த தொத்ததே. (1011) || <FONT COLOR="FF 63 47 "> கொடியின் மேல் குயில் குனிந்து இருந்தது ஒத்ததே. (௧௬௧) </FONT></b> === (சிலம்பொடு) === : <b> சிலம்பொடு மேகலை மிழற்றத் தேனின || <FONT COLOR="FF 63 47 "> சிலம்பொடு மேகலை மிழற்ற தேன் இனம் </FONT></b> : <b> மலங்கலுண் டியாழ்செயு மம்பொற் பூங்கோடி || <FONT COLOR="FF 63 47 "> அலங்கல் உண்டு யாழ் செயும் அம் பொன் பூம் கொடி </FONT></b> : <b> நலம்பட நன்னடை கற்ற தொக்குமிவ் || <FONT COLOR="FF 63 47 "> நலம்பட நல் நடை கற்றது ஒக்கும் இவ் </FONT></b> : <b> விலங்கரித் தடங்கணா ளியாவ ளாங்கொலோ. (1012) || <FONT COLOR="FF 63 47 "> விலங்கு அரி தடம் கணாள் யாவளாம் கொலோ. (௧௬௨) </FONT></b> === (யாவளே) === : <b> யாவளே யாயினு மாக மற்றிவள் || <FONT COLOR="FF 63 47 "> யாவளே ஆயினும் ஆக மற்று இவள் </FONT></b> : <b> மேவிய பொருளொடு மீண்ட பின்னலா || <FONT COLOR="FF 63 47 "> மேவிய பொருளொடு மீண்ட பின் அலால் </FONT></b> : <b> லேவலாற் சேர்கலே னென்று பைங்கிளி || <FONT COLOR="FF 63 47 "> ஏவலால்(ன்) சேர்கலேன் என்று பைம் கிளி </FONT></b> : <b> பூவளர் சண்பகம் பொருந்திற் றென்பவே. (1013) || <FONT COLOR="FF 63 47 "> பூ வளர் சண்பகம் பொருந்திற்று என்பவே. (௧௬௩) </FONT></b> === (மதுக்களி) === : <b> மதுக்களி நெடுங்கணாள் வான்பொற் கிண்கிணி || <FONT COLOR="FF 63 47 "> மது களி நெடும் கணாள் வான் பொன் கிண்கிணி </FONT></b> : <b> யொதுக்கிடை மிழற்றச்சென் றெய்தி யூன்கவர் || <FONT COLOR="FF 63 47 "> ஒதுக்கிடை மிழற்ற சென்று எய்தி ஊன் கவர் </FONT></b> : <b> கதக்களி வேலினாற் கண்டு காமநீர்ப் || <FONT COLOR="FF 63 47 "> கதம் களி வேலினான் கண்டு காம நீர் </FONT></b> : <b> புதுத்தளி ரனையவள் புலந்து நோக்கினாள். (1014) || <FONT COLOR="FF 63 47 "> புது தளிர் அனையவள் புலந்து நோக்கினாள். (௧௬௪) </FONT></b> === (இதுவென) === : <b> இதுவென வுருவென வியக்கி யென்றலும் || <FONT COLOR="FF 63 47 "> இது என உரு என இயக்கி என்றலும் </FONT></b> : <b> புதிதிது பூந்துகிற் குழல்கள் சோ்தலால் || <FONT COLOR="FF 63 47 "> புதிது இது பூம் துகில் குழல்கள் சோர்தலால் </FONT></b> : <b> மதுவிரி கோதையம் மாலை நின்மன || <FONT COLOR="FF 63 47 "> மது விரி கோதை அம் மாலை நின் மனம் </FONT></b> : <b> மதுமுறை யியக்கலி னியக்கி யாகுமே. (1015) || <FONT COLOR="FF 63 47 "> அது முறை இயக்கலின் இயக்கி ஆகுமேஏ. (௧௬௫) </FONT></b> ==பாடல்: 166-170== === (முளைத்தெழு) === : <b> முளைத்தெழு மதியமுத் தரும்பி யாங்கென || <FONT COLOR="FF 63 47 "> முளைத்து எழு மதியம் முத்து அரும்பியாங்கு என </FONT></b> : <b> விளைத்தது திருமுகம் வியர்ப்ப வெஞ்சிலை || <FONT COLOR="FF 63 47 "> விளைத்தது திரு முகம் வியர்ப்ப வெம் சிலை </FONT></b> : <b> வளைத்தன புருவமு முரிந்த வல்லையே || <FONT COLOR="FF 63 47 "> வளைத்தன புருவமும் முரிந்த வல்லையே </FONT></b> : <b> கிளைக்கழு நீர்க்கணுஞ் சிவப்பிற் கேழ்த்தவே. (1016) || <FONT COLOR="FF 63 47 "> கிளை கழுநீர் கணும் சிவப்பின் கேழ்த்தவே. (௧௬௬) </FONT></b> === (பாவைநீ) === : <b> பாவைநீ புலவியி னிடல் பாவியேற் || <FONT COLOR="FF 63 47 "> பாவை நீ புலவியின் நீடல் பாவியேற்கு </FONT></b> : <b> காவியொன் றிரண்டுடம் பல்ல தூற்றுநீர்க் || <FONT COLOR="FF 63 47 "> ஆவி ஒன்று இரண்டு உடம்பு அல்லது ஊற்று நீர் </FONT></b> : <b> கூவல்வாய் வெண்மணல் குறுகச் செல்லுமே || <FONT COLOR="FF 63 47 "> கூவல் வாய் வெள் மணல் குறுக செல்லுமே மே </FONT></b> : <b> மேவிப்பூங் கங்கையுள் விழைந்த வன்னமே. (1017) || <FONT COLOR="FF 63 47 "> மேவி பூம் கங்கையுள் விழைந்த அன்னமே. (௧௬௭) </FONT></b> === (பேரினும்) === : <b> பேரினும் பெண்டிரைப் பொறாது சீறுவா || <FONT COLOR="FF 63 47 "> பேரினும் பெண்டிரை பொறாது சீறுவாள் </FONT></b> : <b> ணேர்மலர்ப் பாவையை நோக்கி நெய்சொரி || <FONT COLOR="FF 63 47 "> நேர் மலர் பாவையை நோக்கி நெய் சொரி </FONT></b> : <b> கூரழற் போல்வதோர் புலவி கூர்ந்ததே || <FONT COLOR="FF 63 47 "> கூர் அழல் போல்வது ஓர் புலவி கூர்ந்ததே </FONT></b> : <b> யார்வுறு கணவன்மாட் டமிர்தின் சாயற்கே. (1018) || <FONT COLOR="FF 63 47 "> ஆர்வு உறு கணவன் மாட்டு அமிர்தின் சாயற்கே. (௧௬௮) </FONT></b> === (புலந்தவள்) === : <b> புலந்தவள் கொடியென நடுங்கிப் பொன்னரிச் || <FONT COLOR="FF 63 47 "> புலந்தவள் கொடி என நடுங்கி பொன் அரி </FONT></b> : <b> சிலம்பொடு மேகலை மிழற்றச் சென்னிமே || <FONT COLOR="FF 63 47 "> சிலம்பொடு மேகலை மிழற்ற சென்னி மேல் </FONT></b> : <b> லலங்கல்வா யடிமல ரணிந்து குண்டல|| <FONT COLOR="FF 63 47 "> அலங்கல் வாய் அடி மலர் அணிந்து குண்டலம் </FONT></b> : <b> மிலங்கப்பேர்ந் தினமலர்ச் சிதறி யேகினாள். (1019) || <FONT COLOR="FF 63 47 "> இலங்க பேர்ந்து இனம் மலர் சிதறி ஏகினாள். (௧௬௯) </FONT></b> === (துனிப்புறு) === : <b> துனிப்புறு கிளவியாற் றுணைவி யேகலு || <FONT COLOR="FF 63 47 "> துனிப்பு உறு கிளவியால் துணைவி ஏகலும் </FONT></b> : <b> மினிப்பிறர்க் கிடமிலை யெழுவ லீங்கெனாக் || <FONT COLOR="FF 63 47 "> இனி பிறர்க்கு இடம் இலை எழுவல் ஈங்கு எனா </FONT></b> : <b> கனிப்புறு சொல்லளைஇப் பறந்து காளைதன் || <FONT COLOR="FF 63 47 "> கனிப்புறு சொல் அளைஇ பறந்து காளை தன் </FONT></b> : <b> பனிக்கதிர்ப் பகைமலர்ப் பாதஞ் சேர்ந்ததே. (1020) || <FONT COLOR="FF 63 47 "> பனி கதிர் பகை மலர் பாதம் சேர்ந்ததே. (௧௭௦) </FONT></b> ==பாடல்: 171-175== === (வாழ்கநின்) === : <b> வாழ்கநின் கழலடி மைந்த வென்னவே || <FONT COLOR="FF 63 47 "> வாழ்க நின் கழல் அடி மைந்த என்னவே </FONT></b> : <b> தோழியர் சுவாகதம் போது கீங்கெனச் || <FONT COLOR="FF 63 47 "> தோழியர் சுவாகதம் போதுக ஈங்கு என </FONT></b> : <b> சூழ்மணி மோதிரஞ் சுடர்ந்து வில்லிட || <FONT COLOR="FF 63 47 "> சூழ் மணி மோதிரம் சுடர்ந்து வில்லிட </FONT></b> : <b> யாழறி வித்தக னங்கை நீட்டினான். (1021) || <FONT COLOR="FF 63 47 "> யாழ் அறி வித்தகன் அங்கை நீட்டினான். (௧௭௧) </FONT></b> === (பொன்னியல்) === : <b> பொன்னியல் குரும்பையிற் பொலிந்த வெம்முலைக் || <FONT COLOR="FF 63 47 "> பொன் இயல் குரும்பையின் பொலிந்த வெம் முலை </FONT></b> : <b> கன்னியர் தூதொடு காமர் பைங்கிளி || <FONT COLOR="FF 63 47 "> கன்னியர் தூதொடு காமர் பைங்கிளி </FONT></b> : <b> முன்னமே வந்தென முறுவ னோக்கமொ || <FONT COLOR="FF 63 47 "> முன்னமே வந்தென முறுவல் நோக்கமொடு </FONT></b> : <b> டென்னைகொல் வரவென வினிய செப்பினான். (1022) || <FONT COLOR="FF 63 47 "> என்னை கொல் வரவு என இனிய செப்பினான். (௧௭௨) </FONT></b> === (மையலங்) === : <b> மையலங் களிற்றொடு பொருத வண்புக || <FONT COLOR="FF 63 47 "> மையல் அம் களிற்றொடு பொருத வண் புகழ் </FONT></b> : <b> ழையனைச் செவ்விகண் டறிந்து வம்மெனப் || <FONT COLOR="FF 63 47 "> ஐயனை செவ்வி கண்டு இறிந்து வம் என </FONT></b> : <b> பையர வல்குலெம் பாவை தூதொடு || <FONT COLOR="FF 63 47 "> பை அரவு அல்குல் பாவை தூதொடு </FONT></b> : <b> கையிலங் கெஃகினாய் காண வந்ததே. (1023) || <FONT COLOR="FF 63 47 "> கை இலங்கு எஃகினாய் காண வந்ததே. (௧௭௩) </FONT></b> === (வெஞ்சின) === : <b> வெஞ்சின வேழ முண்ட வெள்ளிலின் வெறிய மாக || <FONT COLOR="FF 63 47 "> வெம் சினம் வேழம் உண்ட வெள்ளிலின் வெறியம் ஆக </FONT></b> : <b> நெஞ்சமு நிறையு நீல நெடுங்கணாற் கவர்ந்த கள்வி || <FONT COLOR="FF 63 47 "> நெஞ்சமும் நிறையும் நீல நெடும் கணால் கவர்ந்த கள்வி </FONT></b> : <b> யஞ்சனத் துவலை யாடி நடுங்கினா ணிலைமை யென்னை || <FONT COLOR="FF 63 47 "> அஞ்சனம் துவலை ஆடி நடுங்கினள் நிலைமை என்னை </FONT></b> : <b> பைஞ்சிறைத் தத்தை யென்னப் பசுங்கிளி மொழியு மன்றே. (1024) || <FONT COLOR="FF 63 47 "> பைம் சிறை தத்தை என்ன பசும் கிளி மொழியும் அன்றே. (௧௭௪) </FONT></b> === (பூவணை) === : <b> பூவணை யழலின்மேற் சேக்கும் பொன்செய்தூண் || <FONT COLOR="FF 63 47 "> பூ அணை அழலின் மேல் சேக்கும் பொன் செய் தூண் </FONT></b> : <b> பாவைதான் பொருந்துபு நிற்கும் பற்பல்கா || <FONT COLOR="FF 63 47 "> </FONT> பாவை தான் பொருந்துபு நிற்கும் பல் பல்கால்</b>மைய : <b> லாவியா வழலென வுயிர்க்கு மையென || <FONT COLOR="FF 63 47 "> ஆவியா அழல் என உயிர்க்கும் ஐ என </FONT></b> : <b> மேவிப்பூ நிலமிசை யிருக்கு மெல்லவே. (1025) || <FONT COLOR="FF 63 47 "> மேவி பூ நிலம் மிசை இருக்கும் மெல்லவே. (௧௭௫) </FONT></b> ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] ====பார்க்க:=== :🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]]. 6tukwyx5erdga06yoqxa25tjxj3u4ns 1834978 1834967 2025-06-24T08:52:46Z Meykandan 544 /* பாடல்: 171-175 */ 1834978 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 151-175 === ==பாடல்: 151-155== {{dhr}} === (தெளிகயம்) === : <b> தெளிக யம்மலர் மேலுறை தேவியி || <FONT COLOR="FF 63 47 "> தெளி கயம் மலர் மேல் உறை தேவியின் </FONT></b> : <b> னொளியுஞ் சாயலு மொப்புமை யில்லவள் || <FONT COLOR="FF 63 47 "> ஒளியும் சாயலும் ஒப்புமை இல்லவள் </FONT></b> : <b> களிகொள் காமத்திற் கையற வெய்தித்தன் || <FONT COLOR="FF 63 47 "> களி கொள் காமத்தின் கையறவு எய்தி </FONT></b> : <b> கிளியைத் தூதுவிட் டாள்கிளந் தென்பவே (1001) || <FONT COLOR="FF 63 47 "> கிளியைத் தூது விட்டாள் கிளந்து என்பவே. (௧௫௧) </FONT></b> === (பூணொடேந்) === : <b> பூணொ டேந்திய வெம்முலைப் பொன்னனாள் || <FONT COLOR="FF 63 47 "> பூணொடு ஏந்திய வெம் முலை பொன் அனாள் </FONT></b> : <b> நாணுந் தன்குல னுந்நலங் கீழ்ப்பட || <FONT COLOR="FF 63 47 "> நாணும் தன் குலனும் நலம் கீழ்ப்பட </FONT></b> : <b> வீணை வித்தகற் காணிய விண்படர்ந் || <FONT COLOR="FF 63 47 "> வீணை வித்தகன் காணிய விண் படர்ந்து </FONT></b> : <b> தாணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே. (1002) || <FONT COLOR="FF 63 47 "> ஆணு பைம் கிளி ஆண்டு பறந்ததே. (௧௫௨) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (கூட்டினான்) === : <b> கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன் || <FONT COLOR="FF 63 47 "> கூட்டினான் மணி பல தெளித்து கொண்டு அவன் </FONT></b> : <b> தீட்டினான் கிழிமிசைத் திலக வாணுதல் || <FONT COLOR="FF 63 47 "> தீட்டினான் கிழி மிசை திலக வாள் நுதல் </FONT></b> : <b> வேட்டமால் களிற்றிடை வெருவி நின்றதோர் || <FONT COLOR="FF 63 47 "> வேட்ட மால் களிற்று இடை வெருவி நின்றது ஓர் </FONT></b> : <b> நாட்டமு நடுக்கமு நங்கை வண்ணமே. (1003) || <FONT COLOR="FF 63 47 "> நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே. (௧௫௩) </FONT></b> === (நெகிழ்ந்து) === : <b> நெகிழ்ந்துசோர் பூந்துகி னோக்கி நோக்கியே || <FONT COLOR="FF 63 47 "> நெகிழ்ந்து சோர் பூம் துகில் நோக்கி நோக்கியே </FONT></b> : <b> மகிழ்ந்துவீழ் மணிக்குழன் மாலை காறொடும் || <FONT COLOR="FF 63 47 "> மகிழ்ந்து வீழ் மணி குழல் மாலை கால் தொடும் </FONT></b> : <b> முகிழ்த்துவீங் கிளமுலை முத்தந் தைவரும் || <FONT COLOR="FF 63 47 "> முகிழ்த்து வீங்கு இள முலை முத்தம் தைவரும் </FONT></b> : <b> புகழ்ந்துதன் றோள்களிற் புல்லு மெல்லவே. (1004) || <FONT COLOR="FF 63 47 "> புகழ்ந்து தன் தோள்களில் புல்லும் மெல்லவே. (௧௫௪) </FONT></b> ===(படைமலர்) === : <b> படைமலர் நெடுங்கணாள் பாவை யேந்தல்குல் || <FONT COLOR="FF 63 47 "> படை மலர் நெடும் கணாள் பாவை ஏந்து அல்குல் </FONT></b> : <b> மிடைமணி மேகலை நோற்ற வெந்தொழிற் || <FONT COLOR="FF 63 47 "> மிடை மணி மேகலை நோற்ற வெம் தொழில் </FONT></b> : <b> புடைதிரள் வனமுலைப் பூணு நோற்றன || <FONT COLOR="FF 63 47 "> புடை திரள் வன முலை பூணும் நோற்றன </FONT></b> : <b> வடிமலர்த் தாமரை சிலம்பு நோற்றவே. (1005) || <FONT COLOR="FF 63 47 "> அடிமலர் தாமரை சிலம்பும் நோற்றவே. (௧௫௫) </FONT></b> ==பாடல்: 156-160== === (மின்னணங்) === : <b> மின்னணங் குறுமிடை மேவர் சாயலுக் || <FONT COLOR="FF 63 47 "> மின் அணங்குறும் இடை மேவர் சாயலுக்கு </FONT></b> : <b> கின்னண மிறைமகன் புலம்ப யாவதுந் || <FONT COLOR="FF 63 47 "> இன்னணம் இறை மகன் புலம்ப யாவதும் </FONT></b> : <b> தன்னணங் குறுமொழித் தத்தை தத்தையை || <FONT COLOR="FF 63 47 "> தன் அணங்கு உறு மொழி தத்தை தத்தையை </FONT></b> : <b> மன்னணங் குறலொடு மகிழ்ந்து கண்டதே. (1006) || <FONT COLOR="FF 63 47 "> மன் அணங்குறலோடு மகிழ்ந்து கண்டதே. (௧௫௬) </FONT></b> === (ஆடுபாம்பென) === : <b> ஆடுபாம் பெனப்புடை யகன்ற வல்குன்மேற் || <FONT COLOR="FF 63 47 "> ஆடு பாம்பு என புடை அகன்ற அல்குல் மேல் </FONT></b> : <b> சூடிய கலைப்புறஞ் சூழ்ந்த பூந்துகி || <FONT COLOR="FF 63 47 "> சூடிய கலை புறம் சூழ்ந்த பூ துகில் </FONT></b> : <b> லோடிய வெரிவளைத் துருவ வெண்புகை || <FONT COLOR="FF 63 47 "> ஓடிய எரி வளைத்து உருவ வெண் புகை </FONT></b> : <b> கூடிமற் றதன்புறன் குலாய கொள்கைத்தே. (1007) || <FONT COLOR="FF 63 47 "> கூடி மற்று அதன் புறன் குலாய கொள்கைத்தே. (௧௫௭) </FONT></b> === (கொன்வளர்) === : <b> கொன்வளர் குவிமுலைக் கோட்டிற் றாழ்ந்தன || <FONT COLOR="FF 63 47 "> கொன் வளர் குவி முலை கோட்டில் தாழ்ந்தன </FONT></b> : <b> மின்வளர் திரள்வடம் விளங்கு பைங்கதி || <FONT COLOR="FF 63 47 "> மின் வளர் திரள் வடம் விளங்கு பைம் கதிர் </FONT></b> : <b> ரின்வள ரிளம்பிறை யெழுதப் பட்டன || <FONT COLOR="FF 63 47 "> இன் வளர் இளம் பிறை எழுதப்பட்டன </FONT></b> : <b> பொன்வளர் செப்பின்மேற் பொலிந்த போன்றவே. (1008) || <FONT COLOR="FF 63 47 "> பொன் வளர் செப்பின் மேல் பொலிந்த போன்றவே. (௧௫௮) </FONT></b> === (குண்டல) === : <b> குண்டல மொருபுடை குலாவி வில்லிட || <FONT COLOR="FF 63 47 "> குண்டலம் ஒரு புடை குலாவி வில் இட </FONT></b> : <b> விண்டலர்ந் தொருபுடை தோடு மின்செய || <FONT COLOR="FF 63 47 "> விண்டு அலர்ந்து ஒரு புடை தோடு மின் செய </FONT></b> : <b> மண்டல நிறைந்ததோர் மதிய மன்னதே || <FONT COLOR="FF 63 47 "> மண்டலம் நிறைந்தது ஓர் மதியம் அன்னதே </FONT></b> : <b>யொண்டொடி திருமுகத் துருவ மாட்சியே. (1009) || <FONT COLOR="FF 63 47 "> ஒள் தொடி திரு முகத்து உருவ மாட்சியே. (௧௫௯) </FONT></b> === (பூணிற) === : <b> பூணிற முலையவள் பொருவில் பூநுதல் || <FONT COLOR="FF 63 47 "> பூண் நிறம் முலையவள் பொரு இல் பூ நுதல் </FONT></b> : <b> மாணிறக் கருங்குழன் மருங்கிற் போக்கிய || <FONT COLOR="FF 63 47 "> மாண் நிறம் கரும் குழல் மருங்கில் போக்கிய </FONT></b> : <b> நாணிற மிகுகதிர்ப் பட்ட நல்லொளி || <FONT COLOR="FF 63 47 "> நாள் நிறம் மிகு கதிர் பட்டம் நல் ஒளி </FONT></b> : <b> வாணிற மின்னிருள் வளைத்த தொத்ததே. (1010) || <FONT COLOR="FF 63 47 "> மாண் நிறம் மின் இருள் வளைத்தது ஒத்ததே. (௧௬௦) </FONT></b> ==பாடல்: 161-165== === (கடிகமழ்) === : <b> கடிகமழ் பூஞ்சிகை காமர் மல்லிகை || <FONT COLOR="FF 63 47 "> கடி கமழ் பூம் சிகை காமர் மல்லிகை </FONT></b> : <b> வடிவுடை மாலைகா றொடர்ந்து வாய்ந்தது || <FONT COLOR="FF 63 47 "> வடிவு உடை மாலை கால் தொடர்ந்து வாய்ந்தது </FONT></b> : <b> நடுவொசிந் தொல்கிய நாறு மாமலர்க் || <FONT COLOR="FF 63 47 "> நடு ஒசிந்து ஒல்கிய நாறும் மா மலர் </FONT></b> : <b> கொடியின்மேற் குயில்குனிந் திருந்த தொத்ததே. (1011) || <FONT COLOR="FF 63 47 "> கொடியின் மேல் குயில் குனிந்து இருந்தது ஒத்ததே. (௧௬௧) </FONT></b> === (சிலம்பொடு) === : <b> சிலம்பொடு மேகலை மிழற்றத் தேனின || <FONT COLOR="FF 63 47 "> சிலம்பொடு மேகலை மிழற்ற தேன் இனம் </FONT></b> : <b> மலங்கலுண் டியாழ்செயு மம்பொற் பூங்கோடி || <FONT COLOR="FF 63 47 "> அலங்கல் உண்டு யாழ் செயும் அம் பொன் பூம் கொடி </FONT></b> : <b> நலம்பட நன்னடை கற்ற தொக்குமிவ் || <FONT COLOR="FF 63 47 "> நலம்பட நல் நடை கற்றது ஒக்கும் இவ் </FONT></b> : <b> விலங்கரித் தடங்கணா ளியாவ ளாங்கொலோ. (1012) || <FONT COLOR="FF 63 47 "> விலங்கு அரி தடம் கணாள் யாவளாம் கொலோ. (௧௬௨) </FONT></b> === (யாவளே) === : <b> யாவளே யாயினு மாக மற்றிவள் || <FONT COLOR="FF 63 47 "> யாவளே ஆயினும் ஆக மற்று இவள் </FONT></b> : <b> மேவிய பொருளொடு மீண்ட பின்னலா || <FONT COLOR="FF 63 47 "> மேவிய பொருளொடு மீண்ட பின் அலால் </FONT></b> : <b> லேவலாற் சேர்கலே னென்று பைங்கிளி || <FONT COLOR="FF 63 47 "> ஏவலால்(ன்) சேர்கலேன் என்று பைம் கிளி </FONT></b> : <b> பூவளர் சண்பகம் பொருந்திற் றென்பவே. (1013) || <FONT COLOR="FF 63 47 "> பூ வளர் சண்பகம் பொருந்திற்று என்பவே. (௧௬௩) </FONT></b> === (மதுக்களி) === : <b> மதுக்களி நெடுங்கணாள் வான்பொற் கிண்கிணி || <FONT COLOR="FF 63 47 "> மது களி நெடும் கணாள் வான் பொன் கிண்கிணி </FONT></b> : <b> யொதுக்கிடை மிழற்றச்சென் றெய்தி யூன்கவர் || <FONT COLOR="FF 63 47 "> ஒதுக்கிடை மிழற்ற சென்று எய்தி ஊன் கவர் </FONT></b> : <b> கதக்களி வேலினாற் கண்டு காமநீர்ப் || <FONT COLOR="FF 63 47 "> கதம் களி வேலினான் கண்டு காம நீர் </FONT></b> : <b> புதுத்தளி ரனையவள் புலந்து நோக்கினாள். (1014) || <FONT COLOR="FF 63 47 "> புது தளிர் அனையவள் புலந்து நோக்கினாள். (௧௬௪) </FONT></b> === (இதுவென) === : <b> இதுவென வுருவென வியக்கி யென்றலும் || <FONT COLOR="FF 63 47 "> இது என உரு என இயக்கி என்றலும் </FONT></b> : <b> புதிதிது பூந்துகிற் குழல்கள் சோ்தலால் || <FONT COLOR="FF 63 47 "> புதிது இது பூம் துகில் குழல்கள் சோர்தலால் </FONT></b> : <b> மதுவிரி கோதையம் மாலை நின்மன || <FONT COLOR="FF 63 47 "> மது விரி கோதை அம் மாலை நின் மனம் </FONT></b> : <b> மதுமுறை யியக்கலி னியக்கி யாகுமே. (1015) || <FONT COLOR="FF 63 47 "> அது முறை இயக்கலின் இயக்கி ஆகுமேஏ. (௧௬௫) </FONT></b> ==பாடல்: 166-170== === (முளைத்தெழு) === : <b> முளைத்தெழு மதியமுத் தரும்பி யாங்கென || <FONT COLOR="FF 63 47 "> முளைத்து எழு மதியம் முத்து அரும்பியாங்கு என </FONT></b> : <b> விளைத்தது திருமுகம் வியர்ப்ப வெஞ்சிலை || <FONT COLOR="FF 63 47 "> விளைத்தது திரு முகம் வியர்ப்ப வெம் சிலை </FONT></b> : <b> வளைத்தன புருவமு முரிந்த வல்லையே || <FONT COLOR="FF 63 47 "> வளைத்தன புருவமும் முரிந்த வல்லையே </FONT></b> : <b> கிளைக்கழு நீர்க்கணுஞ் சிவப்பிற் கேழ்த்தவே. (1016) || <FONT COLOR="FF 63 47 "> கிளை கழுநீர் கணும் சிவப்பின் கேழ்த்தவே. (௧௬௬) </FONT></b> === (பாவைநீ) === : <b> பாவைநீ புலவியி னிடல் பாவியேற் || <FONT COLOR="FF 63 47 "> பாவை நீ புலவியின் நீடல் பாவியேற்கு </FONT></b> : <b> காவியொன் றிரண்டுடம் பல்ல தூற்றுநீர்க் || <FONT COLOR="FF 63 47 "> ஆவி ஒன்று இரண்டு உடம்பு அல்லது ஊற்று நீர் </FONT></b> : <b> கூவல்வாய் வெண்மணல் குறுகச் செல்லுமே || <FONT COLOR="FF 63 47 "> கூவல் வாய் வெள் மணல் குறுக செல்லுமே மே </FONT></b> : <b> மேவிப்பூங் கங்கையுள் விழைந்த வன்னமே. (1017) || <FONT COLOR="FF 63 47 "> மேவி பூம் கங்கையுள் விழைந்த அன்னமே. (௧௬௭) </FONT></b> === (பேரினும்) === : <b> பேரினும் பெண்டிரைப் பொறாது சீறுவா || <FONT COLOR="FF 63 47 "> பேரினும் பெண்டிரை பொறாது சீறுவாள் </FONT></b> : <b> ணேர்மலர்ப் பாவையை நோக்கி நெய்சொரி || <FONT COLOR="FF 63 47 "> நேர் மலர் பாவையை நோக்கி நெய் சொரி </FONT></b> : <b> கூரழற் போல்வதோர் புலவி கூர்ந்ததே || <FONT COLOR="FF 63 47 "> கூர் அழல் போல்வது ஓர் புலவி கூர்ந்ததே </FONT></b> : <b> யார்வுறு கணவன்மாட் டமிர்தின் சாயற்கே. (1018) || <FONT COLOR="FF 63 47 "> ஆர்வு உறு கணவன் மாட்டு அமிர்தின் சாயற்கே. (௧௬௮) </FONT></b> === (புலந்தவள்) === : <b> புலந்தவள் கொடியென நடுங்கிப் பொன்னரிச் || <FONT COLOR="FF 63 47 "> புலந்தவள் கொடி என நடுங்கி பொன் அரி </FONT></b> : <b> சிலம்பொடு மேகலை மிழற்றச் சென்னிமே || <FONT COLOR="FF 63 47 "> சிலம்பொடு மேகலை மிழற்ற சென்னி மேல் </FONT></b> : <b> லலங்கல்வா யடிமல ரணிந்து குண்டல|| <FONT COLOR="FF 63 47 "> அலங்கல் வாய் அடி மலர் அணிந்து குண்டலம் </FONT></b> : <b> மிலங்கப்பேர்ந் தினமலர்ச் சிதறி யேகினாள். (1019) || <FONT COLOR="FF 63 47 "> இலங்க பேர்ந்து இனம் மலர் சிதறி ஏகினாள். (௧௬௯) </FONT></b> === (துனிப்புறு) === : <b> துனிப்புறு கிளவியாற் றுணைவி யேகலு || <FONT COLOR="FF 63 47 "> துனிப்பு உறு கிளவியால் துணைவி ஏகலும் </FONT></b> : <b> மினிப்பிறர்க் கிடமிலை யெழுவ லீங்கெனாக் || <FONT COLOR="FF 63 47 "> இனி பிறர்க்கு இடம் இலை எழுவல் ஈங்கு எனா </FONT></b> : <b> கனிப்புறு சொல்லளைஇப் பறந்து காளைதன் || <FONT COLOR="FF 63 47 "> கனிப்புறு சொல் அளைஇ பறந்து காளை தன் </FONT></b> : <b> பனிக்கதிர்ப் பகைமலர்ப் பாதஞ் சேர்ந்ததே. (1020) || <FONT COLOR="FF 63 47 "> பனி கதிர் பகை மலர் பாதம் சேர்ந்ததே. (௧௭௦) </FONT></b> ==பாடல்: 171-175== === (வாழ்கநின்) === : <b> வாழ்கநின் கழலடி மைந்த வென்னவே || <FONT COLOR="FF 63 47 "> வாழ்க நின் கழல் அடி மைந்த என்னவே </FONT></b> : <b> தோழியர் சுவாகதம் போது கீங்கெனச் || <FONT COLOR="FF 63 47 "> தோழியர் சுவாகதம் போதுக ஈங்கு என </FONT></b> : <b> சூழ்மணி மோதிரஞ் சுடர்ந்து வில்லிட || <FONT COLOR="FF 63 47 "> சூழ் மணி மோதிரம் சுடர்ந்து வில்லிட </FONT></b> : <b> யாழறி வித்தக னங்கை நீட்டினான். (1021) || <FONT COLOR="FF 63 47 "> யாழ் அறி வித்தகன் அங்கை நீட்டினான். (௧௭௧) </FONT></b> === (பொன்னியல்) === : <b> பொன்னியல் குரும்பையிற் பொலிந்த வெம்முலைக் || <FONT COLOR="FF 63 47 "> பொன் இயல் குரும்பையின் பொலிந்த வெம் முலை </FONT></b> : <b> கன்னியர் தூதொடு காமர் பைங்கிளி || <FONT COLOR="FF 63 47 "> கன்னியர் தூதொடு காமர் பைங்கிளி </FONT></b> : <b> முன்னமே வந்தென முறுவ னோக்கமொ || <FONT COLOR="FF 63 47 "> முன்னமே வந்தென முறுவல் நோக்கமொடு </FONT></b> : <b> டென்னைகொல் வரவென வினிய செப்பினான். (1022) || <FONT COLOR="FF 63 47 "> என்னை கொல் வரவு என இனிய செப்பினான். (௧௭௨) </FONT></b> === (மையலங்) === : <b> மையலங் களிற்றொடு பொருத வண்புக || <FONT COLOR="FF 63 47 "> மையல் அம் களிற்றொடு பொருத வண் புகழ் </FONT></b> : <b> ழையனைச் செவ்விகண் டறிந்து வம்மெனப் || <FONT COLOR="FF 63 47 "> ஐயனை செவ்வி கண்டு இறிந்து வம் என </FONT></b> : <b> பையர வல்குலெம் பாவை தூதொடு || <FONT COLOR="FF 63 47 "> பை அரவு அல்குல் பாவை தூதொடு </FONT></b> : <b> கையிலங் கெஃகினாய் காண வந்ததே. (1023) || <FONT COLOR="FF 63 47 "> கை இலங்கு எஃகினாய் காண வந்ததே. (௧௭௩) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (வெஞ்சின) === : <b> வெஞ்சின வேழ முண்ட வெள்ளிலின் வெறிய மாக || <FONT COLOR="FF 63 47 "> வெம் சினம் வேழம் உண்ட வெள்ளிலின் வெறியம் ஆக </FONT></b> : <b> நெஞ்சமு நிறையு நீல நெடுங்கணாற் கவர்ந்த கள்வி || <FONT COLOR="FF 63 47 "> நெஞ்சமும் நிறையும் நீல நெடும் கணால் கவர்ந்த கள்வி </FONT></b> : <b> யஞ்சனத் துவலை யாடி நடுங்கினா ணிலைமை யென்னை || <FONT COLOR="FF 63 47 "> அஞ்சனம் துவலை ஆடி நடுங்கினள் நிலைமை என்னை </FONT></b> : <b> பைஞ்சிறைத் தத்தை யென்னப் பசுங்கிளி மொழியு மன்றே. (1024) || <FONT COLOR="FF 63 47 "> பைம் சிறை தத்தை என்ன பசும் கிளி மொழியும் அன்றே. (௧௭௪) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (பூவணை) === : <b> பூவணை யழலின்மேற் சேக்கும் பொன்செய்தூண் || <FONT COLOR="FF 63 47 "> பூ அணை அழலின் மேல் சேக்கும் பொன் செய் தூண் </FONT></b> : <b> பாவைதான் பொருந்துபு நிற்கும் பற்பல்கா || <FONT COLOR="FF 63 47 "> </FONT> பாவை தான் பொருந்துபு நிற்கும் பல் பல்கால்</b>மைய : <b> லாவியா வழலென வுயிர்க்கு மையென || <FONT COLOR="FF 63 47 "> ஆவியா அழல் என உயிர்க்கும் ஐ என </FONT></b> : <b> மேவிப்பூ நிலமிசை யிருக்கு மெல்லவே. (1025) || <FONT COLOR="FF 63 47 "> மேவி பூ நிலம் மிசை இருக்கும் மெல்லவே. (௧௭௫) </FONT></b> ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] ====பார்க்க:=== :🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]]. skkm9ki4p3bn51t908eeh5a3529l0fa 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225 0 618876 1834986 1831976 2025-06-24T08:55:00Z Meykandan 544 1834986 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 201-225 === {{dhr}} ==பாடல்: 201-205== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] njcn1bnn5s7ybkgaeiaux78ovkk1ztk 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250 0 618877 1834987 1831977 2025-06-24T08:56:36Z Meykandan 544 1834987 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 226-2500 === {{dhr}} ==பாடல்: 226-230== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] c0jxd756zxk6hd4m8g67p64grsv7h6m 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275 0 618878 1834989 1831978 2025-06-24T08:57:45Z Meykandan 544 1834989 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 251-275 === {{dhr}} ==பாடல்: 251-255== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] 1wgffp85fgdy4ztrz2vlq9v9gvw257f 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300 0 618879 1834991 1831979 2025-06-24T08:59:15Z Meykandan 544 1834991 wikitext text/x-wiki :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 276-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] euatodkd2t1yvc3mlscjap4l6n7h3zz பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/66 250 619199 1834758 1833855 2025-06-23T15:56:14Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834758 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|துறவறவியல்||அதிகாரம் 26}}</noinclude>{{center|{{larger|<b>புலால் மறுத்தல்</b>}}}} <poem>தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்{{float_right|251}} பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு{{float_right|252}} படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்{{float_right|253}} அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல்{{float_right|254}} உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு{{float_right|255}} தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்{{float_right|256}} உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின்{{float_right|257}} செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்{{float_right|258}} அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று{{float_right|259}} கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்{{float_right|260}} </poem><noinclude>{{rh|3|53|53}}</noinclude> fzxvcabkairhn008xq1utv76z79ze0e பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/67 250 619200 1834769 1833857 2025-06-24T00:18:13Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834769 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>தவம்</b>}}}} தனக்கு உற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யா திருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்.{{float_right|1}} தவக்கோலமும் தவஒழுக்கம் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக்கோலத்தைத் தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.{{float_right|2}} துறந்தவர்க்கு உணவு முதலியவை கொடுத்து உதவ வேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ?{{float_right|3}} தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.{{float_right|4}} விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.{{float_right|5}} தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர்; அவர் அல்லாத மற்றவர் ஆசைவலையில் அகப்பட்டு வீண்முயற்சி செய்கின்றவரே.{{float_right|6}} புடமிட்டுச் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல், தவம் செய்கின்றவரைத் துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.{{float_right|7}} தவவலிமையால் தன்னுடைய உயிர் தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.{{float_right|8}} தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப்பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால்) யமனை வெல்லுதலும் கைகூடும்.{{float_right|9}} ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம், தவம் செய்கின்றவர் சிலராகவும் செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.{{float_right|10}}<noinclude>{{rh|54||}}</noinclude> elptp7q9w9didjxg1affiam8o659exp பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/68 250 619201 1834770 1833858 2025-06-24T00:22:19Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834770 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|துறவறவியல்||அதிகாரம் 27}}</noinclude> {{center|{{larger|<b>தவம்</b>}}}} <poem>உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு{{float_right|261}} தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை அஃதிலார் மேற்கொள் வது{{float_right|261}} துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்{{float_right|262}} ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்{{float_right|263}} வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்{{float_right|265}} தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு{{float_right|266}} சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு{{float_right|267}} தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாம் தொழும்{{float_right|268}} கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு{{float_right|269}} இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்{{float_right|270}}</poem><noinclude>{{rh||55|55}}</noinclude> kb6cfk99gphfb2nwallxqh8v09zv7hn பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/16 250 619245 1834728 1834525 2025-06-23T14:51:42Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834728 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|2|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>கோலியாட்டின் ஏனை முறைகட்குரிய குழியும், இங்குக் கூறப்பட்ட அளவினதே. {{larger|ஆடிடம்}} : அகன்ற முற்றமும் புறக்கடையும் பொட்டலும் இதை ஆடுமிடமாம். {{larger|ஆடு முறை}} : ஆடகர், குழிவரிசைக்கு நேரான இரு திசைகளுள் ஒன்றில், கடைசிக்குழிக்கு மூன்று அல்லது நான்கு கசத்தொலைவிற் கீறப்பட்ட கோட்டில் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன்தன் கோலியை அக்குழி நோக்கி உருட்டல் வேண்டும். குழிக்குள் வீழ்த்தியவர் முன்னும், வீழ்த்தாதவர் பின்னும், ஆடல் வேண்டும். ஒருவரும் குழிக்குள் வீழ்த்தாவிடின், குழிக்கு நெருங்க உருட்டியவர் முன்னும், அதற்கடுத்த அண்மைக்கு உருட்டியவர் பின்னும் ஆடல் வேண்டும். ஆடுவார் பலராயின், இங்ஙனமே அண்மை சேய்மை முறைப்படி முன்னும் பின்னும் ஆடல் வேண்டும். முதலில் ஆடுவான் குழிக்குள் வீழ்த்தாதவனாயின், தன் கோலியைக் குழிக்குள் தறித்து வீழ்த்தியபின், அதற்கடுத்த நடுக்குழிக்குள்ளும், அதன்பின் அதற்கடுத்த எதிர்ப்பக்க இறுதிக் குழிக்குள்ளும், பின்பு தொடர்ந்து முன்னும் பின்னுமாக அடுத்தடுத்த குழிக்குள்ளும், பத்தாம் எண்வரை முன்போன்றே வீழ்த்தவேண்டும். அங்ஙனம் வீழ்த்துவதற்கு நான்குமுறை முன்னும் பின்னுமாகத் திசை திரும்ப நேரும். பத்தாம் வீழ்த்து நடுக்குழிக்குள் நிகழும். அதன்பின் எதிரியின் கோலியைத் தன் கோலியால் தெறித்து அடித்துவிடின் கெலிப்பாகும். பல எதிரிகளாயின் அவ் அனைவர் கோலியையும் அடித்தல் வேண்டும். முதலில் ஆடுவான் ஏதேனும் ஒரு குழிக்குள் வீழ்த்தத் தவறின், எதிரி ஆடல் வேண்டும். எதிரியும் தவறின் முதலாவான் ஆடல் வேண்டும். இங்ஙனம் தவறுந்தொறும் ஆடகன் மாறுவான். {{nop}}<noinclude></noinclude> p911dhsbzn6q130dqkvfu7bhsg554ag பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/17 250 619246 1834731 1834522 2025-06-23T14:53:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834731 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|கோலி|3}}</noinclude>ஒருவன் ஆடும்போது எதிரியின் கோலி அருகிலிருப்பின், அது அடுத்தமுறை குழிக்குள் வீழ்வதைத் தடுக்குமாறும், அதன் அடியினின்று தப்புமாறும், அதனை அடித்துத் தொலைவிற் போக்கிவிடுவது வழக்கம். ஆட்டின் இடையிலாயினும் இறுதியிலாயினும் எதிரியின் கோலியை அடிக்கத் தவறின், எதிரி ஆடல் வேண்டும். எதிரியின் கோலி தொலைவிலிருக்கும்போது அதை அடிக்கும் ஆற்றல் அல்லது உறுதியில்லாவிடின், தன் கோலியைச் சற்றே முன்தள்ளி அடுத்தமுறை எதிரியின் அடிக்குத் தப்புமாறு செய்வதுமுண்டு. ஒருவன் தவறி மற்றொருவன் ஆடும்போது, ஆட்டின் தொடக்கத்தில் ஆடிய முறைப்படியே ஆடல் வேண்டும். ஆடுவார் இருவராயினும் பலராயினும் தோற்பவன் ஒருவனே. பலராயின், இறுதியில் தோற்பவனொழிந்த ஏனையரெல்லாரும் கெலிக்கும்வரை ஆட்டுத் தொடரும். ஆட்டு முடிந்தபின், தோற்றவன் கெலித்தவரிடம் முட்டுவாங்கல் வேண்டும். தோற்றவன் தன் முட்டிக்கையை, இரு கணுவிற்கும் இடைப்பட்ட பகுதி கெலித்தவர்க்கு எதிராகத் தோன்றுமாறு, நிலத்தில் ஊன்றி வைத்துக்கொண்டிருக்க, கெலித்தவர் தம் கோலியால் அவன் முட்டியில் அடிப்பர். இது முட்டுப்போடுதல் எனப்படும். பொதுவாக மூன்று முட்டு அடிப்பது வழக்கம். முட்டுப் போடுவதுடன் ஓர் ஆட்டை முடியும். அடுத்த ஆட்டை ஆடுவது ஆடகரின் விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு விளையாட்டை ஒரு முறை ஆடி முடிப்பது ஓர் ஆட்டை எனப்படும். {{larger|ஆட்டுத் தோற்றம்}} : ஒருகால், அருகிலுள்ள பள்ளத்திலிருக்கும் காட்டுப்பறவையைக் கையில் வில்லில்லாவிடத்து விரல்கொண்டு கல்லால் தெறிக்கும் வேட்டை வினையினின்று, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம். {{larger|ஆட்டின் பயன்}} : விரல் நரம்பு உரங்கொள்வதும், குறி தப்பாமல் தெறித்தடிக்கப் பயில்வதும், இவ் ஆட்டின் பயனாம். {{nop}}<noinclude></noinclude> klc9ah35lvbqf6j7532tvtlercnwvdr பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/18 250 619248 1834934 1834449 2025-06-24T07:58:37Z AjayAjayy 15166 1834934 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|4|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>{{center|{{x-larger|<b>(௨) சோழ கொங்கு நாட்டு முறை</b>}}}} சோழ கொங்கு நாடுகளிற் பொதுவாகக் கோலியைக் குண்டு அல்லது கோலிக்குண்டு என்றும், கோலியாட்டக்தைக் குண்டாட்டம் என்றும் கூறுவர். அவ் ஆட்டம், <b>பேந்தா, அஞ்சலகுஞ்சம், இருகுழியாட்டம், முக்குழியாட்டம்</b> முதலிய பல வகைப்படும். {{c|{{larger|<b>I. பேந்தா</b>}}}} {{c|{{larger|<b>(i) சதுரப் பேந்தா</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : பேந்தா என்னும் நீள்சதுரக் கோட்டிற்குள் உருட்டியாடுங் கோலியாட்டு <b>பேந்தா</b> எனப்படும்.