கொல்லிமலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில்
வெ.இரா. துரைசாமி
நாமகிரிப்பேட்டை
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் வட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் அறப்பள்ளி ஈஸ்வரம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் உள்ளது. சேலம், நாமக்கல் நகரங்களிலிருந்து பேருந்துகள் உண்டு. மலையின் மேற்குப்பக்கம் அமைந்துள்ள காரவள்ளியிலிருந்து 45 கி.மீ தொலைவில் அறப்பள்ளி அமைந்துள்ளது.
தமிழகத்தில் சமண சமயம் உயர்நிலையில் இருந்தபொழுது இக்கோயிலும் சமணத்தலமாக் இருந்து பின் சைவக்கோயிலாக மாற்றம் பெற்றது. கோயிலை ஒட்டியுள்ள பாறையில் சமண தீர்த்தங்காரர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி.7 ஆம் நூற்றாண்டினர்கலான திருஞானசம்பதரும், திருநாவுக்கரசரும் தத்தம் பதிகங்களில் அறப்பள்ளியைக் குறிப்பிட்டுள்ளனர். “கொல்லிக் குளிரறைப் பள்ளி” என்றும் “குற்றாலத்தான் குளிர்தூங்கு கொல்லியான்” என்றும், “கள்ளார் கமழ்கொல்லி யறைப்பள்ளி” என்றும் குறிப்பிட்டுள்ளார். அதனால் அறப்பள்ளி தேவர வைப்புத் தலமாகும். கி.பி.7 ஆம் நூற்றாண்டிற்கும் முன்பே புகழ் பெற்றிருந்தது. அருணகிரிநாதரும் திருப்புகழால் இங்குள்ள முருகப் பெருமானைப் பாடியுள்ளார். கொல்லிமலையில் தற்போதுள்ள பதினான்கு நாடுகளுல் ஒன்றான வளப்பூர் நாட்டில் அறப்பள்ளி ஈச்வரர் கோயில் உள்ளது. கிழக்கு நோக்கிய சந்ந்நிதி 1.37 ஏக்கர் பரப்பலவில் கோவிலும் சுற்றுப்புறமும் அமைந்துள்ளது. சுற்றிலும் மதில் அமிந்துள்ளது. ஒரே பிரகாரம் நுழைவாயில் உயர்ந்து கோபுரமின்றியுள்ளது. கொடிமரம், பலிபீடம் நந்தி அடுத்து மகா மண்டபம், பின் அர்த்த்மண்டபம், அதராளம், பின் கருவறை. கருவறை சோழர் காலக் கட்டடக்கலை. இறைவன் அறப்பள்ளி ஈஸ்வரர், அம்மன் தாயம்மை தர்மகோசீச்வரர்-தர்மகோசீச்வரி என்றும் வழங்குவர். அர்த்தமண்டபத்தின் இடப் பக்கம் அம்மன் கருவறை தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அண்மைக்காலத் திருப்பனியால் அம்மன் கருவறை சற்றுப் பின்னோக்கி அமைக்கப்பட்டு அர்த்த மண்டபம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய முப்பத்திரண்டு செப்புத் திருமேனிகள் உள்ளதாக அரசுக்குறிப்புத் தெரிவிக்கின்றது. கோயில் பிரகாரத்தின் தென் பகுதியில் ஆறுமுகப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கருவறையின் தெற்கில் தட்சினாமூர்த்தியும், மேற்கில் இலிங்கோத்பவரும்., வடக்கில் பிரம்மாவும் தேவ கோட்டங்களில் வீற்றிருக்கின்றனர். கருவறையின் பின்புறம் விநாயகர், காசிவிசுவநாதர், விசாலாட்சிக்குத் தனித்தனியாகக் கோயில்கள் உள்ளன. விமானங்கள் உண்டு. கருவறை விமானம் மூன்று நிலைகளைக் கொண்ட வட்டவடிவில் உள்ளது. கருவறை வடக்கில் சண்டேச்வரர் கோயில் உள்ளது. மகாமண்டபத்தில் நவக்கிரகங்களுக்கான மேடை உள்ளது. சமயகுரவர் நால்வருக்கும் சிலைகள் உள்ளன. மூன்று காலமும் குருக்கள் வழிபாடும் உண்டு.
