இஸ்லாம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இஸ்லாம்
الإسلام ("இறைவனிடம் அடைக்கலம்" என்ற பொருளுடைய அரேபிய மொழிச் சொல்) அனைத்து வல்லமைகள் பெற்ற ஒரே இறைவன் மீது நம்பிக்கையை வலியுறுத்தும் சமயங்களுள் ஒன்றாகும். ஆபிரகாமிய சமயக் குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாம் மக்கள் தொகை அடிப்படையில் உலகிலேயே இரண்டாவது பெரிய சமயமாகும். இம்மார்க்கம், கி.பி ஏழாம் நூற்றாண்டில் இன்றைய சவுதி அரேபியாவில் வாழ்ந்த முஹம்மது நபி என்பவரை இறுதி இறைத்தூதராகத் தேர்ந்தெடுத்து நிறைவு செய்யப்பட்டது என்று உலகளாவிய முஸ்லிம் மக்கள் கருதுகின்றனர்.
முஹம்மது நபி மக்காவில் பதிமூன்றாண்டு காலமும், பிறகு மதினாவில் பத்தாண்டு காலமும் வாழ்ந்தபோது, அவர் மூலம் இறைவனால் வழங்கப்பட்ட வேதமும், முஹம்மது நபியின் சொல், செயல், அங்கீகாரமும் இஸ்லாத்தின் வழிகாட்டிகளாக முஸ்லிம்களால் போற்றப்படுகிறது. அவை, முறையே திருக்குர்ஆன் மற்றும் சுன்னா என்றழைக்கப்படுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] இஸ்லாம் மார்க்க நம்பிக்கைகள்
இஸ்லாத்தை மனித சமூகத்திற்கு எடுத்துரைக்க பல இறைத்தூதர்கள் உலகின் பல பகுதிகளில், பல கால கட்டங்களில், பல மொழிகளில் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் இஸ்லாத்தை முறையே தத்தமது சமுதாயத்தவருக்கு போதித்தார்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும்.
இவ்வருகையின் இறுதியாகவும் உலகத்தார் அனைவருக்கும் அருட்கொடையாகவும் முஹம்மது(ஸல்) அவர்கள் சுமார் கி.பி 610 - ம் ஆண்டு மக்காவில் இறைதூதராக நியமிக்கப்பட்டார்கள்.
இஸ்லாமிய நம்பிக்கையின் படி அனைத்து இறைத்தூதர்களும் அவர்களின் சமுதாயத்தினருக்குப் போதித்த இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை பின்வருமாறு:
-
- "இறைவன் ஒருவனே! அவன் மட்டுமே படைத்தல், காத்தல், போஷித்தல், பரிபக்குவப் படுத்தல், அழித்தல் உள்பட அனைத்து வல்லமைகளும் கொண்டவன். அவனே உங்களையும் நீங்கள் வாழும் பூமியையும் நீங்கள் காணும் கடல், மலை, விண், விண்மீன்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றையும் இன்னும் நீங்கள் காண இயலாத அனைத்தையும் படைத்தவன். வணக்கத்திற்கு தகுதியானவன் அவன் ஒருவன் மட்டுமே. அவனையன்றி வணங்கப்படும் அனைத்தும் அவனது படைப்பினங்களேயன்றி இறைவனல்ல. எனவே ஓரிறைவனான அவனை மட்டுமே வணங்குங்கள்! அவனது வழிகாட்டுதல்கள் இறைத்தூதர்களான எங்கள் மூலம் உங்களை வந்தடைகின்றன. அதனைப் பின்பற்றுங்கள்".
[தொகு] இஸ்லாம் சமயம் வலியுறுத்தும் கடமைகள்
இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து. அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி பகர்வது, தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்பது, ஜகாத் என்னும் ஏழைவரி கொடுப்பது, இயன்றவர்கள் தம் வாழ்நாளில் ஒருமுறை ஹஜ் என்னும் புனிதப் பயணம் செய்வது (இயலாதோருக்கு இது கடமையில்லை) என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
[தொகு] புனிதத் தலங்கள்
மக்காவில் உள்ள மஸ்ஜித் அல் ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்நபவி மற்றும் ஜெருசலத்தில் உள்ள மஸ்ஜித் அல்அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளும் இஸ்லாத்தின் முப்பெரும் புனிதத் தலங்களாகக் கருதப்படுகின்றன.
[தொகு] இஸ்லாத்தின் அடிப்படை மூன்று
- ஈமான்: ஈமான் என்றால் நம்பிக்கை, ஈமான் கொண்டவன் முஃமின் எனப்படுகிறான்.
- இஸ்லாம்: இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல், முஸ்லிம் என்றால் கட்டுப்படுபவன்.
- இஹ்ஸான்: இஹ்ஸான் என்றால் அல்லாஹ்வை (நேரில்) காண்பது போல் வணங்குவது.
ஒரு முஸ்லிம் பெற்றுள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளில் ஈடிணையற்றது அவன் பெற்றுள்ள ஈமான்தான். இவ்வுலக வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்த ஒருவரிடம் ஈமானுடன் அதற்குரிய செயல்பாடுகளும் இருப்பின் நிச்சயமாக அவர் ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார். இவ்வுலகில் சகல வசதிகளுடன் வாழும் ஒருவனுக்கு ஈமானும் அதற்குரிய செயல்பாடுகளும் இல்லையெனில் நிச்சயமாக அவன் ஈருலகிலும் தோல்வி அடைந்துவிட்டார் என்பதை பின்வரும் நபிமொழி மூலம் விளங்குகிறது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: லாயிலாஹ இல்லல்லாஹ் என அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எதிர்பார்த்துக் கூறுபவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கிவிட்டான். (அறிவிப்பவர்: இத்பான்(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
[தொகு] ஈமானின் அடிப்படைகள் ஆறு
முஸ்லிம்களின் நம்பிக்கை ஆறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது.
- அல்லாஹ்வை நம்புவது
- வானவர்களை நம்புவது
- வேதங்களை நம்புவது
- நபிமார்களை நம்புவது
- மறுமையை நம்புவது
- விதியை நம்புவது (நன்மை, தீமைகள் அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்தபடியே நடக்கிறது என்று நம்புவது).
(ஆதார நூல்: புகாரி)
[தொகு] ஈமானுக்கும், இஸ்லாத்திற்கும் இடையே உள்ளவேறுபாடு
ஈமான் உள்ளத்தோடு தொடர்புடையது, அதன் அம்சங்களை வெளிப்படையாக அறியமுடியாது எனினும் அதன் பிரதிபலிப்பை உணர முடியும்.
இஸ்லாம் உடலோடும் செயல்களோடும் தொடர்புடையவை, செயலை வைத்து வெளிப்படையாக அறிந்து கொள்ளலாம்.
ஈமான் உள்ளத்துடன் தொடர்புடையது இஸ்லாம் கூறும் கடமை உடலுடன் தொடர்புடையது. ஆக மனதால் கொள்கையை ஏற்று நாவால் மொழிந்து உடலால் செயல்படுபவன் முஸ்லிம் ஆவான்.
வெட்கம் உட்பட ஈமானின் கிளைகள் எழுபதிற்கு மேலாகும். அதில் இறுதியானது துன்பம் தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவது.