{{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 18 |bSize = 386 |cWidth = 77 |cHeight = 131 |oTop = 251 |oLeft = 38 |Location = left |Description = }} இதை வட்டப் பேந்தாவுடன் ஒப்பு நோக்கிச் <b>சதுரப் பேந்தா</b> என்பர். இது கொங்குநாட்டில் சிறப்பாய் விளையாடப்படுவது பற்றி, திருச்சி வட்டாரத்தில் ஒரு சிலர் இதை ஈரோட்டுப் பேந்தா என்பதுமுண்டு. {{larger|ஆடுவார் தொகை}} : சிறாருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர். {{larger|ஆடு கருவி}} : ஏறத்தாழ ஓரடி நீளமும் முக்காலடி அகலமும் நீட்டுப்போக்கில் நடுக்கோடும் உள்ள ஒரு நீள் சதுரக்கோடும், ஆடுவான் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். பெருங் கோலியும் கல்லுமாயின், தெறித்தடிக்கப் படாமல் உருட்டியடிக்கப்படும். பேந்தாவிற்கு ஏறத்தாழப் பத்தடித்தொலைவில் ஓரடி நீளம் ஒரு குறுங்கோடு கீறப்பெறும். அது உத்தியெனப்படும். {{larger|ஆடிடம்}} : ஆடிடம் பாண்டி நாட்டுக் கோலியாட்டிற்குப் போன்றே இதற்கும். {{larger|ஆடு முறை}} : ஆடகர் இருவரும், உத்தியென்னும் கோட்டின்மேல் நின்றுகொண்டு,ஒவ்வொருவனாய்க் கோலி-<noinclude></noinclude> oxdh2vyyaoyjoktv3i6yalptrus8z4d பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/22 250 619260 1834806 1834527 2025-06-24T04:11:30Z AjayAjayy 15166 1834806 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|8|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>கோடு இடப்படும். அது மூடி எனப்படும். அதை இன்று டாப்பு (Top) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர். {{larger|ஆடிடம்}} : முற்றமும் புறக்கடையும் பொட்டலும் வெளி நிலமும் இதை ஆடுமிடமாம். {{larger|ஆடுமுறை}} : ஆடகரெல்லாரும் முதன் முதல் உத்தியில் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன் தன் கோலியை வட்டத்தின் நடுவிலுள்ள குழியை நோக்கி உருட்டல் வேண்டும். யார் கோலி குழிக்கு அண்ணணித்தாய் (அதாவது மிக நெருங்கி) நிற்கின்றதோ, அவன் முன்னும்; அதற்கு அடுத்து நிற்குங் கோலிக்காரன் பின்னும்; அதற்கடுத்து நிற்குங் கோலிக்காரன் அதன் பின்னுமாக; இங்ஙனம் குழியண்மை வரிசைப்படி எல்லாரும் ஆடல் வேண்டும். கோலியை உருட்டும்போது ஒருவன் கோலி இன்னொருவனதை அடித்துவிட்டால், எல்லார் கோலியும் மீண்டும் ஒவ்வொன்றாய் உருட்டப்படும். கோலிகள் ஒன்றோடொன்று அடிபடுவது <b>சடபுடா</b> எனப்படும். ஆடுவார் வரிசை யொழுங்கு இவ்வாறு துணியப்பட்டபின், முந்தியாடுகிறவனிடம் ஏனையோரெல்லாரும் ஆளுக்கொரு கோலி கொடுத்து விடல் வேண்டும். அவன் அவற்றுடன் தன் கோலியையுஞ் சேர்த்து, எல்லாவற்றையும் மொத்தமாய் வட்டத்திற்குள் உருட்டுவான். அதன்பின், தெல்லால் (அதாவது குண்டால்) முக்கால் வட்டத்திலுள்ள கோலிகளுள் எதையேனும் எவற்றையேனும் அடிப்பான். கால் வட்டத்துள் உள்ளவற்றை அடித்தல் கூடாது; அடிப்பின், <b>பச்சாவாம்</b>. அதற்கு ஒரு கோலி போட்டுவிட வேண்டும். அதன்பின், அடுத்தவன் ஆடுவான். உருட்டுவான் யாராயினும், <b>மூடியை</b> மிதிக்கவாவது தாண்டவாவது கூடாது. அங்ஙனஞ் செய்யின் தவறியவனாவன். அதனால் அடுத்தவன் ஆட நேரும். மூடி பொதுவாக முதலிற் போடப்படுவதில்லை. பலமுறை சொல்லியுங்கேளாது, ஒருவன் உத்திக்கு முன்னாற் கால் வைத்து முன்-<noinclude></noinclude> 6opffmrq1z4ynsoii58qp83ny6r9i6m 1834838 1834806 2025-06-24T05:11:16Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834838 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|8|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>கோடு இடப்படும். அது <b>மூடி</b> எனப்படும். அதை இன்று டாப்பு (Top) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர். {{larger|ஆடிடம்}} : முற்றமும் புறக்கடையும் பொட்டலும் வெளி நிலமும் இதை ஆடுமிடமாம். {{larger|ஆடுமுறை}} : ஆடகரெல்லாரும் முதன் முதல் உத்தியில் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன் தன் கோலியை வட்டத்தின் நடுவிலுள்ள குழியை நோக்கி உருட்டல் வேண்டும். யார் கோலி குழிக்கு அண்ணணித்தாய் (அதாவது மிக நெருங்கி) நிற்கின்றதோ, அவன் முன்னும்; அதற்கு அடுத்து நிற்குங் கோலிக்காரன் பின்னும்; அதற்கடுத்து நிற்குங் கோலிக்காரன் அதன் பின்னுமாக; இங்ஙனம் குழியண்மை வரிசைப்படி எல்லாரும் ஆடல் வேண்டும். கோலியை உருட்டும்போது ஒருவன் கோலி இன்னொருவனதை அடித்துவிட்டால், எல்லார் கோலியும் மீண்டும் ஒவ்வொன்றாய் உருட்டப்படும். கோலிகள் ஒன்றோடொன்று அடிபடுவது <b>சடபுடா</b> எனப்படும். ஆடுவார் வரிசை யொழுங்கு இவ்வாறு துணியப்பட்டபின், முந்தியாடுகிறவனிடம் ஏனையோரெல்லாரும் ஆளுக்கொரு கோலி கொடுத்து விடல் வேண்டும். அவன் அவற்றுடன் தன் கோலியையுஞ் சேர்த்து, எல்லாவற்றையும் மொத்தமாய் வட்டத்திற்குள் உருட்டுவான். அதன்பின், தெல்லால் (அதாவது குண்டால்) முக்கால் வட்டத்திலுள்ள கோலிகளுள் எதையேனும் எவற்றையேனும் அடிப்பான். கால் வட்டத்துள் உள்ளவற்றை அடித்தல் கூடாது; அடிப்பின், <b>பச்சாவாம்</b>. அதற்கு ஒரு கோலி போட்டுவிட வேண்டும். அதன்பின், அடுத்தவன் ஆடுவான். உருட்டுவான் யாராயினும், <b>மூடியை</b> மிதிக்கவாவது தாண்டவாவது கூடாது. அங்ஙனஞ் செய்யின் தவறியவனாவன். அதனால் அடுத்தவன் ஆட நேரும். மூடி பொதுவாக முதலிற் போடப்படுவதில்லை. பலமுறை சொல்லியுங்கேளாது, ஒருவன் உத்திக்கு முன்னாற் கால் வைத்து முன்-<noinclude></noinclude> r1oefcal6xgqy94yaqfvjospowpd8zm பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/23 250 619261 1834836 1834517 2025-06-24T05:09:42Z Booradleyp1 1964 1834836 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|கோலி|9}}</noinclude>புறமாகச் சாய்ந்து அடிப்பின், <b>மூடி</b> போடப்படும். அது போடப்பட்ட பின் அதை மிதிப்பின் அல்லது தாண்டின் <b>பச்சா</b> என்னுங் குற்றமாம். அதற்கு ஒரு காய் போட்டு விடவேண்டும். உருட்டப்பட்ட கோலிகளுள் ஏதேனும் ஒன்று நேரே குழியில் விழுந்துவிடின், வெற்றியாம். அவன் காய்களை அடிக்கத் தேவையில்லை. உருட்டினவன் திரும்பவும் ஆடலாம். முக்கால் வட்டத்துள் உள்ள கோலியை அல்லது கோலிகளை அடிப்பின், அடிபட்ட கோலியனைத்தும் வட்த்தினின்று வெளியேறிவிடல் வேண்டும். அங்ஙனம் வெளியேறிவிடின் அது ஒரு வெற்றியாம். குழியிற்போட்டாலும் காயடித்தாலும், ஏனையோரெல்லாரும் கெலித்தவனுக்கு ஒவ்வொரு காய் கொடுத்துவிடல் வேண்டும். குழியுள் போட்டுக் காயும் அடித்துவிடின் இரட்டைக் கெலிப்பாதலின், ஏனையோர் இவ்விருகாய் கொடுத்துவிடல் வேண்டும். முக்கால் வட்டத்துள் உள்ள காய்களை அடிக்கும்போது, குழிக் காயையும் அடிக்கலாம்; வெளிக்காயையும் அடிக்கலாம். வென்றவன் என்றும் திரும்பியாடுவான், குழியிலும் போடாமல் முக்கால் வட்டத்திற்குள் உள்ள காயையும் அடிக்காமல்போனவன், தன் ஆட்டத்தை இழந்து விடுவான். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அன்று ஒருவரும் காய் போடுவதில்லை. அடித்த காயாவது அடிக்கப்பட்ட காயாவது வட்டத்தைவிட்டு வெளியே போகாவிடின், <b>பச்சா</b> என்னுங்குற்றமாம். அதற்கு ஒரு கோலி அடுத்தவனிடம் கொடுத்துவிட்டு, ஆட்டத்தை விட்டுவிடல் வேண்டும். குழியிற் போட்டவிடத்தும் அடித்த காய் அல்லது அடிக்கப்பட்ட காய் வெளியேறாவிடின், <b>இரட்டைப் பச்சா</b>வாம். அன்று, அடித்தவன் இரு காய் கொடுத்துவிட்டு ஆட்டத்தை விட்டுவிடல் வேண்டும். அடுத்தவன் அவற்றையுஞ் சேர்த்து உருட்டுவான். அவன் கெலித்துவிடின், அப்-<noinclude></noinclude> nn9heaqmo8ioufsb0iic0235pknyak6 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/24 250 619262 1834809 1834528 2025-06-24T04:31:16Z AjayAjayy 15166 1834809 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|10|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>பச்சாக் காய்களையும் வழக்கப்படி கொடுக்கிறவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்; கெலிக்காவிடின் பச்சாக் காய்கள் பழங்காய்களுடன் சேர்த்து உருட்டப்பெறும். எவன் எங்ஙனம் கெலிப்பினும், பழங்காய்களை ஒருபோதும் கெலிப்புக் காயாகப் பெறல் முடியாது. ஆட்டம் முடியும்வரை, அவை ஒரு முதல்போல் இருந்துகொண்டேயிருக்கும். ஆட்டம் முடிந்தபின், அவனவன் முதற்காய் அவனவனைச் சேரும். ஒருவன் கெலித்தவிடத்து இன்னெருவனுக்குப் போடக் காயில்லாவிட்டால், அவன் கடனாகவாவது விலைக்காவது பிறனிடம் வாங்கிக்கொள்ளலாம்; அல்லாக்கால், அவன் முதலில் இட்ட காயை இழந்துவிடுவான். எல்லாரும் ஆடி முடிந்தபின், ஒருவரிடமாவது பலரிடமாவது காய் மிகுதியாய்ச் சேர்ந்திருக்கும். அவற்றுள் அவரவர் சொந்தக் காய்க்கு மேற்பட்டவெல்லாம் கெலிப்புக் காயாகும். {{larger|ஆட்டின் பயன்}} : கோலியாட்டின் பொதுப்பயனாக. முற்கூறப்பட்டவற்றொடு, பெருந்தொகையான கோலிகளை எளிதாய் ஈட்டிக்கொள்வதும், சிறு முதலையிட்டுப் பேரூதியம் பெறும் கருத்துறவும், இவ் ஆட்டின் பயனாம். {{center|{{larger|<b>II. அஞ்சல குஞ்சம்</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : ஐந்தாம் எண்ணைச் சொல்லும் போது ‘அஞ்சல குஞ்சம்’ என்று சொல்லப்படும் கோலியாட்டு வகை, அத் தொடர் மொழியையே பெயராகக்கொண்டது. இதற்கு ஒரே குழியுள்ளமையால், இது ‘<b>ஒற்றைக் குழியாட்டம்</b>’ எனவும்படும். {{larger|ஆடுவார் தொகை}} : சிறுவருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர். {{larger|ஆடிடம்}} : பேந்தாவிற்குரியதே இதற்கும். {{nop}}<noinclude></noinclude> nmuhulapf2cqd9xl7lososxicaqdtgn 1834832 1834809 2025-06-24T05:06:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834832 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|10|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>பச்சாக் காய்களையும் வழக்கப்படி கொடுக்கிறவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்; கெலிக்காவிடின் பச்சாக் காய்கள் பழங்காய்களுடன் சேர்த்து உருட்டப்பெறும். எவன் எங்ஙனம் கெலிப்பினும், பழங்காய்களை ஒருபோதும் கெலிப்புக் காயாகப் பெறல் முடியாது. ஆட்டம் முடியும்வரை, அவை ஒரு முதல்போல் இருந்துகொண்டேயிருக்கும். ஆட்டம் முடிந்தபின், அவனவன் முதற்காய் அவனவனைச் சேரும். ஒருவன் கெலித்தவிடத்து இன்னெருவனுக்குப் போடக் காயில்லாவிட்டால், அவன் கடனாகவாவது விலைக்காவது பிறனிடம் வாங்கிக்கொள்ளலாம்; அல்லாக்கால், அவன் முதலில் இட்ட காயை இழந்துவிடுவான். எல்லாரும் ஆடி முடிந்தபின், ஒருவரிடமாவது பலரிடமாவது காய் மிகுதியாய்ச் சேர்ந்திருக்கும். அவற்றுள் அவரவர் சொந்தக் காய்க்கு மேற்பட்டவெல்லாம் கெலிப்புக் காயாகும். {{larger|ஆட்டின் பயன்}} : கோலியாட்டின் பொதுப்பயனாக. முற்கூறப்பட்டவற்றொடு, பெருந்தொகையான கோலிகளை எளிதாய் ஈட்டிக்கொள்வதும், சிறு முதலையிட்டுப் பேரூதியம் பெறும் கருத்துறவும், இவ் ஆட்டின் பயனாம். {{center|{{larger|<b>II. அஞ்சல குஞ்சம்</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : ஐந்தாம் எண்ணைச் சொல்லும் போது ‘அஞ்சல குஞ்சம்’ என்று சொல்லப்படும் கோலியாட்டு வகை, அத் தொடர் மொழியையே பெயராகக்கொண்டது. இதற்கு ஒரே குழியுள்ளமையால், இது ‘<b>ஒற்றைக் குழியாட்டம்</b>’ எனவும்படும். {{larger|ஆடுவார் தொகை}} : சிறுவருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர். {{larger|ஆடிடம்}} : பேந்தாவிற்குரியதே இதற்கும். {{nop}}<noinclude></noinclude> p2329z0381fr7lkdonx3uztfxmzrs2t பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/25 250 619263 1834812 1834529 2025-06-24T04:41:32Z AjayAjayy 15166 1834812 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|கோலி|11}}</noinclude>{{larger|ஆடுகருவி}} : பாண்டி நாட்டுக் கோலியாட்டிற்குக் கூறிய அளவுள்ள ஒற்றைக் குழியும், ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். {{larger|ஆடுமுறை}} : ஆடகர், குழிக்கு 8 அடி அல்லது 10 அடித் தொலைவிலுள்ள உத்திக் கோட்டின்மேல் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன் தன் கோலியை உருட்டல் வேண்டும். ஒருவனது கோலி முதலிலேயே குழிக்குள் விழுந்துவிட்டால் ஒன்பது என்னும் எண்ணாம். அதன் பின் எதிரியின் கோலியை அடித்து விட்டால் பத்தாம். அது பழமாகும். அதோடு ஓர் ஆட்டை முடியும். முதலிற் குழிக்குள் விழாவிட்டால், குழிக்குக் கிட்ட இருக்கிற கோலிக்காரன் முந்தியாடல் வேண்டும். அவன் எதிரியின் கோலியை அடிக்கலாம்; அல்லது குழிக்குட் போடலாம். எதிரியின் கோலியைத் தவறாது அடித்துவிடின் ஐந்தாம்; அங்ஙனமின்றிக் குழிக்குட் போட்டுவிடின் நான்காம். நான்காம் எண்ணிலிருந்து தொடங்கினும் ஐந்தாம் எண்ணிலிருந்து தொடங்கினும், பத்தாம் எண்வரை தொடர்தல் வேண்டும். சில எண்கட்குக் குழியும் சில எண்கட்கு அடியும் ஆகும். குழி என்பது குழிக்கு அடித்தல். நான்காம் எண்ணிலிருந்து தொடங்கின், 5, 8, 9, 10 என்பன அடியாம்; 6, 7 என்பன குழியாம்; ஐந்தாம் எண்ணிலிருந்து தொடங்கின் 6, 7 என்பன குழியாம்: 8, 9, 10 என்பன அடியாம். பத்தாவது, கோலியை அடித்தற்குப் பதிலாகக் குழிக்குள் அடிப்பின், மீண்டும் நான்காம். குழிக்குள் அடிக்கும் போதும் காயை (அதாவது எதிரியின் கோலியை) அடிக்கும்போதும் தவறிவிடின், அடுத்தவன் ஆடல் வேண்டும். ஆடும்போது, ஐந்தாம் எண் முதல் பத்தாம் எண் வரை ஒவ்வோர் எண்ணிற்கும் ஒவ்-<noinclude></noinclude> 96ld2catonfrtordsh17txna8zg8nf6 1834830 1834812 2025-06-24T05:05:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834830 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|கோலி|11}}</noinclude>{{larger|ஆடுகருவி}} : பாண்டி நாட்டுக் கோலியாட்டிற்குக் கூறிய அளவுள்ள ஒற்றைக் குழியும், ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். {{larger|ஆடுமுறை}} : ஆடகர், குழிக்கு 8 அடி அல்லது 10 அடித் தொலைவிலுள்ள உத்திக் கோட்டின்மேல் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன் தன் கோலியை உருட்டல் வேண்டும். ஒருவனது கோலி முதலிலேயே குழிக்குள் விழுந்துவிட்டால் ஒன்பது என்னும் எண்ணாம். அதன் பின் எதிரியின் கோலியை அடித்து விட்டால் பத்தாம். அது பழமாகும். அதோடு ஓர் ஆட்டை முடியும். முதலிற் குழிக்குள் விழாவிட்டால், குழிக்குக் கிட்ட இருக்கிற கோலிக்காரன் முந்தியாடல் வேண்டும். அவன் எதிரியின் கோலியை அடிக்கலாம்; அல்லது குழிக்குட் போடலாம். எதிரியின் கோலியைத் தவறாது அடித்துவிடின் ஐந்தாம்; அங்ஙனமின்றிக் குழிக்குட் போட்டுவிடின் நான்காம். நான்காம் எண்ணிலிருந்து தொடங்கினும் ஐந்தாம் எண்ணிலிருந்து தொடங்கினும், பத்தாம் எண்வரை தொடர்தல் வேண்டும். சில எண்கட்குக் குழியும் சில எண்கட்கு அடியும் ஆகும். குழி என்பது குழிக்கு அடித்தல். நான்காம் எண்ணிலிருந்து தொடங்கின், 5, 8, 9, 10 என்பன அடியாம்; 6, 7 என்பன குழியாம்; ஐந்தாம் எண்ணிலிருந்து தொடங்கின் 6, 7 என்பன குழியாம்: 8, 9, 10 என்பன அடியாம். பத்தாவது, கோலியை அடித்தற்குப் பதிலாகக் குழிக்குள் அடிப்பின், மீண்டும் நான்காம். குழிக்குள் அடிக்கும் போதும் காயை (அதாவது எதிரியின் கோலியை) அடிக்கும்போதும் தவறிவிடின், அடுத்தவன் ஆடல் வேண்டும். ஆடும்போது, ஐந்தாம் எண் முதல் பத்தாம் எண் வரை ஒவ்வோர் எண்ணிற்கும் ஒவ்-<noinclude></noinclude> goa63lklbrxus65ydz5c5cjs9x80vmt பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/28 250 619265 1834818 1834531 2025-06-24T04:49:49Z AjayAjayy 15166 1834818 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|16|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>முதலில் எறியப்பட்ட இரு கோலிகளும் இருவிரலுக்கு மேல் இடையிட்டிருப்பின், எதிரி சொன்னதைத்தான் அடித்தல் வேண்டும்; இருவிரற்கு உட்பட்டிருப்பின், எதையும் அடிக்கலாம். இங்ஙனம் விருப்பமானதை அடிக்குங் காரணம் பற்றியே, இவ் ஆட்டிற்கு இட்டம் அல்லது கிசேபி என்று பெயர். இடையீடு இருவிரற்குட்பட்ட நிலையில் எதையும் அடிக்கும்போது இரண்டிலும் பட்டுவிட்டால், <b>பச்சா</b> என்னுங் குற்றமாம். அதோடு, அடித்த கோலியாயினும் அடிக்கப்பட்ட கோலியாயினும் குழிக்குள் வீழ்ந்துவிடின், <b>இரட்டைப்பச்சா</b> என்னுங் குற்றமாம். குற்றமெல்லாம் தோல்வித்தானமே. முதலில் எறிந்த இரு கோலிகளும் அரங்கிற்கு உள் வீழினும் வெளி வீழினும்,மூன்றாங் கோலி நேரே குழிக்குள் விழுந்துவிடின், எறிந்தவனுக்கு எதிரி பேசின தொகையை இரட்டிப்பாய்க் கட்டிவிடில் வேண்டும். முதலில் எறிந்த இரு கோலிகளுள் ஒன்று அரங்கிற்கு வெளியே நிற்பின், எதிரி அதை எடுத்து அரங்குக்கோட்டின் மேல் வைப்பான்; அல்லது முட்டிக்கையால் அரங்கிற்குள் தள்ளிவிடுவான். இவற்றுள் பின்னதற்கு <b>மூட்டுதல்</b> என்று பெயர். அடிக்குங் கோலி முதல் வீழ்விலேயே அரங்கிற்குள் விழுந்துவிடல் வேண்டும். அங்ஙனமன்றி அதற்கு வெளியே வீழின், அது <b>வெளிமட்டு</b> என்னுங்குற்றமாதலின் ஆடினவன் தோற்றவனாவன். மூன்றாங் கோலி (அதாவது அடிக்குங் கோலி) அரங்கிற்குள் காயை அடிக்காது கோட்டின்மேல் நிற்பின், <b>கோடு</b> என்னுங் குற்றமாம். அதை ‘லைன்’ (line) அல்லது ‘லாக்’ (lock) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர். உத்தியில் நின்று அடித்தவன் அதைவிட்டு நீங்கும் போது, மூடியை மிதிக்காது ஓரெட்டுப் பின்வைத்து இடமாகவாவது வலமாகவாவது சுற்றி முன்வரல் வேண்டும்; அங்ஙனமன்றி மூடியை மிதித்துவிடின் தவறினவனாவன். {{nop}}<noinclude></noinclude> 7hkq2oeezrzswqrbay5qqyqz05bca5r 1834829 1834818 2025-06-24T05:03:30Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834829 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|16|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>முதலில் எறியப்பட்ட இரு கோலிகளும் இருவிரலுக்கு மேல் இடையிட்டிருப்பின், எதிரி சொன்னதைத்தான் அடித்தல் வேண்டும்; இருவிரற்கு உட்பட்டிருப்பின், எதையும் அடிக்கலாம். இங்ஙனம் விருப்பமானதை அடிக்குங் காரணம் பற்றியே, இவ் ஆட்டிற்கு இட்டம் அல்லது கிசேபி என்று பெயர். இடையீடு இருவிரற்குட்பட்ட நிலையில் எதையும் அடிக்கும்போது இரண்டிலும் பட்டுவிட்டால், <b>பச்சா</b> என்னுங் குற்றமாம். அதோடு, அடித்த கோலியாயினும் அடிக்கப்பட்ட கோலியாயினும் குழிக்குள் வீழ்ந்துவிடின், <b>இரட்டைப்பச்சா</b> என்னுங் குற்றமாம். குற்றமெல்லாம் தோல்வித்தானமே. முதலில் எறிந்த இரு கோலிகளும் அரங்கிற்கு உள் வீழினும் வெளி வீழினும்,மூன்றாங் கோலி நேரே குழிக்குள் விழுந்துவிடின், எறிந்தவனுக்கு எதிரி பேசின தொகையை இரட்டிப்பாய்க் கட்டிவிடில் வேண்டும். முதலில் எறிந்த இரு கோலிகளுள் ஒன்று அரங்கிற்கு வெளியே நிற்பின், எதிரி அதை எடுத்து அரங்குக்கோட்டின் மேல் வைப்பான்; அல்லது முட்டிக்கையால் அரங்கிற்குள் தள்ளிவிடுவான். இவற்றுள் பின்னதற்கு <b>மூட்டுதல்</b> என்று பெயர். அடிக்குங் கோலி முதல் வீழ்விலேயே அரங்கிற்குள் விழுந்துவிடல் வேண்டும். அங்ஙனமன்றி அதற்கு வெளியே வீழின், அது <b>வெளிமட்டு</b> என்னுங்குற்றமாதலின் ஆடினவன் தோற்றவனாவன். மூன்றாங் கோலி (அதாவது அடிக்குங் கோலி) அரங்கிற்குள் காயை அடிக்காது கோட்டின்மேல் நிற்பின், <b>கோடு</b> என்னுங் குற்றமாம். அதை ‘லைன்’ (line) அல்லது ‘லாக்’ (lock) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர். உத்தியில் நின்று அடித்தவன் அதைவிட்டு நீங்கும் போது, மூடியை மிதிக்காது ஓரெட்டுப் பின்வைத்து இடமாகவாவது வலமாகவாவது சுற்றி முன்வரல் வேண்டும்; அங்ஙனமன்றி மூடியை மிதித்துவிடின் தவறினவனாவன். {{nop}}<noinclude></noinclude> kdjfut8xgl1lunym3henauj2eelm8nc பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/29 250 619266 1834824 1834599 2025-06-24T04:57:24Z AjayAjayy 15166 1834824 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|கோலி|17}}</noinclude>ஆடுகிறவன் அடித்த கோலியும் இன்னொன்றும் அரங்கிற்குள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு நிற்பின், அவன் அவற்றுள் ஒன்றை இன்னொன்று அலுக்காதவாறு. எடுத்தல் வேண்டும். அலுக்கிவிடின் தோற்றவனாவன். அலுங்காமல் எடுத்தற்காக இரண்டிற்கும் இடையில் சிறிது மண்ணைத் தூவுவது வழக்கம். ஆட்டிற் கெலித்தவன் மறு ஆட்டையில் முந்தியாடல் வேண்டும். ஆடகர் பலராயின், தோற்றவன் நீங்கி வேறொருவன் எதிரியாவன். {{larger|ஆட்டின் பயன்}} : குறிதப்பாமல் உருட்டியடிக்கப் பயில்வதும், ஒன்றையொன்று தொட்டுநிற்கும் பொருள்களுள் ஒன்றைப் பிறிது அல்லது பிற அலுக்காதவாறு எடுக்கப் பழகுவதும், இவ்வாட்டின் பயனாம். {{center|{{larger|<b>IV. முக்குழியாட்டம்<br>(i) சேலம் வட்டார முறை.</b>}}}} {{dhr|3em}} {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 29 |bSize = 386 |cWidth = 204 |cHeight = 240 |oTop = 294 |oLeft = 90 |Location = center |Description = }} {{nop}}<noinclude> த.வி. —2</noinclude> i9kgiyc4vy25vqz6nkvs39luv99gx7b 1834828 1834824 2025-06-24T05:01:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834828 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|கோலி|17}}</noinclude>ஆடுகிறவன் அடித்த கோலியும் இன்னொன்றும் அரங்கிற்குள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு நிற்பின், அவன் அவற்றுள் ஒன்றை இன்னொன்று அலுக்காதவாறு. எடுத்தல் வேண்டும். அலுக்கிவிடின் தோற்றவனாவன். அலுங்காமல் எடுத்தற்காக இரண்டிற்கும் இடையில் சிறிது மண்ணைத் தூவுவது வழக்கம். ஆட்டிற் கெலித்தவன் மறு ஆட்டையில் முந்தியாடல் வேண்டும். ஆடகர் பலராயின், தோற்றவன் நீங்கி வேறொருவன் எதிரியாவன். {{larger|ஆட்டின் பயன்}} : குறிதப்பாமல் உருட்டியடிக்கப் பயில்வதும், ஒன்றையொன்று தொட்டுநிற்கும் பொருள்களுள் ஒன்றைப் பிறிது அல்லது பிற அலுக்காதவாறு எடுக்கப் பழகுவதும், இவ்வாட்டின் பயனாம். {{center|{{larger|<b>IV. முக்குழியாட்டம்<br>(i) சேலம் வட்டார முறை.</b>}}}} {{dhr|3em}} {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 29 |bSize = 386 |cWidth = 204 |cHeight = 240 |oTop = 294 |oLeft = 90 |Location = center |Description = }} {{nop}}<noinclude> த.வி. —2</noinclude> kbvgxgtlyj6i7f7s0ozybv3hfuvj555 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/31 250 619267 1834825 1834453 2025-06-24T04:57:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834825 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௨. தெல்</b>}}}} தெல்லைத் தெறித்து விளையாடுவது தெல். கோலியும் தெல்லும் கருவி வகையாலன்றி வகையால் ஏறத்தாழ ஒன்றே. கோலிக்குப் பதிலாய்த் தெல்லுக்காயைப் பயன்படுத்துவதே தெல்லாட்டு. ஆயினும், கருவி வேறுபாட்டிற்குத் தக்கபடி தெறிக்கும் வகையும் வேறுபட்டதாம். இடக்கைச் சுட்டுவிரற்கும் பெருவிரற்கும் இடையில் இடுக்குவது இருகருவிக்கும் பொதுவெனினும், வலக்கைச் சுட்டுவிரலால் தெறிப்பது கோலிக்கும், வலக்கை நடுவிரலால் தெறிப்பது தெல்லிற்கும், சிறப்பாம். சிலர் வலக்கை மோதிர விரலைத் தெல்லிற்குப் பயன்படுத்துவர். கோலியைத் தெறிக்கும்போது வலக்கை யகங்கை முன்னோக்கி நிற்கும்; தெல்லைத் தெறிக்கும்போது அது மேனோக்கி நிற்கும். தெல்லுத் தெறித்தல் பாண்டிநாட்டு விளையாட்டு. தெல்லுக்காய் குறிஞ்சி நிலத்தில் இயற்கையாய் வளரும் ஒருவகை மரத்தின் விதை. தெல் என்னுஞ்சொல் தெரிக்கப்படுவது என்னும் பொருட் காரணத்தையுடையது. {{dhr|5em}} {{rule|7em|align=}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 7bpkaa2ty8vetmx9etvlutznx1lzx9p பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/32 250 619268 1834822 1834601 2025-06-24T04:56:05Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834822 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௩. சில்லாங் குச்சு<br>(க) பாண்டி நாட்டு முறை</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : சில்லாங்குச்சு என்னும் ஒரு சிறு குச்சை ஒரு கோலால் தட்டி ஆடும் ஆட்டு <b>சில்லாங்குச்சு</b> எனப்படும். இப்பெயர் சிறுபான்மை <b>சீயாங்குச்சு</b> எனவும் மருவி வழங்கும். {{larger|ஆடுவார் தொகை}} : இவ்விளையாட்டை ஆடக் குறைந்தது இருவர் வேண்டும். பலராயின் உத்திகட்டிச் சம தொகையான இருகட்சியாகப் பிரிந்துகொள்வர். {{larger|ஆடு கருவி}} : இருவிரல் முதல் அறுவிரல் வரை நீளமும், இருவிரல் முதல் நால்விரல் வரை சுற்றளவும், ஒரு நுணியில் கூர்மையும், உள்ள ஓர் உருண்ட குச்சும்; ஒரு முழம் முதல் இருமுழம் வரை (அவரவர்கைக்கேற்றவாறு) நீளமும், இருவிரல் முதல் நால்விரல் வரை சுற்றளவும், ஒரு தலையிற் சிறிது கூர்மையும், உள்ள ஓர் உருண்ட கோலும்; இல் விளையாட்டிற்குரிய கருவிகளாம். பெரும்பாலும் குச்சும் கோலும் ஒரே சுற்றளவினவாக இருக்கும். கோலைக்கம்பு என்பர். ஆடுவார் இருவராயினும் பலராயினும், ஒவ்வோர் இணையர்க்கும் ஒவ்வொரு கோலுங் குச்சும் இன்றியமையாதன. சில சமையங்களில் ஒவ்வொருவனும் தான் தான் பயின்ற அல்லது தன்தன் கைக்கேற்ற கருவிகளைத் தனித்தனி வைத்துக்கொள்வதுமுண்டு. குச்சை மேனோக்கிய சாய்வாக வைத்து அதன் கூர் நுனியிற்கோலால் தட்டியெழுப்புமாறு, குச்சிற் பாதியளவு நீளமும் அரைவிரல் முதல் ஒருவிரல் வரை ஆழமும் உள்ள ஒரு சிறு பள்ளம் நிலத்திற் கில்லப்படும். குச்சைப் பள்ளத்தில் வைத்திருக்கும்போது, அதன் அடிப்பக்கம் (அல்லது மொட்டைப்பக்கம்) பள்ளத்திலும், அதன் நுனிப்பக்கம் (அல்லது கூரிய பக்கம்) வெளியிலும் இருக்கும். {{nop}}<noinclude></noinclude> 8qt0qwl3m1tbjzp06y2mnznwzkajynj பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/33 250 619269 1834821 1834602 2025-06-24T04:54:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834821 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||சில்லாங் குச்சு|21}}</noinclude>{{larger|ஆடிடம்}} : அரைப்படைச்சால் (½ furlong) சதுர அல்லது நீள்சதுர நிலப்பகுதியிலாவது, பரந்த வெளி நிலத்திலாவது இவ் ஆட்டு ஆடப்படும். {{larger|ஆடுமுறை}} : ஆடுவார் இருவராயினும் பலராயினும், ஆடுமுறை யொன்றே. இருவராயின், இருவரும் ஒரே குழியில் முன்பின்னாகவாவது, வெவ்வேறு குழியில் உடனிகழ்வாகவாவது, தம் குச்சைவைத்து நுனியிற் கோலால் தட்டியெழுப்பி, அது நிலத்தில் விழுமுன் அடித்து இயன்ற தொலைவு போக்குவர். யார் குச்சு மிகத் தொலைவிற்போய் விழுந்ததோ அவன் முந்தியாடல் வேண்டும். எழும்பிய குச்சு நிலத்தில் விழுமுன் அதை அடிக்கத் தவறினும், குறைந்து தொலைவு குச்சைப் போக்கினும், பிந்தியாடல் வேண்டும். விளையாட்டைத் தொடங்குபவன், முன் சொன்னவாறு குச்சை யெழுப்பியடித்து இயன்ற தொலைவு போக்குவன். எழும்பிய குச்சு நிலத்தில் விழுமுன் அடிக்கத் தவறின் அடுத்தவன் அடிக்கவேண்டும். யார் அடிப்பினும் குச்சையடித்துப் போக்கியபின், எடுத்தடிக்கும் நிலையில் கோலைக் குழியருகே கிடத்தி நிற்பன். இன்னொருவன் (எதிரி), தொலைவில், குச்சுப்போகும் திசையிலும் அது விழக்கூடிய இடத்திலும் நின்றுகொண்டிருந்து, அது நிலத்தில் விழுமுன் அதைப் பிடிக்க முயல்வான். பிடித்துவிடின், அவன் குச்சடிப்பவனாகவும், முன்பு அடித்தவன் அதை எடுப்பவனாகவும், மாறவேண்டும். பிடிக்க முடியாவிடின், குச்சு நிலத்தில் விழுந்தவுடன் அதையெடுத்து, அடித்தவன் குழியருகே கிடத்தியிருக்கும் கோலிற்படும்படி யெறியவேண்டும். கோலிற்பட்டுவிடின், அன்றும் இருவர் நிலைமையும் மாறும். படாவிடின், அடிப்பவன் விரைவாய்க் குச்சை யெடுத்து அதை முன்போல் அடித்துப் போக்குவான். அவன் அதை அடிக்குமுன் குச்செடுப்பவன் வேகமாய் ஓடிவந்து அவனைத் தொட்டுவிடின், அன்றும், இருவர் நிலைமையும் மாறும். தொடா-<noinclude></noinclude> spug5e9991eswx5z7q6y01fy0lgzrca பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/35 250 619271 1834816 1834608 2025-06-24T04:47:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834816 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|சில்லாங் குச்சு|28}}</noinclude>நிலத்திலுள்ள குறவராயினும், குறிஞ்சி நிலத்திலும் பாலை நிலத்திலுமுள்ள வேடராயினும், பிறராயிலும், காட்டிலுள்ள கோழி முயல் முதலிய ஒருசார் உயிர்களைக் குறுந்தடிகொண்டே யெறிந்து கொல்லுவது வழக்கம். இவ்வழக்கத்தினின்றே “கோழியடிக்கக் குறுந்தடி வேண்டுமா?” என்னும் பழமொழியும் எழுந்துளது. ஒரு குறவனும் அவன் கையாளான சிங்கன் என்னுங் குளுவனும் குறுந்தடிகொண்டு வேட்டையாடின், குறவன் புதர் புதராய்க் குறுந்தடியால் தட்டிப் பார்ப்பான். ஒரு புதரினின்று திடுமென்று ஒரு காட்டுக் கோழி பறக்கும்; அல்லது ஒரு முயல் குதிக்கும். அந்நொடியே, குறவன் அதைக் குறுந்தடியால் அடிப்பான்; அல்லது எறிவான். கோழி அல்லது முயல் அடிபட்டுச் சற்றுத் தொலைவிற்போய் விழும். குளுவன் ஓடிப்போய் அதை எடுத்து வருவான். வேறு நிலத்தினின்று இருவர் வேட்டையாடச் செல்லினும் இவ்வகையே நேரும். இத்தகை வேட்டை வினையையே சில்லாங் குச்சுக் குறிக்கின்றது. குச்சை யடிப்பவன் அதைத் தட்டியெழுப்புவது, குறவன் புதரைத் தட்டிக் கோழி முயலை யெழுப்புவது போன்றது. குச்சை மீண்டும் அடிப்பது, அவ்வுயிரிகளைக் குணிலால் அடிப்பதும் எறிவதும் போன்றது. குச்சு தொலைவிற்போய் விழுவது, அடிப்பட்ட வுயிரிகள் தொலைவிற்போய் லிழுவது போன்றது, குச்சை எடுப்பவன் அதை எடுத்தெறிவது, அடிபட்டு விழுந்த வுயிரிகளைக் குளுவன் எடுத்தெறிவது அல்லது எடுத்து வருவது போன்றது. {{larger|ஆட்டின் பயன்}} : மேலெழும் ஒரு பொருளை விரைந்து குறிதப்பாது வன்மையாய் அடிப்பதும்; வானின்று விழும் பொருளை அது தகாத இடத்தில் விழுமுன்னும், தாழப்பறக்கும் பறவையை அது தன்னைவிட்டுக் கடக்குமுன்னும் பிடிப்பதும்; தொலைவிலுள்ள பொருளைக் குறிதப்பாது ஒருகருவியால் அடிப்பதும்; ஒரு பொருளைத் தொலைவிலுள்ள குறித்த இடத்திற் எறிவதும்; ஒரு<noinclude></noinclude> h4g6hxoj9vzk0dmzqxefyeajvsvuqql பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/34 250 619273 1834820 1834606 2025-06-24T04:50:00Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834820 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|22|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>விடின், குச்செடுத்தவன் முன்போற் குச்செடுக்க வேண்டும். இங்ஙனம், இருவரும் விரும்பிய வரை தொடர்ந்து ஆடுவர். அடித்த குச்சை எடுத்தெறிதலுக்கு <b>எடுத்தூற்றுதல்</b> என்று