கருவறையைச் சுற்றிலும் கருவறை நிலைக்காலிலும் கல்வெட்டுகள் உள்ளன, கல்வெட்டுகளில் தொன்மையானது உத்தமசோழனுடையது. “கண்டன் மதுராந்தகரான ஸ்ரீ உத்தமசோழதேவர் தங்களாச்சி பிராந்தகன் மாதேவடிகளார் செம்பியன் மாதேவியார்” என்று உத்தமசோழனின் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. செம்பியன் மாதேவியார் குடினக்கல்லால் நூறு கழஞ்சு பொன்னைக் கொல்லிமலையில் உள்ள பன்னிரண்டு ஊரார்களிடத்தில் கொடுத்து அதனின்று வரும் வட்டிக்கு மாதந்தோறும் ஒவ்வொரு ஊராரும் கோவிலில் பூசை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பன்னிரண்டு ஊர்களும் இன்றும் மலையில் உள்ளன. உத்தமசோழனின் பதினாராம் ஆட்சியாண்டில் இக்கல்வெட்டுக் கொடுக்கப்பட்டது. கல்வெட்டுகள் இறைவனை, “திருவறப்பள்ளி ஆழ்வார், திருவறப்பள்ளி மகாதேவர், திருவறப்பள்ளி உடையார்” என்று குறிப்பிடுகின்றன. பரகேசரி என்ற பெயரில் மேலும் மூன்று கல்வெட்டுகள் உள்ளன. அவை பிரதிகண்டன் சுந்தரசோழனைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
மற்றொரு கல்வெட்டு, இராஜமகேந்திரன் காலத்தில் அறப்பள்ளி இறைவர்க்கு வாயலூரில் (வாசலூர்ப்பட்டி) கொடுக்கப்பட்ட நிலத்து இறை முறையாகச் செலுத்தப்படாமல் நின்று போயிருந்ததையும், முதற் குலோத்துங்கன் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் (கி.பி.1082) கோயில் தானத்தாரும் பல மண்டலத்து மாயேச்சுவரரும் கூடி வாயலூராரை வேண்ட, மீண்டும் கோயிலுக்கு வரி கொடுக்கப்பட்ட செய்தியையும் கூறுகிறது.
இரண்டாம் இராசாதிராசனின், ஒன்பது, பத்தாம் ஆட்சியாண்டைச் (கி.பி.1172, 1173) சேர்ந்த கல்வெட்டுகள் பாண்டிகுலாசனி வள நாட்டு, இடையாற்று நாட்டுத் திருத்தவத் துறையுடைய “வீற்றிருந்தான் சேமாண்டரான பிள்ளை அகளங்கை நாடாழ்வான்” கொல்லிமலை நாட்டில் பத்து ஊரவரிடம் கோயிலுக்கு வரி பெற்றதைக் குறிப்பிடுகின்றன. பொன்னேரிவர்மன் என்ற தலைவனின் கல்வெட்டும், அரசன் பெயர் இல்லாத நில கல்வெட்டுகளும் உள்ளன. இவை அனைத்தும் அறப்பள்ளி ஈச்வரர்க்குக் கொடுக்கப்பட்ட தேவதானங்களைப் பற்றியும் கோயில் ஊழியர்கட்குக் கொடுக்கப்பட்ட ஊதியம் பற்றியும் குறிப்பிடுவனவாகும். பூசை, விளக்கெரித்தல், திருவிழா, நந்தவனம் முதலியன் தொடர்பாகவே கல்வெட்டுகள் உள்ளன.
சில கல்வெட்டுகள் கொல்லிமலையில் வாழ்ந்த வணிகக்குழுக்களைப் பற்றியும், செட்டியார்களைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. “வெருனூர் அறப்பள்ளியுடையான் வீரனச்செட்டி” “வெருனூரில் பள்ளவழியில் குந்தன வரம்பனான திசைமாணிக்கச் செட்டி” என்று செட்டிமார்களையும் “கொல்லிமலை நாட்டு ஐந்நூற்றுவர் ராஷை” என்று வணிகக் குழுவையும் குறிப்பிடுகின்றது. சேர, சோழ, பாண்டிய முக்கோக்கள் மூவேந்தர்களும் குறிப்பிடப்படுகின்றனர்.
மதுரை முத்துவீரப்பநாயக்கர் ஆட்சிக்காலத்தில் மி.பி.1580ல் சேந்தமங்கலம் பாளையக்காரர் கோனூர் இராமச்சந்திர நாயக்கரின் மகன் இம்முடி இராமச்சந்திர நாயக்கர் அறப்பள்ளி ஈச்வரர்-நாச்சியர் திருக்கோயில்களைப் பழுதுபார்த்து சாதாரண ஆண்டு மாசிமாதம் 5ஆம் நாளி குடமுழுக்கு நடைபெற்றதை ஒரு கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. அக்குடமுழுக்கின்போது குத்தமலை நாட்டில் அசை என்ற ஊரைக் கோயிலுக்கு இறையிலியாக் அளித்துள்ளார். அசை என்ற ஊர் அறப்பள்ளி ஈச்வரர் கோயிலுக்குத் தென்மேற்கில் அசைக்காடு என்ற பெயரில் தற்போது வளப்பூர் நாடு என்று வழம்க்கப்படும் பகுதி 16ம் நூற்றாண்டில் குத்தமலைநாடு என்று வழங்கப்பட்டதை அறியலாம்.
இராமச்சந்திர நாயக்கர் ஆட்சிக்குப்பின் கி.பி.1770 விக்குறுதி ஆண்டு தை மாதம் 27ம் தேதிபுதன்கிழமை சுவாதி நாளில் அறப்பள்ளி ஈசுவரர்-தாயம்மைக்கு குடமுழுக்கு நடைபெற்றதை ஒரு கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. மீண்டும் 1818 சுபானு வருடம் ஆவணி மாதம் 20ம் தேதி அறப்பள்ளி ஈந்வரர்-தாயம்மைக்குத் துறையூரைச் சேர்ந்த ரஜநரசிங்கநாயக்கர் தாசில் பண்ணிய காலத்தில் குடமுழுக்கு நடைபெற்றது.
அணமைக்காலத்தில் 1.5.1985ம் ஆண்டு இந்து அறநிலையத்துறையும் அடியவர்களும் சேர்ந்து குடமுழுக்குச் செய்தனர். அதன்பின் 27.1.2002 அன்று மீண்டும் குடமுழுக்கு நடைபெற்றது.
தேவாரமே அன்றி அருணகிரிநாதரும் தம் திருப்புகழில் இங்குள்ள முருகப்பெருமானைப் பாடியுள்ளார். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவரான அம்பலவாணக் கவிராயர் “அறப்பள்ளீச்சுர சதகம்” என்ற நூறு பாடலகளைக் கொண்ட நூல் பாடியுள்ளார். சதக நூல்களில் சிறந்ததாகக் கருதப்படும் இந்நூலின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும், “அனுதினமும் மனதில் நினை தருசதுர, கிரிவளர் அறப்ள்ளீச்சுர தேவனே” என்ற புகழ்ச்சியுடன் முடிகின்றது. கொல்லிமலைக்குச் சதுரகிரி என்றொரு பெயரும் இருப்பதை அறியலாம். “கொல்லிமலைப் புராணம்” என்றொரு நூல் இருந்ததாகவும் தெரிகின்றது. உறையூர்ப் பசிப்பிணி மருத்துவன் அருணாசல முதலியார் அண்மைக்காலத்தில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவின்போது “அறப்பள்ளி ஈச்வரர் அந்தாதி” என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
கோயிலை ஒட்டி வளமான அறு ஒன்று உள்ளது. தெள்ளிய நீர் பாறைகளில் பட்டுத் தெறித்து விழுந்து சலசலவென ஓடும். இந்த ஆற்றிற்குக் கோயிலாரு என்ரு பெயர். மலையின் மேற்கு, தெர்குப் பகுதிகளீல் ஏறக்குறைய இருபது கிலோமீட்டர் தொலைவு மலை முகடுகளில் இருந்துவரும் நீர்ப் பெருக்கே இவ்வாற்றின் நீர்வரத்தாகும். கோயிலைச் சுற்றி மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று அருவியாகப் பாய்கின்றது. அவ்வருவிக்கு “ஆகாச கங்கை” என்று பெயர். சுமார் நூற்றைம்பது அடி உயரத்திலிருந்து அருவி விழுகின்றது. நீர்வரத்து நிறைந்த காலத்தில் கான்பதற்கரிய காடொசியாக விளங்கும். இவ்வாறு மலையின் கிழக்குப் பகுதியில் புளியஞ்சோலையில் இறங்கி ஐயாறு என்ற பெயருடன் பின் சுவேதாநதி என்னும் வெள்ளாறாகவும் துணை ஆறுகளுடன் திட்டக்குடி புவனகிரி வழியாகச் சென்று பரங்கிப்பேட்டையில் கடலில் கலக்கின்றது.