பெயர். குச்சடிக்கிறவன் எவ்வகையிலும் தவறாதும் பிடிகொடாதும் அடிப்பின், விளையாட்டை நிறுத்தும்வரை எத்தனை முறையும் தொடர்ந்து அடிக்கலாம். பல இணையர் சேர்ந்து ஆடின், தொடங்குங் கட்சியை தீர்மானிக்கும் ஆட்டத்தில் குச்சை மிகத் தொலைவிற் போக்கிய கட்சியார் முந்தியாடுவர்; இதற்கு, ஒரு கட்சியார் அனைவரும் மிகத் தொலைவிற் போக்க வேண்டும் என்னும் யாப்புறவில்லை. அவருள் ஒருவர் போக்கினும் போதும். முந்தியாடுங் கட்சியார் அடிப்பாரும் பிந்தியாடுங் கட்சியார் எடுப்பாருமாய், ஆட்டந் தொடங்கும். அடிக்குந் கட்சியாருள் ஒவ்வொருவனும் அடிக்குங்குச்சை, அவ்வவனுடன் உத்திகட்டிய எதிர்க்கட்சி இணைஞனே எடுப்பான். இணைஞனுக்கு <b>உத்தியாள்</b> என்று பெயர். அடித்த குச்சை உத்தியாள் உடனே வந்து எடுக்காவிடின், அடித்தவன் அதைத் தொடர்ந்து அடித்து, மிகத் தொலைவிற் போக்குவதுமுண்டு. எடுக்குங் கட்சியார் எல்லாருங் குச்சுக்களை யெறிந்த பின்புதான், அடிக்குங் கட்சியார் ஒரே சமையத்தில் மீண்டும் அடிப்பர். தவறும் வகையும் தவறாது ஆடும் வகையும், இருவர் ஆடினும் இரு கட்சியார் ஆடினும் ஒன்றே. ஒவ்வொருவனாகவோ ஒருங்கேயோ அடிக்கும் கட்சியார் அனைவரும் தொலையும் வரை (அதாவது தோற்கும் வரை), எதிர்க்கட்சி நிலைமை மாறாது ஆயின், அடிக்குங் கட்சியார் தொலையத் தொலைய, அவருடைய இணைஞரான எதிர்க்கட்சியார் நின்றுகொண்டே வருவர். அடிக்குங் கட்சியின் இறுதியாளுந் தொலைந்த பின், இருகட்சியும் வினைமாறும். {{larger|ஆட்டுத் தோற்றம்}} : இவ் விளையாட்டு வேட்டை வினையினின்று தோன்றியதாகத் தெரிகின்றது. குறிஞ்சி<noinclude></noinclude> 76ywjok2b95hxj5c26yam8pggez78f8 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/36 250 619274 1834814 1834612 2025-06-24T04:45:54Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834814 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|24|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>குறித்த இடத்திற்கு விரைந்து ஓடுவதும்; ஆகிய வினைப் பயிற்சியே இவ் ஆட்டின் பயனாம். {{center|{{larger|<b>(௨) சோழ கொங்குநாட்டு முறை<br>I. கில்லித்தாண்டு</b>}}}} பாண்டி நாட்டுச் <b>சில்லாங்குச்சும்</b> சோழ கொங்கு காட்டுக் <b>கில்லித்தாண்டும்</b> ஒன்றே. ஆயினும், இடவேறுபாடு காரணமாக, ஈரிட ஆட்டிற்கும் பின்வருமாறு சில வேற்றுமைகள் உள. {{larger|(1) பெயர்}} : சில்லாங்குச்சு என்பது {{larger|கில்லி}} என்றும், கம்பு என்பது <b>தாண்டு</b> என்றும் வழங்கும். பாண்டி நாட்டில், குச்செடுப்பவன் குச்சு நிலத்தில் விழுமுன் அதை அந்தரத்திற் பிடித்துக்கொள்வதற்கு ஒரு சிறப்புப் பெயரும் வழங்கவில்லை. சோழ கொங்கு நாடுகளில் அது <b>உத்தம்</b> அல்லது <b>புட்டம்</b> எனப் பெயர்பெறும். இது கீழ்வரும் கிட்டிப்புள்ளிற்கும் ஒக்கும். ‘எடுத்து ஊற்றுதல்’ என்னும் பாண்டிநாட்டுக் குறி வீட்டிற்கு நேரான சோழ கொங்குநாட்டுக் குறியீடு ‘கஞ்சி வார்த்தல்’ என்பதாகும். {{larger|(2) கருவி}} : சில்லாங்குச்சு ஒரு கடையில் மட்டுக்கூராயிருக்கும். ஆயின், கில்லி இருகடையுங் கூராயிருக்கும். இது இருமுனையும் அடித்தற்கு வசதியாம். {{larger|(3) முறை}} : இரு கட்சியார் ஆடுவதாயின், பாண்டி நாட்டில் அடிக்குங் கட்சியார் அனைவரும் ஒரே சமையத்தில் அடிப்பர். அவனவன் அடிக்குங் குச்சை அவனவன் உத்தியாளே எடுப்பன். சோழ கொங்கு நாட்டிலோ, அடிக்குங் கட்சியாருள் ஒருவனே ஒரு சமயத்தில் அடிப்பன். அவன் அடித்த குச்சை எதிர்க்கட்சியார் எல்லாரும் ஆடுகளத்தில் நின்று அவருள் யாரனுேம் பிடிக்கலாம் அல்லது எடுக்கலாம். அடிக்குங் கட்சியாருள் ஒருவன் தொலைந்தபின்<noinclude></noinclude> 9k93phdygxtyu2zt3uty3r1bl2cz3to பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/37 250 619276 1834813 1834461 2025-06-24T04:42:05Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834813 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|சில்லாங் குச்சு|25}}</noinclude>இன்னொருவன் ஆடுவன். இங்ஙனம் ஒவ்வொருவனாக எல்லாருந் தொலைந்தபின் ஓர் ஆட்டை ஒருவாறு முடியும். இங்ஙனம் ஆடுவது <b>கிரிக்கட்டு</b> (cricket) என்னும் ஆங்கில விளையாட்டை ஒருபுடை யொத்திருப்பதால், இவ் ஆட்டை ‘இந்தியக் கிரிக்கட்டு’ என நகைச்சுவையாகக் கூறுவது வழக்கம். பாண்டிநாட்டில், அடிக்கப்பட்ட குச்சுப் போய்விழுந் தொலைவை அளந்து அதுகொண்டு வெற்றியைக் கணிப்பதில்லை. அடிக்குங் கட்சியர் அனைவருந் தொலைந்தபின், எதிர்க்கட்சியார் ஆடல்வேண்டும். சோழ கொங்கு நாட்டிலோ, தாண்டை அளவுகோலாக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு முறையும் அடிக்கப்பட்ட குச்சுப் போய்விழுந் தொலைவைக் கருவிகொண்டோ மதிப்பாகவோ அளவிட்டு, குறித்த தொகை வந்தவுடன் எதிர்க்கட்சியாரைக் கத்திக் காவடி, யெடுக்கச் செய்வர். குறித்த தொகை வருவதற்கு எத்துணைப்பேர் அடித்தனரோ, அத்துணைப்பேரும் குழியினின்று குச்சை மும்மூன்று தடவை தொடர்ந்தடித்துப் போக்கிய தொலைவிலிருந்து, எதிர்க்கட்சியார் ‘கத்திக் காவடி கவானக் காவடி’ என்று இடைவிடாமல் மடக்கி மடக்கிச் சொல்லிக்கொண்டு குழிவரை வருதல் வேண்டும். இதுவே ‘கத்திக் காவடி யெடுத்தல்’ என்பது. கத்திக் காவடியெடுக்கும்போது இடையிற் சொல்லை நிறுத்திவிட்டால், முன்பு போக்கிய தொலைவினின்று மீண்டும் குச்சை முன்போல் அடித்துப்போக்கி, அது விழுந்த இடத்திலிருந்து மறுபடியும் கத்திக் காவடியெடுக்கச் செய்வர். அதை யெடுத்து முடிந்தபின், முன்பு அடித்தவரே திரும்பவும் ஆடுவர். ஆகவே, கத்திக் காவடியெடுத்தல் தோற்றவர்க்கு விதிக்கும் ஒருவகைத் தண்டனையெனப்படும். முதலில் அடித்த கட்சியார் அனைவரும் அடித்தபின்பும் குறித்த தொகை வராவிடின், அவர் தோற்றவராவர். ஆயின், அவர் கத்திக் காவடியெடுக்க வேண்டியதில்லை. அடுத்த ஆட்டையில் எதிர்கட்சியார் அடித்தல் வேண்டும். இதுவே அத்தோல்வியின் விளைவாம். ஆகவே, கத்திக்<noinclude></noinclude> 4s0rjj6pcai2c0ph3pl5avvvkh62ai4 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/38 250 619278 1834810 1834618 2025-06-24T04:33:35Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834810 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|26|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>காவடித் தண்டனை எடுக்குங் கட்சியார்க்கன்றி அடிக்குங் கட்சியார்க்கில்லை யென்பதும் அறியப்படும். பாண்டிநாட்டில் எடுக்குங் கட்சியார்க்கு அவ் எடுத்தலேயன்றி வேறொரு தண்டனையுமில்லை. {{center|{{larger|<b>II. கிட்டிப்புள்</b>}}}} <b>கிட்டிப்புள்</b> என்பது கில்லித்தாண்டின் மற்றொரு வகையே. இரண்டிற்குமுள்ள வேறுபாடாவன :— {{larger|பெயர்}} : கில்லி என்பது <b>புள்</b> என்றும், தாண்டு என்பது <b>கிட்டி</b> என்றும் பெயர்பெறும். {{larger|முறை}} : கில்லித்தாண்டில், குச்சு குழியின் நீட்டுப்போக்கில் வைத்துக் கோலால் தட்டியெழுப்பி யடிக்கப் பெறும். கிட்டிப்புள்ளிலோ, குச்சுக் குழியின் குறுக்கே வைத்து அதற்கு நட்டுக்குறுக்காக ஒரு கோலைப் பிடித்து அது கையினால் தட்டியெடுக்கப்பெறும். கில்லித்தாண்டில், அடிக்கப்பட்ட குச்சை எடுப்பவன் எடுத்தெறிந்தபின், அதை அடிப்பவன் எந்நிலையிலும் அடிக்கலாம். ஆயின், கிட்டிப்புள்ளில், அது இயக்கத்தில் (அசைவில்) இருக்கும் போதே அதை அடித்தல்வேண்டும். அசைவு நின்று கிடையாய்க் கிடந்தபின், அதை அடித்தல் கூடாது. அடிப்பின், அடித்தவன் தவறியவனாவன். அதனால், எடுத்தெறிந்தவன் அடிக்கவேண்டியிருக்கும் இயங்குங் குச்சு நட்டுக்கு நிற்கும்போது அடிக்கப்படின், அது <b>கில்லிக்குத்து</b> எனப்படும். குச்சுப் போம் தொலைவை அளப்பதும் கத்திக்காவடி எடுப்பதும் கிட்டிப்புள்ளில் இல்லை. பிறவகையில் இது பெரும்பாலும் சில்லாங்குச்சை ஒத்திருக்கும். பெரும்பாலும் சிறுவரே, அவருள்ளும் இருவரே, இல் விளையாட்டை ஆடுவர். கோலால் குச்சைத் தட்டி யெழுப்பி அடிக்கமுடியாத இளஞ்சிறார்க்கென இவ் ஆடு எழுந்ததாகக் கூறுவர். சேரநாடாகிய மலையாள நாட்டில் <b>கொட்டிப் புள்</b> என வழங்கும் ஆட்டு, சில்லாங்குச்சைச் சேர்ந்ததே. {{rule|5em|align=}} {{nop}}<noinclude></noinclude> 6j95zpa4lczg9nbc2spuir2o7emm1xm பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/39 250 619279 1834802 1834621 2025-06-24T03:53:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834802 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௪. பந்து</b>}}}} துணியாலும் கயிற்றாலும் இறுகக் கட்டப்பட்ட உருண்டையை எறிந்தாடும் ஆட்டு, <b>பந்து</b> எனப்படும். (பந்து = உருண்டையானது). {{center|{{larger|<b>I. பேய்ப்பந்து</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : பேய்த்தனமாக ஒருவன்மேலொருவன் எறிந்தாடும் பந்து, <b>பேய்ப்பந்து</b> எனப் பெயர் பெற்றிருக்கலாம். {{larger|ஆடுவார் தொகை}} : பெரும்பாலும் நால்வர்க்கு மேற்பட்ட பலர் ஆடுவதே இவ்விளையாட்டிற்கேற்றதாம். ஆடுவார் தொகை பெருகப்பெருக இவ் ஆட்டுச் சிறக்கும். {{larger|ஆடு கருவி}} : ஆடுவார் எத்துணையராயினும் ஒரு பந்தே இவ் ஆட்டிற்குரியதாம். {{larger|ஆடிடம்}} : பொட்டலும் வெளிநிலமும் இதை ஆடுமிடமாம். {{larger|ஆடு முறை}} : பலர் இடையிட்டு நின்றுகொண்டிருக்க அவருள் ஒருவன் பந்தை மேலே போட்டுப் பிடித்துக்கொண்டு, “பந்தே பந்து” என்று உரக்கக்கத்துவான். பிறர் “என்ன பந்து ?” என்று கேட்பர். அவன் “பேய்ப்பந்து” என்பான். “யார் மேலே” என்று ஒருவன் கேட்க, அவன் “உன்மேலே” என்று சொல்லிக்கொண்டு அவன்மேல் வன்மையாய் எறிவான். அது அவன்மேல் பட்டாலும் படும்; படாதுபோனாலும் போம். பந்து யார் கைப்பட்டதோ அவன் அதை ஓங்கி யார் மேலும் எறிவான். இங்ஙனம் விருப்பமுள்ளவரை மாறி மாறி அடித்து ஆடிக்கொண்டேயிருப்பர். யார் எறியினும் அவனுடைய வலிமைக்குத் தக்கவாறு வன்மையாய் எறிவதே வழக்கம். {{larger|ஆட்டுத்தோற்றம்}} : குரங்கெறி விளங்காயினின்றோ. பேய்ச் செயலாகக் கருதப்பட்ட ஒரு பந்து வீழ்ச்சியினின்றோ, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம். {{nop}}<noinclude></noinclude> cwro6zqvcnvyh09zqajf4lqb6lyss2q பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/40 250 619280 1834801 1834622 2025-06-24T03:51:36Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834801 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|28|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>விளா மரத்திலிருக்கும் குரங்கைக் கல்லாலெறிய அது விளங்காய் கொண்டெறிவது, குரங்கெறி விளங்காயாம். {{larger|ஆட்டின் பயன்}} : சற்றுத் தொலைவில் நிற்கும் அல்லது இயங்கும் இருதிணைப் பொருள்கள்மேலுந் தப்பாது எறிதற்கேற்ற பயிற்சியை, இவ் விளையாட்டு அளிக்கும். வேட்டையாடல், போர் செய்தல், திருடனைக் கல்லால் அடித்தல் முதலிய விளைகட்கு இப்பயிற்சி ஏற்றதாம். {{center|{{larger|<b>II. பிள்ளையார் பந்து</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : பிள்ளையாரைக் குறிக்கும் ஒரு கல்லின்மேற் பந்தை எறிந்தாடும் ஆட்டு பிள்ளையார் பந்து. இது திருச்சி வட்டாரத்திற் <b>பிள்ளையார் விளையாட்டு</b> என வழங்கும். {{larger|ஆடுவார் தொகை}} : பொதுவாக, எண்மர்க்குக் குறையாத பலர் இதை ஆடுவர். {{larger|ஆடு கருவி}} : ஏறத்தாழ ஆறங்குல நீளமுள்ள ஒரு கல்லும்,ஒரு பந்தும், இதற்குரிய கருவிகளாம். {{larger|ஆடிடம்}} : சுவரடியும் அதையடுத்த வெளி நிலமும் இதை ஆடுமிடமாம். {{larger|ஆடுமுறை}} : ஆடுவோரெல்லாரும் சமத் தொகையினவான இரு கட்சியாகப் பிரிந்துகொள்வர். ஒரு செங்கல்லை அல்லது சிறு நீளக் கல்லைப் பிள்ளையாராகப் பாவித்து ஒரு சுவரடியில் சிறிது மணலைக் குவித்து அதில் அதை நட்டு, ஒரு கட்சியார் ஐங்கசத் தொலைவில் எதிர்நின்று ஒவ்வொருவராய் ஒவ்வொரு தடவை பிள்ளையாரைப் படுகிடையாகச் சாய்த்தற்குப் பந்தாலடிக்க, இன்னொரு கட்சியார் இரு பக்கத்திலும் பிள்ளையார்க்கும் அவருக்கும் இடையில் வரிகையாக நின்றுகொண்டு, எறியப்பட்ட பந்தைப் பிடிக்க முயல்வர். பிள்ளையாரைப் படுகிடையாய்ச் சாய்த்த பந்தை யாரேனும் அந்தரத்திற் பிடித்து விடினும், எறிந்த பந்து பிள்ளையார்மேற் படாவிடினும்,<noinclude></noinclude> 1slehwdks71yan1pp0uxphkn77rma8n பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/41 250 619311 1834834 1834247 2025-06-24T05:07:59Z AjayAjayy 15166 1834834 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|பந்து|29}}</noinclude>பட்டும் அதைப் படுகிடையாய்ச் சாய்க்காவிடினும், எறியுங் கட்சியார் ஆள் மாறிக்கொண்டேயிருந்து அனைவருங் தீர்ந்தபின், எதிர்க் கட்சியார் அடிக்குங் கட்சியாராகவும் அடித்த கட்சியார் பிடிக்குங் கட்சியாராகவும், மாறல் வேண்டும். பிள்ளையாரைப் படுகிடையாய்ச் சாய்த்த பந்து பிடிக்கப்படாவிடின், பிடிக்க நின்ற கட்சியர் அனைவரும் உடனே ஓடிப்போய்ச் சற்றுத் தொலைவில் இடையிட்டு நிற்பர். அடித்த கட்சியாமனைவரும் நெருக்கமாகக் கூடி நின்று, அவருள் ஒருவன் பந்தைத் தன் அடி வயிற்றின்மேல் வைத்து அது வெளிக்குத் தெரியாமல் இரு கையாலும் பொத்திக் கொண்டும், பிறரும் தாம் பந்து வைத்திருப்பதாக எதிர்க் கட்சியாருக்குத் தோன்றுமாறு தனித்தனி நடித்துக்கொண்டும், அவரிடையே பிரிந்து செல்வர், எதிர்க்கட்சியாருள் யாரேனும் ஒருவன், உண்மையாய்ப் பந்து வைத்திருப்பவனை ஐயுறாது அவனுக்குப் பக்கமாக நிற்பின், பந்து வைத்திருப்பவன் திடுமென்று அவன்மேல் எறிந்து விடுவான். அதோடு ஓர் ஆட்டை முடியும். அடுத்த ஆட்டை ஆடுவது ஆடகர் விருப்பத்தைப் பொறுத்தது. {{larger|ஆட்டுத் தோற்றம்}} : ஒருகால், பிறமதப் பகைமை பற்றியும் சொள்ளையடித்தற் பொருட்டும், இடைக் காலத்திற் சில அரசரும் கொள்ளைத் தலைவரும் தெய்வச்சிலைகளை (விக்கிரங்களை) உடைத்ததும் கவர்ந்ததும், இவ்விளையாட்டுத் தோற்றத்திற்குக் காரணமாயிருந்திருக்கலாம். ககினி மகமது, மாலிக்காபூர், திருமங்கையாழ்வார் முதலியோர் செயல்கள், இங்குக் கவனிக்கத் தக்கன. {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> ryldljgqm8ijait3dvxuzcogqg83eh6 1834846 1834834 2025-06-24T05:23:09Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834846 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|பந்து|29}}</noinclude>பட்டும் அதைப் படுகிடையாய்ச் சாய்க்காவிடினும், எறியுங் கட்சியார் ஆள் மாறிக்கொண்டேயிருந்து அனைவருங் தீர்ந்தபின், எதிர்க் கட்சியார் அடிக்குங் கட்சியாராகவும் அடித்த கட்சியார் பிடிக்குங் கட்சியாராகவும், மாறல் வேண்டும். பிள்ளையாரைப் படுகிடையாய்ச் சாய்த்த பந்து பிடிக்கப்படாவிடின், பிடிக்க நின்ற கட்சியர் அனைவரும் உடனே ஓடிப்போய்ச் சற்றுத் தொலைவில் இடையிட்டு நிற்பர். அடித்த கட்சியாமனைவரும் நெருக்கமாகக் கூடி நின்று, அவருள் ஒருவன் பந்தைத் தன் அடி வயிற்றின்மேல் வைத்து அது வெளிக்குத் தெரியாமல் இரு கையாலும் பொத்திக் கொண்டும், பிறரும் தாம் பந்து வைத்திருப்பதாக எதிர்க் கட்சியாருக்குத் தோன்றுமாறு தனித்தனி நடித்துக்கொண்டும், அவரிடையே பிரிந்து செல்வர், எதிர்க்கட்சியாருள் யாரேனும் ஒருவன், உண்மையாய்ப் பந்து வைத்திருப்பவனை ஐயுறாது அவனுக்குப் பக்கமாக நிற்பின், பந்து வைத்திருப்பவன் திடுமென்று அவன்மேல் எறிந்து விடுவான். அதோடு ஓர் ஆட்டை முடியும். அடுத்த ஆட்டை ஆடுவது ஆடகர் விருப்பத்தைப் பொறுத்தது. {{larger|ஆட்டுத் தோற்றம்}} : ஒருகால், பிறமதப் பகைமை பற்றியும் சொள்ளையடித்தற் பொருட்டும், இடைக் காலத்திற் சில அரசரும் கொள்ளைத் தலைவரும் தெய்வச்சிலைகளை (விக்கிரங்களை) உடைத்ததும் கவர்ந்ததும், இவ்விளையாட்டுத் தோற்றத்திற்குக் காரணமாயிருந்திருக்கலாம். கசினி மகமது, மாலிக்காபூர், திருமங்கையாழ்வார் முதலியோர் செயல்கள், இங்குக் கவனிக்கத் தக்கன. {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 046lf18si2om2qs2hfa6oqhu3o0cchn பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/42 250 619312 1834799 1834635 2025-06-24T03:48:16Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834799 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௫. மரக்குரங்கு</b>}}}} {{center|<b>(‘கொம்பரசன் குழையரசன்’)</b>}} {{larger|ஆட்டின் பெயர்}} : சிறுவர் மரத்திற் குரங்குபோல் ஏறி விளையாடும் ஆட்டு <b>மரக் குரங்கு</b> என்பதாம்.இது பாண்டி நாட்டில் ‘கொம்பரசன் குழையரசன்’ என வழங்கும். {{larger|ஆடுவார் தொகை}} : இருவர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர். {{larger|ஆடுமுறை}} : ஆடுவாரெல்லாரும் ஒரு மரத்தருகே ஒரு வட்டக்கோட்டுள் நின்றுகொண்டு ஒவ்வொருவனாய் இடக்காலை மடக்கித் தூக்கி, அதன் கவட்டூடு ஒரு கல்லையாவது குச்சையாவது எறிவர். குறைந்த தொலைவு போக்கியவன், பிறர் மரத்திலேறிப் பிடிக்கச் சொன்ன பின் அவரைப் பிடித்தல் வேண்டும். பிடிக்கிறவன் மரத்திலேறும்போது, சிலர் மரத்தினின்றும் குதித்து வட்டத்திற்குட் போய் நின்று கொள்வர். சிலர் கிளைக்குக் கிளை தாவி ஆட்டங்காட்டுவர். வட்டத்திற்குட்போய் நிற்குமுன் யாரேனும் தொடப்பட்டுவிட்டால், அவன் அடுத்த ஆட்டையில் பிறரை முன் சொன்னவாறு பிடித்தல் வேண்டும். மரக்கிளைகளிலிருக்கும்போது ‘கொம்பரசன் குழையரசன்’ என்று பாண்டி நாட்டுச் சிறுவர் தம்மைக் கூறிக்கொள்வர். {{larger|ஆட்டுத் தோற்றம்}} : குரங்குகளின் செயலினின்று இவ் ஆட்டுத் தோன்றியிருத்தல் வேண்டும். {{larger|ஆட்டின் பயன்}} : மரமேறப் பயிலுதல் இவ்வாட்டின் பயனாம். {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> cv4pnm7rmhsq48c5o0z7kw2102224s4 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/43 250 619315 1834798 1834637 2025-06-24T03:46:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834798 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௬. “காயா பழமா?”</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : நீந்தத் தெரியும் சிறுவர் நீரில் நின்று “காயா பழமா?” என்று கேட்டு ஆடும் ஆட்டு, அக்கேள்வியையே பெயராகக் கொண்டது. {{larger|ஆடுவார் தொகை}} : இருவர் முதற் பலர் இதை ஆடுவர். இருவர்க்கு மேற்படின் இன்பஞ் சிறக்கும். {{larger|ஆடிடம்}} : ஆறுங் குளமும் போலும் நீர்நிலைகள் இதை ஆடுமிடமாம். {{larger|ஆடுமுறை}} : ஆடுவாரெல்லாரும் நீரில் நின்று கொண்டு, ஒவ்வொருவனாய்க் “காயா, பழமா?” என்று கேட்டு நீருட் சுண்டுவர். சுண்டும் விரல் நீர்மேல்படின் ‘தளார்’ என்னும் ஓசையெழும்; நீருள் முற்றும் முழுகின் ஓசையே கேளாது : பாதி முழுகின் ‘டபக்கு’ என்னும் ஓசை பிறக்கும். இவற்றுள், முன்னவை யிரண்டும் காயாம்; பின்னதொன்றும் பழமாம். காயாயின் “காய்” என்றும்' பழமாயின் “பழம்” என்றும், பிறர் கூறுவர். பலர் காயாயின் மீண்டும் சுண்டுவர். ஒருவனே காயாயின், அவன் பிறரை நீருட் பிடித்தல் வேண்டும். அவர் சிறிது தொலைவு சென்றபின், தம்மைப் பிடிக்கச் சொல்வார். அவன் விரைந்து சென்று, நடந்து செல்பவரை நடந்து சென்றும், நீந்திச் செல்பவரை நீந்திச் சென்றும், முழுகிச் செல்பவரை முழுகிச் சென்றும், பிடிக்க முயல்வான். யாரேனும் தொடப்படின், அவனே பின்பு பிறரைப் பிடித்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து விருப்பமுள்ளவரைப் பிடித்து ஆடப்பெறும். {{larger|ஆட்டுத் தோற்றம்}} : உள்ளான் என்னும் நீர்ப்பறவை நீருள் மூழ்கிச்சென்று மீன் பிடிப்பதினின்று, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம். {{larger|ஆட்டின் பயன்}} : நீருள் மூழ்கிய பொருளை யெடுத்தற்கும் முத்துக் குளித்தற்கும் ஏற்ற பயிற்சியை, இவ்விளையாட்டு அளிக்கும். {{rule|5em|align=}} {{nop}}<noinclude></noinclude> 87iojf6dqlh70zlimtxb0z94i04z967 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/44 250 619316 1834797 1834638 2025-06-24T03:44:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834797 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௭. பஞ்சுவெட்டுங் கம்படோ</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’ என்று சொல்லி ஆடப்பெறும் ஆட்டு. அச்சொல்லையே பெயராகக் கொண்டது. {{larger|ஆடுவார் தொகை}} : இதை ஆட இருவர் வேண்டும். {{larger|ஆடிடம்}} : மணற் குவியலில் மட்டும் இது ஆடப்பெறும். {{larger|ஆடுமுறை}} : ஒருவன் இன்னொருவனை மணலிற் படுக்கவைத்துத் துணியாற் போர்த்து அவனது உடலின் கீழ்ப் பகுதியை மணலால் மூடி “பஞ்சுவெட்டுங் கம்படோ தோலே தோலே, பருத்திவெட்டுங் கம்படோ தோலே தோலே” என்று மடக்கி மடக்கிச் சொல்லி மெல்ல மெல்ல அவன் முதுகில் தட்டிக்கொண்டேயிருப்பன். சிறிது நேரம் பொறுத்துப் படுத்தவன் எழுந்துவிடுவான். {{larger|ஆட்டுத் தோற்றம்}} : போரில் தோற்றோடினவருள் ஒரு சாரார், தம்மைத் தொடர்ந்து வரும் வெற்றி மறவரினின்று தப்பிக்கொள்ளும் பொருட்டு நடித்த நடிப்புக்களுள் ஒன்றன் போலியாக, இவ் ஆட்டுத் தோன்றியதோவென ஐயுற இடமுண்டு. {{dhr|5em}} {{rule|5em|align=}} {{dhr|7em}} {{nop}}<noinclude></noinclude> jpn7pa2n53719nyyvjk7x2w8xqvrlys பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/30 250 619346 1834826 1834600 2025-06-24T04:59:17Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834826 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|18|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{larger|ஆட்டின் பெயர்}} : சுவரடியங்கிற்குள் இருகுழிக்குப் பதிலாக முக்குழு வைத்தாடும் கோலியாட்ட வகையே <b>முக்குழியாட்டம்.</b> ஆடு முறை : மேற்கூறிய இருகுழியாட்டமும் இங்குக் குறித்த முக்குழியாட்டமும் ஒன்றே. ஆயின், இட வேறுபாடு காரணமாகப் பின்வருமாறு மூவகை வேற்றுமையுண்டு. {| |- | || திருச்சி || சேலம் |- |(1) கருவி : || இருகுழி || முக்குழி |- |(2) முறை : || மூட்டல் ஒரே தள் || மூட்டல் 3 தள் வரை |- |(3) பெயர் : || இஷ்டம் அல்லது கிசேபி || முக்குழியாட்டம் |- | || வெளிமட்டு || வெளி டிப்பு |- | || ‘லைன்’ அல்லது ‘லாக்கு’ || கீர் அல்லது கீறு |- |} {{dhr|7em}} {{rule|5em|align=}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> kwnbtyofp3dt8in49y57gfs77nq4wni 1834827 1834826 2025-06-24T04:59:55Z AjayAjayy 15166 1834827 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|18|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{larger|ஆட்டின் பெயர்}} : சுவரடியங்கிற்குள் இருகுழிக்குப் பதிலாக முக்குழு வைத்தாடும் கோலியாட்ட வகையே <b>முக்குழியாட்டம்.</b> {{larger|ஆடு முறை}} : மேற்கூறிய இருகுழியாட்டமும் இங்குக் குறித்த முக்குழியாட்டமும் ஒன்றே. ஆயின், இட வேறுபாடு காரணமாகப் பின்வருமாறு மூவகை வேற்றுமையுண்டு. {| |- | || திருச்சி || சேலம் |- |(1) கருவி : || இருகுழி || முக்குழி |- |(2) முறை : || மூட்டல் ஒரே தள் || மூட்டல் 3 தள் வரை |- |(3) பெயர் : || இஷ்டம் அல்லது கிசேபி || முக்குழியாட்டம் |- | || வெளிமட்டு || வெளி டிப்பு |- | || ‘லைன்’ அல்லது ‘லாக்கு’ || கீர் அல்லது கீறு |- |} {{dhr|7em}} {{rule|5em|align=}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> aj0z6resq0wxvgolkrkyzgzjxxacaac பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/46 250 619347 1834936 1834628 2025-06-24T08:10:07Z AjayAjayy 15166 1834936 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|34|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>ஙனம் பிறரெல்லாம் அதைத் தம் குச்சால் தள்ளித் தள்ளி நெடுந்தொலைவிற்குக் கொண்டு போவர். குச்சுப் பிடித்தவன், தன் குச்சு விழுந்தவுடன் வட்டத்துள்ளிருக்கும் நாற்கல்லையும் எடுத்துச் சதுரத்தில் மூலைக்கொன்றாக வைத்துவிட்டு, பிறருள் ஒருவனைப்போய்த் தொடல் வேண்டும். நாற் கல்லையும் மூலைக்கொன்றாக வையாது போய்த் தொடின், அது கூட்டன்று. குச்சைத் தள்ளுபவர், குச்சுப் பிடித்தவன் தம்மைத் தொடுமுன், அரங்கு மூலைக் கல்லின்மேலேனும் ஆங்காங்குள்ள பிற கருங்கல்லின் மேலேனும் தம் குச்சை வைத்துக்கொண்டால், அவரைத் தொடல் கூடாது. யாரேனும் ஒருவன் தொடப்பட்டுவிடின், அவன் தான் தொடப்பட்டவிடத்திலிருந்து சதுர அரங்கு வரையும், தன் குச்சை வாயிற் கௌவிக்கொண்டும், அல்லது வலக்கையிற் பிடித்துக் கொண்டும், இடக்கையை மடக்கி முதுகில் வைத்துக்கொண்டும், <poem>::“எங்கள் வீட்டு நாயி எலும்பு கடிக்கப் போச்சு ::கல்லால் அடித்தேன் காலொடிந்து போச்சு”</poem> என்று இடைவிடாது பாடிக்கொண்டு, நொண்டியடித்து வரல் வேண்டும். இங்ஙனம் நெடுகலும் வரத் தவறின், மீண்டும் புறப்பட்ட இடத்திலிருந்து அவ்வாறு வரல்வேண்டும். அங்ஙனம் வந்த பின், தொடப்பட்டவன் குச்சுப் பிடிப்பான். அதன் பின், முன் போன்றே திரும்பவும் ஆடப்பெறும். {{dhr|5em}} {{rule|5em|align=}} {{dhr|5em}} {{nop}}<noinclude></noinclude> 64xd80708gag15q6059ee3hrsf4579k பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/47 250 619348 1834938 1834475 2025-06-24T08:12:55Z AjayAjayy 15166 1834938 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௯. பம்பரம்<br>I. ஓயாக்கட்டை</b>}}}} சிறுவர், தம் பம்பரங்களை வட்டத்துளாயினும், வரம் பிலா நிலத்திலாயினும் ஒருங்கே ஆடவிட்டு, யாரது நீண்ட நேரம் ஆடுகின்றதென்று பார்க்கும் ஆட்டு <b>ஓயாக்கட்டை</b>யாம். இது மீண்டும் மீண்டும் ஒரே வகையாய் ஆடப்பெறும். {{center|{{larger|<b>II. உடைத்த கட்டை</b>}}}} ஆட்டின்பெயர் : ஆட்டத்தில் தோற்றவனது பம்பரத்தை உடைக்கும் ஆட்டு <b>உடைத்த கட்டை</b> எனப்படும். {{larger|ஆடுமுறை}} : இருவர்க்கு மேற்பட்ட சிறுவர் பலர், ஒரு வட்டத்தின் நடுவில் ஒரு மாங்கொட்டையை வைத்து, ஒவ்வொருவனாகப் பம்பரத்தை அதன்மேலேற்றி, அதை வெளியேற்றுவர். அது வெளியேறியவுடன், எல்லாரும் ஒருங்கே விரைவாகத் தன் தன் பம்பரத்தை ஆட்டிக் கைமேல் ஏற்றுவர். மிகப் பிந்தி ஏற்றியவன் தன் பம்பரத்தை வட்டத்தின் நடுவில் வைத்தல் வேண்டும். பம்பரத்தை யாட்டிக் கைமேலேற்றும்போது, ‘அபிட்கோசு’ அல்லது ‘சிங்கோசு’ என்று சொல்லிக்கொள்வதால், அங்ஙனம் ஏற்றுவதற்கு, ‘அபிட்கோசெடுத்தல்’ அல்லது ‘சிங் கோசெடுத்தல்’ என்றுபெயர். வட்டத்தின் நடுவிலுள்ள பம்பரத்தை ஏனையோரெல்லாரும், முன்பு மாங்கொட்டையை வெளியேற்றியது போல் வெளியேற்றி, ஏறத்தாழ இருபது கசத் தொலைவிலுள்ள எல்லைக் கோட்டிற்குக் கொண்டு போவர். ஒவ்வொருவனாக அவனவன் தன்தன் பம்பரத்தை அதன்மேலேற்றித் தள்ளியே, அதைக்கொண்டு போதல் வேண்டும். அங்ஙனம் கொண்டு போம்போது, யாரேனும் மட்டை வீழ்த்தினும் சரட்டை போக்கினும், கீழேயிருக்கும் பம்பரத்திற்குப் பதிலாகத் தன் பம்பரத்தை வைத்துவிடல் வேண்டும். கீழேயிருந்த பம்பரக்காரன் அதை எடுத்துப் பிறர்போல் ஆட்டுவான். {{nop}}<noinclude></noinclude> 4eb4yp7fakwpycow25jzco8mzbir51m பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/52 250 619351 1834940 1834479 2025-06-24T08:17:37Z AjayAjayy 15166 1834940 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>(2) இரவாட்டு</b>}}}} இங்கு, இரவென்றது கண்தெரியும் நிலாக்காலத்திரவை. நிலவொளியில்லாதவிடத்துத் தெரு விளக்கொளியிலும் சில ஆட்டுக்கள் ஆடப்பெறும். {{center|{{larger|<b>க. குதிரைக்குக் காணங்கட்டல்</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : குதிரைக்குக் காணங்கட்டி அவற்றின்மேல் ஏறுவதாகப் பாவித்துக்கொண்டு, ஒரு கட்சியார் இன்னொரு கட்சியார்மேல் ஏறி விளையாடுவது <b>குதிரைக்குக் காணங்கட்டல்.</b> காணங்கட்டுதலாவது கொள்வைத்தல். {{larger|ஆடுவார் தொகை}} : பொதுவாக, எண்மர்க்கு மேற்பட்ட சிறுவர் இதை ஆடுவர். {{larger|ஆடு கருவி}} : ஓர் ஆடைத்துண்டை முறுக்கிப் பின்னிய திரி இதற்குரிய கருவியாம். ஏறத்தாழ ஐந்து கசம் இடையிட்ட இரு சமதூரக் கோடுகளைக் கீறி, அவற்றை எதிரெதிராக நின்று ஆடும் இரு கட்சியாரும் தத்தம் மனையெல்லை என்பர். {{larger|ஆடிடம்}} : ஊர்ப் பொட்டலும் அகன்ற தெருவும் இதை ஆடுமிடமாம். {{larger|ஆடு முறை}} : ஆடுவார் எல்லாரும் முதலாவது உத்தி கட்டிச் சமத்தொகையான இருகட்சியாகப் பிரிந்துகொள்வர். முந்தி யாடவேண்டுமென்று துணியப்பட்ட கட்சியாருள் ஒருவன், திரியின் ஒரு முனையைத் தன் வலக்காற்பெருவிரற்கும் அடுத்த விரற்கும் இடையில் இடுக்கி, இருகையையும் நிலத்தில் ஊன்றி, கரணம் போடுவதுபோற் காலைத்தூக்கித் திரியை எதிர்க்கட்சியாரின் மனைக்குள் காலால் எறிவான். அதை எதிர்க்கட்சியார் அந்தரத்திற்-<noinclude></noinclude> fx0yefpbbstezuy4quplzpk8yp70ctb பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/54 250 619352 1834941 1834480 2025-06-24T08:19:17Z AjayAjayy 15166 1834941 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|42|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>வேண்டும் உணவுப்பொருட்களை, நகரக் குடியிருப்பிற்கும் புறமதிற்கும் இடைப்பட்ட நிலத்திலேயே விளைத்துக்கொள்ள வேண்டியிருந்திருக்கும். “நாடுகண்டன்ன கணை துஞ்சு விலங்கல்” என்னும் பதிற்றுப்பத்துத் தொடருக்கு (16:2) “நெடுநாட்பட அடைமதிற் பட்ட காலத்தே விளைத்துக் கோடற்கு, வயலும் குளமும் உளவாகச் சமைத்து வைத்தமையாற் கண்டார்க்கு நாடு கண்டாற்போன்ற... இடைமதில்” என்ற அந்நூலின் பழையவுரையாசிரியர் விளக்கவுரை கூறியிருப்பது, இங்கே கவனிக்கத் தக்கது. காலில் திரியெறிதல், உழிஞையார் (அதாவது முற்றுகையிட்டிருப்பவர்) நகரத்துள் எறியும் எரிவாணத்தைக் குறிக்கலாம். இப்போது வேடிக்கைக்காக விடப்படும் எரிவாணம் (வாணக் கட்டு) பழங்காலத்தில் நொச்சி நகருள் எரியூட்டுவதற்கு விடப்பட்டதாகத் தெரிகின்றது. விளையாட்டிற் காணங் கட்டியபின் குதிரையேறுவது, நொச்சி மறவர் காணம் விளைத்துத் தம் குதிரைகட்கு வைத்த பின், அவற்றின் மேலேறி நகருக்கு வெளியே போருக்குப் புறப்பட்டு வருவதைக் குறிக்கலாம். {{larger|ஆட்டின்பயன்}} : காலால் ஒரு பொருளைப் பற்றுவதும் கரணம்போட்டுத் தாண்டுவதுமாகிய வினைப்பயிற்சியை, இவ்விளையாட்டு அளிக்கும். {{dhr|5em}} {{rule|5em|align=}} {{dhr|5em}} {{nop}}<noinclude></noinclude> 2dophnas7v71qhfjzkvi82mwwv5au1l பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/55 250 619353 1834942 1834481 2025-06-24T08:21:10Z AjayAjayy 15166 1834942 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௨. வண்ணான் தாழி</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : பாண்டி நாட்டில், வண்ணாரக் குலத்தையும் தாழ்த்தப்பட்ட வகுப்புக்களையும் சேர்ந்த சிறுவர், வண்ணான் துறையில் ஆடையொலிப்பது போல் நடித்தாடும் ஆட்டு <b>வண்ணான் தாழி</b>. தாழி என்பது அலசுவதற்குத் துணிகள் வைக்கப்பட்டிருக்கும் பெரும்பானை {{larger|ஆடுவார் தொகை}} : பொதுவாக, நால்வர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர். {{larger|ஆடு கருவி}} : ஒரு துணி மூட்டை இதற்கு வேண்டுங்கருவியாம். {{larger|ஆடிடம்}} : ஊர்ப் பொட்டலிலும் அகன்ற தெருவிலும் இது ஆடப்பெறும். {{larger|ஆடு முறை}} : ஆடுவார் அனைவரும் ஒவ்வொரு துணி போடவேண்டும். அவை ஒரு மூட்டையாகக் கட்டப்படும். அதை ஒருவன் எடுத்துத் தன் பிடரியில் வைத்துக்கொண்டு, மருள்கொண்ட தேவராளன் போல் ஆடி வரிசையாய் நிற்கும் ஏனையோருள் ஒருவன்மேல் கண்னை மூடிக்கொண்டு எறிவான். அது யார்மேல் விழுந்ததோ அவன் அதைத் தன் பிடரியில் வைத்து இருகையாலும், பிடித்துக்கொண்டு கீழே உட்கார வேண்டும். மூட்டையை எறிந்தவன், அதில் இரண்டோர் அடியடித்துவிட்டு, “கூழ் குடிக்கப்போகிறேன்,” என்று சொல்லிச் சற்றுத் தொலைவுபோய் மீள்வான். அதற்குள் எனையோரெல்லாம் அம் மூட்டையில் தொப்புத் தொப்பென்று அடித்து மகிழ்வர். போய் மீண்டவன் அவருள் ஒருவனைத் தொட முயல்வான். அவன் அணுகியவுடன் அனைவரும் ஓடிப்போவர். அவன் ஒருவனைத் தொடுமுன் இன்னொருவன் மூட்டையில் அடித்துவிடின், அத்தொடுகை கணக்கில்லை. இன்னொருவன் மூட்டையில் அடிக்குமுன் ஒருவனைத் தொட்டுவிடின், தொடப்பட்டவன் மூட்டையை வாங்கித் தன் பிடரிமேல்<noinclude></noinclude> 24sdw9k1wdahg0p1t49k7kjuwca0uix பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/57 250 619354 1834944 1834484 2025-06-24T08:23:09Z AjayAjayy 15166 1834944 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|வண்ணான்‌ தாழி|45}}</noinclude>அவன் அவரைத் துரத்தி அடித்திருப்பன், அல்லது கடுமையாய்த் திட்டியிருப்பான். இச்செயலையே இவ் விளையாட்டு உணர்த்துகின்றது. தொடுபவன் வண்ணானையும், மூட்டை பாறையையும், அதில் அடிப்பவர் அவன் கூழுண்ணச் சென்றிருக்கும்போது அதைப் பயன்படுத்தும் பிற வண்ணாரையும், ஒருவனை ஓடித் தொடுவது திருட்டுத்தனமாய்ப் பாறையைப் பயன்படுத்திய ஒருவனைப் பிடித்து அடிப்பதையும், குறிப்பதாகக் கொள்ளப்படும். {{larger|ஆட்டின் பயன்}} : ஓடும் ஒருவனைப் பிடிப்பதும் ஒருவனாற் பிடிபடாமல் ஓடிப்போவதுமான வினைப்பயிற்சி, இவ்விளையாட்டின் பயனாம். {{dhr|10em}} {{rule|5em|align=}} {{dhr|5em}} {{nop}}<noinclude></noinclude> c7zxxnr370pjmg0yrl3llp8bjz98uk8 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/56 250 619355 1834943 1834486 2025-06-24T08:22:24Z AjayAjayy 15166 1834943 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|44|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>வைத்துக்கொண்டு கீழே உட்கார வேண்டும். முன்பு கீழே உட்கார்ந்திருந்தவன் பின்பு பிறரைத் தொடுபவனாவன். முன்பு தொட்டவன் பின்பு பிறரோடு சேர்ந்து மூட்டையில் அடித்து விளையாடுவான். இங்ஙனமே, நெடுகலும், தொடப்பட்டவன் மூட்டை வைத்திருப்பவனாகவும், மூட்டை வைத்திருந்தவன் தொடுபவனாகவும்,தொட்டவன் மூட்டையில் அடித்து விளையாடு பவனாகவும், மாறிக்கொண்டே வருவர். புதிதாய்த் தொடுபவனாகும் ஒவ்வொருவனும், முதலாவது மூட்டையில் இரண்டடியடித்து விட்டுக் கூழ் குடிக்கப் போவதும், பின்பு மீண்டும் பிறரைத் தொடுவதும், மரபாம். மூட்டையில் அடித்து மகிழும் ஒவ்வொருவனும் பின்பு மூட்டை தாங்கி அடிவாங்குவதற்கு இடமிருத்தலால், முன்பு பிறன் முதுகில் மூட்டையிருந்தபோது கண்ணோட்டமின்றி வன்மையாய் அடித்தவன், பின்பு தன்வினை விளை வை மிகுதியாய் அறுக்க நேரும். விளையாட்டு முடிந்தபின், அவனவன் துணியை அவனவன் எடுத்துக்கொள்வான். ஆட்டுத் தோற்ற விளக்கம் வண்ணாருள் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வாரு துறையுண்டு. ஒருவன் இன்னொருவன் துறையில் வெளுப்பது, வசதிக் குறைவுமட்டுமன்றி இழப்புமுண்டுபண்ணும். பழங் காலத்தில் ஒவ்வொரு வண்ணானும் <b>வண்ணூரப் பாட்டம்</b> அல்லது <b>வண்ணுரப் பாறை</b> என்னும் தொழில் வரி செலுத்தவேண்டியிருந்தது. அதனால் ஒருவன் பாறையில் இன்னொருவன் வெளுப்பது, மிகக் கண்டிப்பாய்த் தடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆயினும், ஒருவன் பாறை மிக வசதியுள்ளதாகவிருப்பின், அவன் தான் வழக்கமாக உண்ணுங் கூழுண்ணச் சென்றிருக்கும்போது, பிறர் அவன் பாறையைப் பயன்படுத்தியிருப்பர். அவன் மீண்டு வரும்போது, அவர் ஓடியிருப்பர்.