கோயிலுக்கடியில் ஆற்றுப்படித் துறையில் ஏராளமான மீன்கள் உள்ளன. கோயிலில் இறைவனுக்குப் பூசை நடைபெறும் முன் இம்மீன்களிருக்கும் துறையில் மணியடித்துப் பூசை நடைபெறும். நைவேத்தியங்களை ஆற்றிலிடும் போது மீன்கள் திரளாக வந்து அவற்றை உண்ணும் காட்சி காணற்கரியதாகும். “உணவை நீரருகே கொண்டு செல்லும்போதே மீன்கள் துள்ளி வந்து உண்ணும்” என்று திருச்சிராப்பள்ளி மான்யுவல் எழுதிய ஹெமிங்வேவும், “தினமும் மணியடித்து மீன்களுக்கு உணவிட்ட பிறகே இறைவனுக்குப் பூசை நடைபெறுகிறது” என்று சேலம் மான்யுவல் எழுதிய லீஃபானும் (1883) தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இம்மீன்களைப் பற்றிய சுவையான கதையொன்றும் வழங்கப்படுகின்றது.
முன்பு ஒரு காலத்தில் சில கொள்ளையர்கள் கோயிலைக் கொள்ளையிட வந்தனர். ஆற்றிலுள்ள மீன்களைக் கண்டதும், அவற்றைப் பிடித்துச் சமத்துண்ண விரும்பினர். மீன்களைப் பிடித்து அறுத்துப் பாத்திரத்தில் வைத்துச் சமைக்கத் தொடங்கினர். அச்சமயத்தில் அறப்பள்ளி நாதரின் பாகமாகிய அறச்சாலைவல்லி என்னும் தாயம்மை தம் கயல் போன்ற கண்களால் அம்மீன்களின் மீது அருள் பாவித்து நோக்கினாள். அவ்வளவில் பாத்திரத்தில் அரிந்து வைக்கப்பட்டிருந்த மீன் துண்டுகள் முழுவடிவம் பெற்று துள்ளி ஆற்றில் குதித்து மறைந்தன. இவ்வரிய காட்சியைக் கண்ட கொள்ளையர்கள் ஓடிவிட்டனர் என்பதை கொங்கு மண்டல சதகமும் குறிப்பிடுகின்றது. “அச்சுதன் கொங்கிலறப்பள்ளி நாதரை பசுந்துருக்கர் கச்சனி கொங்கை அறச்சாலை வல்லிகயல்குதிக்க மச்சமும் துள்ளி விளையாடுமேகொங்கு மண்டலமே” என்பது வாலசுந்தரக்கவிராயர் பாடல்.
இக்காலத்தும் அடியவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் ஆற்றிலுள்ள மீன்களைப் பிடித்து அவற்றிற்குத் தங்கம், வெள்ளியில் மூக்குக் குத்திவிடுவர். அறுபட்ட மீன்கள் மீண்டும் பொருத்தியதன் அடையாளமாக மீன்களின் முதுகில் கரிய கோடு ஒன்று இருப்பதை இன்றும் காணலாம். மலைவாழ் மக்களின் குலதெய்வமாக விளங்கும் அறப்பள்ளி நாதரின் பெயரை மக்கள் வைத்துக் கொண்டுள்ளனர். “மெய்யாக முன்னின்று தண்ணளி சுரந்தவர்கள், வேண்டி வரம் கொடுக்கும் கெய்கண்ட தெய்வமாக அறப்பள்ளி நாதர் விளங்குகிறார்”.