<noinclude></noinclude> h781io21zeotjn0fzp5ne83ida3osrw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/284 250 619370 1834655 1834654 2025-06-23T11:59:10Z Desappan sathiyamoorthy 14764 1834655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அண்டார்க்டிகா|248|அண்டார்க்டிகா}}</noinclude>இராசு பனிக்கட்டித் திட்டின் மேற்குப் பகுதியை ஆய்ந்தார்கள். 1908–9–இல் சாக்கில்டனும், 1911–12–இல் இசுகாட்டும் பியர்டுமூர் (Beard more) பனிமலையின் மீது ஏறினார்கள், 1909 சனவரி மாதத்தில் சாக்கில்டன் தென்துருவத்திற்கு 400 கிலோமீட்டர் தொலைவுவரை சென்றார். இசுகாட்டும் அவருடைய துணைவர்கள் நால்வரும் 1912–இல் தென்துருவத்திலிருந்து திரும்பும் வழியில் மாண்டுபோனார்கள். அவர்கள் தென் துருவத்தினை அடைவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்னர் 1911 திசம்பர் மாதம் 14-ஆம் நாள், ஆமுன்சன் (Amundsen) என்னும் நார்வேக்காரர் தென்துருவத்தை அடைந்துவிட்டார். முதலாம், இரண்டாம் உலகப் பெரும்போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில், பன்னாட்டு ஆய்வுக் குழுக்கள் அண்டார்க்டிகா ஆய்வினைத் தொடர்ந்தன. அமெரிக்கர்களான இலிங்கன் எல்சுவர்த் (Lincoln Ellsworth) என்பாரும் இரிச்சர்டு பைர்டு (Richard Byrd) என்பாரும் இதில் குறிப்பிடத்தக்கவர்கள், அவர்களுடன் சார்சு வில்கின்சு, (George Wilkins) தக்லசு மவுசன் (Douglas Mowson) போன்ற ஆசுதிரேலியர்களும் வேறுபவரும் இவ்வாய்வுகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் இராசு கடல் எல்லையைக் கடந்து பிற இடங்களிலும் ஆய்வாளர்களின் கவனம் திரும்பியது. இயந்திரப் போக்குவரத்துச் சாதனங்களும் வானவூர்திகளும் பெருமளவில் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்கர்கள் இத்தகைய போக்குவரத்தில் முதலிடம் பெற்றார்கள். 1929–இல் பைர்டும் 1936–இல் எல்சுவர்த்தும் வானவூர்திகளைப் பயன்படுத்திப் பெருமை பெற்றனர். இரண்டாம் உலகப் பெரும்போருக்குப் பின்னர் மீண்டும் அண்டார்க்டிகா ஆய்வுப்பணி தொடங்கியது. அமெரிக்கர்கள், ஆங்கிலேயர்கள், உருசியர்கள் இப்பணியில் மிக்க தீவிரம் காட்டினர். பன்னாட்டு நில உலக இயற்பியல் ஆண்டையொட்டிப் (International Geo-physical year) பல ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. இதில் கண்டம் கடக்கும் வானவூர்தியின் மூலம் அண்டார்க்டிகா வந்தடைந்தது விவியன் பாக்சு (Vivian Fuchs) தலைமையில் வந்த ஆங்கிலக் குழுவாகும். வெட்டல் கடலிலிருந்து தொடங்கிய 3520 கிலோ மீட்டர் தொலைவுள்ள பயணம் 99 நாள்களில் முழுமைபெற்றது. எட்மண்டு இல்வரி (Edmund Hillary) என்னும் நியூசிலாந்துக்காரர் ஆங்கிலேயருக்கு உறுதுணை நின்றார். அண்டார்க்டிகா பயணத்தில் இந்தியாவும் ஈடுபட்டு வருகிறது. இந்தியர் 1984–ஆம் ஆண்டில் நான்காம் பயணத்தை மேற்கொண்டனர். 1981–ஆம் ஆண்டு திசம்பர் மாத முதல் வாரத்தில் கோவாவிலிருக்கும் மர்மகோவாத் துறைமுகத்திலிருந்து முதல் ஆய்வுக்குழு புறப்பட்டது. இந்தியப் பயணிகள், அண்டார்க்டிகாவில் ‘தட்சிண’ கங்கோத்திரி என்னுமிடத்தில் தங்கள் முகாமை அமைத்து ஆய்வுகளை நடத்தினர். இந்திய அரசின் பெருங்கடல் வளர்ச்சித்துறையினர் 1982–83–ஆம் ஆண்டுகளில் இரண்டாம் பயணத்திற்கு ஏற்பாடுகள் செய்தனர். அதன் தலைவராக வி.கே. இரெய்னா (V.K. Raina) என்பார் தேர்ந்தெடுக்கப் பெற்றார். 1983–84–ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாம் பயணம் மேற்கொள்ளப்பட்டது. அங்கு நிலையானதொரு ஆய்வு நிலையத்தைக் கட்டி, ஆண்டு முழுவதும் இந்திய அறிவியல் வல்லுநர்கள் ஆய்வு நடந்த வேண்டுமென்பது உறுதியாயிற்று. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 284 |bSize = 480 |cWidth = 263 |cHeight = 145 |oTop = 420 |oLeft = 124 |Location = center |Description = }} {{center|ஊர்விலிக் கடல்}} {{nop}}<noinclude></noinclude> 4wd9z0yqgsvhosgw58s41h40aukgkqo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/285 250 619371 1834726 2025-06-23T14:48:20Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 285 |bSize = 480 |cWidth = 315 |cHeight = 128 |oTop = 44 |oLeft = 70 |Location = center |Description = }} {{center|வானிலை ஆய்வு நிலையம்}} டாக்டர் பி.பி. பட்டாச்சாரியா என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1834726 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அண்டார்க்டிகா|249|அண்டார்க்டிகா வட்டம்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 285 |bSize = 480 |cWidth = 315 |cHeight = 128 |oTop = 44 |oLeft = 70 |Location = center |Description = }} {{center|வானிலை ஆய்வு நிலையம்}} டாக்டர் பி.பி. பட்டாச்சாரியா என்பாரின் தலைமையில் ஒருகுழு 1984–ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 3–ஆம் நாள் மர்மகோவாவிலிருந்து 82 பேர்களுடன் புறப்பட்டுச் சென்றது. இதில் பங்கு பெற்றவர்களில் பெரும்பாலோர் முப்படைகளைச் சார்ந்தவர்கள். இப்பயணக் குழுவினர் தட்சிண கங்கோத்திரிக்குத் தெற்கே 100 கி.மீ. தொலைவில் மூன்று குடிசைகளைக் கட்டி அவற்றிற்கு ‘மைத்ரி’ என்று பெயரிட்டார்கள். இப்பயணத்தை மேற்கொண்டவர்களில் பெரும்பாலோர் தாயகம் திரும்பிவிட்டார்கள். இந்திய அரசின் பெருங்கடல் வளர்ச்சித் துறையின் செயலாளரான டாக்டர் எசு. இசர்டு. காசீம் (Dr. S.Z. Kasim) என்பார், அண்டார்க்டிகா ஆய்வுக்காக இந்திய அறிவியல் வல்லுநர்கள் பத்தாண்டுத் திட்டமொன்றைத் தீட்டியுள்ளதாக அறிவித்துள்ளார். அண்டார்க்டிகாவின் மொத்தப் பரப்பளவு 1,42,00,000 சதுரக் கிலோ மீட்டர்களாகும். தென் துருவத்தைச் சுற்றிச் சுற்றிப் பரவியுள்ள அண்டார்க்டிகாவின் நிலப்பரப்பு முழுதும் பனிக்கட்டி படர்ந்துள்ளது. பனிக்கட்டியின் பருமன் 3000 மீட்டர் ஆகும். அண்டார்க்டிகாவை இரு துணைக்கண்டங்களாகப் பிரிக்கலாம். பரப்பில் பெரிதான பகுதியைக் கிழக்கு அண்டார்க்டிகாவென்றும் மற்றதை மேற்கு அண்டார்க்டிகா என்றும் கூறலாம். கிழக்கு அண்டார்க்டிகா உயர்ந்த மேட்டு நிலங்களைக் கொண்டுள்ளது. மேற்கு அண்டார்க்டிகா பனி உறைந்த தீவுக் கூட்டங்களைக் கொண்டது. அண்டார்க்டிகாவில் திமிங்கிலங்களும் கடல்நாய்களும் உள்ளன. இக்கடல் நாய்களைச் சீல்கள் (Seals) என்பர். பென்குவின் (Penguin) என்னும் பறவைகள் இங்கு மிகுதியாக உள்ளன. அண்டார்க்டிகாவில் உறைந்து கிடக்கும் பனி உருகுமாயின் கடல்நீர் மட்டம் ஏறத்தாழ 67 மீட்டர் உயர்ந்துவிடும், அதனால் உலகத் துறைமுகங்களும் கடற்கரைத் தாழ்நிலங்களும் மூழ்கிவிடலாம். {{larger|<b>அண்டார்க்டிக்காப் பெருங்கடல்</b>}} என்பது பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றின் தென் பகுதிகளையும் குறிப்பதாகும். ஏனெனில், இம்மூன்று கடல்களும் அண்டார்க்டிகா (Antarctica)வைச் சூழ்ந்துள்ளன. ஏனைய கண்டங்களின் நிலப் பரப்பிலிருந்து அறுபடாமல் அண்டார்க்டிக்குப் பெருங்கடலின் (Antarctic Ocean) குறுகிய இடுக்காக அமைவது திரேக்கு (Drake) நீர்வழியாகும். இந்நீர்வழி 1112 கி.மீ. அகலமுடையது. இப்பெருங்கடலில் நில அமைப்பில் கண்டத்திட்டு ஒன்று உள்ளடங்கியுள்ளது இதனை வெட்டல், இராசு (Weddell & Ross) கடல்களுக்கு அருகில் காணலாம். இதற்கு வடக்கில் அமைந்துள்ள பகுதிகள் 4500 மீ. ஆழமுள்ளவை. மலை முகடுகள், மேட்டு நிலங்கள், கடல் அகழிகள் போன்ற பல இயற்கைக் கூறுகளை அண்டார்க்டிகாவில் காணலாம். அண்டார்க்டிகாவின் நீரோட்டங்கள் சிக்கல் நிறைந்தவை. இங்கிருந்து பாய்ந்து வரும் குளிர்ந்த நீரோட்டம், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து தெற்காகப் பாயும் வெப்ப நீரோட்டங்களுடன் கலக்கிறது. இவ்விருவகை நீரோட்டங்களும் சந்திக்குமிடத்தில் ஓருயிர்மக் (Single Cell) கொடிகள் வளரும். இக்கடலின் அடியில் பல வகையான மீன்களும் பிற நீர்வாழ் இனங்களும் வாழ்கின்றன. அண்டார்க்டிக் பெருங்கடலைத் தென் பெருங்கடல் (Southern Ocean) என்றும் கூறுகிறார்கள். {{larger|<b>அண்டார்க்டிக்கா வட்டம்</b>}} என்பது உலக உருண்டையையொட்டி இணையாக 66½ பாகையில் அமைந்துள்ள தென் குறுக்குக்கோட்டைக் குறிப்பதாகும். உலக உருண்டை அதன் அச்சில் சாய்ந்திருப்பதால் ஆண்டிற்கு ஒரு நாள், அதாவது திசம்பர் 22-ஆம் நாள் சூரியன் மறைவதில்லை. அவ்வாறே<noinclude></noinclude> in4uha3jsakn8g15ye1bujaxmp9ocsx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/286 250 619372 1834746 2025-06-23T15:09:12Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சூன் 21–ஆம் நாள் சூரியன் தோன்றுவதுமில்லை. தொடர்ந்து பகலாகவோ இரவாகவோ இருக்கும் நாட்களின் நீட்சி தெற்கே செல்கையில் மாறுபடுகிறது. அண்டார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1834746 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அண்டிரன்|250|அண்டைப்பள்ளி}}</noinclude>சூன் 21–ஆம் நாள் சூரியன் தோன்றுவதுமில்லை. தொடர்ந்து பகலாகவோ இரவாகவோ இருக்கும் நாட்களின் நீட்சி தெற்கே செல்கையில் மாறுபடுகிறது. அண்டார்க்டிக் வட்டத்தில் (Antarctic Circle) ஒரு நாளாக இருப்பது தென் துருவத்தில் ஆறு மாதமாக உயருகிறது. தென் துருவம், அண்டார்க்டிகா கண்டத்தின் பனிப்பாறைகள் நிறைந்த மேட்டு நிலத்தில் அமைகிறது. அண்டார்க்டிக் வட்டத்தை முதன் முதலாக கேப்டன் சேம்சு குக் (Capt. James Cook) என்பார் கி.பி. 1773–ஆம் ஆண்டு சனவரி மாதம் 17–ஆம் நாள் கடந்தார். {{larger|<b>அண்டிரன்</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னனும் வள்ளலும் ஆவான். இவன் ஆய் எனவும் ஆய் அண்டிரன் எனவும் வழங்கப்பெற்றான்; வேளாளர் மரபினன்; சுரபுன்னை மாலை சூடியவன். இவனது ஊர் பொதிகை மலைக்கருலுெள்ள ஆய்குடியாகும். கடையெழு வள்ளல்களுள் ஒருவன். நீல நாகம் நல்கிய ஆடையினை, ஆலமர் செல்வராக விளங்கும் சிவபெருமானுக்கு உவந்து அளித்தான் என்று சிறுபாணாற்றுப்படை இவனைப் புகழ்கிறது. இவன் நாட்டில் யானைகள் மிக்கிருந்தன. அதனால், இரவலர்க்கு இவன் வழங்கிய யானைக் கொடையினை வியந்து, ‘வழைப்பூங்கண்ணி வாய் வாள் அண்டிரன் குன்றம் பாடின கொல்லோ, களிறுமிகவுடைய இக்கவின்பெறு காடே’ என்று இவனை முடமோசியார் பாராட்டியுள்ளார் (புறம். 131), மேலும், வடதிசையிலுள்ள இமயத்திற்கு ஒப்பாகத் தென் திசையில் ஆய்குடி இல்லாது போனால் உலகம் பிறழ்ந்துவிடுவது உறுதி என்று கூறுவதன் வாயிலாக, இவனுடைய ஆட்சிச் சிறப்பையும் ஊர்ப்பெருமையையும் புலப்படுத்தியுள்ளார். ‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன்’ அல்லன் இவன். தனது வீரத்தால் கொங்கரைக் குடகடல்வரை விரட்டியவன். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், காரிக் கண்ணனார், உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார், துறையூர் ஓடைகிழார், குட்டுவன் கீரனார், பரணர் ஆகியோர் இவனைப் பாடியுன்னனர் (நற். 237; அகம். 69, 152, 198; புறும். 127–136; 240, 241, 374, 375). {{larger|<b>அண்டைப்பள்ளி:</b>}} இது தரமான கல்வி அளிக்க வகை செய்யும் ஒரு திட்டமாகும், பல்வேறு சமூகங்களையும் குழுக்களையும் ஒன்றுபடுத்தி, எல்லோரும் சமமென்னும் உணர்ச்சியை வளர்க்க வேண்டும் என்பது அண்டைப்பள்ளித் (Neighbourhood School) திட்டத்தின் நோக்கம். இது கோத்தாரி கல்வி ஆய்வுக் குழுவின் (1964-66) பரித்துரைகளுள் ஒன்றாகும். கல்வி, சமூக, தேசிய ஒருமைப்பாட்டிற்கு அடிகோலும் ஒரு கருவியாக அமைய வேண்டும். மாறாக, இன்றைய கல்விமுறை பல வகைகளில் சமூக ஒதுக்கத்தையும் (Segregation), வகுப்பு வேறுபாடுகளையும் வலுப்படுத்துவதைக் காணமுடிகிறது. பொதுத் துறையில் கட்டணம் செலுத்தத் தேவையில்லாத, பெரும்பாலும் குறைந்த வசதிகளுள்ள பள்ளிகளே உள்ளன. ஆனால், தனியார் துறையில் அதிக வசதிகளுடன் கூடிய அதிகக் கட்டணம் விதிக்கும் பள்ளிகளும் உள்ளன. செல்வர் அதிகப் பணம் செலவிட்டுத் தம் குழந்தைகளுக்கு இத்தகைய அரிய கல்வி வசதிகளைப் பெற்றுத் தர முடிகிறது. ஆனால் திறமை மிக்க ஏழைக் குழந்தைகளுக்கு இவ்வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவர்கள் தம் வீட்டிற்கு அருகிலுள்ள குறைந்த வசதியுள்ள பள்ளிகளிலேயே பயிலமுடிகிறது. இக்குறையைப் போக்குவதற்கு ஒரு பொதுவான, தரமான பள்ளியமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதில் சாதி, சமயம், பொருளாதார ஏற்றத்தாழ்வு முதலியவற்றை நோக்காது, எல்லாக் குழந்தைகளும் இடம் பெற வேண்டும், சிறந்த கல்வி வாய்ப்புகள் பெற்றோரின் வருவாயின் அடிப்படையில் அன்றி, குழந்தைகள் திறமையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்; அனைத்துப் பொதுப் பள்ளிகளும் தரமுள்ளவையாக எளியவரும் அணுகும் முறையில் அமைய வேண்டும். இத்தகைய தரமான பொதுப் பள்ளி அமைப்பே, சோவியத்து உருசியா முதலிய நாடுகள் மிக விரைவில் முன்னேற்றமடையத் துணைபுரிந்தது. அமெரிக்கா, பிரான்சு முதலிய நாடுகளில் வன்மையுள்ள தனியார் துறை இருந்த போதிலும் தரமான பரந்த பொதுப்பள்ளி அமைப்பும் உள்ளது. கல்வியில் பிளவு, ஒதுக்கம் ஆகிய குறைகளைத் தவிர்ப்பதற்காகக் கல்வி ஆய்வுக்குழு, அண்டைப்பள்ளிகள் அமைப்பை முதலில் தொடக்க நிலையிலும் பின் இடைநிலையிலும் உருவாக்க வேண்டுமெனப் பரிந்துரைத்தது. இதன்படி அனைத்துப் பள்னிகளிலும், அண்டையிலுள்ள எல்லாப் பிள்ளைகளும், சாதி, சமய, சமூக–பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் முதலிய வேறுபாடின்றிச் சேர்க்கப்பட வேண்டும். அண்டைப் பள்ளியமைப்பு, சமூக தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்குத் துணை புரிவது மட்டுமன்றி, வேறு இரண்டு வகைகளிலும் பயன்படுகிறது. (1) இம்முறை, கற்கும் குழந்தை பொது வாழ்க்கையில் பங்கு பெறத் துணை புரிகிறது. பொதுமக்கள் தொடர்பு நற்கல்வியில் ஓர் இன்றியமையாத கூறாகும். (2) இத்தகைய பள்ளியமைப்பு செல்வரையும் சமூகத்தின் உயர்மட்டத்திலுள்ளோரையும் சமூக<noinclude></noinclude> qd4bjo9s9mttzjfv4a0wx64c8gy68sc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/287 250 619373 1834757 2025-06-23T15:27:59Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆற்றல் மிக்கோரையும் பொதுக் கல்வியின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளத் தூண்டும். அண்டைப்பள்ளித் திட்டத்தை இரண்டு படிகளில் நடைமுறைப் பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1834757 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அண்டையம்|251|அண்டையம்}}</noinclude>ஆற்றல் மிக்கோரையும் பொதுக் கல்வியின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளத் தூண்டும். அண்டைப்பள்ளித் திட்டத்தை இரண்டு படிகளில் நடைமுறைப் படுத்தலாம் என்று கல்வி ஆய்வுக்குழு பரித்துரைத்தது. முதல் 10 ஆண்டுகளில் எல்லாத் தொடக்கப்பள்ளிகளையும் ஒரு குறைந்த அளவு தரத்தையாவது எய்துமாறு உயர்த்த வேண்டும். அவற்றுள் 10 விழுக்காட்டுப் பள்ளிகளை மேலும் உயர்ந்த நிலை எய்துமாறு செய்ய வேண்டும். அதே சமயம் அண்டைப் பள்ளித்திட்டத்தை ஒரு முன்னோடிச் செயல் திட்டமாகச் சில இடங்களிலாவது நடைமுறைப்படுத்த வேண்டும். 20 ஆண்டுகளுக்குள் இத்திட்டம் எல்லா இடங்களிலும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். கல்வி ஆய்வுக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழிந்து விட்டன. தொடக்க கல்விமுறையில் சில சீர்திருத்தங்கள் ஏற்பட்டுள்ளபோதிலும், பொதுப் பள்ளிகள் தரம் மனத்தில் குறைந்தவை என்ற எண்ணமே மக்கள் பதிந்துள்ளது. இதனால் சிறு பிள்ளைகள் தனிச் சீருடை அணிந்துகொண்டு அண்டையிலுள்ள பள்ளியைப் புறக்கணித்துவிட்டு, நகரின் ஒரு முனையிலிருந்து மறு முனைவரை மிகுந்த இன்னல்களைப் பொறுத்துக் கொண்டு செல்வதைக் காணலாம். இக்குறையை ஆய்ந்து அதனைக் களைய வேண்டியது இன்றைய கல்வியின் உடனடித் தேவையாகும். {{larger|<b>அண்டையம்</b>}} என்பது மனிதர்கள் குறிப்பிட்ட சில பழக்கங்களிலும் வரன் முறைகளிலும் ஒரே தன்மையுடையவர்களாகி நெருங்கிய இடையுறவுகள் கொண்டு வாழும் ஒரு நிலப்பரப்பைக் குறிக்கும். அண்டையத்தை (Neighbourhood) வட்டாரக் குழுமம் (Local Community) என்றும் கூறலாம். சமூகவியலார் அண்டையத்தை இடக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்கின்றனர். ஊரகங்களில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்கள் ஒருவரோடு ஒருவர் இடையுறவும் இடைச் சார்பும் கொண்டு வாழும் குறுகிய நிலப்பரப்புகளைப் பெர்டினண்டு தானிசு (Ferdinand Tonnies) என்னும் செருமானியச் சமூகவியலறிஞர், குழுமம் (Gemeinshaft) என்னும் நகர்ப்புறங்களில் மக்கள் நெருங்கி வாழும் இடங்களைச் சமூகங்கள் (Geselshaft) என்றும் குறிப்பிடுகிறார், ஊரகக் குழுமங்களில் ஒருவரை மற்றவர் நன்கு அறிந்திருக்கின்றனர். ஒருவரின் இன்பதுன்பங்களில் அண்டை அயலார் பங்கு கொள்கின்றனர். ஊரகத் தலைமை ஒருவரிடம் (பண்ணையார்) அமைந்துள்ளது. தலைவரும் குழுமத்தினரும் அண்டையராக வாழ்கின்றனர். நகர்ப்புறங்களில் ஊரகங்களைப்போல் அண்டையத்தை எளிதில் அடையாளங் கண்டுகொள்வது இயலாது. நகரங்களில் வாழும் குடும்பத்தினர் அடுத்திருக்கும் குடும்பங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் மிக்க ஆர்வம் கொள்வதில்லை. தம் குடும்பம், தம் தொழில், தம் முன்னேற்றம் என்னும் நினைவுடன் மட்டுமே செயல்படுகின்றனர். தமக்கு வேண்டிய தேவைகளைத் தாமாகவே நிறைவேற்றிக் கொள்ளப்பல வாய்ப்புகள் நகரங்களில் இருப்பதால் அண்டையில் வாழ்பவர்களை அவர்கள் பெரும்பாலும் சார்ந்திருப்பதில்லை. இதனால், அவர்களுக்குன் நெருங்கிய உறவு ஏற்படுவதில்லை. தொழில், வாழ்க்கை வாய்ப்புகள் போன்றவற்றை முன்னிட்டு அடிக்கடி வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்து செல்வதும் இதற்குக் காரணமாக அமைகிறது. அண்டையத்தில் வாழும் குடும்பங்களுக்கிடையில் நிலவும் உறவு தனிப்பட்டதாக, நெருக்கமானதாக நேருக்கு நேரானதாக இருந்த போதிலும், அது ஓர் ஒருங்கிணைக்கப்படாத அமைப்பாகும் என்று சாண்டர்சன் குறிப்பிடுகிறார். ஆயினும், அக்குடும்பங்கள் ஒன்றுக்கொன்று தனித் தன்மையுடன் பழகிக் கொள்வதை அறியலாம். இதனால், அண்டைய உணர்வு என்பது சுற்றுச் சூழல் நல்லுறவை வளர்ப்பதோடு, குடும்பங்கள் தனித்தன்மையுடன் விளங்குவதற்கும் காரணமாக இருக்கிறது. மக்கள் பல காரணங்களை முன்னிட்டு ஒரே நிலப் பரப்பில் வாழ்கின்றனர். ஊரக அண்டையத்தினரிடையே ஏற்படும் இடையுறவுகள், அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்திருக்க உதவி செய்கின்றன. இத்தகைய இடையுறவுகளும் இடைச்சார்புகளும் (Interdependence) இயல்பான சமூக நிகழ்வுகளாக அமைகின்றன. இத்தகைய சமூக நிகழ்வை ஒமன்சு (Homang) என்னும் சமூகவியலார் ‘சமூக உபரி’ (Social Surplus) என்று குறிப்பிடுகின்றார். அண்டையங்கள் முதனிலைக் குழுக்கள் எனப்படுகின்றன. இவை ஒரே இடத்தில் நிலைத்து வாழ்கின்றன. அண்டையத்தில் இருப்பவரிடையே மனப்பான்மைகளும், பிரச்சினை – அணுகு முறைகளும் ஒரே விதமாக இருக்கின்றன. இவ்வாறு முதனிலைக் குழுக்களின் தலைசிறந்த இயல்புகளே, அண்டையத்தின் இயல்புகளாக அமைகின்றன என்று ஒமன்சு குறிப்பிடுகின்றார். 20–ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் தொழில், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அண்டையத்தினரின் சிறப்புத் தகுதிகளைப் பெரிதும் குறைத்துவிட்டது, தொழில் மயமாதலின் விளைவாக ஊரக மக்கள் பெருமளவில் நகர்ப் புறங்களில் சென்று குடியேறியுள்ளர். ஊரக அண்டையத்தினரின் மீது ஊரகத் தலைவர் கொண்டிருந்த தனி அதிகாரம் மறைந்து விட்டது. நகர்ப்<noinclude></noinclude> om0jn5tfe400t8de8bghgd7msv4p3dg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/288 250 619374 1834759 2025-06-23T17:03:23Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "புறங்களில் மக்கள் குறுகிய, அண்டையத்தின் பகுதியினராக இருப்பதைக் காட்டிலும் விமிந்த தேசிய அளவிலான அண்டையத்தின் உறுப்பினராக இருப்பதை வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1834759 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அண்டோரா|252|அண்ண ஒலிப்படக் கருவி}}</noinclude>புறங்களில் மக்கள் குறுகிய, அண்டையத்தின் பகுதியினராக இருப்பதைக் காட்டிலும் விமிந்த தேசிய அளவிலான அண்டையத்தின் உறுப்பினராக இருப்பதை வெறுக்கின்றனர். அண்டையங்களின் தனிப்பட்ட வரன்முறைகளும் குழுமங்களும் (Archetypal Community) ஏற்படுகின்றன. சில நகர்ப்புற அண்டையங்களில் ஒரு மனிதன் தன் வீட்டிற்குச் செல்லும் பாதை அல்லது தெரு மட்டுமே அவனுக்குத் தன் அண்டையத்தை உணர்த்துவதாக இருக்கலாம். ஆயினும் நெருக்கமான நகர்ப்புற மையப் பகுதிகளின் அண்டைய அமைப்புக்கும் நகர எல்லைப் புறங்களில் இருக்கும் அண்டைய அமைப்புக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. முன்னர்க் கூறிய அண்டையம் மிகக் குறைந்த இடைச் சார்பு கொண்டதாக அமைந்துள்ளது. பின்னர்க் குறிப்பிட்டது இதனைக் காட்டிலும் நெருங்கிய இடைச் சார்பும் இடை உறவும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.{{float_right|கோ.க.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Chitambar, J.B.,</b> “Introductory Rural Sociology; A Synopsis of Concepts and Principles,” Wiley Eastern Ltd., New Delhi, 1976. <b>Gore, M.S.,</b> “Immigrants and Neighbourhoods”, Tata Institute of Social Sciences, Bombay, 1970. <b>Maclver, R.M. and C.H. Page,</b> “Society, Holt Rinehart and Winston”, New York, 1961. அண்டோரா மேற்கு ஐரோப்பாவில் பிரான்சு நாட்டிற்கும் இசுபெயின் (Spain) நாட்டிற்கும் இடையிலுள்ள தன்னாட்சி நாடு, பிரான்சு நாட்டு அதிபரும், உர்கெல் (Urgel) என்னும் பகுதியின் இசுபானியப் பேராயரும் கூட்டாக இணைந்து ஆளும் ஆட்சிப் பகுதி. அண்டோரா (Andorra)வின் வடக்கிலும் கிழக்கிலும் ஆரீச (Ariege) மாவட்டம் உள்ளது. தெற்கில், இலெரிடா (Lerida) உள்ளது. மலைத் தொடர்களின் மூலமும் கணவாய்களின் மூலமும் வளைந்து செல்லும் சாலைகள் உள்ளன. இந்நாட்டின் பரப்பளவு 464 ச.கி.மீ. அண்டோரி-லா-வெயிலி (Andorre-La-Vieille) இதல் தலைநகர். கடும் குளிரும் குளிர்ந்த கோடையும் இங்குள்ள தட்பவெப்ப நிலையாகும். மக்களுள் பெரும்பாலோர் இசுபானிய மரபினர்; உரோமன் கத்தோலிக்கர்; கடலான் (Catalan) மொழி பேசுபவர், சிறப்பான விளைபொருள் புகையிலை. இதன் அரசாங்கம் 24 பேர் கொண்ட குழு {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 288 |bSize = 480 |cWidth = 177 |cHeight = 220 |oTop = 61 |oLeft = 284 |Location = center |Description = }} {{center|அண்டோரா}} ஒன்றினால் நடத்தப்படுகிறது. 1970–இல் மகளிர் வாக்குரிமை பெற்றனர். மக்கள் தொகை 38,051 (1982). {{larger|<b>அண்ண ஒலிப்படக் கருவி:</b>}} இது கருவி ஒலியியலில் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கருவி ஒலிப்பான், ஒலிப்பு முறை ஆகியவைகளுக்கிடையே ஏற்படும் தொடர்பினைத் துல்லியமாக அறிவியல் அடிப்படையில் அறிந்து கொள்ளப் பெரிதும் பயன்படுகிறது. குறிப்பாக நாக்கு, வல்லண்ணம் ஆகிய இரண்டிற்கும் இடையே உச்சரிப்பின் போது ஏற்படும் உறவை ஆய்வு செய்வதற்கு இது பயன்படுகிறது. இவ்வாய்வு இரு முறைகளாகச் செயல்படுத்தப்படுகிறது. ஒன்று, சுரியும் சாக்லேட்டும் கலந்த ஒரு கலவையை நேரடியாக நாக்கு அல்லது அண்ணத்தில் பூசுவது, இது இயற்கை முறை அல்லது நேரடி முறை எனப்படும். இரண்டு, செயற்கையாகச் செய்யப்பட்ட ஓர் அண்ணத்தினை வல்லண்ணத்தோடு ஒட்ட வைத்து, அதில் தொடர்பினைப் பதிய வைப்பது. இது செயற்கை அல்லது சுற்று முறை எனப்படும். இம்முறைகளின் வழியே நாக்கிற்கும் அண்ணத்திற்கும் இடையே ஏற்படும் உறவு தெளிவாகப் பதிவு செய்யப்பட முடியும். அதன் விளைவாக நமக்குக் கிட்டுகின்ற படமே அண்ண ஒலிப்படக் கருவி (Palatography) ஆகும். பற்களின் அடிப்படையில் அண்ணத்-<noinclude></noinclude> rcpeyt6whioamgsijna6he164jzzcon பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/289 250 619375 1834760 2025-06-23T17:23:38Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 289 |bSize = 480 |cWidth = 438 |cHeight = 218 |oTop = 58 |oLeft = 5 |Location = center |Description = }} {{center|அண்ண ஒலிப்படம்}} தைக் கீழ்க்கண்ட பகுதிகளாகப் பிரித்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1834760 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அண்ண ஒலிப் படக் கருவி|253|அண்ணன்மார் சுவாமி கதை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 289 |bSize = 480 |cWidth = 438 |cHeight = 218 |oTop = 58 |oLeft = 5 |Location = center |Description = }} {{center|அண்ண ஒலிப்படம்}} தைக் கீழ்க்கண்ட பகுதிகளாகப் பிரித்து ஒலிப்படத்தைப் புரிந்து கொள்வது எளிது. ‘Very’ என்ற ஆங்கிலச் சொல்லை உச்சரிக்கும்போது எடுக்கப்பட்ட அண்ண ஒலிப்படம்: {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 289 |bSize = 480 |cWidth = 164 |cHeight = 170 |oTop = 345 |oLeft = 25 |Location = center |Description = }} இவ்வொலிப் படங்கள் இதழ் ஒலி, கடையண்ண ஒலி அல்லாத ஏனைய ஒலிகளுக்கான உச்சரிப்பு முறைகளை மட்டுமே புரிந்து கொள்வதற்குப் பயன்படுகின்றன. இதழ் ஒலி, கடை அண்ண ஒலி ஆகியவற்றின் உச்சரிப்பு முறையைப் புரிந்து கொள்வதற்கு இக்கருவி பயன்படாது.{{float_right|தா.வ.}} {{larger|<b>துணை நூலகள்:</b>}} <b>Firth, J.R.,</b> “Improved techniques in Palatography and Kymography”, (Linguistics 1934–1951), Oxford, 1957. “Word Palatograms and Articulation”, in (Linguistics 1934-1951), Oxford, 1957. <b>Strenger, F.,</b> Radiographic Palatographic and Labiographic methods in Phonetics, in Malmberg, B.(Ed.) Manual of Phonetics Amsterdam, 1968. {{larger|<b>அண்ணன்மார் சுவாமி கதை</b>}} என்பது கதையைப் பாடலாகக் கூறும் கதைப்பாடல் வகையினைச் சார்ந்தது. கதைப் பாடல்கள் நாட்டுப்புற மக்களால் பாடப்படுவதற்காகவே அமைந்தனவாகும். தமிழகக் கதைப்பாடல்களைப் புராணக்கதைப் பாடல்கள் வரலாற்றுக் கதைப்பாடல்கள், சமூகக் கதைப்பாடல்கள் என மூன்று பிரிவுகளாகப் பகுக்கலாம். இவற்றுள் ‘அண்ணன்மார் சுவாமி கதை’ வரலாற்றுக் கதைப்பாடலாகும். இக்கதை கொங்கு நாட்டு வாழ்வையும் வரலாற்றையும் படம் பிடித்துக் காட்டுகிறது. இதற்குக் ‘குன்றுடையான் கதை’ என்னும் பெயரும் உண்டு. கள்ளழகர் அம்மானை என்னும் நூலும் இதனையே விவரிக்கின்றது. இந்நூல் பெரியக்காண்டி அம்மனைக்<noinclude></noinclude> q7akdtis2fcx5m0ow43rx2ubdksnwhg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/290 250 619376 1834761 2025-06-23T17:49:29Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குல தெய்வமாகக் கொண்டு வாழ்ந்த வேளாண்குடியில் பிறந்த குன்றுடையானுக்கும், அவன் குடும்பத்தாருக்கும் உறவினர் செய்தபல இன்னல்களையும், அவற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1834761 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அண்ணன்மார் சுவாமி கதை|254|அண்ணன்மார் சுவாமி கதை}}</noinclude>குல தெய்வமாகக் கொண்டு வாழ்ந்த வேளாண்குடியில் பிறந்த குன்றுடையானுக்கும், அவன் குடும்பத்தாருக்கும் உறவினர் செய்தபல இன்னல்களையும், அவற்றை நீக்கக் குலதெய்வம் அருள் செய்த நிகழ்ச்சியையும் வரலாறாகக் கூறுகிறது. குன்றுடையானும் அவன் மனைவி தாமரையும் பட்ட இன்னல்களும், அவனை அடுத்துக் கெடுக்க அவனது உறவினர் செய்த கொடுமைகளும் பலப்பலவாகும். ‘பாம்புக்குப் பல்லிலே விடம்; பங்காளிக்கு உடம்பெல்லாம் விடம்’ என்னும் பழமொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது இக்கதைப் பாடல், குன்றுடையானின் உறவினர் அவனொடு உறவாடிக் கொண்டே பல தீங்குகளைச் செய்தனர். அவனது திருமணத்தை நிறுத்த முயன்றனர். விதைப்பதற்கு வறுத்த விதைச் சோளத்தைக் கொடுத்தும் தோட்டத்தைப் புழுதி உழவு செய்தும் பாழாக்கினர். அவர்கள் எண்ணத்திற்கு மாறாகத் தோட்டம் செழித்து வளர்ந்ததைக் கண்டு உறவினர் பொறாமை கொண்டனர். வறுத்த சோனம் கொடுத்தோமே மங்கு மசையனுக்கு ‘வறுத்த சோளப்பயிறு வளர்ந்து வந்து நிற்குது பார்’ என்று கூறி அப்பயிரை அழிக்க உழுதனர். அன்று பெய்த மழையால் உழுத பயிர் இளைத்துச் சோளத் தட்டையில் முத்து விளைந்தது. குன்றுடையானுக்கும் தாமரைக்கும் பொன்னர், சங்கர், தங்கம் என்ற மூவர் பிறந்தனர். தாய், தான் பட்ட துன்பங்களையும், தான் செய்த சூளுரையையும் குழந்தைகளுக்குக் கூறி, அதனை முடிக்குமாறு பணித்தாள். அவள் சூளுரையின்படி அண்ணன்மார் இருவரும் பங்காளிகளைப் பழிவாங்கினர், பெற்றோர் மறைவிற்குப் பின், பொன்னர், சங்கர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தாயின் சூளுரையை நிறைவேற்ற மணப்பெண்களைச் சிறை வைத்தனர். இவர்களின் தங்கை தங்கம், நற்குண மிக்கவள்; எதனையும் சிந்தித்துச் செயலாற்றக் கூடியவன். வேடுபடைத் தலைவன் தலையூர்க்காளி, அண்ணன்மார் நாட்டைச் சார்ந்த நன்னாட்டைத் தாக்கினான். பச்சனா முதலி மகள் குப்பாயி என்னும் பெண்ணையும் சிறையெடுத்துச் சென்றான். பொன்னர் சங்கருடன் சென்று வேடுபடையைச் சந்தித்துக் குப்பாயியைச் சிறைமீட்டு வந்தனர். வேங்கைபோல் நிற்கும் சங்கர் முன், வேடுபடை வெள்ளாட்டுக் கூட்டமாகியது. உண்மை கூறிப் பொன்னர் தட்டான் பின் போனது, சங்கர் மடிந்து களமானது, அத்தை பிள்ளை, மைத்துனர்கள், சாம்பான் ஆகிய அனைவரும் மடிந்தது ஆகிய அனைத்தும் வேதனைமிக்க நிகழ்ச்சிகளாயின. அண்ணன்மாரைத் தேடிச் செல்ல அண்ணிமார்களைத் துணைக்கழைத்தாள் தங்கம். திருமணம் என்ற சடங்கைத் தவிர எந்தவித இன்பத்தையும் அறியாத அண்ணிமார்கள் அவளுடன் செல்ல மறுத்துக் கதவைச் சாத்தித் தாளிட்டனர். அண்ணிமார் வரமறுக்கவே, தங்கை தனியாகக் காட்டினிடையே அண்ணன்மாரைத் தேடிப் புறப்பட்டாள். பெரியக்காண்டி அம்மன் அருள் கிட்டியது. அண்ணன்மாரைப் பார்த்து அழுது புலம்பினாள். பெரியக்காண்டி அம்மன் அவளுக்கு ஆறுதல் கூறி இறந்தவரை எழுப்பி அமரநிலை அளித்து அருள்பாலித்தாள். அதன்பின், அண்ணன்மார் தெய்வமாகி மக்கள் வழிபடும் நிலையெய்தினர். வீரப்பூர், மோழியப்பள்ளி, செம்மடை முதலிய இடங்களில் அண்ணன்மார் தெய்வமாய் நிலை பெற்றிருப்பதாக இக்கதைப் பாடல் கூறுகிறது. அண்ணன்மார் சுவாமி கதையைப் பாடகன் உடுக்கையடித்துப் பாடுவதும், மக்கள் அதனைக் கேட்டு நெஞ்சுருகி நிற்பதும் கொங்கு நாட்டில் இன்றும் வழக்கமாக இருந்துவருகிறது. இக்கதை கி.பி. 13–ஆம் நூற்றாண்டிலோ அதற்குப் பின்னரோ நடந்ததாகக் கூறப்படுகிறது. கி.பி. 15–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பிச்சன் என்னும் கவிஞர் இதனை இயற்றியதாகத் தெரிவிக்கும் குறிப்புகள் காணப்படுகின்றன. கருவேல மரத்தில் கட்டி அடித்தல், சாட்டால் பொதியளத்தல் தமுக்கடித்துச் செய்தியை ஊராருக்கு அறிவித்தல், புரவிக்குப் புலிநகச் சங்கிலி அணிவித்தல், பல்லி சொல் கேட்டல், கனவு காணல், பல்லாங்குழியாடுதல், ஊனான் கொடி பிடுங்கிக் கட்டுதல், தேங்காய் உடைத்துச் சகுனம் பார்த்தல், தாம்பூலம் தரித்தல் போன்ற பல செய்திகள் இக்கதைப்பாடலில் இடம் பெற்றுள்ளன. மேலும், கொங்குநாட்டு மலைகள், ஆறுகள் பற்றிய வருணனைகளும், நாட்டுப்புறக் கலைகளும், அக்கால ஆயுதங்கள் பற்றிய செய்திகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்நூல் கொங்கு நாட்டாரின் விருந்தோம்பற் பண்பினைச் சிறப்புற எடுத்தியம்புகிறது. அந்நாட்டு வட்டார வழக்கினை அறிய இது பெரிதும் பயன்படுகிறது. கதைப்பாடல்களில் பொதுவாகக் காணப்படும் நிமித்தக் கனவுகள் இந்நூலில் தீமை நிகழப் போவதைச் சுட்டிக் காட்டும் முன் அறிகுறிகளாக அமைந்துள்ளன. அண்ணன்மார் சுவாமி கதையில் பொன்னர், சங்கர், சாம்பான், அத்தை பிள்ளைகள் அனைவரும் உயிர் பெற்று எழுகின்றனர். வாழ்ந்த நாள் போதுமென்று வைகுந்தம் போய்ச் சேருகின்றனர். கதைப் பாடல்களில் இறத்தவர் உயிர் பெற்று மீண்டும் எழல் என்பது, ‘உண்மை என்றும் வெல்லும்; நீதி அழியாது’ என்பதைக் காட்டுவதற்கான உத்தியாக அமைக்கப்படுவதாகும். {{nop}}<noinclude></noinclude> al4nhntkchm2ffjx6sksnf29bds66uz பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/343 250 619377 1834789 2025-06-24T03:25:28Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834789 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|330||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>காடிகொண்ட கழுவுறு கலிங்கத்துத் தோடமை தூமடி விரித்த சேக்கை{{float_right|நெடு. 134-35}} அம்மாசூர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு{{float_right|நெடு. 146}} இழைமருங்கறியா நுழை நூற்கலிங்கம் எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ{{float_right|மலை. 561}} கோடிக் கலிங்கமுடுத்து குழல் கட்டி நீடித் தலையை வணங்கி{{float_right|சிலப். 21:32}} நுரையென விரிந்த நுண் பூங்கலிங்கம்{{float_right|சிலப். 22:21}} மையுண்டு கழுமிய மாசுபடு கலிங்கத்திளையோர்{{float_right|பெருங். 1.35:120-21}} பட்டியற் கலிங்கமொடு பாசிழை நல்கி இலைத் தொழிற் றடக்கையள்{{float_right|பெருங். 1.37.156-57}} கருங்காற் கலிங்கமொடு காஅழ் கலக்கி{{float_right|பெருங். 1.37:239}} கலிங்க வட்டியும் கலம் பெய் பேழையும்{{float_right|பெருங். 1.38:285}} அரவிற் பரந்த அல்குல் மீமிசைக் கலாஅய்க் கிடந்த குலாத்தரு கலிங்கம்{{float_right|பெருங். 1.42:140-41}} கற்றோய் கலிங்கம் கட்டிய கச்சையினன்{{float_right|பெருங். 1.46:97}} பையர வல்குற் பவழப்பல்காசு கைபுனை கலிங்கத்து ஐது கலந்து ஒன்றி{{float_right|பெருங். 14.6:259-60}} காடிக் கலந்த கோடிக் கலிங்கம் கழும மூட்டும் நறும் புகை{{float_right|பெருங். 1.54:9-10}} நுரைபுரைக் கலிங்கம் ஒருமுலை புதைப்ப{{float_right|பெருங். 2.5:86}} பானீர் நெடுங்கடல் பனிநாள் எழுந்த மேனீராவியின் மெல்லிதாகிய கழுமடிக் கலிங்கம்{{float_right|பெருங். 2.7:154-6}} கையமைத்தியற்றிய கலிங்கத் துணியினர்{{float_right|பெருங். 3.1:99}} கண்ணெழிற் கலிங்கம் திண்ணென அசைத்து{{float_right|பெருங். 3.9:61}} நுரைவிரித்தன்ன நுண்ணூற் கலிங்கம்{{float_right|பெருங். 3.17:170}} கல்லுண் கலிங்கம் கட்டிய அரையினன்{{float_right|பெருங். 4.7:158}} கல்லுண் கலிங்கம் நீக்கி{{float_right|பெருங். 4.16:33}} உடுத்தாள் கற்றோய் கலிங்கம் உரவோன் சிறுவன் உயர்கெனவே{{float_right|சீவக. 353}}</poem><noinclude></noinclude> fq3vq0wcvg2eaeocz4t07gpoqf92ss1 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/397 250 619378 1834865 2025-06-24T05:56:12Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834865 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|384||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>வாரணி வனமுலை யவரொடென்பவே{{float_right|சூளா. 1879}} வார்புகா முலையினல்லார் மயங்கமர் தொடங்கினாரே{{float_right|சூளா. 1675}} வாரணியிள மென் கொங்கை வாரியுள் வளைத்துக் கொண்டார் மணிவடமும் பொன் நாணும் வார்முலை மேலாட{{float_right|சூளா. 1754}} வாராகி மென் கொங்கை மையரிக்கண் மாதர் வருந்தினா ணங்கையினிவருக வீங்கென்றான்{{float_right|சூளா. 1758}} கொங்கையும் வார் தயங்க{{float_right|மூவரு. 240:1}} பூவை கொங்கை வாராலணைப்ப வருந்தினை{{float_right|தஞ்சை. 44}} இழைவளர் வார்முலையேரிளந் தோகையை{{float_right|தஞ்சை. 50}} வார்திகழ் மென்முலையாளொரு பாகன்{{float_right|பெரிய. திரு. 240}} வாரின் மல்கிய வனமுலையாளுடன் மன்னினார்{{float_right|பெரிய. திருஞான. 955}} வாரின் மல்கிய கொங்கையாள்{{float_right|பெரிய. திருஞான. 969}} வாருமணிய அணியலாம் வளர்மென் முலைகள் இடை வருத்த{{float_right|பெரிய. ஏயர். 209}} வார்கொள் முலையாய்{{float_right|பெரி. ஏயர். 239}} வார்புனையும் வனமுலையார்{{float_right|பெரி. ஏயர். 263}} வாரேறும் முவைமாடவார்{{float_right|பெரி. புகழ்ச்சோழ. 7}} {{larger|<b>வாலிது</b>}} கலத்து முண்ணாள் வாலிது முடாஅள்{{float_right|புறம். 262}} {{larger|<b>வெள்ளை</b>}} மண்மடந்தை தன் சீர்த்தி வெள்ளை சாத்தி{{float_right|கலிங். 14}} {{larger|<b>வெளிது</b>}} வெளிது விரித்துடீஇ{{float_right|புறம்.}} வெளியதுடீஇ என்பகி களைந்தோனே{{float_right|புறம். 385}}</poem> <section end="11"/>{{nop}}<noinclude></noinclude> 0petbilu9i97fwwkcz9sn44hjrmws0c பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/396 250 619379 1834876 2025-06-24T06:07:54Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834876 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||383}}</noinclude><poem>வாரூரும் மென்முலை வார்த்தை கண்டூரு மதிமுகத்தில்{{float_right|நந்திக். அதிகம். 21}} வார் தந்த வனமுலையார் மணிவயிறு வாய்த்திலரால்{{float_right|கம்ப. நந்திக். 86}} வாருடை வனமுலை மகளிர் சிந்தை போல் தாரொடும் சதியொடும் தாவும்{{float_right|கம்ப. 836}} வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிடப் பேர்கிலாது பிறங்கு முகத்தினான்{{float_right|கம்ப. 846}} வார்ச்சிறை கொங்கை அன்ன கும்பமும் பருப்பும் காணா{{float_right|கம்ப. 875}} வார்முகம் கெழுவு கொங்கையார் கருங்குழலின் வண்டு ஏர்முழங்கு அரவம் ஏழ்இசை முழங்கு அரவமே{{float_right|கம்ப. 1122}} கருங்குழல் பாரம் வார்கொள் வனமுலை சுலைசூழ் அல்குல் நெருங்கின மறைப்ப{{float_right|கம்ப. 1164}} வார் ஆர் முலையாரும் மற்று உள்ள மாந்தர்களும்{{float_right|கம்ப. 1787}} வார் உடை முலையொடு மதுகை மாந்தரைப் பாரிடைச் செலுத்தினேன் என்று சொல்லுவேனோ{{float_right|கம்ப. 1950}} பொன்னிற் பொலி வாரணி முலையாள்{{float_right|கம்ப. ஆரணிய. 76}} வார்ப் பொற் கொங்கை மருகியை{{float_right|கம்ப. ஆரணிய. 219}} வார்தந்த முலையினார் தம் வயிறு தந்தாளு மல்லள்{{float_right|கம்ப. ஆரணிய. 631}} வார் கொண்டணி கொங்கையை வவ்வினர்பால் போர் கொண்டனவோ{{float_right|கம்ப. ஆரணிய. 1093}} வார் ஏர் முலையாளை முறைக்குநர் வாழ்ஊரே அறியேன்{{float_right|கம்ப. ஆரணிய. 4304}} வார்க்கிடை மதுகைக் கொங்கை{{float_right|கம்ப. ஆரணிய. 8337}} வாரணிந்த முலையீர் நும்மருங்குறனின் வகைநோக்கி{{float_right|சூளா. 175}} வாரணி முலையவர் பரவ{{float_right|சூளா. 373}} வார் கலந்திலங்க கொம்மை வனமுலை மகளிரிட்ட{{float_right|சூளா. 536}} சுற்றுவார் முலையார்{{float_right|சூளா. 66}} வாரிரு புடையும் வீக்கி வடம் சுமந்தெழுந்து{{float_right|சூளா. 760}} வாரணி முரசம்{{float_right|சூளா.845}}</poem><noinclude></noinclude> 6lno5s3bgfuyuyo5b4pqnvl96jm8hjq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/211 250 619380 1834877 2025-06-24T06:24:18Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெறுகிறது”, என்று கூறுவது கவனிக்கத் தக்கது. இந்தியாவில் சான்றோர்களும் அறிஞர்களும் பொருளியல், அறத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டுமென்று..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1834877 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆக்கமும் திரிபும்|187|ஆக்கமும் திரிபும்}}</noinclude>பெறுகிறது”, என்று கூறுவது கவனிக்கத் தக்கது. இந்தியாவில் சான்றோர்களும் அறிஞர்களும் பொருளியல், அறத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டுமென்று கருதுகின்றனர். திருவள்ளுவரும் அறஞ்சார்ந்த பொருளையே கூறுகிறார். பொருள் தேடும் வழிமுறையும் தூயதாக இருக்க வேண்டுமென்பதைத் “திறனறிந்து தீதின்றி வந்த பொருள்”, என்று வள்ளுவர் கூறுவதிலிருந்து அறியலாம். காந்தியடிகளின் கருத்துப்படி, பொருளாதாரத்தின் உள்ளொளியாக - உயிர்நாடியாக - அறம் திகழ வேண்டும். அறத்தைப் புறக்கணித்துவிட்டு உருவாக்குகிற பொருளியற் கோட்பாடுகள், உயிரற்ற உடலாக, சமுதாயத்திற்குப் பயனற்ற கருத்துக் குவியலாக இருக்குமென்பது, காந்தியடிகளைப் பின்பற்றவோர் கருத்தாகும். இப்போது பொருளியலின் ஒரு துறையாக ‘நலப் பொருளியல்’ (Welfare Economics) வளர்ந்து வருகிறது. பெரும் பாலான மக்களின் வறுமை, வேலையின்மை போன்றவற்றை ஒழிக்கவும், எல்லோருக்கும் தேவைப் பொருள்கள் கிடைக்கவும், எத்தகைய பொருளாதார முன்னேற்றத்தை உண்டாக்க வேண்டும் என்பதை எல்லாப் பொருளியலறிஞர்களும் ஆராய்கின்றனர். இதிலிருந்து ஆக்க இயலாக இருக்கும் பொருளியல், அறநெறி இயலின் தன்மையையும் ஏற்றுக்கொண்டிருப்பதைக் காணலாம். சமுதாய இயலான பெருளியலைப் பயில்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. ஒரு நாட்டில் இருக்கிற வளங்கள் அளவோடு இருந்தாலும் அவற்றைத் திறமையாகப் பயன்படுத்தி நலமாகவும் வளமாகவும் வாழ வழி காட்டும் இயலாகப் பொருளியல் விளங்குகிறது.{{Right|மா.பா.கு.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>George Leland Bach,</b> Economics, Prentice - Hall of India Private Limited, New Delhi, 1977.<br> <b>Jhingan. M.L.,</b> Micro Economic Theory, Vikas Publishing House, New Delhi, 1977.<br> <b>Mithani D.M.,</b> Principles of Economics, Himalaya Publishing House, Bombay, 1981.<br> <b>Richard G. Lipsey.</b> An Introduction To Positive Economics, English Language Book Society, London, 1978. <b>ஆக்கமும் திரிபும்</b> என்பது ஒரு மொழியின் உருபனியல் செயற்பாடுகளைக் குறிக்கும். உருபனியல் (Morphology) நிலையில் சிறப்பிடம் பெறுவன சொல்லாக்கமும் (Derivation), சொல்திரிபும் (Inflection) ஆகும். இவ்வடிப்படையில் உருபனியலைச் சொல்லாக்க உருபனியல் (Derivational Morphology/ Lexical Morphology), சொல்திரிபு உருபனியல் (Inflectional Morphology) என இரு வகைப்படுத்துவர் அறிஞர். அடிச்சொல்லுக்குள்ளேயே (Stem) மாற்றம் நிகழ்வதன் வாயிலாகவும், அடிச்சொல்லுடன் சொல்லாக்க உருபினை (Derivational affix) இணைப்பதன் வாயிலாகவும், அடிச்சொல்லுடன் பிறிதோர் அடிச்சொல்லை இணைப்பதன் வாயிலாகவும் சொல்லாக்கம் நிகழ்கிறது. ஒரு மொழியில் சொல்லாக்கத்தின் வாயிலாகப் புதிய சொற்கள் ஆக்கம் பெறுகின்றன. எடுத்துக்காட்டாகப் ‘பாடு’ என்னும் வினையடியிலுள்ள (Verbal stem) மெய் இரட்டிப்பதனால் ‘பாட்டு’ என்னும் பெயர்ச்சொல் ஆக்கம் பெறுகிறது. ‘செய்’ என்னும் வினையடியோடு ‘கை’ என்னும் சொல்லாக்க உருபினைச் சேர்க்கும் நிலையில் ‘செய்கை’ என்னும் பெயர்ச்சொல் கிடைக்கிறது. ‘வேகம்’ என்னும் பெயரடியோடு (Nominal stem) ‘ஆக’ என்னும் வினையடையாக்க அடிச்சொல்லை இணைப்பதன் வாயிலாக ‘வேகமாக’ என்னும் வினையடை (Adverb) கிடைக்கிறது. இவ்வாறு அடிச்சொற்களுக்குள் மாற்றம் ஏற்படுவதன் வாயிலாகவும், அடிச்சொற்களோடு சொல்லாக்க உருபுகள் அன்றிப் பிற அடிச்சொற்களை இணைப்பதன் வாயிலாகவும் புதிய சொற்கள் உருவாகும் நிலையே சொல்லாக்கம் எனப்படும். சொல்லாக்க உருபுகளை அடிச்சொற்களோடு இணைத்துப் புதிய சொற்கள் ஆக்குந்தன்மை சொல்லாக்கம் எனவும், இரண்டு அல்லது மூன்று அடிச்சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் ஆக்குந்தன்மை கூட்டுச் சொல்லாக்கம் (Compounding) எனவும் கருதப்பெறும். சொல்லாக்கம் சொற்களுக்குள்ளே ஏற்படும் மாறுதல்களைச் சுட்டி நிற்கும். இது சொல்திரிபினைப் போன்று ஒரு வாக்கியத்திலுள்ள சொற்களுக்கிடையே காணப்படும் இலக்கண உறவினைப் (Grammatical Relation) புலப்படுத்துவதில்லை. ‘வரு’ என்னும் வினையடியும் ‘கை’ என்னும் சொல்லாக்க உருபும் இணைவதால் ‘வருகை’ என்னும் பெயர்ச்சொல் கிடைக்கிறது. ஈண்டுச் சொல்லாக்கம் வினைச்சொல் பெயர்ச் சொல்லாக மாற்றம் பெறும் பான்மையினைச் சுட்டிச் சொல் நிலையில் ஏற்படும் மாற்றத்தினைப் புலப்படுத்துகிறது.{{nop}}<noinclude></noinclude> 82qiq159hl4s8ens4wh5jxcg1ny1f3k பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/395 250 619381 1834882 2025-06-24T06:29:25Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834882 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|382||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>ஏற்கலை திருவரை யெய்தி யேமுற வற்கலை நோற்றன{{float_right|ஆரணிய. 241}} மருங்கலச வற்கலை வரிந்து{{float_right|ஆரணிய. 4672}} வற்கலையார் வார்கழலர் மார்பிலணிநூலர்{{float_right|கம்ப. 607}} தொடையுறு வற்கலை ஆடைசுற்றி{{float_right|கம்ப. 7252}} மாசில் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும்{{float_right|பெரிய. திரு. 363}} {{larger|<b>வார்</b>}} ஆயிதழ் மடந்தை வார் முலை முற்றம்{{float_right|அகம். 361}} வாருடை முலைமுகம் நனைப்ப{{float_right|சீவக. 274}} வார் செல விம்மும் வனமுலை மகளிர்{{float_right|சீவக. 469}} வட்டச் சூரையர் வார்முலைக் கச்சினர்{{float_right|கம்ப. 632}} வார் விளையாடிய மென்முலை, மைந்தர் தார் விளையாட்டொடு{{float_right|சீவக. 915}} வாருலா முலையினாட்கும் வரிசிலை தடக்கையாற்கும் சீருலாக் கோலம் செய்தார் செப்பினார் மணம்{{float_right|சீவக. 1687}} வீக்குவார் முலையினாற் போல்{{float_right|சீவக. 1727}} வார் முயங்கு மென் முலைய வண்டார் பூங்கோதையை{{float_right|சீவக. 1970}} வார்க்கோல மாலை முலையார் மண்ணுறுப்பவாடி{{float_right|சீவக. 2352}} வார் மீதாடி வடம் சூடி பொற்பார்த்து இருந்த வனமுலையார்{{float_right|சீவக. 2359}} வாரணி முலையினாற்கு மன்னற்கு வகுத்து வாவி ஏரணி கொண்ட விந்நீர் இறைவற் கண்டனனாக{{float_right|சீவக. 2654}} வார் கொண்மென்முலை வம்பணி கோதையார் ஏர்கொள் சாயலுண்டாடு மற்றென்பவே{{float_right|சீவக. 2668}} வாரணி மணித்துடி மருட்டு நுண்ணிடைக் காரணி மயிலனார் சூழக் காவலன்{{float_right|சீவக. 2892}} வாரணி வனமுலை வஞ்சிக் கொம்பனார் போரணி புலவுவேற் கண்கள்{{float_right|சீவக. 2894}} ஏறுபாய விளைவித்ததெல்லாம் வார்க்குங்குமக் கொங்கை{{float_right|நந்திக். 86}}</poem><noinclude></noinclude> 8qtkup2ged6flc0kjska1b7sv4biy9c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/212 250 619382 1834886 2025-06-24T06:41:52Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொடரில் சொல்லாக்கத்தால் ஆக்கம் பெற்ற சொற்கள் அதே நிலையில் காணப்பெறும் மிகச் சிறிய கூறுகளைப் போன்று செயலாற்றும். ‘வாழ்க்கை’, ‘செய்கை’,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1834886 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆக்கமும் திரிபும்|188|ஆக்கமும் திரிபும்}}</noinclude>தொடரில் சொல்லாக்கத்தால் ஆக்கம் பெற்ற சொற்கள் அதே நிலையில் காணப்பெறும் மிகச் சிறிய கூறுகளைப் போன்று செயலாற்றும். ‘வாழ்க்கை’, ‘செய்கை’, ‘சூழ்ச்சி’ போன்ற சொல்லாக்கச் சொற்கள் (Derivatives), பன்மை உருபு (Plural Suffix) ஏற்பதில் அதே நிலையில் காணப்பெறும் மிகச் சிறிய கூறாகிய ‘கல்’ என்பதனைப் போன்று செயற்படுகின்றன. ‘கல்’ என்னும் வடிவம் எவ்வாறு வாக்கியத்தின் எழுவாயாகவும், செயப்படு பொருளாகவும் செயற்படுகிறதோ அதைப் போன்று ஈண்டுச் சுட்டப் பெற்ற சொல்லாக்க வடிவங்களும் செயற்படுகின்றன. சுருங்கக் கூறின் சொல்லாக்க வடிவங்கள், அதே செயலுடைய மிகச் சிறிய கூறுகளின் சொல்வகையினை (Part of speech) ஒத்ததாக அமைந்திருக்கும். சொல்லாக்க அமைப்பு (Derivational formation) காரணமாகப் பெரும்பாலும் அடிச்சொல்லின் சொல்வகை மாற்றம் பெறும். ‘செய்’ என்னும் வினையடியோடு ‘-தல்’ என்னும் சொல்லாக்க உருபினைச் சேர்க்கும் நிலையில் ‘செய்தல்’ என்னும் பெயர் கிடைக்கிறது. அடிச்சொற்களின் சொல்வகையினை மாற்றாத சொல்லாக்க உருபுகளும் மொழியின்கண் காணப்பெறுகின்றன. ஒரு மொழியின் சொல்லாக்க அமைப்பில் செயற்படும் சொல்லாக்க உருபுகளின் எண்ணிக்கையே சொல்திரிபு உருபுகளைக் காட்டிலும் மிகுதியாகக் காணப்படுகிறது. தமிழில் சொல்திரிபு உருபுகளாகிய காலம், இடம், பால், எண், வேற்றுமை ஆகியவற்றைச் சுட்டும் உருபுகளின் எண்ணிக்கையினைக் காட்டிலும் சொல்லாக்க உருபுகளின் எண்ணிக்கையே மிகுதியாக உள்ளது. சொல்லாக்க உருபும் சொல்திரிபு உருபும் ஒரே சொல்லில் காணப்பெறும் நிலையில் சொல்லாக்க உருபு பெரும்பாலும் சொல்லின் இறுதியில் அமைவதில்லை; சொல்திரிபு உருபே சொல்லின் இறுதியில் அமையப்பெற்று வரும். ‘வாழ் - க்கை - ஐ’ என்பதில் ‘-ஐ’ என்னும் சொல்திரிபு உருபு ‘-க்கை’ என்னும் சொல்லாக்க உருபினைத் தொடர்ந்து சொல்முடிப்பு உருபாக (Word closing Affix) அமையப்பெற்றுள்ளது. சிலவிடத்து (கண்-ட்-அமை) சொல்லாக்க உருபு, சொல்திரிபு உருபினைத் தொடர்ந்து வருதலும் உண்டு. சொல்லாக்க அமைப்பின் வடிவங்களும் அவற்றின் வருகையும் ஒழுங்கற்றனவாக அமையப்பெறும். சொல்லாக்க அமைப்பில் செயற்படும் சொல்லாக்க உருபுகளின் வருகை கட்டுக்கடங்கியதாகவே இருக்கும். இன்னின்ன சொல்லாக்க உருபுகள் இத்தகைய அடிச்சொற்களோடு இணைந்து வரும் என்பதனை வரையறை செய்ய முடியும். சொல்லாக்க அமைப்பிற்குப் புதியன ஆக்கும் திறன் இல்லை. சொல்லாக்க அமைப்பில் சொல்திரிபு அமைப்பினைப் போன்று ஒப்புமையாக்கத்தால் (Analogical Creation) புதிய வடிவங்களைப் பெறுதல் அரிது. சொல்லாக்கத்தால் தோன்றும் புதிய வடிவங்கள் அனைத்துமே அகராதியில் இடம்பெறும். சொல்லாக்க அமைப்பில் பெயருக்கும் வினைக்கும் இலக்கணக் கூறுகளால் ஏற்படும் திரிபுகள் இல்லை. ஈண்டுச் சொல்திரிபினைப் போன்று முறையான விதிகளும் இல்லை. சொல்லாக்க அமைப்பில் அடிச்சொற்களோடு இணைக்கப் பெறும் உருபுகள் சொல்லாக்க உருபுகள் எனப்படும். அடிச்சொற்களோடு இணையும் நிலையில் அவ்வடிச்சொற்களின் சொல்வகை மாற்றம் பெறும் நிலையினை அடிப்படையாகக் கொண்டு, சொல்லாக்க உருபுகளைச் சொல்வகை மாற்றுச் சொல்லாக்க உருபுகள் (Class changing derivational affixes) எனவும், சொல்வகை மாற்றாச் சொல்லாக்க உருபுகள் (Class maintaining derivational affixes) எனவும் இருவகைப்படுத்தலாம். ஆங்கிலத்தில் ‘Man’, ‘Nation’, என்பனவற்றோடு இணையும் ‘-hood’ என்னும் சொல்லாக்க உருபு அடிச்சொற்களின் சொல்வகையினை மாற்றுவதில்லை. தமிழில் அடிச்சொல்லின் சொல்வகையினை மாற்றாத சொல்லாக்க உருபுகள் காணப்பெறவில்லை. இவ்வாறு அடிச்சொல்லின் சொல்வகையில் மாற்றம் நிகழாது அமையப்பெறும் சொல்லாக்கம் சொல்வகை மாற்றாச் சொல்லாக்கம் எனப்படும். தமிழில் ‘புகழ்’, ‘சூழ்’ என்னும் வினையடிகளோடு இணையும் ‘-ச்சி’ என்னும் சொல்லாக்க உருபு அடிச்சொற்களின் சொல்வகையினை மாற்றுகிறது. அடிச்சொல்லின் சொல்வகையில் மாற்றம் நிகழும் வகையில் அமையப்பெறும் சொல்லாக்கம் சொல்வகை மாற்றுச் சொல்லாக்கம் எனப்படும். ஆங்கில மொழியில் சில சொல்லாக்க உருபுகள் ஈண்டுச் சுட்டப்பெற்ற இருவகைப் பண்புகளையும் கொண்டு விளங்குகின்றன. Man-ly சொல்வகை மாற்றுச் சொல்லாக்கம். பெயர் > பெயரடை Kind-ly சொல்வகை மாற்றாச் சொல்லாக்கம். பெயரடை > பெயரடை. ஒன்றிற்கு மேற்பட்ட சொல்லாக்க உருபுகள் அடுக்கி வருதலை ஆங்கில மொழியில் காணமுடியும், எடுத்துக்காட்டு: Man-li-ness; Modern-iz-ation.{{nop}}<noinclude></noinclude> soryzycxu50ff2o110opj645jl61n6t பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/394 250 619383 1834887 2025-06-24T06:44:29Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834887 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||381}}</noinclude><poem>வம்பு விரிகளத்திற் கவின் பெறப் பொலிந்த{{float_right|குறிஞ். 198}} வம்பு மீக்கூறும் பொங்கிள முலையின் நுடங்கு கொடி மருங்கின் நுணுகிய நுசுப்பின்{{float_right|பெருங். 1:41:79-80}} வம்பு நெருகுற்றப் பொங்கின முலையர்{{float_right|பெருங். 1:46:244}} வம்பு கொண்டிருந்த மாதர் வனமுலை மாலைத் தேன் சோர் கொம்பு கொண்டன்ன நல்லார்{{float_right|சீவக. 439}} வம்பு நீக்கி வருமுலையுட் கரந்து அம்பினொய்யர் ஆனுடைத் தானையர்{{float_right|சீவக. 633}} வம்பிற் றுரும்பு முலை வாணெடுங்கட் மடவார்{{float_right|சீவக. 1867}} பத்திரக் கடிப்பு மின்னப் பங்கியை வம்பிற் கட்டி{{float_right|சீவக. 2277}} வம்பில் பொங்கும் கொங்கை சுமக்கும் வலிஇன்றி{{float_right|கம்ப. பால. 1002}} வம்பு அளவு கொங்கை யொடு வாலுகம்பார்க்கும்{{float_right|கம்ப. பால. 1944}} வம்பின் முலையாயுறையிடவும் போதார் கணக்கு வரம்புண்டோ{{float_right|கம்ப. சுந்தர. 605}} வம்பு சேர் முலை வாரி வளாகமே{{float_right|சூளா. 345}} கொம்பழகு கொண்ட குழை நுண்ணிடை நுடங்க வம்பழகு கொண்ட மணிமென் முலை வளர்ந்தாங்கு{{float_right|சூளா. 2028}} வம்பழகு கொண்ட மணிமேனியவர் பூவார்{{float_right|சூளா. 2037}} வீக்கியவம்பற வீங்கும் வனமுலையாள்{{float_right|மூவரு. 3:439-40}} வம்பு மால் செய்து வல்லியின் ஒல்கியின்று{{float_right|பெரிய. தடுத். 153}} வம்பணி மென் முலையவர்க்கு மனங்கொடுத்த வன்றொண்டர்{{float_right|பெரிய. ஏயர். 247}} தரியாரை வென்று வம்பார் கழல் புனைவாணன்{{float_right|தஞ்சை. 212}} வம்பும் வல்லும் பொரும் கொங்கை{{float_right|தஞ்சை. 330}} {{larger|<b>வற்கலை</b>}} வற்கலை யுடையேன் யானோ வழங்கலேன்{{float_right|கம்ப. 659}} மாணாமரவற்கலையும் மானின்தோலும் அவைநான் காணாது{{float_right|கம்ப. 1759}} மாயப் பழியாள் தரவற்கலை ஏந்தி வந்தார்{{float_right|கம்ப. 1837}}</poem><noinclude></noinclude> rza0zuojcev6jx7muqhhjd5lsuqcigl பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/393 250 619384 1834888 2025-06-24T06:55:40Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834888 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|380||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>{{larger|<b>மேலாப்பு</b>}} விண்ணில மேலாப்பு விரித்தாற் போல்{{float_right|நாலா. திவ். நாச்சி. திரு. 8:1}} மேலாப்பின் கீழ் வருவானை{{float_right|நாலா. திவ். நாச்சி. திரு. 14:3}} {{larger|<b>வட்டம்</b>}} நீலமும் அரத்தமும் வாலிழை வட்டமும்{{float_right|பெருங். 1:42:218}} {{larger|<b>வட்டு</b>}} இகந்த வட்டுடை எழுதுவரிக் கோலத்து வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி{{float_right|மணி. 3:122-3}} வட்டுடைப் பொலிந்த வண்ணக் கலாபமொடு பட்டு சுமந்தசைந்த பரவை அல்குல்{{float_right|பெருங். 2:4:122-123}} வட்டுடைப் பொலிந்த தானை வள்ளலைக் கண்டபோதே பட்டுடை சுமந்த காசுபஞ்சி மெல்லடியைச்சூழ{{float_right|சீவக. 468}} வட்டுடை மருங்கில் சேர்த்தி வாளிரு புடையும் வீக்கி{{float_right|சீவக. 767}} {{larger|<b>வடகம்</b>}} வடகப் போர்வையைவனப் பொடு திருத்தி{{float_right|பெருங். 1:45:0}} வல்லாண் தோன்றலை வடகம் வாங்கி{{float_right|பெருங். 1:56:99}} வடகமும் துகிலும் தோடு மாலையும்{{float_right|சீவக. 462}} வடகத்தோடு உடுத்த தூசும் மாசு இல் நீர் நனைப்ப{{float_right|சீவக. 945}} கலிங்க நுண்நூல் வடகமும் மகரயாழும் கொடுத்து வட்டாடும் இடம்பலவும் கண்டார்{{float_right|கம்ப. 580}} மீதியல் வடகம் பற்றி{{float_right|சூளா. 1565}} மீது கொண்ட வடகம் புடைசூழ{{float_right|சூளா. 1568}} {{larger|<b>வப்பு</b>}} வப்பினார் முலைகாய்வது{{float_right|நீல. 548}} {{larger|<b>வம்பு</b>}} வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான்யாற்று{{float_right|அகம். 11}} செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறைமுடிதரும்{{float_right|மது. 514}} அம்பணைத் தடைஇய மென்றோண் முகிழ்முலை வம்பு விசித்தியாத்த வாங்கு சாய் நுசுப்பின்{{float_right|நெடு. 149-50}}</poem><noinclude></noinclude> 8ph1uapon9cuv6bndzj9dpfn2gnuhch தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001 0 619385 1834889 2025-06-24T07:02:58Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="16"to="18"fromsection="" /> 1834889 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 1 | previous = [[../]] | next = [[../002/|002→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="16"to="18"fromsection="" /> 6lzn97xef6jukmg7k05ykqinijd91gl தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/002 0 619386 1834890 2025-06-24T07:03:11Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="19"to="19"fromsection="" /> 1834890 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 2 | previous = [[../001/|← 001]] | next = [[../003/|003→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="19"to="19"fromsection="" /> ka4tkuye16hnjhhpg4ilqo210oyg6ju தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/003 0 619387 1834891 2025-06-24T07:03:25Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="20"to="21"fromsection="" /> 1834891 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 3 | previous = [[../002/|← 002]] | next = [[../004/|004→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="20"to="21"fromsection="" /> k5qyj07nr1iybqdrn05qu4f3tegrmy7 தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/004 0 619388 1834892 2025-06-24T07:03:39Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="22"to="22"fromsection="" /> 1834892 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 4 | previous = [[../003/|← 003]] | next = [[../005/|005→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="22"to="22"fromsection="" /> ebr4o4kl1o17sa8d6rxnham4a983qac தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/005 0 619389 1834893 2025-06-24T07:03:53Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="23"to="23"fromsection="" /> 1834893 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 5 | previous = [[../004/|← 004]] | next = [[../006/|006→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="23"to="23"fromsection="" /> fs2yulejfgxogfw9b5tdldedij8vup4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/213 250 619390 1834894 2025-06-24T07:03:53Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அடிச்சொல்லுடன் சொல்திரிபு உருபினை (Inflectional affix) இணைப்பதன் வாயிலாகச் சொல்திரிபு ஏற்படுகிறது. சொல்திரிபு அமைப்பே (Inflectional Formation) ஒரு மொழியின் இலக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1834894 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆக்கமும் திரிபும்|189|ஆக்கமும் திரிபும்}}</noinclude>அடிச்சொல்லுடன் சொல்திரிபு உருபினை (Inflectional affix) இணைப்பதன் வாயிலாகச் சொல்திரிபு ஏற்படுகிறது. சொல்திரிபு அமைப்பே (Inflectional Formation) ஒரு மொழியின் இலக்கணத் திட்டத்தில் (Grammatical System) முதன்மை இடத்தினைப் பெற்றுள்ளது. சொல்திரிபு, வாக்கியத்தில் காணப்பெறும் சொற்களுக்கிடையேயுள்ள தொடரியல் உறவினைப் (Syntactic Relation) புலப்படுத்தி நிற்கும். ‘கண்ணன்’ என்னும் அடிச்சொல்லோடு ‘-ஐ’ என்னும் சொல்திரிபு உருபினைச் சேர்க்கும் நிலையில் ‘கண்ணன்’ என்னும் எழுவாய் ‘கண்ணனை’ எனச் செயப்படுபொருளாக மாற்றம் பெறுகிறது. ஈண்டுச் சொல்திரிபு ஒரு வாக்கியத்திலுள்ள சொற்களுக்கிடையே காணப்பெறும் இலக்கண உறவினைச் சுட்டிநிற்கக் காணலாம். ஓர் அடிச்சொல்லுடன் சொல்திரிபு உருபினை இணைக்கும்போது வாக்கியத்தில் அச்சொல் சுட்டும் இலக்கண உறவினைப் புலப்படுத்தும் வகையில் அச்சொல் அடையும் மாற்றமே சொல்திரிபு எனப்படும். சொல்திரிபினைப் பெயர்த்திரிபு (Declension), வினைத்திரிபு (Conjugation) என இருவகைப்படுத்துவர் அறிஞர். தமிழில் பெயரடி, வேற்றுமை உருபுகளாகிய சொல்திரிபு உருபுகளை ஏற்று வருதல் பெயர்த்திரிபிற்கும், வினையடி காலம், இடம், பால், எண் உருபுகளாகிய சொல்திரிபு உருபுகளை ஏற்று வருதல் வினைத்திரிபிற்கும் தக்க சான்றுகளாகும். சொல்திரிபு வாக்கியத்தில் காணப்பெறும் சொற்களின் இலக்கண உறவினைப் புலப்படுத்தும், ‘பாம்பு கடித்தது’ என்னும் வாக்கியத்தில் ‘பாம்பு’ எழுவாயாகவும், ‘கடித்தது’ வினைப் பயனிலையாகவும் (Verbal Predicate) செயற்படுகின்றன. ‘பாம்பு’ என்பதோடு ‘ஐ’ என்னும் சொல்திரிபு உருபு இணையும் நிலையில், ‘பாம்பை’ என மாற்றம் பெற்றுச் செயப்படுபொருள் என்னும் இலக்கண உறவினைச் சுட்டி நிற்கிறது. தொடரில் சொல்திரிபு அமைப்பினால் ஆக்கம் பெற்ற வடிவங்கள் அதே நிலையில் காணப்பெறும் சிறிய கூறுகளைப் போன்று செயற்படுவதில்லை. ‘கல்லை’ என்னும் சொல்திரிபேற்ற வடிவம் (Inflected Form) ‘கல்’ என்னும் சிறிய கூறு போன்று ஒரே இலக்கண உறவினைச் கட்டுவதில்லை, ஒன்று செயப்படுபொருளாகவும் பிறிதொன்று எழுவாயாகவும் செயற்படுகின்றன. சொல்திரிபு அமைப்பினால் சொல்திரிபு உருபுகள் சேர்க்கப்பெறும் அடிச்சொற்களின் சொல்வகை பெரும்பாலும் மாற்றம் பெறுவதில்லை. ‘மரம்’ என்னும் பெயர் ‘-கள்’ என்னும் சொல்திரிபு உருபினை ஏற்று ‘மரங்கள்’ என மாற்றம்பெறும் நிலையிலும் இதன் சொல்வகை மாற்றம் பெறுவதில்லை. ஒரு மொழியில் சொல்திரிபு உருபுகளே சொல்லாக்க உருபுகளைக் காட்டிலும் எண்ணிக்கையில் மிகக் குறைவாகக் காணப்படுகின்றன. சொல்லாக்க உருபும் சொல்திரிபு உருபும் ஒரே சொல்லில் காணப்பெறும் நிலையில் சொல்திரிபு உருபு பெரும்பாலும் சொல்லின் இறுதியில் காணப்படும். சொல்திரிபு அமைப்பின் வடிவங்களும் அவற்றின் வருகையும் பெரும்பாலும் ஒழுங்காக அமையப்பெறும். ::பார் — த்த் — ஆ — ன் ::பார் — க்கிறு — ஆ — ன் ::பார் — ப் — ஆ — ன் சில சொல்திரிபு அமைப்புகள் இப்பான்மைக்கு விதிவிலக்காக அமையப்பெறுதலும் உண்டு. சொல்திரிபு அமைப்பில் செயற்படும் சொல்திரிபு உருபுகளின் வருகை கட்டுக் கடங்காததாகவே (Extensive) அமையும். எந்தெந்தச் சொல்திரிபு உருபுகள் எந்தெந்த அடிச்சொற்களோடு இணைந்து வரும் என்பதனை வரையறை செய்யமுடியாது. சொல்திரிபு அமைப்பிற்குப் புதியன ஆக்கும் திறன் பெரிதும் உண்டு. பன்மை விகுதியாகிய ‘-கள்’ என்னும் சொல்திரிபு உருபினைப் பெரும்பான்மையான பெயர்ச்சொற்களுடன் இணைத்துப் புதிய சொல்திரிபு அமைப்பினை அமைக்க முடியும். ஒப்புமையாக்கத்தின் காரணமாகச் சொல்திரிபு அமைப்பில் ‘நானுக்கு’, ‘நடுத்தான்’ போன்ற மாற்றங்கள் நிகழப் பெறுதலுண்டு. சொல்திரிபு அமைப்பில் செயற்படும் பெயர்வினை போன்ற வடிவங்கள் ஒருமுறைதான் அகராதியில் இடம் பெறும். பெயர்ச்சொல், வினைச்சொல் போன்றவற்றிற்குக் குறிப்பிட்ட இலக்கண கூறுகளால் ஏற்படும் திரிபுகள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு உட்பட்டவை ஆகும். சொல்திரிபு அமைப்பில் அடிச்சொற்களோடு இணைக்கப்பெறும் உருபுகள் சொல்திரிபு உருபுகள் எனப்படும். தமிழில் காலம், எண், இடம், பால், வேற்றுமை ஆகியவற்றைச் சுட்டும் உருபுகள் சொல்திரிபு உருபுகளாகக் கொள்ளற்குரியன. இவ்வுருபுகள், தாம் இணையப்பெறும் அடிச்சொற்களின் சொல்வகையினை மாற்றுவதில்லை. ஓர் அடிச்சொல் வெல்வெறு சொய்திரிபு உருபுகளை ஏற்று-<noinclude></noinclude> s5t3gycrpfcpgolhpyeq9wlt9w2gp4w தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/006 0 619391 1834895 2025-06-24T07:04:07Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="24"to="24"fromsection="" /> 1834895 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 6 | previous = [[../005/|← 005]] | next = [[../007/|007→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="24"to="24"fromsection="" /> 1m54p5ozuz1pphkc111kec20hhs7g49 தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/007 0 619392 1834896 2025-06-24T07:04:20Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="25"to="26"fromsection="" /> 1834896 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 7 | previous = [[../006/|← 006]] | next = [[../008/|008→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="25"to="26"fromsection="" /> gzx6xr0n8ky9uarmvswr72a4o1ar175 தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/008 0 619393 1834897 2025-06-24T07:04:34Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="27"to="26"fromsection="" /> 1834897 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 8 | previous = [[../007/|← 007]] | next = [[../009/|009→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="27"to="26"fromsection="" /> rl4xnrn258ec02r8k9nh33rik9hm680 1834916 1834897 2025-06-24T07:09:09Z Info-farmer 232 27 1834916 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 8 | previous = [[../007/|← 007]] | next = [[../009/|009→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="27"to="27"fromsection="" /> bbjrk5tnhpflq5ia17zqoaq8kfqbdsn 1834920 1834916 2025-06-24T07:14:58Z Info-farmer 232 tosection="" 1834920 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 8 | previous = [[../007/|← 007]] | next = [[../009/|009→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="27"to="27"fromsection="1" tosection="1" /> ew7oxudlrwkmrkdfm0hiyh93b4gxzzc தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/009 0 619394 1834898 2025-06-24T07:04:48Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="27"to="27"fromsection="" /> 1834898 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 9 | previous = [[../008/|← 008]] | next = [[../010/|010→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="27"to="27"fromsection="" /> qnuzsy0f1i21n1th506s65ipre8mqeo 1834918 1834898 2025-06-24T07:14:00Z Info-farmer 232 tosection=1"" 1834918 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 9 | previous = [[../008/|← 008]] | next = [[../010/|010→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="27"to="27"fromsection="1" tosection="1"/> lrizuwauy3aeconod5r0uw5cenfv1qg 1834919 1834918 2025-06-24T07:14:29Z Info-farmer 232 2 1834919 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 9 | previous = [[../008/|← 008]] | next = [[../010/|010→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="27"to="27"fromsection="2" tosection="2"/> 9d3is8d4n03j6s75jmkcdjmuwtl68av தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/010 0 619395 1834899 2025-06-24T07:05:02Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="28"to="28"fromsection="" /> 1834899 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 10 | previous = [[../009/|← 009]] | next = [[../011/|011→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="28"to="28"fromsection="" /> tgdz1qb8xjvhc1qv1visix0nprbqxns தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/011 0 619396 1834900 2025-06-24T07:05:16Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="29"to="30"fromsection="" /> 1834900 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 11 | previous = [[../010/|← 010]] | next = [[../012/|012→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="29"to="30"fromsection="" /> j20iuu40a5f0i6hsuw4jx73789azjbm தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/012 0 619397 1834901 2025-06-24T07:05:29Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="31"to="31"fromsection="" /> 1834901 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 12 | previous = [[../011/|← 011]] | next = [[../013/|013→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="31"to="31"fromsection="" /> hrpnmomrma2alcxx87edcsay50oyphe தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/013 0 619398 1834902 2025-06-24T07:05:43Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="32"to="32"fromsection="" /> 1834902 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 13 | previous = [[../012/|← 012]] | next = [[../014/|014→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="32"to="32"fromsection="" /> d3zi4vonfrctnhhovckzx2zq7jrhusd தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/014 0 619399 1834903 2025-06-24T07:05:57Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="33"to="33"fromsection="" /> 1834903 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 14 | previous = [[../013/|← 013]] | next = [[../015/|015→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="33"to="33"fromsection="" /> c952l3i01sxeonyaf0j1k4e1fkwzocv தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/015 0 619400 1834904 2025-06-24T07:06:11Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="34"to="35"fromsection="" /> 1834904 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 15 | previous = [[../014/|← 014]] | next = [[../016/|016→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="34"to="35"fromsection="" /> l3y1j0bv661ryf3u3btxuduu4nmfnre தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/016 0 619401 1834905 2025-06-24T07:06:24Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="36"to="37"fromsection="" /> 1834905 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 16 | previous = [[../015/|← 015]] | next = [[../017/|017→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="36"to="37"fromsection="" /> 6y8u0ytnxvonsowu22zl7gjk0kev8hv தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/017 0 619402 1834906 2025-06-24T07:06:38Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="38"to="38"fromsection="" /> 1834906 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 17 | previous = [[../016/|← 016]] | next = [[../018/|018→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="38"to="38"fromsection="" /> 3758pzozbucuk831h7nomgdfps2xco0 தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/018 0 619403 1834907 2025-06-24T07:06:52Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="39"to="39"fromsection="" /> 1834907 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 18 | previous = [[../017/|← 017]] | next = [[../019/|019→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="39"to="39"fromsection="" /> b0e60e73if5jpn9xjjdex3g5bqwz5et தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/019 0 619404 1834908 2025-06-24T07:07:06Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="40"to="39"fromsection="" /> 1834908 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 19 | previous = [[../018/|← 018]] | next = [[../020/|020→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="40"to="39"fromsection="" /> cnlf6o3up2368h18g5fy4z14kjz8bak 1834922 1834908 2025-06-24T07:21:17Z Info-farmer 232 <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="40"to="40"fromsection="3" tosection="3" /> 1834922 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 19 | previous = [[../018/|← 018]] | next = [[../020/|020→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="40"to="40"fromsection="3" tosection="3" /> 9szxr6skt8rrjzj3j7vz5lmkr6eein8 தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/020 0 619405 1834909 2025-06-24T07:07:20Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="40"to="40"fromsection="" /> 1834909 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 20 | previous = [[../019/|← 019]] | next = [[../021/|021→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="40"to="40"fromsection="" /> 6o5jcf4g2cjeg72fa51j48nuibi8g6s 1834923 1834909 2025-06-24T07:22:16Z Info-farmer 232 4 1834923 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 20 | previous = [[../019/|← 019]] | next = [[../021/|021→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="40"to="40"fromsection="4" tosection="4"/> jcky32r7ky8kmhpkhvoqjex43ryaqme தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/021 0 619406 1834910 2025-06-24T07:07:34Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="41"to="41"fromsection="" /> 1834910 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 21 | previous = [[../020/|← 020]] | next = [[../022/|022→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="41"to="41"fromsection="" /> dbr6h66a54kiwlksyjbj2322alohaj1 தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/022 0 619407 1834911 2025-06-24T07:07:48Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="42"to="42"fromsection="" /> 1834911 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 22 | previous = [[../021/|← 021]] | next = [[../023/|023→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="42"to="42"fromsection="" /> b2lrfc79sxowkzm5tmlvsmrhc0i61bv தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/023 0 619408 1834912 2025-06-24T07:08:03Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="43"to="44"fromsection="" /> 1834912 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 23 | previous = [[../022/|← 022]] | next = [[../024/|024→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="43"to="44"fromsection="" /> i39pnb5di53qztnx26rh3rlfsdt7ri8 தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/024 0 619409 1834913 2025-06-24T07:08:16Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="45"to="46"fromsection="" /> 1834913 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 24 | previous = [[../023/|← 023]] | next = [[../025/|025→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="45"to="46"fromsection="" /> 7ep5qcffftid94r70jmm8tl9o4ams9p தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/025 0 619410 1834914 2025-06-24T07:08:30Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="47"to="47"fromsection="" /> 1834914 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 25 | previous = [[../024/|← 024]] | next = [[../026/|026→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="47"to="47"fromsection="" /> lwxyru0xavle3t7e0sz54so7uk1ns9f 1834926 1834914 2025-06-24T07:26:29Z Info-farmer 232 5 1834926 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 25 | previous = [[../024/|← 024]] | next = [[../026/|026→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="47"to="47"fromsection="5" tosection="5" /> ht3rpvtx91ksj6e4pdlto65bqipswui தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/026 0 619411 1834915 2025-06-24T07:08:46Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="47"to="47"fromsection="" /> 1834915 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 26 | previous = [[../025/|← 025]] | next = [[../027/|027→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="47"to="47"fromsection="" /> 69f7lrej1oa1k2g3jot53gq4md8nfte 1834927 1834915 2025-06-24T07:27:30Z Info-farmer 232 <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="47"to="47"fromsection="6" tosection="6"/> 1834927 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 26 | previous = [[../025/|← 025]] | next = [[../027/|027→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="47"to="47"fromsection="6" tosection="6"/> rch4zh05bobwgg9wxdefxyzqepjqlvn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/214 250 619412 1834924 2025-06-24T07:22:19Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிற்கும் பான்மையினைச் சொல்திரிபு வகை (Inflect-tional Category) என்பர் அறிஞர். தமிழ் மொழியில் எண், இடம், காலம் போன்ற இலக்கண வேறுபாடுகளைச் சொல்திரிபு வகை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1834924 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆக்கமும் திரிபும்|190|ஆக்கூர்}}</noinclude>நிற்கும் பான்மையினைச் சொல்திரிபு வகை (Inflect-tional Category) என்பர் அறிஞர். தமிழ் மொழியில் எண், இடம், காலம் போன்ற இலக்கண வேறுபாடுகளைச் சொல்திரிபு வகை எனலாம். ::செய் — த் — ஏ — ன் ::செய் — கிறு — ஏ — ன் ::செய் — வ் — ஏ — ன் ஆங்கில மொழியில் அடிச்சொல்லில் மாற்றமின்றி அமையும் சொல்திரிபு (Sheep) இன்மைச் சொல்திரிபு (Zero Inflection) எனப்படும். இம்மொழியில் சொல்திரிபு தொடர் நிலையிலும் அமையப்பெறுவதுண்டு. ::More beautiful ::Most beautiful இத்தகைய தொடர்கள் சொல்திரிபுத் தொடர்கள் (inflectional Phrases) எனப்பெறும். ஒரே பொருண்மையினைச் சுட்டும் உருபுகள் அனைத்து மொழியிலும் ஒரே வகையினவாக அமைவதில்லை. ஆங்கில மொழியில் எண்ணைச் சுட்டும் உருபுகள் சொல்திரிபு உருபுகளாக அமைய, சப்பானிய மொழியில் இவை சொல்லாக்க உருபுகளாக அமைந்துள்ளன. சொல்திரிபு உருபுகள் ஒரே சொல்லில் அடுக்கி வருதலும் உண்டு. வினைச் சொற்களில் (கேள் — த் — ஆ — ன்) காலம், இடம், பால், எண் இவற்றைக் குறிக்கும் சொல்திரிபு உருபுகள் அடுக்கி வரும் சொல்லாக்கம், சொல்திரிபு இவற்றிடையே தெளிவான வேறுபாடுகள் காணக்கிடந்தாலும் சில விடத்து இவ்விரண்டிற்கிடையே மயக்கம் (Over lapping) காணப்படுகிறது. தமிழில் ‘அ’ என்னும் சுட்டடையுடன் (Demonstrative Adjective) ‘-அன்’ உருபினைச் சேர்க்கும் நிலையில் ‘அவன்’ என்னும் பதிலிப்பெயர் (Pronoun) கிடைக்கிறது. ஈண்டு ‘அன்’ உருபு சேர்க்கப்பெறும் நிலையில் பெயரடை (Adjective) பெயராக மாற்றம் பெற்றுப் புதிய சொல்லாக்கம் அமையப் பெறுகிறது. தமிழில் பால் - எண் உருபுகள் சொல்திரிபு உருபுகளே. ஈண்டுக் குறிப்பிடப்பட்ட எடுத்துக்காட்டில் ‘-அன்’ என்னும் சொல்திரிபு உருபு’ சொல்லாக்க உருபாகச் செயற்படுகிறது. இதுபோன்று ‘முயற்சி’ (முயல்+சி) என்னும் பெயர்ச் சொல்லுடன் காலம், இடம், பால், எண் உருபுகளைச் சேர்க்கும் நிலையில் ‘முயற்சித்தான்’ என்னும் வினைவடிவம் கிடைக்கிறது. ஈண்டும் பெயரினின்று வினைச் சொல்லாக்கம் அமையத் துணை புரிவன சொல்திரிபு உருபுகளாகும்.{{Right|ஏ.ஆ.}} <b>ஆக்காட்சுக் கடல்</b> வட பசிபிக்குப் பெருங்கடலில் உருசியாவின் கிழக்கெல்லையாக அமைந்துள்ளது. இக்கடல் 1,600 கி.மீ. நீளமும், 970 கி.மீ. அகலமும் கொண்டது. இக்கடலையும் பேரிங்குக் கடலையும் (Bering Sea) காம்சட்சுகி முந்நீரகம் (Kamchatsky Peninsula) பிரிக்கிறது. குரில் தீவுகள் (Kuril islands) இக்கடலைப் பரிபிக்குப் பெருங்கடலிலிருந்து பிரிக்கிறது. ஆக்காட்சுக் கடல் (Okhotsk Sea) நவம்பர் முதல் ஏப்பிரல் வரை பனிக் கட்டியால் மூடப்பட்டிருக்கும், மகதன் (Magadan) ஆக்காட்சுக், Okhotsk) துறைமுகங்ளுக்கு வரும் கப்பல்கள் இக்கடல் வழியே வருகின்றன. இக்கடலின் பரப்பு 15,27,600 ச.கி.மீ. <b>ஆக்காடு</b>: பண்டைய பாபிலோனியாவின் வடமாநிலத்தின் பெயர். இந்நகரத்தை அக்காடின் மன்னரான சார்கோன் (Sargon) என்பவர் கி.மு. 2350-இல் உருவாக்கினார். ஆக்காடு (Akkad) நகரம் கி.மு. 2000த்தின் இடைப்பட்ட காலத்தில் புகழ்பெற்று விளங்கியது. அக்காடியர்களுக்குப்பின் பாரசீக மலைவின மக்கள் இந்நகரைக் கைப்பற்றினர். பின்னர் இந்நகரம் பாபிலோனியாவின் தலைநகரமாயிற்று. <b>ஆக்கின்சு, சர்சான்: (கி.பி. 1537-1595)</b> இந்தப் பெயர் கொண்டமாலுமி, எலிசபெத்து அரசியார் காலத்தில் வாழ்த்தவர்; புகழ் மிக்க கப்பற் படைத் தலைவர்; பிளிமத்து (Plymouth) என்னும் ஊசில் பிறந்தவர். இவர் நெஞ்சுரம் மிக்க நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டவர்; அடிமை வாணிகத்தை, அஞ்சாது செய்த வணிகர். ஆக்கின்சு (Hawkins) கி.பி. 1573-இல் ஆங்கிலக் கப்பற்படையின் கருவூலத் தலைவரானார். கப்பற் படையில் ஒரு பிரிவுக்குத் தலைமை தாங்கி இசுபெயின் நாட்டுக் கப்பற் படையான ஆர்மடாவை (Armada) கி.பி. 1588-இல் தோற்கடித்தார். வெற்றி வாகை சூடிய இவருக்குக் கப்பல் தளத்திலேயே விருது வழங்கப்பட்டது. <b>ஆக்கினேயபுராணம்</b>: பதினெண் மகாபுராணங்களுள் ஒன்று. இது 8000 கிரந்தம் உடையது; சிவதீட்சை, வீட்டுணுதீட்சை விதிகள், பிரபஞ்ச விவரண விதிகள், அக்கினி காரியம், அரசு நீதி, திருமால் அவதாரச் சிறப்பு, சோதிடம், ஒளடதம் முதலியவற்றைப் பற்றிக் கூறுகிறது. <b>ஆக்கூர்</b> தேவாரப் பாடல்பெற்ற தலங்களுள் ஒன்று. சிறப்புலி நாயனார் தலம். ஆலயத்திற்குத் தான்தோன்றி மாடம் என்பது பெயர். இறைவர்-<noinclude></noinclude> o8s6hvxqpwek8keb4sjqtlxbqfuim8q பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/392 250 619413 1834928 2025-06-24T07:29:02Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834928 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||379}}</noinclude><poem>அருவிலை நன்கலம் செய்போர்வையன்ன நாணவடி யொதுங்கி{{float_right|சீவக. 2586}} பொன்னணிகலத்தின் குப்பைபுரிமணிக் கோவைப் போர்வை{{float_right|சூளா. 919}} கடும்பனித் திங்கள் தன்கைப்போர்வையாக{{float_right|முத். 7}} கைம்மலை ஈருரி போர்வை சாத்தும் கண்ணுதலாரை{{float_right|பெரிய. திருநாவுக். 344}} {{larger|<b>மடி</b>}} மாசி றூமடி விரித்த சேர்க்கை{{float_right|அகம். 13}} திருமலரன்ன புது மடி கொளீஇ{{float_right|புறம். 390}} தெண்டிரை அவிர் விறல் கடுப்ப குறியவு நெடியவு மடிதரூஉ விரித்து{{float_right|மது. 519-20}} தூமடி விரித்த சேக்கை{{float_right|நெடு. 135}} குடிசெய்வல் எனும் ஒருவற்குத் தெய்வம் மடி தற்று தான் முந்துறும்{{float_right|குறள். 1023}} தேமென் கூந்தல் சின் மலர்ப்பெய்து தூ மடி யுடீஇத் தொல்லோர் சிறப்பின்{{float_right|சிலப். 15-134}} மங்கல வனப்பினதோர் கோடி மடி தாங்கி{{float_right|சூளா. 1093}} {{larger|<b>மீக்கோள்</b>}} புரிநூன் மீக்கோள் பூம்புறத் தேற்றதன் தெரிநூல் வாங்கி யிருநூற் கொளீஇ{{float_right|பெருங். 2:15:126-7}} போர்ப்புறு மீக்கோள் யாப்புறுத் தசைஇ{{float_right|பெருங். 3:17:172}} {{larger|<b>மெய்ப்பை</b>}} மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்{{float_right|முல்லை. 59-61}} நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர மெய்ப்பை புக்கு விலங்கு நடைச் செலவிற்{{float_right|சிலப். 16:105-1}} {{larger|<b>மெய்யாப்பு</b>}} மெய்யாப்பு மெய்யார மூடுவார்{{float_right|பரி. திரட்டு. 2:19}}</poem>{{nop}}<noinclude></noinclude> 3zbs5xze8cmbhehu7boe61hxif64z37 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/215 250 619414 1834929 2025-06-24T07:41:44Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தான்தோன்றியப்பர்; அம்பிகை - வாணெடுங்கண்ணியம்மை. “வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கும் தாளாளர் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே”..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1834929 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆக்கூர் அனந்தாச்சாரி|191|ஆக்சுபர்கு}}</noinclude>தான்தோன்றியப்பர்; அம்பிகை - வாணெடுங்கண்ணியம்மை. “வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கும் தாளாளர் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே” என்பது சம்பந்தர் தேவாரம். அப்பரும் போற்றியுள்ள இத்தலத்தை அருணகிரியாரும் பாடியுள்ளார். இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து கிழக்கே 10 கல் தொலைவில் உள்ளது. இங்குள்ள “ஆயிரத்தில் ஒருவர்” செப்புத் திருமேனி சிறப்புடையது.{{Right|இரா.கி.}} <b>ஆக்கூர் அனந்தாச்சாரி</b>: இவர் திருவல்லிக்கேணி ஆ. சீனிவாச ஐயங்காரின் மகனாவார். இவர் 1903-ஆம் ஆண்டு பிறந்தார். பள்ளியிறுதி வகுப்பு வரை படித்த இவர் 1921 - ஆம் ஆண்டில் விடுதலை இயக்கப் போரில் முதன்மையான பங்கு ஏற்றுப் பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை பெற்றார். பாரதியார் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய இவரே, வாலாசா பேட்டையில் உள்ள தீனபந்து ஆசிரமத்தை நிறுவியவர் ஆவார். பொதுவாழ்வில் ஈடுபட்டிருந்த இவர் சிறந்த இலக்கியப் படைப்பாளியாகவும் விளங்கினார். தினமணி, சுதேசமித்திரன் போன்ற நாளிதழ்களிலும், ஆனந்தவிகடன், கல்கி போன்ற வார இதழ்களிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் இந்தி, வடமொழி, பிரெஞ்சு, இலத்தீன் ஆரிய மொழிகளைக்கற்ற பன்மொழிப் புலவர். கவிச்சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதியார் சரித்திரம், தால்சுதாய் சரித்திரம், இராசாசி சரித்திரம், சவகர் சரித்திரம், காந்தி சரித்திரம், தியாகராசு சுவாமிகள் சரித்திரமும் கீர்த்தனைகளும் போன்ற பல வாழ்க்கை வரலாற்று நூல்களைப் படைத்துள்ளார். பக்த விசயம் என்னும் நூலும் இவர் எழுதியது ஆகும். பிரேம் சந்து சிறுகதைகளை ‘என்கதைக் கொத்து’ என்னும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார். ‘காலிடமாரம்’ என்ற தலைப்பில் தால்சுதாயின் கதை ஒன்றினைத் தமிழ்ப் படுத்தியுள்ளார். நாடகத் துறையில் சிறந்து விளங்கிய எசு. சி. கிட்டப்பா அவர்களைப் பற்றியும் ஒரு நூல் இயற்றியுள்ளார். இவர் பல துறைகளிலும் 48 நூல்களைப் படைத்துள்ளார்.{{Right|மு.த.}} <b>ஆக்கொடாட்டே</b> என்பது சப்பானிய நகரங்களுள் ஒன்று. இது ஆக்கைடோ (Hokaido) தீவின் தெற்குக் கடற்கரைப் பட்டினம். ஆக்கைடோ சப்பானின் வடக்கிலுள்ள தீவாகும். இங்குள்ள துறைமுகத்திலிருந்துதான் கி.பி.1859-ஆம் ஆண்டில் சப்பான் உலக வாணிகத்தைத் தொடங்கியது. இந்நகரத்தின் மேற்குப் பகுதிகளில் பழைய திருச்சபைகளும். ஐரோப்பியப் பாணிக் கட்டங்களும் இன்றும் நிலைந்துள்ளன. ஆக்கொடாட்டே (Hokadate) கி.பி. 1880 முதல் 1890 வரை போடப்பட்ட இருப்புப் பாதைகளினால் மேலும் சிறப்புறலாயிற்று. இந்நகரம் 1934-ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் தீக்கிரையாய் அழிந்துபோயிற்று. அத்தீயில் 2000 மக்கள் மாண்டனர். மீண்டும் இந்நகர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை 3,20,000 (1980). <b>ஆக்சசு ஆறு</b> உருசியாவின் ஆறுகளுன் ஒன்று. சோவியத்து ஆசியாவின் இடையிலுள்ள பகுதி. இது அமுதாரியா (Amu Darya) என்றும் கூறப்படும். இந்த ஆறு பாமீர் பீடபூரியில் (Pamir Plateau) உற்பத்தியாகி ஆரல் கடலில் கலக்கிறது. ஆக்சசு ஆறு (Oxsus) 24000 கி.மீ. நீளமுள்ளது; ஆழம் குறைவானது. கால்வாய்கள் பல வெட்டப்பட்டு, இந்த ஆறு வேளாண்மைக்குப் பயன்படுகிறது. <b>ஆக்சியம் போர்</b>: இது வரலாற்றில் சிறப்பானதாகக் கருதப்பெறும் கடற்போர். இப்போர், கி.மு. 31-ஆம் ஆண்டில் கிரீசு நாட்டு மேற்குக் கடற் கரையை அடுத்த கடலில் நடைபெற்றது. உரோமானியப் படைத் தலைவர்களுள் ஒருவரான ஆக்டேவியன் (Octavian) என்பாரை எதிர்த்து, மற்றொரு உரோமானியத் தலைவரான மார்க் அந்தோனியும் (Mark Antony), எகிப்துப் பேரரசி கினியோபாத்ரா (Cleopatra) என்பவளும் இணைந்து போரிட்ட போது, ஆக்டேவியன் வெற்றி பெற்றார். இதனை உரோமானிய உன்நாட்டுப்போர் என்றும் கூறலாம். ஆக்டேவியனின் தலைசிறந்த கப்பற் படைத் தளபதியான அக்ரிப்பா (Agrippa) என்பவர், கப்பற்படையை முன்னின்று தலைமை தாங்கி நடத்தி வெற்றி பெற்றார். இவ்வெற்றியின் பயனாக ஆக்டேவியன் உரோமாபுரியில் வலிமை மிக்கவரானார். ஆக்சியம் (Actium) போருக்குப் பின்னர், ஆக்டேவியன் பேரரசர் அகசுடசு (Augustus) என்று முடிசூட்டிக் கொண்டு, உரோமானியப் பேரரசினை நிலை நாட்டினார். <b>ஆக்சுபர்கு</b> ஐரோப்பிய வரலாற்றை உருவாக்கிய செருமானிய நகரங்களுன் ஒன்று. இந்நகரம் தெற்குச் செருமனியில் உள்ள பவேரியா (Baveria) என்னுமிடத்தில் வெர்டாக்கு (Wertach), இலெக்கு (Lech) ஆகிய ஆறுகள் ஒன்று கூடும் இடத்தில் அமைந்திருக்கிறது. இதன் மக்கள் தொகை 1981-ஆம் ஆண்டின் கணக்குப்படி 2,48,000 ஆகும். இந்நகரத்தில் கண்ணாடி, பீங்கான், கடிகாரம், இரசாயனப் பொருள்கள் போன்றவை உற்பத்தியாகின்றன, செருமானியர்கள் இவ்விடத்தில்தான் இரண்டாம் உலகப் போர் மூளும் தறுவாயில் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கினர்.{{nop}}<noinclude></noinclude> 56nfkiomswesag51lawkprqh22hc1r2 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/391 250 619415 1834930 2025-06-24T07:44:21Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834930 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|378||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும்{{float_right|பழமொழி. 74}} புழுக்குலங்களா னிறைத்த போர்வை யெனவோரா{{float_right|நீல. 108}} முழு மெய்யும் போர்த்திருந்து தின்கின்றான்{{float_right|நீல. 190}} புறங்காற் றாழ்ந்து போர்வை முற்றி நிலந் தோய்புடுத்து நெடுந் நுண்ணாடையர்{{float_right|பெருங். 1:32:63.64}} வடகப் போர்வையை வனப்பொடு திருத்திக் கடக முன்கைக் காஞ்சனமாலை{{float_right|பெருங். 1:45.10-11}} புலிப்பொறிப் போர்வை போக்கி{{float_right|சீவக. 266}} துணியிருட் போர்வை{{float_right|சீவக. 335}} முழு மெய்யும் சிலம்பி வலந்தது போற் போர்வை போர்த்துச் செல்லலுற்றாள்{{float_right|சீவக. 340}} விளக் கழலுறத்த போலும் விசியுறு சோர்வைத் தீர்ந்தேண் துளக்கற வொழுகியன்ன{{float_right|சீவக. 559}} பொருந்து பூம் பொய்கைப் போர்வையைப் போர்த்துடன்{{float_right|சீவக. 1033}} தெண்ணீர் சிறு திரைப்போர்வை போர்த்து மீன் சென்ற நெறியும் போல{{float_right|சீவக. 1390}} தடக்கை நீட்டி, மையிருட் போர்வை நீக்கி{{float_right|சீவக. 1406}} கொடி நடுக்குற்ற தொப்ப நுண்டுகிற் போர்வை சோர நுழை மழை மின்னிற{{float_right|சீவக. 1570}} அணிநிறப் போர்வை யாய வரும்பெறனாணும் வீற்று பணிநலம் புதிய துண்டான் பன்மலர் மாலை கொண்டோன்{{float_right|சீவக. 1665}} பூவுடைத் தெரியலான் போர்வை நீத்து{{float_right|சீவக. 1812}} மயிரெலியின் போர்வையொடுயெம்மன்னன் விடுத்தானே{{float_right|சீவக. 1873}} பூத்தகிற விழும் போர்வை பூசு சாந்து{{float_right|சீவக. 1906}} பனிமயிர் குளிர்ப்பன பஞ்சின் மெல்லிய கனிமயிர் குளிர்ப்பன கண் கொளாதன எலிமயிர்ப் போர்வை வைத் தெழினி வாங்கினார்{{float_right|சீவக. 2471}} எலிமயிர்த் தொழில் பொங்கு பூம்புகைப் போர்வை{{float_right|சீவக. 2680}}</poem><noinclude></noinclude> 3l5xs5o16ayidlg50xsk9il0hdyozij பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/390 250 619416 1834931 2025-06-24T07:55:34Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<poem>பரிசுவிளங்கப் பரிகலமும் திருத்திப் பாவாடையில் ஏற்றி{{float_right|பெரிய. சிறுத். 73}} {{larger|<b>பிரச்சை</b>}} பெரிய பிரச்சையினாய்{{float_right|நீல. 497}} {{larger|<b>புட்டக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1834931 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||377}}</noinclude><poem>பரிசுவிளங்கப் பரிகலமும் திருத்திப் பாவாடையில் ஏற்றி{{float_right|பெரிய. சிறுத். 73}} {{larger|<b>பிரச்சை</b>}} பெரிய பிரச்சையினாய்{{float_right|நீல. 497}} {{larger|<b>புட்டகம்</b>}} புட்டகம் பொருந்துவ புனைகுவாரும்{{float_right|பரி. 12:17}} {{larger|<b>புடைவை</b>}} பாத்தில் புடைவை யுடை யின்னா{{float_right|இன்னா. 7}} வெண்புடைவை மெய்சூழ்ந்து ...... சென்றடைந்தார்{{float_right|பெரிய. திருநாவு. 61}} {{larger|<b>பூங்கரை நீலம்</b>}} தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசை இப்பாங்கரும் முல்லையும் தாயப் பாட்டங்கால் தோழி நாம் ஒருங்கு விளையாட{{float_right|கலித். முல்லை. 11}} நீங்கிப் புறங்கடை போயினாள் யானுமென் சாந்துளர் கூழை முடியா நிலந் தாழ்ந்த பூங்கரை நீலம் தழீஇத் தளர் பொல்கி{{float_right|கலித். முல்லை. 15}} {{larger|<b>பூண்</b>}} சுரும்பூண அற எறிந்தாங்கு போர்வை விரிந்த, சீவக. 2265 பலவுறு போர்வை பருமணல் மூஉய் பரி. 10-4 வீங்கு விசிப் புதுப் போர்வைத் பரி. 288 தெண்கிணை மாக்கிணை இயக்கி பரி. 387 மோட்டுடைப் போர்வையோடு என்றெண்கண் மாக்கிணை விசிப்புறுத்தமைத்த புதுக்காழ்ப் போர்வை பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை தோல் போர்வை மேலும் தொளைப்பலவாய் பொய்ம் மறைக் கும் மீப்போர்வை மீட்சித்து டம்பானால் செயது போர்த்தாள் போல் நாலடி. 42 கள. நாற்.32 ஆசாரக். 91 பரி. 399 பொருநர்-8</poem><noinclude></noinclude> 2z39y6810q7bf2o0mzpq53bg4k8kz42 1834932 1834931 2025-06-24T07:55:57Z மொஹமது கராம் 14681 1834932 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||377}}</noinclude><poem>பரிசுவிளங்கப் பரிகலமும் திருத்திப் பாவாடையில் ஏற்றி{{float_right|பெரிய. சிறுத். 73}} {{larger|<b>பிரச்சை</b>}} பெரிய பிரச்சையினாய்{{float_right|நீல. 497}} {{larger|<b>புட்டகம்</b>}} புட்டகம் பொருந்துவ புனைகுவாரும்{{float_right|பரி. 12:17}} {{larger|<b>புடைவை</b>}} பாத்தில் புடைவை யுடை யின்னா{{float_right|இன்னா. 7}} வெண்புடைவை மெய்சூழ்ந்து ...... சென்றடைந்தார்{{float_right|பெரிய. திருநாவு. 61}} {{larger|<b>பூங்கரை நீலம்</b>}} தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசை இப்பாங்கரும் முல்லையும் தாயப் பாட்டங்கால் தோழி நாம் ஒருங்கு விளையாட{{float_right|கலித். முல்லை. 11}} நீங்கிப் புறங்கடை போயினாள் யானுமென் சாந்துளர் கூழை முடியா நிலந் தாழ்ந்த பூங்கரை நீலம் தழீஇத் தளர் பொல்கி{{float_right|கலித். முல்லை. 15}} {{larger|<b>பூண்</b>}} சுரும்பூண அற எறிந்தாங்கு போர்வை விரிந்த, சீவக. 2265 பலவுறு போர்வை பருமணல் மூஉய் பரி. 10-4 வீங்கு விசிப் புதுப் போர்வைத் பரி. 288 தெண்கிணை மாக்கிணை இயக்கி பரி. 387 மோட்டுடைப் போர்வையோடு என்றெண்கண் மாக்கிணை விசிப்புறுத்தமைத்த புதுக்காழ்ப் போர்வை பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை தோல் போர்வை மேலும் தொளைப்பலவாய் பொய்ம் மறைக் கும் மீப்போர்வை மீட்சித்து டம்பானால் செயது போர்த்தாள் போல் நாலடி. 42 கள. நாற்.32 ஆசாரக். 91 பரி. 399 பொருநர்-8</poem><noinclude></noinclude> k7j7vnfy0deo5c38nl72wytiwp8i9jf 1834933 1834932 2025-06-24T07:56:14Z மொஹமது கராம் 14681 1834933 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||377}}</noinclude><poem>பரிசுவிளங்கப் பரிகலமும் திருத்திப் பாவாடையில் ஏற்றி{{float_right|பெரிய. சிறுத். 73}} {{larger|<b>பிரச்சை</b>}} பெரிய பிரச்சையினாய்{{float_right|நீல. 497}} {{larger|<b>புட்டகம்</b>}} புட்டகம் பொருந்துவ புனைகுவாரும்{{float_right|பரி. 12:17}} {{larger|<b>புடைவை</b>}} பாத்தில் புடைவை யுடை யின்னா{{float_right|இன்னா. 7}} வெண்புடைவை மெய்சூழ்ந்து ...... சென்றடைந்தார்{{float_right|பெரிய. திருநாவு. 61}} {{larger|<b>பூங்கரை நீலம்</b>}} தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசை இப்பாங்கரும் முல்லையும் தாயப் பாட்டங்கால் தோழி நாம் ஒருங்கு விளையாட{{float_right|கலித். முல்லை. 11}} நீங்கிப் புறங்கடை போயினாள் யானுமென் சாந்துளர் கூழை முடியா நிலந் தாழ்ந்த பூங்கரை நீலம் தழீஇத் தளர் பொல்கி{{float_right|கலித். முல்லை. 15}} {{larger|<b>பூண்</b>}} சுரும்பூண அற எறிந்தாங்கு போர்வை விரிந்த, சீவக. 2265 பலவுறு போர்வை பருமணல் மூஉய் பரி. 10-4 வீங்கு விசிப் புதுப் போர்வைத் பரி. 288 தெண்கிணை மாக்கிணை இயக்கி பரி. 387 மோட்டுடைப் போர்வையோடு என்றெண்கண் மாக்கிணை விசிப்புறுத்தமைத்த புதுக்காழ்ப் போர்வை பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை தோல் போர்வை மேலும் தொளைப்பலவாய் பொய்ம் மறைக் கும் மீப்போர்வை மீட்சித்து டம்பானால் செயது போர்த்தாள் போல் நாலடி. 42 கள. நாற்.32 ஆசாரக். 91 பரி. 399 பொருநர்-8</poem><noinclude></noinclude> hqvdrk8t181zfhl7v097ua241l9sngd 1834935 1834933 2025-06-24T08:02:50Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834935 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||377}}</noinclude><poem>பரிசுவிளங்கப் பரிகலமும் திருத்திப் பாவாடையில் ஏற்றி{{float_right|பெரிய. சிறுத். 73}} {{larger|<b>பிரச்சை</b>}} பெரிய பிரச்சையினாய்{{float_right|நீல. 497}} {{larger|<b>புட்டகம்</b>}} புட்டகம் பொருந்துவ புனைகுவாரும்{{float_right|பரி. 12:17}} {{larger|<b>புடைவை</b>}} பாத்தில் புடைவை யுடை யின்னா{{float_right|இன்னா. 7}} வெண்புடைவை மெய்சூழ்ந்து ...... சென்றடைந்தார்{{float_right|பெரிய. திருநாவு. 61}} {{larger|<b>பூங்கரை நீலம்</b>}} தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசை இப்பாங்கரும் முல்லையும் தாயப் பாட்டங்கால் தோழி நாம் ஒருங்கு விளையாட{{float_right|கலித். முல்லை. 11}} நீங்கிப் புறங்கடை போயினாள் யானுமென் சாந்துளர் கூழை முடியா நிலந் தாழ்ந்த பூங்கரை நீலம் தழீஇத் தளர் பொல்கி{{float_right|கலித். முல்லை. 15}} {{larger|<b>பூண்</b>}} சுரும்பூண அற எறிந்தாங்கு{{float_right|சீவக. 2265}} {{larger|<b>போர்வை</b>}} விரிந்த, பலவுறு போர்வை பருமணல் மூஉய்{{float_right|பரி. 10-4}} வீங்கு விசிப் புதுப் போர்வைத்{{float_right|பரி. 288}} தெண்கிணை மாக்கிணை இயக்கி{{float_right|பரி. 387}} என்றெண்கண் மாக்கிணை விசிப்புறுத்தமைத்த புதுக்காழ்ப் போர்வை{{float_right|பரி. 399}} பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை{{float_right|பொருநர். 8}} தோல் போர்வை மேலும் தொளைப்பலவாய் பொய்ம் மறைக் கும் மீப்போர்வை மீட்சித்து டம்பானால்{{float_right|நாலடி. 42}} செயது போர்த்தாள் போல்{{float_right|கள. நாற். 32}} மோட்டுடைப் போர்வையோடு{{float_right|ஆசாரக். 91}}</poem><noinclude></noinclude> 94qokdi029wwc0dqj7z134o29andjtm பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/389 250 619417 1834937 2025-06-24T08:11:52Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1834937 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|376||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>{{larger|<b>படாம்</b>}} உடாஅ போரா வாகுதலறிந்தும் படாஅ மஞ்ஞைக்கு ஈந்த எங்கோ{{float_right|புறம். 141}} மடத்தகை மாமயில் பனிக்கு மென்றருளிப் படாஅமீத்தக் கெடாஅ நல்லிசைக் கடாஅ யானை கலிமான் பேக{{float_right|புறம். 145}} கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் மாதர் படாஅ முலை மேல் துகில்{{float_right|குறள். 1087}} மண்ணக மடந்தை புதையிருட்படாம் போக நீக்கி{{float_right|சிலப். 5:4}} வித்தகரியற்றிய விளங்கியக் கைவினைச் சித்திரச் செய்கைப்படாம் போர்த்ததுவே{{float_right|மணி. 3:167.8}} தாணினா பொய்கைகள் பூம்படாம் போர்த்த போன்றவே{{float_right|சீவக. 80}} வண்டின முகபடாம் அணிந்து{{float_right|சீவக. 182}} நன்பொன் முகபடாம் வைப்ப{{float_right|சீவக. 1486}} மூப்பெனு முகபடாம் புதைந்து முற்றிழை காப்புடை வளநகர் காளை எய்தினான்{{float_right|சீவக. 2011}} மணிநிறப் படாமுது கிடையறப்பூத்து{{float_right|கல். 63-4}} சூழ்பனியால் குவிர்க்குடைந்து வெண்படாம் போர்த்தனைய குன்றுகளும்{{float_right|பெரிய. திருஞான. 329}} {{larger|<b>பாவாடை</b>}} பதம் பெற்றார்க்குப் பகல் விளக்கும் பாவாடையுமாக் கொள்ளீரே{{float_right|கலிங். 561}} பன்மலர் நறும் பொற்சுண்ணம் பரந்த பாவாடை மீது முன்னிழிந் தருளி வந்தார்{{float_right|பெரிய. திருஞான. 1226}} நாடுமகிழ அவ்வளவு நடைக் காவணம் பாவாடையுடன் மாடுகதலி பூக நிரை மல்க மணித் தோரணம் நிரைத்து{{float_right|பெரிய. ஏயர். 57}} பரிகலமும் பாவாடை பகல் விளக்கும் உடனமைத்து{{float_right|பெரிய. கழறிற். 124}}</poem><noinclude></noinclude> 9mzm562zigvkzpbxhcdpyw1il5g49oj பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/21 250 619418 1834946 2025-06-24T08:36:58Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எதிரி தன் கோலியைத் தன் முட்டிக்கையால் ஒரு தடவை அல்லது பல தடவை தள்ளிப் பேந்தாவிற்குள் கொண்டுவந்து நிறுத்தல் வேண்டும். அங்ஙனம் நிறுத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1834946 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|கோலி|7}}</noinclude>எதிரி தன் கோலியைத் தன் முட்டிக்கையால் ஒரு தடவை அல்லது பல தடவை தள்ளிப் பேந்தாவிற்குள் கொண்டுவந்து நிறுத்தல் வேண்டும். அங்ஙனம் நிறுத்திவிடின், அவனே கெலித்தவனாவன்; அல்லாக்கால் தோற்றவனாவன். முட்டிக்கையால் கோலியைத் தள்ளுவதை <b>முட்டிதள்ளல்</b> என்பர். {{center|{{larger|<b>(ii) வட்டப்பேந்தா</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : பேந்தா எனப்படும் வட்டக்கோட்டிற்குள் உருட்டியாடுங் கோலியாட்டு வகை <b>வட்டப்பேந்தா வரம்</b>. இது சதுரப் பேந்தாவுடன் ஒப்புநோக்கி வட்டப் பேந்தா எனப்பட்டது. {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 21 |bSize = 386 |cWidth = 150 |cHeight = 173 |oTop = 212 |oLeft = 188 |Location = right |Description = }}{{larger|ஆடுவார் தொகை}} : மூவர் முதல் எத்துணைப் பேராயினும் இதை ஆடலாம். ஆயினும், ஐவர்க்குக் குறையாதும் பதின்மர்க்குக் கூடாதும் இருப்பின் சிறப்பாம். {{larger|ஆடுகருவி}} : ஆடகருள் ஒவ்வொருவனுக்கும் பல கோலிகள் இருத்தல் வேண்டும். அவற்றோடு தெல் என்னும் ஒரு பெருங்கோலி ஒவ்வொருவனிடத்துமாவது எல்லார்க்கும் பொதுவாகவானது இருத்தல் வேண்டும். ஏறத்தாழ முக்கச விட்டமுள்ள ஒரு வட்டக்கோடு கீறப்படும். அதன் நடுளில் ஒரு குழி கில்லப்படும். வட்டத்தின் அடியில் கால் வட்டம் அமையுமாறு ஒரு குறுக்குக் கோடும் கீறப்படும். கால் வட்டமுள்ள பக்கத்தில், வட்டத்தினின்று ஏறத்தாழ முக்கசத் தொலைவில், உத்தி கீறப்படும். அதற்கு மேலும் இரு பக்கத்தும் கவியுமாறு ஒரு தலைகீழான பகரக்-<noinclude></noinclude> 30998dj3yybswqj40n350zhlzu2cssy பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/45 250 619419 1834949 2025-06-24T08:43:43Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>அ. குச்சு விளையாட்டு</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : ஒரு குச்சைத் தலைக்குமேற் பிடித்து அதைத் தட்டி விளையாடுவது <b>குச்சு விளையாட்டு</b>...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1834949 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>அ. குச்சு விளையாட்டு</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : ஒரு குச்சைத் தலைக்குமேற் பிடித்து அதைத் தட்டி விளையாடுவது <b>குச்சு விளையாட்டு</b>. {{larger|ஆடுவார் தொகை}} : இதைப் பொதுவாய் ஐவர்க்கு மேற்பட்ட பலர் ஆடுவர். {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 45 |bSize = 386 |cWidth = 188 |cHeight = 195 |oTop = 152 |oLeft = 162 |Location = right |Description = }}{{larger|ஆடுகருவி}} : ஆடகன் ஒவ்வொருவனுக்கும் ஏறத்தாழ இருமுழ நீளமுள்ள ஒரு குச்சு வேண்டும். ஒரு முழச் சதுரமான ஓர் அரங்கு நிலத்திற்கீறி அதனுள் ஒரு சிறு வட்டத்திற்குள் நான்கு கற்கள் வைக்கப்படும். {{larger|ஆடிடம்}} : பொட்டலிலும் திறந்த வெளி நிலத்திலும் இதை ஆடலாம். {{larger|ஆடுமுறை}} : முதலாவது, ஆடகரெல்லாரும் ஓர் உத்திக் கோட்டின்மேல் ஒவ்வொருவனாய் நின்றுகொண்டு, அவனவன் தன்தன் குச்சை இடக்காற் கவட்டையூடு இயன்ற தொலைவு எறிவன். உத்திக்குக் கிட்ட எறிந்தவன் குச்சுப் பிடித்தல் வேண்டும். அவன் சதுர அரங்கிற்கு வெளியே பக்கத்திற்கொன்றாக ஈரெதிர்ப்பக்கத்தில் இரு காலையும் வைத்து, குச்சைத் தலைக்குமேல் இரு முனையையும் இருகையாற் பற்றிக்கொண்டு, நிற்றல் வேண்டும். யாரேனும் ஒருவன் அவன் குச்சைத் தன் குச்சால் தட்டிவிடுவான். இன்னொருவன் அக்குச்சைச் சற்றுத் தொலைவிற்குப் போக்குவான். இங்-<noinclude> த. வி.—3</noinclude> olform7vwbpeaz1xol3u211irunud8w தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/027 0 619420 1834952 2025-06-24T08:47:17Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="48"to="48"fromsection="" tosection="" /> 1834952 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 27 | previous = [[../026/|← 026]] | next = [[../028/|028→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="48"to="48"fromsection="" tosection="" /> 1lwqri8go41a3i404xom67sswe9hkgf தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/028 0 619421 1834953 2025-06-24T08:47:31Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="49"to="49"fromsection="" tosection="" /> 1834953 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 28 | previous = [[../027/|← 027]] | next = [[../029/|029→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="49"to="49"fromsection="" tosection="" /> ayhvhp5agtv2jf78in3j2jcaeg2z7fz தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/029 0 619422 1834954 2025-06-24T08:47:45Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="50"to="50"fromsection="" tosection="" /> 1834954 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 29 | previous = [[../028/|← 028]] | next = [[../030/|030→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="50"to="50"fromsection="" tosection="" /> 5rc89fmcip8aal30u8098ctshzmco3s தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/030 0 619423 1834955 2025-06-24T08:48:00Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="51"to="51"fromsection="" tosection="" /> 1834955 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 30 | previous = [[../029/|← 029]] | next = [[../031/|031→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="51"to="51"fromsection="" tosection="" /> cl9l15lg33s09e2xryotsq2gri6fz14 தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/031 0 619424 1834956 2025-06-24T08:48:14Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="52"to="52"fromsection="" tosection="" /> 1834956 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 31 | previous = [[../030/|← 030]] | next = [[../032/|032→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="52"to="52"fromsection="" tosection="" /> d6lqliy7vsdr4f67nsey3p2p813o8o4 தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/032 0 619425 1834957 2025-06-24T08:48:28Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="53"to="53"fromsection="" tosection="" /> 1834957 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 32 | previous = [[../031/|← 031]] | next = [[../033/|033→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="53"to="53"fromsection="" tosection="" /> mrlaavjewf5asnxl0ixhozc4k92fkgq தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/033 0 619426 1834958 2025-06-24T08:48:42Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="54"to="54"fromsection="" tosection="" /> 1834958 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 33 | previous = [[../032/|← 032]] | next = [[../034/|034→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="54"to="54"fromsection="" tosection="" /> 2ukrbfikdx6cavhqc4v4kw208xzg5ia பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/49 250 619427 1834959 2025-06-24T08:48:49Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "னிடம், “நீ இன்று என் பம்பரத்தை வெளியேற்றின், உன் பம்பரம் உள்ளிருக்கும்போது நான் வெளியேற்றுவேன்,” என்று ஒப்பந்தஞ் செய்துகொள்வதுண்டு. ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1834959 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|பம்பரம்|37}}</noinclude>னிடம், “நீ இன்று என் பம்பரத்தை வெளியேற்றின், உன் பம்பரம் உள்ளிருக்கும்போது நான் வெளியேற்றுவேன்,” என்று ஒப்பந்தஞ் செய்துகொள்வதுண்டு. பல பம்பரங்கள் உள்ளே வைக்கப்பட்டுக் கிடப்பின், அவையனைத்தும் வெளியேற்றப்பட்ட பின்புதான் அபிட்கோசு எடுக்கப்படும். இங்ஙனம் மீண்டும் மீண்டும் வேண்டும் அளவு தொடர்ந்து ஆடப்பெறும். வட்டத்துள் வைக்கப்பட்டிருக்கும் பம்பரங்களுள் நண்பனதை வெளியேற்ற வேண்டுமென்றும், பிறனதை வெளியேற்றக் கூடாதென்றும், இருவேறு நோக்குக்கொண்டு அதற்கேற்பப் பம்பரத்தை ஆட்டுவது வழக்கம். {{center|{{larger|<b>IV. இருவட்டக் குத்து</b>}}}} {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 49 |bSize = 386 |cWidth = 186 |cHeight = 204 |oTop = 300 |oLeft = 164 |Location = right |Description = }}வட்டத்துள் வட்டமாக இருவட்டம் கீறி அவ்விரண்டுள்ளும் பம்பரத்தைக் குத்துவது, <b>இருவட்டக்குத்து</b>. இது பெரும்பாலும் பம்பரக்குத்துப் போன்றதே. இதன் உள்வட்டத்தில் மாங்கொட்டை வைத்து வெளியேற்றி அபிட்கோ செடுத்துப் பிந்தியவன் பம்பரத்தை அதனுள் வைத்தபின், அதைக் குத்தி வெளியேற்றுவர். மட்டையும் சாட்டையும் உள் வைக்கப்படும். உள் வட்டத்தில் ஆடும் பம்பரம் வெளி வட்டத்துள்ளும் வந்து ஆடலாம். ஆடும் பம்பரத்தை<noinclude></noinclude> 0wskbvuyre79xnykx0okdfzq0s1gtep தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/034 0 619428 1834960 2025-06-24T08:48:56Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="55"to="56"fromsection="" tosection="" /> 1834960 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 34 | previous = [[../033/|← 033]] | next = [[../035/|035→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="55"to="56"fromsection="" tosection="" /> sbafc9tocxrpxzidm9c42kvrv1uziid தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/035 0 619429 1834961 2025-06-24T08:49:09Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="57"to="57"fromsection="" tosection="" /> 1834961 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 35 | previous = [[../034/|← 034]] | next = [[../036/|036→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="57"to="57"fromsection="" tosection="" /> 129lo1ft4cu6kl6o0s1s83p2sqj3lsd தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/036 0 619430 1834962 2025-06-24T08:49:23Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="58"to="58"fromsection="" tosection="" /> 1834962 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 36 | previous = [[../035/|← 035]] | next = [[../037/|037→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="58"to="58"fromsection="" tosection="" /> m4bfgawa1ym5d2mt31rems8eyp8miq1 தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/037 0 619431 1834963 2025-06-24T08:49:37Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="59"to="59"fromsection="" tosection="" /> 1834963 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 37 | previous = [[../036/|← 036]] | next = [[../038/|038→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="59"to="59"fromsection="" tosection="" /> rycuworpvz0zd6vbf0n6v62xtog01kk தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/038 0 619432 1834964 2025-06-24T08:49:51Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="60"to="61"fromsection="" tosection="" /> 1834964 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 38 | previous = [[../037/|← 037]] | next = [[../039/|039→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="60"to="61"fromsection="" tosection="" /> 3tvodqcpgvxwc9lmc6n2hy75dxqlazb தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/039 0 619433 1834965 2025-06-24T08:50:06Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="62"to="62"fromsection="" tosection="" /> 1834965 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 39 | previous = [[../038/|← 038]] | next = [[../040/|040→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="62"to="62"fromsection="" tosection="" /> f7rde9utqtswuulc9r9bq7c07fyygi4 தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/040 0 619434 1834966 2025-06-24T08:50:20Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="63"to="63"fromsection="" tosection="" /> 1834966 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 40 | previous = [[../039/|← 039]] | next = [[../041/|041→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="63"to="63"fromsection="" tosection="" /> rz6p6ps3w91rq5i1cqktuw34whvu6io தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/041 0 619435 1834968 2025-06-24T08:50:35Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="64"to="64"fromsection="" tosection="" /> 1834968 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 41 | previous = [[../040/|← 040]] | next = [[../042/|042→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="64"to="64"fromsection="" tosection="" /> bs4uqgn4n4j1fxsbz1nhykloj4cc17j தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/042 0 619436 1834969 2025-06-24T08:50:49Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="65"to="65"fromsection="" tosection="" /> 1834969 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 42 | previous = [[../041/|← 041]] | next = [[../043/|043→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="65"to="65"fromsection="" tosection="" /> k2dfdam07edks82p69ywt0k4h1cr8h4 தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/043 0 619437 1834970 2025-06-24T08:51:03Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="66"to="66"fromsection="" tosection="" /> 1834970 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 43 | previous = [[../042/|← 042]] | next = [[../044/|044→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="66"to="66"fromsection="" tosection="" /> kk9qi27xb8gz7hdhau7b7mogdavrwlk தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/044 0 619438 1834971 2025-06-24T08:51:18Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="67"to="68"fromsection="" tosection="" /> 1834971 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 44 | previous = [[../043/|← 043]] | next = [[../045/|045→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="67"to="68"fromsection="" tosection="" /> hajsuwke01nt541498tyo0ljwfve5ci தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/045 0 619439 1834972 2025-06-24T08:51:31Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="69"to="69"fromsection="" tosection="" /> 1834972 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 45 | previous = [[../044/|← 044]] | next = [[../046/|046→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="69"to="69"fromsection="" tosection="" /> 498dtj8n6k4rynthamqx6sp3h7ndh4u தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/046 0 619440 1834973 2025-06-24T08:51:45Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="70"to="73"fromsection="" tosection="" /> 1834973 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 46 | previous = [[../045/|← 045]] | next = [[../047/|047→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="70"to="73"fromsection="" tosection="" /> 3a9nz7mazl01j9o8zhyx2kub228qlek தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/047 0 619441 1834974 2025-06-24T08:51:59Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="74"to="82"fromsection="" tosection="" /> 1834974 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 47 | previous = [[../046/|← 046]] | next = [[../048/|048→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="74"to="82"fromsection="" tosection="" /> 2t1x1n9hcm5foqledu4g5x6r0b5jdhd தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/048 0 619442 1834975 2025-06-24T08:52:13Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="83"to="83"fromsection="" tosection="" /> 1834975 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 48 | previous = [[../047/|← 047]] | next = [[../049/|049→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="83"to="83"fromsection="" tosection="" /> 3on3n6jgskkrgxp4rrxfj1z0il7njdl தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/049 0 619443 1834976 2025-06-24T08:52:27Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="84"to="86"fromsection="" tosection="" /> 1834976 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 49 | previous = [[../048/|← 048]] | next = [[../050/|050→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="84"to="86"fromsection="" tosection="" /> g7090m50zmw0z51t95cvlsxor2s1ic7 தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/050 0 619444 1834977 2025-06-24T08:52:41Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="87"to="92"fromsection="" tosection="" /> 1834977 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 50 | previous = [[../049/|← 049]] | next = [[../051/|051→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="87"to="92"fromsection="" tosection="" /> doaipnnbnra1twcelng57htfrn7yk95 தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/051 0 619445 1834979 2025-06-24T08:52:55Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="93"to="96"fromsection="" tosection="" /> 1834979 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 51 | previous = [[../050/|← 050]] | next = [[../052/|052→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="93"to="96"fromsection="" tosection="" /> 04vwqer3i1m6kghvwjhuqozqyy0xw71 தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/052 0 619446 1834980 2025-06-24T08:53:09Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="97"to="97"fromsection="" tosection="" /> 1834980 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 52 | previous = [[../051/|← 051]] | next = [[../053/|053→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="97"to="97"fromsection="" tosection="" /> 78avwzc6b0cd20wo7i89y717iw7y6bx தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/053 0 619447 1834981 2025-06-24T08:53:22Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="98"to="98"fromsection="" tosection="" /> 1834981 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 53 | previous = [[../052/|← 052]] | next = [[../054/|054→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="98"to="98"fromsection="" tosection="" /> a2t6hpnwejwywlwmdhbkc4y1taxu82c தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/054 0 619448 1834982 2025-06-24T08:53:36Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="99"to="100"fromsection="" tosection="" /> 1834982 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 54 | previous = [[../053/|← 053]] | next = [[../055/|055→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="99"to="100"fromsection="" tosection="" /> 5thu96ezqg8u80zjwxocfftl15uicii தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/055 0 619449 1834983 2025-06-24T08:53:49Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="101"to="101"fromsection="" tosection="" /> 1834983 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 55 | previous = [[../054/|← 054]] | next = [[../056/|056→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="101"to="101"fromsection="" tosection="" /> qsab9rc01hpkizewujnt0wqk1c2hnd5 தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/056 0 619450 1834984 2025-06-24T08:54:03Z Info-farmer 232 ~<pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="102"to="234"fromsection="" tosection="" /> 1834984 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 56 | previous = [[../055/|← 055]] | next = [[../057/|057→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="102"to="234"fromsection="" tosection="" /> mskll74sy80i76xnqiwyyhva0wi04f0 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/50 250 619451 1834985 2025-06-24T08:54:35Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அழுத்துவது உள்வட்டத்தில்தான் நிகழும்; ஆயின், அதைக் குத்துவது இருவட்டத்திலும் உண்டு. வெளி வட்டத்துள் ஆடும் பம்பரம் தானாய் நகர்ந்து வெள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1834985 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|38|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>அழுத்துவது உள்வட்டத்தில்தான் நிகழும்; ஆயின், அதைக் குத்துவது இருவட்டத்திலும் உண்டு. வெளி வட்டத்துள் ஆடும் பம்பரம் தானாய் நகர்ந்து வெளியேறிவிடின், அதை உடையவன் எடுத்து ஆட்டலாம்; அன்றி உள்ளேயே ஓய்ந்துவிடின் அதை எடுத்தல் கூடாது. அதுவும் மட்டைபோற் பாவிக்கப்படும். {{center|{{larger|<b>V. தலையாரி</b>}}}} {{larger|ஆடுவார் தொகை}} : மூவர்க்குக் குறையாத சிறுவர் பலர் இதை ஆடுவர். {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 50 |bSize = 386 |cWidth = 165 |cHeight = 263 |oTop = 216 |oLeft = 38 |Location = left |Description = }} {{larger|ஆடு கருவி}} : ஆளுக்கொரு பம்பரமும், ஏறத்தாழ இருபது கசம் இடையிட்ட இரு சம அளவான வட்டங்களும், ஒரு போகாக (அதாவது சமதூரமாக) இருபுறமும் நீட்டப்பட்ட அவற்றின் விட்டங்களும், இவ்விளையாட்டிற்குரிய கருவிகளாம். {{larger|ஆடு முறை}} : முதலாவது ஒருவட்டத்தின் நடுவிலுள்ள மாங்கொட்டையைப் பம்பரத்தின் மூலமாய் வெளியேற்றி, அபிட்கோசெடுத்து அதிற் பிந்தியவன் பம்பரத்தை உள் வைத்து, அதை ஏனையோரெல்லாம் ஒவ்வொருவனாய்ப் பம்பரமேற்றி வெளியேற்றுவர். அங்ஙனம் வெளியேற்றும்போது வட்டத்திற்கு வலப்புறமாய் வெளியேற்றல் வேண்டும்; இல்லாவிடின் மீண்டும் அபிட்கோசெடுத்துப் பிந்தியவன் பம்பரத்தை உள்ளே வைக்கவேண்டியிருக்கும்<noinclude></noinclude> e3ypamaesoir1n3oqb2e3tvwgfux2zx 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 276-300 0 619452 1834992 2025-06-24T08:59:44Z Meykandan 544 "=சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 276-300 === {{dhr}} ==பாடல்: 76-80=="-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1834992 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 276-300 === {{dhr}} ==பாடல்: 76-80== m8g5cekgznxhst7joo0tzbl1wfhfqzl 1834993 1834992 2025-06-24T09:00:16Z Meykandan 544 /* பாடல்: 76-80 */ 1834993 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 276-300 === {{dhr}} ==பாடல்: 276-280== 73adfmmnw02en2xi47pphm634u67od3 1834995 1834993 2025-06-24T09:01:47Z Meykandan 544 /* சீவக சிந்தாமணி */ 1834995 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 276-300 === {{dhr}} ==பாடல்: 276-280== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 276-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] i4vthan3tfnma90o720u0utdgsxxlgq 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325 0 619453 1834996 2025-06-24T09:02:11Z Meykandan 544 " :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :4. குணமால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1834996 wikitext text/x-wiki :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 276-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] 8quydoro0k875r8tjn9h8e32k4grhe1 1834999 1834996 2025-06-24T09:05:30Z Meykandan 544 1834999 wikitext text/x-wiki :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 276-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-315]] fw8mllaom7b9hurgii9l8u1graaeufu 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350 0 619454 1834997 2025-06-24T09:02:33Z Meykandan 544 " :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :4. குணமால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1834997 wikitext text/x-wiki :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 276-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] 8quydoro0k875r8tjn9h8e32k4grhe1 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-315 0 619455 1835000 2025-06-24T09:06:41Z Meykandan 544 " :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :4. குணமாலை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1835000 wikitext text/x-wiki :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 276-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-315]] 7kq1lmlxf60nqpq6atufc8t82l77yu8 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/53 250 619456 1835001 2025-06-24T09:06:49Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பிடித்துவிட்டால், எறிந்தவன் தொலைவான். அதன்பின் எதிர்க்கட்சியாருள் ஒருவன் அவ்வாறு ஆடல் வேண்டும். திரி பிடிக்கப்படாவிடின், ஒருவன் எத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1835001 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||குதிரைக்குக் காணங்கடல்|41}}</noinclude>பிடித்துவிட்டால், எறிந்தவன் தொலைவான். அதன்பின் எதிர்க்கட்சியாருள் ஒருவன் அவ்வாறு ஆடல் வேண்டும். திரி பிடிக்கப்படாவிடின், ஒருவன் எத்தனை முறையும் ஆடலாம். திரி மனைக்குட் புகாமல் எல்லைக்கு வெளியே வீழினும் எறிந்தவன் தொலைவான். தவறாத ஒவ்வோர் எறிவும்,காணம் விளைத்துக் குதிகரைக்குக் கட்டற்குரிய ஒவ்வொரு வினையாக முறையே தொடர்ந்து கூறப்படும். முதல் எறிவில், “உழுதாயிற்று” என்றும்; இரண்டாவதில், “விதைத்தாயிற்று” என்றும்; மூன்றாவதில், “முளைத்துவிட்டது” என்றும்; இங்ஙனமே தொடர்ந்து மேற்பட்டவற்றில் முறையே, “ஓர் இலக்கு விட்டிருக்கிறது”, “ஈர் இலக்கு விட்டிருக்கிறது”, “மூவிலக்கு விட்டிருக்கிறது”, “நாலிலக்கு விட்டிருக்கிறது” “ஐயிலக்கு விட்டிருக்கிறது”, “ஆறிலக்கு விட்டிருக்கிறது” “ஏழிலக்கு விட்டிருக்கிறது”, “எட்டிலக்கு விட்டிருக்கிறது”, “ஒன்பதிலக்கு விட்டிருக்கிறது”, “பத்திலக்கு விட்டிருக்கிறது”, “கொடியோடி யிருக்கிறது”, “பூப்பூத் திருக்கிறது”, “பிஞ்சுவிட்டிருக்கிறது”, “காய் காய்த்து விட்டது” “காணத்தை அறுத்தாயிற்று”, “களத்தில் அடித்தாயிற்று”, “வீட்டிற்குக் கொண்டுவந்தாயிற்று”, “அடுப்பில் வேகிறது”, “குதிரைக்கு வைத்திருக்கிறது”, என்றும் கூறப்படும். அடுத்த எறிவில், எதிர்க்கட்சியார் குனிய, வென்ற கட்சியார் அவனவன் உத்திப்படி அவர்மேல் ஏறிக்கொள்வர். குறித்த தொலைவாவது, குறித்த தடவை ஓரிடத்தைச் சுற்றியாவது, தோற்ற கட்சியார் வென்ற கட்சியாரைச் சுமந்து செல்லவேண்டும். அதோடு ஓர் ஆட்டை முடியும். ஆட்டுத் தோற்றம்: இவ்விளையாட்டு ஒருகால் உழிஞைப் போரினின்று தோன்றியிருக்கலாம். ஒரு நகர் அல்லது தலைநகர் நீண்டகாலமாக முற்றுகை யிடப்பட்டிருக்கும்போது, நொச்சியார் (அதாவது அடைபட்டுள்ள நகரத்தார்) தமக்கும் தம் கால்நடைகட்கும்<noinclude></noinclude> stfa1fea6dn4aqdc36ala2p5zwupixb 1835002 1835001 2025-06-24T09:07:22Z AjayAjayy 15166 1835002 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||குதிரைக்குக் காணங்கடல்|41}}</noinclude>பிடித்துவிட்டால், எறிந்தவன் தொலைவான். அதன்பின் எதிர்க்கட்சியாருள் ஒருவன் அவ்வாறு ஆடல் வேண்டும். திரி பிடிக்கப்படாவிடின், ஒருவன் எத்தனை முறையும் ஆடலாம். திரி மனைக்குட் புகாமல் எல்லைக்கு வெளியே வீழினும் எறிந்தவன் தொலைவான். தவறாத ஒவ்வோர் எறிவும்,காணம் விளைத்துக் குதிகரைக்குக் கட்டற்குரிய ஒவ்வொரு வினையாக முறையே தொடர்ந்து கூறப்படும். முதல் எறிவில், “உழுதாயிற்று” என்றும்; இரண்டாவதில், “விதைத்தாயிற்று” என்றும்; மூன்றாவதில், “முளைத்துவிட்டது” என்றும்; இங்ஙனமே தொடர்ந்து மேற்பட்டவற்றில் முறையே, “ஓர் இலக்கு விட்டிருக்கிறது”, “ஈர் இலக்கு விட்டிருக்கிறது”, “மூவிலக்கு விட்டிருக்கிறது”, “நாலிலக்கு விட்டிருக்கிறது” “ஐயிலக்கு விட்டிருக்கிறது”, “ஆறிலக்கு விட்டிருக்கிறது” “ஏழிலக்கு விட்டிருக்கிறது”, “எட்டிலக்கு விட்டிருக்கிறது”, “ஒன்பதிலக்கு விட்டிருக்கிறது”, “பத்திலக்கு விட்டிருக்கிறது”, “கொடியோடி யிருக்கிறது”, “பூப்பூத் திருக்கிறது”, “பிஞ்சுவிட்டிருக்கிறது”, “காய் காய்த்து விட்டது” “காணத்தை அறுத்தாயிற்று”, “களத்தில் அடித்தாயிற்று”, “வீட்டிற்குக் கொண்டுவந்தாயிற்று”, “அடுப்பில் வேகிறது”, “குதிரைக்கு வைத்திருக்கிறது”, என்றும் கூறப்படும். அடுத்த எறிவில், எதிர்க்கட்சியார் குனிய, வென்ற கட்சியார் அவனவன் உத்திப்படி அவர்மேல் ஏறிக்கொள்வர். குறித்த தொலைவாவது, குறித்த தடவை ஓரிடத்தைச் சுற்றியாவது, தோற்ற கட்சியார் வென்ற கட்சியாரைச் சுமந்து செல்லவேண்டும். அதோடு ஓர் ஆட்டை முடியும். {{larger|ஆட்டுத் தோற்றம்}} : இவ்விளையாட்டு ஒருகால் உழிஞைப் போரினின்று தோன்றியிருக்கலாம். ஒரு நகர் அல்லது தலைநகர் நீண்டகாலமாக முற்றுகை யிடப்பட்டிருக்கும்போது, நொச்சியார் (அதாவது அடைபட்டுள்ள நகரத்தார்) தமக்கும் தம் கால்நடைகட்கும்<noinclude></noinclude> f1qo7u8k2s31oew0ynstb992knyv0qb பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/58 250 619457 1835006 2025-06-24T09:12:20Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>௩. சூ விளையாட்டு<br>(க) பாண்டிய நாட்டு முறை</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : பாண்டி நாட்டில் இது இன்று <b>அவுட்டு</b> (out) என்னும் ஆங்கிலப்பெயரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1835006 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௩. சூ விளையாட்டு<br>(க) பாண்டிய நாட்டு முறை</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : பாண்டி நாட்டில் இது இன்று <b>அவுட்டு</b> (out) என்னும் ஆங்கிலப்பெயரால் வழங்குகின்றது. ஓடித் தொடும் ஒருவன் உட்கார்ந்திருக்கும் ஒருவனை ‘அவுட்டு’ என்று சொல்லி எழுப்பும் விளையாட்டு, அச் சொல்லையே பெயராகக் கொண்டது. இது முதலாவது உசு விளையாட்டு என்று வழங்கியிருக்கலாம். {{larger|ஆடுவார் தொகை}} : இதை ஆட ஐவர் வேண்டும். {{larger|ஆடிடம்}} : ஊர்ப் பொட்டலிலும் அகன்ற தெருவிலும் இதை ஆடலாம். {{larger|ஆடு முறை}} : மூவர் இவ்விருசை இடையிட்டு, ஒரே திசை நோக்கி வரிசையாக நிலத்தில் உட்கார்ந்துகொள்வர். ஒருவன் அவரைச் சுற்றியும் அவருக்கிடையிலும் ஓடுவான். இன்னொருவன் அவனைத் தொடவேண்டும். தொடுகிறவன் வரிசையைச் சுற்றியன்றி இடையிற் செல்லக்கூடாது. ஆயின், இடையில் வரிசைக்கோட்டைத் தாண்டாது எட்டித் தொடலாம். ஓடுகிறவனுக்கு மிக வசதியிருத்தலில் அவனைத் தொடுவது அரிது.தொட முயல்கிறவன் நீண்ட நேரம் ஆடியோடிப் பார்த்துவிட்டு, பின்பு ஓடுகிறவனுக்கு அண்மையாகத் தனக்கு முன்னாலிருப்பவனை ‘அவுட்டு’ என்று சொல்லி எழுப்பிவிட்டு அவனிடத்தில் தான் உட்கார்ந்துகொள்வான். உட்கார்ந்திருப்பவர் ஒரே திசை நோக்கி உட்கார்ந்திருப்பதாலும், முன்னோக்கியன்றிப் பின்னோக்கி ஓடித் தொடுதல் கூடாமையாலும், எழுப்புகிறவன் என்றும் எழுப்பப்படுகிறவனுக்குப் பின்னாக நின்றே எழுப்புவன். எழுப்பப்பட்டவன் உடனே ஓடிப்போய் ஓடுகிறவனைத் தொட்டுவிடின், தொட்டவன் ஓடுகிற<noinclude></noinclude> n11bguoeo8i1owsiuaiqpm4aa89fbw4 1835008 1835006 2025-06-24T09:17:22Z AjayAjayy 15166 1835008 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௩. சூ விளையாட்டு<br>(க) பாண்டிய நாட்டு முறை</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : பாண்டி நாட்டில் இது இன்று <b>அவுட்டு</b> (out) என்னும் ஆங்கிலப்பெயரால் வழங்குகின்றது. ஓடித் தொடும் ஒருவன் உட்கார்ந்திருக்கும் ஒருவனை ‘அவுட்டு’ என்று சொல்லி எழுப்பும் விளையாட்டு, அச் சொல்லையே பெயராகக் கொண்டது. இது முதலாவது உசு விளையாட்டு என்று வழங்கியிருக்கலாம். {{larger|ஆடுவார் தொகை}} : இதை ஆட ஐவர் வேண்டும். {{larger|ஆடிடம்}} : ஊர்ப் பொட்டலிலும் அகன்ற தெருவிலும் இதை ஆடலாம். {{larger|ஆடு முறை}} : மூவர் இவ்விருசை இடையிட்டு, ஒரே திசை நோக்கி வரிசையாக நிலத்தில் உட்கார்ந்துகொள்வர். ஒருவன் அவரைச் சுற்றியும் அவருக்கிடையிலும் ஓடுவான். இன்னொருவன் அவனைத் தொடவேண்டும். தொடுகிறவன் வரிசையைச் சுற்றியன்றி இடையிற் செல்லக்கூடாது. ஆயின், இடையில் வரிசைக்கோட்டைத் தாண்டாது எட்டித் தொடலாம். ஓடுகிறவனுக்கு மிக வசதியிருத்தலில் அவனைத் தொடுவது அரிது.தொட முயல்கிறவன் நீண்ட நேரம் ஆடியோடிப் பார்த்துவிட்டு, பின்பு ஓடுகிறவனுக்கு அண்மையாகத் தனக்கு முன்னாலிருப்பவனை ‘அவுட்டு’ என்று சொல்லி எழுப்பிவிட்டு அவனிடத்தில் தான் உட்கார்ந்துகொள்வான். உட்கார்ந்திருப்பவர் ஒரே திசை நோக்கி உட்கார்ந்திருப்பதாலும், முன்னோக்கியன்றிப் பின்னோக்கி ஓடித் தொடுதல் கூடாமையாலும், எழுப்புகிறவன் என்றும் எழுப்பப்படுகிறவனுக்குப் பின்னாக நின்றே எழுப்புவன். எழுப்பப்பட்டவன் உடனே ஓடிப்போய் ஓடுகிறவனைத் தொட்டுவிடின், தொட்டவன் ஓடுகிற-<noinclude></noinclude> echftte9f3kamnjedjq7782giaclbyb பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/59 250 619458 1835007 2025-06-24T09:16:54Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வனாகவும் ஓடினவன் தொடுகிறவனாகவும் மாறல் வேண்டும். ஓடுகிறவன் தான் எப்போது விரும்பினும், உட்கார்ந்திருக்கும் ஒருவனை எழுப்பிவிட்டு, தான்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1835007 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||சூ விளையாட்டு|47}}</noinclude>வனாகவும் ஓடினவன் தொடுகிறவனாகவும் மாறல் வேண்டும். ஓடுகிறவன் தான் எப்போது விரும்பினும், உட்கார்ந்திருக்கும் ஒருவனை எழுப்பிவிட்டு, தான் அவனிடத்தில் உட்கார்ந்து கொள்ளலாம். ஓடுகிறவன் தான் கூடியமட்டும் தொடப்படாதவாறு தொடுகிறவனுக்கும் உட்கார்ந்திருக்கிறவனுக்கும் நேர் முன்னும் அண்மையிலும் நில்லாது மிகத் தள்ளியே நிற்பன். இங்ஙனம் வேண்டுமளவு தொடர்ந்தாடப்பெறும். {{larger|ஆட்டுத் தோற்றம்}} : இது வேட்டை வினையினின்று தோன்றியதாகத் தெரிகின்றது. தொடுகிறவன் வேட்டைக்காரனும், ஓடுகிறவன் வேட்டை விலங்கும், எழுப்பப் படுகிறவன் வேட்டை நாயும் போன்றவராவர். {{larger|ஆட்டின் பயன்}} : ஓடும் ஒருவனைப் பிடிப்பதும், ஒருவனுக்குப் பிடிகொடாமல் ஓடித் தப்புவதுமாகிய வினைப் பயிற்சி, இவ் வட்டாற் பெறப்படும். {{center|{{larger|<b>(௨) சோழநாட்டு முறை</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : சூ விளையாட்டு என்னும் தனித் தமிழ்ப்பெயர் வழங்குவது சோழ நாட்டில்தான். “சூ” என்று சொல்லி ஒருவன் இன்னொருவனை எழுப்பும் விளையாட்டு அச்சொல்லாற் பெயர்பெற்றது. {{larger|ஆடுவார் தொகை}} : அறுவர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர். {{larger|ஆடு முறை}} : ஆடுவார் சமத்தொகையவான இரு கட்சியாகப் பிரிந்துகொண்டு, கட்சிக்கொருவனாக இருவர் நிற்க, ஏனையரெல்லாம் வரிசையாய் இடையிட்டு நிலத்தில் உட்கார்ந்துகொள்வர். உட்கார்ந்திருப்பவருள், ஒவ்வொரு கட்சியாரும் ஒருவன் விட்டொருவனாயிருப்பர். ஒரு கட்சியார் கிழக்குநோக்கின் மற்றொரு கட்சியார் மேற்கு நோக்கியும்,<noinclude></noinclude> s7orv04p3bo5lu6vgivfp9rqs01u7o5 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/60 250 619459 1835009 2025-06-24T09:19:28Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒரு கட்சியார் தெற்கு நோக்கின் மற்றொரு கட்சியார் வடக்கு நோக்கியும், இருப்பர். நிற்பவருள், ஒருவன் ஓட இன்னொருவன் தொடல் வேண்டும். தொடுகிறவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1835009 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|48|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>ஒரு கட்சியார் தெற்கு நோக்கின் மற்றொரு கட்சியார் வடக்கு நோக்கியும், இருப்பர். நிற்பவருள், ஒருவன் ஓட இன்னொருவன் தொடல் வேண்டும். தொடுகிறவன் தன்னால் தொடமுடியாதென்று கண்டால், தன் கட்சியாருள் ஒருவனைச் ‘சூ’ என்று சொல்லி எழுப்புவான். பிற செய்திகளெல்லாம் பாண்டி நாட்டு முறையே. இரு கட்சியாகப் பிரிந்துகொண்டு எதிரெதிர்த்திசையை நோக்கியிருப்பதும், “சூ” என்று சொல்லுவதுமே சோழநாட்டு வேறுபாடாம். {{dhr|10em}} {{rule|5em|align=}} {{dhr|10em}} {{nop}}<noinclude></noinclude> s1g50lqq0yd074am7hsbmr8gdvi7b8e பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/291 250 619460 1835010 2025-06-24T09:19:57Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அண்ணன்மார் சுவாமி கதையைச் சக்திக்கனல் 1971–ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார். அண்ணன்மார், வீரம் மானம் முதலிய நற்பண்புகளில் மேலோங்கி நின்றதால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1835010 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அண்ணாச்சாமி ஐயர்|255|அண்ணாதுரை, கா.ந.}}</noinclude>அண்ணன்மார் சுவாமி கதையைச் சக்திக்கனல் 1971–ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார். அண்ணன்மார், வீரம் மானம் முதலிய நற்பண்புகளில் மேலோங்கி நின்றதால் கொங்குநாட்டு மக்களால் தெய்வமாகப் போற்றப்பட்டு வருகின்றனர்.{{float_right|சு. சக்தி}} {{larger|<b>அண்ணாச்சாமி ஐயர்{{sup|[[#footnote1|<b>1</b>]]}}:</b>}} இவர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். சிதம்பர மகாத்மியம் என்னும் நூலை, வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தமைத்துள்ளார். இந்நூல் கி.பி. 1891–இல் உருவாக்கப் பெற்றது. ஆனந்த நடராசர் பேரில் அழகிய தீர்த்தனம் என்றொரு நூலையும் இயற்றியுள்ளார். இந்நூலில், ஆனந்த நடராசர்மீது இயற்றப் பெற்ற சாவளி, பதம், வேதாந்தம், தங்கப்பண், கிளிப்பண் முதலியனவும், நலுங்கு, இலாலி, ஊஞ்சல் முதலியனவும் உள்ளன. {{larger|<b>அண்ணாச்சாமி ஐயர்{{sup|[[#footnote2|<b>2</b>]]}}:</b>}} இவரும் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இராமநாதபுரம் மாவட்டம் கோட்டையூரைச் சேர்ந்தவர், இவர் சதாவதானம் பாலசுப்பிரமணிய அய்யர் இயற்றிய ‘மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்’ என்ற நூலைப் புகழ்ந்து சிறப்புப்பாயிரம் பாடியுள்ளார். {{larger|<b>அண்ணாச்சாமி முதலியார்</b>}} 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர், தொண்டை நாட்டு அமரம்பேடு என்னும் உரைச்சார்ந்தவர். அராபியக் கதையினைத் தமிழ் மொழியில் பெயர்த்தார். சகர் சாத் சக்ரெயார் என்னும் மன்னனுக்கு 1001 இரவுகளில் சொன்ன இன்பச் சுவை மிக்க கதைகள் அரபுக் கதைகள் என்று கூறப்படும். இவை அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. அக்கதைகளின் சுவை கருதித் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டன. ‘ஆயிரத்தோரு இரவுகளிற் சொல்லிய அரபுக் கதைகள்’ என்னும் அந்நூல் பல பகுதிகளாக வெளியிடப்பட்டது. {{larger|<b>அண்ணாதுரை கா.ந. (1909–1969)</b>}} அண்ணா என்று அழைக்கப் பெறும் இவர் 1909–ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 15–ஆம் நாள் செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தில் நடராசன்-பங்காரு அம்மாள் தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார். ஆயினும், இவரை வளர்த்த பெருமைக்குரியவர், இவர் அன்போடு ‘தொத்தா’ என்று குறிப்பிட்ட இவர் தம் சிற்றன்னை இராசாமணி அம்மையார் ஆவார். {{larger|<b>இளமைக்காலம்:</b>}} இவர் தம் கல்வியைக் காஞ்சிபுரம் மிசன் பள்ளியில் 1914–இல் தொடங்கினார். காஞ்சிபுரம் பச்சையப்பர் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை பயின்றார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரியில் படிக்க விரும்பிய இவர், வறுமை நிலை காரணமாகக் கல்லூரியில் சேர இயலவில்லை காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 480 |cWidth = 126 |cHeight = 178 |oTop = 102 |oLeft = 278 |Location = center |Description = }} {{center|அண்ணாதுரை}} சிறிது காலம் பணிபுரிந்து பின்னர் அவ்வேலையை விடுத்துச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து 1934–இல் ஆனர்சு பட்டத் தேர்வில் வெற்றி பெற்றார். கல்லூரியில் பயின்ற நாள்களிலேயே தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சிறந்த பேச்சாளராக விளங்கினார். இவர், 1930–ஆம் ஆண்டில் மாணவராக இருந்த போதே இராணி அம்மையாரை மணந்து கொண்டார். நாகரத்தினம்மாள் என்பவர் அண்ணாவின் தமக்கையாவார். பரிமளம், இனங்கோவன், கவுதமன், பாபு என்னும் இராசேந்திர சோழன் ஆகிய நால்வரும் இவர்தம் வளர்ப்புப் பிள்ளைகளாவர். {{larger|<b>அரசியல் நுழைவு:</b>}} அண்ணாவின் ஆழ்ந்த சிந்தனை, அறிவுத்திறன், பேச்சு வன்மை முதலானவற்றை முதவில் உலகறிய உதவியவர் பாகதேவ் என்ற தொழிற்சங்கத் தலைவர் ஆவார். தமிழில் பேசும் ஆற்றலற்று இருந்த பாகதேவின் அழகிய ஆங்கிலப் பேச்சுகளைத் தமிழாக்கம் செய்யும் பணியில் அண்ணா முதலில் ஈடுபட்டிருந்தார். அவர்தம் தொடர்பு இவருக்கு நீதிக்கட்சியின்பால் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. ஆயினும், தம் சிற்றன்னையின் விருப்பப்படி வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டுச் சென்னை கோவிந்தப்ப நாயக்கன் நடுநிலைப் பள்ளியில் 1935–இல் ஆசிரியராகச் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார். பொப்பிலி அரசர் நீதிக்கட்சியின் சார்பில் முதல்வராகப் பொறுப்பேற்ற காலத்தில், அக்கட்சியுடன்<noinclude></noinclude> dbxo73s2brcsux290qmyweukmhgbv1j பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/61 250 619461 1835014 2025-06-24T09:25:46Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{x-larger|<b>(3) இருபொழுதாட்டு</b>}}}} பகலும் இரவும் ஆடப்படும் ஆட்டு இருபொழுதாட்டாம். {{center|{{larger|<b>க. கிளித்தட்டு</b>}}}} {{larger|முகவுரை}} : தமிழ்நாட்டில் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1835014 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>(3) இருபொழுதாட்டு</b>}}}} பகலும் இரவும் ஆடப்படும் ஆட்டு இருபொழுதாட்டாம். {{center|{{larger|<b>க. கிளித்தட்டு</b>}}}} {{larger|முகவுரை}} : தமிழ்நாட்டில் பெருவாரியாக விளையாடப்படும் விளையாட்டுக்களில் இரண்டாவது கிளித்தட்டு இது கிளியந்தட்டு எனவும் வழங்கும். இஃது ஆடவர் விளையாட்டு. {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 61 |bSize = 386 |cWidth = 138 |cHeight = 237 |oTop = 231 |oLeft = 210 |Location = right |Description = }}{{larger|தோன்றிய வகை}} : நன்செய் புன்செய்களிலும் போர் அடிக்கும் களங்களிலும் அறுவடைக் காலத்தில், சிந்திச் சிதறிக் கிடக்கும் கூல (தானிய) மணிகளை எறும்புகள் ஈர்த்துக் கொண்டுபோய், நிலத்தின் கீழும் மண் சுவரடியிலும் தங்கள் வளைகளில் படிக்கணக்காவும் மரக்காற் கணக்காகவும் மழைக்கால உணவாகச் சேர்த்துவைப்பது இயல்பு. இங்ஙனம் சேர்த்து வைக்கப்பட்ட கூலத்திற்கு <b>அடி புல்</b> அல்லது அடிப்புல் என்று பெயர். பஞ்சக்காலத்திலும் உணவில்லாத போதும் ஏழையெளியவர் இந்த அடிப்புல்லைத் தேடி அகழ்ந்தெடுப்பது வழக்கம். அடிப்புல் போன்றே ஏழை பாழைகட்கு வேறொரு வருவாயுமுண்டு. அது கிளியீடு. அதாவது, கிளிகள் கழனிகளிலும் கொல்லைகளிலும் பயிர் பச்சைகள் விளைந்த பின்பு அவற்றின் கதிர்களைக் கொத்துக் கொத்தாய்க் கொத்திக்கொண்டுபோய் அண்மையிலுள்ள மரப்பொந்துகளில் இட்டு வைத்—<noinclude> த. வி.—4</noinclude> 4xdq4lrsi9mfe6vcbh5ht6av9fm65h6 1835015 1835014 2025-06-24T09:26:20Z AjayAjayy 15166 1835015 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>(3) இருபொழுதாட்டு</b>}}}} பகலும் இரவும் ஆடப்படும் ஆட்டு இருபொழுதாட்டாம். {{center|{{larger|<b>க. கிளித்தட்டு</b>}}}} {{larger|முகவுரை}} : தமிழ்நாட்டில் பெருவாரியாக விளையாடப்படும் விளையாட்டுக்களில் இரண்டாவது கிளித்தட்டு இது கிளியந்தட்டு எனவும் வழங்கும். இஃது ஆடவர் விளையாட்டு. {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 61 |bSize = 386 |cWidth = 138 |cHeight = 237 |oTop = 231 |oLeft = 210 |Location = right |Description = }}{{larger|தோன்றிய வகை}} : நன்செய் புன்செய்களிலும் போர் அடிக்கும் களங்களிலும் அறுவடைக் காலத்தில், சிந்திச் சிதறிக் கிடக்கும் கூல (தானிய) மணிகளை எறும்புகள் ஈர்த்துக் கொண்டுபோய், நிலத்தின் கீழும் மண் சுவரடியிலும் தங்கள் வளைகளில் படிக்கணக்காவும் மரக்காற் கணக்காகவும் மழைக்கால உணவாகச் சேர்த்துவைப்பது இயல்பு. இங்ஙனம் சேர்த்து வைக்கப்பட்ட கூலத்திற்கு <b>அடி புல்</b> அல்லது அடிப்புல் என்று பெயர். பஞ்சக்காலத்திலும் உணவில்லாத போதும் ஏழையெளியவர் இந்த அடிப்புல்லைத் தேடி அகழ்ந்தெடுப்பது வழக்கம். அடிப்புல் போன்றே ஏழை பாழைகட்கு வேறொரு வருவாயுமுண்டு. அது கிளியீடு. அதாவது, கிளிகள் கழனிகளிலும் கொல்லைகளிலும் பயிர் பச்சைகள் விளைந்த பின்பு அவற்றின் கதிர்களைக் கொத்துக் கொத்தாய்க் கொத்திக்கொண்டுபோய் அண்மையிலுள்ள மரப்பொந்துகளில் இட்டு வைத்-<noinclude> த. வி.—4</noinclude> ozkl35vbgrw355rb8nm96vk3pn4t48d பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/62 250 619462 1835020 2025-06-24T09:32:20Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருப்பது. இதைக் கண்டவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இது அருமையாய் வாய்ப்பதெனினும் எளிதாகவும் ஏராளமாகவும் கிடைப்பதால், திடுமென ஓர் இரவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1835020 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|50|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>திருப்பது. இதைக் கண்டவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இது அருமையாய் வாய்ப்பதெனினும் எளிதாகவும் ஏராளமாகவும் கிடைப்பதால், திடுமென ஓர் இரவலன் பெற்ற பெரும் பரிசிற்காவது எதிர்பாராது கிட்டிய பெருவரு மானத்திற்காவது இதை உவமை கூறுவது வழக்கம். இதனால் ‘கிளியீடு வாய்த்தாற் போல’ என்னும் உவமைப் பழமொழியும் எழுந்தது. இப் பழமொழிக் கருத்தை யமைத்தே, <poem>::“ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன் ::<b>கிளிமரீஇய வியன்புனத்து</b> ::<b>மரனணி பெருங்குரல் அனையன்</b> ஆதலின் ::நின்னை வருதல் அறிந்தனர் யாரே”</poem> {{float_right|(புறம்:133)}} என்று <b>மருத னிளநாகனூர், நாஞ்சில் வள்ளுவனை</b>ப் பாடினார். பாரியின் பறம்புமலை மூவேந்தரால் முற்றுகையிடப் பட்டிருந்தபோது, <b>கபிலர்</b> பல கிளிகளைப் பழக்கி அவற்றால். மலையடிவாரத்துக் கழனிகளிலுள்ள நெற்கதிர்களைக் கொணர்வித்து அவற்றைக்கொண்டு நொச்சிமக்களை உண்பித்தனர் என்றொரு செய்தி வழங்கி வருகின்றது. கிளிகள் சில சமயங்களில் வெட்டுக்கிளிகள் போலப் பன்னூற்றுக் கணக்கினவாய்ப் படலம் படலமாய் விளை புலங்களில் வந்து விழுந்து கதிர்களை யெல்லாம் கொய்து தாமே அறுவடை செய்துவிடுவதுண்டு. இதனாலேயே, <poem>::“விட்டில் கிளிநால்வாய் தன்னரசு வேற்றரசு ::நட்டம் கடும்புனல்கால் எட்டு”</poem> என்று நாட்டுக்குக் கேட்டை விளைப்பவற்றுள் கிளியையும் ஒன்றாகக் கூறினர் முன்னோர். விளைபுலங்களில் வந்து விழும் பறவைகளுள் பெருங்கேட்டை விளைப்பது கிளியாதலின், விளைபுலத்திற் பறவை யோட்டுதலுக்குக் கிளி கடிதல் அல்லது கிளியோப்புதல் என்றும், அதனை ஓட்டுங் கருவிக்குக் கிளிகடி கருவி அல்லது கிளிகடி கோல் என்றும் பெயர். {{nop}}<noinclude></noinclude> rccfqf1woef317dcj66v0e2xzih7g9k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/292 250 619463 1835022 2025-06-24T09:35:52Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அண்ணாவிற்கு நேரடித் தொடர்பு ஏற்பட்டது. திருப்பூரில் 1935–இல் நடைபெற்ற செங்குந்தர் இளைஞர் மாநாட்டில், முதன் முதலாகப் பெரியார் ஈ.வெ. இராமச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1835022 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அண்ணாதுரை, கா.ந.|256|அண்ணாதுரை, கா.ந.}}</noinclude>அண்ணாவிற்கு நேரடித் தொடர்பு ஏற்பட்டது. திருப்பூரில் 1935–இல் நடைபெற்ற செங்குந்தர் இளைஞர் மாநாட்டில், முதன் முதலாகப் பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்களைச் சந்தித்தார், அன்று முதல் தம் வாழ்வின் இறுதி வரை அவரையே தம் தலைவராக ஏற்றுக் கொண்டார். மாநகராட்சி உறுப்பினர் தேர்தலில் 1935–ஆம் ஆண்டில் சென்னை பெத்து நாயக்கன் பேட்டையின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தார். சி. இராசகோபாலாச்சாரியார் 1937–இல் தமிழகத் தலைமை அமைச்சராகப் பணிபுரிந்தபோது, தமிழ் நாட்டுப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை எதிர்த்து நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளபதியாக அண்ணா நியமிக்கப்பட்டார். நான்கு மாதச் சிறைத் தண்டனையையும் ஏற்றார். இவர் 1938–இல் பெரியாரின் ‘விடுதலை’ நாளேட்டின் துணை ஆசிரியரானார். பெரியார் தலைமையில் 1940–இல் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் அதன் பொதுச் செயலாளராக அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘திராவிடநாடு’ என்னும் ஏட்டினை 1942–இல் தொடங்கினார். சேலத்தில், 20-8-1944–இல் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் நான்கு முக்கிய தீர்மானங்களைக் கொண்டுவந்தார். அவற்றுள் ஒன்று நீதிக்கட்சியின் பெயரைத் ‘திராவிடர் கழகம்’ என்று மாற்ற வேண்டியது. இத்தீர்மானங்கள் ‘அண்ணாதுரை தீர்மானங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. {{larger|<b>கருத்து வேறுபாடு:</b>}} திராவிடர் கழகம், தனது முதல் மாநில மாநாட்டை 1945–இல் திருச்சியில் நடத்தியது. பெரியார் தம் தொண்டர்களைக் கறுப்புச் சட்டை அணியச் சொன்னதை ஏற்றுக்கொள்ளாத அண்ணா ‘கறுஞ்சட்டைப் படையினை’த் திடீரென்று அரசு தடை செய்தபோது, கறுப்புச்சட்டையினை அணிந்து கட்டுப்பாடு காத்தார். இந்திய விடுதவை நாளான 1947 ஆகசுட்டு 15–ஆம் நாளைப் பெரியார் துக்க நாள் என்று அறிவித்தபோது, அண்ணா அக்கருத்தினை ஏற்காது அந்நாளை மகிழ்ச்சிக்குரிய நாளாக அறிவித்துத் தம் நீண்ட கட்டுரையில் அதன் காரணத்தையும் விளக்கினார். பெரியார், 1949 சூலை 9–ஆம் நாள் தம் 72–ஆம் வயதில் 26 வயது நிரம்பிய மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். இது அண்ணா-பெரிவார் கருத்து வேறுபாடு முற்றக் காரணமாயிற்று. {{larger|<b>புதிய இயக்கம்:</b>}} பெரியாருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்கள், 1949 செப்டம்பர் 17–ஆம் நாள் அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சீர்திருத்த இயக்கத்தை உருவாக்கினர். அண்ணா கட்சியின் முதற் பொதுச் செயலாளர் ஆனார். தமது இயக்கமும், பெரியாரின் திராவிடர் இயக்கமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் போல் செயல்படும் என்று அறிவித்தார். மும்முனைப் போராட்டம் என்ற ஒரு போராட்டத்தினை 1952–இல் மைய அரசுக்கு எதிராக நடத்தினார். பின்னர், 1956–இல் திருச்சியில் நடைபெற்ற இரண்டாம் மாநில மாநாட்டில் தி.மு.க. அரசியல் இயக்கமாக மாறியது. இது அண்ணாவின் மக்களாட்சிக் கோட்பாட்டு நம்பிக்கையை வெளிப்படுத்தியது. இம்மாநாட்டில் அரசியலில் பங்கு கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் செய்தனர். அண்ணாவின் தலைமையை ஏற்றுக் கொண்ட தி.மு.க. 1959–இல் சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றியது. பின்னர் 1962-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அண்ணா வெற்றி வாய்ப்பினை இழந்த போதிலும், இந்தியப் பாராளுமன்றத்தில் மேலவை உறுப்பினராகித் தமிழகத்தின் குரலை எதிரொலித்தார். அனைத்து இந்திய அளவில் அண்ணாவின் சிறப்பு வெளிப்படுவதற்கு இந்தக் காலம் மிகவும் பயன்பட்டது. {{larger|<b>திராவிட நாட்டுப் பிரிவினை:</b>}} அண்ணா 1962–இல் விலைவாசி உயர்வைக் கண்டித்துப் போராட்டம்நடத்திச் சிறை சென்றார். தனித் திராவிட நாடு அமைப்பது தி.மு.க.வின் கொள்கையாக விளங்கிய போதிலும் இந்தியாவைச் சீனா ஆக்கிரமித்தபோது, இந்தியாவின் பாதுகாப்பையும் பொது நலனையும் கருத்தில் கொண்டு, திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டு, மேலும் உயர்ந்தார். பின்னர், 1963–நவம்பர் 16–இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, இந்திய அரசியல் சட்டத்தைக் கொளுத்திய தற்காக ஆறு மாதக் காலம் கடுங்காவல் தண்டனை பெற்றார். {{larger|<b>ஆட்சிக் கட்டிலில்:</b>}} ஏழு அரசியல் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து 1967–இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களைப் பெற்று அண்ணாவின் தலைமையில் அரசு அமைந்தது. அரசியலில் புதிய பண்பாட்டை அண்ணா ஆட்சி அமைத்ததும் கடைப்பிடித்தார். தம்மை எதிர்த்துத் தேர்தலில் பணியாற்றிய தம் தலைவர் தந்தை பெரியாரையும் காமராசர், இராசாசி, பக்தவத்சலம் முதலான அரசியல் தலைவர்களையும் சந்தித்து அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றார். {{larger|<b>முதலமைச்சர் அண்ணா:</b>}} அண்ணாவின் அரசியல் கருத்துகள் தமிழ் உணர்வுடன் ஒன்றிக் கலந்தவை. இந்தித் திணிப்பையும் வடவர் ஆதிக்கத்தையும் எதிர்த்து வந்தார். அண்ணா பின்வருவனவற்றை<noinclude></noinclude> 8wvds4gfj8ri3alm9f1fbolafre32hw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/293 250 619464 1835044 2025-06-24T11:17:50Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்தார். மே முதல் நாள் விடுமுறை நாள், பெரிய தொழில்கள் தேசியமயம், நிலச் சீர்திருத்தம், சுயமரியாதைத் திரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1835044 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அண்ணாதுரை, கா.ந.|257|அண்ணா பல்கலைக்கழகம்}}</noinclude>வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்தார். மே முதல் நாள் விடுமுறை நாள், பெரிய தொழில்கள் தேசியமயம், நிலச் சீர்திருத்தம், சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட பூர்வ ஏற்பு, தமிழ் ஆட்சிமொழி ஆதல், இந்தியாவின் தொடர்பு மொழியாக ஆங்கிலம் நீடித்தல், மாநிலச் சுயாட்சி முதலியன. மேலே கூறப்பெற்ற கொள்கைகளை முதலமைச்சரானதும் நிறைவேற்ற முனைந்தார். சென்னை மாநிலம் ‘தமிழ்நாடு’ என்று பெயர் பெற்றது. உரூ பாய்க்குப் படி அரிசித் திட்டமே, அண்ணாவின் அமைச்சரவை கொண்டு வந்த முதல் மக்கள் நலத் திட்டமாகும். அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் புன்செய் நிலங்களுக்கு வரி நீக்கப்பட்டது. கல்லூரியில் புகுமுக வகுப்புவரை மாணவர்கள் கட்டணம் இன்றிக் கல்வி பெற ஏற்பாடு செய்யப் பெற்றது. கலப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட்டன. தன்மானத் திருமணங்கள் சட்ட உருப்பெற்றன. சென்னையில் 1968–இல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டினைச் சிறப்புடன் நடத்தினார். தமிழ்நாடு சட்டமன்றம் 1968 சனவரி 23–ஆம் நாள், தமிழும் ஆங்கிலமும் ஆகிய இருமொழிகள் தமிழ்நாட்டில் நீடிக்கும் என்ற இருமொழித் திட்டத்தை நிறைவேற்றியது. ஏல் பல்கலைக்கழகம் (Yale University) 1968–இல் அண்ணாவிற்கு, ‘சப்-பெல்லோசிப்’ (Chubb Fellowship) விருதை வழங்கிச் சிறப்பித்தது. அதே ஆண்டில் அண்ணாமலைப் பல்சுவைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. அண்ணாவிடமிருந்து மேலும் பல சாதனைகளைத் தமிழகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அவர் 1969, பிப்பிரவரி 3–ஆம் நாள் உயிர் துறந்தார். {{larger|<b>அண்ணாவின் இலக்கியப் பணி:</b>}} தமிழ் எழுத்துலகில் தனிப் புகழ் பெற்ற அண்ணா திராவிட நாடு, காஞ்சி ஆகிய தமிழ் இதழ்களைத் தொடங்கித் திறம்பட நடத்தினார். அன்றியும் நவயுகம், விடுதலை, குடியரசு முதலிய பிற தமிழ் இதழ்களுக்கும் சில ஆங்கில இதழ்களுக்கும் பெருந் தொண்டு ஆற்றினார். அண்ணா, ‘தம்பிக்கு’ என்ற தலைப்பில் எழுதிய கடிதங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. ‘ஓர் இரவு’, ‘வேலைக்காரி’ அண்ணாவின் புகழ் பெற்ற நாடகங்களாகும். நாவல்களில் ‘ரங்கோன் ராதா’ புகழ் பெற்றது. ‘நாடோடி’, ‘செவ்வாழை’ முதலான சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை. ‘கம்பரசம்’, ‘ஆரியமாயை’ ஆகியன சிந்தனைக்கு விருந்தளிக்கும் படைப்புகளாகும். நடிப்பிலும் வல்லவர் இவர், ‘சந்திரமோகன்’ ‘நீதி தேவன் மயக்கம்’ முதலானனவ அண்ணா நடித்த நாடகங்களாகும். திரைப்படங்களில் ‘ஓர் இரவு’, ‘நல்லதம்பி’, ‘சொர்க்க வாசல்’, ‘நல்லவன் வாழ்வான்’ இவர்தம் முத்திரை பதித்தவையாகும். {{larger|<b>மதிப்பீடு:</b>}} அண்ணா திறமையான இதழாசிரியர்; ஆற்றல்மிகு சீர்திருத்த எழுத்தாளர்; மிகச் சிறந்த பேச்சாளர், சீர்திருத்தவாதி; சமூகக் கொடுமைக்கு எதிராகப் போராடிய தளபதி என்ற பெருமைகளை விட, மனிதப் பண்புடைய பெருந்தலைவர் என்ற அளவில் மக்கள் மனத்தில் நன்கு இடம் பெற்றவர். இறுதிவரை எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்பதனைப் பொன்மொழியாக அளித்தவர். அடக்கமும், பணிவும் அவரை உயர்த்தின. தாம் இரண்டாண்டே முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பிலிருந்தாலும், மக்கள் இதயத்தில் அழியா இடம் பெற்று, ஏழை, எளியவர் நலன் காத்த பண்பாளர் அண்ணா, இவர்தம் மறைவு தமிழக மக்களைத் துயர்க் கடலுள் ஆழ்த்தியது. இவர் பெயரில் அமைந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திரு எம்.ஜி. இராமச்சந்திரன் தலைமையில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றது. பேரறிஞர் அண்ணாவின் நினைவாக 1985-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 15-ஆம் நாள் முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களால், மதுரை மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ‘அண்ணா மாவட்டம்’ தொடங்கப் பெற்றது. மேலும், அண்ணாதுரைக்குப் பெருமை கூட்டும் முறையில் {{larger|<b>அண்ணாவிருது</b>}} ஒன்றையும் தமிழக அரசு வழி ஏற்படுத்தியுள்ளது. அண்ணாவின் கொள்கை வழி நிற்போர், நிலை நிறுத்துவோர், பரப்புவோர், அவற்றை ஆய்வு செய்வோர் என்னும் நான்கு வகையினர்க்கு இவ்விருது வழங்கப்படும். இந்நிலையில் முதன் முதல் 1985–ஆம் ஆண்டு அண்ணாவிருது தமிழக முதல்வர் மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது. தமிழில் நாவன்மை படைத்த அண்ணாதுரையைத் தமிழக மக்கள் ‘பேரறிஞர் அண்ணா’ என்று பாராட்டி மகிழ்கிறார்கள். {{larger|<b>அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; முன்சி அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் எனவும் அழைக்கப்படுவார். வீரமாமுனிவர் அர்ச்சு அடைக்கல நாயகி மேல் பாடிய ‘அடைக்கல மாலை’ ‘வெண்கலிப்பா’ ஆகிய நூல்களுக்கு இவர் பொழிப்புரைகள் எழுதியுள்ளார். மேலும், அந்தோணிக்குட்டி அண்ணாவியார் எழுதிய ‘பேரின்பக் காதல்’ என்னும் பகுதிக்கும் பொழிப்புரை வரைந்துள்ளார். {{larger|<b>அண்ணா பல்கலைக்கழகம்:</b>}} வேகமாக வளர்த்து வரும் அறிவியல் தொழில் நுட்ப உலகில், கல்வி ஆராய்ச்சித் துறைகளில், இந்திய நாடும்<noinclude></noinclude> s0utlgj9x9ox3wkbwmj6lwhbyucvee1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/294 250 619465 1835045 2025-06-24T11:33:16Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விரைந்து முன்னேறத் துணை செய்யும் நோக்குடன், சென்னையில் இயங்கிவந்த பழம் பெருமை வாய்ந்த பொறியியற் கல்லூரி, அழகப்பர் தொழில் நுட்பக் கல்ல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1835045 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அண்ணா பல்கலைக் கழகம்|258|அண்ணா பல்கலைக் கழகம்}}</noinclude>விரைந்து முன்னேறத் துணை செய்யும் நோக்குடன், சென்னையில் இயங்கிவந்த பழம் பெருமை வாய்ந்த பொறியியற் கல்லூரி, அழகப்பர் தொழில் நுட்பக் கல்லூரி, சென்னைத் தொழில் நுட்பக் கல்லூரி ஆகிய நிறுவனங்களையும் இணைத்து, தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு சி.என். அண்ணாதுரை அவர்களின் நினைவாக, 1978 செப்டம்பரில் பேரறிஞர் அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் (Perarignar Anna University of Technology) தொடங்கப் பெற்றது. அது 1982-இல் அண்ணா பல்கலைக்கழகம் என்று சுருக்கமாகப் பெயரிடப்பட்டு வழங்கி வருகிறது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 294 |bSize = 480 |cWidth = 378 |cHeight = 280 |oTop = 200 |oLeft = 56 |Location = center |Description = }} {{center|அண்ணா பல்கலைக் கழகம்}} பல்கலைக் கழகத்தின் தலையாய குறிக்கோள்கள், பொறியியல், தொழில் நுட்பம் ஆகியவை தொடர்பான துறைகளில் உயர் கல்வி, ஆராய்ச்சி, நடைமுறைப் பயிற்சிகளுக்கு எற்ற வாய்ப்புகளை உருவாக்கல்; சமுதாயத்தின் இன்றைய, வருங்காலத் தேவைகளுக்கேற்ற புதிய கல்வித் திட்டங்களை உருவாக்கல்; புதிய ஆராய்ச்சிகளின் வாயிலாக நாட்டின் வளர்ச்சிக்குத் துணை செய்வதோடு, வளர்ந்துவரும் அறிவுத் துறைகளின் பயன, சமூகத்தின் பல்வேறு நிலையிலுள்ளோருக்கும் ஏற்ற நிலையில் பரவிட வழி செய்தல்; சுல்வி நிறுவனங்களுக்கும் நாட்டின் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்குமிடையே கூட்டு உழைப்பின வாயிலாகப் பயனுள்ள திட்டங்களில் ஈடுபட வழிசெய்தல் முதலியன ஆகும். பொறியியற் கல்லூரி வளாகத்தில் 100 எக்டேர் (Hectare), குரோம்பேட்டையில் 20 எக்டேர், தரமனிப் பகுதியில் 80 எக்டேர் ஆக 200 எக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், பொறியியல், பயன்பாட்டுப் பொறியியல் ஆகிய இவை ஒவ்வொன்றிலும் பல்வேறு துறைகளும் மையங்களும் பிரிவுகளும் அமைந்துள்ளன. இளநிலைப் பட்டம் முதுநிலைப் பட்டம், முதுநிலைக் கல்விச் சான்றிதழ் இளநிலை ஆய்வுப்பட்டம் ஆகிய பல நிலைகளில் தொழில் நுணுக்கக் சுல்வி இங்கு அளிக்கப்படுகிறது. முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சித் திட்டங்களும்<noinclude></noinclude> l63v44heo1vvmqzxqnvsdqauoemzzna